Thursday, December 30, 2010

சூட்டைத் தணித்த புகைப்படங்கள்

நாளைக்கு வருகிற இரவு தான் இந்த வருடத்தின் கடைசி நாளாம்.  போன வருசம் இந்த நாளில் நாம் என்ன எழுதினோம் என்று போய் பார்த்தால் ஈழத்தை வைத்து அரசியல் வகுப்பு எடுத்ததை புரிந்து கொண்டு பொத்துனாப்ல அப்படியே திரும்பி வந்துட்டேன்.  

அந்தச் சூடு குறைய இரண்டு மாதம் ஓய்வு எடுத்து கொஞ்ச நாள் எந்த புத்தகத்தையும் படிக்காம இருந்தேன். இப்பத்தான் புத்தக வேலைக்காக மறுபடியும் உள்ளே கொஞ்ச கொஞ்சமா மூழ்கிக்கிட்டு இருக்கேன். 

இந்த மாய உலகத்திலிருந்து விடுபட்டு வந்தும் இன்னமும் இந்த தேவியர் இல்ல வண்டி அச்சு உடையாம ஓடிக்கிட்டே தான் இருக்கு.

இந்த வருடம் முழுக்க உத்தேசமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்கிற ரீதியில் போட்டு தாக்கியிருப்பதை கறம்பக்குடி கணக்குபுள்ள இப்பத்தான் கூப்பிட்டுச் சொல்ல ஒரு ஓரமாய் துடிதுடியாய் துடித்துக் கொண்டுருக்கிறார்.  பூமிப் பந்தில் அந்தப்பக்கம் இருந்து கொண்டு இந்த காட்டுப் பயபுள்ள என்னோட தூக்கத்தையெல்லாம் கெடுத்துகிட்டு இருக்காரு. 

இந்த வருடம் முழுக்க ஒரே மண்டைச் சூடு. இந்த சூட்டைத் தணிக்கவே இந்த படங்கள்????????????????

ஈழம், பிரபாகரன்,திருப்பூர், சாயம், மாயம், காம்ம், ஊரு, வெவசாயம், அந்நியச்செலவாணி, நம்ம அரசியலில் உள்ள களவாணிப் பயலுக , நித்தி, டாலர், தொடர்கதை என்று ஓட்டமாய் ஓடிவந்து மூச்சுவாங்கி இன்று இந்த வருடத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் நுரை கக்கிப் போய் நிற்பது புரிகின்றது.  

குழந்தைகளுக்கு பள்ளிக்கூட விடுமுறை மாதிரி இந்த பதிவுலக தொடர்புகளில் இருந்து இடையே இரண்டு மாத விடுமுறை கொடுத்து மாயப்பித்தையும்  போக்கிக் கொண்டாகிவிட்டது. 

கடைசியாக இந்த வருடத்தில் மறக்கமுடியாத அனுபவம் தமிழ்மணம் நட்சத்திர வாரம்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் பரவாயில்லப்பா என்று சென்னைத்தங்கம் சொன்னதாக இன்று மாலையில் உரையாடிய தம்பி சொன்னார். 

தலைப்பைப் பார்த்து வெறியோட வந்தவுங்க அப்படியே ஓரமா உட்காருங்க.  ஊரு, ஓலகம், நல்லது கெட்டது, பதவிய வச்சு திருட்டுத்தனம் செய்றவுங்க, எந்தலைவர், உன்னோட தலைவர் என்று கூறுகட்டி நிக்குறவுக, திருந்துங்கப்பான்னு சொல்றவுக என்று எந்த பாரபட்சம் பார்க்காமல் இந்த படத்தையும் நம்ம வசனத்தை ஒரு கைதியின் டைரிகுறிப்பா மனசுல வச்சுக்கிட்டு தூக்கி வந்த அறுவாளை அப்படி ஓரமா வச்சுட்டு படிச்சுட்டு நகர்ந்து போயிடுங்க.  

அடுத்தவுக எப்படிங்றத விட நாம எப்படி இருக்குறோம்? தமிழ்மண ஓட்டுக்கு அடிச்சுகிட்டு இருக்றோம்?  தேர்தலில் ஒவ்வொரு தடவையும் ஓட்டு போடுறோமான்னு மனசுக்குள் கேட்டுட்டு எப்போதும் போல கூகுள் பஸ்ஸில் கும்மியடிப்போம்.

நாம நல்லாயிருந்தா தானே இன்னைக்கு விக்கிற கிலோ 52 ரூபாய் தக்காளியை வாங்கி ரசமாவது செஞ்சு சாப்பிட சத்து வேணும்ல?  

அதனால நம்ம நித்திக்கிட்ட போய் சக்தியைக் கொடுப்பான்னு கேட்காம இந்த படத்தை படத்தைப் பார்த்து இழந்த சக்தியை எடுத்துக் கொள்வோம். 

எனக்கு இந்த படங்களை அனுப்பி வைத்த கோவையில் வாழ்ந்து கொண்டு என்னையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டுருக்கும் மோகன் தாஸ் கரம் காந்தி என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டுருக்கும் சி செந்தில் குமார் அவர்களுக்கு (அவருக்கு நான் எழுதிக் கொண்டுருப்பது இநத் நிமிடம் வரைக்கும் தெரியாது) நன்றி சொல்லி படம் பார்க்க அழைக்கின்றேன். 

நண்பர் தவறு அவர்களே உங்களுக்கு போட்டியாக நானும் வந்துவிட்டேன்.



மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் என்ற பாட்டு உங்களுக்கு தெரியும்தானே?
அவர் பாடும் போது எதை நினைச்சுக்கிட்டு பாடுனாரோ தெரியல?  ஆனால் இந்த மூன்று எழுத்து என்ன சொல்லுதுன்னு பாத்தீகளா?



சீக்கிரம் தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகுது.  இவங்க சொல்ற மாதிரி ஏதோவொன்னு மாறுதான்னு பார்ப்போம்?



கடந்து போன ஊழல் விவகாரங்களை மறந்து விட்டு விரலில் மை வச்ச பிறகு கை நீட்டி வாங்குன காசுக்கு வஞ்சகம் பண்ணாம மறக்காம குத்திட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்கு வந்துடனும்.




சுகி சிவம் தான் ஈழத்தை வைத்தே இந்த நாள் இனிய நாள்ன்னு பாடமே எடுத்து காட்டினாரே?



நாங்க எதையும் யோசிச்சா தானே எழுந்திரிக்க அப்பறம் சொக்கா போட? அப்புறம் எங்கே போய் எதைக் காட்ட?




ஆசிர்வதிக்கப்பட்டவனும (3000 வருடங்களுக்கு முன்பு), கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சபிக்கப்பட்டவனும் இநத் தமிழன் தான்.



தினந்தோறும் காலை தொலைக்காட்சிகளில் சொல்ற ராசிபலன் பார்த்து தான் இந்த குழந்த சொல்ற நம்புற நிலமையில் இருக்கோம்.




ஆனால் இந்தியாவுல மட்டும் அரசியல் கிழடு கட்டைகளுக்குத் தான் கட்டையில போற யோகமே வரமாட்டுது? ஆறு வயது குழந்தை போல சுறுசுறுப்பாயிருந்து அள்ளி அளளி குமிக்கிறாங்க.



நாங்க யாரையும் எப்போதும் வெறுக்கவே மாட்டோம்.  சீமான் சொன்னதுக்கு உள்ளே தூக்கி போட்டாக. இங்கு ஒரு சிங்களப் பயபுள்ள 2,50,000 (இரண்டரை லட்சம்) ஒரு மாச சம்பளம் வாங்கும் அளவுக்கு நாங்க சொதந்திரம் கொடுத்து வச்சுருக்கோம்.




வேற என்ன பண்றது?  நமக்கு நாமே சந்தோஷம் கொடுத்துக் கொள்ளத்தானே அய்யா டாஸ்மார்க் தொறந்து வச்சுருக்காரு?



தமிழ்மண 2010 போட்டியில கலந்து இருக்கியளா?  காய்ச்சல், தலைவலி எது வந்தாலும் மறக்காம எல்லா பதிவுக்குள்ளும் போயிட்டு வாங்க. டச் இருந்தாத்தான் ஓட்டு கிடைக்கும்.




குட்டிப்பயபுள்ள அல்ஜீப்ரா போட்டு இருட்டுக்குள்ள நிக்க பெரிய பயபுள்ள தப்பி பிழைத்து வெளிச்சத்துக்கு போயிட்டாரு பாத்தீயளா?  இதுக்குத் தான் அனுபவமே ஆசிரியர் படிக்கோனும்.



நம்ம சென்னிமலை செந்தில் குமார் சொன்னபடி ஒரு ஓட்டு கூட விழாட்டி பலான பட விமர்சனத்தில் இறங்கிட வேண்டியது தான்.



பள்ளிக்கூட விடுமுறையில இங்கே புள்ளகுட்டிக படுத்துற பாட்டுல நானும் இப்படித்தான் ஒரு ஓரமா உட்கார்ந்துகிட்டு துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு சிரிச்சுக்கிட்டுருக்கேன்.  ஏன் பொஞ்சாதிக்கு மட்டும் இது போன்ற விசயங்கள் புரியமாட்டுது?




ஏற்கனவே தான் இது போல தொங்க விட்டு தவிக்க விட்டு பார்த்துக்கிட்டு தானே இருக்காங்க?  தலைகீழா தொங்கும் போது கடன்காரனுங்க பயந்து போயிடறதும் நல்லாத்தான் இருக்கு.



பத்து நிமிசமா?  தினந்தோறும் பொஞ்சாதி பக்கத்தில் வந்து அமருமே போது பல மணிநேரம் இப்படித்தான் பொழப்பு ஓடுது.



என்னைப் பற்றி யோசித்தே இன்னமும் நான் யார்ன்னு கண்டுபிடிக்க முடியல? அப்பறம் எங்கே போய் மத்தவுகள பத்தி யோசிக்க?




