Wednesday, March 18, 2015

வாணி உருவான கதை

(முந்தைய பதிவு) எழுத்துப் பிழைகள் எல்லாம் ஒட்டிப்பிறந்தவையாக எனது எழுத்தோடு வந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு மறுமொழி எனது மொழியறிவை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கற்றிருந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரல்மொழி உதவியுடன் ஒற்றுப் பிழைக்கு மட்டும் சிறு செயலி உருவாக்க முனைந்து முடியாமல் போனது. ஆண்டொன்று கடந்தபோதே நிரலாக்க மற்றும் மொழிநுட்ப அறியாமை விலகி நாவி என்று எனக்காக சந்திப்பிழைகளுக்கு ஒரு செயலி தயாரிக்க முடிந்தது. 

அச்செயலி திருத்துதலை விட கற்பிப்பதையே முக்கியமாகக் கொண்டிருந்தது. சந்தி இலக்கணத்தின் தேவை அத்தகையது. அந்த நாவி பிழைதிருத்தியைப் பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டபோது போது பலர் அதைப் பயனுள்ளதாகவே கருதினர். ஆனால் முழுமையான எழுத்துப்பிழை திருத்தியுடன் ஒப்பிடுகையில் நாவின் பங்கு சொர்ப்பம் என்று அத்திருத்திக்காகப் பல்வேறு நூல்களும், அறிஞர்களின் விளக்கங்களும் படிக்க நேர்கையில் உணரமுடிந்தது.

எளிதில் கிடைக்கக்கூடிய கூகிள் ஸ்கிரிப்ட் மொழியைக் கற்றுவந்தபோது நண்பர் தகவலுழவனின் ஒரு வேண்டுகோளுக்கிணங்க ஒரு தானியங்கி செய்து இணைய அகராதி ஒன்றில் 1.1 லட்சம் தமிழ்ச் சொற்களை விக்சனரிக்காக எடுத்தேன். அப்போதைக்கு அப்பணி முடிந்தது. ஆனால் இப்பட்டியலே பிற்கால எழுத்துப்பிழை ஆய்விற்கு அடிக்கோளாக இருந்தது. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாததால் அகராதிச் சொற்கள் மட்டும் கொண்டு ஒரு திருத்தி செய்வது முடியாத காரியம் என்பதால் ஆர்வமிருந்தாலும் வழியின்றி திருத்திக்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டது 

தமிழ் பிழை திருத்திக்கான அடிப்படை நுணுக்கம் என்ன என்ற தொடராய்வு ஒருநாள் வெற்றிபெற்றது அதாவது வேர்ச்சொல்லையும் அதன் குடும்பப் பண்பையும் கணினிக்குக் கற்றுத்தருவதன் மூலம் அந்த வேர்ச்சொல்லின் அனைத்துவடிவங்களையும் கணினி புரிந்து கொள்ளத் தொடங்கியது. அடுத்த சவால் தொழிற்நுட்பம். இவ்வளவு பெரிய பட்டியலை எவ்விதத்தில் கணினிக்குத் தருதல் உகந்தது என்று தேடியும் கற்கவும் முனையும் போது கூகிள் ஸ்கிரிப்ட் மொழியே ஆய்வு நிலைக்குப் பொருந்தியது. காரணம் இம்மொழியை இயக்க பொருட்செலவில்லை, மேகநுட்பம் என்பதால் எங்கிருந்தும் ஆய்வைத் தொடரலாம், பிற கூகிள் விரிதாள் போன்ற தரவுதளச் செயலிகளை எளிதில் அனுகலாம்.

முன்னர் திரட்டிய சொற்பட்டியலை இப்போது குடும்பம் குடும்பமாகப் பிரிக்கப்பட்டது, இப்பணிதான் மிகவும் தொய்வைக் கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு சொல்லையும் பல்வேறு நிலைகளில் சோதித்த பின்னர்தான் அதற்கான குடும்பத்தில் சேர்க்கமுடியும். கொஞ்சம் தானியக்கம், கொஞ்சம் கைமுறைத் திருத்தம் எனக் கடந்து முழுப் பட்டியல் தயாரானது. புதிய திருத்திக்கான நிரலாக்கக் கட்டமைப்பை முடித்து இயக்கும் போது புதிய சவாலாக அதீத காலத்தாமதம் ஏற்பட்டது. 

