Wednesday, June 27, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 4

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இரண்டு கரங்கள் உண்டு. ஒன்று. 

நிர்வாகத்துறை. மற்றொன்று காவல் துறை. 

இந்த இரண்டுக்குள் பின்னிப் பிணைந்த நரம்பு மண்டலமென்பது பல்வேறு கிளையாகப் பிரிந்து அதன் மூலமே இங்கே மொத்த அரசு எந்திரமே நடக்கின்றது. 

சாதாரணக் கிராமத்தில் வசிக்கும் கிராம நிர்வாக அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரைக்கும் ஒரு பக்கம். 

மற்றொரு புறம் கடைநிலை காவலர் நிலையில் இருந்து அதிகபட்சமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி. வரைக்கும் நரம்பு மண்டலம் போல ஏராளமான அதிகாரிகள். இதில் பல நிலைகள். 

பல்வேறு பிரிவுகள். 

நமக்கு நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கடந்த 71 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருப்பது காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள அரசு அதிகாரிகளே. அரசியல்வாதிகள் இவர்களை மிரட்டலாம், அதட்டலாம் அதிகபட்சம் வேறொரு இடத்திற்குத் தூக்கியடிக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் வயது வரைக்கும் இவர்களை அசைக்கவே ஆட்டவோ முடியாது என்பது தான் எதார்த்தம். 

அதிலும் இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி போன்ற பதவிக்கு வருபவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள். 

ஒரு மாவட்டம் சிறப்பாக இருக்க அந்த மாவட்டத்தில் இருக்கும் (குறைந்தபட்சம் ஆறு தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ? அதை விட நினைத்த நேரத்தில் எவரையும் கேட்காமல் தன் அதிகார வரம்புக்கு உட்பட அத்தனை நல்ல காரியங்களையும் அந்த மாவட்டத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு மாவட்ட ஆட்சியரால் செய்ய முடியும். 

துண்டு கஞ்சா விற்பனை வரைக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள இந்திய காவல் பணியின் மூலம் தலைமை பொறுப்புக்கு வந்தவரால் கட்டுப்படுத்த முடியும். 

அரசியல்வாதிகள் குறுக்கீடுகள், அதிகார துஷ்பிரயோகம், அரசியல்வாதிகளிடம் பணிந்து நின்று தன்னை வளப்படுத்திக் கொண்ட பல அதிகாரிகளைத் தான் நாம் பார்த்து பார்த்து வெறுத்துப் போயுள்ளோம். ஆனால் இந்தக் கூட்டமைக்குள் நூறில் பத்து நல்ல அதிகாரிகள் இருப்பதும், அவர்கள் மூலம் பல நல்ல விசயங்கள் நடந்து கொண்டிருப்பது பொது மக்களின் பார்வைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிலரால் விளம்பரங்களுக்குப் பெருமை. பலருக்கு விளம்பரமே சாபமாகவும் போய்விடுவதுண்டு. 

சகாயம் சுடுகாடு வரைக்கும் படுத்து எழுந்து வந்த போதிலும் நீதிமன்றம் கூட இன்று வரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. உமாசங்கர் என்னன்னவோ செய்து பார்த்தார். கடைசியில் பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டார்கள். இறையன்பு அரசாங்க செலவில் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டே சுய முன்னேற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். இது போலப் பல அதிகாரிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அஸ்ரா கர்க் என்ற அதிகாரி திருப்பூருக்கு வந்தார். மணல் லாரிகள் வெள்ளக்கோவில் தாண்டி இந்தப் பக்கம் உள்ள வர முடியவில்லை. நான்கு புறமும் சீல் வைத்தது போல ஆகிவிட்டது. ஊரடங்கும் வேலையில் தான் அவர் தினசரி வேலைத் தொடங்கும். ஒவ்வொருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தெறிக்க ஆரம்பித்தனர். ஏன் மாற்றினார்கள்? எதற்காக மாற்றினார்கள்? என்பது தெரியும் முன்பே வேறொரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.

திருப்பூரில் கமிஷனர் அலுவலகம் திறந்த நேற்றோடு மாறிய கமிஷனர் எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தாலும் பட்டியல் நீளமாகத்தான் இருக்கும். 

