Friday, July 26, 2019

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

எங்கு படிக்கலாம்? எதைப்படிக்கலாம்? கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. 

நல்லது என்றால் எங்கங்கே என்னன்ன வாய்ப்புகள் உள்ளது? என்பது முழுமையாகச் சந்தையில் வெளியே தெரிகின்றது. கெட்டது என்றால் குப்பைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டு விளம்பரங்கள் மூலம் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றது. மாணவர்களுக்குக் குழப்பம். பெற்றோர்களுக்கு மயக்கம்.

••••

இந்த முறை பத்திரிக்கைகளுக்கு பம்பர் லாட்டரி. டபுள் போனஸ். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ வகுப்புகள் தேர்ச்சி முடிவு வரும் போது ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் விளம்பரம் மட்டுமே தொடர்ந்து வரும். இந்த முறை தேர்தல் இத்துடன் சேர்ந்து வந்து விட்ட காரணத்தால் விளம்பரங்களுக்குப் பஞ்சமே இல்லை. பத்திரிக்கைகளில் பாதிக்குப் பாதி விளம்பரங்கள். அதுவும் முழுப்பக்க விளம்பரங்கள். 

கடந்த ஒரு மாதமாக அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கு வரும் பத்திரிக்கைகளில் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களை மகள்களுடன் உட்கார்ந்து விவாதிப்பதுண்டு. எத்தனை எத்தனை கல்லூரிகள்? புதுப்புது பாடத்திட்டங்கள். நாம் கற்பனையில் நினைத்தே பார்த்திராத அத்தனை கோர்ஸ் களும் வரிசைகட்டி நிற்கின்றது.

கடந்த சில வருடங்களாகத் தொழில்நுட்ப படிப்பு காற்று வாங்கத் தொடங்கியுள்ளது. இப்போது கலைக்கல்லூரிகள் பக்கம் திரும்பியுள்ளது.

•••••

தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 479
மொத்த இருக்கைகள் 1, 72 .940
இதுவரையிலும் நிரம்பிய இடங்கள் 45 662 ( 26 சதவிகிதம்),  
பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வெறுமனே பத்து சீட்டுகள் கூட நிரம்பாத கல்லூரிகளும் உண்டு.  இனி என்ன செய்வார்கள்? என்ன செய்யப் போகின்றார்கள்?

கடந்த பத்து வருடங்களில் இது போன்ற கல்லூரிகளில் படித்து வெளியே வந்த மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள்.  முழு விபரம் அறிய.  தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளாவது, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இதைப் பற்றித்தானே முதன்மையாக பேச வேண்டும்? யாராவது இதுவரையிலும் வாயைத் திறந்து உள்ளார்களா?

*******

எம்.ஜி.ஆர் தனியார் கல்லூரிகளுக்கான வாசலைத் திறந்து வைக்காமல் போயிருந்தால் இப்போதைய சூழலில் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயம் இவ்வளவு மாணவர்களுக்கு அரசு முழுமையாகக் கல்வி வழங்கியிருக்க முடியுமா? உழுத்துப்போன நிர்வாகத்தில், ஊழல் மிகுந்த அதிகாரவர்க்கம் தன் கடமையைச் சரிவரச் செய்து இருக்க முடியுமா? கல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்களா? போன்ற பல கேள்விகள் வந்து போகின்றது.

••••••

திருப்பூர் மாவட்டத்திற்குள் மட்டும் எத்தனை கல்லூரிகள் என்பதனைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றது. பெரும்பாலான பெற்றோர்கள் மகள்களை மகன்களுக்குச் சமமாக பார்க்கும் மனோபாவம் இப்போது வளர்ந்துள்ளது. மாணவியர்களுக்கென்று உள்ள கல்லூரிகள் தாண்டியும் இருபாலரும் படிக்கும் கல்லூரிகளில் ஏராளமான மாணவிகள் சேர ஆர்வமாக இருக்கின்றனர். மாணவியர்களின் கல்வியறிவு தற்போது வேறொரு புதுப் பிரச்சனையை இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. 

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் கவுண்டர் இன சமூக மக்கள் மணமகன் மணமகள் கூடும் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். அதாவது மேட்ரிமோனியல்.காம் மாதிரி. அதற்கு அவர்கள் தனியாகப் பெயர் ஒன்று வைத்துள்ளனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பெண்கள் எவரும் இதனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. காரணம் அவர்கள் எதிர்பார்ப்புக்குரிய ஆண்கள் இல்லை. கூட்டம் நடத்தியவர்கள் நொந்துபோய் முழுமையான தோல்வி என்றார்கள். இன்னும் நாலைந்து வருடங்களில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் நடக்கப் போகும் காலம் வரப் போகின்றது.

