Monday, December 31, 2018

ராஜராஜன் ஆண்டு. - 2018


ம வயது உள்ளவர்களை இடைவெளி விட்டுச் சந்திக்கும் போது அவர்களின் மாறிய தோற்றங்கள் பயமுறுத்துவதாக உள்ளது. எதை இழந்து எவற்றையெல்லாம் பெற்றார்? என்று கேள்விக்குறியில் வந்து முடிகின்றது. இவனைக் குழந்தையாக பார்த்தோமே? இப்போது நம் முன்னால் நிற்பது இருபது வயது இளைஞன் என்று நம் பார்வையில் தெரியும் போது நம் வயது குறித்து பதட்டம் வருகின்றது. அங்கங்கே தெரியும் நரைமுடிகளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கும் போது உனக்கு என்னடா? நரைமுடியே இல்லை? என்று கேட்பவர்கள் எதிரியாகத் தெரிகின்றார்கள்.

ஜா புயல் வந்து போய் அடுத்த மூன்று வாரங்களில் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்குச் சென்றேன். நகரமயமாக்கல் அதன் உருவாக்கிய தாக்கங்களை முழுமையாக இந்த வருடம் பல இடங்களில் பார்த்தேன். சிற்றூர் அதனைச் சார்ந்து இருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள். வளர்ந்து கொண்டிருக்கும் ஊர்கள், வளர்ந்த ஊர்கள் இங்கே ஒவ்வொரு இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உறவு முறை, எதிர்பார்ப்புகள், மாறிய, மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்களை இப்படிச் சுருக்கமாகச் சொல்ல முடியும்.

ல்லாவற்றையும் அடைந்து விட வேண்டும் என்ற ஆசையும் அதற்காக அவர்கள் அடையும் அவஸ்தைகள் என்று இரண்டு பாகப் பெரிய கதையாகவே எனக்குத் தெரிந்தது. குடும்ப உறவுகள் இன்னமும் உள்ளது. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உடைந்து போய் இருக்கின்றது. மேற்கத்திய நாகரிகத்தை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசை ஒரு பக்கமும் ஆனால் வாழும் சூழலில் விட முடியாத சாதி, மதம், உறவுகள் சார்ந்த பழக்கத்திற்கும் இடையே ஊசலாட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்.

ங்கெங்குகாணினும் வாட்ஸ்அப் உருவாக்கிய தாக்கமும், படிப்படியான மாற்றங்களின் விளைவுகளை அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் முழுமையாகப் பார்க்க முடியும். அதன் தொடக்கம் இப்போது நடந்து கொண்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. காரணம் ஒரு கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் தகப்பனின் வருமானம் மிகக் குறைவாக இருந்தாலும் மணமகள் விரும்பும் ஒப்பனைச் செலவும் மட்டும் 50.000. ஒரு ஜாக்கெட் தையல்கூலி 3.000. மணமகன் கோட் போட்டுத் தான் வருவேன் என்ற பழக்கமும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் கடன் குறித்துப் பயந்த சமூகம் அதை வாழ்வில் இயல்பான பழக்கமாக மாற்றியுள்ளது.




ந்த வருடம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள இடங்கள் நண்பருடன் சென்று வந்தேன். சென்று வந்த அடுத்த வாரத்தில் கேரளா வெள்ளத்தில் தவித்துத் தலைகீழாக மாறிப்போனது. நாங்கள் சென்று வந்த பாதையெல்லாம் 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் அனுபவித்த இன்னல்களை அடைந்தார்கள். என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 30 வருடங்களாகத் திருப்பூரில் வாழ்ந்து நெருங்கிய கேரள நண்பர் மூலம் வெள்ளத்திற்குப் பின்னால் கேரளாவில் நடந்த பல விசயங்கள் காதுக்கு வந்தது. 

வழங்கப்பட்ட நிவாரணங்கள் செல்ல வேண்டியவர்களை விட வந்த நிவாரணங்கள் மூலம் வளர்ந்தவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. பொதுச் சமூகம், அரசியல் சமூகம், தொழில் சமூகம் இவை மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குகின்றது. இந்தியாவுக்கென உள்ள மாற்ற முடியாத அதிகாரவர்க்கத்தினர் மாற்ற விரும்பாத பல அரசியல் சமாச்சாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. காரணம் தற்போது அரசாங்கம் என்பதே ஒரு வணிக நிறுவனத்தின் லாப கணக்கு பார்க்கும் அமைப்பாக மாறியுள்ளது என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனையும் புரிந்து கொண்டேன்.

++++++++++

ரவு, நள்ளிரவு என்று எப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாலும் உடனே தூங்கி விடும் பழக்கமும் இயல்பாகவே அதிகாலையில் எழும் பழக்கமும் இன்னும் மாறவில்லை. அதிகாலையில் படிப்பது, பார்ப்பது என்று எத்தனை வேலைகள் செய்தாலும் மீதி இருக்கும் நேரமென்பது அதிகமாக இருக்க இந்த வருடம் நடைபயிற்சி பழக்கம் உருவானது. வட்டம், சதுரம், செவ்வகம் என்ற முறையில் வெவ்வேறு இடங்களைக் குறிவைத்து ஒவ்வொரு நாள் காலைப் பொழுது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கு நடந்து சென்ற போது எங்கள் பகுதியில் வசிக்கும் மயில்களும் குயில்களும் அறிமுகம் ஆனது. கூடவே தொப்பையர்கள் உலகமும். . 

ரோக்கியத்திற்கெனத் தனியான பயிற்சி தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. உண்ணும் உணவு, மனக்கட்டுப்பாடுகள், நம் அன்றாடப் பழக்கவழங்கள் சார்ந்தே பெரும்பாலும் சாதிக்க முடியும். இயல்பான அன்றாட வேலையில் நடப்பதற்கு உண்டான அத்தனை சாத்தியக்கூறுகளையும் எப்போதும் நான் கடைபிடிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் நம் உடம்பே நமக்கு உணர்த்தும். மனம் அதனை எளிதாக அடையாளம் காட்டிவிடும். நீண்ட நேரம் ஓய்வெடுக்காமல் நடந்து முடிந்து, வேர்வைச் சிந்தி 45 நிமிடங்கள் கழித்து வந்தமரும் போது நம் நுரையீரலின் பலத்தையும், இதயத் துடிப்பில் உள்ள வித்தியாசங்களை வைத்தே நம் ஆரோக்கியத்துடன் அளவீடுகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

டந்த இரண்டு வருடங்களாக ஒரு கட்டுரை மீண்டும் மீண்டும் கண்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரப் பட்டினி. இந்த வருடத்தில் நாலைந்து முறை முயற்சித்து, தோற்று, மகள்கள் மனைவியில் கிண்டலுக்கு ஆளாகி கடைசியாக ஒரு தடவை முயற்சி வெற்றி கண்ட ஆண்டு இது. இதன் தொடர்ச்சியாக வெளியே கண்டதையும் வாங்கித் தின்னும் பழக்கம் அடியோடு நின்று போனது. ருசியைத் தேடி அலைந்த நாக்கு கட்டுக்குள் வந்தது. காலை எழுந்தவுடன் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய பழக்கமாக இருந்த டீ, காபியை ஒதுக்க முடிந்துள்ளது.

நாம் வாங்குவது கோழியா? அல்லது உருளைக்கிழங்கா? இது எத்தனை நாளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்து இருக்கும் என்ற மீன் ஆராய்ச்சிகளைக் கவனித்து கவனித்து அசைவ விருப்பங்கள் முக்கால்வாசி முடிவுக்கு வந்துள்ளது. ஜனத்தொகை பெருக்கமும், மக்களின் அதீத தேவைகளும் சேர்ந்து கலப்படம் என்ற வார்த்தையை அங்கீகாரமாக மாற்றியுள்ளது.

மக்களின் சமீப காலப் பிரியாணி வெறியும், வீதிக்குப் பலவித வண்ணங்களில் வாங்க முடிகின்ற வறுத்த கோழித்துண்டுகள் ஒவ்வொன்றும் வயிற்றுக்குள் சேர்க்கப்படும் சின்னச் சின்ன வெடிகுண்டுகளாகத் தெரிகின்றது.

நீட் பரிட்சையில் இருந்து தப்பித்து வெளியே வருகின்ற எதிர்கால மருத்துவர்களுக்கு டாஸ்மாக் மூலம் வழங்கப்படும் எரிசாரயம் இங்கே மிகப் பெரிய சந்தையை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பெயரில் இப்போது சந்தையில் மிகப் பெரிய மோசடி நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் டாஸ்மாக்கில் ஒன்று வாங்கினால் மற்றொன்று வாங்கினால் தான் கொஞ்சமாவது ஏறுகின்றது என்று குடிமக்களின் புலம்பலை அதிகம் கேட்க முடிந்தது.

பெருநகரங்களில் இப்போது மராத்தான் போட்டி பல சங்கத்தின் வாயிலாக ஆர்வமாக நடத்தப்படுகின்றது. மகள்கள் மூலம் அறிந்த திருப்பூரில் நடந்த ஐந்து கிலோ மீட்டர் மராத்தான் போட்டியை இரண்டு மகள்களுடன் இயல்பாகக் கடந்து வர முடிந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன் யோகா குறித்த விருப்பங்கள் இருந்தது. சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை. ஆனால் இந்த ஆண்டு மகள்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தியானம் பயிற்சி குறித்து யோசித்து வைத்திருந்தேன். சரியான நபர் அமைந்தார். முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. உடம்புக்கும் மனதுக்கும் உண்டான உண்மையான போராட்டங்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதனை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. தொடக்க நிலையில் உள்ளேன். சில மாற்றங்களை மட்டும் உணர முடிந்ததுள்ளது.

வரவர் வயது பொறுத்து உள்ளே இருக்கும் ஒட்டடைகள், குப்பைகளைத் தியானம் மூலம் நிச்சயம் கண்டுணர முடியும். யோகா, தியானம் போன்றவற்றை ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி , மற்றொருபக்கம் அதனை வருமானம் தரும் தொழிலாக மாற்றிய வினோத சூழல் இப்போது இங்கே உருவாகி உள்ளது என்பதனையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் பார்வையில் மனம் என்பதனை எளிதாகச் சொல்ல முடியும். நம்மால் எவையெல்லாம் இயல்பாக முடியுமோ? அவற்றையெல்லாம் கடினம் என்ற நிலையிலும் எவையெல்லாம் தேவையில்லாத சமாச்சாரங்களோ அவையே நம் நிரந்தர எண்ணங்களாக உள்ளது.

வற்றில் பெரும்பான்மையாக நம் வெறுப்பும், தோல்விகளும், பயமும் தான் அதிகம் உள்ளது. களைந்து விடலாம் என்று நீங்கள் பயிற்சியைத் தொடங்கினால் பூதத்தை அடக்குவது போலவே கண்ணாமூச்சி தொடங்கும். வேடிக்கை பார்க்க பழகுங்கள். குறிப்பிட்ட இடைவெளி விட்டு தொடர்ச்சியாக கட்டாய பயிற்சியாக செய்து பாருங்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் நீங்கள் கோடீஸ்வரான இருப்பீர்கள். இளமை நிரந்தரம். மனைவி, குழந்தைகளும் கூட வேடிக்கைப் பொருளாக மாறிவிடுவார்கள். சண்டை, சச்சரவா? மூச். 

