Wednesday, January 31, 2018

விதைகள் முளைக்கும் தருணம்


உறவுகள், தனிப்பட்ட நண்பர்கள், நான் இருக்கும் தொழில் சார்ந்த தொடர்புகளில் என்பது சதவிகித பேர்களுக்கு நான் எழுதக்கூடியவன். பரவலாக என் எழுத்துக்கள் வாயிலாகச் சென்று சேர்ந்தவன் என்பது யாருக்கும் தெரியாது. எவரிடமும் சொல்வதும் இல்லை.

யோசிப்பு, வாசிப்பு இந்த இரண்டையும் வெறுக்கக்கூடிய தொழில் சூழல் ஒரு பக்கம். மற்றொருபுறம் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? என்று புத்திசாலித்தனமாக யோசிக்கும் பெரும்பான்மையினர் மறு பக்கம். குறிப்பாக அரசியல் குறித்து எழுதும் போதெல்லாம் ஏன் எதிரிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுயபாதுகாப்பு அறிவுரைகள் வந்து தாக்கும்.

பொருளியல் உலகில் பணம் சேர்த்தவர்கள் மட்டுமே வெற்றியாளன். கலைகளை விரும்புபவர்கள் கலாவதியானவர்கள்.

ஆறாம் வகுப்பு முதல் இயல்பாக வாசிக்கத் தொடங்கிய மனம் இன்று வரையிலும் நின்று விடவில்லை. விட்டு விட்டு வரும் சாரல் மழை போல மனதைக் கழுவிக் கொண்டேயிருக்கின்றது. சிந்தனையில் தெளிவும், சோர்வு வரும் போதெல்லாம் மருத்துவர் போல உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது. இன்று வரையிலும் இருபது வயது இளைஞன் போல அன்றாட நடவடிக்கையில் வேகத்தைத் தந்து கொண்டிருக்கின்றது. மருந்து, மாத்திரை இல்லாத வாழ்க்கை வாழ முடிந்துள்ளது.

பல எழுத்தாளர்களை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு ஒருவர் மறைமுகமாக உன்னாலும் எழுத முடியும்? என்ற கதவை திறந்து வைத்தார். அவர் எழுத்தாளர் பா. ராகவன். ( Pa Raghavan )அது வரைக்கும் வாசித்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் யோசிக்க வைத்தார்கள். இவர் ஆச்சரியப்படுத்தினார். இந்தத் துறைகளைப் பற்றியெல்லாம் எழுத முடியும்? என்ற நம்பிக்கையூட்டினார். ஒரு இயக்குநரின் படம் நன்றாக உள்ளது என்றால் அவருக்குப் பின்னால் முப்பது துறைகளின் உழைப்பு இருக்கும்.

ஆனால் ஒரு எழுத்தாளரின் வெற்றிக்குப் பின்னால் அவர் ஒருவரின் உழைப்பு மட்டுமே இருக்கும். நம்ப முடியாத வேகத்தையும், வேகத்திற்குள் ஆச்சரியப்படத்தக்க வார்த்தைகளின் கோர்வையும், சிக்கெடுத்து சீவிய தலையைப் போலத் தெளிவான சுகமான நான்கு வழித்தடம் நெடுஞ்சாலை பயணம் போல இவரின் எழுத்துக்கள் என்னை அதியசமாகத் தொடர்ந்து படிக்க வைத்துக் கொண்டேயிருந்தது. கற்றுக் கொண்டேயிருந்தேன். இலக்கியம் என்ற போர்வையில் லேகியம் விற்காமல் ஒன்பதாவது படிக்கும் மகள் வாசிக்கும் அளவிற்கு அவரின் எழுத்துக்கள் என் புதிய பாதையை எனக்குக் காட்டியது.

இவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்தின் வாயிலாக என் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

எழுதித்தான் பார்க்கலாம் என்று தொடங்கிய பயணம் இன்று எட்டு வருடங்கள் கடந்து விட்டது. நான் எழுதிய வலைபதிவுகளில் உள்ள கட்டுரைகளை அடங்கிய மின்னூல்கள் ஒருதளத்தின் வாயிலாக மட்டும் 2,50,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. என் முதல் புத்தகம் டாலர் நகரம் 1500 பிரதிகள் விற்றுள்ளது. மாதத்தில் நாலைந்து பேர்களாவது படித்து விட்டு விமர்சனத்தை மின் அஞ்சல்வாயிலாகத் தெரிவிக்கின்றார்கள்.

பயணங்களில் அலைபேசி வாயிலாகப் படிக்க வாய்ப்பு இருப்பதால் மின் நூல்கள் அதிக நபர்களால் விரும்பப்படுகின்றது என்பதனை தாமதமாகப் புரிந்து கொண்டேன். உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மூலம் மாறிய வாழ்க்கை முறைகள் ஏதோவொரு விதமாகப் பலருக்கு அங்கீகாரத்தையும் சேர்த்து தந்து விடுகின்றது. உருவான தொழில் நுட்ப அலையைப் பொழுது போக்காகப் பயன்படுத்தாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற திருப்தி எப்போதும் எனக்குண்டு.

ஆனால் என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, அதன் மூலம் கவரப்பட்டு, நம்மாலும் எழுத முடியும் என்று ஒருவர் யோசித்தது கூட எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

அவர் பணிபுரியும் சூழல் என்பது எந்திரங்களுடன் உறவாடி, கண்களுக்குச் சோர்வு அளிக்கக்கூடிய, கண்களைப் பதம் பார்க்கக்கூடிய வெல்டிங், மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒருவர் பணியாற்றிக் கொண்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டு உள்ளார் என்பது ஆச்சரியத்தின் உச்சம். இதை விட மற்றொரு நம்ப முடியாத அதிசயம் என்னவென்றால் எழுதுவதற்கு இடம், சூழ்நிலை, வசதிகள் முக்கியமல்ல. அது உள்ளார்ந்த ஈடுபாடு தான் தன் திறமைகளை வெளியே கொண்டு வரும் என்பதனை எனக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார். 

பொருளாதாரச் சிக்கலின் காரணமாக வெளிநாட்டு வாழ்க்கை. மனைவி குழந்தைகளைப் பிரிந்து வாழும் வாழ்க்கை. வாழ் நாள் முழுக்கச் சொல்ல முடியாத ஏக்கத்தையும், பகிர முடியாத தன் உணர்வுகளைத் தன் எழுத்தின் வாயிலாகக் கடத்திக் கொண்டிருக்கின்றார். கற்றுக் கொண்ட எழுத்துத் திறமையைத் தான் வைத்துள்ள அலைபேசி வாயிலாக எழுதுகின்றார்.

கட்டுரைகள் வாயிலாக, புனைவு, அபுனைவு என்பதன் அர்த்தம் தெரியாத போதும் கூடச் சரியான வார்த்தைக் கோர்வைகளுடன், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லக் கற்றுள்ளார். நான் எழுதக் கற்றுக் கொள்ள எழுதத் தொடங்கிப் பல மாதங்கள் கழித்து வசப்பட்டது. ஆனால் இவருக்கே மிகக் குறுகிய காலத்திற்குள் வசமானதற்குக் காரணம் ஒன்றே ஒன்று. வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டாமல் இருக்கும் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது தான்.

இதுவரையில் நேரில் சந்திக்காத போதும் கூட உறவாய் உணர்வுடன் நெருங்கிய தம்பிக்கு நிறையப் பிரியங்களும் அதிகமான ஆசீர்வாதங்களும். விரைவில் எழுத்து வானம் வசப்பட வாழ்த்துகள்.

