Monday, April 29, 2019

இராஜராஜன் திருமணம் -- படக்காட்சிகள்


எப்போதும் போல பெரிதாக எழுதி உங்களை சோதிக்கப் போவதில்லை. 

நண்பர் இராஜராஜன் திருமணம் 28.04.2019 அன்று சென்னையில் நடந்து முடிந்தது.  இரண்டு மாதத்திற்கு முன்பே சில நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தேன்.  குடும்பத்துடன் கலந்து கொண்டேன்.

இதில் உள்ள முகங்களை கடந்த பத்தாண்டுகளாக என் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  எத்தனை பேர்களால் கண்டு பிடிக்க முடிக்கின்றது என்பதற்காக எவரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.

முக்கியமானவர்கள் இதில் இருக்கின்றார்கள்.

புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்கள் இன்னமும் என் கைக்கு வரவில்லை.  என் நினைவுக்காக இங்கே இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.

வளமுடன் வாழ்க மணமக்கள்.


































Thursday, April 25, 2019

எழுதிய சில குறிப்புகள் 3

2019 தேர்தலும் மாற்றங்களும்.

1. ரில் வாழ்ந்த போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் பேச்சாளர்கள் இரவு 7 மணிக்குத் தான் பேச்சைத் தொடங்குவார்கள். முக்கிய பேச்சாளர்கள் நள்ளிரவில் பேசுவார்கள். கூட்டம் கலையாமல் இருக்கும். ஆனால் இதைவிட சிறப்பு என்னவென்றால் திமுக என்றால் கலைஞர் பேசிய பழைய பேச்சுக்களை மாலை 4 மணி முதல் ஒலிபெருக்கியில் ஒலிக்க விடுவார்கள். வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து இருப்பவர்கள், நடந்து கொண்டே சென்று கொண்டிருப்பவர்கள், கடைகளில் இருப்பவர்கள் அனைவர் காதிலும் அந்த கரகர ஒலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் இப்போது எந்த இடங்களிலும் பேச்சு என்பதே இல்லை.

2. எந்த கட்சியாக இருந்தாலும் யாராவது சிலராவது துண்டுச் சீட்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக வந்து கொண்டேயிருப்பார்கள். இப்போது எவரும் எந்த இடத்திற்கும் வருவதும் இல்லை. கம்யூனிஸ்ட் தொண்டர்களைக்கூட எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.

3. தொண்டர்கள் என்பவர்கள் அந்தந்த கட்சியில் இருக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ஊடகங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடி தொண்டர்கள் என்கிறார்கள். காசு கொடுத்து அழைத்து வருகின்றார்கள். காசு கொடுத்துக் கூவச் சொல்கின்றார்கள்.

4. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் என்ற வர்க்கமே இல்லாமல் போய்விட்டது. அந்தந்த கட்சியில் உள்ள அந்தந்த வேட்பாளர்கள் தான் அவரவர் தொகுதியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் போதுமானது. அதுவே பெரிய விசயம் என்கிற அளவிற்கு மக்கள் நலப் பணியில் வேட்பாளர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

5. தேர்தல் கணிப்பு என்று தொடர்ந்து ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விதமாகப் போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் யாரிடம் போய் கேட்டு எடுத்திருப்பார்கள் என்பதே ரகசியமாக இருக்கிறது. எந்த இடத்திலும் பொது மக்களை எந்த ஊடகத்தைச் சார்ந்தவர்கள் சந்தித்து நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை.

6. வாட்ஸ் அப் மூலம், தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் நடக்கின்றது என்கிறார்கள். நோண்டிக் கொண்டிருப்பவர்கள் துண்டு சினிமாக்களைப் பார்க்கின்றார்கள். வயதானவர்கள் நெடுந்தொடர்களில் மூழ்கியிருக்கின்றார்கள்.

7. யூ டியுப் ல் எந்த கட்சி பிரச்சாரமாக இருந்தாலும், எவர் பேசியிருந்தாலும் குறிப்பிடத்தக்கப் பார்வையாளர்கள் பார்த்திருப்பது உண்மை தான். அவற்றைப் பொழுது போக்கிற்காகப் பார்க்கின்றார்களா? இல்லை தெரிந்து கொள்வதற்காகப் பார்க்கின்றார்களா? என்றே தெரியவில்லை. அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் அரசியல் பேச விரும்பினால் அதெல்லாம் வேண்டாம் பாஸ். ச்சும்மா பார்த்துக் கிட்டு இருந்தேன் என்கிறார்.

8. இணையத்தில் முதலமைச்சராகச் சீமானும், எதிர்பார்ப்போடு காத்திருப்பவர்கள் டிடிவியை யும், ஆமா இவரும் களத்தில் இருக்கிறார் தானே? என்று கமலும் நம் தமிழக இளைஞர்களுக்குப் பொன்னான பொழுதைப் பொழுது போக்காக எதிர்கால தமிழக அரசியலை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

9. வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டு போடக்கூடியவர்கள் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அவர்களின் அன்றாட வேலைகளில் மட்டும் கவனமாக இருக்கின்றார்கள். தேர்தல் நாளை விடுமுறை தின நாளாக கருதிக் கொள்பவர்கள் இங்கே யார் யாருக்கோ இணையத்தில் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

10. தங்கள் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவர்களுக்கும், புதிய சொத்துக்களை பெருக்கிக் கொள்ள விரும்புவர்களுக்கும் உண்டான மக்களாட்சி தத்துவத்தை புரிந்து உங்கள் பொன்னான வாக்கை ஏதோ ஒன்றுக்காக கட்டாயம் ஓட்டு போடுங்க எஜமான்களே.

*************

ருவர் மேல் எப்போது வெறுப்பு உருவாகும் என்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒன்று பொறாமையினால் வரும். அல்லது ஆதங்கம் அதிகமாகும் போது வரும். காரணம் நம்மால் முடியவில்லை. நமக்கு வாய்ப்பில்லை. நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்கிற போது தான் உச்சகட்ட வெறுப்பு உருவாகும்.

இது உண்மையா? என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கடந்த 35 வருடங்களாக ஒரு தனிப்பட்ட நபரின் ஆணவத்தால், அகங்காரத்தால், மேட்டிமைத்தனத்தால் புறக்கணிப்பட்ட, புறக்கணிப்பட்டு கொண்டிருக்கும் தொகுதி என்றால் அது சிவகங்கை தொகுதி மட்டுமே.

பெயர் மட்டும் மாறியது. இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கம், தேவர் திருமகனார் மாவட்டம் என்று மாறி கடைசியில் இன்று சிவகங்கை மாவட்டம் என்று மாறியுள்ளது. அதுவும் சுயநல அரசியல் வியாதிகளால் தொகுதிகள் கொத்துக்கறியாகி இன்று சம்மந்தம் இல்லாத சட்டமன்றத் தொகுதிகள் உள்ளே வந்துள்ளது.

ப.சி குறித்து இந்த பேச்சைக் கேட்ட போது சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

புத்திசாலி? திறமைசாலி? மொழி ஆளுமை? நிர்வாகப்புலி? தமிழகத்திலிருந்து மத்திய அரசில் உச்சத்தை அடைந்தவர். பிரதமருக்குரிய வாய்ப்புக்கு அருகே சென்றவர்.

எல்லாமே சரி தான்?

யாருக்கும் பிரயோஜனம். யாருக்கு லாபம்? என்ன விளைவுகள் உருவானது?

மகனுக்குத்தான் கிடைத்தது.

மற்ற கட்சிகளில் பல தலைமுறைகளாகப் பணம் என்பதனையே பார்க்காமல் அரசியலுக்கு வந்து கோடி கோடியாக அடித்தார்கள் வாழ்கின்றார்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு என்று சொல்ல முடியும்.

ஆனால் தலைமுறை தலைமுறையாக அறம் என்பதனையே வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டு வாழ்ந்த குடும்ப பராம்பரியத்தைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உலகம் முழுக்க இத்தனை சொத்துக்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது.

தமிழ்நாட்டுக்குள் அலுவலகம் அமைக்காமல் பெங்களூர், சிங்கப்பூரில் வைத்துக் கொண்டு எங்கிருந்து எது தொடங்கியது? எதிலிருந்து எங்கே முடிந்தது என்று தெரியாமல் வளைத்து வளைத்து வாங்கிப் போட்ட சொத்துக்கள் அனைத்தும் இன்று உடம்பில் ஊளைச்சதை போலத் தொங்கி அசிங்கமாகத் தெரிகின்றது.

யாருக்கு அவமானம்?

தாத்தாக்கள் வழிகாட்டியாக இருந்து பல தர்மஸ்தாபனங்களை கட்டி வாழ்க்கை என்பது அடுத்தவர்களையும் வாழ வைப்பது என்று உணர வைத்துச் சென்றதை இவர் மறந்தது ஏன்? அதை ஏன் மகனுக்கு உணர்த்தாமல் போனார்? என்று யாராவது எந்த பத்திரிக்கையாளராவது இவர் முன்னால் கேட்காமல் இருப்பது ஏன்?

ஒரு காலத்தில் விஞ்ஞான ஊழல் என்பது கண்டு கொள்ள முடியாததாக இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும் என்ற சூழலுக்கு வந்து நின்றுள்ளது 
என்பதையாவது இவர் உணர்ந்து தான் உள்ளாரா?

நான் வென்றால் தனியார் முதலீட்டைக் கொண்டு வருவேன் என்று மகன் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கின்றார். அப்படி என்றால் ஆட்சியில் அதிகாரத்திலிருந்த 35 வருடங்கள் என்பது எந்த கணக்கில் வரும்?

இவர் பேசிய இந்தப் பேச்சு என்பது சிவகங்கை தொகுதியில் மாலை நேரங்களில் வெவ்வேறு இடங்களில் பேசப்பட்ட பேச்சைச் சிலவற்றைத் தொகுத்துப் போட்டு உள்ளனர். காரணம் பகல் நேரத்தில் வெயில் டவுசரை நனைத்துவிடும்? செல்வச் சீமான்களின் ஊர்வலம் என்பது மாலை நேரத்தில்தான் தொடங்கும். இரவு நேரத்தில் தான் முடியும்.

ஆனால் மக்களுக்குத் தெரியும் எங்கே எப்படி முடிக்க வேண்டும் என்று?

இந்தப் பேச்சை எங்கே பேசினார்?

மத்திய அரசு? மாநில அரசு? என்றாலே முழுமையாகத் தெரியாத மக்களிடம் போய் மோடி குறித்துப் பேசுகின்றார்.

மோடி அவர் பாதையில் நாட்டை சீரழித்தவராகவே இருக்கட்டும். அந்த உண்மையை இவர் சிவகங்கைத் தொகுதி மக்களிடம் சொல்பவராக இருக்கட்டும். சிவகஙகை மக்களுக்கு மோடி நல்லவராக இருந்தால் என்ன? இல்லை கெட்டவராகத்தான் இருந்தால் என்ன ஆகப்போகின்றது.

ஆனால் இவர் கடந்த 35 வருடங்களில் தொகுதி வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளார்.

மக்கள் கேட்பார்களா?

அவர்களுக்குக் கேட்கவும் தெரியாது. சிவகங்கைத் தொகுதியில் பல சட்டமன்றத் தொகுதியில் சாலை வசதிகள் பீகார் போலவே இருந்தது. மாநில அரசியல்வாதிகள் தான் இன்று மாற்றி உள்ளனர்.

மற்ற தொகுதிகளை விடச் சாதி ரேகைகள் உள்ளும் புறமும் தொகுதி முழுக்க ஓடினாலும் அதன் பாதிப்பு எங்கேயும் தெரியாது. காரணம் மக்களின் சுபாவம் அப்படிப்பட்டது. அமைதிப் பூங்கா எனலாம். இருப்பதை வைத்து வாழலாம். இல்லாதபோது இறந்து விடலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டவர்கள். நமக்கு வர வேண்டியது நிச்சயம் வந்தே தீரும் என்று நம்புவார்கள். அடுத்தவனைக் கொள்ளையடித்து அதிக நாள் வாழ முடியாது என்று வாழ்க்கையைப் புரிந்தவர்கள்.

அறம் என்பதனை தன் உயிர்மூச்சாகக் கொண்டவர்கள் கட்சி வித்தியாசம் இல்லாமல், சாதிய பாகுபாடுகள் இன்றி இன்னமும் இந்தத் தொகுதியில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் இவர் இன்னமும் மற்ற தொகுதிகளில் நடக்கும் தரமான சம்பவங்கள் போல் நடக்காமல் அடிவாங்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றார்.

