Thursday, May 30, 2013

எதிரி தான் எழுத உதவினார்

அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை.  அவர் எந்த துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை.

அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்த தப்பான பழக்கத்திற்கும் அடிமையானதும் இல்லை.    

மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார்.

தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான் தன்னுடைய குடும்பம் தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு.  நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை.  ஆனால் ஊரில் மதிப்பு மிக்க குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார்.

வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்தவர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாக கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தவர்.  அதுவும் இவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்த பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டவர். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு இளைஞர்களின் கைக்கு அந்த பதவிக்குச் சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார்.

கையில் ஒரு மஞ்சள் பை என்பதை தனது அடையாளமாக கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர்.  

ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தார். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுவார். காந்தியவாதி என்பதை விட கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார்.

முதன் முதலாக வலையில் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் அப்பா ஞாபகம் தான் வந்தது.  

ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் குறைந்தபாடில்லை.  ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் அனைவர் மீதும் வன்முறைக்குச் சமமாக பிரயோகித்திருந்தார். 

இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பார்களே அதே போலத்தான்.

அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார். 

எங்களை மட்டுமல்ல.அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தி தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சு கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தோம். அவரின் எந்த கட்டளைகளையும் மீறாமல் தான் வாழ்ந்தோம். வளர்ந்தோம். படித்தோம்.  

நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன்.

நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்த பஞ்சமில்லை.

அப்பா எப்போதும்   கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்.  

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார்.  பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார்.  கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார்.  ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார்.  எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய் தெரிந்தார். 

அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள்.  அளவாகத்தான் பேசுவார்.  எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்.  ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போக காரணமாகவும்  இருந்தது.

கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் சித்தப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார்.  கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.  அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது.  

படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை.  என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளை தாழ்போட்டு திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு விழித்துக் கொண்டு காத்திருப்பார்.  இவர் சங்கதி தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் இருந்த அந்த முள்காட்டுக்குள் கவனமாக கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாக சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாக காத்திருந்து கச்சேரியுடன் இடி மின்னல் வெடிக்கும்.  சாப்பாடு இல்லாமல் கண்ணீர் மழையுடன் தான் பல நாள் கழிந்துள்ளது.

ஆகஸ்ட் 25 அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் அந்த தகவல் எனக்கு திருப்பூருக்கு வந்து சேர்ந்தது.  சென்னையில் இருந்து பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது திருச்சி பேரூந்து நிலையத்திற்கருகே நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்துப் போனார். 

நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்த சலனமும் மனதில் உருவாகவில்லை.  இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ என்று கூட தோன்றியது. அவர் எதிர்பார்த்து காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் ரொம்பவே வெறுத்துப் போயிருந்தார். 

காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் உற்பத்தியின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார். 

நான் கடந்து வந்திருந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் ஒரு உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் நாம் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன்.

அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும்.  அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்கு கிடைக்கவிருந்த அரசு வேலையில் சேர்த்திருக்க முடியும். 

எனக்கு மட்டுமல்ல.  அவர் ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார்.   வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் என்பதே இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு தம்பிகளை அனுப்பி விடுவார்.

எவரையும் நம்ப மாட்டார்.  எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார்.  தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றி கவலைப்படவும் மாட்டார். 

தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை.  

தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  

எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது.  தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார். நான் ஊரில் பார்த்த முக்கால்வாசிப்பேர்கள் மூன்று தலைமுறைகளாக காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்த சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது.  அவர் தம்பிகளுக்கு பிரித்தது போக இன்றும் அப்படியே இருக்கின்றது.

அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை.  ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது.  

குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது.  

குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவீலியாக இருந்துள்ளோம் என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது.

இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்கு சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது.

குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.  ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது.  அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.  குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.  என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார்.  ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன்.

ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை.  ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை. ஒன்றுக்கு மூன்றாக பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களை கொண்டாடுகின்றார்கள்.

இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள். 

காரணம் இவனை திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் இன்று என்னை பேதியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள்.  உங்க காலம் வேறு. எங்க காலம் வேறு என்று மல்லுக்குச் சரிசமமாக இருக்கின்றார்கள்.

அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் உண்மையான அக்கறையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது.  ஏன் எதற்கு எப்படி என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர தாக்கிக் கொண்டேயிருக்கிறது.  வீட்டில் என்னால் சமாளிக்க முடியல என்று சொல்லும் அளவுக்கு தினந்தோறும் வாழ்க்கை அதகளமாக போய்க் கொண்டேயிருக்கிறது.

அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. 

வலைதளம் அறிமுகமாகி, எழுதத் தொடங்கிய பிறகு என்னைப் பற்றி எழுதிப் பார்த்த போது குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்கள் கடந்து வந்த காலடித் தடத்தினை எழுதிக் கொண்டே வந்தேன்.  

பலருக்கும் இந்த அனுபவங்கள் பிடித்தது என்பதை விட இது போலவே நாங்களும் வளர்க்க ஆசைப்படுகின்றோம். உங்கள் எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொள்ள முடிகின்றது என்றார்கள். மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளாமல் உங்கள் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த விசயங்களை எழுதுவது எங்களுக்கு பிடிக்கின்றது என்றார்கள்.

விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு புரிந்துணர்வு இந்த வலையுலகில் எனக்கு கிடைத்தது. காரணம் அது என் அப்பா எனக்குள் உருவாக்கிய தாக்கமது.

வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனமாகத்தான் இருப்பான்.

அன்பென்பது பகிரப்படும் போது தான் அதற்கு உயிர்ப்பு வருகின்றது. உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்த பலனும் இல்லை. அந்த அன்பு சிலருக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடும்.  எல்லா சமயத்திலும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதும் இல்லை. அது பரஸ்பரம் சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் போது இயல்பாக இருக்கும்.  

ஒரு பக்கம் கூடி மறுபக்கம் குறைந்தால் அதிலும் பிரச்சனை உருவாகி அது விஸ்வரூபம் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளதால் ஏறக்குறைய குடும்ப வாழ்க்கையென்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். கால மாறுதல்கள் தினந்தோறும் வரவேற்பரையில் கொண்டு வந்து கணக்கற்ற விஷங்களையும் விதைத்துக் கொண்டேயிருப்பதால் கண்கொத்தி பாம்பாகத்தான் இந்த வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது.

பேசும் பேச்சு முதல் நம்முடைய அன்றாட நடவடிக்கை வரையிலும் கவனத்தோடு வாழ் வேண்டியுள்ளது. 

ஆனால் நம் சமூகத்தில் குழந்தைகள் தான் கணவன் மனைவியை சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கி வைக்கின்றது. நான் இங்கே பார்த்த வரையிலும் அவரவர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது தான் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உண்மையான அக்கறை உருவாகின்றது.

காரணம் நான் நீ என்ற ஈகோ குழந்தைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக  அழிக்கப்படுகின்றது   நம்மால் குழந்தைகள் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால் அமைதி உருவாக அதுவே உறவுச் சங்கிலியின் தன்மை கெட்டுப் போகாதவாறு இருந்து விடுகின்றது.

குழந்தைகளின் வளர்ச்சியின் மூலம் இங்கே பல கணவன் மனைவியின் உண்மையான காதல் அனுபவமும் மீண்டும் துளிர்விடத் தொடங்குகின்றது.

குடிகார கணவன் குழந்தையின் மேல் உள்ள பாசத்தினால் தன் இயல்புகளை மாற்றிக் கொண்ட பலரையும் பார்த்துள்ளேன்.  மகள் வளர்ந்துவிட்டாள் என்ற பயத்தில் ஊர் மேய்ந்த மனைவி மாறிய தன்மையும் பல பாடங்களைத் தந்துள்ளது.   இங்கே குடும்ப பாசம் என்ற ஒரு வார்த்தை தான் மேலானதாக இருக்கிறது. இதுவே தான் நம் இந்திய நாட்டை ஒரு சங்கிலி போல இன்னமும் இணைத்து வைத்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.  

வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கியது முதல் இன்னமும் என் எழுத்துக்களை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் வரையும் அத்தனை பேர்களும் இது போன்று நாங்களும் குழந்தைகளின் அனுபவங்களை எழுத வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என்று சொல்லி இருக்கின்றனர்.

ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் விருப்பங்களை, பாராட்டுக்களை, ஆச்சரியங்களை  விமர்சனத்தின் வாயிலாக தெரிவித்தும் உள்ளார்கள்.

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இங்கே மூவரும் கல்லூரிப் பக்கம் சென்று விடுவார்கள்.  அப்போது அவர்களின் உலகம் வேறுவிதமாக இருக்கக்கூடும்.  எண்ணங்கள் முழுமையாக மாறியிருக்கும்.

இன்று காட்டும் அன்பு கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். 

