Saturday, February 29, 2020

வணிகம் பழகு


பிறந்த குழந்தைக்கான ஆடைகள் எடுக்க "விலை குறைவாக இருக்கும்" என்ற பெண்களிடம் பெயர் பெற்ற ஜவுளிக்கடைக்குத்தான் தான் போக வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி உள்ளே சென்று ஆடைகளின் விலையைப் பார்த்த போது சிரித்துவிட்டுத் திரும்ப வெளியே அழைத்து வந்து விட்டேன். இரண்டு ஜட்டியுடன் கூடிய இரண்டு குழந்தை சட்டைக்கு ரூ 500 போட்டு தள்ளுபடி என்று ரூ 400 போட்டு இருந்தனர். லாபத்துடன் கூடிய அதிகபட்ச விலை ரூ 120 என்பது இந்த அளவுக்கு விலை வைக்கக் காரணம் அங்குள்ள செலவீனங்கள். பண்டிகை தினங்கள், முக்கிய கொண்டாட்ட நாட்கள் தவிர பெரும்பாலான ஜவுளிக்கடைகளின் வியாபார லாபத்தை ஈடுகட்டப் பலவிதங்களில் சமாளித்து சந்தையில் நிற்க வேண்டிய தேவையுள்ளது. 


தொழில் சமூகத்தை ஆதரிப்பவர்கள் யார்?

இங்கு எந்த ஊடகங்களுக்கும் தொழில் சார்ந்து வென்றவர்களைப் பற்றி முறையாக ஆவணப்படுத்தவில்லை அல்லது தோற்றவர்களை ஏன் தோற்றார்கள்? என்ன காரணங்கள்? அக புறக் காரணிகள் என்ன என்பதை எந்த விவாத நெறியாளர்களும் நெறியாள்கை செய்ததே இல்லை.

இங்கு காட்டப்படும் சித்திரங்கள் அனைத்தும் போலியானது. சினிமாத்தனமானது.

மொத்தமாகச் சரிவில் உள்ள தொழில் நகரங்களின் உள்கட்டமைப்பு குறித்துக்கூடக் கவலைப்படுவதும் இல்லை. கவலைப்பட வேண்டியவர்களுக்கு கட்சி சார்பாளர்களாகவே மாறிவிடுகின்றார்கள்.

தமிழகத்தில் ஐந்து தலைமுறையாக முறையாகத் தொழில் செய்தவர்கள் 30 வருடங்களில் உலகப் பணக்காரர் ஆனதாகச் சரித்திரம் பூகோளம் கணக்கு எதுவும் இங்கே இல்லை. ஆனால் இந்த வாய்ப்பு வட மாநிலங்களில் சாத்தியமாக உள்ளது. அது குறித்தும் இங்கே எவரும் பேசுவதே இல்லை.


Friday, February 28, 2020

அரசியல் என்பது?

"கூட்டணி தர்மம் என்கிறார்கள். கூட்டணி என்றாலே தர்மத்திற்குத் தொடர்பில்லாதது. மதச் சார்பின்மை கூட்டணி என்பார்கள். ஆனால் கூட்டணியில் சாதிக்கட்சியும் இருக்கும். என் அரசியல் வாழ்நாளில் இது போன்ற விடைகளுக்குப் பதில் தெரியாமல் இருக்கின்றேன்" என்றார் வாழப்பாடி இராமமூர்த்தி. தான் நினைத்ததை அப்படியே பேசிவிடக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று வாழப்பாடி மற்றொருவர் இளங்கோவன். வாழப்பாடி மகன் சிங்கப்பூரில் இருந்தார். இப்போது என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை. இளங்கோவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இருவர் காலத்திலும் காங்கிரஸ் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டேயிருக்கும். எது சாத்தியமோ? எது உண்மையோ அதை உரக்கச் சொல்வார்கள். தலைமை தவறான வழியில் சென்றாலும் தலை வணங்க மாட்டார்கள். எத்தனை பேர்களுக்கு இதெல்லாம் தெரியும்?

அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இப்படிப்பட்ட ஒருவராவது இருக்கின்றார்களா? திமுக, அதிமுக வில் கூட தாங்கள் நினைத்ததைப் பேசி விடக் கூடிய நிலையில் உள்ளனர். தேசியக் கட்சி தேயுமா? தேயாதா? எதிர்த்து நின்று களம் காண வேண்டிய கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டுமா? கூடாதா?

இங்குக் கட்சிகளுக்கு "கொள்கை" இருக்கிறது என்று நண்பர்கள் நம்புகிறார்கள். அது அவரவர் விருப்பம். ஆனால் கட்சிகளுக்கு "கொள்கை" இருக்கக்கூடாது. அடிப்படையில் தீவிரக் கொள்கைகள் கொண்ட கட்சி நம் ஜனநாயகத்தில் அதிக நாள் இருக்க வாய்ப்பில்லை. இதை நன்றாகப் புரிந்தவர் பெரியார். அதனால் தான் கடைசி வரைக்கும் தேர்தல் அரசியல் பக்கம் வரவே விரும்பவில்லை.
ஆனால் தான் மனதில் நினைத்திருந்த விசயங்களை அண்ணா மற்றும் கலைஞர் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.

எவரையும் ஒதுக்கவில்லை.இருவரையும் திட்டியுள்ளார். ஆனால் பார்க்க வந்த போது மரியாதையளித்தார். தேவைப்படும் போது அனைவரையும் பயன்படுத்திக் கொண்டார். ஏறக்குறைய பாஜகவும் இது போலத்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தேவைப்படும் போது ஒவ்வொருவரையும் பயன்படுத்தும் அளவிற்கு ஒவ்வொரு இடத்தில் ஒரு செக் வைத்துக் கொண்டே அரசியல் செய்கின்றார்கள். இது தான் உண்மை.

ஆனால் இங்கே நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒவ்வொரு கொள்கை இருப்பதாகச் சொல்கின்றார்கள். அது கொள்கை அல்ல. அவரவர் விருப்பம். இப்படி இருக்க வேண்டும். இது தான் சரி. இவர்கள் தகுதியற்றவர்கள் என்று நமக்கு நாமே கற்பிதம் செய்து கொள்கின்றோம்.

அரசியலில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
ஸ்டாலின் பேசும் போது ஒவ்வொரு முறையும் "அதிமுக ஆதரவு கொடுக்காமலிருந்தால் இந்தச் சட்டம் பாஸ் ஆயிருக்காது" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றார். அதாவது சட்டத்தின் சாதக பாதக அம்சங்களை மக்களுக்குப் புரிய வைக்கக் கலந்துரையாடல், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதை விட அதிமுக வை இங்கே தனிமைப்படுத்த வேண்டும்.

Thursday, February 27, 2020

உங்கள் ஆரோக்கியத்திற்கான மருத்துவர்.

நுகர்வோர் சந்தையில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் தரம், விலைவாசி, ஆட்சி மாறும் போது உருவாகும் ஏற்ற இறக்கம் போன்றவற்றைப் பட்டியலிட்டுப் பார்ப்பதுண்டு. சென்ற ஐந்தாண்டு ஆட்சி பாஜக ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. நான் ஒவ்வொரு முறையும் மொத்தக் கடை, சில்லறை விற்பனைக் கடைகள் என்று வீட்டில் உள்ள விலைப்பட்டியலை வைத்து சுய ஆராய்ச்சி செய்து பார்த்ததுண்டு. எங்களால் இருப்பு வைக்க முடியவில்லை. வாங்கும் போதும், விற்கும் போது கணக்குக் காட்ட வேண்டியுள்ளது. எங்களால் லாபம் சம்பாரிக்க முடியவில்லை என்று ஒரு மொத்தக் கொள்முதல் கடைக்காரர் என்னிடம் புலம்பியதைக் கேட்டுள்ளேன்.

ஆனால் கடந்த ஆறு மாதத்தில் விலைகள் மேலேறிக் கொண்டு இருக்கின்றது என்பதனை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. இந்த முறை மளிகைச் சாமான்கள் வாங்கிய போது உறுதியாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
அடைவது எளிது. தக்க வைப்பது தான் கடினம்.