மற்ற தொகுதிகளை விடச் சிவகங்கைத் தொகுதியில் உள்ள அத்தனை சட்டமன்றத் தொகுதிகளையும் இண்டு இடுக்கு என்று அலசியவன் என்ற முறையில் மக்களின் மனோபாவம், எண்ணங்கள், நோக்கங்கள், வெள்ளந்தி மனப்பான்மை, விடுப்பா ஆண்டவன் கூலியைக் கொடுத்துடுவான் என்ற நோக்கத்தில் அந்த மக்கள் அங்கே இன்னமும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பதால் இவரைத் திருப்பி எந்தக் கேள்வியையும் கேட்காமல் இருக்கின்றார்கள் என்பதாவது இவருக்குப் புரியுமா? என்று தெரியவில்லை.

இதை நீங்கள் கட்சிப் பார்வையோடு காழ்ப்புணர்வோடு அணுகினால் நான் நளினி சிதம்பரத்தை, மருமகள் நாட்டியத்தாரகையை பெஸ்ட் என்பேன்.

அவர்கள் வேட்பாளராக வந்திருக்கும்பட்சத்தில் அவர்களை ஆதரிக்கத் தயாராக இருப்பேன். காரணம் தொகுதியோடு தொடர்பே இல்லாதவர்கள் முதல் முறையாகக் களத்தில் வரும் போது மன்னித்து விடலாம்.

வாய்ப்பு தான் கொடுத்துப் பார்க்கலாம் என்று தான் யோசிப்பேன்.

***********

ரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் அல்லது ஏற்றுமதி நிறுவனத்துக்கென அடிப்படைக் கட்டமைப்பு உண்டு. கடைபிடித்தே ஆக வேண்டிய கொள்கையும் இருக்கும். இதற்கு மேலாக அரசாங்கத்தின் கொள்கைகளை அடிபிறழாமல் பின்பற்றியே ஆக வேண்டும். மீற முடியாது. மீறினாலும் மாட்டினால் பல மடங்கு நட்டம் என்பதோடு மீண்டு வந்து மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயமிருக்கும். 

தொழில் நடக்காமல் போனாலும் உருவாக்கிய கட்டமைப்புக்கென தினந்தோறும் செலவளித்தே ஆக வேண்டிய அவசியமும் உண்டு. 

சிறு குறு நிறுவனங்களுக்கு மேலே சொன்ன பல விதங்களில் விதிவிலக்கு உண்டு. 

விதிகள் அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியும். இந்த நிலைமையில் தான் இங்கு உருவாக்கப்படும் அரசின் புதிய கொள்கைகள் சிறு குறு நிறுவனங்களை அதிகம் பாதிக்கின்றது? என்ற புலம்பல் அதிகமாகக் கேட்கின்றது.

ஆனால் உண்மை என்ன? சில நடைமுறை உதாரணங்கள்.

00

வீட்டுக்கருகே மூன்று மளிகைக்கடைகள் உள்ளது. மூவருமே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். மூவர் கடைக்கும் 300 மீட்டர் இடைவெளி தான். ஆனால் வீட்டில் ஒருவரிடம் தான் எப்போதும் செல்வார். காரணம் கேட்ட போது "நீங்க ஒரு நாள் போய்ப் பாருங்கள்? உங்களுக்கே புரியும்" என்றார். மற்ற இருவர் கடையில் ஒருவர் கடைக்கு படிப்படியாக ஆட்கள் வருவது குறைந்து தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பது பெரிய காரியமாகத் தெரிந்தது. மற்றொருவர் கடைக்கு நாள் முழுக்க ஆட்கள் வரத்தான் செய்கின்றார்கள். ஆனால் டிமாண்ட் இல்லை.

இப்போது வீட்டில் சொன்ன கடைக்கு வருவோம்.

காலை மிகச் சரியாக ஆறு மணிக்குக் கடையைத் திறக்கின்றார். திறக்கும் போதே மனைவி இரண்டு மகன்கள் என குழுவினராகக் காய்கறிகளைக் கடையை ஒட்டிச் செல்லும் சாலையில் பரப்பி வைக்கின்றார்கள். நாம் பத்து நிமிடம் தாமதமாகச்சென்றால் கூட ஒரு காயும் இருப்பதில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் பொறுமான காய்கறி வியாபாரம் முடிந்து விடுகின்றது. கூடவே தினந்தோறும் (ஒரு நாளைக்கு மட்டும் தேவைப்படும் அளவு) மளிகைச் சாமான்கள், மற்ற சாமான்கள் வாங்குபவர்கள் கூட்டத்தில் நீந்திக் கொண்டே வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

முதலில் நான் சென்ற போது எரிச்சலாக சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் எளிமையானது. அவர் விற்கும் கத்திரிக்காய் கிராமங்களில் கூட வாங்க முடியாது. முருங்கைக்காயும் அப்படியே தான். எங்கிருந்து வாங்குகின்றார்? என்ன விலையில் வாங்குகின்றார் என்றே தெரியவில்லை. 

ஆனால் விலையும் பெரிய அளவில் இல்லை. வீட்டுக்கே கொண்டு (டிவிஎஸ் 50 வண்டியில்) வந்து கொடுப்பவர்கள், நடந்து வந்து விற்கும் பாட்டிமார்கள் என்று அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைக்காரர் சரியான விலையைத் தரமான பொருட்களுக்குக் கொடுப்பதால் அலைமோதுகின்றது. இரண்டு நாட்கள் ஒருவர் செல்லாவிட்டால் என்ன உடம்பு சரியில்லையா? என்று கேட்பது தொடங்கி மார்க்கெட்டிங் ல் உள்ள மொத்த சாதக அம்சங்களையும் கலந்து கட்டி பொளந்து கட்டிக் கொண்டு இருக்கின்றார். 

என் கணக்குப்படி காலை மூன்று மணி வியாபாரத்தில் 5000 ரூபாயாவது பார்த்து விடுவார் என்றே நினைக்கின்றேன். ஆனால் குடும்பமே கடுமையாக உழைக்கின்றது என்பது மட்டும் உண்மை. இத்துடன் தரமும் நிதானமும் வளர வைத்துக்கொண்டிருக்கின்றது.

000

நண்பர் பரிந்துரைத்தார் என்று அந்தக் கடையைத் தேடிச் சென்றோம். பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான ஆடைகளும் அங்கே கிடைக்கும் என்றார். தரமான நியாயமான விலை என்றார். மனைவி, மகளை அனுப்பி விட்டு உள்ளே பார்த்த போது அதுவொரு குடோன். காற்று வசதிகள் எதுவுமில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. நுழையும் இடத்தில் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி போர்டு வைத்திருந்தார்கள்.

முறையான பில் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆடையாக பார்த்துக் கொண்டே வந்தேன். பெரும்பாலும் கழிவுத் துணிகளிலிருந்து கொஞ்சம் ஜிகுஜிகு வேலைகள் செய்து ஆடையாக மாற்றியிருந்தார்கள்.

விலையைக் கவனித்துக் கொண்டே வந்தேன். 

நைட்டி போன்றவற்றுக்கு 60 சதவிகித லாபம் வைத்திருந்தார்கள். உள்ளாடை மற்றும் பேண்டிஸ் சமாச்சாரங்கள் அனைத்தும் மோசமான சாயத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்குள் உதிர்ந்து விடும் என்பதோடு அது பல பக்கவிளைவுகளையும் உருவாக்கி விடும். ஆனால் நாகரிக உடைகள் என்ற வைத்திருந்த உடைகளைப் பார்த்துத் தான் அதுவரையிலும் பொறுமையாக இருந்தவன் அவர்கள் போட்டு இருந்த விலையைப் பார்த்து (ஏறக்குறைய 300 சதவிகிதம்) அங்கிருந்த பெண்ணிடம் சப்தம் போடத் தொடங்கினேன்.

டாப்ஸ் பேண்ட் என்ற வகையிலிருந்த ஆடைகள் ( பொதுவாக இது போன்ற ஆடைகள் நல்ல பருத்தி இல்லாதபட்சத்தில் ஒரு தடவை துவைத்து எடுக்கும்போது பல்லிளித்து விடும்) விலைகளைப் பார்த்த போது கோபம் தலைக்கேறியது.

அந்த பெண்ணுக்கு (சம்பளம் மாதம் ரூபாய் 5000) துணிகளைப் பற்றி தெரியவில்லை.

ஏற்றுமதி நிறுவனங்கள் போல இவர்களுக்குத் தரம் குறித்த நிர்ப்பந்தங்கள் இல்லை. இவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களில் கிடைக்கும் எவ்வித வசதிகளும், சம்பளமும் கிடைப்பதும் இல்லை என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற நிறுவனங்கள் குறிப்பாக உள்நாட்டு உற்பத்தித்துறையில் இருப்பவர்கள் ஒரு வருடத்தில் சம்பாரிக்கும் லாபம் என்பது நான்கு வருடங்கள் உழைத்தாலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்க முடியாத லாபமாகும். அடி முதல் நுனி வரை துண்டுச் சீட்டு மட்டுமே.

காரணம் லாபம் என்பதற்கும் கொள்ளை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இவர்கள் பயன்படுத்துவது கழிவுத்துணிகள் மட்டுமல்ல. மக்களையே கழிவாகத்தான் பார்க்கின்றார்கள்.

நாள்தோறும் முழுபக்க விளம்பரங்கள் கொடுத்து, மற்ற ஊடகங்களில் நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரக்கட்டணம் கொடுத்து, குளிர்சாதன வசதிகள், ஈஎஸ்ஐ, பிஎப் வசதிகளுடன் பணிபுரிபவர்களை பாதுகாத்து, வருடந்தோறும் போனஸ் கொடுத்து தங்களை சந்தையில் தக்க வைத்துக கொண்டே ஆக வேண்டும் என்பவர்கள் இரண்டு சூடிதார்கள் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பதற்கும், இதுபோன்ற எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வாழ்பவர்கள் கழிவுத்துணிகளில் தயாரித்து ஒரு சுடிதார் ரூபாய் 1200 விற்கும் போது அதை வாங்கும் நீங்கள் வலதுசாரியா? இடது சாரியா?

தரமில்லாதவர்கள் அழிவு என்பது காலத்தின் நியதி. அதற்கு அரசாங்கம் மட்டும் காரணமல்ல.

******


Tuesday, April 23, 2019

பா.ம.க Vs வன்னியர் சங்கம்



சில தினங்களுக்கு முன் மதுரையில் இருக்கும் நண்பருடன் சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னமராவதி மற்றும் பொன்பரப்பி கலவரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  அவரும் என்னைப் போலவே மருத்துவர் ராமதாஸ் மேல் தொடக்க காலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகச் சொன்னார்.  

இந்த கட்டுரை நண்பர் சவுக்கு சங்கர் 2012 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.  நேற்று தான் என் கண்ணில் பட்டது.

உங்களால் ஒரு மணி நேரம் ஒதுக்கி முழுமையாக ஒவ்வொரு வரியாக வாசிக்க முடிந்தால் மட்டும் வாசிக்கவும். இல்லாவிட்டால் நேரம் இருக்கும் போது வந்து வாசிக்கவும்.  

காரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் உண்மையான அரசியல், அதற்குப் பின்னால் உள்ள பேரங்கள், யார் சாதிக்கட்சி? சாதிக்கட்சி எப்படி உருவாகின்றது? யார் உருவாக்குகின்றார்கள்? எப்படி வளர்க்கின்றார்கள்? ஏன் வளர்க்கின்றார்கள்? என்ன ஆதாயம் பெறுகின்றார்கள்?  சரி நாங்கள் சாதிக்கட்சி இல்லை என்று சொல்லும் கட்சிகள் எப்படி சாதிக்கட்சிகளை பயன்படுத்துகின்றார்கள்? என்ன பேரங்கள்? எப்படி அரசியல் தட்பவெப்ப நிலை மாறுகின்றது?  போன்ற நுண்ணிய அரசியல் சார்ந்த பல விசயங்கள் இந்த கட்டுரையில் உள்ளது.

பா.ம.க ஆதரவு? எதிர்ப்பு? போன்ற சின்ன வட்டத்திற்குள் நின்று இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம்.  அதே போல திமுக காலம் காலமாகச் செய்து வரும் அரசியலைப் பற்றி இதன் மூலம் உங்களுக்குப் புரியக்கூடும்.