அந்த உலகத்தில் நான் (நாங்கள்) இருப்பேனா என்று தெரியாது. என்னளவில் என் அப்பாவைப் போல சரியானதை மட்டும் இவர்களுக்கு செய்து கொண்டிருக்கும் விசயங்கள் அவர்கள் மனதில் தப்பு அல்லது வன்முறை போல தோன்றியிருக்கக்கூடும்.

இப்போது வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையில் கூட உள்ளே வைத்திருக்கக்கூடும்.

காரணம் நானும் அப்படித்தானே யோசித்துருந்தேன்..

அப்போது நான் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட என் குழந்தைகள்  இந்த எழுத்துக்களை படிக்கக்கூடும். 

நான் என் அப்பா மேல் வைத்திருந்த வெறித்தனமான கோபத்தைப் போல ஒருவேளை எங்கள் குழந்தைகள் என் மேல் வைத்திருந்தால் அப்போது அவர்கள் மனதில் தோன்றக்கூடிய கேள்விகளுக்கு சில பதில்கள் இந்த எழுத்துக்கள்  மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்?.

இன்னமும் நிறைய எழுதி வைப்பேன்.


ஆட்டம் காணும் அஸ்திவாரம்


வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்


மிதி வண்டி - வீரமும் சோகமும்


சொம்பு இல்லாத நாட்டாமை



தினந்தோறும் மலரும் பூக்கள் 2011


சாமி கண்ணை குத்திடும்


ஊரை திருத்தப் போறீங்களா?



நான் திருந்தப் போவதில்லை.


எந்திரன் உருவாக்கும் கல்வி

Wednesday, May 29, 2013

மசாலா தூவினால் தான் மரியாதையா?

அப்பா எப்போதும் தினமணி மட்டும் தான் வாங்குவார்.  

தொடக்கத்தில் எரிச்சலாக இருந்தாலும் மேல்நிலைப்பள்ளி வந்த சமயத்தில் அதில் தொடர்ச்சியாக வரும் சிறப்புக்கட்டுரைகளை கடையில் இருக்கும் அந்த மதிய நேரத்தில் வாசித்துக் கொண்டு இருப்பதுண்டு.

புரிந்ததோ இல்லையோ வாசிப்பு என்பதனை ஒரு கடமையாக வைத்திருந்த காலமது.

நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வாசித்துள்ளேன். 

இன்று கட்டுரைகள் சார்ந்த வாசிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன். ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட விசயத்தை வாசித்து முடிக்கும் போது "அட நமக்கு இத்தனை நாளும் இது குறித்து தெரியலையே" என்ற அங்கலாய்ப்பும் வந்து விட அடுத்த தேடல் தொடங்க காரணமாக அமைந்து விடுகின்றது.

எழுதி அனுபவமில்லாதவர்கள் எது குறித்து வேண்டுமானாலும் எழுதலாம்.  எதைப் பற்றி எழுத வருகின்றதோ அதிலிருந்தே எழுதத் தொடங்கலாம். ஆனால் படிப்படியான மாறுதல் தேவைப்படும் களத்தில் இந்த எழுத்துக்களம் முக்கியமானது. 

நாம் எப்படி ஒன்றைப் பார்க்கின்றோம். அதுவும் மற்றவர்களிடமிருந்து எப்படி அதனை வேறுபடுத்தி எழுத்தில் காட்ட முயற்சிக்கின்றோம் என்பதில் தான் முக்கியத்துவம் உள்ளது.

அந்த முக்கியத்துவம் தேவையில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. எழுதும் சுகம் என்பதும் அது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்பதும் எவராலும் அனுமானிக்க முடியாத ஒன்று.

நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம். ஆனால் அது சீந்துவாரற்று கிடக்கும்.  சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்து பேசப்பட்டு இருக்கும்.  காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று.  எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும். பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும்.  கவலைப்படத் தேவையில்லை.

எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்த சூட்சமத்தை உணர முடிகின்றது. 

வலைதளத்தில் எழுதுபவர்கள் தொடக்கத்தில் தங்களது அனுபவங்களை எழுதினால் போதும் என்று தான் நான் சந்தித்த நபர்களிடம் சொல்லியுள்ளேன்.  காரணம் அது தான் எளிதானது. படிப்படியாக வளர்த்துக் கொண்டு மற்ற விசயங்களைப் பற்றி எழுதலாம்.