அப்துல் கலாம் என்ன சாதித்தாரோ இத மட்டும் கத்துக் கொடுத்துட்டு போயிட்டாரு.  ஆனா நம்ம பயபுள்ளைங்க கனவ மட்டும் கண்டுகிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தா தானே?



இந்த பிரச்சனைக்காகவே வீட்டுக்காரம்மாவோட எப்போதும் இலவசமா பேசுற சிம்கார்ட்டை அலைபேசி நிறுவனங்கள் கண்டு பிடிச்சு இருப்பாகளே?





அப்படிச் சொல்லனும்னா இந்த வலையுலகத்தில் கொறஞ்சது ஒரு நாளைக்கு  200 பேருக்காவது சொல்லனும்.



நானும் தினமும் நாடார் கடைக்கு மளிகைச் சாமான் வாங்க போயிக்கிட்டே தான் இருக்கேன்.  இரண்டு வருசம் ஆனாலும் ஒரு மில்லி மீட்டர் சிரிப்புக்கூட அவர் உதடடிலிருந்து பார்க்கவே முடியல?




பின்னூட்டத்தில் உண்மைத்தமிழன் எடுத்த முடிவின்படி இனி அவரும் ரவுடி தான் என்று வரும் 2011 முதல் முரசு (முரசொலியில் அல்ல) அறிவிக்கின்றார் செந்தழல் ரவி.



வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்று எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அவங்க அனுபவம் எப்படின்னு கேட்டுட்டு அப்பாலிக்கா அந்த சேவையை தொடர வேண்டும்.



இப்படியே காத்திருந்து காத்திருந்து உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னத்த சொல்ல?



சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்ங்றத யார் சொன்னாங்க?




ஹிட்டு, பிட்டு, பெரபல்யம், சூடான இடுகை, சொறி இடுகை என்று எல்லாவற்றையும் மறப்பதாக இந்த நாளில் உறுதியேற்போம்.


Monday, December 27, 2010

அழுவாச்சி காவியம - கதாநாயகன்

"அந்தாளைப் போய் எப்டிங்க பார்க்கமுடியும்?  அலுவலகத்திற்கு போனாலும் ஓய்வு இருக்கும் போது வீட்டுக்கு வான்னு துரத்தி அனுப்பிடுவாரு. அப்புறம் எங்கே போய் நம்ம பிரச்சனையை பேச முடியும்?"

திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறை முதலாளி சில நாட்களுக்கு முன் மனம் நொந்து சொன்ன விசயம் இது.. அவர் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல. இப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தலை பொறுப்பில் வந்துள்ள இறையன்பு (இ.ஆ.ப) குறித்த விமர்சனமே. காரணம் இந்த முதலாளியின் பள்ளித் தோழர் இறையன்பு.


இறையன்பு இதற்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் இருந்தவர். என்ன காரணமோ? மாயமோ? இப்போது இந்த பதவிக்கு வந்துள்ளார். எழுத்தாளர், சிந்தனையாளர் இதற்கெல்லாம் மேல் நேர்மையாளர்.  மொத்தத்தில் என் பார்வையில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்.  மற்றொரு இ ஆ ப சகாயம் போலவே அரசியல் வியாதிகளின் அக்கிரமத்தை பொறுத்துக் கொண்டு தன்னால் என்ன முடியுமோ? அதை செய்து கொண்டுருப்பவர்.

வினவு தளத்தில் வெளியான திருப்பூர் சாயப்பட்டறை குறித்து நான் எழுதிய விசயங்கள் மேலிடத்திற்கு சென்றதா? இல்லை இது நடந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதா? என்று தெரியவில்லை.  ஆனால் இந்த சமயத்தில் இறையன்பு போன்ற சரியான நபர்கள் இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் டெல்லி நீதிமான்கள் இந்நேரம் பெரிய ஆப்பை மாநில அரசாங்கத்திற்கு சொருகியிருப்பார்கள்.. 

காரணம் ஏற்கனவே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுத் துறை மாசடைந்து இருந்தது. அத்துடன் ஏராளமான குற்றச்சாட்டுகளும் நீதியரசர்கள் கொடுத்த அடிகளும் இருந்தது. திருப்பூரில் மாசுகட்டுப்பாடுத் துறையில் பணிபுரிந்த ஒரு அரசு அலுவலர் தன்னுடைய சொந்த ஊரில் ஒரே வருடத்தில் சேர்த்த சொத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?  எட்டு கோடி ரூபாய். எனக்கு கிடைத்த தகவலின் படி ஒரு நபரே இந்த அளவிற்கு சம்பாரித்து இருக்கிறார் என்றால் அந்த மொத்த துறையின் அளவீடுகளை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன். 

இப்போது சரியான நபர் சரியான பதவிக்கு வந்துள்ளார். என்னைப் போன்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இழப்புகள் அதிகமென்ற போதிலும் இதையும் கடந்து செல்ல மனம் பக்குவமடைந்து விட்டது.

இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு திருப்பூரென்பது அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் நகரம். திருப்பூர் மட்டும் வருடத்திற்கு பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் கொடுத்துக் கொண்டுருக்கிறது. ஆனால் இந்நேரம் 14000 கோடியாக உயர்ந்திருக்க வேண்டும்.  ஆனால் இன்று அவரவர் டவுசர் அவிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நிர்வாணமாக வேறு நிற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

கோடிக்கு ஆசைப்பட்டவர்கள் இப்போது தெருக்கோடிக்கு வந்து கொண்டுருக்கிறார்கள். 

மாநில அரசாங்கத்திற்கு திருப்பூர் டாஸ்மார்க் மூலம் வகை தொகையில்லாத வருமானத்தை வாரி வழங்கிக் கொண்டுருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல தற்போதைக்கு நேபாளம் வரைக்கும் உள்ள இளைஞர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு கேந்திரமாக இந்த திருப்பூர் விளங்கிக் கொண்டுருக்கிறது. எத்தனை கஷ்டப்பட்டாலும் நம்மால் நிச்சயம் மூன்று வேளை சாப்பிட்டு விட முடியும் என்று வந்து இறங்கிக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள். 

ஆனால் இங்குள்ள தற்போதைய ஒவ்வொரு நிகழ்வுகளும் எறிந்து கொண்டுருக்கும் வெளிச்சத்தை போக்கி விடும் போலிருக்கு.

மத்திய அரசாங்கத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில தலைகள் இந்தியாவிற்குள் இருக்கும் பஞ்சு மற்றும் நூலை முழுவதும் எப்பாடு பட்டாலும் வெளிநாட்டுக்கு கடத்தியே ஆகவேண்டும் என்று துடியாய் இருக்கிறார்கள். காரணம் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே பினாமி மூலமாக பதுக்கி வைத்திருக்கும் பஞ்சு மற்றும் நூலை வெளியே தள்ளுவதற்கென்று வசதியாக ஒவ்வொருமுறையும் ஏற்றுமதிக்கான காலக்கெடுவை நீடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

மாநில அரசாங்கம் கோவை மாவட்ட அரசியல் கண்க்குளை வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டுருக்கிறது.. ஆனால் இவர்கள் இருவரையும் விட திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் செய்யும் காரியம் இருக்கிறதே?  அடேங்கப்பா?  நாங்க திருந்தவே மாட்டோம்? என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம் என்பதைப் போலவே நடந்து கொண்டுருக்கிறார்கள். 

நேற்றைய பதிவில் வெளியிட்டுள்ள சாயமே இது பொய்யடா என்ற பதிவை உங்களுக்கு நேரம் இருந்தால் படித்து விட்டு தொடர்ந்தால் கொஞ்சம் உங்களுக்கு புரியக்கூடும். நீங்கள் இதை படித்துக் கொண்டுருக்கும் போது நீங்கள் போட்டுருக்கும் பனியன் ஜட்டி மற்றும் பெண்களின் உள்ளாடைகளை உருவாக்க ஒரு நகரம் எப்படி நரகத்தை உருவாக்கிக் கொண்டுருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.?

ஒவ்வொரு உடைகளுக்குள்ளும் வெளியே தெரியாத ஓராயிரம் அழுகை மற்றும் அழுக்கு உள்ளது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் தான் பணத்தாசை என்பது ஒரு மனிதனை எந்த அளவிற்கு கேவலமாக மாற்றும் என்பதை உணர முடியும்.

மொத்தத்தில் நாம் பெற்றுள்ள இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பலவற்றை இழந்து இந்த சந்தோஷ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம். இந்த நவீன வசதிகள் மூலம் பெறும் மகிழ்ச்சியென்பது நம்மைப் பொறுத்தவரையிலும் எல்லாமே நிரந்தரம் என்றும் நம்பிக் கொண்டுருக்கிறோம். அடுத்த தெருவில் இருப்பவர்களைப் பற்றியே நம்மால் கவலைப்பட நேரமில்லாமல் ஓடிக் கொண்டுருக்கும் போது எப்படி அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்க முடியும்?  

தொடக்கத்தில் இங்குள்ள சாயக் கழிவு நீரை மானாவாரியாக சாக்கடையில், கால்வாயில், ஆற்றில் என்று ஒவ்வொருவரும் திறந்து விட்டு முடிந்த வரைக்கும் கல்லாவை நிரப்பிக்கொண்டுருந்தார்கள்.

ஆனால் மாற்றமென்பது வந்து தானே தீரும். 

அது போன்ற ஒரு மாறுதல் திருப்பூரில் உருவாகி சூறாவளி சூனாமியாகி திசை தெரியாத காட்டுக்குள் ஒவ்வொரு முதலாளிகளையும் சிக்க வைத்துள்ளது. சாயப்பட்டறை முதலாளிகளின் அக்கிரமங்களையும் பொறுத்துப் பார்த்த கரூர், திருப்பூர்,கோவை மாவட்ட விவசாயிகளின் பலவிதமான போராட்டங்கள் விஸ்ரூபம் எடுக்க அரசாங்கம் விழித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசியாக தில்லி உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று இன்று வாய்தா மேல் வாய்தாவாக சவ்வு போல் நீண்டு கொண்டேயிருக்கிறது. 