காரணம் இலட்சக்கணக்கான சொற்களைப் பிடித்துச் சோதித்து பிழைகாட்டுவதற்குள் நாமே படித்துத் திருத்திவிடலாம் என்பது போன்ற தாமதம். சில புதுப்புது யுக்திகள் மூலம் திருத்தியின் நேரத்தைச் சேமிக்க முயன்றாலும் பலனில்லை. காரணம் கூகிள் ஸ்கிரிப்ட் ஆய்விற்கு ஏற்றது ஆனால் வெளியீட்டிற்கு உகந்ததில்லை என்று புரிந்தது. அதன் பிறகு ஒருவிதத்தில் இத்திட்டம் கிடப்பில் மீண்டும் போடப்பட்டது. பைத்தான் என்ற மொழியை இயக்கும் அளவிற்குக் கற்கமுடியவில்லை. என்னிடமிருந்த பழைய விபி தொகுப்பியில் தமிழ் ஒருங்குறி இணக்கமில்லை.

இறுதியாக சி#, டாட் நெட் மொழி கற்க வாய்ப்பு கிடைத்தது. அவ்வாய்ப்பில் எழுத்துப்பிழை திருத்தியை மீண்டும் புதிதாக உருவாக்க முயலப்பட்டது புதுமொழிக்கே உரிய தடங்கல்களைத் தாண்டி மேசைக்கணினிக்கான செயலிமட்டும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதைக் கொண்டு இணையத்தில் நேரடியாகப் பயன்படுத்த முடியாததால் எல்லாருக்குமானதாக இதுயில்லை. டாட் நெட் நுட்பத்தில் இணையதளத்தை உருவாக்குவது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த தீர்வாகப்பட்டது. அதற்கான புரவல் வழங்கியின் பொருட்செலவு கொஞ்சம் தயக்கத்தைத் தந்தபோது வலைத்தமிழ் பார்த்தசாரதி அண்ணன் உடனே தனது வழங்கியைத் தந்தார். பின்னர் சில மாதத்தில் புதிய தளம் கட்டப்பட்டு வாணி பிறந்துவிட்டாள்
--

எழுத்துப் பிழை திருத்தி சவால்கள்

பொதுவாகப் பிழை திருத்திகளில் கொடுக்கப்படும் சொற்களில் கணிக்கவியலாச் சொற்களை விட்டுவிட்டுப் பிழையென கண்டுபிடித்த சொற்களை மட்டுமே சுட்டுக்காட்டும் யுக்தி கையாளப்படும். அரிசியில் கல்லைப் பொறுக்குவது போல மேலோட்டமான இம்முறையில் ஒருவகையில் நம்பகத்தன்மை குறைகிறது. 

சல்லடையால் ரவையைச் சலிப்பதுபோல ஆழமாகச் சொற்களைச் சேதித்து, பிழைகளைக் காட்டும் முறையே சிறந்தது. ஆனால் தமிழ் போன்ற ஒட்டுநிலை மொழிகளில் அதாவது ஒன்றிக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து வழங்கப்படும் போது இது சாத்தியாமா என்று கேள்வி எழும். ஒரு பெயர்ச்சொல்லானது 

வினைச்சொல்லுடனும் இணைந்து எண்ணிக்கையில்லாத அளவிற்கு வரிந்தாலும் பிரதானமான பயன்பாட்டின்படி ஒரு பெயர்ச்சொல்லானது  சுமார் 640 விதங்களிலும் அதேபோல வினைச்சொல்லும் பிரதானமான பயன்பாட்டின்படி 1450 விதங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலப் பிழைதிருத்தி யுக்தியுடன் தமிழில் அமைக்க குறைந்தது சுமார் 35 மில்லியன் சொற்கள் வேண்டும். 

பிறமொழி திருத்திகளை மட்டும் பின்பற்றி இம்மாதிரி இயல்மொழி பகுப்பாய்வு என்பது மிகவும் கடினமாகிவிடும். ஆனால் நமது தொல்காப்பியரும் நன்னூலாரும் தமிழுக்கான புணர்ச்சி விதிகளை ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே தந்துவிட்டனர். 

