Saturday, August 31, 2019

ப சிதம்பரம் எனும் சமுத்திரம்...

முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், தற்போதைய பாரளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர், தமிழக காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு அவரைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வந்து கொண்டேயிருக்கின்றது.  

மூன்று முக்கிய செய்திகள்.

********

ப_சிதம்பரம் எனும் சமுத்திரம்...

இன்னைக்கு ப.சி. குடும்பத்து மேல கைவெச்சத அவ்ளோ சாதாரண நிகழ்வா நினச்சுராதீங்க. ப.சி.யோட கைநீளத்தபத்தி தெரிஞ்சவங்களுக்கு, இது எவ்ளோ பெரிய வரலாற்று சம்பவம்னு தெரியும்.

ரா.ஜெ.மலானி, கபில்சிபல், அபிஷேக் சிங்வி, பிரசாந்த்பூஷன், நாரிமன்னு அத்தன பேரோட மொத்த கிரிமினல் மூளையையும் தாங்குன ஒத்த உருவம்தான் பா.சி. பொருளாதாரத்துல மன்மோகன் என்ற குருவை மிஞ்சிய சிஷ்யன். கிட்டத்தட்ட 3/4 சுப்ரமணிய சுவாமி. எனக்கு தெரிஞ்சு... அரசாங்கத்த தவிர்த்து, இந்திய பிரஜைகள்ல மிகப்பெரிய பேக்ரவுன்ட் இருக்குற ஒரே தனிநபர் பா.சி.தான். (சுப்ரமணிய சுவாமியோட லெவல் வேற )

நேஷனல் ஹெரால்டு கேஸில்... சோனியாவயும் ராகுலையும் மிகச்சாதாரணமா கோர்ட்படி ஏறவைத்த... மொஸாத், சிஐஏ போன்ற சர்வதேச உளவு அமைப்புகளுக்கு, லீகல் அட்வைஸரா இருக்கக்கூடிய தகுதியுள்ள '#சுப்ரமணிய #சுவாமி' ன்ற சாணக்யனுக்கே பா.சி.யின் குட்டியை வளைக்க இவ்ளோநாள் ஆயிருக்குன்னா... பா.சி ன்ற அமைதியான சமுத்திரத்தோட ஆழம்புரியும்.

பெரும்பாலும் கிங் மேக்கராதான் இருப்பார். காங்கிரஸ் கட்சியில் என்ன பிரச்சனைனாலும், பா.சி. யின் தீர்வுதான் வேதவாக்கு. சோனியாவுக்கு இவர் மேல அபாரநம்பிக்கை. அகமதுபடேலும், பாசி.யும் சோனியாவின் இருகாதுகள். இவங்க ரெண்டுபேர் சொல்றது மட்டும்தான் அவங்க காதுல விழும். தமிழக காங் தலைவர்கள், அவங்களாவே பா.சி.யை தங்களுக்கு நிகரான ஒரு எதிரியா கற்பனபண்ணி கம்பு சுத்துவாங்க. அவரு இவங்கள மனுஷஜந்தா கூட மதிக்கமாட்டாரு. பாக்கப்போனா... "போனா போகுது, இந்தப் பயல தமிழ்நாடு காங் தலைவரா போட்டு விடுங்க. அப்பதான அந்த வீணாப்போன பயலுகள சமாளிக்க முடியும்" ன்னு பா.சி தான் தலைமைக்கு சொல்லி இருப்பாரு. மேலும் காங் கட்சியின் மேலிடத்துக்கு, பா.சிக்கு தமிழக காங் தலைவர் பதவி தர்றதுன்றது... சிற்பிய கூப்ட்டு அம்மிக்கல் கொத்தத் சொன்ன கதைதான்.