கடந்த சில வருடங்களில் உருவாக்கப்பட்ட குழுக்கள், மேற்பார்வையாளர்கள், புரிந்துணர்வு குழுக்கள் என்று ஒவ்வொருவரும் உருவாக்கிய ரணகளத்தில் பல மாறுதல்கள் உருவாக ஆரம்பித்தது.  பொறுப்புள்ள சாயப்பட்டறை முதலாளிகள் அவரவர் வெளியாகும் சாயக் கழிவு நீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி விட அவர்களை நோக்கி எந்த சட்டதிட்டமும் பாயவில்லை.  


வசதி இல்லாதவர்களும், வசதிகள் இருந்தும் செலவு செய்ய மனம் இல்லாதவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது.  அவரவர் சாயப்பட்டறை நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கும் பகுதிகளை தனித்தனியாக பிரித்து காமன் எப்ளூயண்ட் ட்ரிட்மெண்ட ப்ளாண்ட்(C E T P) என்றொரு பொது சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது.  

மத்திய, மாநில அரசாங்க பங்களிப்போடு, மானியத்தோடு, வங்கிக் கடன் உதவியால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டது. 

இதன் பலன் என்ன?  

இதனை சார்ந்து செயல்படும் சாயப்பட்டறை நிறுவனங்கள் தாங்கள் வெளியே அனுப்பும் சாயக்கழிவு நீரை குழாய் வழியாக இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி விடுவதுண்டு. இங்கு வந்து சேரும் நீரில் உள்ள நச்சுத்தன்மை உள்ள கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து அதில் உள்ள காரம் அமிலம் வீரியம் நச்சு போன்ற அத்தனை கெடுதிகளை நீக்கிவிட்டு இயல்பான நீராக மாற்றி தாவரங்களுக்கு பயன்படுத்தும் அளவிற்கு மாற்றி விடுகிறார்கள்..

எல்லாமே சரிதான்.  அப்புறமென்ன பிரசச்னை என்கிறீர்களா?

இது போன்ற ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ் குறைந்தபட்சம் முப்பது முதல் அதிகபட்சம் 80 நிறுவனங்கள் வரைக்கும் செயல்பட்டுக் கொண்டுருந்தன.  நீதிமன்றம் கொடுத்துள்ள "ஜீரோ டிஸ்சார்ஜ்" என்ற பருப்பை சம்மந்தபபட்ட முதலாளிகள் இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் வேக வைக்க முயற்சிப்பதில்லை.  காரணம் தங்களின் லாபத்தொகையை இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு கொடுக்க எவருக்காவது மனம் வருமா?

அதைவிட கொடுமை இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அவரவர் கொடுக்க வேண்டிய கட்டணம் போனற இத்யாதி சமாச்சாரங்களை மனதில் வைத்துக் கொண்டு எப்படா வாய்ப்பு கிடைக்கும்? என்று அருகே உள்ள வாய்க்காலில் கலந்து விடும் புண்ணியவான்களும் உண்டு. ஜன நெருக்கடி உள்ள பகுதிகளில் உள்ள பல சாயப்பட்டறைகள் செய்யும் கைங்கர்யத்தால் தெருவில் நுரை சுழித்துக் கொண்டு ஓடத் தொடங்கி விடுகின்றது.

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான குழாய் அடிக்கடி உடைந்து போய் விடுவது எப்போதுமே இங்குள்ள வாடிக்ககையான நிகழ்வாகும். இதுபோன்ற சாயக் கழிவு நீர் இந்த குடிநீர் குழாய்க்குள் நுழைந்தால்?

கற்பனை செய்து பாருங்கள்?.

ஒவ்வொரு சாயப்பட்டறை முதலாளிகளும் தாங்கள் சாயமேற்றிக் கொடுக்கும் துணிகளில் அவர்கள் பார்க்கும் லாபம் என்பது 40 முதல் 60 சதவிகிதம்.  அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு கேவலமாக கணக்குப் போட்டாலும் 40 லட்சத்தை தனியாக எடுத்து வைத்துவிடலாம்.  ஆனால் இவர்கள் இந்த நிறுவனத்தை உருவாக்க போட்ட முதல் என்பது பல கோடிகளை தொட்டு நிற்கும்.  சிலர் ஓட்ட உடைசல் எந்திரங்களை வைத்துக் கொண்டு இது போன்ற லாபத்தையும் சம்பாரிக்கும் கெட்டிக்காரர்களும் உண்டு.

எங்களுக்கு அரசாங்க மான்யம் வேண்டும் என்று முதலாளிகள் அதிசியமாக ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினார்கள்.  மத்திய அரசாங்கம் திட்டநிதியாக 700 கோடி ஒதுக்கியது.   முதல் தவணையாக 120 கோடியும் சில மாதங்களுக்கு முன்பு வங்கிக்கு வந்து சேர்ந்து விட்டது. 

ஆனால் அதிலும் அரசாங்கம் கெட்டியாக ஆப்பு வைத்தது.  எவரவர் இந்த நிதியை தாங்கள் சார்ந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்த வேண்டும் நினைக்கிறார்களோ அவரவர் தனிப்பட்ட முறையில் வங்கி பிணைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது. 

அதாவது ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 30 சாயப்பட்டறை நிறுவனங்கள் இருக்கிறது என்றால் இவர்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து இந்த சுத்திகரிப்பு நிறுவன நிர்வாகத்திற்கு பொறுப்பாகும். அந்த சுத்திகரிப்பு நிலையம் கடைசிவரைக்கும் சரியான முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும். அதில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு மாத சம்பளம் முதல் அதில் பயன்படுத்தப்படும் வேதியியல் சமாச்சாரங்களுக்கு முதலீடு வரைக்கும்  சரியான முறையில் கொண்டு செலுத்த வேண்டும்.  

காரணம் நம்ம மக்கள் மீது வங்கிகள் வைத்துள்ள நம்பிக்கை அப்படிப்பட்டது.  உனக்கும் பெப்பே உங்க ஆத்தாளுக்கும் பெப்பே என்று காட்டி விடுவார்கள் என்று வங்கி உசாராக விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தது.  

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எந்த நிறுவனமும் அரசாங்கம் கொடுத்துள்ள 120 கோடியை பயன்படுத்த முன்வரவில்லை.  மூன்று மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் இந்த தொகை மத்திய அரசாங்கத்திற்கே திரும்பி சென்று விடும். 

ஒரு சாதாரண சுத்திகரிப்பு நிலையம் செயல்பட வேண்டுமென்றால் மின்சார செலவு முதல் மற்ற அத்தனை விசயத்திற்கும் ஒரு மாதத்திற்கு உத்தேசமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வேண்டும் இந்த பொது சுத்திகரிப்பை பயன்படுத்தும் நிறுவனங்கள் தாங்கள் வெளியாக்கும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பை செய்ய வேண்டுமென்றால் ஒரு லிட்டருக்கு 12 பைசா கொடுக்க வேண்டும்.

எவருக்கு மனம் வரும்?  

சாக்கடையில் திறந்து விட்டு பழக்கப்பட்ட மக்களைப் போய் நீ திருந்துப்பா என்றால் கேட்பார்களா?  இறையன்பு வந்த பிறகு கடந்த மாதங்களில் 300 சாயப்பட்டறை நிறுவனங்கள் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. இந்த எண்ணிக்கையில் பழம் பெருச்சாளிகளும், சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்களும் அடங்குவர். 1400க்கு மேற்பட்ட நிறுவனங்களில் இப்போது தப்பி பிழைத்திருப்பது கொஞ்சமே. திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் இப்போது ஈரோடு மற்றும் பெருந்துறைக்கு தங்களின் துணிகளை வண்ணமாக்க படையெடுத்துக் கொண்டுருக்கிறார்கள்.

இந்த 300 நிறுவனங்களும் சேர்ந்து உத்தேசமாக ஒரு மாதத்திற்கு 300 முதல் 500 கோடி ரூபாய் வரைக்கும் அவரவர் தகுதி பொறுத்து வருவாய் ஈட்டிக் கொண்டுருப்பவர்கள்.  ஒரு சாய்ப்பட்டறையில் குறைந்தபட்சம் 75 பேர்கள் பணிபுரிகிறார்கள் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அவரவர் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டியது தான். இந்த துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளிஉலகத்தை பார்க்காமல் உள்ளேயே துணியோடு துணிவோடு வாழ்ந்து கொண்டுருப்பார்கள்.  இதன் காரணமாகவே வேறு எந்த சார்பு துறையும் அறிமுகம் இல்லாமல் இருக்கும்.

சமீபத்தில் பெயத் மழையின் காரணமாக பாதிப் பேர்கள் அவரவர் ஊரில் உள்ள விவசாயத்தைப் பார்க்க தங்களின் ஊருக்குச் சென்று விட்டார்கள்.  

மீதி நபர்களை வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாத முதலாளிகள் ஆளை விட்டால் போதுமடா சாமி என்று பச்சைக் கொடியை உயர்த்தி வழியனுப்பிக் கொண்டுருக்கிறார்கள்.

தனிப்பட்டவர்களுக்கு வேலையிழப்பு என்பதோடு இதன் சார்பு தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் மற்றவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?  இந்த 300 நிறுவனங்களும் செயல்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கும் வருமானம்?  இந்த சாயப்பட்டறை நிறுவனங்கள் வங்கியில் வாங்கி வைத்துள்ள கடன்களை எப்படி கட்ட முடியும்?  வட்டி குட்டி போட்டுக் கொண்டுருக்குமே? 


இது போன்ற பல கேள்விக்குறிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  ஆனால் அத்தனையும் கேலிக்குறியாகத்தான் இருக்கின்றது.  