#2017 நம்பிக்கை நட்சத்திரம் ***** Jose H Jose


Saturday, January 27, 2018

நன்றி ஆசான்



பினாமி என்ற வார்த்தையை அரசியல் உலகில் கேட்டு இருப்பீர்கள். ஆனால் தொழில் உலகத்திலும் உண்டு. ஆனால் இந்தத் தொழில் உலகத்தில் உறவினர் வட்டங்களுக்குள் முடிந்து விடும். ஆனால் இங்கு குறிப்பிட்ட சில முதலாளிகள் மட்டும் உறவுக்கு அப்பாற்பட்டு சிலரை தன் உள்வட்டத்தில் மகளுக்குச் சமமாக வைத்திருக்கின்றார்கள். அப்படி ஒரு உயர்நிலையில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர் பணியாற்றிய நிறுவனத்தில் நான் நுழைந்த போது, இவருடன் அடுத்தச் சில வாரங்களில் பழகிய போதும், என்னை விட உயர்நிலையில் இருந்த போதும் என் மேல் அன்பு பாராட்டினார். என் மேல் கொண்ட கூடுதல் அக்கறை வைத்து வழிகாட்டியாக இருந்தார். அன்றைய சூழ்நிலையில் அதிக முன் கோபம், வேகம் என்று இருந்தவனை மறைமுகமாக மாற்றக் காரணமாக இருந்தார். குறுகிய காலத்தில் அவர் உரையாடலின் வாயிலாக என் மேல் கொண்ட அன்பினை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சில மாதங்களில் முழுமையாக இவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். அவர் இருந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாரிக்க வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வந்த போதும் சுய ஒழுக்கம் என்பதனை உயிர் மூச்சாக வைத்திருந்தார்.

நேர்மை, உண்மை, சத்தியம் என்ற வார்த்தையின் பொருள் இன்றைய காலகட்டத்தில் வலுவிழந்து விட்டது. ஆனால் இந்த மூன்றின் மூலாதாரம் இவர் தான். முதலாளி வெளிநாட்டில் வசித்தாலும், வாழ்ந்தாலும் அவர் சொத்துக்களைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்புகளைத் துளி கூடச் சஞ்சலம் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பது மட்டுமே என்று எத்தனைப் பேர்களால் வாழ முடியும் என்பதனை நினைத்துக் கூட முடியவில்லை. 

இவர் அதிகமாக எழுதுவதில்லை. குடும்ப நிகழ்வுகள், புகைப்படங்கள் போன்றவற்றை நினைத்த நேரத்தில் பதிவிடுவார்.

இப்போது கோவையில் இந்தியா முழுக்கத் தெரிந்த, முக்கியமான ஒரு நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் அமர்ந்துள்ளார். சேர்ந்த நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் நம்பிக்கை பெற்று குறிப்பிட்ட தொகை வரைக்கும் இவரே கையொப்பம் இடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கையில் நிறுவனங்கள் மாறும் போது அந்தத் தொடர்பு அப்படியே காற்றில் கரைந்து விடும். சாதகம், பாதகம் பொறுத்து தொடர்பு எல்லைக்கு உள்ளே, வெளியே என்று இருக்கும். ஆனால் இவர் இன்னமும் என் தொடர்பில் இருக்கின்றார். என் வாசகராக இருக்கின்றார். தீவிரமான திமுக அபிமானி. ஆனால் இதை வைத்து இவரை அவ்வப்போது கலாய்ப்பதுண்டு. துளிகூட அசரமாட்டார். லாகவமாகக் கையாள்வார்.

இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்வில் நாம் கடைப்பிடிக்க விரும்பும் நேர்மை என்ற சொல் வெறும் வார்த்தையல்ல. அது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட அவஸ்தை. அப்படித்தான் இப்பொதுள்ள சமூகம் சொல்கின்றது.

மனைவி, உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவுகள் எவரும் நமக்குச் சிலை வைக்க விரும்புவதில்லை. ஆனால் மன தைரியத்தைச் சிதிலமாக மாற்றி விடும் வல்லமை கொண்டவர்கள். இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். ஆனால் இன்று வரையிலும் நான் இருக்கும் பதவியில் ஆரோக்கியமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு காரணம்.

என் குழந்தைகளுக்கு என் பாவங்கள் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் வாழும் என் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளமாக இருந்தாலும் இவர் எப்படி வாழ்கின்றார்? எப்படி வாழ்ந்தார்? ஏன் நம்மால் வாழ முடியாது என்ற எண்ணத்தில் தான் இத்தனை வருடங்கள் இங்கே உள்ள தொழில் நகரக் குப்பைக்குள் மன தைரிய மாளிகை கட்ட முடிந்ததுள்ளது.

அந்த மாளிகை விலைமதிப்பற்றது. அதன் அர்த்தம் நூறு கோடி பெறுமான தொழில் சாம்ராஜ்யத்தை என்னை நம்பி ஒப்படைக்கும் வல்லமை கொண்டது.

நன்றி ஆசான். Senthil Kumar Subramanian

Friday, January 26, 2018

நற்சிந்தனை மனிதர்


சில வருடங்களுக்கு முன்பு வலைபதிவில் நாடார் சமூக வாழ்க்கை வரலாறு குறித்துத் தொடர் பதிவாக எழுதினேன். எழுதும் முன்பு அவர்கள் சார்ந்த வரலாற்றை அறியும் பொருட்டுப் பல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு அமைந்தது. இன்று வரையிலும் அந்தப் பழைய பதிவுகளை யாரோ சிலர் தொடர்ந்து வந்து படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எந்தத் தலைப்பை யார் யார் எங்கிருந்து படிக்கின்றார்கள் என்ற வசதி வலைபதிவில் உண்டு.

நாடார் சமூகத்தின் இன ஒற்றுமை ஆச்சரியமளித்தது. ஒடுக்கப்பட்டு இருந்த அந்தச் சமூகம் இன்று பொருளாதார நிலையில் உச்ச நிலையில் அடைந்து ஆட்சி, அதிகாரம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் கோலோச்சுகின்றார்கள். சாதி என்ற ஒற்றைப்புள்ளி அவர்களை இணைத்து ஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், முழுமையாக முன்னேற முடியாமல் தடுமாறுகின்றார்கள். அரசியல்வாதிகளின் சமயோசித புத்தி ஒரு பக்கம் இருந்தாலும் பணமும், பதவியும் அவர்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்குக் கிடைத்தாலும் அது அடுத்தடுத்து அந்தச் சமூகம் சார்ந்த மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. கிடைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முற்படுகின்றார்கள். தங்களைப் பார்ப்பனியமாக மாற்றிக் கொள்ளத்தான் நினைக்கின்றார்கள். அவர்கள் இனம் சார்ந்த சக உறவுகளைக் கூடப் பொருட்டாக மதிப்பதில்லை. இது தான் நிதர்சனம். 

ஒரு சமூகம் முன்னேற அரசாங்கம், அதன் கொள்கைகள், அரசியல்வாதிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் தயார் படுத்திக் கொள்கின்றார்கள் என்ற சமூக நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் சோகம் தான் மிஞ்சும். அரசியல்வாதிகள் உருவாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும், விலைக்குச் சோரம் போன தலைவர்களும், கிடைத்த வாய்ப்புகளைத் தங்கள் சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டவர்களும் தான் அதிகம். 

ஆனாலும் நம்பிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய இந்தியா முழுக்க 40 சதவிகிதத்திற்கு மேலே உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை ஒப்பு நோகையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அரசாங்க சலுகைகளைப் பெற்ற குடும்பத்தின் வாரிசுகளே அடுத்தடுத்து வளர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைக்கோடி கிராமவாசிகள் இன்னமும் மனித கழிவுகளை அள்ளுவது முதல் அடிமை வாழ்க்கை முறையைத் தான் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சுய சிந்தனைகளை அடகு வைத்து, தன் நிலையை உணரத் தெரியாமல், கிடைத்த வாய்ப்புகள் தனக்கு அமையாவிட்டாலும் தன் சந்ததியினருக்காகத் தங்களைத் தியாக உருவாக மாற்றிக் கொண்டு வளர்க்க விரும்புபவர்கள் மிக மிகக் குறைவான சதவிகிதமே. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் இன்னமும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தான். 

வட்டத்தை உடைத்து வெளியே வந்தவர்கள் தங்கள் வந்த பாதையை மறக்கவே விரும்புகின்றார்கள். வர விரும்புவர்களை அரசியல்வாதிகள் அடைத்து வைக்கவே விரும்புகின்றார்கள். இது போன்ற பல காரணங்களை அலசாமல் அவர்கள் மேல் பரிதாபப்பட்டு அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள், தந்தை பெரியார் கொள்கைகள், திருமாவளவன் என்று புகழ்பாடி இன்னமும் முக நூலில் நற்சிந்தனை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் என் பார்வையில் பரிதாப ஜீவன்களாகவே தெரிகின்றார்கள். 