ரோடு மக்கள் சிந்தனை பேரவை நடத்திய ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிப் பேசிய உரையைக் கேட்கச் சென்ற போது நான் பெரிதும் மதிக்கக்கூடிய அமுதவன் அவர்களுடன் கவிஞர் அறிவுமதி அவர்களுடன் எடுக்கப்பட்ட படமிது. அமுதவன் மற்றும் அறிவுமதி போன்றவர்களெல்லாம் ஆணி வேர்களாக இருந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பூக்களும், காய்களும், கனிகளும், மரநிழலும் யார் யாருக்கோ கிடைக்க அனைத்தையும் அமைதியாக உளப்பூர்வமாக ஆசீர்வாதப் பார்வையில் பார்க்கும் ஜீவன்கள்.


ருடத்தின் கடைசி மாதத்தில் கோவையில் நடந்த புத்தக அறிமுக விழாவில் நடிகர் சிவகுமார் பேச்சைக் கேட்க சென்று இருந்த போது திரு. கல்யாணம் மற்றும் அமுதவனுடன் எடுத்த படமிது. திரு. கல்யாணம் அவர்களுடன் மூன்று மணி நேரம் பேசி முடிந்து நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி எடுத்துக் கொண்டேன்.

திரைப்படக் கலைஞர்கள் குறித்து அவர்களின் சொந்த மற்றும் மற்ற வாழ்க்கையைக் குறித்துக் கல்யாணம் போன்றவர்கள் புத்தகமாக எழுதினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். கடந்த ஐம்பது வருடத் திரைப்பட உலகின் ஆணி வேராக இருந்தவர். இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றார். பல நடிகர் ,நடிகைகள்,இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் கயிற்றில் தொங்கிவிடக்கூடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்ந்தற்கான கூலியையும் அவர்கள் வாழ்க்கை முடிவதற்குள் பெற்று விடுகின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை.

அதீத வெளிச்சத்தில் பலரின் கண்ணீர் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை என்பது தான் உண்மை. திரைப்பட உலகம், அரசியல் உலகம் இந்த இரண்டுக்கும் பின்னால் (எந்தக் காலத்திலும் தங்களை வெளியே காட்டிக்கொள்ள விரும்பாத) உள்ள பலருடனும் பேசும் போது தான் தொண்டர்கள், ரசிகர்களைப் பற்றிக் கவலைப்பட முடிந்தது. 


மிழகத்தின் உள்ள பெரும்பாலான சுற்றுலாத்தளங்களுக்குச் சென்றவன் என்ற முறையில் என்னால் 35 மதிப்பெண்கள் கொடுக்கக்கூடிய வகையில் இருந்த ஒரே இடம் திருச்சி அருகே உள்ள கறிகாற்சோழன் (கல்லணை) நினைவு பூங்கா. குடும்பத்துடன் சென்று இருந்தேன். தஞ்சாவூர் போலவே இந்த இடமும் என் மனதளவில் நெருக்கமாகத் தெரிந்தது. பல பதிவுகளில் தமிழர்களின் காலடித்தடங்களைப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளேன். மின் நூலாக மாறி பலரும் அதனைப் பற்றி இன்று வரையிலும் அழைத்துச் சொல்லும் வகையில் பலவற்றைக் கற்றுள்ளேன்.

பல புத்தகங்கள் வாயிலாகப் பலவற்றை அறிந்துள்ளேன். ஓரளவிற்குச் சுமாரான ஏற்பாட்டில் பலவற்றையும் அங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் காலடித்தடங்களைப் பலவிதமாக யோசித்துப் பார்த்தேன். என் பேரன் என்னை நினைவில் வைத்திருப்பானா? என்று நினைக்கத் தோன்றியது. 


ருடத்தின் இறுதியில் கோவையில் வம்சி பதிப்பகம் நடத்திய புத்தக விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமிது. நடிகர் சிவகுமார் குறித்து ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு. அவர் ஒரு ஓவியர், நடிகர், பேச்சாளர், குடும்பத்தலைவர், அவ்வப்போது பலரின் விமர்சனத்திற்கு ஆளானவர் போன்ற அனைத்தையும் கடந்து அவர் வாழும் முறைகளைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நான் தனிப்பட்ட முறையில் அறிந்த வரையில் அவர் குடும்ப மொத்த வருமானத்தில் 25 சதவிகித தொகையை மற்றவர்களுக்கு உதவிடுவது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன். கூடவே இவர்களுடன் பழகியுள்ளேன் என்ற எண்ணத்தில் இவர் எனக்கு மிக முக்கியமானவராகத் தெரிகின்றார். 

நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் வாழ நினைக்காத வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இதைப்பற்றி எந்த இடத்திலும் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவரின் இயல்பான கோப குணாதிசியங்கள் பல சங்கடங்களை உருவாக்கி விடுகின்றது. அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. குறைந்தபட்சம் 75 வயதிற்கு மேல் இருபது வயது இளைஞனைப் போல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து விட்டாலே போதுமானது.

காரணம் முதுமையில் வறுமையை விட ஆரோக்கியம் இழந்து வாழ்வது மகா கொடுமை. இந்த வருடம் முழுக்கப் பார்த்த பல குடும்பங்களின் கதை அதைத்தான் திரும்பத் திரும்ப எனக்கு உணர்த்தியது. 

மொத்தத்தில் இந்த ஆண்டு எனக்கு நிறையவே வித்தியாசமானது. நிதானம் என்ற வார்த்தையை நம் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்த வருடம் நிதானத்துடன் உண்டான பொறுமை கற்றுக் கொடுத்த பாடங்கள் பலப்பல. கற்றுக் கொண்ட பாடங்கள் அடுத்த 25 வருடங்களுக்கு உரமூட்டக்கூடியதாக அஸ்திவாரத்தை பலமூட்டியதாக இருக்கக்கூடும். 

ராஜராஜன் ஆண்டு. 













Sunday, December 30, 2018

அங்கீகாரமென்பது வெறும் வார்த்தைகள் அல்ல



இவர் பெயர் ராதாகிருஷ்ணன். திருப்பூர் முதல் தலைமுறை முதலாளி, செல்வந்தர் போன்ற பல வார்த்தைகளில் இவரைப் பெருமைப்படுத்த முடியும். வயது 70க்கு மேல் இருக்கும். நான் திருப்பூர் குறித்து எழுதிக் கொண்டிருப்பதைத் தொடக்கம் முதல் வாசித்துக் கொண்டிருக்கும் முதன்மை வாசகர். ஒரு மகன் அமெரிக்காவில், ஒரு மகன் ஆஸ்திரேலியாவில் இருக்க இரண்டு இடங்களில் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

ஆனால் இன்னமும் வேர்களை மறக்க விரும்பாதவர். கடந்த மூன்று வருடங்களில் நேரிடையாக அறிமுகம் ஆனவர். திருப்பூர் வந்தால் நேரிடையாக வீட்டுக்கு வந்துவிடுவார். தன் மகன்களை விடு கூடுதலாக ஒரு படி மேல் என் மேல் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை செலுத்தி திக்குமுக்காட வைப்பார். இவர் மனைவியும் அந்த அளவுக்கு என் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர். 

இந்த அளவுக்கு ஒருவர் நம் மேல் மரியாதை வைக்க முடியுமா? என்று இவரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சங்கோஜப்பட்டுள்ளேன். 

+++++

சென்ற வருடமே ஒரு கிண்டில் கருவி வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.  ஆனால் (http://freetamilebooks.com/) நண்பர் சீனிவாசன் மூலம் வருடத்தின் தொடக்கத்தில் அன்பளிப்பாக என்னைத் தேடி வந்தது. மகள் பயன்படுத்துகிறார்.

நாகர்கோவில் அருகே பிறந்து வேலைக்காக இப்போது குவைத்தில் இருக்கும் தம்பி ஜோஸ் என் மின் நூலைப் படித்து, தானும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதத்தொடங்கி இன்று ஒரு புத்தகம் எழுதி இந்த வருடம் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு மின் நூலை வெளியிட்டு என் கண் எதிரே மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ந்த மரமாக மாறியுள்ளார். இன்னமும் நேரிடையாகச் சந்திக்கவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றார். அவருக்கென்று சிலவிதங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளேன். 



அவர் மூலம் அங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக என் எழுத்துக்கு விருது கிடைத்தது. இலங்கையில் நடந்த விழா என்பதால் நேரிடையாகச் செல்ல முடியவில்லை. ஆனால் விருது வீடு வந்து சேர்ந்தது. இது குறித்து இதுவரையிலும் எந்த இடத்தில் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கென்னவோ தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே தமிழ் எழுதக் கற்றுக் கொண்டு இடைவிடாமல் ஃபேஸ்புக்கில் முக்கியமான கட்டுரைகளை, கதைகளை, தொடர்களை எழுதிக் கொண்டிருக்கும் ஜோஸ்க்கு உரிய விருதாகத்தான் இதைப் பார்க்கின்றேன். அவர் சார்பாக நான் வாங்கியுள்ளேன் என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். 

++++++++++++

அப்துல் ரசாக் என்பவர் சென்னையில் இருந்து ஒரு முறை மின் அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றார். பேசினேன். வெள்ளை அடிமைகள் மின் நூலைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். கேட்டுக் கொண்டேன். அவர் குடும்பத்துடன் இறக்குமதி தொழிலில் சென்னை முதல் தமிழகம் முழுக்கப் பல இடங்களில் அலுவலகம் வைத்து முக்கியமான தொழில் முனைவோராக இருப்பவர். சென்னை வந்தால் அவசியம் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அப்படியே மறந்து போய்விட்டேன். தீபாவளிக்கு சில நாள் அவர் மீண்டும் அழைத்து இருந்தார். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒருவர் உங்களைச் சந்திப்பார். எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புரியாமல் போய்ச் சந்தித்த போது தீபாவளி பரிசு என்று கீழே கொடுத்துள்ள பெட்டி வந்து சேர்ந்தது. 



சுப.வீ தான் பேசும் கூட்டத்தில் ஒவ்வொருமுறையும் ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறுவார். இப்போதைய இளைஞர்கள் எதையும் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைக்காதீர்கள். அவர்களின் தளம் மாறியுள்ளது. அந்தத் தளத்தை நோக்கி நாம் தான் சொல்லவேண்டும் என்பார். காரணம் அப்துல் ரசாக் என்னுடைய மின் நூல்கள் எங்கெங்கு பகிரப்படுகின்றது? அதன் வரவேற்பு என்ன? என்பதனை எனக்கு வாட்ஸ் அனுப்பிய போது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. அவரின் அன்பு விருதுக்கு மேலாகத் தெரிந்தது.

+++++++++

நான் எழுதத் தொடங்கும் போது எப்போதும் போல என்னைக் கவர்ந்த சில எழுத்தாளர்களின் தொடர்பு கிடைத்தது. சிலருடன் நானே தொடர்புகளையும் உருவாக்கிக் கொண்டேன். எழுதத் தொடங்கிய போது எழுதும் விதம் குறித்த சூட்சமம் குறித்துப் பலருடனும் கேட்டுத் தெரிந்துள்ளேன். அப்போது ஒருவர் மற்றொருவருக்குக் கூறிய அறிவுரை என் காதுக்கு வந்தது. 