இப்போது தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் போராட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு புதிய ஆட்சியர் வந்துள்ளார். ஏற்கனவே இருந்தவரின் வயது 37. அவர் 2009 ஆம் ஆண்டுத் தெலுங்கானா மாநிலத்தில் தேர்ச்சி பெற்று வந்தவர். ஒரு தேர்வு மூலம் பெற்ற சிறப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்குப் பலன் தராது என்பதற்கு உதாரணமாக இருந்தவர். மிகக்குறுகிய வயதிலே அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், தொழில் சமூகத்தோடு ஒன்றோடு கலந்து ஒன்றாக மாறி தன் புத்தியில் லத்தியைக் கொண்டு சாத்திக் கொண்டு பக்குவமாக அடுத்த மாவட்டத்திற்குச் சென்று விட்டார். இது போன்ற படித்த கூமுட்டைகளும் அரசியல்வாதிகளை விடக் கொடூரமானவர்களாகவும் இருந்து தொலைத்து விடுகின்றார்கள். 

ஆனால் அரசியல்வாதிகளின் அத்தனை அராஜகங்களையும் பொறுத்து, ஏற்று, வளைந்து , தடுமாறி தட்டுண்டு தனக்கான இடம் அமைந்த பின்பு சோர்ந்து போகாமல், பழைய நினைவுகளில் இருந்து மீண்டு தன்னால் இதையாவது செய்து விட முடியுமா? என்று முயற்சித்தவர்களின் சமீப காலத்தில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் முக்கியமாகத் தான் தெரிகின்றார். 

இந்தப் பேட்டியைப் பார்த்த போது மனதிற்குள் இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்களின் இயல்பான உலகத்தையும், அந்த உலகத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் செய்ய முடியும் என்று உணர்த்தியது. 

இவர் இதில் சொல்லியிருப்பது முக்கியமான ஒன்று. 

கஷ்டப்பட்டுப் படித்து முடித்து வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் ஆவது எளிது. அதன் பிறகு? நாம் தான் நம் வேலையை இஷ்டப்பட்டுச் செய்தால் இருக்கும் சவால்கள் நம் கண்களுக்குத் தெரியாது. 
செய்பவர்கள் எத்தனை பேர்கள்? 

இப்போது மோடி வேறு இவர்களை நம்பாமல் தனியார் நிறுவனங்களில் இருந்து இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு ஆட்களைப் பொறுக்கிக் கொண்டு வரப் போகின்றேன் என்று பயம் காட்டியுள்ளார். 

இனி வளைய மாட்டார்கள். ஓபிஎஸ் பாணியில் தான் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கப் போகின்றார்கள். 

மகள் ஆசைப்படுகின்றார் என்று ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். இனி ஊக்கு, பின் ஊசி போல எப்படி வளைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்? 

https://www.youtube.com/watch?time_continue=254&v=r5xODfh-n7U



எனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே



Tuesday, June 26, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 3


அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் என் டெஸ்க் ல் என்னருகே இருந்தவன் பெயர் ஜம்புலிங்கம். சரியான முரடன். படிப்பில் சுமார் ரகம். நான் செய்ய முடியாத சாகச வேலைகளை எல்லாம் அவன் தினமும் வகுப்பில் செய்து கொண்டிருப்பான். அவன் சார்பாகப் பல முறை நானும் மாட்டிக் கொண்டதுண்டு. 

ஏதோவொரு பிரச்சனை ஒன்று உருவானது.

"வாங்க ஸ்ட்ரைக் பண்ணலாம்" என்று அனைவரையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்து விட்டான். பெண்களையும் சேர்த்து மொத்தம் முப்பது பேர்கள். நான் குதுகலமாகவே இருந்தேன். 

அப்போது விலங்கியல் ஆசிரியர் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார். அவர் பெயர் டி.குமரேசன். கடா மீசை. புல்லட்டில் வருவார். எடுத்தவுடன் கை நீட்டி விடுவார். பள்ளியில் அவரிடம் அடிவாங்காதவர்களே குறைவு. என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். காரணம் அக்காக்கள், அண்ணன்கள் அனைவரும் அவரிடம் தான் படித்தார்கள். என்னையும் படிக்கக்கூடியவன் பட்டியலில் வைத்திருந்தார். 