இந்த வருடத்தின் மத்திம பகுதியில் இருந்து தான் இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தெளிவான சிந்தனை. எல்லாமே நேர்மறை சிந்தனைகள். அளவு கடந்த நம்பிக்கைகள். இராணுவத்தின் பணியாற்றியதால் சமூக அக்கறை கூடுதலாகவே உள்ளது. எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தை அழகாக எடுத்து வைக்கும் பாங்கு, என்று எல்லாவிதங்களிலும் இவர் எழுத்துப் படிக்கத் தூண்டுவதாகவே உள்ளது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது. 

பவர் புரோக்கர் என்றொரு சாதி அரசியலில் உள்ளது. அதில் முக்கியமானவர் திக வீரமணி. கலைஞர் நம்பி வீணாப் போனவர்களில் இவரும் ஒருவர். கலைஞருக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகளை அவ்வப்போது காலி செய்வதில் வல்லவர். ஏ1 குற்றவாளியைச் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்துச் சிலாகித்தவரை நண்பர் பெருமையாக எழுதும் போது இவர் விக்ரமன் படத்திற்கு வசனம் எழுதாமல் இருந்து விட்டாரோ? என்று நினைத்துக் கொள்வதுண்டு. 

இந்த வருடம் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்களில் இவரும் ஒருவர். நன்றியும், வாழ்த்துகளும் அன்பும். Poovannan Ganapathy

Thursday, January 25, 2018

மருத்துவ சிந்தனையாளர்



முகநூல் பதிவுகள் வலை பதிவுகளைத் தின்று செரித்து விட்டது என்று புலம்பலை இந்த வருடம் முழுக்கப் பல இடங்களில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது உண்மையல்ல. வாசிக்க நேரம் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்களுக்கு உண்டான களமே வலைபதிவுகள். வாசிக்காமல் போகின்றவர்களுக்குத் தான் இழப்பே தவிர எழுதுகின்றவர்களின் சிந்தனை மேன்மேலும் கூர்மையாகிக் கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனால் முகநூல் பதிவுகளிலும் காலமாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பலரும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல், மதம், சாதி இந்த மூன்றும் தான் இந்தத் தளத்தில் பேசு பொருளாக உள்ளது. அவசர கதியாக வாசிக்க விரும்புவர்களுக்கு, அலைபேசி வாயிலாக உண்டான வாசிப்புகளுக்கு ஈர்ப்பும் இதில் தான் உள்ளது என்பதனை உணர முடிந்தாலும் அவையெல்லாம் கூச்சலும் குழப்பமும் சேர்ந்து புரிதலில் குறைபாடுகளை உருவாக்கி வன்மம் மேலும் வன்மத்தையே வளர்த்துக் கொண்டிருக்கின்றது. 

நான் 2017 வருடம் முழுக்க ஃபேஸ்புக் என்ற முகநூல் தளத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். என்ன கற்றுக் கொண்டேன் என்றால் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகின்றது. அரை மணியில் ஐம்பது செய்திகள், விரைவுச் செய்திகள் போலக் கண் இமைக்கும் நேரத்தில் வாசித்த அனைத்தும் கடந்து மறந்து போய்விடுகின்றது.

ஆனாலும் முகநூல் தளத்தில் வரும் கருத்துக்களை வாசிப்பது சுகமாக உள்ளது. காரணம் புதுப்புது நபர்கள். புதுப்புது சிந்தனைகள். புதிய துறைகள். நாம் எண்ணிப் பார்க்க முடியாத விசயங்கள். இதுவரையிலும் அம்பலத்திற்கு வராத, அந்த நிமிடம் வரைக்கும் ஊடகத்தில் கூட வராத செய்திகள் போன்றவற்றை உடனே நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

சிந்தனையின் தாக்கத்தைக் கீறிக்கூடப் பார்க்கவில்லை. கட்சி சார்பு, மத வெறி, சாதி குறித்த உரையாடல்கள் அனைத்தும் அவரவர் சார்பாக இங்கே எடுத்து வைத்தாலும் எடுத்து வைத்த கருத்தில் துளி கூட உண்மை இல்லாமல் எதிர்க்கருத்து கொண்டவர்களின் சிந்தனையை அதில் உள்ள இருட்டை வெளிச்சமாக்குபவர்கள் வெகு சிலரே. அந்தச் சிலரை இந்த வருடம் இந்த வருடம் இந்தத் தளத்தில் அடையாளம் கண்டேன். 

1. ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி மதம், சாதி இல்லாத எதிர்கால வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றார். 

2. ஒருவர் பசியைப் போக்குவது முக்கியம். தொழில் நுட்பத்தை அதன் வளர்ச்சியைப் புறக்கணிக்காதீர் என்கிறார். 

3. ஒருவர் தான் இருக்கும் மதம் இது தான். இதையும் தாண்டி என்னால் யோசிக்க முடியும். உண்மைகளை உரக்கச் சொல்ல முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றார். 

4. ஒருவர் என் வலைபதிவுகள், மின் நூல்கள் வாசித்து, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, தான் பணிபுரியும் சூழலில் தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே எழுதக் கற்றுக் கொண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு எழுத்தாளராக மாறியுள்ளார். 

5. சில பத்திரிக்கைகள் வாங்கி வாசித்த பின்பு அதில் போட்டுள்ள விலைக்கு உண்டான மதிப்பு இல்லையே? என்று மனம் வருந்தும். ஆனால் இவரின் கட்டுரைகளுக்காக மட்டும் இன்று வரையிலும் வாங்கிக் கொண்டிருக்கின்றேன். இவர் எழுதிய எழுத்துக்கள் மட்டுமல்ல. இவர் பேசி பதிவு செய்த பேச்சு உரைகளை இந்த வருடம் முழுக்க இரவு நேரங்களில் எத்தனை முறைகள் கேட்டிருப்பேன் என்ற கணக்கே தெரியாத அளவிற்கு அத்தனை முறை கேட்டுள்ளேன். பல நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளேன். 

6. ஒருவர் எனக்கு உயர் அதிகாரியாக இருந்தார். நான் இப்போது இருக்கும் உயர் பதவியில் இவருக்கும் பங்குண்டு. இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். போட்டி , பொறாமை நிறைந்த வெளியே சொல்ல முடியாத அசிங்கங்கள் நிறைந்த நான் இருக்கும் தொழில் வாழ்க்கையில் என் எழுத்துப் பக்கம் எவரையும் கொண்டு வந்து சேர்க்க விரும்புவதில்லை. ஆனால் இவர் எனக்கு வாசகராக இருக்கின்றார். என் நல்வாழ்க்கை குறித்த அக்கறை கொண்டவராக இருக்கின்றார். வாழ் நாள் முழுக்க நேர்மை என்ற வார்த்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

7. என் வாழ்நாள் முழுக்க என் நலனைக் கருத்தில் கொண்டவர். வாசகராக அறிமுகமாகி என் ஏற்றத் தாழ்வுகளில் பங்கெடுத்து இன்னமும் என்னை செதுக்கிக் கொண்டவர். இருவரின் எண்ணமும் வேறு. கொள்கைகளும் வேறு. சொல்லப் போனால் கடந்த சில வருடங்களில் என் தனிப்பட்ட கொள்கைகள் கரைந்து அவர் கடைபிடிக்கும் கொள்கைகள், எண்ணங்கள் தான் என்னை இப்போது செதுக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல. 

8. இவர் நினைத்து இருந்தால் இவர் பணிபுரிந்த சூழலில், இவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் மூலம் ஊடகத்துறையில் உச்ச பதவியை அடைந்து இருக்க முடியும். ஆனால் கொள்கை அதிலும் முடிந்தவரைக்கும் நேர்மை. உணர்ந்ததை உலகிற்குச் சொல்லியே தீருவேன் என்ற பிடிவாதம் என்ற வாழ்க்கை ஏராளமான இன்னல்களை உருவாக்கிய போதும் இன்னமும் என்னை நான் இழக்க மாட்டேன் என்று இவர் வாழும் வாழ்க்கை என் வாழ்க்கையின் சுவடுகள் போலவே உள்ளது. 

9. எதிரிகளுக்குச் சமமாக ஆதரிப்பவர்கள் அதிகம் உள்ளவர்களில் இவர் தொடர்ந்து இயங்குவது என்னளவில் இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. இவரின் எழுத்துக்கள் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்ந்து முடிந்த அரசியல்வாதிகளின் யோக்கியதை என்னவாக இருந்தது? என்பதனை நிச்சயம் உணர்த்தக்கூடியது. 

10. ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். ஆனால் இவர் எழுத்து இந்த வருடம் முழுக்க அதிக ஆச்சரியத்தை, உத்வேகத்தை, இதுவரையிலும் யோசிக்க முடியாத பல பரிணாமங்களைத் தந்து உதவியுள்ளார். 

முன் குறிப்பு கொடுத்துள்ள இவர்களைப் பற்றி எழுதுகின்றேன். 

தொடர்ந்து எழுதுவேன். 

#2017 கற்றதும் பெற்றதும்   (28/01/2017)

++++++++

நான் பார்த்த தமிழாசிரியர்கள் நல்ல கதை சொல்லியாக இருந்துள்ளார்கள். பாடத்தைப் படிக்கத் தேவையில்லாத அளவிற்கு ஈடுபாட்டுடன் பாடம் நடத்தி இருக்கின்றார்கள். ஆனால் கல்லூரி வரைக்கும் நான் பார்த்த ஒரு ஆசிரியர் கூட எழுத்தாளர்களாக மாறிப் பார்த்தது இல்லை. ஆனால் இன்று அனைத்துத் துறைகளில் இருந்தும் எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். அது அவர்கள் சார்ந்த துறைகளை மட்டுமல்லாது அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் தொடங்கி ஏனைய பிற துறைகளிலும் தங்கள் திறமைகளைக் காட்டுகின்றார்கள். 

அதில் இந்த ஆண்டு முக்கியமானவராக இவர் என் பார்வையில், வாசிப்பில் எனக்கு முதன்மையானவராக இருக்கின்றார். 

மருத்துவராக உள்ளார். தினமும் பல பதிவுகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருப்பார். இரவில் வந்து இவர் பக்கம் சென்று நிதானமாக வாசிப்பதுண்டு. 
சிலரின் எழுத்துக்கள் நம் கண்களைத் திறக்கக்கூடியது. இவர் எழுதிய பலதும் நான் யோசித்துப் பார்க்காத பல விசயங்களைக் கொண்டதாக இருந்தது. 

ரு முறை இவர் எழுதிய ஒருவரின் ஈகோவை சீண்டிப் பார்க்காதவரைக்கும் நம் வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்கிற ரீதியில் எழுதிய எழுத்துக்கள், அது சார்ந்த சிந்தனைகள் பல நாட்கள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. 

உழைத்துக் கொண்டேயிருந்தாலும் எல்லோருக்கும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. இதன் மூலக்கூறுகளைப் புதுவிதமாக அலசுகின்றார். சுவராசியமாக உள்ளது. எல்லோருக்கும் அதன் காரணங்கள் தெரிவதில்லை. ஆனால் இவர் அரசியல், திரைப்படம், சாதி, சமூகம் போன்ற பல துறைகளைப் பற்றி எழுதுகின்றார். ஒவ்வொன்றும் முத்துக்கள். 

ரே ஒரு குறை என்னவென்றால் துணுக்குச் செய்திகள் போலவே எழுதித் தள்ளி விடுகின்றார். அடுத்தவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற மெனக்கெடல் அதிகம் உள்ளது. எழுதுபவன் எல்லாச் சமயங்களிலும் மார்க்கெட்டிங் விசயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா? மருத்துவரே? 

வாசித்து யோசிக்கத் தெரிந்தவனுக்கு உங்கள் எழுத்துக்கள் போய்ச் சேரட்டும். நீங்கள் எழுத்துக்களைச் சாரம்சத்தைக் கூர்மைப்படுத்துங்கள். 

இந்த வருடத்தில் இவர் எழுத்து எனக்கு முக்கியமானது. என் வாசிப்பில் முதன்மையாக இருந்தது. 

நன்றி மருத்துவரே. வாழ்த்துகள். Dinesh Kumar 





Thursday, January 18, 2018

கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும்,


படிப்பு முக்கியம்
நல்ல கல்வி நிலையத்தில் இடம் கிடைப்பது முக்கியம்
நல்ல மதிப்பெண்கள் முக்கியம்
நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் முக்கியம்.

ஆனால் அதற்கெல்லாம் முன்னால் குழந்தைகள் சந்தோஷமாக மிக முக்கியமாக உயிரோடு இருப்பது மிக மிக முக்கியம். 

அவர்களோடு பேசுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள்மீது திணிக்காதீர்கள். அவர்கள் கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும், அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் 

Give them your love, not your thoughts

 Ramachandran B K 



கடந்த மூன்றாண்டுகளாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு நான் செல்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளேன். காரணம் பள்ளியில் உருவாகும் மாற்றங்கள், மாறிக் கொண்டே இருக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தின் முறைகள் என்று எல்லாமே என் எண்ணத்திற்கு வினோதமாகவே தெரிந்தது. எப்போதும் மனித மனம் புதிய மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்காது. 

நான் மாற்றங்களின் காதலன். ஆனால் மனைவி மாறாத வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் என் விருப்பங்களை வெறுப்பது போல நடித்தாலும் அதனைக் குழந்தைகள் விசயத்தில் மட்டும் செயல்படுத்த் தொடங்கி விடுவார். 

சமூகம், அரசியல் போன்ற தளங்களில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. அதன் பலன் யாருக்குச் செல்கின்றது? என்பதனையும் கண்காணிப்பதுண்டு. அப்படித்தான் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சியைப் பார்க்கின்றேன். அதிசியதக்க வளர்ச்சி. ஆனால் அதன் பலன்? 

நேற்று முழுவதும் தொழிற்சாலை சார்ந்த பல பிரச்சனைகள். குடிகார, மன நோய், வக்கிரம் சார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளை உள்ளே வைத்துக் கொண்டு உள்ளே வரும் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் அந்த உரிமைக்குப் பின்னால் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கிக் கொண்டிருந்த போது நினைவூட்டல் அழைப்பாக இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மகள் அழைத்தார். 

வேண்டா வெறுப்பாக மதியம் கூடச் சாப்பிட மனம் இல்லாமல் மனைவியுடன் அங்கே சென்ற போது மருத்துவமனையில் நோயாளிகள் வரிசை போலப் பலரும் அமர்ந்திருந்தனர். மருத்துவர் போலப் பெற்றோரை மாணவ மாணவியரை வைத்து 500 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? எல்லாப் பாடங்களிலும் 100 எடுக்க வேண்டும்? என்று ஜெப ஆராதனைக்கூட்டம் போல ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு கொடுமையையும் பார்த்தேன். மற்றொரு பள்ளி தலைமையாசிரியர் எவரெல்லாம் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்களோ? அவர்களை, அவர்களின் பெற்றோர்களைக் காளி கோவில் பூசாரி போல மாறி பேசிக் கொண்டிருந்தார். வெறுப்பாய், வியப்பாய் பார்த்து ஒரு பக்கம் அமர்ந்திருந்தேன். 

மகள்கள் மூன்று பேர்களிடமும் அதிகம் பேசவில்லை. காரணம் அவர்கள் மேல் சென்ற வருடம் முக்கால்சதவிகிதம் நம்பிக்கை இழந்து இருந்தேன். இந்த வருடம் பாதிக்கு பாதி நம்பிக்கை இழக்க வைத்து இருந்தார்கள். 

இரண்டு பேர்கள் படிக்கும் வகுப்பறை ஆசிரியர் அழைத்தார். அவர் எப்போதும் போல ஒருவர் வாங்கிய 90 சதவிகித மதிப்பெண்கள் குறித்து எனக்குத் தெரியும். போன தடவை சொல்லியிருந்தேன். இந்தத் தடவை சாதித்து உள்ளார் என்று பாராட்டினார். 
மற்றொருவர் 60 சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே இரண்டு முறை அவரைச் சந்தித்து இருந்தாலும் நான் எதுவும் பேசாமல் கையெழுத்துப் போட்டு விட்டு வந்து விட்டேன். மற்றொருவர் படிக்கும் வகுப்பாசிரியரிடம் பேச வில்லை. ஆனால் இந்த முறை இரண்டு ஆசிரியர்களிடமும் பத்து நிமிடம் பேசிய போது இரண்டு பேருமே மிரண்டு விட்டனர். 

சுருக்கமாக. 