இந்தக் கட்டுரையை என் தளத்தில் வெளியிடக் காரணம்

1.  சவுக்கு தளத்தில் எழுதப்பட்ட பல முக்கிய கட்டுரைகள் காலப்போக்கில் கவனிப்பார் இன்றி தள மாறுதல் காரணமாகக் காணாமல் போய்விடுகின்றது. அவரும் அதைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எவர் கேட்டாலும் வெளியிட அனுமதி கொடுத்து விடுகின்றார். எந்த எதிர்பார்ப்புமின்றி.

2. நான் வாழ்ந்த ஊரில் இது போன்ற பல சம்பவங்களைப் பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் நிச்சயம் இந்தச் சமூகம் மாறுதலாக மாறிவிடும் என்ற நம்பிக்கையில் தான் கடந்த சில வருடங்களாக இருந்தேன்.  ஆனால் இப்போது சமூகம் பின்னோக்கி வேகமாகச் சென்று கொண்டு இருக்கின்றது.

3.படித்தவர்கள், உயர்பதவியில் இருப்பவர்கள், வெளிநாட்டில் பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று பாரபட்சமின்றி தங்கள் சாதி அபிமானத்தை ஒரு துளி கூட மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

மேலும் அதனை தங்களுக்கான களமாக வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  

நண்பரும் நானும் இது குறித்து வாரந்தோறும் உரையாடிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த சமயத்தில் இந்த நீண்ட கட்டுரை முக்கியமாகத் தெரிகின்றது.

நன்றி.


*************

அவள் பெயர் அம்பிகா.   அவள் கணவன் பெயர் குமார்.  அவளுக்கு இரண்டு மகள்கள்.  ஒரு மகன்.  பெரிய மகளின் பெயர் சுஷ்மிதா.  சின்ன மகளின் பெயர் சுஷாந்திகா.  மகனின் பெயர் சக்திவேல்.   சுஷ்மிதா ஒன்பதாவது படிக்கிறாள்.  சுஷாந்திகா ஏழாவது படிக்கிறாள்.   சக்திவேல்  மூன்றாவது படிக்கிறான்.  அம்பிகாவின் கணவர் பெங்களுரில் வேலை செய்கிறார்.

அம்பிகா அவள் கணவர் குமாரை காதல் திருமணம் செய்தவள். எப்படிக் காதலித்தீர்கள் என்று கேட்டால் அம்பிகாவின் முகத்தில் வெட்கம்.  பணியாற்றும் இடத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று வெட்கத்தோடு சொல்கிறாள்.

இந்தப் பெயர்களை வைத்து, அம்பிகாவின் குடும்பம் ஒரு மென்பொறியாளரின் குடும்பமோ, அல்லது ஒரு நடுத்தர வர்க்க அரசு ஊழியர் குடும்பமோ என்று எண்ணத் தோன்றும்.  அப்படி ஒரு குடும்பமாக இருந்திருந்தால், அம்பிகா இன்றும் சிரித்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு அவள் காதல் கதையை பகிர்ந்திருப்பாள்.  குழந்தைகளோடு சிரித்து விளையாடிக் கொண்டிருப்பாள்….

அம்பிகா வேறு சாதியில் பிறந்திருந்தால் .. …

இன்று அம்பிகா தன் வாழ்வை இழந்து நிற்கிறாள். உழைத்து உழைத்து அவள் சேர்த்த சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.  அவள் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.  அவள் பிள்ளைகள் உடுத்த உடையில்லாமல், பத்து நாட்களாக பழைய உடைகளை அணிந்து தெருவில் அழுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவள் கணவன், பத்து நாட்களாக பழைய கைலியை கட்டிக் கொண்டு மர நிழலில் அமர்ந்திருக்கிறான்.  அம்பிகா அடுத்து என்ன என்ற கேள்வியோடு வானத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்…

அம்பிகா செய்த குற்றம் என்ன…. ….. ?  

அவள் பறச்சியாக பிறந்து விட்டாள்.  அவள் செய்த ஒரே குற்றம் பறச்சியாக பிறந்ததுதான். அம்பிகாவின் கணவன் குமார், பெங்களுரில் கட்டிடம் கட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவன்.  மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று, கணவன் மனைவி இருவரும், தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சிறுகச் சிறுக சேர்த்து 5 பவுன் நகையைச் சேர்த்து வைத்துள்ளனர்.  தீபாவளிக்காக குடும்பத்துக்கு புதுத்துணி மணிகள் வாங்கவும், அந்த தீபாவளி அன்றே இன்னும் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றும் 20 ஆயிரம் பணத்தை வைத்திருக்கிறாள் அம்பிகா.

கையில் ஆயுதங்களோடு ஆரவாரமாக ஊருக்குள் நுழைந்த கும்பலைப் பார்த்து கலவரமடைந்த அம்பிகா, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வயல்வெளிக்குள் உயிரைக் காப்பபாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறாள்.   இரவு நெடுநேரம் கழித்து திரும்பிய அம்பிகாவின் வீடு எரிந்து கொண்டிருக்கிறது.

ஊருக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல், அம்பிகாவின் வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த பணத்தையும் நகையையும் கவனமாக எடுத்துக் கொண்டு, மண்ணென்னையை வீடு முழுக்க ஊற்றி தீ வைத்து விட்டுச் சென்று விட்டது.

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஊர் இது.  

அப்பு மற்றும் பாலன் என்ற இரண்டு தோழர்களின் களமாக இருந்த ஊர் அது.  தமிழக நக்சலைட் இயக்கத்தின் தாய் வீடு அந்த நாயக்கன் கொட்டாய்.  தலித்துகளுக்காகவும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், முதலாளித்துவ அரசியலையும், கந்து வட்டி அரசியலையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சூளுரைத்த தோழர்களின் களம் அது.   

கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு மார்க்சியத்தை மரணக்குழியில் தள்ளி விட்டு, திராவிடக் கட்சிகளின் கால்களை நக்கி, ஓட்டுக்களை பொறுக்கிக் கொண்டிருக்கும் தா.பாண்டியன்களும், ஜி.ராமகிருஷ்ணன்களும், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்களைச் செய்த பல தோழர்களின் களம் அது.   

அப்புவும் பாலனும் இறந்து பல ஆண்டுகள் கடந்தாலும்  இன்று வரை, காவல்துறை நடுக்கத்தோடு பார்க்கும் ஊர் அது.  75 வயதான முன்னாள் நக்சலைட் அந்த ஊருக்குள் நுழைந்தாலும் ஆயிரம் முறை விசாரித்து விட்டு பிறகுதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றால் காவல்துறையினருக்கு எந்த அளவுக்கு நாயக்கன் கொட்டாய் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அந்த நாயக்கன் கொட்டாயில்தான் அம்பிகா வசிக்கிறாள்.   வளர்ப்பு மகன் திருமணத்திற்கு வாட்ச்மேனாக இருந்த வால்ட்டர் தேவாரம் போன்ற பொறுக்கி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட அந்த தோழர்களின் தியாகத்தாலோ என்னவோ… இன்று நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் வசிக்கும் தலித்துகள், சுயமரியாதையோடு வாழ்கிறார்கள்.  தங்கள் உரிமைகளை உணர்ந்துள்ளார்கள்.  அம்பிகா குடும்பத்தைப் போல பல தலித்துகள் அங்கே நன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள்.   அத்தனை குடும்பங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.  நில உடைமையாளர்கள் வெகு குறைவாகவே உள்ளார்கள்.

பெரும்பாலானோருக்கு கூலி வேலை.   கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் ஹோசூர் மற்றும் பெங்களுருக்கு கூலி வேலைக்காகச் செல்கிறார்கள்.   கிராமப்புறம் என்பதால் அதிக அளவில் செலவுகள் இல்லை.  தாங்கள் சம்பாதித்ததை சேர்த்து வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம், போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள்.   அரசாங்கம் தரும் இலவச தொலைக்காட்சி, அனைத்து வீடுகளிலும் இருக்கிறது.   கேபிள் இணைப்பு இருக்கிறது.   பெரும்பாலும் சம்பவங்களற்ற வாழ்க்கை.  .

அருகாமையில் உள்ள கிராமங்களில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.   இரு சமூகத்தினரிடையே சாதி உண்டு.  வன்மம் இல்லை.  தாங்கள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற பிரக்ஞை இரு சமூகத்தினருக்குமே உள்ளது.    

ஆனால் மாமன், மச்சான் என்று பாசத்தோடே உறவாடிக் கொள்கிறார்கள்.  பெண் கொடுப்பது, திருமண உறவுகள் இல்லை.  ஆனால், ஒருவர் மற்றவர் வீடுகளுக்குச் சென்று உணவருந்துவது, விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொள்வது என்று இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.

எப்போதாவது இந்த இரு சமூகத்தில் உள்ள இளைஞர்கள் திடீரென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  அப்போது இரு சமூகத்தினரிடையே சல சலப்பு ஏற்படுகிறது.  வார்த்தைகளை கவனிக்கவும், சல சலப்பு.   இரு சமூகத்தினர் என்பதை விட, இரு குடும்பத்தினரும் பேசுகிறார்கள்.   சில நேர்வுகளில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், தங்கள் வீட்டுப் பெண்ணையோ, பையனையோ ஒதுக்கி வைக்கின்றனர்.   சில நேர்வுகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.  பெரும்பாலும், இது போல காதல் திருமணம் செய்பவர்கள், வேறு ஊர்களுக்குச் சென்று விடுவதால், அவர்களின், காதலும், திருமணமும் இரு சமூகத்தாராலும் மறக்கப்படுகிறது.

ஆனால், இளவரசன், வித்யா என்ற இருவரின் காதல் இது போல மன்னிக்கப்படவும் இல்லை.  மறக்கப்படவும் இல்லை.  அவர்கள் காதல் மற்றும் திருமணத்தால் நேர்ந்த நிகழ்வுகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்காத வடுவாக நிலைக்கும் அளவுக்கு பதிந்து விட்டன.

இளவரசன் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வித்யா இரண்டாம் ஆண்டு நர்சிங் படிக்கிறாள்.   செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கின்றன. வித்யா ஒரு வன்னியர். இளவரசனோ ஒரு பறயன்.   எப்படி ஒப்புக் கொள்வார்கள்.  வித்யா வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடர்ந்து நடந்த நெருக்குதல் காரணமாக, 2012 அக்டோபர் 8 அன்று வித்யா, இளவரசனைத் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இளவரசன் தமிழ்நாடு காவல் துறையில் காவலர் பணிக்காக தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர உள்ளான்.  அரசுப் பணி கிடைத்த பிறகு, காதலித்தவளை மணம் முடிக்க அவனுக்கு என்ன தயக்கம் இருக்கப் போகிறது… ?  

சேலத்தில் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வித்யா வீட்டிலிருந்து தொடர்ந்து நெருக்கடி.   வித்யாவைத் தேடுகிறார்கள்.  நெருக்கடி அதிகமாகவே, இளவரசன், 15 அக்டோபர் அன்று, நேரடியாக சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமாரைச் சந்தித்து, திருமணம் ஆன விபரத்தையும், வித்யா வீட்டில் கொடுக்கப்படும் நெருக்கடியையும் விவரிக்கிறான்.   சஞ்சய் குமார், உடனே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அஸ்ரா கார்கை சென்று சந்திக்கச் சொல்கிறார்.  மாலை ஏழரை மணிக்கு, அஸ்ரா கார்க்கை சந்தித்து விபரத்தைச் சொல்லவும், அவர் இரு தரப்பினரையும் வரச் சொல்கிறார்.  

வித்யாவின் தந்தை மட்டும் வந்து எஸ்.பியை சந்திக்கிறார். அவர் தந்தை  சம்மதம் தெரிவிக்காததால்,  காவல்துறையினரின் பாதுகாப்போடு, மணமக்களை நல்லம்பட்டியில் உள்ள, இளவரசனின் பாட்டி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

பெண்ணின் தந்தை நாகராஜனோ, வித்யாவை தலை முழுகி விட்டேன். இனி அவள் எனக்கு மகள் இல்லை என்று மனம் வெதும்புகிறார். இவ்வளவு நாட்களாக இருந்த சூழல் மாறியிருக்கிறது.   