அவர் வருவதைப் பார்த்து நான் பின்னால் நின்று கொண்டேன். வந்தவுடன் என் பெயரைச் சொல்லி அவன் எங்கே? என்று கேட்டார். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். சட்டையைக் கொத்தாகப் பிடித்து விட்டார் ஒரு அறை. "ஸ்ட்ரைக்கா பண்றே? போய் உங்கப்பனைப் போய்க் கூட்டிக்கிட்டு வா?" என்று எத்தி ஒரு உதை விட எனக்குச் சப்தநாடியும் அடங்கி விட்டது. 

அவர் அடித்ததற்காக அல்ல. அப்பா என்ற பெயரைச் சொன்னதற்காக. 

அவர் இவரை விடப் பெரிய ஆளு. உங்களை வாத்தியார் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்? ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே காட்டுத்தனமாக அடிவிழத் தொடங்கும். 

டக் கென்று டிகே விடம் "சார் இவன் தான் எங்களைக் கூட்டிக் கொண்டு வந்தான்" என்று கதறி அழுது அப்புறம் உள்ளே சென்றது தனிக்கதை. 

கல்லூரி வந்து தான் ஆசிரியர்களிடம் அடிவாங்கியது நின்றது. ஆனால் கல்லூரி வந்த போதிலும் அப்பா கொடுத்த பூஜைகள் எப்போதும் போல நடந்து கொண்டே தான் இருந்தது. ஒன்றும் பேசவே முடியாது. பேசவும் கூடாது. பேசப் பேச ஆயுதங்கள் மாறிவிடும். 

இவற்றை மகள்களிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. கடந்த மூன்றாண்டுகளாக அவர்கள் எதையும் காதில் வாங்குவதே இல்லை. குறிப்பாக ஆசிரியர்கள் குறித்துப் பெரிய அளவுக்குக் கண்டு கொள்வதே இல்லை. எனக்கு வருத்தமாகவும் குழப்பமாகவும் இருந்தது. இந்த வருடம் பள்ளி தொடங்குவதற்கு முன்பு போய்ப் பழைய ஆசிரியர்களைப் பார்த்து விட்டு வாங்க. நன்றி சொல்லிட்டு வாங்கன்னு அனுப்பி வைத்தேன். அவர்கள் போக மாட்டேன் என்றார்கள். 

கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். 

வந்ததும் ஆளாளுக்கு என்னை எகிறத் தொடங்கினார்கள். "நாங்கள் சொன்னோம்லே? அவர்கள் எல்லாரும் சம்பளத்துக்கு வேலை பார்க்க வருகிறார்கள். நீங்க தான் பெரிசா நினைத்துக்கொண்டு இருக்கீங்கன்னு" சொல்ல என்ன நடந்தது? என்று கேட்டேன். 

"இந்த வருசம் புத்தகம் ரொம்பவே கடினமாக உள்ளது. நீங்க எல்லாம் எப்படித்தான் படிக்கப் போகிறீர்களோ?" ன்னு பயமுறுத்துகிறார்கள்? என்று சொன்னார்கள். அப்போது பாடப் புத்தகங்கள் எதுவும் கொடுக்கவில்லை. பள்ளி திறந்து ஒரு வாரம் கழித்துத்தான் கொடுத்தார்கள். பாடப்புத்தகம் இல்லாமல் பாடமும் நடத்தினார்கள். ஆனால் தவறாமல் ஒவ்வொரு ஆசிரியர், ஆசிரியைகளும் கடினம் என்ற வார்த்தையை ஒப்பிக்க எனக்கு எரிச்சலாகி விட்டது. 

வீட்டில் ஒருவருக்குக் கணக்குப் பாடம் என்றால் வேப்பங்காய் போலவே இருக்கும். அவருக்குக் கணக்குப்பாடம் டியுசன் சொல்லிக் கொடுக்க முடியுமா? என்று கேட்டு வர ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அம்மையாருடன் சென்று இருந்தேன். மகளின் பலம் பலவீனம் பற்றி நன்றாகவே புரிந்து வைத்து ரொம்பவே அழகாகப் பேசினார். 

ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. "இரண்டு நாள் கழித்து உங்கள் மகளிடம் சொல்லிவிடுகின்றேன்" என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு மகளிடம் அவர் எந்த அளவுக்கு நல்லவராக இருக்கின்றார்? தெரியுமா? என்று புகழ்ந்து பேச ஒரு மகள் சொன்னார். "அப்பா இப்போது நியூஸ் ரீல் ஓடுகின்றது. இரண்டு நாள் சொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் அப்போது தெரியும்?" என்று பீடிகையுடன் நக்கல் செய்தார். எனக்கு அப்போதும் குழப்பமாகவே இருந்தது. 

இரண்டு நாள் கழித்து ஒருவர் பள்ளியில் இருக்கும் போது அந்த ஆசிரியையிடம் போய்க் கேட்டது போது அவர் சொன்னது.

"சரிடா... நான் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஹோம் டியுசன் போறேன்டா. உங்கப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடியாது. இருபது பேர்கள் படிக்கின்றார்கள். நாங்கள் இரண்டு பேர் பார்ட்னர் போட்டு டியுசன் நடத்துறோம். வாரத்துக்கு இரண்டு நாள். மாதம் 500 ரூபாய். கேட்டுட்டு வந்து சொல்லு. நான் ஹோம் டியுசன் முடித்து விட்டு அவங்களைப் பார்ப்பேன்" என்று சொல்லி அனுப்பி உள்ளார். 

இதை வந்த போது சொன்ன மகள் ஒருவர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தார். 

"நீங்க நாங்கள் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படித்த போது இருந்த மிஸ் மாதிரி இப்ப இருக்கிற மிஸ்களை நினைக்குறீங்க. அவர்கள் எப்படிச் சம்பாரிக்கலாம்ங்றதுல தான் குறியா இருக்குறாங்க? நாங்கள் சொன்னா நீங்க உங்கள் பழைய செண்டிமெண்ட் கதைகளை எடுத்து விடுகிறீர்கள்" என்று கலாய்த்தார். 

அப்போது தான் அங்கே உள்ள ஒவ்வொரு மிஸ்களையும் பற்றி வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார். வருத்தமாகவே இருந்தது. 

எல்லாத்துறையிலும், எல்லா நிலையிலும் உள்ளவர்களுக்குப் பணம் என்பது பாடாய்ப் படுத்துகின்றது. இதுவே தலைப்புச் செய்தியாக இருப்பதால் அவரவர் தேவைகள் தான் இங்கே ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளிக் கொண்டே யிருக்கின்றது. 

நான் மகள் டியுசனுக்காகப் பேசச் சென்ற ஆசிரியை ஒவ்வொரு மாணவர்களின் நிறை குறைகளைப் பற்றித் தெளிவாகவே பேசி அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? என்று சொன்னவர் கடைசியாகச் சொன்னது தான் அதிர்ச்சியாக இருந்தது. "நாங்கள் என்ன சார் செய்ய முடியும்? எங்களுக்கு நாற்பது நிமிடம் தான் ஒரு பீரியட் க்கு இருக்கு. எங்கள் வேலை முடிந்ததும் போய்க்கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கு" என்றார். 

வேறு சில கேள்விகள் கேட்கத் தோன்றியது. கேட்காமல் வந்து விட்டேன். 

நீட் என்ற வார்த்தை தமிழகத்திற்கு அறிமுகமான பின்பு இங்கு மிகப்பெரிய வணிக சந்தை உருவாகியுள்ளது. பள்ளிகளும், ஆசிரியர்களும் தலைகீழாக மாறியுள்ளனர். பள்ளி முதலில் கேட்பதே நீட் பரிட்சையில் சேர்த்து விடுங்கள் என்பது தான். எங்கு பார்த்தாலும் தட்டியில் விளம்பரங்கள் காணக்கிடைக்கின்றது. தினமும் பத்திரிக்கையில் நுழைவுத்தேர்வு குறித்து, தங்கள் பெருமைகளை பறைசாற்றி தினமும் வந்து கொண்டேயிருக்கின்றது. 

இப்போது ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியுசன். வாரத்தில் சில நாட்கள். இது தவிர ஹோம் டியுசன் என்ற பெயரில் (ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 5000) வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கு வீட்டுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கும் கலாச்சாரத்தில் பல ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். 