காரணம் இறையன்பு என்ற மாமனிதர். 

"தவறு என்பதை தெரிந்தே செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன" என்ற பாடலை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அவர் காட்டும் கெடுபிடி தனம். 

அதனால் என்ன? 

இறையன்புக்கு ஒரு பாடல் இருக்கிறதென்றால் எங்களுக்கும் ஒரு பாடல் இருக்கிறது என்று சாயப்பட்டறை முதலாளிகள் வேறொரு பாடலை பாடிக் கொண்டுருக்கிறார்கள்.

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.................‘"

Sunday, December 26, 2010

வினவு .

கடந்த 18 மாதத்தில் என்னுடைய தேவியர் இல்லத்தை தவிர மற்றொரு தளத்திற்கென்று எழுதிய கட்டுரை சாயமே இது பொய்யடா.  திருப்பூரில் இருக்கும் சாய்ப்பட்டறைகளின் அவலங்களை எழுதி தோழர்கள் கேட்டுக் கொண்டபடி வினவு தளத்திற்கு அனுப்பி வைத்தேன்.  

கால் புள்ளி அரைப்புள்ளிகளைக் கூட மாற்றாமல் தலைப்பை மட்டும் மாற்றி வினவுத் தோழர்கள் பிரசுரம் செய்து என்னுடைய தள பெயரையும் சேர்த்து தெரிவித்து மரியாதை செய்து இருந்தார்கள்.  

இந்த கட்டுரை 2011 ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகம் மூலம் வெளியிடும் புத்தகங்களில் ஒரு தலைப்பில் இதுவும் வெளியாகின்றது. 


மீண்டும் தொழிலாளி வர்க்கம் என்ற புத்தகத்தில் வினவு தளத்தில் எழுதப்பட்ட பலரின் கட்டுரைகள் வெளிவருகின்றது. இந்த புத்தகத்தில் என்னுடைய கட்டுரையும் இடம் பிடித்துள்ளது.

நான் எழுதி வெளிவரவிருக்கும் டாலர் நகரம் என்ற புத்தகத்திற்கு முன்பே தோழர்களின் அக்கறையினால் வெகு ஜன புத்தக அச்சு ஊடகத்தின் வாயிலாக வெளிவருகின்றது. . 

ஓவியர் மருது. மனநல மருத்துவர் ருத்ரன் வெளியிடுகிறார்கள்.  .

இந்த புத்தகங்களின் வெளியிடு இன்று சென்னையில் நடக்கின்றது.  வினவுத் தோழர்களுக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

என்னுடைய எழுத்துக்கள் அச்சு ஊடகத்தின் மூலமாக வருவது இதுவே முதல் முறை.  தோழர்கள் கட்டுரை எழுதிய ஒவ்வொருவரின் தளத்தையும் சேர்த்து மரியாதை செய்துள்ளார்கள். நான் செய்துள்ள வேலையை அவர்கள் செய்து முந்திக் கொண்டு விட்டார்கள். அவர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.

நான் திருப்பூர் குறித்து தொடக்கம் முதல் நான் எழுதிய பல கட்டுரைகளைப் படித்த பலரும் புத்தகமாக வேண்டிய விடயங்கள் என்று தங்கள் எண்ணத்தை தெரிவித்து இருந்தார்கள்.  ஈழம் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்திற்கு முன் இந்த டாலர் நகரம் என்ற புத்தகம் இந்த புத்தக கண்காட்சி முடிந்தவுடன் அச்சுக் கோர்ப்பிற்கு செல்கிறது.  ஒரு தனிப்பட்ட மனிதனின் சுயசரிதை மூலமாக ஒரு தொழில் நகரத்தின் நீள அகலத்தைப் பற்றி புரிந்து கொள்ள உங்களுக்கு இந்த புத்தகம் உதவக்கூடும்.

என்னுடைய புத்தகம் வெளிவருவதற்கு முன்பு வினவுத் தோழர்கள் மூலம் என்னுடைய எழுத்துக்கள் வெகு ஜன அச்சு ஊடகத்தில் வெளிவருவது அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  இந்த கட்டுரை என்னுடைய டாலர் நகரத்திலும் வெளிவருகின்றது.

என்னைப் போன்றே சமூகம் குறித்து எழுதப்பட்ட பல கட்டுரைகள் மீண்டும் தொழிலாளி வர்க்கம் என்ற புத்தகத்தின் மூலம் வெளிவருகின்றது.  சென்னையில் இருப்பவர்கள், புத்தக கண்காட்சிக்கு செல்லும் நண்பர்கள் கீழைக்காற்று வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். 

எழுத்துலக வாழ்க்கையில் இன்று வரையிலும் எந்த திட்டமிடுதலும் இல்லாத போதும் கூட என்னை எங்கங்கோ இழுத்துக் கொண்டு சென்று கொண்டுருக்கிறது. 

திருப்பூரை விட்டு அத்தனை சீக்கிரம் வெளியே செல்லமுடியாத சாப அல்லது சந்தோஷ வாழ்க்கை (அதுவும் டிசம்பர் ஜனவரி மாதம் என்றால் ஒவ்வொருவரும் 18 மணி நேரம் உழைக்க வேண்டிய அவஸ்யத்தில் இருப்பதால்) வாழ்ந்து கொண்டுருப்பதால் வினவுத் தோழர்கள் நடத்தும் புத்தக வெளியீடு (டிசம்பர் 26 2010) விழா வெற்றியடைய வாழ்த்துக்ள். 

இந்த சாயப்பட்டறை பிரச்சனைகளின் தொடர்ச்சியாக இப்போது இங்கு கடந்த வாரங்களில் பல விசயங்கள் நடந்து முடிந்துள்ளது. அது குறித்து நாளை வெளியிடுகின்றேன்.  

ஆட்சி நிர்வாகத்தில் சில நல்ல அதிகாரிகள் வந்து அமரும் போது பல நல்ல விசயங்கள் நடக்கும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழ்நாடு அரசாங்கத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் திரு இறையன்பு அவர்கள் இப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைமைப் பொறுப்பில் வந்துள்ளார். 

அவரைப்பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய முமு அவர்கள் மூலம் தனிப்பட்ட சில பல விசயங்களை நான் அறிவேன். 

கடந்த ஒரு மாதத்தில் இறையன்பு முயற்சியால் இங்கு பல அதிரடி சமாச்சாரங்கள் நடந்துள்ளது. நான் எழுதிய எழுத்துக்கள் வெறும் எழுத்தாக கடந்து போய் விடாமல் வினவுத் தளத்தில் எழுதி வைத்த கட்டுரைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன்.  

அது குறித்து நாளை வெளியிடும் கட்டுரையில் படிக்கத் தயார் தானே?

அதற்கு முன்பு இந்த சாயப்பட்டறைகள் குறித்து முழுமையான புரிந்துணர்வு கிடைக்க இந்த தலைப்பில் உள்ளே சென்று மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து விடுங்க.  


சாயக்கழிவு நீரின் கப்பு வாடை நம்மை கலங்கடிக்கும். காரணம் சாயக்கழிவு நீரென்பது கண்களால் பார்க்கும் போது ஜொலிஜொலிக்கும். மண்ணில் கலந்து செல்லும் போது நுரைகக்கி நகர்ந்து செல்லும். 

ஆனால் இந்த நீர் கலந்த மண்ணும் கலக்காத மண்ணும் அடுத்த ஒரு நூற்றாண்டு ஆனாலும் வெறும் மலடாகத்தான் இருக்கும்.

இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும்.  செய்தால் தான் அந்நியச் செலவாணி கிடைக்கும்.  கிடைத்தால் தான் சர்வதேச சமூகத்தில் கொடுக்கல் வாங்கல் நடக்கும். எல்லாமே மறுக்க முடியாத உண்மை தான். 

ஆனால் ஏற்றுமதி மட்டும் செய்ய வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த  உள்கட்டமைப்புகளையும் செய்து தந்து விட மாட்டோம் என்று புதிய தத்துவத்தை உருவாக்கிக் கொண்டுருக்கும் இந்திய ஜனநாயக காவலர்களின் திறமையினால் இன்று திருப்பூரில் உள்ள முதலாளிகளின் பாதிப்பை விட இதை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெருவுக்கு வந்து நாளாகிவிட்டது. பலரும் அவரவர் கிராமத்திற்கு பொழப்ப பார்க்கச் சென்று விட்டார்கள். இதன் இழப்பு மற்றும் வலிகளைக் குறித்து நாளை வெளியிடும் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

இந்தியாவில் உள்ள தற்போதைய மத்திய அரசாங்க அடிவருடிகள் இந்தியாவில் உள்ள விளக்குமாறுகளைக்கூட ஏற்றுமதி செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்போம் என்று ஆளாளுக்கு களத்தில் நின்று சேவை புரிந்து கொண்டுருக்கிறார்கள்.  

உள்ளே இருப்பவன் அழுதால் என்ன?  மயானத்திற்கு போனால் என்ன? நாம் சார்ந்திருக்கும் வெளிநாடுகளில் கெட்ட பெயர் எடுக்க முடியுமா? நமக்கு வர வேண்டிய கட்டிங் சமாச்சாரத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

வாழ்க இந்திய ஜனநாயகம்.  

வளர்க பணத்தாசை என்ற மனநோய் கொண்ட அரசியல்வியாதிகள்.

Tuesday, December 21, 2010

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?

2000 ஆண்டு தொடக்கத்தில் திருமணம் ஆவதற்கு முன்பு பெரிய வீட்டில் தனி ஆளாக புதிய வாழ்க்கையை தொடங்கினேன். மொத்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். தனி ஆளுக்கு ஏன் இத்தனை ரூபாய் வாடகை கொடுத்து ஏன் இவன் இங்கே இருக்கின்றான்? என்பதை மனதில் கொண்டு "கழுகுப் பார்வை"யால் மற்றவர்கள் என்னை பார்த்துக் கொண்டுருந்தனர். 