"மற்ற துறைகளைப் போல எழுத்துத் துறையை எவராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அது சுயமாகவே கற்றுக் கொள்ள வேண்டியது. தவழ்ந்து, நடந்து, ஓடுவது போல உண்டான பயிற்சி" என்பதாக எனக்குப் புரிந்தது. 

கடந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் பல பதிப்பக முதலாளிகளின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. சென்னையில் இருக்கும் ஒரு முதலாளி ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. 

"நாங்கள் இந்தத் துறையில் நுழைந்த போது எழுத்தாளர்களைச் சீண்ட ஆட்களே இருக்காது. ஆனால் மொத்தமாக மாறிவிட்டது. எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்தாளர்களுக்குப் பலவிதங்களில் அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. எல்லோருக்கும் சினிமாதுறையில் உள்ள போட்டி பொறாமைகளைப் பற்றித்தான் தெரிகின்றது. ஆனால் எழுத்துத்துறை அதைவிட மோசமானது. ஒரு எழுத்தாளரின் புத்தகம் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் சூழல் தமிழகத்தில் உருவானால் நிச்சயம் இந்தத்துறையில் தான் அதிகமான க்ரைம் ரேட் நடக்கும். அதனால் நீ எப்போதும் விலகியே இரு" என்றார். 

அகங்காரத்தைச் சுமந்து வாழ்பவர்கள் என்று பலரையும் சந்தித்துள்ளேன். இவனைப் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களின் அரிதாரம் பூசிய வாழ்க்கை கொண்டவர்கள் பலரும் இன்னமும் வேடத்தைக் கலைக்காமல் அந்நியன் போலவே சிலர் இருக்கின்றனர். வயது, அனுபவம் என்று எதுவுமே அவர்களுக்கு எந்தப் பாடத்தையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம். கட்சி ஆதரவு என்ற பெயரில் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பதவி கிடைத்து விடாதா? என்ற நோக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் போது இன்னமும் என் மனதில் சிங்கமாக இருப்பவர் மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்கள். 

உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக வாழ்ந்தவர். குறிப்பாக எழுதத் தொடங்கியவர்களை மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள எவரையும் உற்சாகப்படுத்துவதில் அவருக்கு ஈடு இணை எவருமே இல்லை.

++++++++


எழுத்தாளர்கள் என்றாலே பரம ஏழைகள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் பாதி உண்மை தான் உள்ளது. சூழல் மாறியுள்ளது. ஆனால் எந்தச் சூழலிலும் ஒரு எழுத்தாளர்கள் மற்றொரு எழுத்தாளரைப் பாரபட்சமில்லாமல் ஆதரிப்பதில்லை. அதிலும் இப்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப்பிழைப்பவர்கள், அதன் மூலம் உலக நாடுகள் சுற்றி தங்களை (மட்டும்) வளமாக்கிக் கொள்பவர்கள் என்று இதே போலப் பல பிரிவுகள் உண்டு. ஆனால் எழுதும் போது பாரதி முதல் பலரையும் சுட்டிக்காட்டி சுடச்சுட அறிவுரைகள் அசால்ட்டாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு எழுத்தாளர்களும் நடிகர்களைப் பார்த்து அவர்களின் வருவாய், புகழைப் பார்த்து பொறாமைப்பட்டு எழுதுவதைப் பார்த்து இருப்பீர்கள். எந்த எழுத்தாளராவது மற்றொரு எழுத்தாளருக்கு  உதவி செய்துள்ளார்கள் என்பதனை எங்கேயாவது படித்து உள்ளீர்களா? மனைவி அரசு வேலையில் இருப்பவர்கள் தொடங்கி, பல எழுத்தாளர்கள் அரசு வேலையில் இருந்து கொண்டு எழுதித்தள்ளியவர்கள், திரைப்படத் துறையில் நேரிடையாக, மறைமுகமாக பணியாற்றி வருமானத்தைப் பெறுபவர் வரைக்கும் பலரும் உண்டு.

மதம், சாதி, கட்சி மூன்றும் மற்ற துறைகளைவிட எழுத்துத்துறையில் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது நான் கடந்து வந்த பாதையில் பார்த்த உண்மை. சமூகம் எங்களை மதிப்பதே இல்லை என்ற இவர்களின் குற்றச்சாட்டு என்பது இவர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த பரிசு என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

++++++++++

சமீபத்தில் மறைந்த பிரபஞ்சன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு அப்போலோவில் சேர்க்கப்பட்ட போது மொத்த ஆறு லட்சம் தொகையையும் கட்டியவர் நடிகர் சிவகுமார். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாளைக்கு அவரைத் தேடி வரும் நபர்களும், கடிதங்களும் அவர்கள் குடும்ப அறக்கட்டளை தவிர்த்து, தனிப்பட்ட முறையில் அவர் செய்து கொண்டிருக்கும் உதவிகள் கணக்கில் அடங்காது. எனக்குத் தெரிந்தே நாலைந்து பெரிய எழுத்தாளர்கள் அவரிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய ஒருவர் மீண்டும் மீண்டும் இதையே கடைப்பிடிக்கத் தொடங்க அதுவே அவருக்குப் பல சங்கடங்களையும் உருவாக்கியது.

அவர் எங்கேயும் இதைப்பற்றிச் சொல்வதே இல்லை. அமுதவன் போன்றவர்கள் கட்டாயம் இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். பிரபஞ்சன் குறித்து நான் எழுதக் காரணம் ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதிய காரணத்தால் நிச்சயம் இது தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ற காரணத்தால் இங்கே எழுதி வைக்கின்றேன். உதவி செய்தவர்கள் சொல்லாமல் இருப்பது மரபு.  ஆனால் பலன் பெற்றவர்கள் ஒரு நன்றிக்காக எழுதுவது தவறா?

எழுத்தாளர்கள் நடிகர்களாக இருக்கின்றார்கள். நடிகர்கள் தான் உண்மையிலே மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பல உண்மையான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் திரைப்பட வசனம் என்பது இது போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு.  காரணம் இவர்களின் அகங்காரம் அந்தத் துறையில் செல்லுபடி ஆகாது. பணத்திற்காக ஓவர் ஆயில் பார்ப்பவர் தான் பலர் உள்ளனர்.  இது தான் நானறிந்த உண்மை.

 +++++++++++

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நாம் நேசித்துச் செய்யும் ஒரு விசயம் நிச்சயம் காலம் கடந்தும் நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் பலன் சிலருக்கு அவர்கள் வாழும் காலத்தில் கிடைக்கலாம். அல்லது வாழ்க்கை முடிந்த பிறகு கூட வந்து சேரலாம். அது பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கக் கூடிய முக்கிய மனிதர்களின் உதவியாகக்கூட இருக்கக்கூடும். 

குடும்பம், குழந்தைகளின் நல்வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்பதோடு உங்களுக்குப் பிடித்த ஏதோவொன்றின் மூலம் உங்கள் தடங்களை இங்கே பதிந்து விட்டுச் செல்லுங்கள். கண்களுக்குத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் அப்படிச் செய்து விட்டுப் போனதால் மட்டுமே இன்று நீங்களும் நானும் உரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.

திருப்பூரில் இருந்து கொண்டே திருப்பூர் பற்றிய உள்ளும் புறமும் உள்ள விசயங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதால் பல சங்கடங்களையும் உருவாக்கிய போதும் தொடர்ந்து எழுத்திடவே விரும்புகின்றேன். காரணம் நான் தொலையாமல் இருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் மன அழுத்தமின்றி வாழ்ந்திட முடியும்.

Saturday, December 29, 2018

கவனிப்பது வேறு கவலைப்படுவது வேறு.

மகள்களில் தேர்வுத் தாளில் கையெழுத்துப் போட்டு விட்டு வரச் சென்ற போது மகள் ஒருவர் எடுத்த படம். 

எனக்கு அறிமுகம் ஆன ஆசிரியர்கள் மட்டுமல்ல? அறிமுகம் ஆகாத ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த முறை என்ன பிரச்சனையோ? என்று யோசிப்பார்கள். நான் சந்தித்த ஆசிரியர்களும், மகள்கள், ஏன் மனைவி கூட ஏன் பள்ளியில் யாரிடமும் நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்று திரும்பி வரும் போது அங்கலாய்த்துக் கொண்டே கேட்டார்கள். 

"இந்த உலகம் இனி கேள்விகளை கேட்க விரும்பாத மனிதர்களை விரும்புகின்றது. தொண்டர் என்றால் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரசிகன் என்றால் அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்ப வேண்டும்.  வாடிக்கையாளர் சேவை என்பது மறந்து போன வார்த்தை. வங்கி முதல் வாங்கும் பொருட்கள் வரைக்கும் அவரவருக்கான நியாயங்கள் அதற்கான எல்லாவிதமான உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றது. "

"ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். மீண்டும் அவர் பலன் உள்ளவராக மாறும் போது தொடர்பு எல்லை புதுப்பிக்கப்படும். கொடுப்பவரும், வாங்குபவருக்கும் இடையே நடப்பது உறவு ரீதியான புரிதல் அல்ல. இது நவீன பண்டமாற்று முறை. இப்படித்தான் இப்போதைய உலகம் இயங்குகின்றது. அதையே விரும்புகின்றது. "

"நம் அனுபவங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் அதனை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தாலும் ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நம்மை நெட்டித்தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். "

"இங்கு எந்தக்குறையையும் ஒருவர் மேல் மட்டுமே சுமத்த முடியாது. அந்தச் சங்கிலியில் அவர் ஒரு அங்கம். அவருக்கு மேலே பலரும் உள்ளனர். தொடர்புப் படுத்திப்பார்த்தால் நாம் கோபப்பட்டவரும் ஒரு விதத்தில் பாவப்பட்ட ஜீவன் தான். வணிக நோக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் முன் நிற்கும் இந்தச் சூழலில் முடிந்தவரைக்கும், கிடைத்தவரைக்கும் எடுத்துக் கொண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்வது உங்களின் தனித்திறமை" என்றேன் மகள்களிடம். 

காரணம் இந்த வருடம் முழுக்க மகள்களுக்கு ஒரு வகையில் உதவியாய் இருந்தேன். அவர்களுக்கு எந்த நிலையிலும் மன அழுத்தம் தாக்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். முக்கியமாக என் பேச்சைக் குறைத்துக் கொண்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன். வித்தியாசம் தெரிந்தால் மனைவி மூலம் அதனைப் பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தேன். பள்ளியில் 12 மணி நேரம். வீட்டில் 3 மணிநேரம் என்று அவர்களின் வாழ்க்கை முறை என்பது படிப்பு என்ற வட்டத்திற்குள் சுருக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அளவு கடந்த பாடத்திட்டம். அவசரமாக நடத்தும் ஆசிரியர்கள். முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. முயற்சிப்பதே உங்கள் கடமை என்று மாணவர்களின் நிலை

பலவிதங்களில் நான் கவனித்துக் கொண்டே வந்தேன். இந்தச் சமயத்தில் தலைமுறை இடைவெளியின் தாக்கத்தை முடிந்த அளவு குறைக்க என்னை மாற்றிக் கொண்டே வந்தேன். அவர்களுக்குப் பிடித்த அனிருத், ஹிப்பாப் தமிழா பாடல்களை அவர்களுடன் சேர்த்து ரசித்தேன். முக்கியப்படங்கள் வரும் போது திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றேன். இடைவிடாத வாக்குவாதங்கள் தொடர்ந்து முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் மனம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தேன். யூ டியூப் ல் உள்ள சில தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன். 