முன்பு பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்று அதற்கு அரசு பொதுத் தேர்வு என்று கொண்டு வந்து தனியார் பள்ளிக்கூடத்தின் சேட்டைகளை அடக்க இப்போது ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் நடத்தாமல் ஒரு பருவம் முடிந்து பத்தாம் வகுப்பு பாடங்களையே நடத்துகின்றார்கள். அப்பொழுதே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் கொடுத்து அந்த வருடமே மொத்த பாடங்களையும் நடத்தி முடித்து விடுகின்றார்கள். எந்தப் பாடம் முடிக்காமல் இருக்கின்றார்களோ அதனைக் கோடை விடுமுறையில் வரவழைத்து அதனையும் அப்பொழுதே நடத்தி முடித்து விடுகின்றார்கள். பள்ளி திறந்ததும் தினமும் டெஸ்ட். 

பத்தாம் வகுப்பில் எந்தப் புத்தகமும் வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் எப்போதும் போல பள்ளிக்கட்டணம், புத்தககட்டணம் என்று எல்லாவற்றையும் பள்ளிக்கூடம் வசூலித்து விடுகின்றது. இது தவிர மற்றொரு கொடுமையும் உண்டு. மாலை 7.30 மணிக்கு வரைக்கும் வகுப்பு உண்டு. மாலையில் ஒரு கப் சுண்டல் கொடுக்கின்றார்கள். மாதக்கட்டணம் இரண்டு மடங்காக வசூலித்து விடுகின்றார்கள். 

இந்த நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் கூடுதலாகக் கொஞ்சம் வழங்கப்படுகின்றது. முன்பு பத்தாம் வகுப்பில் ஒரு மாணவர் ஆண்டு இறுதித் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால் அந்தப் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒரு தங்கக்காசு வழங்கினார்கள். இப்போது அது மாறி ரூபாய் 200 என்று கொண்டு வந்து விட்டார்கள். 

பள்ளி ஒரு பக்கம். ஆசிரியர்கள் மறு பக்கம். நடுவில் இணைக்கும் ஒரே சங்கிலி காசு.பணம்.துட்டு. இதற்குள் இருக்கும் மாணவர்கள் தங்களை இழந்து விடாமல் தங்கள் எல்லைகளைத் தொட தனக்குத் தானே தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தற்போது யாரிடமும் தேவைக்கு மீறி எதுவும் பேசுவதே இல்லையாம். கோபி க்கு வரும் போது உறவுக்கூட்டங்கள் கூடச் சங்கடப்படுகின்றார்களாம். அவர் இனி அரசியல்வாழ்க்கை நமக்கு இருக்காது என்பதனை தெளிவாகவே உணர்ந்து இருப்பார் போலும். 

இதுவரையிலும் அரசியல்வாழ்வில் செய்த பாவக் கணக்குகளை இந்த முறை செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் மூலம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றார் என்றே சொல்லத் தோன்றுகின்றது. 

கல்வித்துறையில் ஊழல் இருக்கத்தான் செய்கின்றது. முன்பு பெருங்குழாய் உடைந்து ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இப்போது கசிந்து கொண்டிருக்கின்றது. உதயச் சந்திரன் அவர்களும் தனக்கு கொடுத்த எல்லை வகுக்கப்பட்ட பாடத்திட்டம் உருவாக்குதல் என்ற நிலையில் இருப்பதால் இருவரும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருப்பது தற்போதைய சூழலில் மிகப் பெரிய மாற்றங்களை படிப்படியாக உருவாக்கிக் கொண்டே வருகின்றது. 

ஆனால் உதயச்சந்திரன் பாடுபட்டு, ஒருங்கிணைத்து, பஞ்சாயத்து ஏதும் உருவாகாமல் உருவாக்கிய புதிய பாடத்திட்டம் ஓரளவுக்குப் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 

இவரின் இலக்கு அடுத்த மூன்று வருடத்தில் தமிழக மாணவர்கள் எந்த நுழைவுத் தேர்வு என்றாலும் தங்கள் திறமையைக் காட்டுவார்கள். நம் தமிழக மாணவர்கள் விரைவில் தனித்துத் தெரிவார்கள் என்று சொல்கின்றார். ஆனால் இந்த ஆசிரியர்களிடம், பள்ளிக்கூடங்களிடம் இருந்து மாணவர்களை யார் காப்பாற்றப் போகின்றார்களோ? 


https://www.youtube.com/watch?time_continue=294&v=BUSWyP8l2hE



எனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே

Sunday, June 24, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2


பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிடம் அழைத்துச் சொன்னார்கள். "என்ன படிக்க வைக்கப் போகின்றீர்கள்?" என்று கேட்டேன். "அது தான் எங்களுக்கும் தெரியவில்லை" என்றார். நான் எந்த ஆலோசனையும் அப்போது சொல்லவில்லை. 