Wednesday, February 26, 2020

கட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்

21 லட்சம் இராணுவ வீரர்களைக் கொண்ட உலகின் முதல் இராணுவமும், உலகிலுள்ள 177 நாடுகளில் 2 லட்சம் வீரர்களைக் கொண்டு முகாம் அமைத்து ஆதிக்கம் செலுத்தும் பேரரசும், உலகில் 800 இடங்களில் இராணுவத் தளங்கள் கொண்ட ஏகாதிபத்தியமும், உலகப் பொருளாதாரத்தில் 23.6 சதவிகிதத்தை தன்னுள் கொண்டுள்ள கணவானும், 20.58 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக விளங்கும் அமெரிக்காவின் 45 வது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று இந்தியா வந்து இருந்த போது சில ஆச்சரியங்களைக் காண முடிந்தது.

அதிபருக்கான உடல் மொழி எதுவும் இல்லை. விட்டால் டான்ஸ் ஆடத் தொடங்கி விடுவார் போல. ஆனால் 74 வயதில் ஜாலியாக இருக்கின்றார். சபை நாகரிமெல்லாம் அந்தப் பக்கம் நகர்த்தி வைத்து விட்டார் போல. மஞ்சள் கலர் டையைப் பார்த்தவுடன் நம் ராமராஜன் நினைவுக்கு வந்தார். யார் ஐடியா கொடுத்தார்களோ?


Tuesday, February 25, 2020

இந்திய நிதி நிலவரம்

இந்திய அரசின் மொத்த கடன் : ரூ.91,01,484 கோடி (30.9.2019 வரையில்)

2019-20இல் இதற்கு அரசு செலுத்திய வட்டி : ரூ.6,25,105 கோடி

2019-20இல் மத்திய அரசின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு ; அதாவது வரவுக்கு மேல் ஏற்பட்ட செலவுகளினால் ஏற்பட்ட பற்றாகுறை : ரூ.7,66,846 கோடி

இந்த பற்றாகுறையை ஈடுகட்ட, 2019-20இல் மத்திய அரசு புதிதாக வாங்கிய கடன் : ரூ.7,66,846 கோடி

அதாவது புதிதாக வாங்கும் கடன்களில் 81 சதவீதம், பழைய கடன்களுக்கான வட்டியை கட்டச் செல்கிறது.

2019-20இல் ராணுவ செலவுகள் : ரூ.4,48,820 கோடி

2020-21 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு : ரூ.4.71 லட்சம் கோடி

2020-21 பட்ஜெட்டின் மொத்த அளவு : ரூ.26,98,552 கோடி


Monday, February 24, 2020

நுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா

நம் அன்றாடக் கடமைகளைச் செய்யத் தொடங்குவதை விட "நன்றி செலுத்துவது" முதல் கடமை என்பதால் இதனை வெளியிட்டு மகிழ்கின்றேன்.

இன்று அம்மையாருக்குப் பிறந்த நாள். பிப்ரவரி 24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்புத் தினம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னமும் பாமர, படிப்பறிவு இல்லாத பெண்களை விட இவரைப் படித்த பெண்கள் அதிகம் விரும்புகின்றவர்கள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

மிகவும் தெரிந்தவர்கள் சசிகலா இல்லாவிட்டால் இவர் ராஜராஜசோழன் போலப் புகழ்பெற்று விளங்கியிருப்பார் என்று சிரிக்காமல் சொல்கின்றார்கள். காரணம் கேட்டால் ஒரு தரப்பு எனக்கு ரெட்டை இலை பிடிக்கும் என்பதாகவும் மற்றொரு தரப்பு "இரும்பு மனுசி" என்றும் சொல்கின்றார்கள். ஆனால் மொத்தத்தில் அய்யய்யோ "அவர் மட்டும்" வந்திடக்கூடாது என்பதில் தான் முடிகின்றது.

காலையில் நான் நடந்து வந்த ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பெரியார் காலணி அருகே ஒருவர் மட்டும் 6வது வட்டம் சார்பாக என்று படம் வைத்து மரியாதை செலுத்தியிருந்தார். வேறெந்த இடத்திலும் இல்லை. நேருவுக்குப் பிறகு அப்துல்கலாம். இவர்களைத் தவிர மாணவர்களிடம் வேறு எவரும் நெருங்கவே இல்லை.