2009-பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில், பா.சி யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராஜகண்ணப்பன் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார். உள்துறை அமைச்சராக இருந்த பா.சி-யும் தோல்வி முகத்தோட வீட்டுக்கு போய்டார். ஆனா ஆட்சில இருந்த, அடுத்தும் ஆட்சி அமைக்கபோகும், காங் கட்சியின் பவர்புல்லான மேலிடம், ''அமைச்சரவையில் பா.சி கட்டாயம் இடம் பெறணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க" ன்னு உத்தரவு போட்டுச்சு. அதுக்கு அப்புறம்தான் 3,354 ஓட்டுல பா.சி வெற்றி பெற்றதா நடுராத்திரில அறிவிச்சாங்க. அப்புறம் பிரணாப் முகர்ஜி மூலம் ஜெ சமாதான படுத்தப்பட்டார். அந்த தேர்தலில் எத்தனையோ, காங் கட்சியின் மிகப்பெரிய தலைகள் வெற்றி பெற்றது, தோற்றது. ஆனால் பெரிதாக யாரையும் கண்டு கொள்ளாத, எண்ணிக்கயை மட்டும் பார்த்த காங் மேலிடம், பா.சி க்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததுலயே, காங்கிரஸில் பா.சி.ன் பவர் என்னன்னு புரியும்.

ராஜீவ் காலத்தில் இருந்து, நேரு குடும்பத்தை பின்புலத்தில் இருந்து, பாதி இயக்குவதே பா.சி.தான். (சஞ்சய் தவிர்த்து, மொத்த இந்திரா குடும்பமும் வெந்தும் வேகாத கேஸ்தான்) வீட்டுக்கு வாங்குற காய் கறியிலிருந்து நாட்டு பட்ஜெட் கணக்கு வரைக்கும் சொந்தமூளை கணக்குதான். ஆயிரகணக்கான பக்கத்த, எந்திரன் 'சிட்டி பாபு'வ விட்டு தேடினாலும், ஒரு தப்பான கணக்க கண்டுபிடிக்க முடியாது. அத்தனை துல்லியம். இப்பகூட மகனின் குளறுபடிகள் தான் மாட்டி விட்டிருக்கு.

'சிபிஐ', 'அமலாக்கத் துறை'ன்ற அதிகார வர்க்கம் வேணும்னா.. 'கும்கி'க்களா இருக்கலாம். ஆனா... இதுவரை அந்த 'கும்கி'களுக்கு பா.சி.ன்ற காட்டுக் கொம்பன் மேல கைவெக்குற தைரியம் வந்ததில்ல. காரணம்... ஒருவேள கைவெச்சு மிஸ்ஸாகி, கொம்பன் தப்பிச்சுட்டாாா... 😮 கும்கிகளின் சோலி முடிஞ்சது. குழி தோண்டி புதைச்சுட்டுதான், கொம்பன் மறுவேல பார்க்கும். ஆனா... இப்ப கும்கி மேல உக்காந்திருக்குற, #மோடி ன்ற ஒத்தபாகனுக்கு ஈடு குடுக்கணும்னா... நாலஞ்சு கொம்பன் சேரணும். அதனாலதான் பா.சி. கொம்பன் அடக்கி வாசிக்குது.

எல்லா வழிகளையும் அடைச்சிட்டு, பக்காவா ஸ்கெட்ச் போட்டு காங்கிரஸோட ரெட்காயின தூக்கியாச்சி. இந்த பொன்னான நொடியிலிருந்து காங்கிரஸின் நிஜஅழிவு ஆரம்பம் !!! 

••••••••

ஒரு வீரன் எப்போது தன் எதிரியின் பலத்தை அறிந்து மதிக்கிறானோ அப்போதே அவன் வெற்றி ஆரம்ப்மாகிறது. சிதம்பரம் சாதாரண எதிரியல்ல, அவர் குருவும், கொம்பன் சுப்ரமனியன் சாமியே அசைக்க முடியாத ஆலமரம். அவசரப்படாத மோடி கைவைத்தது அந்த கொம்பாதி கொம்பனின் மீது.

இதில் மோடி தோற்பாரே யானால் சிதம்பரம் வீறுகொண்டு எழுவார், வீழ்வாரேயானால் தற்கொலை கூட சாத்தியம். ஏனெனில் அவர் பரம்பரை அண்ணமாலையை தோற்றுவித்த பரம்பரை. மானம் கெட்டபின், மதி கெட்டு வாழ அந்த ராஜ கௌரவம் இடம் கொடுக்காது..

வலது கை சிதம்பரத்திற்கு பின்பு இடது கை அகமது பட்டேல்..