இடைவெளி விட்டு முக்கியப் படங்களைச் சிடி மூலம் வாங்கிக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். வாட்ஸ் அப் பார்க்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒரு மாதிரியாக அரசு தேர்வு என்ற பயத்தைப் போக்க முடிந்துள்ளது. பயத்தை உருவாக்கி, பயத்தை வளர்த்து, பயமுறுத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியர்களைப் பார்த்து நக்கலடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். 

காரணம் படிக்க முடியாத மாணவர்கள் தங்கள் கைகளைக் கிழித்துக் கொள்ளும் நிலையெல்லாம் இந்த வருடம் கேட்க நேர்ந்தது. 

இந்த வருடத்தில் தமிழகக் கல்வித்துறையில் மிக முக்கியமான மாற்றம் நடந்ததுள்ளது. பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இனி வரும் காலங்களில் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட இனி துறை சார்ந்து எழுதப் போகும் நுழைவுத் தேர்வு தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கும் என்ற நிதர்சனம் இங்கே மொத்த அமைப்பையும் மாற்றியுள்ளது. பலவற்றைக் கண்கூடாகப் பார்த்தேன். 

அதன் தாக்கம் உருவாக்கிய மாற்றங்கள் எனக்குப் பல விதங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஆசிரியர்கள் அதிகச் சிரத்தையெடுத்துத் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றையும் முழுமையாகப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. 

தற்போதைய சூழலில் மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும் அதற்கு மேல் இரண்டு வருடம் படிக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. வளர் இளம் பருவம் அல்லது பதின்ம வயது என்று சொல்லக்கூடிய டீன் ஏஜ் சமயத்தில் மனமும் உடலிலும் உருவாகும் மாற்றங்களைத் தாய் தந்தையர் உணர்ந்து கொண்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். நான் எல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று புலம்பத் தேவை இருக்காது. 

வயதாகும் போது நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் உருவாகும் பிரச்சனைகள் பலவற்றைப் பல இடங்களில் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவி அவர் அம்மாவைப் போல நெடுந்தொடர் விமர்சியாக மாறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பீர் அடிப்பது சாதனையாகத் தெரிகின்றது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனமென்பது இயல்பானதாக மாறியுள்ளது. பள்ளி நிர்வாகம் தடை போட்டாலும் குடும்பக் கௌரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தகப்பனின் பேச்சைக் கேட்ட போது வியப்பாக இருந்தது.

ஒரு மாணவன் அல்லது மாணவி வைத்திருக்கும் அலைபேசி அத்தனை நியாயங்களையும் அடித்துத் தும்சம் செய்து விடுவதை இந்த ஆண்டு பார்த்தேன். வைத்திருக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள கூட்டாளிக்கூட்டமும் மொத்தமாகப் பாதிக்கப்படுகின்றது. 

காரணம் எப்படி? எதனை? எதன் பொருட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவதற்குள் அனைத்தும் இயல்பாகக் கிடைத்து விடுவதால் அதன் மதிப்பு பயன்படுத்துபவர்களுக்குத் தெரிவதில்லை என்பது தான் இந்த ஆண்டு பல சமாச்சாரங்கள் மூலம் கண்டறிந்த உண்மை. இதற்கிடையே தான் ஒவ்வொருவரும் கடந்து வர வேண்டியுள்ளது. 

இப்போதைய மாற்றங்கள் எதுவும் இயல்பானதாகத் தெரியவில்லை. எல்லாமே படிப்படியாகத் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால் தரம் குறைந்த பொருட்கள் விலை அதிகமாகவும், தரமிக்கப் பொருட்கள் விலை மலிவானதாகவும் மாறியுள்ளது. 

வாழ்க்கை முறையும் அப்படித்தான் உள்ளது. 

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது. எனக்குத் தோன்றவில்லை. குழந்தைகள் என்பவர்கள் தனியான ஆத்மா. எத்தனை கவலைகள் கவனிப்புகள் இருந்தாலும் உங்களின் கவனிப்பு செல்லாக்காசாகி விடும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

என்னைக் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்த மனைவிக்கு இப்போதெல்லாம் ஒரே கேள்வி? 

ஏன் இப்படி ஓரேடியாக மாறிவிட்டார்?

Friday, December 28, 2018

இங்கே முகங்கள் விற்பனைக்கு உண்டு

இந்த வருடத்தின் முக்கியச் சில குறிப்புகளை மட்டும் இங்கே எழுதி வைத்திட தோன்றுகின்றது. 

"நினைவுக்குறிப்புகளைப் படமாக எடுத்து வைத்துப் பாருங்கள். அது உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். நம்பிக்கையூட்டும்" என்று சென்ற வருடம் இறுதியில் நண்பர் சொன்ன போது சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. 

பயணங்களில், மற்ற நிகழ்விடங்களில் எதிரே காணும் காட்சி சித்திரமாக மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். புகைப்படம் எடுக்கத் தோன்றாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வார்த்தைகளாக மாற்றிக் கொள்வதுண்டு. இந்த வருடம் செல்லுமிடங்களைப் புகைப்படமாக மாற்றும் எண்ணம் உருவானது. 

பத்திரிக்கைளுக்கும், மற்ற ஊடகங்களும் தினந்தோறும் ஏராளமான முகங்களைத் தினந்தோறும் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வெறுக்கும் முகம் என்று ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் உங்கள் எண்ணத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டேயிருக்கின்றது. இது தவிர நீங்கள் பணிபுரியும் சூழல், வாழுமிடம் போன்ற இடங்களில் உள்ள முகங்கள் மறுபக்கம். மொத்தத்தில் உங்களின் உண்மையான முகம் என்பதனை மறந்து எத்தனையோ விதவிதமான முகங்களைத் தான் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்கிறது. 

சென்ற வருடம் நடந்த நிகழ்வுகளை நாமே மறந்து கடந்து வந்து விடும் மன அழுத்தமான உலகில் நாம் வாழ்ந்தாலும் வலைதளங்கள் ஏதோவொரு வழியில் நமக்கு அதனை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கின்றது. பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அட!, ஆமாம்!. நாம் இப்படியா இருந்தோம்? என்ற முக மாற்றங்கள் நம்மைக் கலவரப்படுத்துகின்றது. கூடிக் கொண்டேயிருக்கும் வயது, நினைவு அடுக்குகளில் இருந்து நம்மைப் புன்னகைக்க வைக்கின்றது. அதன் பொருட்டு இந்த வருடத்தின் பலவிதமான சூழலில் எடுத்த என் முகங்களை இங்கே பொருத்தி வைக்கத் தோன்றியது. மீண்டும் ஒரு சமயத்தில் இதனை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில். 

எந்த வருடத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் இந்த வருடத்திற்கு உண்டு. ஆனால் அவை அனைத்தும் தொடராக எழுத வேண்டிய விசயமது. உடனே எழுதும் போது அதன் பக்கவிளைவுகளின் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதனை வருகின்ற வருடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றேன். தமிழகத்தில் வந்து போன புயல்களுக்குப் பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால் அதே போலத் திருப்பூருக்குள் எல்லா மட்டத்திலும் புயல் தாக்கியது. ஆனால் யாரும் இதைப்பற்றிப் பேசவே இல்லை. திருடனுக்குத் தோள் கொட்டியது போல அமைதியாகவே இருந்து விட்டார்கள். இவை எல்லோருடைய வாழ்வையும் திருப்பிப் போட்டது. நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் விற்றார்கள், வாடகைக்கு விட்டார்கள், உள்வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தான் செய்து கொண்டிருந்த அளவை குறைத்துக் கொண்டார்கள். 

பெரிய பதவிகளுக்கு ஆட்களைத் தவிர்த்தார்கள். தரம் என்பதனை மறந்து தவித்தார்கள். பலரும் நிம்மதியிழந்தார்கள். சிலரால் பிரச்சனையின்றி இயங்க முடிந்தது. பலரும் இயங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள். இருக்கின்றார்கள். சக்கரம் இடைவிடாமல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இதன் முக்கிய விளைவுகள் அடுத்த வருடம் இறுதியில் தெரியும்? 

90 சதவிகிதம் எதிர்மறைகளும் 10 சதவிகிதம் நேர்மறைகளும் நம்மைச்சுற்றிலும் இருக்க இதற்குள் தான் நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நேர்மை, கை சுத்தமானவன், ஒழுக்கம்,கடின உழைப்பாளி,உதவிடும் உள்ளம் கொண்டவன், அரவணைத்துச் செல்லக்கூடியவன், தியாக மனப்பான்மை கொண்டவன். இந்த வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்தம் மாறிவிட்டது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த வார்த்தைகள் போற்றப்படலாம். ஆனால் எவரும் பின்பற்றப்படக்கூடாது என்ற நிலையில் இருக்கும் வார்த்தைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  மற்றொருவர் நல்லவன் என்பதற்கும் வல்லவன் என்பதற்கும் உண்டான அர்த்தம் புரிந்தால் போதும்.  குழப்பம் வராது என்றார்.

இது போட்டி உலகம். உள்ளூர் போட்டியிலிருந்து இன்று உலகாளவிய போட்டி வரைக்கும் பரந்து விரிந்துள்ளது. போட்டி போடுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை. ஆனால் நம் கொள்கை எந்த இடத்தில் அடி வாங்கும்? ஏன் இப்படி நடந்தது? என்று யோசிப்பதற்கு வாழ்வின் திசையே மாறிவிடும். சிந்தனை முழுக்க வணிக நோக்கம் என்பதனைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிதர்சன உலகத்தையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். இதன் அடிப்படையில் வருடத்தின் தொடக்கம் தொடங்கியது. 

ஐந்தாவது தலைமுறையைத் தாண்டி முதல் முறையாக டாடா குழுமத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கடந்த ஒரு தமிழர் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய காலம் வரைக்கும் வாசித்து முடித்த போது திருப்பூர் குறித்து அதிக யோசனை வந்தது. முடிந்தவரைக்கும் அள்ளிக்கோ என்ற இங்குள்ள கட்டமைப்பு கவலையைத் தந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவன சேர்மன் நந்தா அவர்களின் சுயசரிதத்தை வாசித்து முடித்துப் போது சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று அவர் கடந்து வந்த பாதையையும், ஆட்சி மாற்றங்களின் போது அவர் சந்தித்த சவால்களையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. 