எனவே மற்ற மொழி திருத்திகளைப் பின்பற்றாமல் தமிழுக்கென்று புதிய அணுகுமுறைவேண்டும். அதில் தற்காலநடைமுறையில் உள்ளவிதிகளைக் கணினிக்குக் கற்பிப்பதன்மூலன் 35 ஆயிரம் வேர்ச்சொற்கள் மட்டும் கொண்டு சாராசரியான பிழைதிருத்தியை வடிவமைக்கமுடியும். 

இரண்டே ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இதில் "தமிழர்களாகயிருக்கிறார்கள்" என்று தட்டச்சிட்டாலும் படித்துப் புரிந்துகொண்டு "தமிழர்களாகவிருக்கிறார்கள்" என்று பிழைதிருத்தி வழங்கும்.

இயல்பாக ஒரு எழுத்துப்பிழை திருத்தி உருவாக்குவதில் உள்ள சவால்கள் நீங்கலாக, தமிழில் பிழை திருத்திகள் உருவாக்குவதில் எதிர்படும் சவால்கள் சில

பிறமொழி திருத்திகளைப் பின்பற்றி தமிழுக்கு உருவாக்க முடியாததால் தமிழ்ப் பின்புலத்தில் இருந்து சிந்திக்கவேண்டும். தமிழும், கணினியும் ஆழமாகக் கற்கவேண்டும்.

தற்காலத் தமிழ்ச் சொற்பட்டியல்கள் எளிதில் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் "தேர்வுக்குழு", "காவல்நிலையம்", "முதலமைச்சர்" போன்ற இருசொலால் இணைந்த ஏராளமான சொற்கள் அகராதியிலும் இருப்பதில்லை அத்தகைய சொற்களைத் தானியங்கி கருவி கொண்டோ, கைமுறையிலோ இணையத்திலிருந்து திரட்டவேண்டும்.

ஒரு மூலச் சொல் எந்தெந்த வகையில் தற்காலத்தில் பிற இடைச்சொல்லுடன் புணரும் என்ற தகவல்கள் எளிதில் தெரிவதில்லை எனவே அதற்கான பட்டியலை முதலில் தயாரிக்க ஒரு தமிழ் வாசகராக மாறவேண்டும்.

தயாரித்த பட்டியல் மூலம் ஒரேமாதிரி விதிகள் கொண்ட சொற்களை அதற்கான பகுப்பில் இடவேண்டும். இதுதான் கடினமான பணி. கொஞ்சம் சொற்களைப் பகுப்பில் போட்டப்பிறகு புதிதாக ஒரு விதி அவற்றுக்குள் மாறுபடும் பிறகு மீண்டும் முதலிருந்து பகுக்கவேண்டும்

எழுத்துப்பிழை திருத்தி என்பது நீண்டகாலத் திட்டம் என்பதாலும் வணிகச் சந்தை இல்லையென்பதாலும் கல்லூரி மாணவர்கள் முதல் தனியார்வரை உழைப்பையோ, பொருளையோ செலவளிக்க முடிவதில்லை.

பிழை போல இருக்கும் சில சொற்கள் வேறு பொருளில் சரியான சொல்லாக இருக்கிறது. உதாரணத்திற்கு "அவண்" என்ற சொல் ஆண்பால் சுட்டுப்பெயரின் பிழையான வடிவம் என நினைத்தால் தவறு. இச்சொல்லுக்கு அவ்விடம் என்ற பொருள் உள்ளதால் சரியான சொல்லே. இதுபோல பல சொற்கள் விடுபடலாம் அதனை சோதனை செய்து கண்டுபிடிக்கவேண்டும்.

கணித்தமிழ் இன்றைய நிலை

கடந்தாண்டு புதுவையில் நடந்த உத்தமம் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க பதிவுக் கட்டணம் 3000 ரூபாய். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் வல்லுநர்கள் போன்ற தொழில்ரீதியாக மேம்பாட்டைப் பெறக்கூடியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும். தன்னார்வலர்களால் முடியாது. அதேவேளையில் தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்ற பிறகு கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல நிதி பல்வேறு அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. 

ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? சரியாகப் பயன்படுகிறதா? எனத் தெரியவில்லை. இவர்களின் செலவுகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாறவேண்டும். அந்த நிதியைக் கொண்டு இத்தகைய ஆய்வு மாநாட்டுக் கட்டணத்தை ஏற்று தன்னார்வலருக்கு உதவியிருக்கலாம்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் எழுத்துணரி முதல் சிறுசிறு அகராதிகள், ஆண்ட்ராய்ட் எழுதிவரை சிலர் உருவாக்கினாலும் அதிகப் பொருட்செலவுடன் உருவாக்கியுள்ளதால் அவற்றை இலவசமாக அவர்கள் வெளியிடுவதில்லை. அரசு அவற்றை வாங்கி திறமூலமாக நாட்டுடைமையாக்கலாம் அதன் மூலம் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு உதவும். ஒரு நிலையான வருமானம் இருப்பதால்தான் என்னால் தொடர்ந்து இதனைச் செய்துவரமுடிகிறது. வருமானம் குறைவாக இருந்து படைப்பாற்றல் இருக்கும் ஒருவர் தொழிற்நுட்பத்தில் பங்களிப்பது இயலாதகாரியமாகிவிடுகிறது. 

தமிழை வைத்து வியாபாரம் பார்ப்பதா? என்று கூறிக்கொள்பவர்கள் தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கு புரவலர்களாக இருப்பதில்லை. இப்படி இருக்கும் போது எப்படி இலவச மென்பொருட்கள் வளரும்?  புத்தகங்களுக்குச் சந்தை உள்ளதோ அதேபோல தமிழ் மென்பொருட்களுக்கும் சந்தை உருவாகும் போது ஆற்றல் மிக்க மென்பொருட்கள் வந்து குவியும் என்று நம்புகிறேன்.


தமிழில் இது போன்ற ஆக்க பூர்வமான பணிகள் செய்யும் நீச்சல்காரன் போன்றவர்களுக்கு நீங்கள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இதனை பலருக்கும் கொண்டு சேர்க்க உங்கள் நட்பு வட்ட வட்டத்தில் பகிர அழைக்கின்றேன்.



பின்குறிப்பு

பலரும் என்னிடம் குறுகிய காலத்தில் அதிக மின் நூல்களை வெளியிட்டு உள்ளேன் என்று ஆச்சரியப்பட்டனர்.  

அதற்குக் காரணம் நீச்சல் காரன் வெளியிட்டுள்ள சந்திப்பிழை திருத்தி மற்றும் வாணி தமிழ் பிழைத்திருத்தியுமே காரணம் ஆகும். 

கடந்த 2001 வருடம் தொடங்கி அதற்குப் பிறகு தமிழகத்தில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 70 சதவிகிதம் ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக் கொண்டு வருவதால், அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் இணையத்தில் புழங்கும் போது அவர்கள் மறந்த தமிழ் வார்த்தைகளை நிச்சயம் இது போன்ற மென்பொருட்கள் அவர்களுக்கு அடையாளம் காட்டும் என்பதால் இவரைப் போன்றவர்கள் ஆதரிப்பது நமது கடமையாகும். 

தமிழ் என்ற மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல பிழைப்பு வாதிகளைத் தாண்டி இவரைப் போன்ற குறுகிய நபர்கள் மூலம் தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்வோம்.



Tuesday, March 17, 2015

நமக்குத் தேவையானது. இது முக்கியமானது.

புதிய எழுத்துப்பிழை திருத்தி அறிமுகம்

தமிழில் நாவி சந்திப்பிழை திருத்தி உட்பட மொத்தம் நான்கு திருத்திகள் உள்ளதாக தமிழ்ப்பேராயம் கூறுகிறது. ஆனால் உலகில் யாவரும் இணையத்தில் பயன்படுத்தும் வண்ணம் தமிழில் முழுமையான ஒரு திருத்தி உருவாக்குவது மிகவும் சவாலான காரியம். தமிழ் மென்பொருட்களுக்கு வணிகச் சந்தை இல்லையென்பதாலும், ஆய்வுச் செலவும், ஆக்கச் செலவும், இணையவெளியீட்டுச் செலவும் பெரிய தடையாகவுள்ளதால் இதுவரை ஒரு முழுமையான மென்பொருள் வெளியாகவில்லை.

அதற்கான ஒரு சிறுமுயற்சியாக இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது. 

