Monday, July 01, 2019

உயர்ந்த மனிதர்கள் 2


வாழும் ஊருக்கும் வாழ்ந்த ஊருக்கும் இடையே ஐந்து மாவட்டங்கள் இருப்பதால் எல்லா இடங்களில் நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தோர் எனக் கலவையாக வாழ்ந்து வருவதால் ஒவ்வொருமுறையும் சமூகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இவர்களின் பார்வை எப்படி உள்ளது? என்பதனை அவ்வப்போது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதுண்டு.

குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளை எத்தனை பேர்கள் பார்க்கின்றார்கள்? என்று கேட்ட போது பூஜ்யம் என்று தான் வந்தது. என் நெருக்கமான நண்பர் ஒருவர் தொடர்ந்து பார்க்கின்றார் என்பதனை அறிந்தேன். வேறு யார் தான் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றார்கள்? அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், அபிமானிகள் என்று வேண்டுமானால் இவற்றைப் பார்ப்பார்கள் போல என்று நினைத்துக் கொள்வதுண்டு.

சேனல் மாற்றும் போது இவர்களின் உரையாடலைக் கவனித்ததுண்டு. முகத்திற்குப் பொருந்தாத ஒப்பனைகளும் , தெருவில் இறங்கிப் பேசினால் காறித்துப்பி விடுவார்கள் என்ற பயமும் இல்லாமல் பேசும் வாய்ச் சொல் வீரர்களைப் பார்த்து வியந்து போயுள்ளேன்.

உன்னையெல்லாம் தெரு நாய் கூட சிந்தாது என்பார்களே அப்படிப்பட்ட பலரையும் இது போன்ற விவாதங்களில் பார்த்துள்ளேன்.

இதற்கெல்லாம் மேலாக அவர்களின் காட்டுக்கத்தல்கள் ஏர்வாடியில் இருப்பவர்களை நினைவுக்குக் கொண்டு வரும்.

இந்த வருடத்தில் தமிழில் அறிந்த முக்கிய வார்த்தை சமூக ஆர்வலர். எந்தச் சமூகத்தில் என்னவிதமான ஆர்வத்தைக் காட்டினார் என்று எந்தத் தொலைக்காட்சியும் சொன்னதே இல்லை.

கேர் ஆஃப் ப்ளாட்பார்ம் என்கிற ரீதியில் இருந்தவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொடங்கி முன்னாள் கட்டப்பஞ்சயத்து பார்ட்டிகள் வரைக்கும் மொத்தமாக ஏதொவொரு அக்மார்க் முத்திரையுடன் உளறிக் கொண்டிருப்பார்கள். கலந்து கொள்ளும் ஆண்களுக்கு அரங்கத்தின் உள்ளே பவுடர் அடித்து தலைவாரிக் கொள்ள வசதியிருக்கும். ஆனால் பெண்கள் நிச்சயம் மூன்று மணி நேரம் பியூட்டி பார்லர் சென்று வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

குறிப்பிட்ட சேனலில் நிகழ்ச்சி நடத்துபவர்களின் தயவோ, நிர்வாக அனுக்கிரகமோ அல்லது வேறு ஏதோவொன்றின் நிர்ப்பந்தம் மூலம் பாவ விமோசனம் பெற்று இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் இவர்களின் முகங்கள் காற்றின் அலைக்கற்றையில் அலைபாய்ந்தபடி தினமும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றது. 

உடல் நலம் ஆரோக்கியத்துடன் வாழ்பவர்கள் கூட இது போன்ற நிகழ்ச்சியினை ஒரு வாரம் தொடர்ந்து  பார்த்தால் போதுமானது. உலகில் உள்ள எல்லாவிதமான நோய்களும் உள்ளுக்குள் வந்து சேர்ந்துவிடும்.

பலமுறை மகள்களின் நிறுத்தமுடியாத சண்டைகளை நிறுத்தும் பொருட்டு இது போன்ற விவாத நிகழ்ச்சியின் சப்தத்தை மிக அதிகமாக வைத்து அவர்களை வெறுப்பேத்தி அவர்களின் சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வருவதுண்டு. பெட்டிக்குள்ளும் சண்டை. வெளியேயும் சண்டை. முடிவுக்கு வந்தவுடன் சேனலை மாற்றிவிடுவதுண்டு.