Sunday, February 23, 2020

60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...

60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!!!

வாழ்க்கையில் 60-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...

*60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

70 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!


Saturday, February 22, 2020

கேள்விக்குறியாகிறதா நீதித்துறையின் அதிகாரம்?

நேற்று தூங்கிக் கொண்டிருந்த போது நம் அன்புக்குரிய நிதியமைச்சர் என்னை எழுப்பி பொருளாதார பாடங்களை கற்றுக் கொடுத்தார். கனவில் வந்த பெண்மணி காணாமல் போய்விட்டார்.

குறிப்பாகத் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்து ஏழு லட்சம் கோடி ரூபாய் என்பது ஊடகம் ஊதிப் பெருக்கி நடந்து கொண்டிருக்கும் நல்லாட்சியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். டேட்டா புரட்சியை ஏற்படுத்திய, ஏற்படுத்தக் காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களை நாரசாரமாய் ஏசுகின்றார்கள் என்று புள்ளி விபரங்களைத் தந்து இருந்தார். (இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்).

"நாங்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? நாங்கள் சொல்வது இறுதியான தீர்ப்பு என்பது கூட இவர்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்குக் கூடத் தெரியாதா? எந்த அரசாங்கமாவது வசூலிக்கத் தேவையில்லை. ஒத்தி வையுங்கள் என்று சொல்வார்களா?" என்று புலம்பித் தீர்த்தவர் வேறு யாருமில்லை. நம் உச்ச மன்ற நீதிமான்.

நிச்சயம் இது போன்ற பஞ்சாயத்துக்கள் நம் மோடி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று என் பக்கத்து வீட்டுக்காரர் பக்குவமாக எனக்கு எடுத்துரைத்தார். நானும் நம்பிவிட்டேன்.


Friday, February 21, 2020

நிதிநிலை அறிக்கை 2020

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பெருக்குவோம் என்பது வெறும் கோஷமா? தேர்தல் அறிக்கையில் இட்டு நிரப்ப வேண்டிய வார்த்தைகளா? இனி இங்கே வாய்ப்பு உள்ளதா? என்ன பிரச்சனை?

மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

1. சுரங்கத்துறை.

(வட மாநிலங்களில் தனியார் கையில் இருந்தாலும் இது இன்று வரையிலும் மாஃபியா பிடியில் தான் உள்ளது) காமதேனு பசு போலக் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கு வருவதில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள், அந்தந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களைக்கடந்து முதலீடு செய்த நிறுவனம் காசு பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களும் வாழ்நாள் முழுக்க தங்களது பசியின் ரொட்டிக்காக உழைத்து மடிய வேண்டியது தான்.

இன்று வரையிலும் மாற்றமில்லை. எந்த அரசாங்கமும் இதில் கை வைப்பதே இல்லை. லிக்னைட் தொழிலில் என்எல்சி மட்டுமே ஏகபோகமாக உள்ளது. சீனாதானா இதில் கை வைக்க முயன்றார். பின்வாங்கி விட்டார்.

இந்தத் தொழில் இந்தியா முழுக்க பரவலாக்கம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்ற பெரிய ஆயுதம் கொண்டு அவவ்வபோது சொருகப்படுகின்றது. குற்றுயிரும் குலையிருமாகவே இந்தத் துறை உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் அமைச்சர் மட்டும் ஏழெழு ஜென்மங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை அடைந்து விடுகின்றார்கள்.

Thursday, February 20, 2020

Corona கொரானா வைரஸ்


Corona Update

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்கள் எங்கே சென்றாலும் அங்குள்ள அனைத்துக் கடைகளிலும் சீனப் பொருட்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று தொடங்கி தெய்வச் சிலைகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சீனமே.

கிராமங்கள், நகர்ப்புறங்கள் என்ற பாரபட்சமின்றி அனைத்து பேன்சி கடைகளும் சீனத்தின் உதவியால் மட்டுமே இங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். பேன்சி கடை நண்பர்கள் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.