•••••

மாணவர்கள் மாணவியர்கள் பத்திரிக்கைகளில் வரும் கல்லூரி சார்ந்த விளம்பரங்களைப் பாருங்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கலந்துரையாடல்களைக் கவனிக்கவும். அவர்கள் சொல்லும் கோர்ஸ் ன் சாதக பாதக அம்சங்களை, எதிர்கால வாய்ப்புகளை உங்களுக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் சோதித்துப் பாருங்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் படித்த படிப்பு மூலம் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் அதை இன்றைக்கே உங்கள் வீட்டில் உள்ள பரணில் ஒரு சாக்குப் பையில் கட்டி மேலே பத்திரமாக வைத்து விடுங்கள். உங்களின் தனித்திறமைகளைத்தான் இனிவரும் உலகம் எதிர்பார்க்கின்றது என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.

முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் சேர விரும்பும் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலருடன் கட்டாயம் பேசுங்கள். அங்கே உள்ள அரசியல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பணியாற்றும் ஆசிரியர்களின் தரம், லேப் வசதிகள் போன்றவற்றை அங்கு படித்து முடித்து வந்தவர்களிடம் கேட்டால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியக்கூடும்.

••••••

எதை நம்புவது? யாரை நம்புவது? என்பது தற்போதைய சூழலில் குழப்பமாக உள்ளது. சென்னையில் உள்ள பிரபல்யமான மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி என்பது இருநூறு வருடப் பாரம்பரியம் கொண்ட கல்லூரி. எல்லாவகையிலும், எல்லாநிலையிலும் புகழ்பெற்றது. இந்திய அளவில் தரச்சான்று பெற்ற கல்லூரியில் கூட பாலியல் வன்முறை நடக்கின்றது என்பதே அதிர்ச்சியாக உள்ளது.


•••••••••

இந்த மூன்று இணைப்பையும் பார்க்க வேண்டுகிறேன்.

காரணம் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து, கடன் வாங்கி செலவளித்து, கனவுகளுடன் வெளியே வரும் போது உங்களை வரவேற்கப் போவது என்ன என்பதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன்.

முதல் இணைப்பு (அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்பிற்கான கல்லூரிகளின் பட்டியல்)

TNEA 2018 College Cutoff Marks

Anna University Counselling 2018 Cutoff Marks

இனி ஒவ்வொரு மாணவருக்கும் கல்லூரி பட்டப்படிப்பு தேவையா? பட்டப்படிப்பு முடிந்து வரும் மாணவர்களின் திறமை (தமிழக கல்விச்சூழலில்) எப்படியுள்ளது? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? என்ன வாய்ப்புள்ளது? இதனைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பு உதவக்கூடும்.


"உலகில் 6-ல் ஒரு பங்கு மக்கள்தொகை இருக்கும் இந்தியாவை, வெறும் ஆறாயிரத்துக்கும் குறைவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே ஆள்கிறார்கள். இந்த ஆறாயிரம் என்பதுகூட தோராய மதிப்பீடுதான். 130 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் நம்முடைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, வெறும் 130-க்கும் குறைவான உயரதிகாரிகள், முக்கியமான அரசுத் துறைச் செயலர்கள்தான் தீர்மானிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஐஏஎஸ் கனவு என்றால், மாவட்ட ஆட்சியர் என்பதுடன் சுருங்கிவிடக் கூடாது. பிரதமர் அலுவலகச் செயலர், முதன்மைச் செயலர், மாநிலத்தின் தலைமைச் செயலர் என்று விரிய வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் சென்று அமர வேண்டும். இது சுறா வேட்டைக் கனவுதான். நம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு, திட்டமிட்டு, அயராது உழைத்தால் அது இயலாத காரியம் அல்ல. அதேநேரம், `தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்வீர்களேயானால், இலக்கை அடைவது சிரமம்தான்.

சுறா வேட்டைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் வெறும் கையோடு செல்ல முடியுமா? அதேபோல, வாசிப்பு இல்லாமல் போட்டித் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? இந்த தேர்வுக்கு நமக்கு வழிகாட்டுவது வாசிப்புதான். அதில் ஒன்று பத்திரிகை வாசிப்பு. தினமும் குறைந்தது ஒரு தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உண்டாக்கிக்கொள்ளுங்கள். வாரம் ஒரு புத்தகத்தையேனும் படிக்கத் திட்டமிடுங்கள்" என்றார்.