தற்போது பீட்டா பதிப்பாக(சோதனை நிலையில்) வெளிவந்துள்ள இத்திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செழுமையான வடிவமாக வெளிவரும். அதுவரை முக்கியமான சில சொற்களும் விடுபட்டிருக்கும் வழுக்களும் இருக்கலாம், ஆனால் பல்வேறு இலக்கண விதிகளைப் பயன்படுத்தி இத்திருத்தி இயங்குவதால் சுமார் 70 மில்லியனுக்குமேல் சொல்வடிவங்களைப் புரிந்துகொள்ளும்.

நாவியில் பயன்படுத்தியது போல உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து "திருத்துக" பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு "சம்மதம்" பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சுயதிருத்தம் என்ற தேர்வு பொத்தானைத் தேர்வு செய்யாவிட்டால் இக்கருவி தானாக எந்தப் பிழையையும் திருத்தாது, வெறும் பரிந்துரை மட்டும் வழங்கும். காட்டப்படும் பரிந்துரைப் பட்டியலில் வாணியின் பரிந்துரைகளும், பயனர் அளித்த சொல்லும் இருக்கும். கூடுதலாக பயனர் திருத்திக் கொள்ள எழுத்துப்பெட்டியும் உள்ளது. ஒரு சொல்லை மட்டுமோ அல்லது மொத்தமாகவோ மாற்றிக் கொள்ளலாம். 

மேலும் உதவிக்குறிப்புகள் இங்கே

இத்திருத்தி என்ன செய்யும் என்றால்,

இறுதி எழுத்துச் சந்திகள் தவிர (அதற்கு நாவியைப் பயன்படுத்தலாம்) மற்ற சந்திகளைக் கணித்துப் பரிந்துரைக்கும். 

உதாரணம்:எடுத்துகொள்ள -> எடுத்துக்கொள்ள, அகட்சி -> அக்கட்சி என்று பரிந்துரைக்கும்.

புணர்ச்சி விதிப்படி இதன் சொற்பிழை சோதனை அமைவதால் புணர்ச்சி தவறிய சொற்களையும் சுட்டிக் காட்டும். உதாரணம்:நூறுக்கும் - > நூற்றுக்கும் என்று சரியாகப் பரிந்துரைக்கும். "கருத்தில் கொண்டு" என்று எழுதினாலும் "கருத்திற் கொண்டு" என்று எழுதினாலும் புரிந்துகொள்ளும். "பொருற் பெயர்" என்று தவறாக எழுதினால் இவ்வழியில் "பொருட் பெயர்" எனப் பரிந்துரைக்கும்.

ல-ள-ழ, ன-ந-ண, ர-ற போன்ற வேற்றெழுத்து வேறுபாடுகளைக் கண்டு பரிந்துரைக்கும். சில இடங்களில் (ஒளி,ஒலி,ஒழி) இயல்பான சொல் இருந்தால் தவிர இதர இடங்களில் சுட்டிக் காட்டி பரிந்துரைக்கும். உதாரணம்:ஒலிந்துவிட்டேன் -> ஒளிந்துவிட்டேன்/ஒழிந்துவிட்டேன், சுவறில் -> சுவரில் எனப் பரிந்துரைக்கும்.

பிழையான சொற்களைக் கண்டுபிடித்த பிறகு இருவகையாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். ஒன்று இலக்கணம் சார்ந்த திருத்தங்களான புணர்ச்சி திருத்தம், ஒற்று, வேற்றெழுத்து திருத்தம் போன்றவற்றைச் செய்யும். இரண்டாவது இலக்கணம் சாராத திருத்தங்களான தட்டச்சுப் பிழை திருத்தம், வழக்குமொழி திருத்தம், சில பிறமொழிச்சொல் திருத்தம் போன்றவற்றையும் செய்யும்.

பிறமொழிச் சொற்கள் சிலவற்றையும் திருத்தும் உதாரணம்: டாக்டர் -> முனைவர்/மருத்துவர்

வழக்குமொழிகளைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான திருத்தங்கள் தென்தமிழக வழக்கிற்கு வழங்குகிறது. வடதமிழகம், இலங்கை வழக்குகளைக் காலப்போக்கில் இணைத்துக்கொள்ளப்படும். உதாரணம்: விழுந்திருச்சே ->விழுந்துவிட்டதே, அடிச்சுகிட்டு -> அடித்துக்கொண்டு
தட்டச்சுப் பிழைகள் என்பது கண்ணுக்குத் தெரிந்த எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத தவறான ஒருங்குறி வடிவங்களும்தான். பல்வேறு தட்டச்சு இடைமுகங்களில் தமிழ் உள்ளீட்டு முறைகளில் சிலசமயம் தவறாக எழுத்துக்கள் சேர்ந்துகொள்ளும். 