இவர்களுக்கென்று ஒரு கனவு உள்ளது. அந்தக் கனவு நாங்கள் உருவாக்கவில்லை. அது மூன்றாம் வகுப்பில் அவர்களே எங்களுக்குச் சொன்னது. அதற்கான ஆயத்த ஏற்பாடுகளை என் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர்களின் கடமையாக எங்கள் பணியைத் தொடங்கி விட்டோம். ஆனால் இவர்கள் அதற்கு உழைக்கத் தயாராக இல்லை. தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மாறிக் கொண்டே வரும் வயது, உருவாகும் எண்ணங்கள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு நான் மனைவி எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தாலும் அதனைப் புறக்கணிக்கவே விரும்புகின்றார்கள். 

ஆண்களை விடப் பெண்கள் அழகாக இருப்பதை விடத் தெளிவாகத் தன்னை உணர்ந்து இருப்பது முக்கியம். தனக்கான அடையாளத்தைக் கண்டு கொள்வதும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதும் அதை விட மிக முக்கியம். ஆனால் இவர்கள் சுகவாசியாக இருக்கத் தான் விரும்புகின்றார்கள். சிறிய வயதில் பெற்றோர்கள் வன்முறை பிரயோகம் செய்தால் அது காலம் முழுக்க மனதில் தழும்பாக இருக்கும் என்பதால் அன்பால் திருத்திவிட முடியும் என்ற என் நம்பிக்கை நாளுக்கு நாள் போய்க் கொண்டேயிருக்கின்றது. இதற்குப் பின்புலமாக உள்ள முக்கியக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள். அவர்கள் மதிப்பெண்கள் குறித்த அக்கறை செலுத்துகின்றார்கள். அதற்கு இவர்களைத் தயார் படுத்த வேண்டிய அவசியங்களை உணர்த்தாமல் வெறுமனே படி என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றார்கள். புறக்காரணிகளை அவர்கள் விளக்குவதில்லை. காரணம் அவர்களுக்கே வெளியே என்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது? என்பதே தெரியவில்லை.

எங்கள் வீட்டில் இரண்டு பேர்கள் நீங்க விரும்பிய ரேங்க் ஹோல்டர் என்ற பெருமையைப் பெற்று இருக்கின்றார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் இவர்களின் தனித் திறமைகள் எந்த அளவுக்குச் சிறப்பாக இருந்ததோ அவையெல்லாம் இப்போது மழுங்கி இவர்களை விழுங்கி தின்று விட்டது. கடமைக்காக வெறுப்புடன் இவர்கள் அணுகும் பாடங்களால், உணர்ந்து கொள்ள முடியாத, வளர்த்துக் கொள்ள முடியாத சிந்தனைகளால் இவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வில் என்ன சாதிக்க முடியும்? என்று நம்புகின்றீர்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் எனக்கும் என் மகள்களுக்கும் நடக்கும் உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளும் அரசியல், பத்திரிக்கை, வீடியோ, டிவி, கலாய்ப்புகள் போன்றவற்றைச் சொல்லி நிறுத்தினேன். 

அவர் சற்று நேரம் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிரண்டு போய் சார் இங்கே வந்து மூன்று வருடங்களில் இப்போது தான் ஒரு பெற்றோர் தன் குழந்தைகளுக்காக இப்படி இருக்க முடியுமா? என்று யோசிக்க வைத்து இருக்குறீங்க என்று பேசிவிட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

மற்றொருவரின் ஆசிரியர் அவர்கள் திறமை எனக்கு உங்களை விட எனக்குத் தெரியும். அவர்கள் பெரிய மனுசி ஆயிட்டாங்க. அப்புறமென்ன? அந்தத் தெனாவெட்டு வரத்தானே செய்யும் என்றார்? 

நானும் மனைவியும் தலைமையாசிரியரை சந்திக்கச் செல்லலாம் என்று மூன்றாவது தளத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். ஒரு மகள் என்னம்மா வீட்டில் சாப்பிட செய்து வைத்துருக்கீங்க? என்றார். மனைவி என் கோபத்தைப் பார்த்து அமைதியாக வந்து கொண்டிருந்தார். தெனாவெட்டு பார்ட்டி அப்பா எனக்கு ஸ்போர்ட்ஸ் இருக்கு நீங்க போய்ப் பாருங்கள்? என்று சொல்லிவிட்டு நகரப் பாருங்கள் என்றார். 

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் வந்து கொண்டிருந்த போது பள்ளிக்கூடத் தாளாளர் என்னைப் பார்த்துக் கூட்டத்தில் இருந்து தனியே என்னை அழைத்துப் பேசினார். என் ஆதங்கத்தைச் சில வார்த்தைகளில் அவருக்குப் புரிய வைத்தேன். அவர் உங்கள் அப்பாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறையப் பிடிக்கும். இவரைப் போன்ற பெற்றோர்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட அமையாது. ஏன் இப்படி உங்கள் உண்மையான திறமை குறைந்து கொண்டே வருகிறது என்று கால் மணி நேரம் பேசினார். 
இவர்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. 

இரண்டு ஆசிரியர்களிடமும் நான் சொன்னது நான் இவர்களை எந்த விசயத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களின் கடமைகள், எதிர்காலக் கனவிற்கு உழைப்புக்குண்டான உழைப்பு பற்றிப் புரிய வைப்பேன். வழிகாட்டியாக இருப்பேன். சாதனையாளர்களாக எதிர்காலத்தில் மாறினால் நமக்குத் தேவைப்படும் அனைத்தும் நம் வீடு தேடி வரும். சாதாரண மனிதர்களாக வாழ ஆசைப்பட்டால் எல்லாப் பொருட்களையும் வாங்க வரிசையில்போய் நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

இந்த முறை அவர்கள் கொடுத்து இருந்த விண்ணப்பத்தில் நான் தலைமையாசிரியரை சந்திக்க வேண்டும் என்று எழுதிய போது மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மனதில் பயம் இல்லை. காரணம் கவலைகள் இல்லாத வாழ்க்கை. எது குறித்த அக்கறை இல்லை. காரணம் எவரை மதித்து என்ன ஆகப் போகின்றது. 

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். காரணம் சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு சீரழிவுக்குப் பின்னாலும் தனிமனித சுயநலமே மேலோங்கியுள்ளது. 

Thursday, January 11, 2018

சில ரகசிய குறிப்புகள் -- விமர்சனம்


நான் ரசித்த "சில ரகசிய குறிப்புகள்" எனும் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் புத்தகம் குறித்தொரு பார்வை... 

யார் ஒருவர் மட்டையுடன் களத்தில் இறங்கி வந்தாலும் அதில் ஒரு ரசனை இருக்கும். சச்சின் களத்தில் இறங்கி வரும் போது மட்டும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்... 

அது போலவே புத்தகங்கள் வாசிப்பது பிடிக்குமெனக்கு. ஆனால் ஜோதிஜி சார் புத்தகம் கையிலெடுக்கும் தருணம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறையும் அப்படியே இப்புத்தகத்தையும் கையிலெடுத்தேன் "வாடா தம்பி உனக்காகத் தான் இதை நான் எழுதியிருக்கிறேன் என்பது போல் எனை வரவேற்றது இப்புத்தகம்" காரணம் வழக்கமாக வரவேற்கும் கட்டுரையல்ல இம்முறை எனை வரவேற்றது... 

இது ஒரு கதை நாகமணி என்ற சக ரயில்பயணி பகிர்ந்து கொண்ட தன் கதை. 
கதையென்றால் நமக்குக் கொள்ளை பிரியம் அதுவும் சொல்ல போகிறது நமக்குப் பிடித்த எழுத்தாளர் ஜோதிஜி சார் அவர்கள். பாலாசுழையைத் தேனில் முக்கியெடுத்துச் சுவைக்கப் போகும் மனநிலையோடே புத்தகத்தினுள் மூழ்கினேன்... 

நாகமணி எனும் எதிர்பாலினத்தவரிடையேயான தனது உரையாடலை சொல்லும் ஆசிரியர் நமது ஆழ்மனதுடனும் பேசுகிறார். எதிர்பாலினத்தவரிடம் எப்படிப் பழக வேண்டும், எந்தளவு முன்னெச்சரிக்கையாய் நடந்து கொள்வது அவசியம் என எதோ ஒரு வகையில் நம்மிடம் அளவளாவுகிறார். வாசகனுக்கும் தன் சிறந்த பழக்கவழக்கத்தின் மூலம் பாடமெடுக்கிறார்... 