தொடர்ந்து செய்திகளைக் கவனித்துக் கொண்டு வந்த போது தமிழகத்தில் சீனப் பொருட்களை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருந்த வியாபாரிகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குத் தெரிந்த சென்னை நபர் மாதம் இரண்டு கண்டெய்னர் என்கிற ரீதியில் வரவழைத்துக் கொண்டிருந்தார். இப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை மனசாட்சியே இன்றி நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மாதம் இந்த வைரஸ் பகவான் அருளாசி புரிந்தால் இந்தியா மட்டுமல்ல உலகமே பெரிய பாதிப்பைச் சந்திக்கப் போகின்றது. நாம நல்லாயிருக்கிறதுக்கு அவர்கள் நல்லா இருக்கனுன்னும் வேண்டிக்கத்தான் வேண்டும். மேட் இன் இண்டியா, மேக் இன் இண்டியா எல்லாமே தூத்துக்குடி பக்கம் உள்ள கடல் இருக்கிற திசையில் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. எங்கெங்கும் சீன இந்தியா தான் இப்போது இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

திருப்பூர் ஏற்றுமதி தொழில் சீனத்தை நம்பித்தான் உள்ளது. குறிப்பாக ஆடைகளுக்குத் தேவைப்படும் உப பொருட்கள் சந்தையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை என்பதோடு வட இந்தியர்களும் இதில் இருப்பதால் இதுவரையிலும் பெரிய பாதிப்பு உருவாகவில்லை. ஆனால் விரைவில் உருவாகி விடும் சூழல் உள்ளது.

அங்கே 50 ரூபாய் என்றால் இங்கே 500 ரூபாய். பட்ஜெட் தாங்குமா?

#கொரானாசூனாமி

Wednesday, February 19, 2020

அன்பான பெற்றோர்களே

அன்பான பெற்றோர்களே

வாழ்த்துக்கள்!

உங்கள் குழந்தை அவரது/அவள் அரசின் பொதுத் தேர்வுக்குச் செல்லப் போகின்றார்.

9வது / 10வது / 12வது வரை உங்கள் குழந்தை தனது / அவள் பயணத்தில் அழகாகச் சிறந்து விளங்குவார் என்பது ஒரு பெருமையான தருணம்.

ஆனால் அன்புள்ள பெற்றோர்களே, இப்போது தான் அவர்கள் தங்கள் தேர்வுகளைத் தொடங்க ஆயத்தப் பணியில் ஈடுபடப் போகின்றார்கள். அடுத்த 20 நாட்கள் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

மனநிலை மாற்றங்கள், சோகம், உற்சாகம், நிதானமான நடத்தை, முரட்டுத்தனம் போன்றவற்றைக் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தேர்வுகளுக்கு வரும்போது, ​​தேவையற்ற மன அழுத்தங்கள் நமது கல்வி முறையால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Tuesday, February 18, 2020

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

OALP அறிமுகம், பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு, திட்ட வகையை Aவீலிருந்து B2விறகு மாற்றியது எனப் பல வகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளுக்கு மத்திய அரசு உதவி வரும் நிலையில் அதை நேரடியாக எதிர்க்கும் முடிவு மிகவும் துணிச்சலானது.

ஆனால்.........

இது சர்வதேச அரசியலுடன் தொடர்புடையது.

மாநில அரசு ஆசைப்படலாம். முயற்சி செய்யலாம்.

முடிவு சாதகமாக முடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.



Monday, February 17, 2020

அமேசான் முதல் 100



கடந்த வாரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் பேச்சின் ஊடாக நான் புரிந்து கொண்ட விசயங்கள், இதன் மூலம் வலைபதிவில் செயல்படும் நண்பர்கள் தெரிந்து கொள்வதன் பொருட்டு இதனை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.

குடும்பம், அடிப்படைக் கடமைகள் போன்றவற்றை நிறைவேற்றிய பின்பு, நிறைவேற்ற முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இயல்பாகத் தோன்றுவது, எதிர்பார்ப்பது அங்கீகாரம்.  