மூன்றாவது தலைமுறையில் ஒருவர் உருவாக்கிய நிறுவனம் உருக்குலையாமல், நிர்வாக ரீதியாக, லாப ரீதியாக இன்னமும் சந்தையில் இருக்கும் விதத்தை, வித்தைகளையெல்லாம் பார்க்கும் திருப்பூர் சூழல் உறுத்தலாகத் தெரிந்தது.  செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் சிறிய லாபம் மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதற்கும் முதலீட்டில் உள்ள மொத்த பணமும் நாம் அனுபவிப்பதற்கே என்ற இங்குள்ள நடைமுறைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்று சந்தையில் நிற்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசாங்க ஊழியர்கள் போலக் கடைசி வரை நிலையாக இருப்பதும், பலர் ஓய்வு பெற்ற போதும் பணியாற்றிய நிறுவனத்திற்கு வேறொரு வகையில் உதவிடும் வகையில் தங்கள் சொந்த பொருளாதாரத்தைச் செழிப்பாக வைத்திருப்பதையும் படித்த போது தீர்க்கதரிசனம் என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  இன்றைய சூழலில் திருப்பூரில் வட இந்திய இளையஞர்கள் ஐந்து லட்சம் இருக்கின்றார்கள்.  

தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் துடைத்து எறியப்பட்டுள்ளனர். பாதை மாறியுள்ளனர்.  வேறு துறைக்கு மாறியுள்ளனர். நம்பகத் தன்மையில்லாத நிர்வாக அமைப்பும், நம்ப முடியாத தொழிலாளர்களின் மனோபாவம் இரட்டை தண்டவாளம் போலவே இன்றும் சென்று கொண்டிருப்பதன் தாக்கம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தில் மிக அதிக யூ டியூப் வாயிலாகப் பலரின் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்க வாய்ப்பு அமைந்தது. குறிப்பாகச் சுப. வீரபாண்டியன் பேச்சுக்கள், உலக அளவில், இந்திய அளவில் உள்ள தொழில் அதிபர்களின் உரைகள் போன்றவற்றைப் பார்க்க கேட்க முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலகத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லாத ஒரு கட்டமைப்பு உருவாகி, உருவாக்கி அதையே சரியென்று நம்பவைத்துப் படித்து வருபவர்களின் சிந்தனை முழுக்கப் பாதுகாப்பு என்று வார்த்தையின் பொருட்டுக் காலம் முழுக்கக் கூலியாகவே வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்துள்ளது. 

முகம் மட்டுமே அரசியல் மற்றும் நிர்வாகம் என்கிற ரீதியில் உள்ள கட்டமைப்பு உடைபடும் நாள் எந்நாளோ அந்நாளில் உண்மையான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். வந்து கொண்டிருக்கின்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த மாய உலகத்தை அடியோடு மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  அப்போது அரசியல், சமூக, தொழில் உலக மாற்றங்கள் வேறொரு திசையில் பயணிக்கக்கூடும். அப்போது இப்போது புனிதமாக பார்க்கப்படும் பலரின் முகங்கள் காலாவதி ஆனதாக இருக்கக்கூடும்.

Wednesday, August 08, 2018

மு.க. - வாழ்வும் மரணமும்

அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். 

ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” -

இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கலைஞர்.

-ப.திருமாவேலன்
















Tuesday, July 31, 2018

நாட்டு நடப்பு - ஆரோக்கிய குறிப்புகள் - 16

ஊரில் நடக்கு விசேடங்களில் கலந்து கொள்ளும் போது உள்ளே நுழைந்ததும் முக்கியமான நபர்களிடம் முகத்தைக் காட்டி விட்டு சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவதுண்டு. என்னைத் தேடிக் கொண்டு வருபவர்களிடம் எப்போதும் அம்மையார் சமையல்கட்டு எங்கே இருக்கோ? அங்கே போய்ப் பாருங்கள்? என்பார். 

காரணம் உள்ளே நடக்கும் விவாதங்கள், வாக்குவாதங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், விட முடியாத கொள்கை கொண்டவர்கள், மாற விரும்பாத மனிதர்கள், இன்னமும் 1947 க்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எவரையும் புண்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. 

ஆனால் இந்த முறை வரவேற்பு மேஜையின் முன்பே கட்டாயப்படுத்தி அமர வைத்து விட்டார்கள். தட்டில் இருந்த பாதிக் கல்கண்டு, பழங்கள், காணாமல் போவதைப் பார்த்து மகள் நீங்க உள்ளே போயிடுங்க. இந்தப் பக்கமே வராதீங்க என்று புகைப்படம் எடுத்து என்னை அனுப்பி வைத்து விட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் சமையில் கலக்கோ கலக்கு என்று தூள் கிளம்புகின்றார்கள். 

அறந்தாங்கி தாண்டி கீரமங்கலம் பட்டுக்கோட்டை வரைக்கும் மட்டன் சாப்பாட்டுக்கு சொத்தே எழுதி வைத்து விடலாம் போலிருக்கும். அதே போலப் பேரையூர், நச்சாந்துபட்டி பக்கம் சின்னவெங்காயம் முருங்கைக்காய் போட்டு பொங்கலுக்குச் சம்பார் வைத்திருந்தார்கள். யார் என்று கேட்டு சமையல் கட்டுப் பக்கம் சென்றேன். சமையல் செய்பவர்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. யார் சம்பார் வைத்தது என்று கேட்டு அவருக்குக் கைகுலுக்கி நூறு ரூபாய் தாளை வைத்துக் கொள் என்றேன். 

மிரண்டு போய்விட்டான். 

உங்க வார்த்தையே போதும் அண்ணே என்றான்.

•••••••••••••••••••••••••••

2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதத் தொடங்கினேன். என் எழுத்துப் பயணத்திற்கு 10 வது ஆண்டு தொடங்குகின்றது. 800 பதிவுகளை கடந்து வந்துள்ளேன்.  

முதல் பதிவில் விமர்சனம் செய்த சுந்தர் நேற்று வரைக்கும் என் எழுத்தை படித்துக் கொண்டிருக்கின்றார் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது.  இருவரும் கருத்து ரீதியாக எதிரெதிர் துருவமாக இருந்தாலும் கூட. நன்றி சுந்தர்ராமன்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூலுக்கான வாசகர்களும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுக்கான வாசிப்பாளர்களும் அறிமுகம் ஆகி உள்ளனர்.  

எழுதத் தொங்கியது முதல் இன்று வரைக்கும் யார் யாரோ வந்தார்கள்.... சென்றார்கள். நெருங்கிய தொடர்பிலும் இருக்கின்றார்கள். முதல் பதிவு முதல் இன்று வரையிலும் வாசிக்கும் நண்பர்களும் உள்ளனர். 

விமர்சனப் பெட்டியை இன்று வரையிலும் பூட்டி வைத்தது இல்லை.

சமூகத்தைப் பாதிக்கும் மனிதர்களின் உண்மையான குணங்களை எப்போதும் விமர்சிக்க தவறியதே இல்லை. 

ஊருக்கு ஒவ்வொருமுறையும் செல்லும் போது நான் சந்திக்கும் உறவினர்களின் ஆரோக்கியம் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது, என்னுடன் பணிபுரிபவர்கள், உடன் பழகும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்க்கும் போதும் நான் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் காரணம் என் எழுத்துப் பயணம் மட்டுமே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மனதில் உளைச்சல் இல்லாத போது உடலெங்கும் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நான் கண்ட உண்மையாகும்.

இன்று வரையிலும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்பில் தொடர்ந்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


(முற்றும்)

நாட்டு நடப்பு மற்ற பதிவுகள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய அவல நிலை

நீட் என்பது உருவாக்கிய வணிக கொள்ளை

தமிழக கல்வியில் உருவான பாடத்திட்ட மாற்றங்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வானளாவிய அதிகாரங்கள்

ப.சிதம்பரம் என்றொரு அதிபுத்திசாலி

காலா திரைப்பட விமர்சனம்

தந்தை பெரியார் என்றும் தேவைப்படுவார்?

வைகோ உணர்ச்சிமயமானவர்

ரஜினி என்ற ஆபத்து

தமிழகம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் போர்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்

சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் புத்தக விமர்சனம்

நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா

திமுக அதிமுக அடிப்படை வித்தியாசங்கள்

பிஎஸ்என்எல் அழிக்கப்பட்ட வரலாறு









Saturday, July 28, 2018

நாட்டு நடப்பு - தொல்லை தொடர்பு குறிப்புகள் - 15




சில மாதங்களுக்கு முன் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோடம் பழுதாகி விட்டது. அப்போது தொடர்ந்து ஒரு வாரம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்ற போது கற்றதும் பெற்றதும்.

ரிசையில் காத்திருந்து, மீண்டும் மீண்டும் அலைந்து, தவமாய் தவமிருந்து என்று சொல்லக்கூடிய வகையில் பெற்ற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பைப் பெற்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. இன்று வரையிலும் இதே அரசாங்கச் சேவையைத்தான் வீட்டில் பயன்படுத்தி வருகின்றேன். வீடுகள் மாறும் போது கதறடிப்பார்கள். ஆனாலும் விட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தனியார் நிறுவனங்கள் அலைஅலையாக உள்ளே வந்தது. ஆனாலும் என் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை. அலைபேசி சேவை வந்தது. பல ஆண்டுகளாகத் தான் இன்று வரையிலும் செல்ஒன் சேவையைத்தான் பயன்படுத்தி வருகின்றேன்.

காரணம் நம்பகத்தன்மை. ஆனால் லாபம் கொழிக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் தங்களின் சுயநல லாபத்திற்கு சீரழிக்க முடியும் என்பதற்கு பிஎஸ்என்எல் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

மாதக்கட்டணம் கட்டுவதற்காக நீண்டடட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஏதோவொரு சூழலில் பழுதாகிவிட்டது என்ற நிலையிலும் நம் உயிர் போய் உயிர் திரும்பி வரும் அளவிற்கு சாகடிப்பார்கள். உள்ளே பணிபுரிபவர்களிடம் சென்று நம் அவசரத்திற்குச் சென்று பேச முடியாது. ராஜபுத்திர வம்ச மன்னர்கள் போல செயல்படுவார்கள். பொறுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமாக வெளியேறாமல் இருந்த சூழல் இப்போது படிப்படியாக மாறிக் கொண்டே வருகின்றது. பிஎஸ்என்எல் சேவையை மற்றும் செல் ஒன் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்? என்கிற அளவிற்குத் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு உணர்த்துகின்றது.

ன்றைய சூழலில் பிஎஸ்என்எல் நாளுக்கு நாள் மக்களுக்கு உதவும் வண்ணம் நிறையச் சேவைகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். பல அற்புதமான திட்டங்கள் பொது மக்களின் பார்வைக்குச் செல்வதே இல்லை. தனியார் நிறுவனங்கள் போல மறைமுக கட்டணம் ஏதுமில்லை. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமான பின்பு அந்தத் தொகை மட்டும் தான் அதிக அளவு வருகின்றது. மற்றபடி நாம் பயன்படுத்தும் கட்டணம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது. ஆனால் கட்டமைப்பை சரியாக நாளுக்கு நாள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மொத்த நிர்வாகமும் உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் எப்படியாவது தனியார் கைக்குக் கொடுத்து விட வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளது?

ளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்ப வசதிகளைத் தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இந்தத்துறையில் எந்த நவீன வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்வதே இல்லை. எல்லாமே அறிக்கைகளாகவே உள்ளது.

ணிபுரியும் ஊழியர் சொன்ன வார்த்தைகள் இது. "தனியார் நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றார்கள். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்கின்றோம். நீங்கள் அவர்களிடம் போய் சேவையை எதிர்பார்த்தால் அது உங்களின் தவறு " என்றார். எதார்த்தமான உண்மை.