எனது அம்மா பாலியல் தொழிலாளி; என்று நிமிர்ந்த பார்வையும் கலங்கிய கண்களுடன் நாகமணி சொல்லும் இடம் ஒரு நிமிடம் நம்மையும் அவ்விடம் விட்டு நகர விடாமல் தான் செய்கிறாள்... 

தன் அம்மாவைப் பிரிந்து வந்து ஜெயித்த நாகமணி தன் அம்மாவைப் புரிந்து கொள்ளும் தருணம் அம்மா உலகில் இல்லை என்பது வேதனை... 

ஜெயித்த ஒரு பெண்ணின் வாழ்வின் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை அறுதியிட்டுக் கூறுவது அரிது... 

ஆனால் தோற்றுப்போன ஒரு பெண்ணின் பின்னால் நிச்சயம் ஒரு ஆண் தலைகுனிந்தபடியே நிற்கிறான்... 

அதையே நாகமணி மற்றும் அவள் அம்மாவின் கதை ஆண்சமூகத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறது... 

நாகமணிக்கு அவள் அம்மா எழுதிய நீண்ட கடிதம் கதையின் உயிர்; படிப்பவரை நெகிழச் செய்யும் உரை அது... 

www.freetamilebooks.com எனும் இத்தளத்திலிருந்து இப்புத்தகத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு கிடைத்தாலல்ல வாய்ப்பை உருவாக்கிப் படியுங்கள்... 

நிச்சயமாகச் சொல்லலாம் நாகமணி மற்றும் அவள் அம்மா வாழ்க்கை... 

சிலரது நெஞ்சைத் தொடும் 
சிலரது நெஞ்சைச் சுடும்... 

ஒரு எழுத்தாளனால் மட்டுமே தான் கண்டது, தான் ரசித்தது, தன் கற்பனை, தன்னைக் கவர்ந்தது என எதையோ ஒன்றை அடுத்தவருக்குப் பயன்படும்படியாக அடுத்தவர்கள் தன்னை மறந்து, தன் கவலை மறந்து, அதை ரசிக்கும் படியாக, அதை உணரும்படியாக, அதிலிருந்து தன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையை எடுத்துக்கொள்ளும் படியாகச் செய்ய வைக்க முடியும். அப்படிப்பட்ட ஆச்சரியமூட்டும் எழுத்தாளராக உங்களுக்கென் சிரம்தாழ்ந்த நன்றிகள்... 

ஒவ்வொரு புத்தகமும் படித்து முடிக்கும் தருணம் நெஞ்சு இனிக்க வைக்கும் அல்லது நெஞ்சு கனக்க வைக்கும். இப்புத்தகமோ வேகமாக வாகனத்தில் சாலையில் செல்கையில் கோரவிபத்தொன்றை கண்டு கை கால் நடுங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடர்வோமே அப்படியொரு அனுபவத்தை ஒத்து இருந்தது நாகமணியின் கதையைத் தொடர்ந்து அடுத்தப் பகுதியாக "போதிமரத்தை" படிக்கத் துவங்குகையில்... 

ஒரு கதையோ, கட்டுரையோ, கற்பனையே என எதுவாக இருந்தாலும் அங்கே அதைச் சொல்லும் எழுத்தாளன் மறைந்து அக்கதாப்பாத்திரங்களோ, அக்காட்சிகளோ அல்லது சொல்லும் விசயமோ மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுமாயின் அங்கே அந்த எழுத்தாளன் ஜெயிக்கிறான். ஜோதிஜி சாரும் ஜெயித்துகொண்டே இருக்கிறார் ஒவ்வொரு முறையும்... 

"போதிமரம்" இந்தத் தலைப்பே எத்தனை வலிது. புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போலத் தனக்கு ஞானமும் தன் தேவதைகளான தேவியரிடமிருந்தே கிடைக்கிறது என்பதைச் சொல்லும் தலையாயத் தலைப்பு... 

தன் இயல்பு மாறாத எளியக் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய மூன்று தேவதைகளான தேவியரிடையே தான் படும் பாட்டையும் அவர்களிடமிருந்து கிடைக்கும் அள்ள அள்ளக் குறையா அன்பையும் எளிய மொழியில் அழகு நடையில் சொல்கிறார். தலைமுறை இடைவெளியைச் சொல்ல தன் அப்பாவுடன் தனது நினைவலைகளையும் தனது மகள்களுடன் தனது சுகமான அனுபவத்தை நம்மிடம் சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார்... 

வாசகர்கள் சிலர் இவரைப் பார்த்துப் பொறாமைப் படக்கூடும்; சிலர் எப்படிக் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதைப் படிக்கக் கூடும். தன் எழுத்தினூடே தன் அனுபவத்தில் கிடைத்ததைத் தன் வாசகனுக்குச் சொல்வது தானே எழுத்தாளனின் கடமை. ஒரு எழுத்தாளனாய் தன் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் ஜோதிஜி திருப்பூர்... 

சில புத்தகங்களைப் படிக்கையில் மட்டும் இதை எழுதினவரை ஒருமுறையேனும் பார்த்துவிடும் ஆசைவருவதுண்டு இந்தப் போதிமர தொடரைப் படித்து முடிக்கையில் இக்கதையில் நமை கொள்ளை கொள்ளும் அப்பாவுக்குப் பாடம் சொல்லும் தேவியர்களையும் பார்த்துவிடும் ஆசை வந்ததை மறுப்பதற்கில்லை... 

"என்னைப் பற்றி" என்ற தலைப்பின் கீழ் தனது சொந்த குடும்ப வரலாற்றுத் தேடலை மிக அழகாகத் தனக்கே உரிய பாணியில் சுவைப்படச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இதைப் படித்தவர் மனதில் தங்களது குடும்ப வரலாற்றையும் தேடும் எண்ணம் துளிர்விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இப்புத்தகத்தைப் படித்த பலர் தேடியிருக்கக்கூடும்... 

கையிலெடுத்த புத்தகத்தை ஒற்றை மூச்சில் படித்து முடிக்க வைப்பது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி. ஒரு எழுத்தாளராய் வாசகனான எனை நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எப்போதும் உங்களுக்கெனப் பிரியமும் நன்றியும்... 

இப்புத்தகம் என் கைக்குவர காரணமான ebook மின்னூல் குழுமத்திற்குமென் சிரம் தாழ்ந்த நன்றிகள். கடல் கடந்த தேசத்தில் இருந்துகொண்டும் சிறந்த இப்படிப்பட்ட படைப்பை படித்து ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு உங்கள் தன்னலமற்ற சேவையே காரணம். நீங்கள் சத்தமின்றித் தமிழுக்குச் சிறந்தவொரு தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். தலைமுறை தாண்டியும் உங்கள் உழைப்பு நிலைத்து நிற்கும். பிரதிபலன் பாரா உங்கள் உழைப்பு அப்போதும் பேசப்படும். 

நீங்கள் சேர்த்து வைப்பது வெறும் புத்தகங்களையல்ல, உங்கள் சந்ததிகளுக்குப் புண்ணியத்தையும் தான்... 

புத்தக ஆசிரியரான ஜோதிஜி சாருக்கும், இக்குழுமத்திற்கும் என் நன்றியும் வணக்கமும்... 

நேரம் இருப்பவர்கள் படியுங்கள் சிறந்தவொரு படைப்பை ரசித்ததாய் நீங்களும் உணர்வீர்கள்... 

அன்புடன், 

H. ஜோஸ்... 

Tuesday, January 09, 2018

ஆன்மீக அரசியல்



ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

+++++++++

திருப்பூரில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் முழு வீச்சாக 700 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள். கட்டுமஸ்தான தேகம் உள்ள அவர்கள் சாயப்பட்டறைகளில் பணிபுரிந்தனர். ஒடுக்கப்பட்ட, சொந்த ஊரில் வாழ வழியில்லாதவர்களின் வருமானத்திற்குத் திருப்பூர் உதவுவதாக இருந்தது. 