அது பலருக்கும் சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பதில் தொடங்கிப் பரந்து விரிந்து அவரவர் வாழ்நிலை பொறுத்து மாறுபடுகின்றது. 50 வயது கடந்து வாழ்கின்றவர்களுக்கு நம்முடைய தனிப்பட்ட திறமைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும் காலகட்டமும் இதுவே.  ஆனால் எப்படிச் செயல்படுத்துவது என்பதில் தான் குழப்பம் உருவாகின்றது.  கற்றுக் கொள்ளக் காலம் கடந்து விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி விடக் குழப்பமும் மனதில் உருவாகின்றது.

Saturday, February 15, 2020

அ என்றால் அரசியல்

பணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்? அவரா சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சமரசமின்றி உழைக்கப் போகிறார்? நாணயத்துடனும், நன்னடத்தையுடனும் பணியாற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு அந்த அமைச்சரா அறிவுறுத்தப் போகிறார்? ஜனநாயக மாண்புகளையும், ஜாதி - மத பேதமற்ற கொள்கைகளையும் அவரா உயர்த்திப் பிடிக்கப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த அமைச்சரா புரையோடிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கும் புருஷோத்தமராக உருவெடுக்கப் போகிறார்?

"நாணயம், நேர்மை என்றெல்லாம் ஒரு சில விஷயங்கள் முன்னொரு காலத்தில் இருந்ததாமே' என்று எதிர்காலத் தலைமுறையினர் வியப்புடன் பேசிக்கொண்டிப்பார்கள்.

அதற்கான முன்னோட்டத்தைத்தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூகத்தின் அடிமட்டத்தில் கூட ஊழல் புரையோடிப் போயிருப்பதும், அதை எவரும் ஒரு பொருட்டாகக் கூடக் கருதாததுமே அதற்கு சான்று.

Wrapper Design - Ganesh. Mayiladuthurai

Friday, February 14, 2020

ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணப் படுக்கையில் கூறிய இறுதி வார்த்தைகள்.

தொழில் உலகத்தில் வெற்றியின் உச்சத்தை நான் அடைந்திருந்தேன். பிறர் கண்களுக்கு, என் வாழ்வு வெற்றியின் மறுவடிவமாகத் தோன்றியது.

எனினும், வேலைக்கு அப்பாற்பட்டு நாண் கண்ட மகிழ்ச்சி மிகவும் குறைவே. முடிவில், செல்வம் என்பது எனக்குப் பழக்கமான வாழ்க்கையின் ஒரு உண்மை மட்டுமே.

இந்த நேரத்தில், என் வாழ்நாள் முழுவதையும் நினைவு கூர்ந்தால், வரவிருக்கும் மரணத்தை எதிர்கொள்வதில், நான் மிகவும் பெருமிதம் கொண்ட அனைத்து அங்கீகாரங்களும் செல்வங்களும் பலமடைந்து அர்த்தமற்றவை என்பதை நான் உணர்கிறேன்.


Thursday, February 13, 2020

அட்டைக்கத்திகள்


சமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

"நான் நேர்மையாக வரி கட்டி வாழ்பவன். இதனைக் கடந்து சட்டப்படி நிரூபித்து வருவேன் என்று சொல்ல வேண்டும்" என்றார்.

அப்படி அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

லண்டன் வரைக்கும் நோண்டுவார்கள்.

அடுத்த 5 படங்களின் சம்பளத்தொகையையும் அபராதமாகக் கட்ட வேண்டியிருக்கும்.

கம் மென்று அடக்கி வாசித்து ஜம் என்று போஸ் கொடுக்கின்றார்.

படம் போட்டு பயத்தை மாற்றிக் காட்டிவிட்டார்.

நடிகர்கள் யதார்த்தவாதியாகத்தான் இருக்கின்றார்கள்.

கூடும் இளையர்களின் கூட்டம் தான் பாவம். 😏




Wednesday, February 12, 2020

வளர்ச்சி அரசியல்

ஏன் பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சவாலாக இருக்கின்றார்? எப்படி வெற்றி பெற முடிகின்றது?

1. கல்வித்துறையை முழுமையாகச் சீரமைத்துள்ளார். எளிய மக்கள் அனைவரும் படிக்க அரசுப் பள்ளிகள் சிறப்பானது என்று தன் செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளார்.