ஏதாவது தேவை எனில் அழைக்கவும் என்று சொல்லியிருந்தேன். அதன் பிறகு அழைக்கவே இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது மகள் சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது. உடம்பு எலும்பும் தோலுமாக இருக்கின்றார் என்றார். அவர்கள் வீட்டுக்குப் பின்புறம் அரசு மேல்நிலைப்பள்ளி உண்டு. 

ஆனால் அதில் அவர்கள் சேர்க்காமல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் சேர்த்து இருந்தார்கள். காலையில் ஆறரை மணிக்குப் பள்ளி வாகனத்தில் சென்று இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்வார். 

காலையில் சாப்பிடுவதில்லை. மதியம் சாப்பாடு பாதி அப்படியே திரும்பி வந்து விடும். இரவு அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் பரிட்சைக்குப் படிக்க உட்கார்ந்தால் தூங்க பத்து மணிக்கு மேல் ஆகி விடும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மீண்டும் தயாராக வேண்டும். பத்தாம் வகுப்பில் தினமும் பரிட்சை. பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு என்றார்கள். மெட்ரிக் பள்ளியில் படித்தாலும் அந்தக் குழந்தைக்கு நகர்ப்புறத்தில் படிக்கும் குழந்தையைப் போல வெளிச்சம் இல்லை என்பதனை விசேடத்தில் பேசும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் அம்மா வேறுவிதமாக அலுத்துக் கொண்டார். 

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் பார்த்து சொன்னேன். தயவு செய்து தனியார் பள்ளிக்கூடம் பக்கம் போக வேண்டாம். காரணம் உங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் என்ற பெயரில் கொள்ளைக்கூட்டம் போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆசிரியர்கள் எவரும் எனக்குத் தெரிந்து சிறப்பானவர்களாக இல்லை. நிர்வாகம் கொடுக்கும் 4000 சம்பளத்திற்குத் தகுந்த மாதிரி தான் ஆசிரியர்கள் இருப்பார்கள். மனமயக்கம் தேவையில்லை. 

வீட்டுக்குப் பின்னால் உள்ள பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றேன். சரி என்று சொல்லிவிட்டு சென்றவர் அதன் பிறகு அழைக்கவில்லை. நானும் மறந்து விட்டேன். 

நேற்று அழைத்து இருந்தார். அவர் மகள் படித்த தனியார் பள்ளிக்கூடமே வீட்டுக்கு வந்து 400 மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் பாதிக் கல்விகட்டணம் கட்டினால் போதும் என்று மண்டையைக்கழுவி அங்கேயே அன்றே அவர்களாகவே சேர்த்து விட்டார்கள். மொத்தத் தொகை எவ்வளவு என்றேன். பதினோராம் வகுப்பிற்கு 60,000 கட்ட வேண்டுமாம். ஆனால் இவருக்கும் 30,000 போதும் என்றார்களாம். 

அடப்பாவிகளா? திருப்பூரில் உள்ள மொத்த தொகையைப் போல இரண்டு மடங்காக இருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டேன். 

இதையெல்லாம் விடக் கொடுமை நீட் பரிட்சைக்கு இவர்களிடம் கேட்காமல் பெயரைச் சேர்த்துள்ளார்கள். 30,000 என்று சொல்லி அனுப்பி உள்ளார்கள். இவர்கள் பதறி கதறிக் கொண்டு போய் அய்யா சாமி எங்கள் புள்ள டாக்டராகப் படிக்க ஆசையில்லை. அதை எடுத்துடுங்க என்று சொல்லியிருக்கின்றார்கள். 

டாக்டர் இல்லை என்றால் என்ன? பொது அறிவு வளர வேண்டாமா? என்று சொல்லி திகிலூட்டியிருக்கின்றார்கள். 

நீதியும் பழமொழியும். 