அடுத்து வதரா..

செஸ் ஆட்ட்த்தில் கடைசியில் தான் நிர்மூலமாக்கப்பட்ட ராஜாவாகிய சோனியா..

இது செமி ஃபைனல், இதில் வெற்றி பெற்றால் சோனியா நாட்டைவிட்டு ஓடலாம். இந்தக்குறி அந்த ஃபைனல் இலக்கின் ஆரம்பமே..

இப்பேர்பட்ட ஒரு ராஜதந்திரிகம் இந்தியாவிற்கு பயன்படாமல் போனது விதியே...

•••••••••••••••••

வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்த ஆலையை நிறுவ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின்படி அவர்கள் நஷ்ட ஈடாகக் கேட்ட தொகை 38000 கோடி ரூபாய்.

வாஜ்பாய் அரசு ஹரீஷ் சால்வேயை இந்தியாவின் சார்பில் வாதிட இந்த வழக்கிற்காக நியமித்தது. இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய குல்பூஷன் ஜாதவிற்காக ICJ இல் வாதிட்டு ஓரளவு நல்ல பலனையும் கண்டிருப்பவர்.

இப்போது நம் என்ரான் கதையில் ஒரு திருப்பம். அதாவது இந்தியாவிற்கு எதிராக என்ரான் நிறுவனம் வாதிட நியமித்தது.. வேறு யாருமில்லை ஜெண்டில்மேன்.. நம் ப.சிதம்பரத்தைதான். நம் தேசத்திற்கு எதிராக என்ரான் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட ஒப்புக் கொண்டவர் இதே மஹானுபாவர்தான்..!

சில காலங்களுக்குப் பிறகு..சோனியாவின் UPA ஆட்சியைப் பிடித்தது. ப.சிதம்பரம் கேபினெட் மினிஸ்டரானதால்.. என்ரான் கம்பெனிக்காக அவரால் வாதிட முடியாமல் போனது. ஆனாலும் இவரே அந்த நிறுவனத்தின் லீகல் அட்வைஸராகத் தொடர்ந்தார். அதனால் தனக்கு ஏற்றபடி வழக்கையும் தன் சௌகரியத்திற்கு மாற்றவும் இவருக்கு பதவியும், அதிகாரமும், சாதுர்யமும், சந்தர்பமும் இருந்தது.

இதற்கெல்லாம் மேலாக உடனடியாக ப.சிதம்பரம் செய்த காரியங்கள்..

🚩ஹரிஷ் ஸால்வேயை என்ரான் வழக்கில் இந்தியாவிற்காக வாதிடுவதை தடுத்தார். அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு காவார் குரோஷி என்பவரை நியமித்தார்.

🚩இந்த காவார் குரோஷி யாரென்று தெரிகிறதா..? இவர் ஒரு பாகிஸ்தான் வக்கீல் தற்போது குல்தீப் ஜாதவிற்கு எதிராக ICJ இல் வாதிடுபவர். இவரைத்தான் ஹரிஷ் சால்வேக்கு மாற்றாக ப.சிதம்பரம் நியமித்தார்.

🚩அந்த வழக்கின் முடிவு அனைவரும் அறிந்ததே. இந்தியா வழக்கில் தோற்றது. மீதம் சரித்திரமானது. காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது. 

•••••••••••••••

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் புகாருக்கு பெரும் பின்னணியாக இருந்தவரே சிதம்பரம்தான். 2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். ‘ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்’ என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான்.

இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே,மாடியில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.

இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, ‘ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர்.

2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், ‘நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா’ என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, ‘வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்’ என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்... கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க.

கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிப்போம்’ என்கிறார்கள் கலைஞரின் குடும்ப வட்டாரத்தில். இந்த சூழலில்தான் சிதம்பரம் விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவர் சட்ட வல்லுநர். தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படினு அவருக்குத் தெரியும்’ என்று பூடகமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்.

காட்சி வடிவில்.......

P. Chidambaram Denies Allegations In INX Media Case, Says He Was Not Running Away | Breaking


வாசிக்க.........



தெற்கிலிருந்து ஓரு சூரியன்

'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..! |Vijayabaskar ...

நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019

என் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இ...

தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி...

மோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்?

இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்...

நரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)





Thursday, August 29, 2019

ப. சிதம்பரம் கைது

இன்று காட்சி ஊடகங்களில் (ஆகஸ்டு 23) தொடர்ந்து ஒலிக்கப்படும் ஒரே பெயர் ப.சிதம்பரம். அவரைப் பற்றி என்ன தான் பாஜக குற்றச்சாட்டு சுமத்தினாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் ஓட்டுப் போடும் பொது ஜனத்திற்கு எட்டப் போவதில்லை அல்லது புரியப் போவதில்லை. காரணம் இவையெல்லாம் பொது மக்களைப் பாதிக்காத அல்லது புரிந்து கொள்ள முடியாது ஹை கிளாஸ் ஊழல் வகையைச் சேர்ந்தது.

பத்திரிக்கைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே தலை சுத்திப் போகும். எங்கிருந்து தொடங்கி எங்கே முடியும்? என்பதனை எத்தனை வரை வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத கண்கட்டி வித்தையான ஊழல் அது.

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தின் மூளையாக, இருதயமாக இருப்பது இரண்டு துறைகள். ஒன்று உள்துறை மற்றொன்று நிதித்துறை.

இன்றைய சூழலில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்தாலும் அவர் ப. சிதம்பரத்தை ஒப்பிடும் போது எல்கேஜி லெவல். அதேபோல உள்துறையில் இருக்கும் அமித்ஷா ப்ரிகேஜி லெவல்.

காரணம் தந்திர பூமியான டெல்லி அரசியலில் படிப்படியாக ஏறியவர் ப.சி. வட இந்தியர்கள் அதிகாரம் செலுத்தும் இடத்தில் தன்னை ஆழ ஊன்றியவர் ப.சி. நிதித்துறை மற்றும் உள்துறையின் நாடி, நரம்பு மட்டுமல்ல இரத்த மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளை ஊடுருவி தன்னை நிரூபித்தவர் ப.சி.

மொழிப்புலமை, அறிவுப்புலமை மட்டுமல்ல தன் செயல்பாடுகளில் வாயிலாகவும் தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்டவர் ப.சி.

எங்கே தவறினார்?

பள்ளிக்கூடம் படிக்கும் சமயங்களில் இருந்தே அவரை மிக அருகிலிருந்து கவனித்தவன் என்ற முறையில் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தவர் என்பதனை மறைக்க விரும்பவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள விசேட நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து உள்ளேன். உரையாடியதில்லை. அப்போது அரசியல் குறித்த புரிதல் இல்லை. வட்டார வழக்குச் சொல்லில் தான் இயல்பாகப் பேசுவார்.

அனைவருடனும் பழகுவார். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அசிங்கமான அரசியல் கலாச்சாரம் எதையும் ஆதரிக்கவும் மாட்டார்.

இன்றைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தனக்காக நான்கு உதவியாளர்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ப.சி வுக்கு உதவியாளர்கள் இல்லை.

இருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டலாம். அவர்கள் அனைவரும் எடுபிடி வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார். தன் அதிகாரத்தை வேறு எவரும் பயன்படுத்த அனுமதிக்கவே மாட்டார்.

திருச்சி வரைக்கும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் வருவார். அவர் பிறந்த ஊரான கண்டணூர் வரைக்கும் பெயருக்கென்று ஒரு கூடுதல் வாகனம் பின்னால் வரும். காவல்துறை பாதுகாப்பு பெரிதாக இருக்காது. உள்துறை, நிதித்துறை வரைக்கும் வந்த போதும் கூட இந்த நடைமுறை மாறவில்லை.

தன்னை எவரும் எதிலும் சிக்க வைத்து விடக்கூடாது. தன் மேல் எந்த கறையும் பட்டுவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் தன் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்திருந்தார். எந்த சிபாரிசும் யாருக்காகவும் செய்ய மாட்டார். தேவையில்லாத விசயங்கள் தன்னிடம் வரும் போது நாசூக்காக நகர்ந்து விடுவார்.