அருகாமையில் இருந்த கிராமத்தில் உள்ள  வன்னியர்களுக்கெல்லாம் தகவல் பரவுகிறது. பெண்ணின் தந்தை நாகராஜனை நெருக்குகிறார்கள்.  “என்னய்யா ஒரு பறப்பய உன் பொண்ணத் தூக்கிட்டுப் போயிட்டான்…  விட்டுட்டு பொலம்பிக்கிட்டு இருக்கியே” என்று தொடர்ந்து அவரை நச்சரிக்கிறார்கள். அவர்களின் நெருக்குதல் பொறுக்க முடியாமல், பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று இளவரசன் குடும்பத்தாருக்கு தூது அனுப்புகிறார். அவர்களோ.. விஷயம் மாவட்ட காவல்துறையினரிடம் போய் விட்டது.   எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரிக்கின்றனர்.

4 நவம்பர் அன்று 25 கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களின் கூட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்கு பாமக ஒன்றியச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமை தாங்குகிறார். வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராசா, வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, அதிமுக கணேசன், செல்லங்கொட்டாய் முருகன், மற்றும் அதிமுக, திமுக, மதிமுக, புரட்சிகர முன்னணித் தோழர்கள் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து செய்கின்றனர். 200 வன்னியர்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் தலித்துகள் சார்பாக ஊர் தலைவர் சக்தி, பொடா.பழனி, பொடா.துரை, செயராமன் உள்ளிட்ட 15 பேர் கலந்துக் கொள்கின்றனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.  

இந்தக் கூட்டத்தில் வன்முறை நடக்கும் என்று அச்சமடைந்த தலித்துகள் காவல்துறைக்கு தகவல் தர, அவர்கள் 20 காவலர்களை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கின்றனர். இக்கூட்டத்தில் எந்த சமாதானமும் எட்டப்படவில்லை.

நவம்பர் 7 அன்று பெண்ணின் தாயார் தேன்மொழி, மற்றும் உறவினர்கள் சிலர், வெள்ளக்கல் கட்டமேடு என்ற இடத்தில் மணப்பெண் திவ்யாவையும், மணமகன் இளவரசனையும் அழைத்துப் பேசுகின்றனர்.  பெண்ணின் தாயார் தேன்மொழி, நீ திரும்ப வரவில்லையென்றால், நானும் உன் தந்தையும் தூக்கு போட்டுச் சாக வேண்டியதுதான்.   திரும்பி வந்து விடு என்கிறார்.  ஆனால், மணப்பெண் வித்யாவோ, இதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

ஏமாற்றத்தோடு, திரும்பும் வன்னிய சமூக மக்களுக்கு பெண்ணின் தந்தை நாகராஜன், தூக்கிட்டு தற்கொலை செய்த விபரம் தெரிய வருகிறது. அக்கம் பக்கத்தில் உள்ள வன்னிய கிராமங்களுக்கு, தலித்தோடு ஏற்பட்ட காதல் திருமணத்தால் அவமானம் தாங்க முடியாமல் பெண்ணின் தந்தை நாகராஜன் இறந்து விட்டதாகவும், செய்தி பரவுகிறது.   1500 பேருக்கு மேல் கூடுகிறார்கள்.  நாகராஜனின் பிரேதத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள்.   இந்தச் சாவுக்கு காரணமான தலித்துகளை கைது செய்யாவிட்டால், தீக்குளிப்போம் என்று மிரட்டுகிறார்கள். காவல்துறையினர் சாலை மறியல் செய்த இடத்தில் குவிக்கப்பட்டு, மறியல் செய்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அருகாமையில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டப்பள்ளி, செங்கல்மேடு ஆகிய இடங்களில் உள்ள தலித் கிராமங்களுக்குள் புகுந்த வன்னியர்கள், ஒவ்வொரு வீடாக சூறையாடுகிறார்கள்.   தலித்துகளின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

சத்தம் கேட்ட தலித்துகள், வயல்வெளிகளுக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிட்டது போல, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள, பீரோ உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் சூறையாடப்படுகிறது.  வெள்ளிக் கொலுசு உட்பட, அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன.

கையோடு கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்ணென்னையை ஊற்றி, ஒவ்வொரு வீடாக தீ வைக்கப்படுகிறது. பெண்கள் யாராவது உள்ளே இருந்தால், ஓங்கி ஒரு அறை அறைந்து பணத்தையும் நகையையும் எடுத்துத் தருமாறு மிரட்டுகிறார்கள்.  உயிருக்குப் பயந்த பெண்கள் நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொடுத்து, வந்த வன்முறைக் கும்பலின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறார்கள்.  ஓடிப்போய் விடு என்று சொல்லி விட்டு, வீட்டுக்குத் தீ வைத்துச் செல்கிறார்கள்.

ஒரு லாரியை எடுத்து வந்து வெண்கல பாத்திரங்களை விற்கும் ஒருவரின் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான புதுப் பாத்திரங்களை அள்ளிச் செல்கிறார்கள்.  கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சியை உடைத்தெரிந்தவர்கள், எல்.சி.டி டிவிக்களை பத்திரமாக எடுத்துச் செல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வீடாக 300 வீடுகள் சூறையாடப்படுகின்றன.  காவல்துறை இரவு 10 மணிக்கு வந்து, வயலில் ஒளிந்திருந்த மக்களை அழைத்து வந்த பிறகு, தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.

கொளுத்தப்பட்ட இந்த மக்களின் வீடுகள் வன்முறை வெறியாட்டத்தின் நினைவுச் சின்னங்களாக அப்படியே இருக்கின்றன.  அரசு 50 ஆயிரம் உடனடி நிவாரணமாக அறிவித்துள்ளது. மன்னிக்கவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார். வன்னியர்கள் தரப்பில் காவல்துறை ஏறக்குறைய 100 பேர்களை கைது செய்துள்ளது.  தலித்துகள் தரப்பிலும், நாகராஜனை தற்கொலைக்குத் தூண்டியதாக 10 பேரை கைது செய்துள்ளது.

இந்த தலித் கிராமத்தில் உள்ள வீடுகள் முடிந்தவுடன், 20 அடி தூரத்தில் நான்கு வன்னியர் வீடுகள் உள்ளன.  அந்த வன்னியர் வீடுகளின் ஓடுகள் கூட இன்று வரை உடைக்கப்படவில்லை.    ஒரே ஒரு காவலர் மட்டும் அந்த வீடுகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்.

திருமண உறவு முறைகளைத் தவிர்த்து, இயல்பாக பழகி வந்த இரு சமூகத்தினருக்கிடையே திடீரென்று எப்படி வந்தது இந்த மோதல்… ?  மாமன் மச்சான் என்று உறவு முறை சொல்லி அழைத்து வந்தவர்கள், திடீரென்று ஒரு சமூகத்தினரின் சொத்துக்களை ஏன் வெறி கொண்டு சூறையாடுகிறார்கள்… ?

18 மாதங்களுக்கு முன்னால், கொண்டம்பட்டியில் ராஜு மற்றும் வேடியம்மா என்பவர்களின் மகன், நேதாஜி, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான்.   இருவரும் கல்லூரியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிக்கையில் காதல் ஏற்படுகிறது.  இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிந்த வன்னிய சமூகத்தினர் பையனின் தாயார் வேடியம்மாளை கடத்திச் செல்கிறார்கள்.

வேடியம்மாவின் கணவர் ராஜு, காவல்துறையில் புகார் தெரிவிக்கிறார்.  வேடியம்மா கடத்தப்பட்டதாக, வன்கொடுமைச் சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.  காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசுகிறார்கள்.   வன்னியர்கள் பையனின் தாயார் வேடியம்மாவை விடுவிக்கிறார்கள்.   காவல்துறையினர், யாரையும் கைது செய்யாமல் அனுப்பி விடுகிறார்கள்.

இந்தத் திருமணமும் ஒரு தலித் இளைஞனுக்கும், வன்னிய பெண்ணுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளது.   அப்போது நேராத வன்முறை இப்போது ஏன் நேர்கிறது… ? திடீரென்று வன்னியர்கள் வீராவேசத்தோடு கிளர்ந்தெழக் காரணம் என்ன ?

“எங்களுக்குச் சாதி வெறி பிடித்து இருக்கிறது என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் எவனுக்கு சாதி வெறி இல்லை? தி.மு.க-வில் உள்ள செட்டியார்களும் முதலியார்களும் அடுத்த சாதியிலா சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள்?

அடுத்த முதலமைச்சரா யார் யாரோ வருவாங்கன்னு பத்திரிகைகாரங்க சொல்றாங்க… ஒரு வன்னியன் வருவான்னு எழுதலையே… ஏன்? எல்லாம் சாதி வெறி”

நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியிலதான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு​வைச்சா… தொலைச்சுப்புடுவேன்”

இப்படிப் பேசியவர் யார் தெரியுமா ?  டாக்டர் ராமதாஸின் நெருங்கிய உறவினரும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு.

இந்த ஆண்டு மே மாதம், மகாபலிபுரத்தில், வன்னிய இளைஞர் பெருவிழா நடந்தது. அந்த விழாவில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சுதான் இது. குருவின் இந்தப் பேச்சை ஒட்டி, மகாபலிபுரம் போலீசார், குரு மீது, வழக்கு பதிவு செய்தனர்.  

மே மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குருவை ஏன் கைது செய்யவில்லை என்பது, எக்ஸ்டென்ஷன் ராமானுஜத்திற்கே வெளிச்சம்.

சரி… குரு திடீரென்று ஏன் இப்படி ஆவேசமாக பேசுகிறார்.. ?

மருத்துவர் ராமதாஸ் யார் என்பது பற்றி சற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள சவுக்கில் முன்பு வெளி வந்த இரு கட்டுரைகளைப் படியுங்கள்.

2009 பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த ராமதாஸ், 2011 சட்டமன்றத் தேர்தலிலாவது இழந்த தன் செல்வாக்கை  மீட்டு எடுக்கலாம் என்று திட்டமிட்டார்.  இந்தத் தேர்தலிலும் அவருக்கு படு தோல்வியே.  மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு சதவிகிதம் கடுமையாக சரிந்தது.

 வன்னியர் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று பிளிறிக் கொண்டிருந்த மருத்துவர் அய்யாவுக்கு, விழுந்த பெரிய அடி… அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.  அந்தத் தீர்ப்பினால் கலங்கியிருந்த ராமதாஸூக்கு விழுந்த அடுத்த அடி… மருத்துவர் சின்ன கொய்யா… மன்னிக்கவும், சின்ன அய்யா என்று அழைக்கப்படும் அன்புமணி மீது டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டு குற்றப்பத்திரிக்கைகள்.   மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த இரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும், அன்புமணி வசமாக சிக்கியுள்ளார் என்று தெரிகிறது.

கருணாநிதியின் மகன், அழகிரி மற்றும், ராமதாஸின் மகன் அன்புமணி, இருவரில் யார் சிறந்த தொடை நடுங்கி என்று போட்டி வைத்தால், யார் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது அவ்வளவு சிரமம்.   

அப்படி ஒரு “தைரியசாலி” அன்புமணி..  அமைச்சராக இருந்தபோது துட்டு வாங்குவதற்கு இருந்த தைரியம், தற்போது வழக்கை சந்திப்பதில் இல்லை.

நைனா.. என்ன காப்பாத்து நைனா என்று டாக்டர் ராமதாஸை தொடர்ந்து நச்சரிக்கவும், ராமதாஸும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அன்புமணியின் மாமனாருமான கிருஷ்ணசாமி மூலமாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேலை தொடர்ந்து முயற்சி செய்தும் யாருமே சட்டை கூட செய்யவில்லை.   

ராமதாஸ் பேரனுக்காக சம்பந்தம் செய்துள்ள, காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோவின் உறவினர் மூலமாக காங்கிரஸ் கட்சியை அணுகினாலும், பயனில்லை.

2014 தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை சட்டை செய்யும் என்று தோன்றவில்லை. அதிகபட்சம் ஒரு எம்.பி சீட் கொடுத்து வேண்டுமென்றால் வாங்கிக் கொள், இல்லையென்றால், தைலாபுரம் தோட்டத்திலேயே புல் புடுங்கு என்று சொல்லிவிடுவார்கள் என்பதை ராமதாஸ் நன்கு உணர்ந்திருக்கிறார்.

