Sunday, June 30, 2019

கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு?

கடந்த பல வருடங்களாகவே தமிழக ஆட்சியாளர்கள் கட்சி பாரபட்சமின்றி ஒன்றைத் தீவிரமான கடைப்பிடிக்கின்றனர். அதாவது எக்காரணம் கொண்டு முறைப்படி படித்து ஐஏஎஸ் ஐபிஎஸ் பட்டம் வாங்கியவர்களை எந்த அதிகாரப் பதவியிலும் உட்கார வைக்க விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக அவர் தமிழர் என்றால் அவரை கடைசிவரைக்கும் ஏதாவது ஒரு டம்மி பதவியில் உட்கார வைத்து விட்டு "நீ பொத்துனாப்ல சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு போ. வேற எந்த தொந்தரவும் செய்யாதே" என்பது போன்று அவர்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்போதும் இல்லாத அதிசயமாக இந்த முறை (நடந்து முடிந்த தேர்தலின் போது)  தமிழகக் காவல்துறையில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகள் இதனை ஆதங்கத்தோடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வரைக்கும் புகாராகக் கொண்டு போய் உள்ளனர்.

அப்புறம் எதற்கு எங்களுக்குப் படிப்பு, பட்டமெல்லாம்? நாங்களும் பதவி உயர்வின் மூலம் வந்து மாவட்டச் செயலாளர்கள் போல இங்கே பணிபுரியும் அதிகாரிகள் போல இருக்க வேண்டுமா? என்று கேட்டு உள்ளனர்.

தமிழ், தமிழர், தமிழர் நலம் என்று சூளுரைக்கும் அரசியல் தலைகளின் முகம் ஒரு பக்கமாகவும், வால் ஒருபுறமாகவும் இங்கே இருப்பது தான் உண்மையான சமூக நீதி. நமக்குத் தெரிந்து எல்லாம் நாம் இன்னமும் முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணம் பிராமணர்கள் தான் என்று திக, திமுக, முற்போக்குவாதிகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டிவர்கள் சொல்லிக் கொண்டு இருப்பதையே நம் கொள்கை என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.  அப்படியே கொள்கை என்று சொன்னவர்கள் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் என்ன செய்தார்கள்? என்பதனை கீழே உள்ள எதார்த்தங்ளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முடியும். 

அரசியல் கொள்கை வேறு.  அதிகாரத்தில் கடைபிடிக்கும் கொள்கை வேறு.



பார்ப்பன அதிகாரி பி.சங்கரைத் தொடர்ந்து, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்கு பார்ப்பனர்களைத் தேடித் தேடி பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. பி. சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என். நாராயணன் என்று நீடித்த பார்ப்பன தலைமைச் செயலாளர்கள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனது நாம் மட்டுமல்ல, தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியும்தான். முன்னாள் அமைச்சர் க. பொன்முடி ஒரு நீண்ட கட்டுரையையே எழுதி தி.மு.க.வின் கண்டனத்தைத் தெரிவித்தார்.

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் என்ன நிலைமை?

எல்.கே. திரிபாதி என்ற ஒரிசா பார்ப்பனரைத் தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, அவர் ஓய்வு பெற்றபோது இரண்டாண்டுகளுக்கு முன், கே.எஸ்.சிறீபதி என்ற பார்ப்பனர் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது மத்திய அரசிடம் வாதாடி, 6 மாத காலம் பதவி நீடிப்பு பெற்றுத் தந்தது மட்டுமல்ல, தற்போது மாநிலத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது ‘சூத்திரர்’ அரசு. (நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கருக்குத் தண்டனை - தங்கள் விருப்பங்களுக்கு எல்லாம் தாளம் போடும் பார்ப்பனர் சிறீபதிக்கு வெகுமானம்; எப்படி இருக்கிறது சமூகநீதி!)

சிறீபதியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பார்ப்பன அம்மையார்

எஸ்.மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது தி.மு.க. அரசு. இவர்கள் ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்ட போதும், ஏராளமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகளின் சீனியாரிட்டியை புறந்தள்ளியே நியமிக்கப்பட்டார்கள் என்பது வேறு செய்தி!

சங்கர் முதல் மாலதி வரை, தொடர்ந்து ஏழு பார்ப்பனர்களே தலைமைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை. திராவிட இயக்க ஆட்சி என்று கூறிக்கொள்வோர் ஆட்சியில்தான் இந்த சமூக நீதிக்கு விரோதமான போக்கு.