பிஎஸ்என்எல் பயன்படுத்தும் பெரும்பாலான மிண்ணணு உபகரணங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தரம் என்பது குப்பையாக இருந்தாலும் யாரோ ஒரு அதிகாரி அல்லது அந்த லாபி வட்டத்திற்கு பெரும் லாபமாக உள்ளது. இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அடிமட்ட ஊழியர்கள் செய்த வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியதாக உள்ளது என்று புலம்புகின்றார்கள். இன்றைய சூழலில் சீனா இல்லாவிட்டால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடுமோ? என்கிற அளவுக்குத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு துறையும் உள்ளது என்பது தான் உண்மை. கணவன் மனைவியின் அந்தரங்க செயல்பாட்டினைத் தவிர்த்த மற்ற அன்றாட செயல்பாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சீனப் பொருட்களே உள்ளது.  இது தான் வல்லரசு இந்தியா.

ந்தத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் அரசாங்கத்தின் மேல் அதிக அளவு ஆத்திரமாக இருக்கின்றார்கள். எங்கள் நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கம் நடத்துகின்றது. பல ஆண்டுகளாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம். தனியார் நிறுவனங்களுக்குத் துணை போகும் பெரிய அதிகாரிகளின் அட்டகாசங்கள் மறுபக்கம்.

னியார் நிறுவனங்கள் இன்று வரை 4ஜி என்று விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இன்று வரையிலும் பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்கப்படவே இல்லை. ஏலத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை.

காங்கிரஸ் ஆண்டபோது இந்தத் துறைக்கு வந்தமர்ந்த அமைச்சர்கள் குறிப்பாக தயாநிதி மாறன் தொடங்கி ஒவ்வொருவரும் தங்களின் சுயலாபத்திற்காக மொத்த சேவையின் சீரழிவைத் தொடங்கி வைக்க இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

டிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிஎஸ்என்எல் தங்களின் அடித்தளத்தை அதன் கட்டுமானத்தை உருவாக்கி வளர்த்து இந்தியா முழுக்க எந்த இடத்திற்குச் சென்றாலும் பேச முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி கோபுரங்களை இன்று தனியார் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் அவலச் சூழல் காரணமாக பிஎஸ்என்எல் சேவை என்பது சந்துக்குள் சிக்கிய பூனை போல கதறிக் கொண்டு இருக்கின்றது.

ரசாங்கம் வியாபாரத்தில் இருக்கக்கூடாது. வியாபாரம் என்பது தனியார் கைகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்திசாலி முதலீட்டாளர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள். இதனால் சேவை என்பது மாறி கொள்ளை என்ற வார்த்தை கடந்த பத்தாண்டுகளில் தனியார் அலைபேசி வாடிகைக்கையார்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையாகும்.

பிஎஸ்என்எல் ல் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் வருத்தமுடன் பலவற்றை பகிர்ந்து கொண்டார். "இப்பொழுதே பாதி நிர்வாகம் ரிலையன்ஸ் கைக்குப் போய்விட்டது. அடுத்தமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் வேளையாக இந்தத் துறையை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். எனக்குப் பணி ஓய்வு பெற இன்னமும் 10 ஆண்டுகள் உள்ளது. நான் என்ன செய்யப் போகிறேன்? அவர்கள் வந்தால் என்னை வைத்திருப்பார்களா? என்று தெரியவில்லை" என்று சொன்னார்.

நான் அந்தப் பெண்மணி சொன்னதை முழுமையாக நம்பவில்லை. ஆனால் கடந்த பத்து நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் அது உண்மைதான் என்று எனக்கு உணர்த்தியது.

நண்பர் ஒருவருக்கு அழைத்து இருந்தேன். அவர் ரிங்டோனாக ஒரு பாடலை வைத்திருந்தார். அவர் நான் அழைத்த போது என் அழைப்பை எடுக்கவில்லை. நானும் அடுத்து இடைவெளி விட்டு அழைக்கலாம் என்று விட்டு விட்டேன். அப்போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நீங்க கேட்ட பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் உங்கள் ரிங்டோனாக மாற்றி உள்ளோம் என்று நான் தேர்ந்தெடுக்காமல் என் அனுமதி இல்லாமல் என் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நாம் அது தேவையில்லை என்று குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க முயற்சித்த போது அடுத்தடுத்து வேறு எந்தநத பாடல்கள் வேண்டும் என்று ரிலையன்ஸ் வாடிக்கையார் சேவை மையத்தில் இருந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

ன்றாக சோதித்துப் பாருங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்க சேவை சார்ந்த வாடிக்கையாளர் இலவச தொலைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்று சொல்லும் போதே அது இயல்பாகவே துண்டிக்கப்பட்டு விடும். அதே போல வாடிக்கையாளர் பேச ஊழியருடன் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்குப் பல கோல்மால்கள் செய்து வைத்து உள்ளார்கள்.

அதாவது உன்னிடமிருந்து உன் கண் எதிரே நாங்கள் திருடத்தான் செய்வோம். சேவை என்பதனை எல்லாம் எதிர்பார்க்காதே. நீ குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூட நாங்கள் அதற்கான பணத்தை எடுத்துக் கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் வங்கி குறித்து நான் பெற்ற அனுபவங்களைத் தனியாக எழுதுகிறேன்.

மீபத்தில் ஏர்செல் மூடப்பட்டபின்பு அதில் இருந்த வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் செல்ஒன் மற்றும் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்து சேர்ந்து விட ஏற்கனவே நெருக்கிக்கொண்டு நிற்கும் சேவை தற்போது கூட்ட நெரிசலில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. இப்போது வீட்டுக்குள் இருந்தால் கூட நாட் ரீச்சபிள் என்று தான் வருகின்றது. யாராவது அழைத்தால் வெட்ட வெளியில் வந்து நின்று அல்லோ அல்லோ என்று அல்லோலியா கோஷ்டி போல கத்த வேண்டியுள்ளது.

காரணம் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனும் கொடுத்தும், பிஎஸ்என்ல் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பையும் தாரை வார்த்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை வருடந்தோறும் நிலுவையாகவே காட்டப்படுகின்றது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வார்த்தை இப்போதைக்கு நம் நாட்டின் தொலை தொடர்பு சேவைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

காலையில் நம் அவசரத்தின் பொருட்டு ஒன்பது மணிக்கு பிஎஸ்என்எல் அலுவகத்திற்குச் சென்றாலும் ஒவ்வொரு ஊழியரும் பத்து மணிக்கு உள்ளே வருகின்றார்கள். பலர் பத்தரை மணிக்குத்தான் உள்ளே வருகின்றார்கள். சரியாக மாலை நாலரை மணி சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பி விடுகின்றார்கள். இதற்கிடையே தேநீர், சாப்பாடு, புகைப்பது என்று கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் முழுமையாக மூன்று மணி நேரங்கள் தங்கள் பணியைச் செய்வார்களா? என்று சந்தேகமாக உள்ளது.

குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்கள் சங்க செயல்பாட்டின் அடிப்படையில் தாதாவாக உள்ளே இருக்கின்றார்கள். பெரிய அதிகாரிகள் கூட அவர்களை வேலை வாங்க முடியாது என்பது தான் உண்மை. ஒவ்வொரு துறையில் உள்ளவர்கள் சரியாக பணி புரியாவிட்டாலும் கூடச் சங்கத்தின் மூலம் தான் பேசிக் கொள்கின்றார்கள். நேரிடையாக திட்ட முடியாதாம். அப்புறம் அதுவே பெரிய பஞ்சாயத்தாக மாறிவிடுமாம்.

ரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை, பணிபுரியும் ஊழியர்களின் தான்தோன்றித்தனம் என்று நான்கு புறமும் சூறாவளி போல இந்தத்துறையைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் இந்தச் சேவையைத்தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இப்போது அரசாங்கத்திற்குச் சவாலாக உள்ளது.

வட இந்தியாவில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களின் சேவை இருக்காது. ஆனால் உத்தரகாண்ட் சென்ற போதும் அங்கிருந்து நண்பர் என்னை அழைத்துப் பேசி இருக்கின்றார்.

ப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் ஏழெட்டுச் சிம் கார்டு வைத்து இருக்கின்றார்கள். தனியார் அலைபேசி சேவை என்றாலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்து உள்ளனர். சில உறவினர்களின் எண்கள் என்று குறைந்தது பத்து என்கிற அளவிற்கு அலைபேசியில் சேமித்து வைக்க வேண்டியதாக உள்ளது. புதிய எண்ணில் இருந்து அழைக்கும் போது நாம் எடுக்காவிட்டால் அது புதுப் பஞ்சாயத்தை உருவாக்கி விடுகின்றது. மக்களுக்குத் தேவை என்பதற்கும் ஆடம்பரம் என்பதற்கும் உண்டானதற்கும் வித்தியாசம் புரிபடுவதே இல்லை.


டிஜிட்டல் இண்டியா, கேஷ்லெஸ் இண்டியா விரும்பிய பிரதமருக்கு இவையெல்லாம் கண்களுக்குத் தெரியாதா? என்று நண்பரிடம் கேட்டேன்.

ஒரு கடிதம் வாயிலாக மோடிக்குத் தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

எந்த மொழியில் அவருக்கு எழுதுவது? எப்போது அவர் இந்தியாவில் இருப்பார்? என்பதே குழப்பமாக இருப்பதால் எழுதுவதைத் தள்ளிப் போட்டிருக்கின்றேன்.

Wednesday, July 25, 2018

நாட்டு நடப்பு - பணம் இருந்தால் பங்காளி - 14

கடந்து போன அரசியல் நிகழ்வுகளைச் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டும் திரிக்கவில்லை. நாமும் நம் விருப்பப்படியே தான் அதை அணுகின்றோம். இன்று சிலவற்றைப் படித்த போது இதை எழுதத் தோன்றியது. 

இதை எனக்குச் சொன்னtவர், கலைஞரின் கடந்த 40 வருடமாக அணுக்கத் தொண்டராகவும் இருப்பவரும், கலைஞருடன் தொடர்பில் இருந்தவரும், அவரைத் தவிர வேறு எவரும் எனக்குத் தலைவர் இல்லை என்று இன்று வரையிலும் இருக்கக்கூடிய என் நெருங்கிய நண்பர்.  

இன்று வரையிலும் பெரும்பாலான அனைவரும் ஊடகங்களில் பிராமணர்கள் தான் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் பிராமணர்கள் சம்மந்தப்பட்ட அரசியலில் உள்ளவர்களுக்கு அவர்களின் பார்வை ஒரு மாதிரியாகவும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் ஒரு மாதிரியாகவும் உள்ளது. இது தான் இங்கே முக்கியப் பிரச்சனை. 

ஏ1 குற்றவாளி என்று சட்டத்தின் முன்பு நிறுத்தி அவப்பெயருடன் மறைந்த ஜெயலலிதாவை இன்று வரையிலும் எந்த ஊடகமும் பெரிதாகக் கேள்வி கேட்கவில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.  ஆனால் கலைஞர் முதல் ஆ ராசா வரைக்கும் பிராமின் இல்லாத காரணம் என்பதால் வறுத்து எடுக்கின்றார்கள்.  

இது எந்த அளவுக்கு உண்மை?