ப. சி கையாண்ட அரசியல் வாழ்க்கை தமிழக அரசியலுக்குத் தொடர்பில்லாதது. இன்னமும் செல்லப்போனால் அது அமெரிக்கா மற்றும் மேற்கித்திய நாடுகளில் பாணியானது. நாகரிகம். நாசூக்கு. எளிமை சார்ந்த கலவையாக இருக்கும்.
இவையெல்லாம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையெடுப்பதற்கு முன்பு வரை இருந்தது.

மகன் தலையெடுத்த பின்பு அவர் வாழ்க்கை வேறு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றது. இப்போது ஒன்றை நாம் நன்றாகக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். தற்போது நீங்களும் நானும் பார்த்துக் கொண்டிருக்கும் பஞ்சத்திற்கு வந்து அரசியல் மூலம் கொள்ளையடித்து சம்பாரித்து முதல் தலைமுறை செல்வந்தர் அல்ல ப.சி.

அவர் பிறப்பதற்கு முன்பு மூன்று தலைமுறைகளும் தமிழக அளவில்,பக்கத்து மாநிலங்களில் நிரந்தரமாகக் காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்த சொத்துக்கள் ஏராளம். ப.சி வின் தாத்தா முதல் வாழ்க்கை தொடங்கிய ப.சி வாழ்க்கை என்பது வரைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் அடுத்த மூன்று தலைமுறைகள் சேர்த்து சொத்துக்களோடு சேர்க்க முடியாது அளவுக்குத்தான் இருந்தது.

குலம், கோத்திரம், பராம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், அதிர்ந்து பேசாத நாகரிகம் என்று பர்மா, சிங்கப்பூர், இலங்கை என்று தொடங்கி கர்நாடகாவின் சிக்மங்களூர் வரைக்கும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இன்னமும் உள்ளது.

இதையும் மீறி, இவையெல்லாம் போதாது என்று மகன் உருவாக்கிய வாழ்க்கை இன்று ஓடிவிட்டார் சிதம்பரம் என்று ஊடகங்கள் அலறும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அவர் 35 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசில் முக்கிய நபராக இருந்துள்ளார். ஆனால் தன்னை ஜெயிக்க வைத்த சிவகங்கை மக்களுக்கு ஒரு பிட்டு கூட எடுத்துப் போடவில்லை என்பதனை விட அதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பது தான் உண்மை. உயர்தர கணவான் வாழ்க்கையை விட்டு அவர் கடைசி வரைக்கும் கீழே இறங்கி வரவே இல்லை. அரசியல் என்பது அலுவலகம், கோப்பு, எழுத்துக்கள், திட்டங்கள், திட்டமிடுதல் என்பதாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தவர்.

ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று பெயர் எடுத்து இருக்கலாம். உள்ளூரில் அவரால் ஆயிரம் பேர்களை ஒன்று திரட்டும் சக்தி இல்லாதவராக இருந்த போதிலும் காலம் போட்ட கோலத்தில் பிரதமர் பதவிக்கு மிக அருகே வந்தவர். இன்று அதே காலம் அவரை அலங்கோலமாக்கியுள்ளது.

பாஜக ப.சி வை எப்படிக் கையாள்கின்றது?

1. அரசியலில் இமேஜ் மிக மிக முக்கியம். ப.சி உள்ளூரில் செல்வாக்கு இல்லாதவராக இருக்கலாம். ஆனால் உலக அளவில் அவர் உருவாக்கிய தாக்கம் அதிகம். இந்தியா முழுக்க நடுத்தரவர்க்கத்திற்கு மேலே உள்ள மக்கள் அவரைக் கண்டு ஆச்சரியப்படுபவர்கள் அதிகம். அவரை கவனத்துடன் பார்ப்பவர்களும் உண்டு. அந்த இமேஜ் காலி செய்வது பாஜகவின் முதல் திட்டம்.