பார்ப்பனர் ஜெயலலிதா நான்கு பார்ப்பனர்களை உயர் பதவியில் அமர்த்தினார். அடுத்து வந்த “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி மூன்று பார்ப்பனர்களை வெட்கமின்றி தலைமைச் செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு என்று கேட்க விரும்புகிறோம்.

‘வாழும் பெரியார்’ கலைஞர் தலைமையிலான “சூத்திர” ஆட்சியைப் பாதுகாப்பதே தங்கள் கடமை என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அநீதியை எதிர்த்து வாய் திறக்காதது ஏன்?

தலைமைச் செயலாளர் மட்டுமல்ல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த பல தமிழர்கள், கல்வியாளர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன அம்மையார் மீனா என்பவரை நியமித்திருக்கிறது இந்த சூத்திர ஆட்சி!

நிதி, உள்துறை, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளின் செயலாளர்களாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்காத ‘நவீன தீண்டாமை’யும் கோட்டையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பத்திரிகைகள் எழுதும்போது மட்டும், சூத்திரன் என்பதால்தான் தன்னைப் பார்ப்பன ஏடுகள் பிராண்டுகின்றன என்று கலைஞர் கருணாநிதி புலம்புவது வாடிக்கை. தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகைகளை பார்ப்பான், பார்ப்பான் பத்திரிகை என்று பக்கத்துக்கு பக்கம் எழுதும் ‘முரசொலி’யைக் கேட்கிறோம். இந்த சமூகநீதிக்கு விரோதமான பார்ப்பன நியமனங்களை என்னவென்று அழைப்பது?

5 comments:

ஜோதிஜி said...

கட்டுரையின் இறுதிப் பகுதி கீற்று இணைய தளத்தில் வந்த பெரிய கட்டுரையின் சுருக்கமான முக்கிய பகுதியிது.

kamalakkannan said...

உமாசங்கரின் மத பிரச்சாரத்தில் நேர்மையினை எங்கு கண்டீர்கள் ,சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பில் கூட மத பிரச்சாரம் செய்ததாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.உள்ளூர் அரசியல் செல்வாக்கு + பணம்தான் மீனா பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் ஆகா இருந்ததற்கு காரணம்.

ஜோதிஜி said...

உமாசங்கர் தொடக்கத்தில் இயல்பாகவே இருந்தார். அவரை பைத்தியம் போல (மத பைத்தியம்) ஆக்கியத்திற்கு முழுப் பெருமையும் கலைஞரையே சாரும். தன்னைச் சார்ந்து இருக்காத எவரையும், தனக்கு சாதகமாக இல்லாமல் இருக்கும் எவரையும் கலைஞர் மனிதராகக் கூட மதிக்க மாட்டார் என்பது மேல் மட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். தன்னை எதிர்க்கின்றார்? அவரால் தன் இமேஜ் காலியாகிவிடும் என்று எம்ஜிஆர் நினைத்தால் உடனே அவரை விலைக்கு வாங்கி விடுவார். கண்ணதாசன் அரசவைக்கவிஞர் ஆன கதையைப் படித்துப் பார்த்தால் எம்ஜிஆர் குணாதிசியம் தெரியும். கலைஞர் பணம் குறித்த பார்வை உலகே அறிந்தது.

Anonymous said...

இட ஒதுக்கீடு, சமூக நீதி, ஐஏஎஸ் ஐபிஎஸ் பட்டம் எல்லாவற்றையும் ஒரே அடியில் காலி செய்யும் வகையில் லேட்டரல் என்ட்ரி என்ற பெயரில் மத்திய அரசு நேரடியாக ஜாயிண்ட் செகரட்டரி பதவிக்கு தனக்கு வேண்டியவர்களை நியமிக்க ஆரம்பித்து விட்டது. இதன் மூலம் தங்களுக்கு வேண்டிய ஆர் எஸ் எஸ் சார்புடைய அரசு உயரதிகாரிகளை கொண்டு அதிகார வர்க்கத்தை நிரப்பி விட்டால் நாளைக்கு ஆட்சியை இழந்தாலும் பாஜக தனது செல்வாக்கை இழக்காது. இதை பற்றியும் எழுதுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

இது தொடர்ந்து கொண்டே தானே இருக்கிறது அண்ணா...