தன்னை ஒரு தலைவராக உயர்த்தி, பல கோடிகளை கொள்ளையடிக்க உதவியது வன்னியர்களின் ஆதரவே.  அந்த ஆதரவே தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துள்ளார்.    இழந்த தன் வன்னிய இன ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராமதாஸ் தான் வளர்த்து வரும் வேட்டை நாயான காடுவெட்டி குருவை குரைக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு இனத்தின் ஆதரவை பெறுவதற்கு வன்முறையை விட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை.   பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் நிகழ்ந்த கலவரங்களையும், அதனால் பிஜேபி பெற்ற ஆதரவையும், தற்பாது எவ்வித வன்முறையும் இல்லாததால் தங்களுக்குள்ளேயே ஒருவர் டவுசரை ஒருவர் மாற்றி மாற்றி கழற்றிக் கொண்டிருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கிழட்டு நரியான ராமதாஸ் தற்போது மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் தந்திரத்தை கையெடுத்துள்ளார்.   சாதி வெறியைத் தூண்டி வன்முறையை நடத்தினால் மட்டுமே வன்னியர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துதான், காடுவெட்டி குரு என்ற வேட்டை நாயை அவிழ்த்து விட்டுள்ளார்.  எப்போதெல்லாம் ராமதாஸுக்கு வசதியோ, அப்போதெல்லாம் குருவை குரைக்கச் சொல்வார்.   அந்த நாயும் நன்றாகக் குரைத்தால்தான் பிஸ்கட் கிடைக்கும் என்று கேவலமாக குரைக்கும்.

கருணாநிதிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்பதற்காக, 2008ல், குருவை குரைக்கச் சொன்னதும், அந்த நாய் எப்படிக் குரைத்திருக்கிறது பாருங்கள்…

“2008ம் ஆண்டு பாமகவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக மலரப் போகிறது. ஆண்டிமடம் எம்எல்ஏ (திமுக) சிவசங்கருடைய அப்பாவாலேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை. இவன் நேத்து வந்த பையன். அமைச்சர் ராஜாவோட (மத்திய திமுக அமைச்சர்) எடுபிடி. அந்த ராஜாவோ கருணாநிதிக்கு எடுபிடி. இந்த ராஜாவுக்கு ஒரு எடுபிடி இருக்கான். அவன்தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்.

எங்க மாவட்டச் செயலாளர் வைத்தி மீது இந்த கலெக்டர்தான் வழக்கு போடச் சொல்லியிருக்கான். அவன் போடச் சொன்னானா… அல்லது அவனுக்கு தலைவனான அந்த கருணாநிதி போடச் சொன்னானா தெரியாது. நீ என்ன வழக்கு வேண்ணா போடு, ஒண்ணும் புடுங்க முடியாது. என் …. கூட புடுங்க முடியாது.

எங்க கட்சி பொறுப்பாளர்கள் யார் மேல கேஸ் போட்டாலும், இந்த ராஜா, சிவசங்கர் அவனுங்களுக்குத் தலைவன் எவனும் உயிரோட இருக்க முடியாது.

குடும்பத்தையே உயிரோட எரிச்சுடுவோம். இந்த பெரம்பலூர் கலெக்டர் மாமா வேல பாக்குறான். அந்த மாமா சொன்னான்னு இந்த போலீஸ் மாமாக்கள் ஆட்டம் காட்றானுங்க…

ஒரு போலீஸ்காரன்கூட அவனுங்க… (போலீசாரின் குடும்பத்தினரை சுட்டிக் காட்டி மட்டமாக பேசுகிறார்)…ஜாக்கிரத…

நாங்க மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றானுங்க திமுககாரனுங்க. ஏன் வசூல் பண்றது இவனுங்களுக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையா… ஆமாண்டா… நாங்க வசூல் பண்ணோம். என்ன பண்ணிடுவ… மிரட்டி தாண்டா வசூல் பண்ணோம். உன்னால என்ன புடுங்க முடியும்?

டேய் சின்னப் பையன் சிவசங்கரா… உங்க அப்பன்கிட்டப் போய் என்னப் பத்தி கேட்டுப் பாருடா… வைத்தியை மட்டும் கைது பண்ணியிருந்தா மவனே ஆண்டிமடம் தொகுதில இந்நேரம் இடைத்தேர்தல் தாண்டி…

வைத்தியை உள்ளே அனுப்பிட்டு நாங்க வாயில விரல வச்சிக்கிட்டிருப்பமா… இனிமே திமுக்காரன் எவனாவது பாமகவை எந்த பொதுக் கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அங்கேயே வெட்டுங்கடா… இந்த ராஜாவோ அந்த கருணாநிதியோ ஒரு ம…ம் புடுங்க முடியாது. கருணாநிதியால இனி நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்.

இந்த ஆற்காடு வீராசாமி ஆந்திராவிலருந்து வந்த செ…டு (மிருகத்தை சொல்லி திட்டுகிறார்).. இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம்ம வன்னியர் சங்க கல்விக் கோயில பொறம்போக்குல கட்டியிருக்கிறதா சொல்றான்.

மவனே… தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பாரு. ஊராட்சித் தேர்தலில் திமுக்காரனுங்க காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் ஊருக்கே தெரியும்டா… மானங்கெட்ட பயலுங்களா.

27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுற ஒரே தலைவன் யாரு… இந்தியாவிலயே நம்ம டாக்டரய்யாதான். நீ திராவிடம் பேசி நாட்டை ஏமாத்திக்கிட்டிருக்கே. ரெண்டு கோடி மக்கள் உள்ள நம்ம சமுதாயத்துக்கு 3 அமைச்சராம். ரெண்டு சதவிகிதம் கூட இல்லாத ஆற்காடு வீராசாமி குரூப்புக்கு 2 அமைச்சராம். என்னங்கடா விளையாடறீங்களா…

2011ல் பாமகதான் தமிழ்நாட்டுல ஆட்சி அமைக்கும். இதைக் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தடுக்க முடியாது.

கருணாநிதியே, எங்களுக்கு முகவரி இருக்கு. உனக்கிருக்கிறதா… திமுக கூட்டணியில் பாமதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்ல. சும்மா எங்களை மிரட்டிப் பார்க்காதே. தாங்க மாட்டே… நீ எத்தனை வழக்குப் போட்டாலும் சந்தோஷமா ஜெயிலுக்குப் போவோம், ஆனா வெளிய உள்ள எங்க ஆளுங்க என்ன செய்யணுமோ அதைச் செய்துடுவாங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல.

எங்க டாக்டரய்யா டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்றார். காரணம், அதனால நஷ்டம் எங்க பாட்டாளி மக்களுக்குத்தான். டாஸ்மாக் மூலம் 9000 கோடி ரூபாய் வருதுன்னு சொல்றே. இது அத்தனையும் எங்க பாட்டாளி மக்கள் பணம். எந்த… (பிராமண சமூகத்தினரை சுட்டிக் காட்டி) டாஸ்மாக்குக்கு வந்து குடிக்கிறான்… பொண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு எங்க விவசாய மக்கள்தானே குடிச்சி அழியறாங்க… அவங்க தாலிய அறுத்துதானே நீ இவ்ளோ கல்லா கட்ற!

இந்த அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்னிக்கு எத்தனை நூறு கோடி சேர்த்திருக்கான். இதுக்கு காரணம் திமுகாரன் ஓட்டா… எங்க ஓட்டுடா… நாங்க போட்ட ஒன்னரை லட்சம் ஓட்டுலதான் நீ இன்னிக்கு ஜம்பமா சம்பாதிக்கிற… நீதான் எங்காளுங்க மேல கேஸ் போடச் சொன்னியா… மவனே தொலைச்சிடுவேன்!.

மரியாதையா எல்லா கேஸ்களையும் வாபஸ் வாங்கிட்டு வேற வேலயப் பாரு…”

-இதுதான் குரு பேசிய முழு பேச்சு விபரம்.

குருவின் பேச்சில் உள்ள பிரசுரிக்கவே முடியாத அளவுக்கு மட்டகரமான வார்த்தைகளை ‘எடிட்’ செய்துள்ளோம். ஆதாரம் ஒன் இண்டியா.

இந்தப் பேச்சை குரு பேசியபோது, அருகில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் ராமதாஸ்.

சுத்தமாக சூடு சொரணையே இல்லாத, காண்டாமிருகத் தோல் படைத்த கருணாநிதிக்கே இந்த பேச்சு சொரணை வர வைத்து விட்டது.   இந்தப் பேச்சை கேட்ட கருணாநிதி, மறுநாள் நடந்த ஒரு திருமண விழாவில், இப்படியெல்லாம் பேசும் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்று அறிவித்து, பாமக விலக்கப்பட்டது என்று அறிவித்தார்.  2009 தேர்தல் திருவிழாவில் போயஸ் தோட்டத்தின் வாசலில் செருப்பு காண்ட்ராக்ட் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த ராமதாஸ், கருணாநிதி எப்படியாவது கூட்டணியை விட்டு வெளியே அனுப்பினால் போதும் என்று மகிழ்ச்சியானார்.

குரு கைது செய்யப்பட்டார்.   குருவை கைது செய்ததோடு விடாமல், குரு மீது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தை போட்டார் கருணாநிதி.   தேசியப்பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டவுடன், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பாமக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் நீதிமன்றம், மறுத்து விட்டது.  காடுவெட்டி குரு போன்ற அப்பாவிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று உருக்கமாக வாதாடினார் குருவின் வழக்கறிஞர்.

நீதிமன்றம் குருவை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது சரியே என்று தீர்ப்பளித்தது.  அந்தத் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம்,

காடுவெட்டி குரு ஒரு ரவுடி என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பட்டவர்த்தனமாக சொல்லியது.

இது ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையே என்று ராமதாஸ் மீண்டும் கருணாநிதிக்கு தூது அனுப்பினார்.   எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தால் போதும் என்று இருந்த கருணாநிதி குரு மீதான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தையே விலக்கிக் கொண்டார்.   அப்போது உறவைப் புதுப்பிக்க இந்த இரு கபடவேடதாரிகள் என்ன நாடகம் போட்டார்கள் தெரியுமா ?

“இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தை இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்”.

மீண்டும் வன்னியர்களின் வாக்கு வங்கிகளைப் பெற்றால்தான் எப்படியாவது,  பிள்ளையை வழக்கிலிருந்து காப்பாற்ற முடியும், 2014ல் பழையபடி 5 சீட்டாவது பெற முடியும் என்று வன்னியர்கள் மீது கரிசனத்தை பொழியத் தொடங்கினார் ராமதாஸ்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற திருமண விழாவில் ராமதாஸ் பேசியது…

“வன்னியர் சங்கத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி, கடலில் குதிக்க சொன்னாலும் தயாராக இருந்த வீரர்கள் இன்று தளபதிகளாக உள்ளனர். கடந்த கால போராட்டங்களில் அதிகமாக சிறை சென்றவர்கள் செஞ்சி இளைஞர்கள். இளைஞர் படையினர், இளம்பெண்கள், மாணவர் சங்கத்தினர் என வன்னியர்கள் திரண்டு மே.5-ந் தேதி மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

அங்கு நடைபெற உள்ள வன்னியர் சங்க சித்திரை பெருவிழாவில் 25 லட்சம் வீர வன்னியர்கள், இளைஞர்கள் கூடுகிறார்கள். சத்தியம் கூற, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆண்டே தீரும். 2016-ல் வன்னியர் ஆட்சி அமைந்தே தீரும் என அவர்கள் கூறுகின்றனர். இது வரை வன்னியர்களை ஏமாற்றிய திராவிட கட்சிகளை வீழ்த்துவது, ஒழிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். நாங்கள் இனிவேறு எந்த சின்னத்துக்கும் ஓட்டுபோட மாட்டோம்.

இலவசங்களை கொடுத்து சாராயகடை, சினிமா தியேட்டர்களை திறந்து சாராயம் குடிக்க சொன்னவர்களின் மாயை இனிமேல் எடுபடாது. 4 ஆட்டுக்குட்டிகளை கொடுத்து பெண்களை வாழ சொல்கிறார்கள். இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி விடுவார்கள் என இன்னமும் ஏமாற்றுகின்றனர். 1980-ம் ஆண்டில் என்னுடன் வந்தது போல் தற்போதும் என்பின்னால் வரவேண்டிய நேரம் வந்து விட்டது.

வாருங்கள், மற்ற கட்சிகளுக்கு இனிவேலை இல்லை. 2016-ம் ஆண்டோடு திராவிட கட்சிகளுக்கு  மூட்டை கட்ட போகிறோம். அவர்களுடைய அத்தியாயம் முடங்க போகிறது. புதிய பாதையை தொடங்க வேண்டும், புதிய அரசியலை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழர்களுக்கும் தர உள்ளோம். இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார்.