சமஸ் (இந்து தமிழ் திசை)

13 comments:

Thulasidharan V Thillaiakathu said...

கடந்த பத்து வருடங்களில் இது போன்ற கல்லூரிகளில் படித்து வெளியே வந்த மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள். முழு விபரம் அறிய. தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளாவது, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இதைப் பற்றித்தானே முதன்மையாக பேச வேண்டும்? யாராவது இதுவரையிலும் வாயைத் திறந்து உள்ளார்களா?//

எப்படித் திறப்பார்கள்? திறக்க மாட்டார்கள் ஏனென்றால் பல தனியார் கல்லூரிகளும் அரசியல்வியாதிகளின் பின்புலத்தில்தானே நடக்கின்றன.

தனியார் கல்லூரிகளுக்கு வழிவகுக்கப்பட்டதால் இத்தனை பேர் கல்வி பெற முடிந்தது என்கிறோம்...ஆனால் மருத்துவக் கல்லூரிகள்?

இப்போது பொறியியல் கல்லூரிகள் பலதும் நிரப்பப்படாமல் போகின்றன. அவர்களின் தர வரிசை கூட நம்பிக்கையானவை என்று சொல்ல முடியாது. ஒரு சிலவற்றைத் தவிர...சில எப்படி தரத்தில் இடம் பிடிக்கின்றன என்று காரணம் ஆராய முற்பட்டால் உண்மையான காரணம் வரும்.
பெரும்பான்மை மக்கள் அடித்தட்டு வர்கமாகவும், சாதாரண மக்கல் உடைய நம் போன்ற நாடுகளுக்குக் கல்வி எப்போது வியாபாரத்திலிருந்து விடுபடுகிறதோ, அரது எப்போது நல்ல தரமான கல்வி கொடுக்கிறதோ அப்போதுதான் நம் கல்வி முன்னேறும். அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு அரசுக் கட்டணத்தை விடக் கூடுதலாக இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

தரம் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை செக் செய்யப்பட வேண்டும் அதற்கும் பெட்டிகள் கொடுக்கப்படக் கூடாது என்ற விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

டொனேஷன் வாங்கக் கூடாது.

கல்வி என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் வியாபாரம் கிடையாதே..

நடக்குமா?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பள்ளி, கல்லூரியின் தரம் என்பது மிகவும் கேவலமாக உள்ளது என்பதை நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன்.

ஒரு சில மாணவர்கள் திறமையுடன் மேலே வருகிறார்கள், வேலை பெறுகிறார்கள் என்றால் அது அவர்களின் சுய உழைப்பு, திறமைதான் காரணமே அன்றி ஓரிரு நல்ல சின்சியர் ஆசிரியர்கள் காரணமாக இருக்கலாமாக இருக்கலாம் ஆனால் எல்லா ஆசிரியர்களும், கல்லூரி நிச்சயமாகக் காரணம் கிடையாது. இது பள்ளிகும் பொருந்தும்.

பல மாணவர்களின் பெயருக்குப் பின்னால் இஞ்சினீயரிங்க், நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்று போய்ப் பெற்ற பட்டங்கள் என்பதால் வேலை பெறாமல் இருப்பதன் காரணம் அதுவே.

தரம் என்பது இல்லாததால் தான் நம்மூரில் ஆராய்ச்சிகள் கூட நல்ல நிலையில் இல்லை.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

// தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை... //

செய்து கொண்டிருக்கின்றேன்...

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! இங்கே மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து செய்கிற தப்பு, விளம்பரங்களையும் பானாசீனா மாதிரியானவர்கள்வங்கியில் கல்விக்கடன் தரமாட்டேன் என்கிறார்களா? எனக்கு ஒரு போஸ்ட்கார்டு எழுதிப்போடு, சீவுகிறேன் மாதிரி வசனங்களையும் நம்பி ....