ஆனாலும் குறிப்பிட்ட சிலர் பேசும் போது மட்டும் அவர்களின் பேச்சை முழுமையாகக் கேட்பதுண்டு.

அதில் ஒருவர் இந்த வருடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர் ஜெயரஞ்சன்.

முகத்திற்கு, வார்த்தைகளுக்கு அலங்காரம் தேவைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே எடுத்து வைத்தார். கட்சி ஆதரவு எதிர்ப்பு என்கிற நிலைகளைத் தாண்டி பல இடங்களில் வியப்பூட்டினார். பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் என்றாலே புள்ளிவிவரங்கள் என்ற பெயரில் வாசிக்கும் நம் கண்களுக்குள் பூச்சி பறப்பது போலவே இருக்கும். 

ஆனால் வரலாற்றுச் சுவராசியத்தை தன் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு பலருக்கும் கடத்தியவர். வல்லுநர் என்ற பெயர் கொண்டவர்களெல்லாம் வல்லூறாக மாறிக் கொத்தி கிழித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல அழகாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 

கேள்வி கேட்பவர் எப்படி மாற்றிக் கேட்டாலும் ஆமா இப்படித்தான்? அதற்கென்ன இப்போ? என்று தெனாவெட்டாக உண்மையை உடைத்துப் பேசினார். நிர்ப்பந்தம் இல்லை. நிச்சயமாக பக்கச் சார்ப்பு இல்லை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சொல்ல வந்த கருத்துக்களை அப்படியே எடுத்துரைத்தார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் எவரின் ஆட்சியில் என்னவிதமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது? அதன் மூலம் சமூகம் அடைந்த பலன் என்ன? என்பதனை 360 டிகிரி கோணத்தில் அனைத்துப் பக்கங்களையும் எடுத்து வைத்தார். நாம் இதையெல்லாம் வாசித்தது இல்லையே? என்கிற ரீதியில் அவரின் ஒவ்வொரு பேச்சும் இருந்தது.

ஒரு தொழில் நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து விதமான வெளிச்சம் மற்றும் இருட்டு சமாச்சாரங்களை அறிந்தவன் என்ற முறையில் அரசாங்கம் கொண்டு வருகின்ற திட்டங்கள், சட்டங்கள் எந்த அளவிற்குப் பாதிப்பை உருவாக்குகின்றது. எந்த அளவுக்குப் பலருக்கும் பாதுகாப்பாக இருக்கின்றது என்கிற ரீதியில் இந்த முறை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள பல திட்டங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன்.

நம்மவர்களுக்கு அரசியல் என்பது முகம் சார்ந்தது.

கொள்கை சார்ந்தது என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வெறுப்பை விதைப்பதும் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதும் இதனை ஒட்டியே தான் வருகின்றது.

குறிப்பிட்ட கட்சி ஆதரவாளர் என்றால் போதும் அவர் கட்சியின் நிலைப்பாடு அவரைப் பொறுத்தவரையிலும் ஏற்புடையதாக இல்லாமல் போனால் கட்சித் தலைமை அறிவித்து விட்டால் திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்து விடுவார்கள்.

இந்த வருடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய உதாரணம் வைகோ. திமுகவில் உள்ள நண்பர்கள் தொடர்ந்த இவரைப்பற்றி எழுதி வந்தார்கள். .

ஆனால் இன்று? திமுக வில் இணைந்து ஸ்டாலினை முதல்வராக்கப் போகின்றேன் என்று சூளுரைத்துள்ளார்.

இன்றைய சூழலில் இந்தியா முழுக்க இப்படித்தான் உள்ளது.

இது போன்ற சூழலில் தான் ஜெயரஞ்சன் அவர்கள் எனக்கு மிக முக்கிய மனிதராகத் தெரிகின்றார்.

YOU TUBE LINK

சென்ற மாத பதிவுகள்

கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

சுப வீரபாண்டியன்

ப சிதம்பரம் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் முதல் பாகம்

பாஜக எதிர்ப்பு போராளிக்குழு சங்கம்

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அரசியல் பார்வை

கடவுச்சீட்டு துறையில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள்

அதிமுக அமைச்சர் வேலுமணி










1 comment:

'பரிவை' சே.குமார் said...

எப்பொழுதுமே நேருக்கு நேர் பேசும் விவாதங்கள் பார்ப்பதில்லை.