நீங்கள் தயாரா? நீங்கள் இதுவரை எந்த திட்டம் கொடுத்தீர்கள்? ரோஷத்துடன் கூடிய வன்னியர்கள் மற்ற கட்சிகளில் இருக்க வேண்டாம். நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சியார் போன்றவர்களின் இன்றைய நிலை என்ன? 2016-ல் இதனை மாற்றி காட்டுவோம். இனியும் நாம் கோழைகளாக இருக்க மாட்டோம். நமது வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு வன்னியர் கூட ஆட்சி புரியவில்லை.

நீங்கள் மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது. உங்கள் வாரிசுகளையும் அ.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து விலக வைத்து வன்னியர் சங்க கொடியை பிடிக்க செய்ய வேண்டும். மே.5-ந் தேதி மாமல்லபுரம் வர கூறுங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும், இதுவரை எம்.எல்.ஏ., சேர்மன், கவுன்சிலர் பதவிகளை தவிர்த்து வேறு என்ன கண்டீர்கள் எழுதிவைத்துக் கொள்ளுங்கள், 2016-ல் வன்னியர்கள் ஆட்சி மலரும் இது உறுதி. இதனை நோக்கி நமது பயணம் தொடரும். “

ஜுலை 2012ல் பேசியது….

“உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.

வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிரளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம்”

ஆகஸ்ட் 2012ல் பொதுக்கூட்டத்தில் பேசியது.

“வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தான் நாம் கேட்கிறோம். பலருக்கு இட ஒடுக்கீடு என்றால் என்ன என்பதே தெரியவில்லை. 100 இடங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் நமக்கு 20 இடங்களை தனியாக கேட்கிறோம். இதுதான் இட ஒதுக்கீடு.

இந்த இட ஒதுக்கீட்டை மற்ற ஜாதிக்காரர்கள் நமக்காக கேட்பார்களா? கேட்க மாட்டார்கள். நமக்கு நாம் தான் கேட்க வேண்டும். இட ஒதுக்கீட்டை நமக்காக மட்டும் கேட்கவில்லை மற்ற ஜாதிகளுக்காகவும் தான் கேட்கிறோம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. இதற்காக இந்த ஒற்றுமைக்காக 35 வருடமாக போராடி வருகிறேன். இப்போது தான் ஒற்றுமை வந்துள்ளது. எப்படி கூறுகிறேன் என்றால் ஜெ.குரு உருவாக்கியுள்ள மஞ்சள் படையை பார்த்து தான் ஒற்றுமை வந்து விட்டது என கூறுகிறேன்.

மஞ்சள் நிறமும், அக்னி கலசமும் வன்னியனின் அடையாளம். நாம் ஆட்சிக்கு வந்தால் யாதவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம். ஏனெனில் வன்னியர்களும், யாதவர்களும் மாமன், மச்சான்கள் தான். யாதவர்களும் 95 ஜாதிகளில் ஒருவராகதான் உள்ளனர். நம்மை போல அவர்களுக்கும் போராட தெரியாது. செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான். அதை தொடர்ந்து ஜெயலலிதா தனி இட ஒதுக்கீட்டை தரவில்லை என்றால் வருகிற 2013ம் வருடத்தில் நாம் நடத்தும் போராட்டத்தால் நாடு தாங்காது.

தமிழ்நாட்டில் 12 சிறைகள் உள்ளன. அதில் இருக்கும் கைதிகளை தவிர்த்து 10 ஆயிரம் பேரை அடைக்கலாம். அந்த போராட்டத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் நாம் அடுத்த ஆண்டில் சிறையை பார்ப்போம். கருணாநிதியிடம் தனியாக இட ஒதுக்கீடு கேட்டோம் 107 ஜாதிகளை சேர்த்து கொடுத்தார். முழுமையாக கிடைக்கவில்லை. செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான். இதற்கு பிறகு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் 1-ல் 2 பார்த்து விடுவோம். 130 வருடங்களாக வன்னியர் முன்னுக்கு வரவில்லை. இந்த ஜாதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் என்னுடைய பேச்சை கேட்டு ஒருமுறை மாம்பழத்திற்கு வாக்களித்தால் இந்த நிலை மாறும்.“

இந்த நெருக்கடிக்கு முன்பெல்லாம், தான் ஒரு சாதிக்கட்சித் தலைவர் என்ற அடையாளத்தை துறக்க விரும்பிய ராமதாஸ், தமிழ் வழிக்கல்வி, சமூக நீதி, மது ஒழிப்பு, ஈழம், என்று அறிக்கைகளும், மேடைப்பேச்சுக்களும் பேசிக் கொண்டிருப்பார்.   தனக்கு வேண்டிய பத்திரிக்கையாளர்களை வைத்து, ராமதாஸ் ஒரு வாழும் பெரியார் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்.

தற்போது அக்னி கலசத்தின் கீழ் எரியும் நெருப்பு மங்கி விட்டதால், சாதி வெறி என்ற நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் ராமதாஸ்.   

இப்படியெல்லாம் வன்னியருக்காக உயிரைக் கொடுப்பேன், மயிரைத் திரிப்பேன் என்று பேசும் ராமதாஸ், வன்னியர்களுக்காகவும் எதுவும் செய்ததில்லை.  அக்டோபர் 10 அன்று ராமதாஸின் மகள் வயிற்றுப் பேரன் முகுந்தனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திற்கு ராமதாஸ் வரதட்சிணையாக என்ன வாங்கினார் தெரியுமா ?  ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரும், போயஸ் தோட்டத்தில் ஒரு பங்களாவும்.  இப்படி வாங்கும் நிலையில்தான் மற்ற வன்னியர்கள் இருக்கிறார்களா… ?

ராமதாஸின் இந்தச் செயல், இனவெறியைத் தூண்டி யூதர்களை அழித்துக் கொன்ற ஹிட்லர் மற்றும் கோயபல்ஸின் செயல்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.   ராமதாஸ் அரசியல் உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒரு விஷக்கிருமி.   இந்த விஷக்கிருமி, தமிழினத்தையே அழித்து விடும்.

ராமதாஸ் போன்ற விஷக்கிருமிகளைக் கண்டிக்க வேண்டிய புரட்சியாளர்கள், திருச்சியின் மூலையில் “பிராமணாள் கபே” என்ற பெயர் இருக்கிறது என்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். 

பார்ப்பனின் வேதம் சாதிக்கு அடிப்படையாக இருந்தது என்றால், அந்த பார்ப்பனீயத்தின் மறு வடிவமாக மாறி தலித்துகளின் மீது தாக்குதல் தொடுப்பது இடைநிலைச் சாதியினர்தானே.. ?   தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து விட்டு, பெருமையாக தேவர் ஹோட்டல் என்று மூலைக்கு மூலை இருக்கும் ஹோட்டல்களுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள் என்றால், தேவர் என்பது சாதி, பிராமணாள் என்றால் வர்ணம்.  அது ஏஷியன் பெயின்ட்ஸ், இது நெரோலாக் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.     தேவர் ஹோட்டல், செட்டிநாடு ஹோட்டல்கள் இருக்கையில் பிராமணாள் ஹோட்டல் இருந்தால் என்ன குடி முழுகி விடப்போகிறது ? அந்த ஹோட்டலை மூடி விட்டால் வர்ணாசிரம தர்மமே அழிந்து விடுமா ?  

தலித்துகளின் சொத்துக்களை சூறையாடி, அவர்கள் வாழ்வாதாரங்களை அழித்து, அவனோடு தீராமல் மோதிக் கொண்டிருக்கும் இடைநிலைச் சாதியினரின் பெயரால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாமாம்… ஆனால் பிராமணாள் என்ற பெயர் இருக்கக் கூடாதாம்….

பிராமணாள் என்ற பெயருக்கு எதற்காக எதிர்ப்பு என்றால்,  மழை சரியாகப் பெய்யவில்லை என்றால் கூட, அதற்கு ஆரிய ஆதிக்கமே காரணம், பார்ப்பனீயமே அதன் வேர் என்று பேசுவது மற்ற ஆதிக்க சாதியினரின் சாதி மனப்பான்மையை தலித்துகளுக்கு எதிராக தூக்கி நிறுத்த உதவுகிறது என்பதே.  பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன், பார்ப்பனியமே எல்லா தீமைகளுக்கும் காரணம் என்று முண்டா தட்டுபவர்கள், என் மகனுக்கோ மகளுக்கோ, தலித் சமூகத்திலிருந்து  மட்டுமே திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லுங்கள்….

கேட்டால், ‘திருமணம் என்பது தனி மனித உரிமை, தண்ணி குடிக்குது தஞ்சாவூரு எருமை’ என்று விளக்கம் கொடுப்பார்கள்.

பார்ப்பனீயமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறும் “புரட்சியாளர்கள்” சாதி மறுப்புத் திருமணம் செய்தால் சும்மா விடமாட்டேன் வெட்டுவேன் என்று பகிரங்கமாக அறிவித்த ஒரு ரவுடிப்பயலுக்கு கொம்பு சீவி விட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ராமதாஸை பகிரங்கமாக ஏன் கண்டிக்க மறுக்கிறார்கள் ? கண்டிக்க மறுக்காமல் அவர்கள் சாதிக்கும் கள்ள மவுனம்,  ராமதாஸுக்கு அவர்களும் உடந்தை என்பதைத் தவிர்த்து வேறு என்ன பொருளை உணர்த்துகிறது ?

பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கைகள், கவுண்டர்கள், செட்டியார்கள், வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், முத்தரையர்கள், கள்ளர்கள் என்று இடைநிலைச் சாதியினரின் சாதிய ஆதிக்கத்தை தலித்துகளின் மீது நிறுவவவே உதவியிருக்கிறது.  பெரியாரின் படத்தைப் போட்டுக் கொண்டு ஆட்சி நடத்தும் இரண்டு கட்சிகளுமே தலித் விரோதிகளாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன.

சமூக நீதிக் காவலர், வாழும் பெரியார், தமிழ் குடிதாங்கி, என்றெல்லாம் தன்னையே அழைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடையும் ராமதாஸ், கருணாநிதிக்கு நிகரான தீயசக்தி.   அவர் ஒரு சாதிச் சங்கத்தின் தலைவர் மட்டுமே.   அவருக்கும் பாட்டாளிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.   மனித இனத்தை நேசிக்கும், தமிழ் மொழியையும், இனத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் ராமதாஸை புறக்கணிக்க வேண்டும்.  

ராமதாஸோடு எந்தப் போராட்டத்துக்காகவும் மேடையேறக் கூடாது.   தன் சுயநலத்துக்காக, ஏழை தலித்துகளின் வீட்டை தீயிட்டு அந்த நெருப்பில் குளிர்காயும் டாக்டர் ராமதாஸ் என்ற தீயசக்தி, தமிழக அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.   

இந்த தீயசக்தியை ஒழித்துக் கட்டுவதே, பாதிக்கப்பட்ட தருமபுரி தலித் மக்களுக்கும், தமிழினத்திற்கும், நாம் செய்யும் மிக மிகப்பெரிய உதவி.









Sunday, April 21, 2019

எழுதிய சில குறிப்புகள் 2



இங்குள்ள பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு மிகப் பெரிய நிர்ப்பந்தங்கள் உண்டு. முதலீட்டைக் காக்க வேண்டும். வளர்க்க வேண்டும். தொழிலில் முன்னேற வேண்டும். பலவற்றுக்கு முயன்று பார்க்க வேண்டும். அதிகார வர்க்கத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் விட தங்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்குச் சேவை செய்ய வரவில்லை. அவர்களின் தொழிலைச் சரியான முறையில் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் தான் நேர்மை, நீதி, நியாயம், அறம் என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்? அவர்கள் செய்து கொண்டிருப்பது அவர்களுக்கான நீதி, நியாயம், தொழிலுக்கான அறம் என்று தான் சொல்கின்றார்கள். அது உங்களுக்குப் புரியாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. 1

150 ரூபாய் கொடுத்து எல்லாச் சேனல்களையும் பார்த்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று கட்டாயம் 260 கொடுத்தால் தான் பார்க்க முடியும். அத்துடன் எங்கள் விளம்பரங்களையும் நீங்கள் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்று அவர்களும் அவர்களை ஆளும் அரசும் சொன்ன போது அப்படியே அடிபிறழமல் இணைப்பைத் துண்டிக்காமல் பார்க்கத்தானே செய்கின்றார்கள்.