ஏறக்குறைய தினந்தோறும் கைபேசியில் 500க்கும் குறையாத அளவிற்கு வந்து கொண்டுருக்கும் அழைப்புகளுடன் நிறுவன பதவிகளில் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது.

என்னைத் தேடி வந்த எதிர்கால மாமனார் கூட நான் உள்ளே வைத்திருந்த குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பார்த்து அசந்து விட்டார். சமையல் கலை என்பது நான் ரசித்து செய்யும் ஒரு விசயம்.  அதுவும் அந்த சமயத்தில் நான் புகுந்து விளையாடிக் கொண்டுருந்த அசைவ உணவு வகைகளைப் பார்த்து அவருக்கும் மேலும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  பொதுவாக பேச்சுலர் வாழும் வாழ்க்கையில் மற்றவர்கள் "கண் கொத்தி பாம்பாக" பார்க்கும் பல விசயங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு என்னை வினோத ஜந்தாகவே பார்த்தார்.  

அலுவலக நேரம் தவிர மற்ற பொழுதுகள் அத்தனையும் வீட்டுக்குள் இருந்த ஒலி நாடாக்கள் என்னை அடைகாத்தது. பள்ளிப்பருவம் முதல் நான் மனதில் வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு உள்ளே நான்கு புறமும் விலை உயர்ந்த ஓலிவாங்கிகளை பொருத்தி மிகத் துல்லியம் என்பதற்காக அதன் தொடர்பான பல சமாச்சாரங்களை பொருத்தி கதவை சார்த்திக்கொண்டு கேட்டுக் கொண்டுருப்பேன்.  

பலரும் பேசிய இலக்கியப் பேச்சுகள் என்று தொடங்கி அதன் தொடராக ஆன்மிகத்தை விட்டால் அரசியல் பேச்சுகள் போன்ற பலதையும் கலவையாக கேட்டுக் கொண்டுருப்பேன். சராசரி நபர்களால் ஜீரணிக்க முடியாத  கேசட்டுகள் ரகம் வாரியாக உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருக்கும்.

குறிப்பாக அப்போது வைகோ மேல் அதீத காதல் கொண்டுருந்தேன். அவரின் ஒவ்வொரு ஒலிநாடாக்களையும் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டுக் கொண்டேயிருந்தாலும் சலிக்கவே சலிக்காது.  வார்த்தை பிரயோகங்கள், கம்பீர, உதாரணங்கள், தடுமாற்றம் இல்லாத பேச்சு என்று ஆச்சரியமனிதராக எல்லாவிதங்களிலும் தெரிந்தார்.  நடைபயணத்தில் இறுதியில் சென்னையில் பேசிய பேச்சை அடுத்த நாலைந்து வருடங்கள் வைத்திருந்தேன். 

ஆனால் இப்போது அவரைப் பார்க்கும் போது?

தமிழ்நாட்டு அரசியலில் உருப்படியாக அமைந்த ஒரு புத்திசாலி தன்னுடைய தவறான கொள்கைகளால், எதிர்காலம் குறித்து அக்கறைபட்டுக்கொள்ளாமல் இந்த நிமிடம் வரைக்கும் தான் கொண்ட ஈழம் குறித்த கொள்கைகளில் ஆச்சரியமனிதராக வாழ்ந்து கொண்டுருக்கிறார். அவரின் பல புத்தகங்களை படித்துள்ளேன்.  ராஜீவ் காந்தியுடன் நேருக்கு நேராக .நின்றவிதம், அசாத்தியமான துணிச்சல், நம்ம சூனாபானாவை (அதாங்க சுப்ரமணியசாமி) பாராளுமன்றலாபியில் மிரட்டிய கம்பீரம் என்று எல்லாவிதங்களிலும் சிங்கமாகத் தான் வாழ்ந்தார். 

ஆனால் இன்று?

தமிழ்நாட்டில் இரண்டு கழகங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் மேலே வந்த ராமதாஸ் மற்றும் திருமாவளவன் குறித்து இங்கு என்ன எழுத முடியும்?

என்னுடைய பார்வையில் மருத்துவர் ராமதாஸ் மேல் அவரின் அரசியல் கொள்கையின் மேல் ஏராளமான காழ்புணர்ச்சி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உருவாக்கிய "மக்கள் தொலைக்காட்சி" ஆச்சரியமானதே. 

ஈ மொய்க்கவில்லையே என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளாமல் அதே பிடிவாதத்தோடு தனித்தமிழிலில் கொண்டு போய்க் கொண்டுருப்பதற்கு தனியான பாராட்டுரையை வழங்க வேண்டும்.

திருமாவளவனும் வைகோவுடன் இருந்தார். வளர்ந்தார்.  ஆனால் இவர் பிடிக்க வேண்டிய இடத்தை இன்று பிடித்துருப்பவர் சீமான் அவர்கள். 

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கழகங்கள் சரியில்லை. ஊழல் குற்றச்சாட்டு, சுயநல ஆதிக்கம், குடும்ப அரசியல் என்று கருத்து சொல்பவர்கள் திருமாவளவன், ராமதாஸ் இருவரும் கடந்து வந்த பாதையில் தான் சார்ந்த இனத்திற்கு என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்ன சாதித்து இருக்கிறார்கள்? என்று தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கும் கொஞ்சம் இவர்களின் அரசியலை புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 

காரணம் இவர்கள் தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடுகின்றோம் என்கிறார்கள்.   ஈழத்தில் நடத்த கடைசி யுத்தப் போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கெட்டிக்காரத்னமாக கடைசி வாய்ப்புள்ள வரைக்கும் தன்னுடைய மந்திரிப்பதவியை விட்டு இறங்கத் தயாராக இல்லை என்பது போன்ற விசயங்கள் பெரும்பாலான மக்களால் மறக்கப்பட்ட ஒன்றாகும். திருமாவளவன் எந்த நோக்கத்தில் இலங்கைக்கு சென்ற குழுவுடன் சென்றார்? என்பதே இன்று வரையிலும் ஆச்சரியம் அளிக்கும் விசயமாகும்?  

கடைசியாக நான் உங்களை திட்டிப்பேசவில்லை என்று சோனியாவின் வாசலில் நுழைய தவமாய் தவமிருப்பது வரைக்கும் வைகோவுக்கு அடுத்தபடியாக அந்தர்பல்டி அகாய சூரனாக இருக்கிறார்.

மொத்தத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று இரு துருவங்களுக்குள் சிக்கியவர்களாக இவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்.  

ஆனால் எல்லாவிதங்களிலும் சீமான் சற்று வித்யாசமாக இருக்கிறார்.  

பேச்சு, செயல்பாடு, கொள்கை.  

ஆனால் இவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் இவரின் எதிர்கால பாதையை எந்த அளவிற்கு தீர்மானிக்கும் என்பது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.  ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும். 

எப்படி இருந்தவர் இப்படி ஆனார் என்று இவர் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியவர் வைகோ.  

தொழில் நிறுவனங்களைப் போலவே அரசியலுக்கும் முன் எச்சரிக்கை தேவை. 
காரணம் தன்னுடைய இருப்பு தெளிவான முறையில் இருந்தால் தான் தான் வைத்திருக்கும் கொள்கைகளை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்த முடியும்.  இல்லாவிட்டால் நானும் கத்திப்பார்த்தேன்.  தொண்டை வற்ண்டுபோனது தான் மிச்சம் என்று ஒதுங்க வேண்டியது தான். 

சீமானின் பல ஊடகப் பேட்டிகளை பார்த்து படித்து இருக்கின்றேன்.  அவரின் தீவிர ஆதவாளர்கள் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.  அவரின் எண்ணங்கள் சரியானதே என்றபோதிலும் அதை எடுத்து வைப்பதில் முரண்பட்டு நிற்கிறார்.  இந்திய இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் இது போன்று வளர்ந்து வருபவர்களை துடைத்தொழிக்கவென்றே ஓராயிரம் நபர்கள் கண்களுக்கு தெரிந்தும்,  தெரியாமல் இருப்பார்கள். 

இது தமிழினத்தில் மட்டுமே நடக்கும் சாபக்கேடு.

சமகாலத்தில் சீமான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பலவிதங்களிலும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுருப்பவர். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய்விடுமோ என்பது போல் இருக்கிறது.. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால் மரியாதையான பார்வையில் கவனிக்கப்படுபவர். வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் சார்பார்ளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கிறார். சிறையில் இரண்டு நாட்கள் சந்திக்க மட்டுமே அனுமதி என்ற போதிலும் கூட படித்த இளைஞர்கள் வரிசை கட்டி நின்றது ஆச்சரியமே.  சென்றவர்கள் எவரும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு போனவர்கள் அல்ல.

இவரைப் போன்றவர்கள் தெளிவான கொள்கைகளால் முன்னேறிச் செல்லவேண்டும். வெகு விரைவில் உருவாகப்போகும் இரண்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கண்ணுக்கு தெரிந்த வகையில் எவரும் தென்படவில்லை என்பதே தற்கால தமிழ்நாட்டு அரசியல் நிதர்சனம். சீமான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மாற்று அரசியல் பார்வையில் விஜயகாந்த ஒரு பக்கம்.  சீமான் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.  ஆனால்  சீமான் அரசியல் கட்சியாக மாற்ற இன்னமும் காலம் இருக்கிறது என்பதில் உறுதியாகவே இருக்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் எந்த பக்கம் இருப்பார்கள் என்பதை வரும் தேர்தல் ஓரளவுக்கேனும் சூசமாக காட்டிவிடும்.

இந்த காணொளியில் ஒரு கட்சியின் சார்பாக கேள்விகேட்கும் ரவிபெர்ணார்ட் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர் வருகின்ற தேர்தலிலாவது ஓட்டுப் போட செல்ல வேண்டும். 