2. இதுவரையிலும் தான் சார்ந்த வழக்குக்காக 27 முறை வாய்தா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்ட நடுராத்திரி 1 மணிக்குக்கூட எழுந்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்கிறார்கள். சிதம்பரம் வெளியே இருக்கலாம் என்கிறார்கள். சட்டத்தின் சந்து பொந்துகள் அனைத்திலும் யாரோ ஒருவர் மெர்குரி விளக்குப் பொருத்தி வெளிச்சம் பாய்ச்சுக் கொண்டேயிருக்கின்றார்கள். முதல் ஐந்தாண்டு பாஜகவின் ஆட்சியில் இதை உடைக்க முடியவில்லை. முயன்றார்கள். ஆனால் தோல்வியைத் தழுவினார்கள். நீதிமான்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலம் காங்கிரஸ் வந்து விடும் என்றே நம்பினார்கள். மக்கள் காங்கிரஸ் நட்டுக்குத்தலாக ஆற்றின் நடுவே மாற்றிக் கொண்டு விடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது முன்ஜாமீன் இல்லை என்று பம்முகின்றார்கள்.

3. காங்கிரஸ் ப. சி போன்ற புத்திசாலிகளைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தாலும் எவரும் சிக்க மாட்டார்கள். காங்கிரஸ் இந்த முறை உருவாக்கிய தேர்தல் அறிக்கை ப. சி உருவாக்கியது தான். ராகுல் பேசிய சிறப்புத் திட்டங்கள் என்ற கண்ணாமூச்சி அனைத்தும் ப.சி மூளை உதித்தது தான். என்ன ஆச்சு? விழலுக்கு இறைத்த நீராயிற்று? ப.சி விலக நினைத்தாலும் காங்கிரஸ் அவரை விட முடியாத சூழலில் தான் உள்ளது.

சோனியாவிற்கும், ராகுலுக்கும் என்ன தெரியும்?

அது ப.சி விற்கு நன்றாகவே தெரியும். அதைவிடக் கோபுரத்தைத் தாங்கும் எந்த கல்லை உருவினால் சரியும் என்பது பாஜகவிற்கு நன்றாகவே தெரியும்? மேலும் தங்கள் திட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களை ப.சி போன்றவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் பகிங்கிரப்படுத்தும் போதும் உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று மக்கள் முழித்துக் கொண்டு விட மாட்டார்களா? இப்போது பாஜக ப.சி விசயத்தில் செய்து கொண்டிருப்பது அனைத்தும் இனி அவர் பொதுவெளியில் எது பேசினாலும் எடுபடாமல் இருப்பதற்கான ட்ரையலர்.

அதெல்லாம் சரி?

இத்தனைக்கும் காரணமான மகனின் எதிர்கால அரசியல் வாழ்க்கை எப்படியிருக்கும்?

போங்கடா நீங்களும் அரசியலும் என்று அப்பாவிற்குப் பின்பு வெளிநாட்டில் செட்டிலாகி விடுவார்.

காரணம் ஆயிரம் பத்தாயிரம் கோடி என்றால் கூட பரவாயில்லை. கால்குலேட்டர் கதறும் அளவிற்குச் சேர்த்த சொத்துக்களைப் பார்ப்பாரா? மக்கள் சேவை செய்வாரா?

காட்சி வடிவில்...........




ப.சிதம்பரம், அவரது குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகள் என்ன...? பின்னணி...?



வாசிக்க......


ஒரே நாடு. ஒரே ரேசன் அட்டை

பாஜக அடித்த முதல் சிக்ஸர்


ஆறாவது தலைமுறையில் நாம் நினைக்கப்படுவோமா?


உங்கள் வீட்டில் இரட்டையர்கள் இருக்கின்றார்களா?


நீட் 2019 - ஆள் பிடித்து தரும் அதிகாரபூர்வ அமைப்பு...


உங்கள் பெயர் என்ன?


கழகம் வேறு. கல்வித்தந்தையர்கள் வேறு.


திமுக கல்வித்தந்தையர்கள்?


உயர்ந்த மனிதர்கள் 2


உயர்ந்த மனிதர்கள்


Monday, August 26, 2019

உதயநிதி ஸ்டாலின்



வாசித்த செய்தி:


திமுக இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் கூட்டம் பெரும் பொருட் செலவில் 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருக்கிறது.