இது தான் அவர்களின் வெற்றி. இது தான் அந்தத் துறையின் சூட்சுமம்.

அது போலத்தான் பிரபல்யங்களும்.

நீங்களும் நானும் காலையில் வெறும் டவுசர் பனியனோடு அருகே உள்ள சாலையோர தேநீர்க்கடையில் பத்து பேரோடு உட்கார்ந்து டீ குடித்து விட்டு வேடிக்கை பார்த்து விட்டு வர முடியும். எங்கே வேண்டுமானாலும் இயல்பாகச் சென்று விட்டு வந்து விட முடியும். காசிருந்தால் பேருந்தில், இல்லாவிட்டால் பொடி நடையாகச் சென்று வந்து விடலாம். ஆனால் தங்கள் முகத்தை மற்றும் பேச்சை  வைத்து பிரபல்யமாக ஆனவர்களின் கதை அப்படியா?

பொழுது விடிந்து இரவு வருவதற்குள் அவர்களுக்கு சில ஆயிரமாவது தேவைப்படும். இவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் பிழைப்பதற்கான வழியில் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று பாராட்டுங்கள்.

இப்போது நட்சத்திர பேச்சாளர்கள் யாருமில்லை. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பேச்சாளர்களும் எங்கே காணப்படவில்லை. திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் வானில் மறைந்து விட்டது.

நேரிடையான கொள்முதல் போல இவற்றுக்கு செலவளிக்கும் தொகையை இப்போது நேரிடையாகவே மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்.

முகம் தெரிந்த பேச்சாளர்களின் இன்றைய சந்தை மதிப்பு 30,000 முதல் 50,000 வரைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு இரண்டு கூட்டம் என்றாலும் ஒரு லட்சத்தை வீட்டுக்கு அலுங்காமல் கொண்டு போய் சேர்த்து விடலாம். டாக் ஷோ வில் கலந்து சாயங்காலம் பெறும் சொற்ப தொகையும், எவனும் தன்னை நம்பி படம் எடுக்கத் தயாராக இல்லை என்று யோசித்த தருணங்களிலும் சிலர் சரியான முடிவை எடுத்துத் தான் ஆக வேண்டும்.

அதாவது காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள முடியும்?

இது போன்ற சமயங்களில் கரு.பழனியப்பன் போன்றவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாக இருக்க வாழ்த்துங்களேன்.

********

தேனியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசும் பேசியதை பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்தார். அற்புதம் என்ற வார்த்தைக்கு மேலே ஏதாவது ஒரு வார்த்தை இருக்குமேயானால் அதை இங்கே எழுதி வைக்கலாம்.

மொழி பெயர்ப்பு என்பது வெறும் மொழிப் புலமை சார்ந்தது மட்டுமல்ல. அது உணர்வு மற்றும் உள்ளக்கிடக்கை சார்ந்ததும் கூட.

மாறுபட்ட கொள்கைகள், விருப்பங்கள், நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம் என்பது தான் அரசியலின் அஸ்திவாரம். அந்த வகையில் பீட்டர் அல்போன்ஸ் செய்த மொழி பெயர்ப்பு என்பது தயிரில் கடையும் போது உருவாகும் நெய் போன்ற அற்புதமாக இருந்தது.

இவரை ஏன் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று அதன் பின்புல அரசியலுக்குப் பின்னால் சென்று பார்த்தால் காங்கிரஸ் முன்வைக்கும் மதநல்லிணக்கம் என்ற வார்த்தை அம்மணமாக நிற்பதை நம்மால் காண முடியும்.

நேற்றைய பேச்சில் ராகுல் ஒரு வித்தியாசமான முக்கியமான தகவலைச் சொல்லியுள்ளார்.

இளம் தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஆசைப்பட்டால் தாராளமாகத் தொடங்கலாம். முதல் மூன்று வருடங்கள் அரசாங்கத்தில் உள்ள எந்த துறையிலும் அனுமதி வாங்கத் தேவையில்லை. மூன்று வருடங்கள் கழிந்தபின்பு அதற்குப் பிறகு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். அதாவது அந்தத் தொழிலின் லாப நட்டங்களைப் பொறுத்து. செய்த தொழில் தேவையில்லை அல்லது தொடர விருப்பமில்லை என்றால் வேறு தொழில் தொடங்கலாம். மீண்டும் மூன்று வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள் இதற்குப் பின்னால் உள்ள பிரச்சனைகளை.

உண்மையிலேயே ராகுலுக்கு இது போன்ற ஆலோசனைகளைச் சொல்லிக் கொடுக்கும் அந்த பொருளாதார நிபுணர்களைப் பார்க்க வேண்டும் போல ஆசையாக உள்ளது.

சொல்லிக் கொடுப்பவர் பைத்தியமா? இல்லை அதை நம்பிப் பேசும் தான் ராகுலா? என்று வியப்பாக உள்ளது.

மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழகத்தில் ஒரு தொழில் தொடங்கி வேர் பிடித்து வளரத் தொடங்கினால் இங்கே உள்ள எத்தனை நந்திகள் உருவாகும்? 
எத்தனை நவக்கிரகங்களுக்கு மாதந்தோறும், வருடந்தோறும், தேர்தல் சமயங்களில், கூட்டம் நடத்தும் சமயங்களில் தட்சணை செய்யப்பட வேண்டும் என்று திருப்பூர் நிறுவனங்களில் வந்து ராகுல் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இந்தச் சூழலில் அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை. உங்கள் விருப்பம் போலச் செயல்படலாம் என்று சொல்வதற்குப் பின்னால் நிழலுக ஆதிக்கம் மிகுந்தவர்களின் அரசாங்கம் நடக்க அனுமதி அளிப்பதாகவே இதற்கு அர்த்தம். ஒரு வேளை அந்த மூன்று வருடங்களில் ஒருவர் செய்த தொழில் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மக்கள் எங்கே போய் முறையிட முடியும்?

தவறு செய்தவர்கள் சட்டத்தின் பார்வையில் எப்படித் தெரிவார்கள்?

அரசாங்கம் வரி, வருவாய்களின் அடிப்படையில் தான் செயல்படுகின்றது. இந்தியா முழுக்க இப்படிப்பட்டவர்கள் உருவாகும் பட்சத்தில் மூன்றாண்டுகளுக்கு எங்கிருந்து நிதியைப் பெறுவார்கள்? இன்னும் பல கேள்விகள் இதற்குப் பின்னால் உள்ளது.

ஒரு வேளை ராகுல் பெரியார் புத்தகங்களை மோடிக்குக் கொடுப்பதற்கு முன்பு அவர் அம்மாவுக்குக் கொடுத்து இருந்தால் ரேபரலி தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்பு பூஜை புணஸ்காரங்கள் செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பாரா? என்ற கேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

************

எங்கள் கட்சிக்குக் கொள்கையுண்டு. நாங்கள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவோம் என்று சொன்ன, சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகளும் சரி, மக்களிடம் கடந்த ஐம்பது வருடங்களாக அறிமுகமாகி எங்களுக்கு நிரந்தரமாக இத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கின்றது என்று மார் தட்டி களத்தில் நிற்கும் கட்சிகளும் பணத்தை வெவ்வேறு வழிகளில் வாரி இறைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஊடக பலம் ஒரு பக்கம். சாதியை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சி மறுபக்கம். ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் கட்சிகளின் பிரச்சாரங்களும், பேச்சுகளும், அவர்களை முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகளும் ஊடகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை கவனித்துப் பாருங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஏன் நிரந்தர ஓட்டு வங்கியுள்ளவர்களால் இத்தனை சிரமப்பட வேண்டியதாக உள்ளது?

மொத்தத்தில் ஒவ்வொரு பெரிய கட்சிகளும் இந்த தேர்தலில் பெறக்கூடிய ஓட்டுக்களும் அவர்கள் செலவளித்த பணத்திற்குக் கிடைத்த வெகுமதி. அப்படியென்றால் கட்சிக்காரர்கள்? அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

நான் இருக்கும் பகுதியில் ( மொத்த பத்து பகுதிகளிலும்) ஒரு வேட்பாளர் கூட வந்து ஓட்டுக் கேட்க வரவில்லை.

முக்கியமான இடங்களில் தான் அனைவரும் ஓட்டுக் கேட்கச் சென்றதாக பத்திரிக்கையில் வந்தது. அவர்களுக்கு நேரமில்லை என்பதனை விட அவர்களின் உடம்புக்கு இந்த வெயில் கொடுத்த பரிசாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த தேர்தல் இதுவரையிலும் நடந்த தேர்தல்களில் மொத்தமாகவே வித்தியாசமாக உள்ளது. வாக்காளர்களைச் சந்திக்காமல் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்ற புதிய பாதையை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளதாக எடுத்துக் கொள்ள முடியும்.

சீமான் தமிழகம் முழுக்க எத்தனை சதவிகிதம் ஓட்டு பெறப் போகின்றார் என்பதனை கவனிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் பரப்புரை தாக்கத்தை உருவாக்குமா? உருவாக்கியதா? இல்லை தமிழக மக்கள் குறிப்பிட்ட சின்னம், குறிப்பிட்ட அரசியல்வாதி என்ற எண்ணத்திலிருந்து வெளியே வந்துள்ளனரா? கிராமத்து மக்கள் மாறியிருக்கின்றார்களா? மாற்றப்பட்டு உள்ளனரா? விலைக்கு வாங்கப்பட்டு உள்ளனரா? மதம் ஆதிக்கம் செலுத்தியதா? இல்லை எப்போதும் போலச் சாதி தான் தீர்மானித்து உள்ளதா? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்?

*************

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் மனித வள பயிற்றுவிப்பாளர் நடத்திய குளறுபடியால் மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் மரணம் அடைந்தார். செய்தித் தாள்களில் இது வந்தது. சில நாட்களில் இது குறித்த செய்தி இல்லை. நண்பர் அழைத்துக் கேட்டார். அந்த கல்லூரி யாருடையது? தெரியுமா? என்று கேட்டு விட்டு பாராளுமன்ற துணைச் சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை குறித்துச் சொன்ன போது மிரட்சியாக இருந்தது. கோவை கல்லூரி தம்பிதுரை மனைவி பெயரில் தான் இருந்தது.

இந்த பேச்சில் செந்தில் பாலாஜி பேசுவதைக் கேட்ட போது மிரண்டு போனேன். அன்று நண்பர் சொன்னதும் இதுவே தான். இந்தியா முழுக்க 45க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளார். இப்போது மருத்துவக்கல்லூரி வேறு கட்டிக் கொண்டு இருக்கின்றார். ஆனால் எந்த இடத்திலும் இவர் பெயர் அடிபட்டுள்ளதா? என்று யோசித்துப் பாருங்கள். சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இவர் தான் அன்றைய சூழலில் சசிகலாவிடம் கெஞ்சி (அதிகமாக) கேட்டுக் கொண்டார்.

இப்போது தம்பிதுரை கரூர் தொகுதியில் அதிமுக சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினராக நிற்கிறார். தொகுதி மக்கள் இவரை மதிக்கத் தயாராக இல்லை. இவரும் மக்களை மதிப்பது போல நடிக்கவிரும்புவதும் இல்லை. நீ ஓட்டு போட்டா போடு. போடாவிட்டால் போய்யா... என்பது போலப் பேசி எல்லா இடங்களிலும் வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டு இருக்கின்றார்.

செந்தில் பாலாஜிக்கு இப்போது திமுக சீட் கொடுத்துள்ளது. தற்போது அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் குறித்துப் பேசுவதைக் கேளுங்கள். ஒரு நாளைக்கு 200 ஏக்கர் பத்திரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றது. (பா.ஜ.க. அரசு இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் படி சொத்துப் பத்திரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கும்பட்சத்தில் இந்த நாட்டில் பல இருட்டு மனிதர்களின் வெளிச்சத்தை நம்மால் பார்க்க முடியும்) தேர்தல் ஆணையம் வேலை எளிதாக முடிந்து விடும். ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்.

மாறி மாறி உண்மையைச் சொல்பவர்கள் தெய்வத்திற்குச் சமம் என்று நம் குலசாமி நடிகர் வடிவேல் சொல்லியுள்ளார்.

நாம் கேட்டுக் கொள்ள முடியும். அவ்வளவு தான் நம்மால் முடியும்.