2. மக்கள் எதிர்பார்க்கும், மக்களுக்கு அவசியமான மின்சாரம் முதல் ரேசன் பொருட்கள் வரைக்கும் ஆம் ஆத்மி நடத்திய நிர்வாகம் ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்திற்கு உதவும்வண்ணம் இருந்தது.

3. வாயால் வடை சுடுவதில்லை. உச்சக்கட்டமாக அனுமன் தண்டனை கொடுப்பார் போன்ற வார்த்தைகள் வந்தது. தெய்வங்களுக்கும் மக்களுக்கும் நடந்த போட்டியில் மக்கள் தான் வென்றுள்ளார்.

4. அமித்ஷா டெல்லி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் டெல்லி மக்களை முட்டாள் என்பது போலவே தெரிந்தது.

5. வளர்ச்சி அரசியல் என்பது மக்களுக்குத் தேவையானதைச் செய்து முடித்து விட்டு அதன் சாதக பாதகங்களைப் பற்றிப் பேசுவது என்பதனை இனியாவது பாஜக உணர வேண்டும்.

6. டெல்லி முழுக்க 400 கிளினிக் கேஜ்ரிவால் தொடங்கி இலவசமாக மருத்துவ வசதியை உருவாக்கினார். குடிநீர் வசதிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

Monday, February 10, 2020

Amazon 2025

நானும் பிடிவாதக் கொள்கை கொண்டு வாழ்ந்தவன் தான். உள்நாட்டுப் பொருட்கள், உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது என்ற எண்ணத்தை இரண்டு வருடத்திற்கு முன்பு தான் மாற்றினேன். ஏன்?

24 மாதங்களுக்கு முன்பு அமேசான் அறிமுகம் ஆனது. இன்று அமேசான் என்னை முழுமையாக மாற்றியுள்ளது. அப்போது கிண்டில் என்பது எனக்கு அறிமுகம் ஆகவில்லை.

இன்று வரையிலும் அமேசான் (இந்தியா) நட்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது 2025 இலக்கை அடிப்படையாகக் கொண்டு 7000 கோடியை இங்கே முதலீடு செய்யப் போகின்றது.

Sunday, February 09, 2020

IKIGAI - A Japanese Secret to a Long & Happy Life - RJ Ananthi

மகள்களின் கல்வித்திறனை, ஆளுமைத்திறனைச் சோதிக்கும் போது பல வித்தியாசமான ஆச்சரியங்களைக் கண்டதுண்டு. ஒருவர் கணக்குப் பாடங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார். 100 தான் எடுப்பார். புதிர்களை விடுவிடுப்பது பொழுது போக்கு போல அனாயசமாக கையாள்கின்றார். அறிவியல் பாடங்கள் பிடிக்காது. சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்று வருவார்.

அவருடன் ஒட்டிப் பிறந்தவர் கல்வியென்றால் காத தூரம் ஓடுகின்றார். குடும்ப பொறுப்பு, மனிதாபிமானப் பண்புகளை முழுமையாகப் பெற்று அதன்படியே வாழ விரும்புகின்றார். குடும்ப குத்து விளக்கு ஒளிரக் கல்வி தேவையென்றாலும் "எவன்தான் மதிப்பெண்களைக் கண்டுபிடித்தானோ?" என்கிறார்.

மற்றொருவர் தூண்டுதல் மூலம் சுடரொளியாக பிரகாசிக்கின்றார். ஒரே சூழல். ஒரே கவனிப்பு என்றாலும் அறிவுத்திறன் வெவ்வேறு விதமாக உள்ளது.

இவர்கள் எதை விரும்புகின்றார்கள்? ஏன் விரும்புகின்றார்கள்? எதில் அதிகக் கவனம் செலுத்துகின்றார்கள்? இவர்கள் பழகும் தோழிகள் யார்? அவர்களிடம் இவர்களுக்குப் பிடித்தமானது என்ன? என்பது போன்ற பலவற்றைக் கவனித்த போது எதுவும் சீரியஸ் இல்லை. எதற்கும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை என்பதாகவே எனக்குத் தெரிகின்றது.