அப்போது  - கந்தையானாலும் கசக்கி கட்டு 

இப்போது -  கௌரவம் காக்க தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு கண்ணீர் விடு.

எனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே

Friday, June 15, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்





இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்டத்தில் அங்கத்தினராக இருப்பவர்கள். 

1. அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். 24 மணி நேரமும் மொபைல் போனை நோண்டிக் கொண்டே இருக்கிறாள். சொன்னால் கேட்கவே மாட்டுறா? என்றாள். மகளைப் பார்த்தேன். நீங்களே சொல்லுங்கள்? தினமும் 1.5 ஜிபி இலவசமாகக் கொடுக்குறாங்க. வீணாப் போயிடாதா? இந்த அப்பாவுக்குப் புரியவே மாட்டுது என்றார். 
••••••• 
2. மகள் ரூபாய் 4000 க்கு அருகே உள்ளே ஆங்கில வழிக்கல்வியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். அப்பாவுக்கும் மகளும் தினமும் சண்டை. உன்னோடு படிச்சவங்க சென்னை, பெங்களூரென்று கிளம்பிப் போய் எப்படிச் சம்பாறிக்குறாங்க. இவ இதை விட்டுக் கிளம்பவே மாட்டுறா? இவளுக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். நான் இனி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா நகைக்கு எங்கே போறது? 

மகளைப் பார்த்தேன். 

+2 முடித்தவுடன் நான் விரும்பிய ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பாமல் விழுப்புரம் அருகே உள்ள பொட்டைக் காட்டுக்குள் உங்களை யார் கொண்டு போய்ச் சேர்க்கத் சொன்னது? நான் வெளியே எங்கேயும் வேலைக்குப் போக மாட்டேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு என் உயிரை எடுப்பானுங்க. எனக்கு இந்த வேலை புடுச்சுருக்கு. நிம்மதியா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துடலாம். நீங்க மாப்பிள்ளை பாருங்கள். கஷ்டம்ன்னா சொல்லுங்கள் நானே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறேன். 

அப்பா கத்திய கத்தலில் சென்சார் செய்யப்பட்டாலும் வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். 

•••••••••••••• 
3. மகன் விருப்பத்தை மீறி இதற்குத்தான் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குன்னு எல்லாரும் சொல்கிறார்கள் என்று கணினி சார்ந்த துறையில் மகனைத் தனியார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. மகனின் குணாதிசியம் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும். அவன் ஒரு எந்திரப் பிரியன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பைக் கில் ஏதாவது பிரச்சனை என்றால் அவனே கழட்டி மாட்டி விடுவான். அவன் மெக்கானிக்கல் விருப்பத்தையும் மீறி கணினித் துறையில் சேர்த்து விட்டார். பாதிப் படித்துப் பாதி முடியாமல் இப்போது அவனுக்குப் பிடித்த ஒர்க் ஷாப் வேலைக்குச் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பா தினமும் கத்திக் கொண்டிருக்கின்றார். 
•••••••••••••••• 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் மனைவியிடம் வந்து உங்களுக்கு மேக்கப் போட பிடிக்காதா? என்று கேட்டது அந்தக் குழந்தை. எப்படி ஆடைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படி ஐ புரே தடவ வேண்டும் என்று பாடம் நடத்தியது. மிரண்டு போனேன். இத்தனைக்கும் அவர்கள் அப்போது எந்த நாகரிமும் எட்டிப் பார்க்காத கிராமம். எப்படி இந்தக் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியும்? என்று யோசித்ததுண்டு. எப்போதும் போல அப்பனும் ஆயியும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஈஈஈ படிப்பில் சேர்த்து விட்டார்கள். ஏழெட்டுப் தாள்களை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் பணிக்குச் சென்று விட்டார். சம்பளம் பத்தாயிரம். விடுதி உணவுக்கு 4000 போக மீதிப் பணத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கின்றார். அப்பனும் ஆத்தாளும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 
••••••••••••• 

5. அவர்கள் குடும்பத்தில் அவன் தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பாவும் அம்மாவும் படிக்காதவர்கள். தன் ஊரை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். ஊருக்குள் வேலை பார்ப்பவர்கள். ஒரே மகன். ஆனால் மகனை மகள் போலவே வளர்த்துத் தொலைத்து விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்து வேலை உடனே கிடைக்கும் என்று பாலிடெக்னிக் கொண்ட போய்ச் சேர்த்தார்கள். யாருடனும் பேச மாட்டான். வீட்டுக்கு ஓட்டமாக ஓடி வந்து விடுவான். 

