Wednesday, September 30, 2015

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.

உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.

அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர்.

விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்  செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது.

நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது.

வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.

நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது.

பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்,

தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.

கல்விகழகு கசடற மொழிதல் - இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப்  புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப்  புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும்.

கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை

தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை.

.அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது.

பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல்.

தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி.

இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு  சிந்தனை மாற்றம் வரட்டும்

என்றும் மாறாத நம்பிக்கையுடன்,

இராமச்சந்திரன்  (BKR)
திருநெல்வேலி

வலைபதிவு  http://ramachandranwrites.blogspot.ae/


கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி மின் நூல்

+++++++++++++
எழுத்தாளர்களின் முக்கிய விருப்பமே தங்களின் படைப்பு பலருக்கும் போய்ச் சேர வேண்டும். வாசிப்பவர்கள் அதை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டும் என்பதே. இந்த மின் நூலை வெளியிட முக்கியக் காரணம் ஈழம் குறித்து வெளியிட்ட மின்னூலை வாசித்த ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஒரு நள்ளிரவில் அழைத்து வெகுநேரம் பொளந்து கட்டினார்.

(புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015)

இதற்கு முன்னால் இதே போலப் பலரும் மின் அஞ்சல் வாயிலாகத்தான் உரையாடியிருக்கின்றார்கள். இவர் ஆக்கப்பூர்வமான (எதிர்மறை) விமர்சனங்கள் என்றபோதிலும் அவர் பக்கத்திற்குப் பக்கம் படித்து இருந்த விதமும், அது சார்ந்த துணைக் கேள்விகளும் எனக் கேட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் நான் இருந்த போதும் என் வியர்வைச் சுரப்பியை விரைவாக்கினார். புத்தகங்களுக்கும் மின் நூலுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே இது தான். நினைத்துப் பார்க்க முடியாத உலகில் எந்தவொரு மூலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் நம் உழைப்புப் போய்ச் சேர்ந்து விடுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதை விட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

(அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்)

உரையாடல் முடிவுக்கு வந்த போது தமிழ்நாட்டில் நிலவும் மொழிக் குழப்பத்தை, ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சில கேள்விகள் கேட்டார். இதன் பொருட்டே தொகுத்து வைத்திருந்த கட்டுரைகளை மெருகேற்றி இன்று இந்த மின் நூல் அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது.

+++++++++++++

தொழில் உலகத்திற்கும் படைப்புலகத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. தொழிலில் "கொள்கை" என்பதே கூடாது. இருந்தாலும் மாறிக் கொண்டேயிருக்கும். நாமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

வாரந்தோறும் ஒவ்வொன்றும் காலாவதியாகிக் கொண்டேயிருக்கும். மொத்தத்தில் "லாபம்" ஒன்றே குறிக்கோள் மற்றும் இறுதி லட்சியமாக இருக்கும். கிடைத்த வாய்ப்பே போதும். எல்லைகளை உடைக்கத் தேவையில்லை என்பவர்களுக்கு ஒவ்வொரு நாளின் பிரச்சனையும் இயல்பாகவே தோன்றும். அலசி ஆராயத் தோன்றாது. 

எல்லைகளை உடைக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் முடியாத பட்சத்தில் அனுபவங்களை எழுதத் தொடங்குவார்கள். அப்படித் தான் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன். 

2015 ஜுலை வரைக்கும் ஆறு வருடங்கள் என்றாலும் 62 மாதங்கள் தொடர்ச்சியாக மற்றும் இடைவெளி விட்டு எழுதிய போதும் 697 பதிவுகள் எழுதியுள்ளேன். 

டாலர்நகரம் மற்றும் நண்பர்களின் விமர்சனங்கள் என்பது போன்ற கட்டுரைகளைக் கணக்கில் கொண்டாலும் ஏறக்குறைய 650 பதிவுகள் எழுதியதை ஒரு புத்தகமாக மற்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள மின்னூலைச் சேர்த்து எட்டு மின் நூலாக வெளியிட முடிந்துள்ளது. 

ஏழு மின் நூலும் 93,910+ பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. 

(200 வது மின்நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கடிதம்)

தொழில் உலகத்தில் நாம் என்ன முயற்சித்தாலும் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் பொறுத்தே நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முட்டாள் நிர்வாகத்தில் மாட்டிக் கொண்டவர்கள் வாழ் நாள் முழுக்க முழு மூடனாகத்தான் வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் படைப்புலகத்தில் உங்களின் உழைப்புக்கேற்ற, திறமைக்கேற்ற எல்லாவிதமாக அங்கீகாரமும் எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தேடி வரலாம். அப்படிப் பலமுறை வந்துள்ளது. மாதம் இரண்டு மின் அஞ்சலாவது படித்த மின் நூல் குறித்த உரையாடலுக்கு உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து யாரோ ஒருவர் அழைத்து அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

வலைதளங்கள், மற்றும் பின்னூட்டங்கள் மூலம் பலரின் அன்பையும் மரியாதையும் பெற்று இருப்பதையும் உணர முடிந்தது. எப்பொழுதோ உழைத்த உழைப்பு இன்று வரையிலும் ஏதோவொரு வகையில் திரும்பக் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது என்கிற வகையில் மகிழ்ச்சியே.

(நன்றிக்குரியவர்கள் -  துளசிதளம்,  மூன்றாம் சுழி,  அவர்கள் உண்மைகள்)

எழுதும் ஆர்வம் இன்னமும் இருக்கக்தான் செய்கின்றது. ஆனால் முழுமையான ஈடுபாடு உருவாகாதன் காரணம் மாறிக் கொண்டேயிருக்கும் சூழ்நிலைகள், சுவராசியத்திற்கு என்று எழுதியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சில காலம் எழுதுவதை விட்டு வெளியே நிற்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

மற்றவர்களின் விருப்பத்திற்காகவே செயல்பட வேண்டும் என்றால் நமக்கான ஆர்வம் கால் பங்கு கூட அதில் இருக்க வாய்ப்பு இருக்காது. அதில் வாசிப்புக்கான வார்த்தைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். வாசிப்பின் மூலம் கிடைக்க வேண்டிய தாக்கம் எதுவும் மிஞ்சாது. 

தினந்தோறும் சமரசங்களோடு வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலையிலும், குறைந்தபட்சம் எழுத்தின் மூலமாவது நேர்மையையும் உண்மைகளோடு உறவாட வேண்டும் என்பது என் எண்ணம்.  மாறிக் கொண்டே வரும் சூழ்நிலைகளின் மூலம் கிடைக்கப் பெறும் அனுபவங்கள் அடுத்த கட்ட எழுத்துப் பயணத்திற்கு உதவும் என்று நம்புகிறேன்.

அது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் போது மீண்டும் என் எழுத்துப் பயணம் தொடங்கும்.