Saturday, February 08, 2020

ரயில்வே திட்டங்கள் தமிழ்நாடு 2019.2020

இந்த வருட தெற்கு ரயில்வேயில் தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி...(நன்றி தெற்கு ரயில்வேயின் பிங்க் புக்) (மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்....சிறு பணிகள் & தொகை பற்றி இங்கு குறிப்பிடவில்லை....)

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி & மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை திட்டம் - ரூ.100 கோடி

மதுரை போடி அகல ரயில் பாதை திட்டம் (இப்போது உசிலம்பட்டி வரை முடித்து விட்டு CRS சோதனை நடந்தும் விட்டது - 

இந்த காணொளி பார்க்க https://www.youtube.com/watch?v=x3PkGrFKQsQ&t=481s) (அதாவது உசிலம்பட்டி - போடி வரை ) - ரூ.75 கோடி (இந்த திட்டமும் இந்த ஆண்டு முடிவடைய வாய்ப்பு மிக அதிகம்...)

சென்னை பீச் - அத்திப்பட்டு - 4 வது பாதை - ரூ.30 கோடி

ஓமலூர் - மேட்டுர் அணை - இரண்டாவது அகல ரயில் பாதை திட்டம் - ரூ.40 கோடி

Thursday, February 06, 2020

காரணம் இது ஜனநாயக நாடு.

வருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் தணிக்கையாளர் நண்பர் சொன்ன போது வியப்பாகவே இருந்தது. பழநி பஞ்சாமிர்த முதலாளியின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் அதற்காக அதிகாரிகள் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கேட்ட போது மனதிற்குள் கிலியடித்தது.  


Wednesday, February 05, 2020

அகரம் அறக்கட்டளை 10 வது ஆண்டில்


மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுக்கு,

அகரம் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியைக் காணொலிக் காட்சி வழியாகக் (முழுமையாக) கண்டேன்.  நெகிழ்ச்சியுடன் என் எண்ணத்தைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். அதன் பொருட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.

தமிழகத்தில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரைக்கும் பாடங்களைப் பற்றி மாணவர்கள் அக்கறைப்படுவதை விடத் தமிழகத் திரை உலகம் சார்ந்த விசயங்கள், வாசிப்பு, விருப்ப நாயகர்கள், நாயகிகள் தான் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்து விடுகின்றார்கள்.  ஒவ்வொருவரும் தத்தமது வேலை தேடி தனக்கான சொந்த வாழ்க்கையை அடையாளம் காண அலைந்து திரியும் போதும் திரைப்பட உலகம் சொல்லும் கனவு வாழ்க்கை தான் அவர்களின் ஆழ்மனதில் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதை நான் அறிந்தே வைத்துள்ளேன். திருமண வாழ்க்கைக்குப் பின்பும் கூட இது மாறுவதில்லை. 


Tuesday, February 04, 2020

2025 - இந்தியா - மாற்றம் - முன்னேற்றம்

யூ டியூப் தளத்தில் 3 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரைக்கும் உள்ள காட்சிக் கோர்வைகளை வலையேற்றுகின்றார்கள். சிலரின் பேச்சுக்கள் மட்டும் ஒரு மணி நேரம் கடந்தும் பார்க்கும் அளவிற்கு நேயர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் வரவேற்பு உள்ளது. அவரவர் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த உலகத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

டிஜிட்டல் வாசிப்பு முறையிலும் இது போன்ற பல விதங்களைப் பார்த்தேன். நாமும் ஏன் முயலக்கூடாது என்பதற்காக முதல் முயற்சியைத் தொடங்கியுள்ளேன். ஏறக்குறைய 5500 வார்த்தைகள் உள்ள நூல். ஆனால் முக்கியமான அவசியமான தற்காலத்தைப் பிரதிபலிக்கும் தகவல் களஞ்சியம்.

திருப்பூர் விட்டு எப்போதும் வெளியே வரப் போகிறீர்கள்? என்று கோரிக்கை மனு அனுப்பியவர்களுக்கு இது 2.0 போலவே இருக்கும்.