குறிப்பாக கலைஞர் அரசியல் குறித்து சீமான் பேசும் இடங்களில் கடைபிடித்த நாகரிகம் என்னை வியக்க வைத்தது. ஆனால் பளிச்சென்று மிகத் தெளிவாக இருந்தது.

தன் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக எப்போதும் போல உணர்ச்சிபூர்வமாக பேசும் சீமான பிறந்த ஊருக்கு அருகே நானும் பிறந்தவன் என்கிற வகையில் என்னைப் போன்றவர்களுக்கு பெருமையாகத்தான் இருக்கு.







Friday, December 17, 2010

தமிழ்மணம் விருதுகளும் விரும்பாதவர்களும்

நான் படித்து வந்த மற்றும் படித்துக் கொண்டுருக்கும் பல எழுத்தாளர்களைப் பற்றி பல செய்திகளை கடந்து வந்துள்ளேன். அவர்கள் வாங்கிய பல விருதுகளை அதன் சர்ச்சையான நிகழ்வுகளும் என் மனக்கண்ணில் வந்து போகின்றது.  எந்த வகையில் பார்த்தாலும் எழுதுபவனுக்கு ஏதோவொரு அங்கீகாரம் முக்கியமாக இருக்குமோ? என்று யோசித்தது உண்டு.



சென்ற வருடம் ஒரு நண்பர் தூர தேசத்தில் இருந்து என்னை அழைத்து இந்த தமிழ்மணம் குறித்து புரியவைத்தார்.  செந்தில் சொல்வது போல் மார்க்கெட்டிங் என்பது இந்த வலைபதிவுகளில் எழுதுவதை விட கடினமானது.  எனக்கு எப்போது அது போன்ற விசயங்களில் கவனம் இருப்பதும் இல்லை.  அதை முழுமையாக விரும்புவதும் இல்லை.  இதன் காரணமாக சென்ற வருடத்தில் அநேக பேர்களுக்கு அறிமுகம் இல்லாமல் நான் எதிர்பார்த்த ஈரவெங்காயம் என்ற தமிழ்மொழியின் 3000 வருட சரித்திரம் இரண்டாவது கட்டத்தோடு மூச்சு வாங்கி விட்டது.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் வாசிப்பவர்கள், வரவேற்பாளர்கள், வாசக நண்பர்கள், அழைத்துப் பேசுபவர்கள், ஆச்சரியப்படுபவர்கள் என்று ஏராளமான நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள். தமிழ்மண விருது போல சமீபத்தில் வீட்டுக்கு வந்து விட்டு சென்றவர் ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்து ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு ஓட்டமாக ஓடிவிட்டார். செல்லும் போது எப்படி இத்தனை வேலைகளுக்கு இடையே இத்தனை நீளமாக உன்னால் எழுத முடியுது? என்று கிள்ளிவிட்டு சென்று விட்டார்.

பதிவுலகத்தில் தேடுதலுடன் இருப்பவர்கள் அநேகம் பேர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

தமிழ்மண விருதுகளில் கலந்து கொள்ள வேண்டும்? நம்முடைய தகுதி என்ன?  போட்டி என்று வரும் போது எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று எப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியாத விசயத்தை ஐந்து நண்பர்களிடம் ஆலோசனையாக கேட்ட போது அவர்கள் கொடுத்த விமர்சனமும், அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த மூன்று தலைப்புகளை தமிழ்மணம் விருதுகள் 2010 பட்டியலில் இணைத்துள்ளேன்.  

பிரிவு செய்திகள் நிகழ்வுகளின் அலசல்

விதி ராஜீவ் மதி பிரபாகரன் ( எண் 84)

( ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்வுகள் குறித்து ஈழம் தொடரில் எழுதப்பட்ட குறிப்பிட்ட பத்து பகுதிகளை ஒரே தலைப்பில் கோர்த்துள்ளேன். எதிர்மறை நியாயங்களுடன் பாரபட்சம் இல்லாமல் எழுதப்பட்டது)

பிரிவு பயண அனுபவங்கள் ஊர் வாழ்வு நினைவோடைகள்

இனிய நினைவுகள் (எண் 36)

தமிழ்மண நட்சத்திரவாரத்தில் வாழ்ந்த ஊரான காரைக்குடியைப் பற்றி ஆசை மரம் என்ற தலைப்பில் தொடங்கிய கட்டுரைகளில் தொடர்ந்த வந்த தலைப்பில் இதுவும் ஒன்று. செட்டிநாடு என்ற பகுதி எப்படி உருவானது என்பதையும் நான் பார்த்த அனுபவ பார்வைகளும் என்பதுமாய் 
எழுதியுள்ளேன்)

பிரிவு பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்


பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை (எண் 13)


இந்திய சுதந்திரம், ஈழம் தொடருக்குப் பின் நான் எழுதிய மூன்றாவது தொடர். நாறும் உள்ளாடைகள் என்ற தலைப்பில் தொடங்கி தற்போதைய திருப்பூர் குறித்தும், சமீபத்தில் உருவான பொருளாதார மந்த நிலை காரணமாக உருவான நிகழ்வுகளை என் அனுபவப் பார்வையில் எளிமையாய் எழுதினேன். இந்தியாவில் உள்ள அடிப்படை வளங்களை அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே உள்நாட்டு தொழில் வளர்ச்சியின் குறியீடு அற்புதமாக மேலே வரும் என்பதை சொல்லியுள்ளேன்.

நண்பர்களே,  இந்த முறை தமிழ்மணத்தில் பங்கெடுத்த தலைப்புகள் அத்தனையும் மிக அற்புதமாக உள்ளது.  நான் விரும்பும், என்னுடன் தொடர்புடைய, சமூக அக்கறையுடன் எழுதக்கூடிய பலரும் என்னுடைய போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.  மேலும் இந்த முறை தமிழ்மணம்  நிர்வாகம் சரியான தலைப்புகள் இறுதியாக தேர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல சிறப்பான விதி முறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.  உண்மைத்தமிழன் சொல்வது போல மூன்று தலைப்புகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதி தான் ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது.

இந்த இடுகையின் நோக்கம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னுடைய எழுத்துக்களை நான் திரும்பி பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்பதை நான் உணர்ந்து கொள்வதற்காக.  உங்களுக்கு இந்த தலைப்புகள் உணர்த்தும் கருத்துக்கள் பிடித்தமானதாக இருந்தால் இரண்டாம் கட்ட தேர்வுக்கு நகர்த்துங்கள்.  

தமிழ்மணம் திரட்டியில் மட்டும் தினந்தோறும் 407 இடுகைகள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.  தமிழ்மணம் போல TAMILISH போன்ற பல திரட்டிகளில் இணைக்கப்படும் ஒவ்வொருவரின் தலைப்புகளும் குறைந்த பட்சம் 700க்கு மேற்பட்டதாக இருக்கலாம்.  ஆனால் எழுதுபவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தமே.  எழுதத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் ஆங்கிலம் போல எளிதாக தட்டச்சுகளில் தங்களில் கருத்துக்களை அடிக்க முடியாத சோம்பேறித்தனம், நேரமின்மை போன்ற பல காரணங்கள் நான் ஆச்சரியப்படும் பலரும் படிப்பதில் மட்டும் தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.  

எனக்கு கிடைத்த அனுபவங்களின்படி வங்கி உயர் அதிகாரி முதல் அரசியல் தொடர்பாளர்கள் வரைக்கும் பலரும் பல பேருடைய எழுத்துக்களை படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் எவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.  இதற்கு மேல் வலைபதிவுகளில் உள்ள வெளியே தெரியாத அரசியல் போன்ற காரணங்களினால் நன்றாக எழுதுபவர்களும் தங்களை வெறும் வாசிப்பாளர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.

விருதுகளுக்கு, அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையிலும் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

வலை பதிவுகளில் சமூகத்தில் பார்த்த, பாதிப்பை உருவாக்கிய விசயங்களை எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உங்களின் தேர்வு உன்னதமாக இருந்தால் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தமிழ்மணம் விருதாக கருதிக் கொள்கின்றேன். உங்களின் வாசிப்பு அனுபவம் தான் உங்களின் வாழ்க்கையை உங்களின் எண்ணங்களை தீர்மானிக்கிறது.  

இந்த போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் வாழ்த்துகள்.  ஏற்பாடு செய்துள்ள தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜோதிஜி

Sunday, December 12, 2010

ஒரு தாயின் மரண சாசனம்

புதிதாக படிக்கத் தொடங்குபவர்கள் இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்ந்தால் நலமே விழைவு.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி


பிரிந்து போன மகளுக்கு இறந்து போன அம்மா எழுதியது.

நம் இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பக்கூடியதாய் இந்த கடிதம் இருக்குமென்று நம்பி இதை எழுதத் தொடங்குகின்றேன். 

என்னுடைய விருப்பமில்லாமல் பதினைந்து வயது இடைவெளியை எவரும் பொருட்படுத்தாமல் திருமணம் என்ற அலங்கோலம் நடந்த போது முதல் முறையாக இறந்தேன். ஆண்மையற்ற ஓழுக்கமற்ற கணவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு இரவுமே செத்துக் கொண்டுருந்தேன். உடலால் மட்டுமே வாழ்ந்த என் வாழ்க்கையில் உன் வருகையும் நீ என்னை புரிந்து கொண்ட பிறகு தான் உண்மையிலேயே வாழத் தொடங்கினேன்.  

ஆனால் இதைபடிக்கும் போது இந்த உடல் கூட நெருப்பில் கலந்து சாம்பலாய் மாறிப் போயிருக்கும். ஆனால் நீ சுவாசிக்கும் காற்றில் கலந்து உன்னையே கவனித்துக் கொண்டுருக்கும் உன் அம்மாவை இதை படித்து முடித்த பிறகாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாயா மகளே?

இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய நோயின் தாக்கம் எனக்கான விடுதலையை தெளிவாக புரியவைத்திருக்கிறது. என்னுடைய உயிர்ப்பறவை இந்தக் கூட்டிலிருந்து சிறகடிக்கப் போகின்றது.  