ஏற்கனவே முரசொலி பவளவிழா மலரை ரூ.3000 விலை வைத்து வெளியிட்டவர் அதன் நிர்வாக இயக்குனர் உதயநிதி. அந்த பவளவிழா மலரை திமுகவினரில் 99.9 சதவிகிதத்தினர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். (அதே ஆண்டு பவளவிழா கொண்டாடிய தினத்தந்தி, பவளவிழா மலரை வெறும் ரூ.75க்கு வெளியிட்டு ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது)

மிட்டா மிராசுதாரர்களின் கட்சியாக இருந்த நீதிக்கட்சி, ஒரு கட்டத்தில் வெகுமக்களால் புறக்கணிக்கப்பட்டு, தலைமையேற்க ஆளில்லாமல் தத்தளித்து, குத்துயிரும் கொலையுயிருமாக பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரியாரும் அண்ணாவும், பஞ்சப்பறாரிகளைக் கொண்டு அந்தக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தனர் என்பது வரலாறு.

ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு , இளைஞரணியினருக்கு இந்த வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியம் !!!

**************

எதைச் செய்தாலும் நம்மவர்களுக்குக் குறை காண்பதே அன்றாடக் கடமையாக ஆகி விட்டது குறித்து வருத்தமாக உள்ளது. குறிப்பாக உதயநிதி குறித்து தீவிர அபிமானிகள் கூட வருத்தப்படுகின்றார்கள்.

காசு விசயத்தில் குறியாக இருப்பதாகக் கவலை தெரிவித்து எழுதுகின்றார்கள்.

அவர் அடிப்படையில் ஒரு முதலாளி. "கஷ்டப்பட்டு முதலீடு போட்டு" ஸ்னோபவுலிங் தொடங்கினார். அது லாபமா? நட்டமா? அது நமக்குத் தேவையில்லை.

தொழில் முனைவோர். தன் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதல் தான் இன்று அவரை திரைப்பட உலகில் உள்ள வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக, நடிகராக, இடையிடையே பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிதி கொடுத்து (வட்டிக்குத்தான்) உதவும் கண்ணியமிக்க மனிதராக சமூகத்தில் அடையாளம் காட்டியுள்ளது.

ஏற்கனவே முரசொலியில் சின்னக்குத்தூசி அய்யாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்துச் சென்றவர்களுக்குக் கரியைப் பூசினார் என்று வேறு வருத்தப்பட்டார்கள். அதன் பிறகு முரசொலி மலர் விற்பனை, அதன் விலை குறித்து கவலையுடன் சொல்கின்றார்கள். கடைசியில் தற்போது ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டத்தை நடத்துகின்றார் என்று புழுதிவாரி தூற்றுகின்றார்கள்.

தொழில் முனைவோர் என்பவர்களுக்கு, ஒரு தொழில் நிறுவனத்தை நடத்துபவருக்கும் முதன்மையான எண்ணம் என்னவாக இருக்கும்? லாபம். ஆமாம் ஊரில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எதைத் தொட்டால் லாபம் வரும்? எங்கிருந்து அந்த லாபம் வரும்? என்பதனை நன்றாக அனுபவம் வாயிலாக உணர்ந்தவர் உதயநிதி. அதற்குக் கட்சி தான் கிடைத்ததா? என்று பெரியாரில் இருந்து கருத்துரையாளர்கள் கவனமாகச் சொல்லிக் கவலைப்படுகின்றார்கள்.

வீரமணி குறித்தே பெரியார் கவலைப்படாமல் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்? அண்ணாவுக்கு இது குறித்தெல்லாம் அதிக அக்கறையிருக்காது. அவர் உடல் நலம் குன்றி அமெரிக்கா செல்லும் போதே அவருக்குப் புரிந்து விட்டது. எல்லாமே கை மீறி விட்டது என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்தது வரலாற்றுப் பக்கங்களில் உள்ளது.

ஆனால் உதயநிதி குறித்து கலைஞர் நிச்சயம் மகிழ்ச்சியடையத் தான் செய்வார்.

காரணம் கலைஞருக்கு மட்டும் தான் தெரியும். கொள்கை எல்லா இடங்களிலும் செல்லாது. ஆனால் காசு சகல இடங்களிலும் செல்லும் ஆயுதமென்பது.

உதயநிதியை வாழ்த்துவோம்.

காட்சியில் பார்க்க