1. படிக்கப்போகிறவனுக்கு என்ன படிக்கப் பிடிக்கும் என்பதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவன் கம்ப்யூட்டர் என்ஜிஜீயர் ஆகி ஐடி கம்பெனியில் லட்சலட்சமாக சம்பாதிக்கிறான் என்று மந்தைகள் மாதிரிப் போய்விழுகிற தவறை, வங்கிக்கடன்களை ஜெபஊழியம் செய்தோ சாராயம் விற்றோ MLA, மந்திரியாக இருந்தோ கல்வித்தந்தையானவன் தங்களுடைய ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ப்ராய்லர் கோழிகள் மாதிரி கொஞ்சநாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியாத கல்வித்தகுதியுடன் என்ஜினீயர்களாக ஆனவர்கள் நிலைமை வேலைக்காகவில்லை என்ற நிலையிலும் கூட மோகம் குறையாமல் கல்லூரிகளைத் திறந்தார்கள், இன்றைக்கு கல்லூரி வைத்துக் கட்டுப்படியாகவில்லை என்று ஒரு பிரபலத்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிற நிலைக்குபோனதே! தரமற்றகல்லூரிகளை இழுத்து மூடாமல் இயங்கவிட்டதன் பின்னால் கொழுத்த அரசியல்வாதிகள் இருந்தார்களே!

2. போட்டிகள் நிறைந்த உலகில் ஜெயிப்பதற்கு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பின்னுக்குத்தள்ளி, சமூகநீதி, சமநீதி இட ஒதுக்கீடு சமச்சீர் கால் என்று போட்டிபோடும் திறமையை வளர்த்துக் கொள்ளும் திறமையை ஊக்குவிக்காமல், மழுங்கடித்த அரசியல்வாதிகள் பேச்சை நம்பி தங்களுடைய எதிர்காலத்தைத் தொலைத்துவிடாமல் இருக்க, பெற்றோர்களும், பிள்ளைகளும் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள்?

இவைகளையெல்லாம் தனிமனிதனாக நின்று எவரும் கேள்விகேட்க முடியாது, மாற்ற முடியாதுதான்! ஆனால் சிக்கிக் கொள்ளாமலாவது இருக்கலாமே!

ஜோதிஜி said...

என் கருத்து இதுவே. ஆனால் நம்மவர்களின் பேராசையும் முக்கியக் காரணம்.

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

தமிழ் இந்துவின் கஸ்தூரி ரங்கன் பேட்டி படிக்கவும். நீங்க சொன்னதை விலாவாரியாகச் சொல்லி உள்ளார்.

ஜோதிஜி said...

அடுத்த மூன்று தலைமுறையில் முக்கியமான தலைகள் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும். பாதி வாய்ப்புள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

பெருகி விட்ட கல்லூரிகள் - பெரும்பாலானவை தரமற்றவை என்று தெரிந்தும் அங்கே சேரும் மாணவர்கள் - படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஜோதிஜி said...

பெற்றோர்களின் அறியாமையும் முக்கியக் காரணம்.

நெல்லைத்தமிழன் said...

ஜோதிஜி சார்...அதற்குள் அவர்கள், அவர்களின் மூன்று தலைமுறைகளை நன்றாகத் தயார் செய்துவிட்டுதான் செல்வார்கள்.

ஜோதிஜி said...

தற்போது நடந்து கொண்டிருக்கும் பல மாறுதல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 1. புனித பிம்பங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. 2. எவர் அழைத்தாலும் கூட்டம் வருவதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வருகின்றார்கள். 3. தனிப்பட்ட செல்வாக்கு என்பது எவருக்கும் இங்கில்லை. 4. கவர்ச்சி என்பது இனி எடுபடாது. 5. சினிமா நபர்களுக்கு இருக்கின்றது என்கிறார்கள். அது திரையரங்கம் என்பது மாறி வீட்டுக்குள் இருந்தே தோன்றும் போது பார்க்கலாம் என்கிற நிலை வரும் போது அங்கும் பல அதிர்ச்சிகரமான மாற்றங்கள் நடக்கும். 6. இணையம் வழியே அனைத்து விதமான சேவைகள் வரத்துவங்கும் போது மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே எடுத்துக் கொள்ளும் சூழல் உருவாகும். மொத்தத்தில் தொழில்நுட்பம் இதுவரையிலும் சந்தித்திராத அனைத்து விதமான வித்தியாச உலகத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்கப் போகின்றோம். நீங்க சொன்ன மாதிரி அவர்களின் அடுத்த தலைமுறையில் மூன்று தலைமுறைக்கு தேவையான பணம் இருக்கலாம். ஆனால் வெகுஜன மக்களின் மரியாதையும் பிரியமும் இருக்காது. கூட்டத்தோடு நீயும் வா என்று மாற்றுவார்கள்.

Nagendra Bharathi said...

நன்றி