வாக்களிப்போம். வாழ வைப்போம். வளர வைப்போம். யாரை? என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


***********

நூறு நாள் வேலைத்திட்டத்தை எப்போதும் எங்கே சென்றாலும் ப.சி பெருமையாகச் சொல்லுவார். இப்போது மகன் தன் தொகுதியில் 32 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி.

வழங்கப்படும் நிதியின் அளவு ரூபாய் 800
ஆரத்தி எடுத்த பெண்களின் எண்ணிக்கை 25 பேர்கள்
ஒரு நபருக்கு ரூபாய் 32

(கடைசியில் இந்தப் பணம் பிரிப்பதில் கூட அடிதடி வரைக்கும் போயுள்ளது)

இப்போது தெரியுமே? சிவகங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்குக் காய்ந்து போய் இருக்கின்றார்கள் என்று புரியுமே?

இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே எந்த அளவுக்குச் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதனை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஏழை வேட்பாளர் குட்டி ப.சி உங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாமா?


Saturday, April 20, 2019

எழுதிய சில குறிப்புகள்


இந்த வருடம் +2 பாடத்திட்டம் கடினம். பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்டார்கள். புதிய பாடத்திட்டம். கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல செய்திகள் வந்தன. அல்லது உருவாக்கப்பட்டன.

ஆனால் 238 அரசு பள்ளிக்கூட மாணவர்கள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்கள் நடந்து முடிந்த +2 பரிட்சையில் பெற்ற பாடவாரியான தேர்ச்சி சதவிகித விபரங்கள்.

தமிழ் 94.12 %
ஆங்கிலம் 93.83 %
இயற்பியல் 93.89 %
உயிரியல் 96.05 %
கணினி அறிவியல் 95.27 %
வேதியியல் 94.88 %

நீந்தக் கற்றுக் கொடுங்கள். அவர்களே நீந்தத் தொடங்கி விடுவார்கள்.
மாற்றத்தை அனுமதியுங்கள்.

********

ஓட்டுப் போடச் சென்ற நாளில் முதல் முறையாக ஓட்டுப் போட தன் அம்மா அப்பாவுடன் அந்த பெண்ணும் வந்து இருந்தாள். எல்லோரும் வரிசையில் நின்று இருந்தாலும் வயது வித்தியாசம் பாராமல் அனைவர் கண்ணும் அந்த பெண் மேல் தான் இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்த போதே உயர் நடுத்தர வர்க்கம் என்பதனை அவர்கள் நடவடிக்கையில் புரிந்து கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அந்த பெண் அணிந்திருந்த உடைகள் ரொம்பவே வித்தியாசம். 

இதைப் பற்றி விரிவாக எழுதினால் உன் கண் மேல் தான் தவறு. பொத்திக்கிட்டு போவீயா? என்று கணவான்கள் கேட்கக்கூடும். பொத்த கூட்டமும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தந்தையும் தாயும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் பெருமையாக எடுத்துக் கொண்டார்கள்? இல்லை இவர்கள் எப்பவுமே இப்படித்தான் தான் பாஸ் என்று பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்களா? என்று தெரியவில்லை.

இணைய விளையாட்டில் கவனம் செலுத்தி மதிப்பெண்கள் கோட்டை விட்ட போன்ற பசங்களை ஒன்றுமே செய்யக்கூடாது. அவர்கள் மேல தப்பில்ல. அவர்கள் அப்பன் ஆத்தாளைத் தெருவுக்கு கூட்டிட்டி வந்து ................... செய்துடனும். இல்லையென்றால் இந்த மதிப்பெண்கள் போதும்? என்று புலம்பாமல் பொத்திக்கிட்டு இருக்கவேண்டும்.

சந்தோஷமா, சௌக்கியமாக, ஜாலியாக, அவங்க அவங்க விருப்பப்படி இருங்க. ஆனால் இதனால் விளைவுகள் உருவாகி சங்கடங்கள் வரும் போது புலம்பாதீங்க.

**************

2019 பாராளுமன்ற பொதுத் தேர்தல்

நான் இருக்கும் பகுதியில் மூன்று வாக்குச் சாவடிகள் உள்ளது. மூன்றிலும் சுமாரான கூட்டம். இன்னும் முழுமையாக மக்கள் வந்து சேரவில்லை.

சென்ற முறை வாக்குச் சாவடிக்கு நுழையும் முன்னே பல கட்சிக்காரர்கள் அவரவர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கி ஆதரவு கேட்டார்கள். இந்த முறை கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆதரவு மேசை ஒன்று உள்ளது. அதிலும் நபர்கள் யாருமில்லை. ஒப்புகை சீட்டுக்கு (இணையம் வழியே பெற முடியாதவர்கள்) பலரும் தடுமாறுகின்றார்கள்.

இந்த முறை அனல் பறக்கும் பிரச்சாரம் என்பதன் அர்த்தம் மாறியுள்ளது.

ஓட்டுச் சாவடிக்குள் அந்தந்த கட்சி சார்பாளர்கள் அமர்ந்திருப்பார்கள். இந்த முறை கட்சிக்காரர்கள் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் பசங்கள் தான் உட்கார்ந்து இருந்தனர். நிச்சயம் அவர்கள் கட்சிக்காரர்கள் இல்லை. நாம் யூகித்துக் கொள்ள வேண்டியது தான். பெயரை அதிகாரி வாசிக்கும் போது அவர்கள் டிக் அடித்துக் கொள்ள வேண்டியது. ஒரு நாள் கூலி.

மூன்று தளங்கள் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறையும் யாரோ ஒரு நிறுவனத்தின் பெயர் தான் வகுப்பின் முகப்பில் பொறித்துள்ளனர். அவர்கள் தான் அரசு பள்ளிக்கூடங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களும் உதவியிருக்காத பட்சத்தில் சிதைந்த புதைபொருளாகக் காட்சிப் பொருளாக மாறியிருக்கக்கூடும். (சென்ற வருடம் தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு ஒதுக்கிய தொகை 28 ஆயிரம் கோடி)

நாய்கள் கத்தும். குலைக்கும். பயமுறுத்தும். மாற்றத்தை விரும்புவர்கள். ஊழல்வாதிகளை விரட்ட, இந்திய தேசத்தில் நம் குழந்தைகளும் எதிர்காலத்தில் கம்பீரமாக வாழ வேண்டும் என்பதற்காக மாறாத எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் ஓட்டளிக்க முயலவும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

••••••••••••••

இப்போது வரைக்கும் 63 சதவிகிதத்தை எட்டிப் பிடிக்கவே இழுபறியாக உள்ளது. காலையில் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போதே எனக்குச் சந்தேகமா இருந்தது. எங்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேகம் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்து எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் சீர்திருத்தம் சார்பாகப் பல நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணுடன் ஒவ்வொருவரின் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தே ஆக வேண்டும். செய்வார்களா? என்பது சந்தேகமே.

ஊர் விட்டு ஊர் போய் ஒட்டுரிமையைச் செலுத்தும் பழக்கத்தை மாற்றி நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வர வேண்டும். கட்டாயம் ஒப்புகைச் சீட்டு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின் அஞ்சல் வாயிலாகக் கிடைக்கும் அளவிற்கு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய 1700க்கு மேற்பட்ட வாக்குச் சாவாடிகள் உள்ளது. ஒரு கட்சியின் வேட்பாளர் 1700 பேர்களை நியமிக்க வேண்டும். ஒரு நபருக்கும் அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்தால் மட்டுமே ஆட்கள் கிடைப்பார்கள். இதற்கு மட்டும் ஒரு வேட்பாளர் ஒரு நாளில் 17 லட்சம் ரூபாய் செலவளிக்க வேண்டும். இதே போலச் சாதாரண செலவுகளைக் கணக்கிட்ட போதே தலைசுற்றுகின்றது. இதற்கு மட்டுமே சில கோடிகள் வேண்டும். தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் படித்துப் பார்த்த போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. மாறாத முட்டாள்தனம். மாற்ற விரும்பாத பழமைவாதம்.

கிராமங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை பெண்கள் மத்தியில் பேராவலை உருவாக்கியுள்ளது.

••••••••••••••••••

தமிழர்களின் சேமிப்பு குணத்தைப் பற்றி சில வார்த்தைகளில் சொல்ல முடியுமா?

நிச்சயமாகப் பெருமையாகச் சொல்ல முடியும். 

15 ந் தேதி இரவு திருப்பூரில் தொழிலாளர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரைக்கும் அமைதியாக வரிசையாக டாஸ்மாக்கில் பெருங்கூட்டமாக நின்றனர். வெளியே வரும் போது சட்டைப் பை, பேண்ட் பாக்கெட் ல் பக்கவாட்டில் இரண்டு புறமும், பின்புறம் உள்ள பாக்கெட் ல் என்று எல்லா பைகளில் வாங்கிய மதுப் பாட்டிலை வைத்துக் கொண்டு அமைதியாக வெற்றிக்கழிப்புடன் சென்றனர். காரணம் கேட்ட போது 16,17,18 அன்று மதுக்கடைகளுக்கு அரசாங்கம் விடுமுறை விட்டுள்ளது என்பதனை பொறுப்பாகப் பதில் கூறினர்

•••••••••••••••

இந்த தேர்தலில் உங்களைக் கவர்ந்த வாசகம் ஏதாவது உண்டா?

அட! ச்சும்மா இருங்க. பா.ஜ.க. வந்துரும்!!!!!

•••••••••••••

கேள்வி

பா.ஜ.க. அரசு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நேரிடையான உடனடி பலன் அளிக்கும் வண்ணம் ஏதேனும் உதவி ஏதும் செய்துள்ளதா?

பதில்

நிச்சயமாக.

சமீபத்தில் ட்ராய் என்ற தொலைக்காட்சிகளை வரைமுறைப் படுத்தும் சட்ட சீர்திருத்தம் கொண்டு வந்தது. அதற்கு விளக்கமாக நீண்டகால (எப்போதும் போல) செயல்திட்டம் என்றொரு வரைவு விளக்கங்களை கொடுத்து. படித்தவுடன் கிழித்துப் போட்டு விடவும் என்று சொல்லியிருந்தார்கள். நானும் அதன்படியே மறந்து போய் விட்டேன்.

அன்றைய தினமே வீட்டுக்கு வந்த கேபிள் காரருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அந்த சூறாவளியில் நானும் சிக்கிக் கொண்டேன் என்பதனை உணர்ந்து கொண்டேன்.

தொடக்கத்தில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு எல்லாச் சேனல்களையும் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில் இலவச சேனல் 150 மட்டும் அத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து 162 ரூபாய் என்றார்கள். உங்கள் ஜிஎஸ்டி எண் வேண்டும் என்றேன். அது முதலாளி யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லியுள்ளார்கள் என்றார். நானும் தேசபக்தி உடையவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன். எனக்கு இலவச சேனல் மட்டும் போதும் என்று மறுபடியும் நினைவூட்டினேன்.

அடுத்த நாள் விஜய் பேக் சேர்த்துக் கொள்ளுங்கள். 25 ரூபாய் சேர்த்து வரும் என்றார்கள். சரி என்றேன். இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவர்கள் சன் பேக் கட்டாயம் போட்டே ஆக வேண்டும். மொத்தம் 260 ரூபாய் என்றார்கள். நான் ராத்திரி சுடுகாட்டுக்குப் போக விரும்பவில்லை என்று தொடர்பை துண்டித்தேன். அவர்களும் துண்டித்து விட்டார்கள்.

அதன் பிறகு கேபிள் ஆட்கள் என் பக்கம் தலைவைத்து படுக்கவே இல்லை. காரணம் இது போன்ற சமயங்களில் இவர்களைப் போன்ற ஆட்களிடம் என் மனஆறுதலுக்காக செந்தமிழில் கூடுதலாக பேசிவிடுவது வழக்கம்.

முட்டாள் பெட்டியிடம் விடுதலை பெற்று விடுமுறையில் இருக்கும் மகள் தினமும் தமிழ் இரண்டு செய்தி தாள்கள், ஆங்கில செய்தி தாள், மற்றும் வார இதழ்கள் படித்து முடித்து விட்டு நேருவின் சுயசரிதை 450 பக்கத்தையும் படித்து முடித்து விட்டு அடுத்த புத்தகம் என்ன? என்று கேட்கிறார்

*******

தமிழகத்தில் கோடை விடுமுறையில் அம்மாக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாசகம் எது?

எப்பத்தான் இந்த பள்ளிக்கூடம் திறப்பாங்களோ?

•••••••••••••