உதாரணம்: க + ஒ என்பதை க+ எ+ அ என்று எடுத்துக்கொள்ளும் கொள்கை -> கொள்கை. துணைக்காலுடன் ஒற்றுக்குறி சேர்ந்து ரகரவொற்றாகத் தெரியும் ா் -> ர் போன்ற பல பரிந்துரைகளும் உண்டு

வழமையான பிற மொழி சொற்பிழை திருத்தி போல பிழையாக எழுதிய சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டிவிடும். சில முக்கிய பிரமுகர்கள், கதைமாந்தர்கள், முக்கிய நகரங்கள் தவிர பொதுவாக உயர்திணைப் பெயர்கள், இடங்களின் பெயர்கள் தற்போதைக்குச் சேர்க்கவில்லையென்பதால் அச்சொற்கள் அடிக்கோட்டுக் காட்டப்படும். 

எனவே அடிக்கோடிட்டுக் காட்டுபவை எல்லாம் பிழையென்று அர்த்தமில்லை திருத்தியின் பட்டியலில் இல்லாத சொல்லெனப் பொருள் கொள்க

இச்செயலியின் ஆய்விற்கே பொருளாதாரச் சிக்கல்கள் நிலவியபோது இணைய வெளியீடு முடியாமல் ஓராண்டு கடந்துபோனது. பெருந்தன்மையுடன் வலைத்தமிழ் நிறுவனம் தனது வழங்கியைக் கொடுத்துதவியதால் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்களுக்கும்,
இலக்கண ஆலோசனைகள் அளித்துவரும் முனைவர் செங்கைப் பொதுவன் அவர்களுக்கும்,

தொடர்ந்து ஆலோசனைகளும், பலருக்கு அறிமுகமும் செய்துவரும் ஜோதிஜி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயன்படுத்திப்பாருங்கள். 

வழமைபோல குறைகளையும் ஆலோசனைகளையும் எமக்கு அறியத்தாருங்கள், 

பயனுள்ளதாக இருந்தால் வாணியை அடுத்தவருக்கும் அறியத் தாருங்கள்



Wednesday, March 04, 2015

மாற்றங்கள் உருவாக்கும் பாதைகள்

ரு நூற்றாண்டின் நான்கில் ஒரு பகுதியை அனுபவத்திற்கு செலவழித்துள்ளேன் என்பதை வாசிக்கும் போது சற்று மிரட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகள் என்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தானே?  இந்த 25 ஆண்டுக்குள் உருவான சமூக மாறுதல்களும், மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நவீன தொழில் நுட்ப வசதிகளும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் நிறைய மாற்றம் அடையச் செய்து உள்ளது. நானும் மாறியுள்ளேன். நான் விரும்பாவிட்டாலும் நான் மாறியாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கின்றேன்.

ம்மிடம் இன்று பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயணம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான தேவைகளும் உள்ளது. நெருக்கடிகள் நம்மை உந்தித் தள்ளுகின்றது. இன்று எவராலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது. 

ன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்களால் மட்டுமல்ல, பணிபுரிகின்ற பணிச்சூழலில் நினைத்த நேரத்தில் கண்டங்களைக் கூடக் கணப் பொழுதில் கடந்து விட முடிகின்றது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்திற்குள்ளே இருக்கும் அடுத்த ஊருக்குள் செல்ல முடியாமல், அந்த ஊரைப் பற்றி அறிந்திருக்காமலேயே வாழ்ந்து முடித்தவர்கள் அநேகம் பேர்கள். என் மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்குக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் பள்ளிச்சுற்றுலா என்ற பெயரில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றுள்ளேன்.  இன்று நான் தமிழ்நாட்டுக்குள் இன்னமும் முழுமையாக செல்ல வாய்ப்பு அமையாத மாவட்டங்கள் மூன்று உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்யாகுமரி.