நீ என்னருகே இல்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. எவரையும் சார்ந்து வாழாமல் என் உதவி இல்லாமலேயே நீ சென்ற உயரம் என்பது என்னால் நம்ப முடியவில்லை. உச்சியில் இருக்கும் உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட ஆசை. இந்த அம்மாவின் வார்த்தைகளை படித்து முடித்த பிறகாவது என்னை நினைத்து பார்ப்பாயா மகளே?

இந்த கடிதம் ஏதோவொரு சமயத்தில் உன் கைகளில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏராளமான கேள்விகளை சுமந்து கொண்டுருக்கும் உனக்கு என்னுடைய இந்த வார்த்தைகள் சில புரிதல்களை உருவாக்கக்கூடும். இது நான் சேர்த்த சொத்துக்களை இட்டு நிரப்பிய வார்த்தைகள் அடங்கிய உயில் சாசனம் அல்ல. 

ஆனால் என் கருவில் சுமந்து உயிர் மூச்சில் வைத்துப் பார்த்த உன்னை இழந்து விட்டேனோ என்ற ஆதங்கத்தில் அவசரமாய் எழுதுகின்றேன்,  அவசரமாய் என்னை விட்டு நீ பிரிந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமான ஆச்சரியத்தை எனக்கு தந்துள்ளாய். நான் உன் அப்பாவை முழுமையாக புரிந்து கொண்ட தருணத்தில் கணவன் என்ற மனிதனை எதிர்க்காதே முற்றிலும் புறக்கணித்து விடு என்று வாழத் தொடங்கினேன். 

நான் வாழ்ந்த வாழ்க்கையை போலவே நீயும் அதையே கடைபிடித்து என்னை கலங்க வைத்து விட்டாயே மகளே?

உன் அப்பாவுக்கும் எனக்கும் நடந்த பாதி விசயங்களை உன் பார்வைக்கு படாமல் மறைத்து வைத்தேன்.  காரணம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டால் உன் பார்வையும் வாழ்க்கையும் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்தேன். நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான் ஏராளமான தாக்கத்தை உருவாக்கும். 

உன் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு தான் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டேன்.  பலமுறை நீ என்னிடம் கேட்ட வெளியேறிவிடலாமென்ற நோக்கத்தையும் இதனால் தான் புறக்கணித்தேன்.   இன்றைய உலகம் விஞ்ஞான சமூக மாற்றத்தில் மனித இனம் பெருமையாக வளர்ந்திருந்தாலும் அடிப்படை மனித குணாதிசியங்கள் மாறவில்லை, மிருகங்களை விட கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கீரம் வெளியே வந்து விட முடியாது. ஒரு பெண்ணின் எல்லைகள் என்பது ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும் என்பது போன்ற பல விசயங்களை நான் எப்படி புரியவைத்தாலும் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை மகளே?

ஆனால் உன் அப்பா அறுபது வயது கிழவனுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னை தாரை வார்க்க நினைத்த போது தான் எனக்குள் இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு உன்னையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்குள் நுழைந்தேன். நம் இருவரையும் இனிதே வரவேற்ற திருப்பூர் நீ என்னை விட்டு பிரிந்து போவதற்கும் காரணமாக இருந்து விட்டதடி மகளே?

திருப்பூர் ரயில் நிலையத்தில் நம்மை நோக்கி வந்த காவல்துறையினர் கையில் சிக்கினால் விசாரனையில் தொடங்கி விபரமாக கையாண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கதர்ச்சட்டை ஆசாமியிடம் வலிய சென்று பேசினேன். அவர் சட்டை மட்டும் தான் கதராக இருந்தது. உள்ளே இருந்த இதயம் காமுகனாக இருந்தது. உன்னை அமர வைத்து விட்டு அவர் அறைக்குச் சென்ற போது அவர் போட்ட ஒப்பந்தத்தை நீ கேட்டால் துவண்டு விடுவாய் என்று மறைத்தேன். 

அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை தேடிச் சென்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால் பார்த்த வேலைகளோடு நான் எதிர்பார்க்காத வேலைகளும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மேல் தவறில்லை. என்னைக் காத்துக் கொள்ள வெளியேறிய போதும் கல்வி அறிவு இல்லாமல் தகுதியான வேலைகளில் அமர முடியாது என்பதை புரிந்து கொண்டேன். பல பெண்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு இடத்திலும் அலங்கோலமாகத்தான் இருக்கிறது மகளே?

சிலர் விருப்பம் இல்லாத போது கூட நிர்ப்பந்தம் மூலம் மாற்றப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் பலருக்கும் வேறு வழியில்லாமல் இதிலும் ஒரு விதமான சகிப்புத்தன்மையை கடைபிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இயல்பாக வாழும் பெண்களும் பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்தவரைக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மன உளைச்சல் வேறு வழியே வந்து தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது.  மொத்தத்தில் தொழில் நகரங்களில் ஒவ்வொரு பெண்ணுமே நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 

அழகு கவர்ச்சி போன்ற சொல்லுக்கு தகுதியான பெண்களின் உண்மையான திறமைகள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது என்பதை அப்போது தான் முழுமையாக புரிந்து கொண்டேன். 

ஜாதி,மதம், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சொல் இந்த பாலூணர்வு உணர்ச்சிகள் தான். பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம். 

வெறியை மனதில் வைத்துக் கொண்டு வெளிவேஷம் போடும் ஆண்கள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் வாழும் எண்ணிக்கை சொற்பானது. 

என் அழகும், இளமையும் உன் அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.  ஆனால் என்னுடைய தொழில் வாழ்க்கை போராட்டத்தில் அதுவே என்னை பலவிதங்களிலும் படாய் படுத்தி எடுத்தது.  பல காமாந்த ஆண்களிடம் தப்பி வந்த எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது.  வேறுவழியே தெரியாமல் மீண்டும் அந்த கதர்ச்சட்டையிடம் தான் அடைக்கலம் தேடிப் போனேன் மகளே?

நான் எதிர்பார்த்ததை விட என்னை நன்றாகவே வைத்துக் கொண்டார். உன் அப்பா எனக்கு பிரச்சனையாக இருந்ததைப் போல அவர் குடும்ப வாழ்க்கையில் தொடக்கம் முதலே அவர் மனைவியே அவருக்கு எதிரியாக இருந்து தொலைக்க அவரும் ஏதோவொன்றை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்குள் உருவான தொடர்பில் உன்னுடைய அடிப்படைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. அதுவே உன் சிறகுகளை பலப்படுத்த உதவியது.  நீ அவருடன் சேர்த்து என்னை நம் வீட்டில் வைத்துப் பார்த்த போது கூட நான் வெட்கப்படவில்லை. 

நீ எந்த நோக்கத்தில் எங்களைப் பார்த்து இருப்பாய் என்பதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. தியாகம் என்ற வார்த்தையை இந்த இடத்தில் நான் எழுதிவைத்தால் நீ சிரித்து விடுவாய்.  ஒழுக்கம் தவறிய பாதையில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த வார்த்தைக் கொண்டு எழுதி வைத்தாலும் படிப்பவர்களின் பார்வையில் நான் ஏளனமாகத்தான் தெரிவேன். ஆனால் என் நோக்கமென்பது உன்னைச் சுற்றியே இருந்ததால் என் எல்லையை தீர்மானித்துக் கொண்டு அவரையே சார்ந்திருக்கத் தொடங்கினேன். சரி தவறு என்ற வார்த்தைகளோ, விவாதம் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. உன் அப்பா என்ற ஆண் தொடங்கி வைத்த பயணம். ஆனால் மற்றொரு ஆண் மூலம் அது முடிவடைந்ததாக கருதுகின்றேன். எல்லோருமே இந்த பாதையை தேர்ந்தெடுக்கலாமா என்ற கேட்பாய்? அவரவர் சூழ்நிலை? அவரவர் அனுபவம்? அதற்கான பலன்களையும் அவர்களே தான் அனுபவிக்க வேண்டும். மற்றொரு பெண்ணின் சாபமா? அல்லது என்னுடைய விதி முடிய வேண்டிய நேரமா தெரியவில்லை. அதையும் நான் உணர்ந்து கொண்டேன். 

ஆனால் இந்த உலகில் நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் தியாகத்தால் தான் நீயும் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்பதை நீ உணர்வாயா மகளே?  

அம்மா நேர்மையாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? என்பது நீ யோசிப்பது புரிகின்றது.  வேறொன்றும் நடந்திருக்காது. நீயும் என்னைப் போலவே ஏதோவொரு நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராக உள்நுழைந்து உன்னை நீ நிரூபித்துக் காட்டுவதற்குள் உன்னையே இழந்துருக்கக்கூடும்.  நான் பார்த்த தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெண்படும் பாடுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன்.  எந்த வகையில் பார்த்தாலும் பெண்களுக்கு கல்வி தான் முதல் ஆயுதம்.  அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே என்பதை புரிந்து கொண்டேன்.  அதனால் தான் நான் உன்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டு உன் பாதையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டேன்.  நீ என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தே மன உளைச்சல் அடைந்தால் உன் இலக்கை நீ எப்படி அடைவாய் மகளே?

பேசாத வார்த்தைகளும், மௌனமும் உருவாக்கும் சக்தி என்பதை ஒரு பெண் புரிந்து கொண்டால் எப்படி மாறுவாள் என்னைப் போலவே நீயும் உதாரணமாய் தெரிகின்றாய்.  ஆனால் அவற்றை நேர்மறை எண்ணமாக மாற்றிக் கொண்ட நீ எனக்கு மகள் அல்ல.  என தாய் போலவே மாறி என்னை தவிக்க வைத்து விட்டாய் மகளே?