திருப்பூர் எல்லைப் புறத்தில் உள்ள சிறிய திரையரங்கங்களில் நிச்சயம் விஜயகாந்த் படம் தான் ஓடிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்கு எப்போதும் எந்த அளவுக்குக் கூட்டம் சேருமோ அதைப் போலவே விஜயகாந்த் படங்களுக்கும் மதிப்பு இருந்தது. 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் விஜயகாந்த் படங்களைப் பார்க்கும் போது அவர் பேசும் நீண்ட வசனங்களையும், அவர் படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொண்டே வந்த வித்தைகளையும் ஆச்சரியமாகக் கவனிப்பதுண்டு. பதிவில் விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர் என்று எழுதினேன். எவரும் யோசிக்க முடியாத அளவிற்குப் பா.ம.க கோட்டைக்குள் புகுந்து பிடரியை உலுக்கியது முதல் ஆச்சரியம். பத்துச் சதவிகிதம் ஓட்டு என்பது பழம் தின்று கொட்டை போட்டவர்களைப் பயப்பட வைத்தது. கடைசியில் என்ன ஆனது? 

"என் கணவன் கள்வன் அல்ல" என்று நீதி கேட்ட பெண்மணி அந்தக்காலம். "முதலமைச்சரின் மனைவி என்று என்னைச் சொல்ல வேண்டும்" என்று அண்ணியார் போராடியது, போராடிக்கொண்டிருப்பது இந்தக் கால அரசியல் அவலமாக முடிந்தது. அவரும் காரணம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் முக்கியக் காரணம். அதைவிட அவரின் பழக்கவழக்கங்கள் முக்கியக் காரணம். ஒருவர் வளரும் போது சிலவற்றை விட வேண்டும். சிலவற்றை ஒதுக்க வேண்டும். பலவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அவருக்கும் உயிர் பிழைத்திருக்கச் சிங்கப்பூர் தான் உதவிக் கொண்டிருக்கின்றது. இப்போது ஆன்மீக அரசியல் பேசுபவரை இப்படிப் பேச வைக்கக் காரணமாக இருந்ததும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தான். ஒன்றிரண்டு பழுதானால் ஆரோக்கியக் குறைபாடு. உடம்பு முழுக்க ஓவர் ஆயில் சர்வீஸ் செய்வது என்பது அதுவரையிலும் கற்ற வித்தைகள், காட்டிய வித்தைகளும் தந்த அன்புப்பரிசு. 

பணம் வரும் போது அது மனிதர்களின் ஆரோக்கியத்தை விலை பேசும். கூடவே பதவி வந்த பின்பு தனி மனித ஆரோக்கியம் பொதுச் சொத்தாக மாறிவிடும். சுதாரித்துக் கொண்டவர்களும், பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களும், எதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்களுக்கும் உண்டான உலகம் அரசியல் உலகம். 

கள அரசியல் என்பது வேறு. அதன் மூலம் அடையப் போகும் பதவிகள் மூலம் செய்ய வேண்டிய நிர்வாக அரசியல் வேறு. மாநில அரசியல் வேறு. அதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய இந்திய அரசியல் வேறு. இத்துடன் ஒவ்வொரு நிமிடமும் இப்போது வந்து சேரும் உலக அரசியல் என்பதனை புரிந்து கொள்ள நிறையவே பக்குவம் தேவை. அதிக அளவு நிதானம், சமயோசித தந்திரங்கள் தேவை? 

கலைஞரை வெறுக்க ஆயிரம் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடும். ஆனால் "தன்னைத் தக்க வைத்துக் கொள்ள" என்ற கலையை அவரிடமிருந்து தமிழக அரசியலில் இருந்து வேறு எவரும் அவரைப் போலக் கற்றுத் தந்துவிட முடியாது. அதனால் தான் செயல்படாமல் இருந்தாலும் கோவில் போலக் கோபாலபுரம் செல்கின்றார்கள். 

ரஜினியும் விதிவிலக்கல்ல. 

ஏ1 குற்றவாளியைத் திறமைசாலி, தைரியசாலி என்று ஊடகங்கள் தான் முன்னிறுத்தியது. இன்னமும் அந்தப் பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றது. அதே போல ரஜினிக்கு சிறந்த ஆன்மீக வாதி என்று பட்டம் மூலம் பறக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றது. 

ஆன்மீகம் என்பது மக்களுக்கானது என்றால் அது கோவில், சாமி, அவரவர் மனதோடு முடிந்து விடும். அதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்காது. இருக்கவும் முடியாது. ஆனால் இப்போது மற்ற மதங்களில் இருந்து இந்து மதம் வரைக்கும் மதக் காப்பாளர்கள் கையில் அரசியல் சிக்கத் தொடங்கிய போதே எதைத் தொட்டால் சலசலப்பு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டே ரஜினிக்குப் பின்னால் உள்ளவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் ரஜினி காலடி எடுத்து வைத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

உணர்ச்சி வசப்படுபவர்கள், மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களை வாசித்து, சொல்லிப் பழகியவர்களுக்கு எந்தப் பதவி எந்தக் காலத்தில் கிடைத்தாலும் அவர்களால் சிறந்த நிர்வாகியாக ஆக முடியாது என்பதனை கடந்த காலத் தமிழக அரசியல் உணர்த்தியுள்ளது. அப்படியே பதவி வந்தாலும் களத்தில் இறங்கி தன்னை மாற்றிக் கொண்டு, எதார்த்தம் புரிந்து, தன்னை மெருகேற்றிக் கொண்டவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளனர். 

சுகவாசி வாழ்க்கைக்கு அடிமையானவர்கள் கள எதார்த்த அரசியலுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதனையும் தமிழக அரசியலில் துண்டைக் காணோம். துணியைக் காணோம் என்று ஓடிய மற்ற நடிகர்கள் பல முன் உதாரணங்களை நமக்குக் காட்டியுள்ளனர். காரணக் காரியங்கள் அடிப்படையில் மற்றொரு அடிமையாக வேண்டுமானால் சொன்னதைச் செய்யும் கூலியாகச் செயல்பட முடியும். 

பாவம் ஆன்மீகம். 

உங்கள் ஆசைக்குப் பல கோடி மக்களின் நம்பிக்கைகளை அரசியல் மூல தனம் ஆக்காதீர்கள் ரஜினி. குடியையும், புகைப்பதையும் தமிழக இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தவர் நீங்கள். அரசியல்வாதிகள் கைவிட்ட அவர்களை இப்போது அவரவர் எளிய நம்பிக்கைகள் தான் அவர்களை வாழ்வதற்கான காரணங்களைப் புரிய வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆதனால் தான் இன்னமும் இந்தியா துண்டு துண்டாக உடையாமல் இருக்கின்றது. 

உங்கள் ஆன்மீக அறிவை உங்கள் வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்குப் புரியவைத்து அவர்களை முதலில் நல்வழிப்படுத்துவதில் இருந்து தொடங்கலாமே? உங்கள் மனைவிக்கு அரசாங்க சொத்துக்கு ஆசைப்படாத ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கலாம். வாடகை கொடுத்தால் தான் அடுத்தவர் சொத்தை அனுபவிக்க முடியும் என்ற அடிப்படை அறிவை கற்றுக் கொடுக்கலாம். அப்பாவின் புகழையாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருங்கள்? என்ற அறிவுரைகளை இரண்டு மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். 

ஆன்மீகம் என்பது அரசியல் அல்ல. அது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கம். 

அவரவர் மதம், அவரவர் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உண்டானது. 

வெளிச்சத்தில் இருந்து பழகியே வந்த உங்களுக்கு அந்தரங்க அறைகளில் வெளிச்சம் பாய்ச்சுவது தவறென்பதைக் காலம் புரிய வைக்கும். 

04/01/2018  ( முகநூல் குறிப்புகள் )

Sunday, January 07, 2018

ஆசிரியர் சம்பளம்? காவல்துறை சம்பளம்? சில குறிப்புகள்


ஒரு பக்கம் அவல முகம். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சந்தின் வழியாக வண்டியில் வந்து கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய சந்தின் ஓரத்தில் பலரும் நின்று கொண்டிருந்தனர். உள்ளடங்கிய பகுதியில் ஒரு காவல் துறை வாகனமும் சில காவலர்களும் நின்று கொண்டு எப்போதும் போலச் சோதித்து அவர்கள் வருமானத்தைச் சாதித்துக் கொண்டிருந்தனர். என்னை நிறுத்து என்று அழைக்கவில்லை. ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று இருந்தாலும் அங்கிருந்த நபர்களில் ஒருவருக்கு 300 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் முப்பது நபர்களின் மூலம் அவர்கள் பெற்ற தொகை பத்தாயிரம் ரூபாய்க்கு அருகே வந்திருக்கும். 