டை மழை பெய்தால் கண்மாய் மீன். அளவான மழை என்றால் கடல் மீன். இது தவிர அன்றாட உணவில் ஆட்டுக்கறி. கோவில் திருவிழா என்றால் கோழிக்கறி. வீட்டு விசேடங்கள் என்றால் காய்கறிகளின் அணிவகுப்பு விருந்து தான் வாழ்க்கை. உணவு தான் முக்கியம். உணவே தான் மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை. இன்று எப்போது தான் உங்கள் நாக்கை அடக்கப் போறீங்களோ? என்று மனைவி கேட்ட காலம் மாறி மகள்கள் கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்துள்ளது. 

மார்கழி மாதம் குளிர் பொறுத்து, சில சமயம் சுடுதண்ணீர், பல சமயம் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நான்கு சந்துகள் தாண்டி இருந்த பெருமாள் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக அக்காக்களுடன் ஓடியுள்ளேன். பொழுது விடியாத நிலையில் இருட்டுக்குள் தடவி பயந்து ஓடி கோவிலை அடைந்து பூஜை முடிந்து பெற்ற வெண் பொங்கல், சுண்டல் சமாச்சாரத்தைச் சூடு பொறுக்க முடியாமல் தின்று முடிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அடுத்த நாளும் அதே கோவிலுக்குச் செல்ல வைத்தது.  இன்று கோவில்களில் கூடும் கூட்டமும், இதற்கென தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் எனக்கு வேடிக்கைப் பொருளாக மாறியுள்ளனர்.

வீட்டுக்கருகே இருந்த கோவில் குளக்கரையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அன்று பேசப் போகின்ற அரசியல்வாதியின் பழையைப் பேச்சை கேட்டுக் கொண்டே கடந்த போதும், இரவில் பாதித் தூக்கத்தில் தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது அறைகுறையாக அன்றைய அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டபடியே அவற்றை மறந்து போனதுண்டு. "இங்கே அரசியல் பேசாதீர்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை எந்த இடத்திலும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக 24 மணி நேரமும் ஒவ்வொரு இடத்திலும் தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.  ஆனால் தீவிர அரசியல் கொள்கைகள் மாறி திருகுதாள அரசியல் அங்கீகாரம் பெற்று விட்டது.

றாம் வகுப்புப் படித்த போது படக்கதைகள் அடங்கிய புத்தகத்திற்காக அலைந்த பொழுதுகள், பத்திரிக்கைகளில் வந்த நடிகர் மற்றும் நடிகைகளில் கிசுகிசுகளைப் படிக்க அலைந்த தருணங்கள், விடுமுறை தினங்களில் அருகே இருந்த நூலகத்தில் குடியிருந்த நேரங்கள் எனக் கழித்த பொழுதுகள்.  ஆனால் இன்று வாரப்பத்திரிக்கைகள் தவிர்த்து பெரிய கட்டுரைகள் அனைத்தையும் டேப்லெட் கணினி வழியாகப் படிப்பது தான் வசதியாக உள்ளது. 

ரு நாள் கூடத் தவறாமல் சென்ற பள்ளிக்கூட வாழ்க்கை. பயம் கலந்த மரியாதையோடு ஆசிரியரைக் கண்டு ஒளிந்து திரிந்த வாழ்க்கை. கல்வி தான் நம் வாழ்க்கை. ஒழுக்கம் மட்டுமே நமக்கு உயர்வைத் தரும் என்ற அறிவுரைகள். கல்லூரி வந்த போதிலும் எதிர்காலம் குறித்த எவ்வித அவநம்பிக்கைகளையும் சுமக்காத நம்பிக்கைப் பொழுதுகள். இந்த உலகமே அழகானது என்று நினைத்து வாழ்ந்த காலங்கள்.  நாம் வாசித்த புத்தகங்களில் படித்த, பாதித்த சாதனையாளர்களைப் போல நாமும் ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்வான  நிலைக்கு வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வாழ்க்கை என் அனைத்தும் கடந்த 25 ஆண்டு பயணத்தில் மாறியுள்ளதை இந்த மின் நூல் வழியாகப் பேசியுள்ளேன். 