மறுபடியும் ஈஈஈ யில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உறவுக்கூட்டம் இதற்கு உதவியது. படித்து முடித்து நான் பரிட்சை எழுதி பெரிய இடத்திற்குச் சென்று விடுவேன் என்று சொன்னதை நம்பி கடன் வாங்கிக் காசை இறைத்தார்கள். ஆனால் திருச்சி தாண்டி வேறு ஊர் என்றால் செல்லமாட்டான். ஒரு முறை சென்னை சென்று விட்டு வந்தவன் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தானாம். காரணம் கேட்ட போது சென்னையில் பேசுற தமிழே புரியவில்லை என்றானாம். 

இப்போது நான் ஊரே விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்ற சொல்லி எல்ஐசி முகவராக மாதம் பத்தாயிரம் வருமானத்தில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். பெண் கிடைப்பது தான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கின்றது என்றார் அம்மா. 

இதை எழுதுவதற்குக் காரணம் நீட் பரிட்சை எதிர்ப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்கள் மூலம் சுரண்டப்பட்டு இருக்கின்றது என்று. 

அப்படியே பி.ஈ பக்கம் வண்டியைத் திருப்பினால் ஒரு மாணவர் குறைந்த பட்சம் 4 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கடந்த பத்தாண்டுகளில் படித்து முடித்து வேலை இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றவர்கள், இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், முழுமையாக முடிக்காதவர்கள் என்பவர்களின் பட்டியலிட்டுப் பார்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் யார் வீட்டுக்குச் சென்று இருக்கும் என்பதனை ரயிலில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன். 

தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை நான் மேலே சொன்னவர்கள் அசிங்கமாகத்தான் உச்சரிக்கின்றார்கள் என்பது தனிச் செய்தி. 

ஊருக்கு வெளியே பொட்டைக்காடு. பாதிப் பட்டா நிலம். மீதி தானாகவே இருக்கும் செல்வாக்கு வைத்து சுரண்டிக் கொண்ட நிலம். முதல் வருடம் ஒரு தளம். கல்லூரியின் கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சம்பளம் தகுதி குறித்தும் கவலையில்லை. 

ஐந்து வருடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் போன்ற வளர்ச்சி. அடுத்தச் சில வருடங்களில் கிளைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று தொடங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 500 ஏக்கர் வரைக்கும் சுனாமி போலச் சுருட்டியவர்கள் அனைவரும் இன்று இந்நாள் முன்னாள் அமைச்சர்கள். அமைச்சர்களுக்கு உதவியவர்கள், சொந்தக்காரர்கள் என்று பட்டியலிட்டால் தமிழகத்தில் ஃபேர்ப்ஸ் பத்திரிக்கைக்குத் தெரியாத பத்தாயிரம் பேர்களாவது தமிழகத்தில் இருப்பார்கள். 



தமிழகத்தில் கல்வி என்பது முழுமையாகச் சுரண்டல் தொழிலாக மாறி விட்டதால் முன்னே பின்னே இருக்குமே தவிர ஒருத்தனும் மாணவர் நலன் என்று பேச யோக்கியதை இல்லாதவனாகத்தான் இருக்கின்றான். 

இப்போது தான் அண்ணா பல்கலைக்கழகம் பி.ஈ படிப்பைக் கணினி வழியே ரேண்டம் எண் வழியே முறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்ததும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அலறினார்கள். காரணம் அடிமடியில் சூடு வைத்தால் பொறுக்க முடியுமா? 

பாவம் வசதியில்லாதவர்களும், கிராமப்புறம் சார்ந்த மாணவர்களும். உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் அவர்களைத்தான் நேரிடையாக மறைமுகமாகத் தாக்குகின்றது. அவர்கள் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றுகின்றது. அவர்கள் மீண்டு வருவதற்குள் இங்கே மாண்டவர்களின் எண்ணிக்கை பட்டியலிட்டு பார்க்க முடியாத அளவிற்கு நீண்டதாக இருக்கப் போகின்றது.