மறு பக்கம் ஆச்சரிய முகம். 

திருப்பூரில் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாலை பராமரிப்புக் கேவலமாக உள்ளது. தினந்தோறும் அலைய வேண்டிய வேலையில் உள்ளவர்களின் முதுகு நிச்சயம் பெயர்ந்து விடும். தினமும் எதையும் உள்ளே ஊற்றிக் கொண்டோ அல்லது வலிக்குத் தடவிக்கொண்டோ தான் தூங்க முடியும். கவுன்சிலர் இருந்தால் கூட மக்கள் பேச முடியும். இப்போது அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால் இந்தக் கொடுமையில் பல இடங்களில் உருவாகும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பல காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களைக் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நான்கு புறமும் காட்டாறு அருவி போல வந்து பாயத் தயாராக இருக்கும் பொது மக்களின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தி, சீர் செய்யும் தொடர்ச்சியான அவர்களின் பணியும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மனதிற்குள் போட்டுப் பார்த்தேன். 

கலைஞர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் இன்று கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்களை விடப் போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் அதே அளவுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நாள் தோறும் மொத்த புகையையும் சுவாசித்து, படிப்படியாக ஆரோக்கியம் இழந்து, வேலை செய்யும் முழுமையான நேரத்தில் ஒரு துளி கூட நகர வாய்ப்பில்லாத வாழ்க்கை அது. 

+++++++++++++

ஒரு துறையைப் பற்றி எழுதும் போது அதனைப் பற்றி விமர்சனப் பார்வையில் தான் அணுக முடியும். நம் குடும்பத்தில், உறவினர்களில், நண்பர்கள் வட்டத்திலும் அதே துறையில் பணியாற்றக்கூடும். அவர்களின் தனிப்பட்ட சங்கடம் என்னை வருத்தமடையச் செய்தாலும் நான் பார்க்கும் சமூகத்தை என் பார்வையில் என் மொழியில் எழுதிவிடவே விரும்புகிறேன். 

விதிவிலக்குகள் இருக்கலாம். 

ஏன் ஆசிரியர்கள் மேல் கோபம்? இது நேற்று என்னை நோக்கி வந்த கேள்வி? 

எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஆசிரியராக நுழைந்து தலைமையாசிரியராக இந்த மாதம் முடிவில் பணி ஓய்வு பெறப் போகின்றார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமத்தில் இருந்தது. பள்ளிக்கூட, கல்லூரி விடுமுறையில் அவர் பணியாற்றிய பள்ளிக்குச் சென்றுள்ளேன். 

தமிழ்நாட்டில் மூன்று இடங்களுக்கு மாறி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பணியாற்றி அவர் தலைமையாசிரியராக ஆசிரியர் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சகோதரி என்று நிலையைத் தாண்டி தற்போதைய கல்விச்சூழல், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலவற்றைப் பேசுவோம். 

அவர் இறுதியில் முடிக்கும் ஒரே விசயம் ஆசிரியர்களுக்கு "இவ்வளவு சம்பளம் தேவை இல்லை" என்பார். 

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் முதுகலை முடித்து அவனும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ப்ளஸ் டூ ஆசிரியராக உள்ளே நுழைந்து இப்போது திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் தான் பணியாற்றி வருகின்றார். அவர் முதுகலை, கல்வியியல் பட்டங்கள் பெற்று வேலை கிடைக்காமல் முதலில் திருப்பூர் வந்து தான் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த வேலையில் தான் இருந்தார். அவர் ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் முதலில் தனக்குக் கிடைத்த சம்பளத்தைப் பார்த்து திருப்பூர் மீண்டும் வந்து விடலாமா? என்று யோசித்தவர் தான். இப்போதும் வாரம் தோறும் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றார். அவர் சென்ற வாரம் சொன்னது "நான் வாங்கும் சம்பளத்திற்கும் என் வேலைக்கும் தொடர்பே இல்லை. உண்மையிலேயே ஆசிரியர்கள் சம்பளம் மிக மிக அதிகம்". 

காரணம் அவருக்குத் தெரியும் திருப்பூரில் பத்தாயிரம் சம்பளத்திற்கு ஒருவர் எந்த அளவுக்குக் கடின உழைப்பு செலுத்த வேண்டும் என்பதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். 

மற்றொரு உறவினர் மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். அவர் மனைவியும் மேல் நிலைக்கல்வி ஆசிரியராக இருக்கின்றார். தினமும் நாற்பது கிலோமீட்டர் பயணித்துப் பள்ளிக்குச் செல்கின்றார். அவர் இயல்பிலேயே சுகவாசி. பணி குறித்துப் பேசும் போதெல்லாம் டார்ச்சர் அதிகம் என்கிறார். 

வாசிப்பு முதல் கண்டதும் கேட்டதும் பழகியதை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியர்கள் குறித்த தற்போது என் சிந்தனையில் இருப்பவை. 

1. இராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்தவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் புத்துணர்ச்சி பெற்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைத்தது என்று கூறிவிட முடியாது. 

2. குறிப்பிட்ட வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கை மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கவில்லை.. அரசு மூலம் வழங்கப்படும் இலவச பொருட்கள் மாணவர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் இழுத்துக் கொண்டு வரவில்லை. வராக்கடன் தொகையை அரசு வெளியிடாவிட்டாலும் நாங்களே வெளியிடுவோம். முதலில் வங்கிகளைச் சீரமைக்க வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். என்று வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு போராடிப் பார்த்துள்ளேன். இதுவரையில் ஆசிரியர்கள் போராடிய எந்தப் போராட்டத்திலும் மாணவர்கள் நலன் சார்ந்தோ, மாறாமல் இருக்கும் பாடத்திட்டங்கள் குறித்து அக்கறைப்பட்டுப் போராட்டம் நடத்திப் பார்த்ததாக நினைவில்லை. 

3. மாணவர்களைத் திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்ற கட்டளை ஆசிரியர் மாணவர்கள் உறவில் பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. மாணவப் பருவத்தைத் திசைமாற்றியுள்ளது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

4. ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் பிற வேலைகள் கூடுதல் பணிச்சுமை என்றால் அதனை விட இன்னமும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நடைமுறைகளைக் கட்டி அழுது கொண்டிருப்பது கல்வித்துறையை முன்னால் நகர முடியாத அளவுக்கு உள்ளது. கல்வித்துறையில் உள்ள ஊழல் குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது அரசியல்வாதிகளை மட்டும் சார்ந்தது மட்டுமல்ல. ஆசிரியர் எடுக்கும் கடன் தொகை பெறக்கூட அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் கொடுத்த பின்பே அந்தத் தொகையைப் பெற முடியும். கீழ்நிலை வரைக்கும் நாற்றமடிக்கின்றது. 

5. இப்போது ஆசிரியர் மாணவர் உறவென்பது பாசத்துடன் அணுகுவது அல்ல. பயத்துடன் அவரவரை பாதுகாத்துக் கொள்வது போலவே உள்ளது. 

6. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் கணிதம், அறிவியல் பாடங்களுக்குப் பாடம் எடுத்து பாதிக்கு மேற்பட்டவர்களை நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துள்ளார். பல இடங்களில் மாணவர்கள் குறைவாக இருந்தும் அளவுக்கு மீறி ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அதிக மாணவர்கள் இருக்கும் இடங்களில் அரசு, ஆசிரியர்களை நியமிக்காமல் காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிக்கின்றது. 

7. சம்பளத்தைத்தாண்டி அர்ப்பணிப்பு உணர்வு என்பது ஆசிரியர் பணியில் தலையாயக் கொள்கை. காரணங்கள் எத்தனை இருந்தாலும் எதிர்காலச் சமூகத்தை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு ஆசிரியருமே. ஆனால் உங்களுடன் பணியாற்றுபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அவர்களின் தரத்தை பட்டியலிட்டுப் பாருங்கள்? 

தான் வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக என் உழைப்பைக் காட்டியுள்ளேன். ஒரு மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால் கூட என் மனம் வருந்தும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பணியாற்றும் பள்ளியில் தான் என் மகன், மகளையும் படிக்க வைக்கின்றேன். எவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதில்லை? போன்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். 

உங்கள் மனசாட்சி உண்மையைப் பேசும்?

07/01/2018  (முகநூலில் எழுதிய குறிப்புகள்)