இந்தக் கேள்வி எனக்குள்ளும் இருந்தது. இதற்கு அவர் பிறந்த பிராமணர் குலம் மட்டும் காரணமல்ல. கலைஞரின் காசு, பணம் சார்ந்த பார்வையும் ஒரு முக்கியக் காரணம். (இந்த இடத்தில் மற்றொரு செய்தி சந்தியா என்பவர் பிராமணர் தான். ஆனால் ஜெ வின் தாயார் நடிகை சந்தியா நடிகையாக மாறுவதுற்கு முன்பே அன்றைய அவர் வாழ்க்கையில் அவர் தொடர்பில் இருந்தவர்கள் பல பேர்கள். இதைப் பல பத்திரிக்கைகள் பலவித ஆதாரங்களுடன் எழுதி உள்ளார்கள்?) 

பெங்களூரில் நடந்த ஜெ வின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை பத்திரிக்கையாளர்களும் அங்கே கூடுவார்கள். வழக்கு விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் எதையும் பத்திரிக்கையில் எழுத மாட்டார்கள். ஒரே காரணம். பணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். 

ஜெ வின் மறைவிற்குப் பின்னே வெளியே அதிகம் தெரிந்த பெங்களூர் புகழேந்தி பொறுப்பில் இது சார்ந்த மொத்த நிர்வாகத்தையும் ஜெ கொடுத்து இருந்தார். வாய்தா முடிந்து ஒவ்வொரு தடவையும் வழக்கு வழக்காடு மன்றத்திற்கு வரும் போது அங்கே ஒரு மாவட்டச் செயலாளர் ஆஜர் ஆவார்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் அங்கே ஆஜர் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அன்றைய செலவு முழுக்க அல்லது அது எத்தனை நாட்கள் என்றாலும் அவர் தான் பொறுப்பு.  அடுத்த வாய்தா வரும் போது அடுத்தவர் வருவார்.

அதிமுகச் சார்பில் குறைந்தபட்சம் (வாதாடுபவர் ஒருவராக இருந்தாலும் எடுப்புத் தொடுப்பு என்று அங்கே இருப்பவர்கள் ஏராளம்) ஐம்பது வக்கீலாவது அங்கே இருப்பார்கள். இது தவிரத் தொண்டர் படையினர் தனி. இது போலத்தான் பத்திரிக்கையாளர் கூட்டமும். 

இந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் காலை, மதியம் சாப்பாடு முதல் ஊக்கப் பரிசு போல அவரவர்களுக்கு என்று தனித்தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்பட்டு வந்தது. 

இதில் பணம் வாங்காத இரண்டு பேர்கள் தமிழில் நக்கீரன் நிருபர். ஆங்கிலத்தில் தி ஹிந்து நிருபர். தொடக்கத்தில் தி ஹிந்து தமிழில் வரவில்லை. 

திமுகச் சார்பாக வழக்காடிக் கொண்டிருப்பவர்களுக்கு, அது சார்ந்த வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கட்சி சார்பாகச் சல்லி பைசா பேராது. திமுகக் கட்சியில் இருப்பவர்களே (தங்கள் சீனியரிடம்) பல முறை எத்திரணியைச் சுட்டிக் காட்டி கேட்டு உள்ளனர். சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாராம். 

தொடக்கம் முதல் திமுக வின் டிசைன் இப்படித்தான். அந்த கட்சி எப்போதும் ஒன் வே டிராபிக். உள்ளே போக முடியும். ஆனால் திரும்பி வெளியே வர முடியாது.  இருப்பதை இழந்து விட்டு தான் வர முடியும். ஆனால் சமூகநீதி, சம உரிமை போன்ற ஜல்லி போட்டு ரோடு பலமாக இருக்கும்.

ஜெ வை மற்றவர்கள் ஆதரிக்கப் பத்துக் காரணங்களில் ஒரு காரணம் பிராமணர் என்பது. ஆனால் மற்ற காரணங்கள் என்பது பணம் சார்ந்தது தான் என்று நண்பரே பல முறை என்னிடம் வருத்தமுடன் சொல்லியுள்ளார். 

இன்று ஊடகம் என்பது செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பிராமண ஆதிக்கம் அளவுக்குப் பிராமணர் அல்லாதவர் கைகளிலும் உள்ளது.

ஆனால் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. 

#பணம் இருந்தால் தான் பங்காளி.

Thursday, July 19, 2018

நாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே? - 13



நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். 

எமர்ஜென்சி என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னைப் போல அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கு முதல் முறையாக உள்ளே நுழைந்தவர்கள் முதல் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் வரைக்கும் இதன் ஆழமும் வீரியமும் புரிந்து இருக்காது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி உருவாக்கிய நிகழ்வுகளைப் பற்றி ஒருவர் எழுதியிருக்கும் புத்தகம் இன்னமும் வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது. 

ஆனால் இதனை அனுப்பிய நண்பர் எனக்குச் சொல்ல விரும்பியது குன்ஹாவின் கதையை. அவர் சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். 

ஆனால் என் நெருக்கமான தொடர்பில் இருக்கும் என் மதிப்புக்குரிய நண்பர் ஏற்கனவே பெங்களூரில் நடந்த ஏ1 குற்றவாளியின் சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்த போது பலவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  இந்தக் காட்சியைப் பார்த்த போது அவர் சொன்ன பல விசயங்கள் என் நினைவுக்கு வந்து போனது.

ஜெ. விற்கு ஏ1 குற்றவாளி என்ற மரியாதையைக் கொடுத்து நீ நினைப்பது போல என்னை உன்னால் விலைக்கு வாங்க முடியாது என்ற நிரூபித்த மைக்கேல் டி குன்ஹா குறித்து அவர் சொன்ன ஆச்சரியமான பல நிகழ்வுகள் இன்று வரையிலும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உள்ள பலருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது.  

பத்திரிக்கைத்துறையில், எதிர்க்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது. ஆனாலும் எவரும் எதையும் பொதுவெளியில் இன்று வரையிலும் பகிர்வதில்லை. ஒவ்வொன்றும் செவி வழிப் பேச்சாகக் கிசுகிசு ரீதியாகவே உள்ளது. 

நண்பர் சிரித்துக் கொண்டே சுவராசியமாகக் கதை போலத்தான் என்னிடம் சொன்னார். 

ஆனால் அவர் பேசிய அடுத்த இரண்டு நாட்கள் குன்ஹா வின் மனோதிடத்தைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்.  இவரைப் போன்ற ஒருவருடன் தான் அருகே நின்று புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளுணர்வு இன்று வரையிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

ஜெ. வின் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது அவருக்குப் பெரிய பாறாங்கல்லைத் தலையில் எப்போதும் வைத்திருக்கும் சுமை போலவே அழுத்திக் கொண்டேயிருந்தது. இந்த வழக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அது சார்ந்து ஒவ்வொரு இடத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள். தமிழ்நாடு, கர்நாடகா தொடங்கி டெல்லி வரைக்கும் சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக, லாபி ரீதியாக என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள். 

இவர்களை ஒருங்கிணைக்க நிதி ஆதாரத்திற்கென்று தனி நபர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்குக் குறிப்பாக ஊடக உலகத்தில் உள்ள முக்கிய அனைத்து நபர்களுக்கும் நன்றாகவே தெரியும். 

உன் விலை என்ன? என்று தான் தொடங்குவார்கள். உன் தேவை எங்கள் பொறுப்பு? என்று முடிப்பார்கள். 

இப்படித்தான் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே வந்தது.

மறைந்த ஏ1 குற்றவாளி ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, தமிழக அரசாங்க எந்திரத்தில் உள்ள எல்லாத்துறைகளுமே இந்த வழக்கு நல்ல விதமாக முடியவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

ஆனால் திமுக அடித்த மாஸ்டர் ஸ்ரோக் பால் என்பது தமிழகத்தில் இந்த வழக்கு நடக்கக்கூடாது என்று கர்நாடக மாநிலத்திற்கு நகர்த்தியது. ஆனால் அதைவிடச் சிக்ஸர் பால் என்பது மைக்கேல் டி குன்ஹா என்பவர் இந்த வழக்குக்காக நீதிபதியாக உள்ளே வந்தது. தன் வாழ்நாள் முழுக்க தனக்காகவே, தன் சுகத்துக்காகவே வாழ்ந்த ஏ1 குற்றவாளியின் உடல் நலம் இப்போது தான் எல்லையைத் தாண்டி விதியின் வளையத்திற்குள் செல்லத் துவங்கியது.

காரணம் கர்நாடகாவில் உள்ள பலரும் இந்த வழக்கு எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய சூழலில் குன்ஹா விடம் கேட்கப்பட்டது. அவர் இயல்பாகவே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு களம்புகத் தொடங்கினார். 

வீம்பு, ஆணவம், அகம்பாவம், உச்சகட்ட அயோக்கியத்தனத்திற்கு அஞ்சாத குணம் என்று பெயர் பெற்றிருந்த ஜெ. வின் பார்வை குன்ஹா வின் மேல் பட்டது. 

அதுவரையிலும் ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெ. வுக்குக் குன்ஹா என்பவர் அதற்கு அப்பாற்பட்டவர் என்பதனை முதலில் உணரக்கூடத் தயாராக இல்லை. எப்போதும் போலக் களம் இறக்கப்பட்டவர்கள் முதலில் கர்நாடக அரசின் உயர் மட்ட பதவிகளில் இருந்தவர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நடக்கவில்லை. அதன் பிறகு அங்கிருக்கும் காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் சில நகர்வுகள் நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 

பிறகு நீதிமன்றத்தில் பணியில் இருந்த ஓய்வு பெற்று இருந்த பலரின் மூலம் குன்ஹா வை வட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா? என்று முயற்சிக்கப்பட்டது. 

இந்த இடத்தில் ஒரு சுவராசியம் என்னவென்றால் குன்ஹா தான் தங்கியிருந்த வீட்டை சில முறை மாற்றியுள்ளார். வெவ்வேறு இடத்தில் தங்கியுள்ளார். ஆனால் காலை நடைபயிற்சிக்குச் செல்லும் போது சொல்லிவைத்தாற் போல நீதித்துறையில் உள்ள சில கணவான்கள், அதிகாரிகள், உயர்பதவியில் உள்ளவர்கள் திடீரென்று அங்கே தோன்றுவார்கள். அவருடன் நடைபயிற்சியைத் தொடங்குவார்கள். குன்ஹா ஆச்சரியமாகப் பார்த்து விட்டு எப்போதும் போல இயல்பாக உரையாடுவார். அவர்கள் வலை வீசுவார்கள். பாதி நிலையிலே நடைபயிற்சியை முடித்து விட்டு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பி விடுவாராம். 

தொடர்ந்து செல்லும் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் வெறுத்து விடுவார்கள். 

காரணம் அதுவரையிலும் பல்வேறு காரணங்கள் சொல்லி இழுத்துக் கொண்டே வந்த இந்த வழக்குக் குன்ஹா கையாளத் தொடங்கியதும் சூடு பிடித்து விரைவாக நகரத் தொடங்கியதும் முக்கியக் காரணமாக இருந்தது. 