ள்ளிக்கூடத்தில் மக்குப் பையனுக்கும் சராசரி மாணவனுக்கு இடையே உள்ள ஒரு இடத்தை ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து இருந்தார்கள். காரணம் பாராட்டிவிட்டால் பாம்பு படம் எடுத்து ஆடி விடும் என்ற நம்பிக்கையில். 

"உன் அக்கா, அண்ணன் பெயரைக் கெடுப்பதற்காகவே நீ எங்களிடம் வந்து சேர்த்துள்ளாய்" என்ற பொதுப் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் முத்துச் சாமி வழங்கிய ஆசிர்வாதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. "இந்த வருடம் நீ தேர்ச்சி பெற மாட்டாய். கணக்கில் பத்து மதிப்பெண்கள் எடுத்தாலே ஆச்சரியம்" என்றார். அவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு 84 மதிப்பெண்கள் எடுத்தேன்.  தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை கையாளத் தெரியாதவனாக இன்னமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

னால் வாரந்தோறும் ஐம்பது லட்சத்தைக் கையாள வேண்டிய பொறுப்பை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது. பணம் கைக்கு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்த கணக்குகளை ஒப்படைத்து விடுவதால் "அவர் கணக்கு விசயத்தில் புலி" என்று பாராட்டும் அளவிற்கு நிறுவன நிர்வாக விசயங்களில் திறமையைக் காட்ட முடிகின்றது. எனக்குப் பின்னால் எவர் என் பதவியில் வந்து அமர்ந்தாலும் நான் உருவாக்கிக் கொடுத்த "வழிகாட்டலை"த்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் சொல்லுகின்ற அளவிற்கு ஒவ்வொன்றிலும் எளிமை மற்றும் நேர்மையை உருவாக்க வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது.

நகைமுரண் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று போல. 

மாற்றம் என்பது மட்டும் மாறாதது. மாற்றங்கள் தான் உங்களை வழி நடத்துகின்றது. மாற்றமே உங்களை உருவாக்குகின்றது. மாற்றத்தை உங்களால் உள்வாங்க முடியாத பட்சத்தில் தேங்கிக் கிடக்கும் குளத்தைப் போல உங்கள் வாழ்க்கை நாற்றம் எடுத்து விடும் என்று அர்த்தம். நான் மாறினேன். என்னை இந்தச் சமூகம் மாற்றியது. மாற்றத்தை உள் வாங்கினேன். தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டேன். 

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டேயிருந்தால் இருட்டறையில் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகின்றோம் என்று அர்த்தம். பல சமயம் திடீரென வெளிச்சம் நம் மீது பரவும் போது நம் வளர்த்துக் கொண்டுள்ள குறுகிய எண்ணங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் பார்வைக்குப் படத்தான் செய்யும். 

வெளிப்படைத்தன்மை எல்லா இடத்திலும் தேவையில்லை என்றாலும் உங்கள் மனசு விடாமல் துரத்தும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே தானே ஆக வேண்டும்? நான் என்னையே கேள்வியாக்கிக் கொண்டதுண்டு. என்னையே கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டதும். மற்றவர்களின் கேலிகளைக் கவனித்ததுண்டு. மொத்தத்தில் ஒவ்வொரு நாளையும் பள்ளிக்கூடத் தினம் போலப் பார்ப்பதுண்டு. காரணம் இங்கே ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள். நாம் மாணவர்களாக வாழும் பட்சத்தில். 

ணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றையும் பற்றி இந்த மின் நூலில் பேசியுள்ளேன். கடந்த 14 மாத மின் நூல் உலகில் என் முந்தைய ஆறு மின் நூல் வழியாக 66000+ நபர்களைச் சென்றடைந்துள்ளேன். "வாழ்க்கையில் இலக்கு தேவை" என்கிறார்கள். நிச்சயம் ஒரு லட்சம் என்ற இலக்கு நோக்கி இந்தப் பயணம் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

ந்த மின் நூலை நண்பர் ராஜராஜனுக்கு சமர்பித்துள்ளேன். அட்டைப்படம் உருவாக்கிக் கொடுத்த நண்பர் மனோஜ் மற்றும் என் மின் நூல்களுக்குச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றி.

ஏதோவொரு தருணத்தில், யாரோ ஒருவர், உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு என் எழுத்தை வாசித்துக் கொண்டிருப்பார் என்பதே யான் பெற்ற இன்பம்.