உன்னுடைய பார்வையில் நான் ஆசை நாயகியோ அல்லது வாழ்க்கையின் அசிங்க நாயகியோ எதுவாகயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து அமைதியாக இப்போது உன்னிடமிருந்து நான் விடைபெறுகின்றேன். என்னுடைய இலக்கென்பது நான் பட்ட துன்பங்கள் உன்னை வந்து சேரக்கூடாது. உன் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விட்டுப் போன உன் கல்வியில் உன்னை கவனம் வைக்கச் சொன்னேன். ஆனால் படிக்கும் கல்வி மட்டும் ஒழுக்கத்தை தந்து விடாது. வளர்ப்பு, சூழ்நிலை என்ற பல காரணிகள் உண்டு. இதற்கு மேலாக சுய சிந்தனைகள் கூர்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை நான் புரியவைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே நீயே சுயம்புவாய் மாறி இன்று உயரத்தில் இருப்பதை நினைத்து பெருமையாய் இருக்கு மகளே?

என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான். ஆனால் எல்லா நியாயங்களுக்குப் பின்னாலும் ஒரு சிறிய அளவு அநியாயமும் கலந்து தான் இருக்கும் மகளே? உள்ளூர் பார்வையில் நான் உணர்ந்த வாழ்க்கையில் நான் எழுதும் இந்த எழுத்துக்கள் உலகப் பார்வையை பார்த்துக் கொண்டுருக்கும் உனக்கு புரிவதில் சிரமம் இருக்காது., சரி தானே மகளே?

நேர்மை, உண்மை, சத்தியம், ஒழுக்கம் போன்ற பல வார்த்தைகள் இன்று வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் காரணங்கள். அவசர உலகில் ஆறுதல் சொல்லக்கூட கூலி கேட்கும் உலகில் நான் அடைக்கல்ம் புகுந்த கதர்ச்சட்டை என்னை கண்ணியமாகவே வைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உருவான குடும்ப, தொழில் வாழ்க்கை சூறாவளியை பொருட்படுத்தாமல் என்னை கவனமாக பாதுகாத்தார். 

என்னை விட உன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.  அவையெல்லாம் நீ அறியாதது. ஆனால் இந்த அன்பு தான் அவருக்கு இறுதியில் வினையாக மாறியது. வாகன விபத்தில் மாட்டிய அவரை "செத்து தொலையட்டும்" என்று புறக்கணித்த அவர் மனைவியை விட நான் பெருமைபடக்கூடியவள் தான். தகவல் கிடைத்த நான் அவசரமாய் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது தான் எங்களின் விதியின் விளையாட்டு நேரமும் அங்கிருந்து தான் தொடங்கியது. அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?

அவருடைய ஆள் அம்பு சேனைகள், பணபலம் என்று பின்னால் வந்து நின்றாலும் அவர் அறியாமல் எனக்குக் கொடுத்த அந்த உயிர்க் கொல்லியை சுமந்தபடி வாழும் சூழ்நிலையில் மாறிப் போனேன். அவர் சில மாதங்களுக்கு முன் உலகை விட்டு சென்று விட்டார்.  இதே இப்போது நானும் அவர் சென்ற காலடி தடத்தை நோக்கி சென்று கொண்டுருக்கின்றேன் மகளே?

நான் இதுவரைக்கும் உனக்கு அறிவுரை என்று எதுவுமே சொன்னதில்லை. நீயும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியதும் இல்லை.  நீ சென்று கொண்டுருக்கும் உயரங்களை பலர் மூலம் நான் கேட்டறிந்து என் துயரங்களை மறந்த நாட்கள் பல உண்டு. உன்னுடைய ஒழுக்கமும், அயராத உழைப்பும் பணத்தைக் கொடுத்தது. நீ பெற்ற வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு நான் உன்னைத் தேடி வரவில்லை. என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன். ஆனால் உன்னுடைய புறக்கணிப்பை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டு திருமபி வந்தேன். உனக்கு வாழ்த்த வார்த்தைகளை தேட வேண்டிய அவஸ்யமில்லாமல் உன் ஆளுமையைப் பார்த்து அதிசயமாய் திரும்பி வந்தேன். உன்னை சுமந்த இந்த வயிற்றுக்கு வாலிப சந்தோஷத்தை தந்தது மகளே?

இறைவன் உன்னோடு இருந்து உன்னை காக்க வேண்டும் என்று வாழ்த்த மாட்டேன். கட உள் என்பது உள்ளே தான் இருப்பது.  நீ அதை உணர்ந்ததோடு உன்னையும் அறிந்து உலகத்தையும் புரிந்து நீ வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. 

நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக வர வேண்டும் மகளே? உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே?

இதற்கு மேல் எழுத என்னால் எழுத முடியவில்லை.  எழுதாத வார்த்தைகள் ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதற்கு சமமடி மகளே. 

விடைபெறுகின்றேன்.

உன் அம்மா. (இந்த உறவை இன்னமும் மனதில் வைத்திருப்பாய் தானே?)

ரயில் வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தேன்.  

இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம் மூன்று மொழிகளில் எங்கள் இருவரையும் வரவேற்றது.  அவருக்கான வாகனம் வந்து நின்றது.  என் வாகனத்தை நோக்கி நகர்ந்த போது என் பெயர் சொல்லி அழைத்தார். 

அடுத்த அரைமணி நேரம் ஆள் அரவமற்ற அந்த ரயில் நிலைய முகப்பில் வேறு சில விசயங்களையும் பேசினார்.  நான் வீட்டுக்கு என்னுடைய வாகனத்தில் வந்து கொண்டுருந்த போது அவர் என்னிடம் பேசிய விசயங்களை நினைத்துப் பார்த்தேன்...........

"ஆண் என்பவன் எல்லா இடங்களிலும் அவனுக்கு பிடித்த சூழ்நிலை அமைந்திருந்தால் தன் பாரத்தை இறக்கி வைத்து விடுவான்.  அறிமுகம் இல்லாதவர், அச்சப்படக்கூடியவர் என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பான். ஆனால் பெண் என்பவள் அத்தனை சீக்கிரம் எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் குறித்த அச்சமும் சமூகம் குறித்த பயமும் இன்னும் பல காரணங்களால் தன்னை அத்தனை சீக்கிரம் வெளியே காட்டிக் கொள்வதில்லை". 


"ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாக பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னை புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.  தன்னை குறுக்கிக் கொண்டு வாழும் ஆணோ பெண்ணோ ஏதோவொரு சமயத்தில் மொத்தமாக தன்னைப் பற்றி எவரிடமோ கொட்டிவிடுவதுண்டு."  

"ஆனால் எனக்கு அதற்கான சந்தர்ப்பந்தங்கள் அமைந்ததுமில்லை. உருவாக்க விடுவதுமில்லை.  நீங்கள் ரயிலில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மனைவியிடம் குழந்தைகளிடம் பேசிய வார்த்தைகளை உங்களை அறியாமல் கவனித்த போது என் மனோரீதியான கவனம் உங்கள் மேல் விழுந்தது. " 

"நான் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள் என்னை பல விதங்களிலும் கண்காணித்து இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் என்னை இட்டு நிரப்பி விடுவதுண்டு."  

"எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன்.  

நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது.  ஆனால் முயற்சித்துக் கொண்டுருப்பது மட்டும் புரிகின்றது." 

"அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது.  பல நிறுவனங்களில் நான் பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்விக்கான கட்டண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டுருக்கின்றேன்.  காரணம் ஆண்கள் என்பவர்களுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக அமையும் அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். " 

"ஆனால் பெண்களுக்கு சற்று கடினம் தான். இது இந்தியா மட்டுமல்ல.  நான் பார்த்த வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. பெண்கள் எழுதலாம், ஆடலாம், பாடலாம், படிக்கலாம்.  பிடிக்காத கணவன் என்றால் வெளியேறி தனக்கான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. " 


"ஒரு பெண்ணின் தனிப்பட்ட சாதனைகள் என்பது குறைவு. உலகை புரட்டிப் போட்ட புரட்சியாளர்கள் முதல் உலகை அச்சுறுத்தும் விஞ்ஞானம் வரைக்கும் அத்தனையும் இந்த உலகத்திற்கு தந்தவர்கள் ஆண்கள் தான். தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. "

"எழுத்தாளராக, விஞ்ஞானியாக, அதிகாரியாக, அரசில் உயர்பதவியிலும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு பினனாலும் முன்னாலும் ஒரு ஆண் பார்வை இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் வலிமை மட்டுமல்ல உள்ளத்தின் வலிமையும் என் பார்வையில் ஆண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் நான் அறிவேன்.  இவ்வளவு அறிவீலிகளா? என்பதையும் பல இடங்களிலும் பார்த்து இருக்கின்றேன். "

"ஒரு ஆண் தன்னை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.  அதற்கான வாய்ப்புகளையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  ஆனால் பெண்கள்? 

ஒவ்வொரு பெண்ணுமே தன்க்கு பிடித்த சூழ்நிலை, தான் விரும்பும் குணாதிசியம் உள்ள கணவன் காதலன் என்று ஆசைகளால் அவஸ்த்தைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். அமைதியைக் கையாண்டு கவிழ்த்து விடும் ஆண்களைப் போலவே அத்தனையும் இழந்தாலும் திருந்தாத பெண்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்."

"நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து பழகுவதில்லை.  ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்."   

மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த
மரணத்தினால் பல சாபங்கள் தீரும்...  

நாகமணியின் அம்மா குறித்து யோசித்த போது நான் சமீபத்தில் கோவை மின் மயானத்தில் கேட்ட பாடல் என் நினைவுக்கு வந்தது.  யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது தூங்கிக் கொண்டுருந்த என் குழந்தைகளின் மேல் பார்வையை ஓட விட்டேன்.  சில எண்ணங்களும் ஒரு சில வைராக்கியமும் எனக்குள் உருவானதை என்னால் உணர முடிந்தது.




முற்றும்