இந்த வழக்குக்கு முக்கியச் சாட்சியாக இருந்த ஜெ. பயன்படுத்திய பொருட்கள் அப்போது சென்னையில் ஒரு இடத்தில் அரசு பாதுகாப்பில் இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் அவையெல்லாம் முக்கியச் சாட்சிப் பொருட்கள். பெங்களூர் கொண்டு வருவதற்கு ஆணையிட்டும் அது நகர்ந்து வந்தபாடில்லை. 

இறுதியாக இந்த நாளைக்குள் அவையெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும் என்று சொன்ன குன்ஹா எவரிடமும் சொல்லாமல் சென்னைக்கு வந்துள்ளார். இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி. அங்கேயே அவருடைய பணியும் தொடங்கியுள்ளது. 

குன்ஹா கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த இறைபக்தி கொண்டவர். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே சர்ச் இருந்தால் கட்டாயம் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடுவார். சென்னைக்கு வந்த போது சாந்தோம் தேவாலயத்திற்குச் சென்று உள்ளார். அந்தத் தேவாலய ஃபாதர் இவருக்காகக் காத்திருந்தவர் போல இவரை வரவேற்று உபசரித்துள்ளார். இவர் என்னை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டுள்ளார்.

மேடம் கேஸ் நீங்க தானே பார்க்குறீங்க? தெரியாமல் இருக்குமா? என்று சொல்லி விட்டு நீங்க போகும் போது என் அறைக்கு வந்து விட்டுப் போங்க என்று அன்போடு பேசியுள்ளார். 

ஆனால் சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து ஃபாதர் அழைப்பைப் புறக்கணித்து நகர்ந்து சென்று விட்டார். தான் வந்த வேலையை முடித்து விட்டு பெங்களூர் சென்று விட்டார். காரணம் இவரின் ஒவ்வொரு அசைவும் தமிழக உளவுத்துறையினர் கண்காணிக்கப்பட்டு இவரை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். குன்ஹா எந்த இடத்திற்குச் செல்கின்றாரோ அந்த இடத்தில் இருப்பவர்களை வைத்து வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

இவர் தினசரி அலுவலக வேலையின் பொருட்டு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு வந்து திரும்பும் போது பல வித இடைஞ்சல்கள், அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள் நடந்து கொண்டேயிருக்கத் தான் வருகின்ற வழியை, செல்கின்ற வழியை மாற்றிக் கொண்டேயிருந்துள்ளார். 

இவருக்கு இரண்டு மகள்கள். தீர்ப்புக்குப் பின்னால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனது. ஒரு பெண் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றார். 

இவர் நீதிமன்ற பணி முடிந்து வீட்டுக்கு மாலை திரும்பி வரும் போது இவரின் ஒரு மகள் வெவ்வேறு இடங்களில் இருந்து இவரை அழைத்துச் செல்வது வரைக்கும் எவரையும் நம்பாமல் தனி நபராகவே தன் பிரச்சனைகளைச் சமாளித்துள்ளார். 

உச்ச நீதிமன்றம் முதல் உள்ளுர் பிரமுகர்கள் வரைக்கும் இவருக்குக் கொடுத்த அழுத்தங்கள், மிரட்டல்கள் தாண்டி தன் தீர்ப்பை வழங்கிய இவரின் மனோதிடத்தை ஒவ்வொரு நாளும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. 

ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் நான் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்புச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் என் தோல் தடிமனானது என்ற பொன்னான வாசகத்தை உதிர்த்தார். ஊடகங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பரிட்சயமாக இருந்து இருக்கும். 

அப்போதே சமூக வலைதளங்களில் வந்த செய்தி 600 கோடி என்றார்கள். 

குன்ஹா விற்கு எந்த அளவுக்கு விலை பேசப்பட்டு இருக்கும்? என்பதனை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

தீர்ப்பு வந்த நாள் முதல் அவரைப் பற்றித் தேடித் தேடி படித்த செய்திகளின் வாயிலாக அவர் வணங்கும் கர்த்தர் மேல் எனக்கு அளவு கடந்த மரியாதை உருவானது. 

கிறிஸ்துவம் சொல்லும் சத்தியமும் ஜீவனும் நானே என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து போனது. 



Tuesday, July 17, 2018

நாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12


சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியல் குளறுபடிகளைக் கண்டு மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இவரையும் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் பல விசயங்களை இவர் செய்து காட்டியிருப்பதற்குப் பின்னால் இவர் எதையெல்லாம் இழந்திருக்க வேண்டும்? என்பதனை பல முறை யோசித்ததுண்டு. இவரின் சொந்த விசயங்களைப் பற்றி இணையத்தில் பகிர்ந்ததும் இல்லை. ஆனால் இவரின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பின் வாயிலாகக் காவல்துறை, நீதிமன்றம் என்ற இரண்டு துறைகளைப் பற்றி அதன் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் புத்தகமாக எழுதியுள்ளதை வாசித்து முடித்த போது மனதில் உருவான தாக்கம் மறைய அடுத்த இரண்டு நாள் ஆனது.

அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி தேவைப்படாது. அரசு எந்திரத்திற்கு ஆன்மா என்பது தேவையில்லை. அதிகாரிகளுக்குக் கட்டளையை நிறைவேற்றுதல். தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுதல். உருவாகும், உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நிகழ்வு. இதற்கு நாம் அழைக்கும் பெயர் ஜனநாயகம். இதனைத்தான் இங்கே மக்களாட்சி என்கிறோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் சாதாரணக் கீழ்மட்ட அரசு ஊழியராகப் பணிபுரியும் ஒருவர் நாம் இவற்றைச் சகித்துக் கொள்ளக்கூடாது, நடந்து கொண்டிருக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தன்னால் ஆன முயற்சிகளை மறைமுகமாகச் செய்யும் போது உருவான தலைகீழ் மாற்றங்கள் தான் இன்று இவரை எழுத்தாளர் ஆக மாற்றியுள்ளது. இணையத்தில் நண்பர்கள் அளவுக்கு எதிரிகளையும் உருவாக்கியுள்ளது. பெயரைச் சொன்னாலே பலருக்கும் அலறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காவல் நிலையம் வரைக்கும் செல்ல வேண்டியிருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள். காரணம் அதன் அமைப்பு அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து அங்கு அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், கேலிகளும் தாண்டி முதல் தகவல் அறிக்கை பெற்று விட்டால் கூட அதுவே மிகப் பெரிய சாதனை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அலையும் அலைச்சலில் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தவர்கள் அங்கே போகாமல் இருக்க வைக்கின்றது.

ஆனால் நீதிமன்றம் இதனை விட வித்தியாசமானது. உள்ளே என்ன நடக்கின்றது? என்பதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அமைப்பு வேறொரு தளத்தில் இயங்குகின்றது. இன்று வரையிலும் இது தான் சரி என்று பிரிட்டிஷார் உருவாக்கிய இத்துப் போன நடைமுறைகளைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. காரணம் வெளிப்படையாக, எளிதில் அணுகக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் கோர முகம் மக்களுக்கு எளிதில் தெரிந்து விடும் அல்லவா? மக்கள் பேசும் மொழியும் அலுவல் மொழியும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எவரும் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக முயற்சிக்கவும் மாட்டார்கள். அப்படியே முயற்சித்தாலும் காலம் கடந்து போயிருக்கும்.

இப்படித்தான் இங்கே சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகின்றது. காலம் முழுக்க கையேந்தி வைத்துக் கொண்டிருப்பதே அரசாங்கத்தின் வெற்றியாகவும், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்வதே மக்களின் வெற்றியாகவும் இங்கே உள்ளது.

அதனைத் தான் இந்தப் புத்தகம் உயிருடன் இன்னமும் வாழும் பல அதிகாரிகளின் உண்மை முகம் வழியாக நமக்குப் புரியவைக்கின்றது. 

இரண்டு துறைகளிலும் நல்லவர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிற்கு இருப்பதால் மட்டுமே சங்கர் இந்தப் புத்தகம் எழுதும் அளவிற்கு உயிரோடு இருக்க முடிந்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளர் என்பவர்கள் எழுதி எழுதிப் பழகியவர்களுக்கு மட்டுமே அதன் சுவராசிய சூட்சமம் கைகூடும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இந்தப் புத்தகத்தை நள்ளிரவு தாண்டியும் வாசித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு மனதில் பதட்டத்தை உருவாக்கியதோடு தொடர்ந்து படபடப்பையும் வாசிப்பவனுக்கு உருவாக்கியதில் முழுமையாகச் சங்கர் வெற்றியடைந்துள்ளார்.

இதில் வாசித்துக் கொண்டே வந்த போது மிகவும் ரசித்த விசயம் ஒன்று இதில் உள்ளது.

இப்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா வீட்டுக்குச் சோதனை போடச் சென்ற போது அவர் கண்ணாடியில் பொட்டு வைத்துக் கொண்டு இயல்பான நின்றதும் இவர்களைக் கண்டதும் சோகமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்பதும் போன்ற காட்சிகள் வாசிக்கும் போதே அந்த நிகழ்வை யோசித்துப் பார்த்துச் சிரிக்கத் தோன்றுகின்றது.

அதே போல மன்னார்குடி குடும்பம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் தஞ்சாவூர் வீடு எங்கே உள்ளது என்பதனை அறிய அலைந்த சம்பவங்களையெல்லாம் வாசிக்கும் எந்தக் காலமாக இருந்தாலும் காத்திருந்து சங்கறுக்கும் கலையைக் கற்ற அந்தச் சமூகத்தின் செயல்பாடுகள் பெரிதாக ஆச்சரியமளிக்கவில்லை.

இவர்களையும் ஏ1 குற்றவாளி கட்டி மேய்த்துள்ளார் என்பதனைத்தான் ஆச்சரியமாகச் சொல்லத் தோன்றுகின்றது.

சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.

மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்தப் புத்தகத்தை நிச்சயம் சட்டக்கல்லூரி மாணவர்களும், காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் உள்ளேயிருக்கும் ஆன்மா அழுகிப் போய்விடக்கூடாது என்ற சங்கல்பத்தை இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவர்களுக்கு ஏதொவொரு வகையில் உணர்த்தியே தீரும். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இந்த இரண்டு துறைகளின் மேல் பொது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. அதனையும் சங்கர் அங்கங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட ஒன்று கலைஞர் குறித்த அவர் ஆளுமை பற்றிய புரிதல்.

ஆட்சியில் இல்லாத போது போராடிக் கொண்டிருந்ததைப் போல ஆட்சியில் இருந்தாலும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே தான் இருந்துள்ளார். அதன் மூலம் உருவான பல அனர்த்தங்களைச் சங்கர் சில இடங்களில் மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரின் வலைதள வீச்சின் காரம் இதில் குறைவு. ஆனால் வாசிப்பவனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்து நகர வைக்கும் சூட்ச எழுத்தாள திறமையை அனாயாசமாகக் கைப்பற்றி வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் குறை என்று பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில் ஜம்ப் ஆகி அதனைப் பற்றி முழுமையாக விவரிக்காமல் சென்று விடுவது இயல்பாகப் பல இடங்களில் உள்ளது. ஒரு வேளை சங்கர் Shankar Aஇதன் தொடர்ச்சியாக அடுத்தப் புத்தகம் எழுதினால் இன்னமு😋ம் தைரியமாகப் பல விசயங்களைச் சுட்டிக் காட்டுவார் என்று நம்புகிறேன். 😁