நம்முடைய அனுபவங்கள் குறித்து எழுதும் போது நம்முடைய எழுத்து பலம் தெரிய வரும்.  கோர்வையாய் கோலம் போடும் தன்மை புரியும். வாசித்துக் கொண்டிருப்பவனை நகர விடாது இழுத்துச் செல்ல வேண்டிய சூட்சமத்தை உணர வைப்பதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியும். வாசிப்பவனை நம் எழுத்திலிருந்து நகர விடாது "நான் உங்க கட்டுரையை ஓரே மூச்சில் படித்து முடித்தேன்" என்று சொல்ல வைக்க வேண்டிய  அவசியம் புரியத் தொடங்கும்.

ஆனால் சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதத் தொடங்கும் போது தான் நம்முடைய எழுத்துத் தகுதிகள் குறித்து நமக்கே புரிய வரும். நாம் எழுத்துக் கலையில் வளர்ந்துள்ளோமா? என்பதன் சவால் இங்கிருந்து தான் தொடங்குகின்றது.

நான் சமீபத்தில் வாசித்த தொடர் போன்ற  ஊரான் கட்டுரை இதற்கு நல்ல உதாரணம். மிக தெளிவாக கையாண்டு இருந்தார்.

"கரணம் தப்பினால் மரணம்"என்கிற நிலையே இங்கே தான் தொடங்குகின்றது.  அதுவும் களத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்ற விசயம் என்றால் சொல்லவே தேவையில்லை.  

உளறி வைக்க முடியாது. 

உண்டு இல்லையென்று படுத்தி எடுத்து விடுவார்கள். ஒரு வேளை நாம் தவறு செய்திருந்தாலும் அடுத்த முறை திருத்திக் கொள்ள வாய்ப்பாகவும் அமைந்து விடும்.  அதுவே நம்மை வளர்க்க ஒரு காரணியாகவும் அமைந்து விடுகின்றது. இப்படித்தான் நானும் வளர்ந்துள்ளேன்.  இன்று பத்திரிக்கையின் படிக்கும் ஒரு சிறிய துணுக்குச் செய்திகளை வைத்துக் கொண்டு தினசரி வாழ்க்கையில் பார்த்த மற்றொரு நிகழ்வோடு கோர்த்துச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

அப்பா வாங்கிய தினமணி கொடுத்த தாக்கம் எனக்கு அரிச்சுவடியாக இருந்துருக்குமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். அதன் நீட்சியே நான் இந்த தளத்தில் எழுதும் சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கிய காரணமாகக்கூட இருக்கக்கூடும். 

ஆனால் இன்று குறிப்பிட்ட தனி இதழ்களைத் தவிர்த்து ஆழமான கட்டுரைகள் எந்த வெகுஜன பத்திரிக்கைகளிலும் வருவதில்லை.  ஒரு திரைப்படம் வந்தவுடன் மாங்கு மாங்கென்று அதற்கு விமர்சனம் எழுதும் நம் வலையுலக மக்கள் ஒரு அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் பற்றி கண்டு கொள்வதில்லை. காரணம் கேட்டால் அது போன்று எழுதினால் எவரும் வந்து படிக்க மாட்டார்கள் என்ற மாயப் போதையில் தான் பலரும் இருக்கின்றார்கள். நிச்சயம் அப்படி வலையுலகம் இல்லை என்பது நான் கண்ட உண்மை. அற்புதமான வரவேற்பு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அப்படி வலையில் வந்தாலும் மசாலாக்கள் தூவப்பட்டு அல்லது கட் அண்ட் பேஸ்ட் என்கிற ரீதியில் தான் உள்ளது. 

அது படித்தவுடன் மறந்து போகும் அளவிற்குத்தான் உள்ளது. படிப்பவனுக்கு ஒரு சுகம் தேவை என்பதற்காக வெறுமனே மசாலா வாடையை வைத்து ஒப்பேற்றி விடவும் முடியாது.  அடுத்தமுறை பெயரை பார்க்கும் போது மனதிற்குள் புன்னகைத்து விடுவார்கள்.  

பல எழுத்தாளர்கள் முதல் வலையுலக மக்கள் வரைக்கும் காலப் போக்கில் காணாமல் போனது இந்த வகையில் தான். நம்முடைய கவனம் கருத்தில் இருப்பதைப் போல அதை படிப்பவனுக்கு கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வைத்திருக்க வேண்டும். என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள்.  

இது போன்ற நூற்றுக்கணக்கான பேர்களை ஒவ்வொரு சமயத்திலும் நான்  சந்தித்துள்ளேன். ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

ஈழம் தொடர்பாக திருமாவேலன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் முத்தானவை.  எவரையும் படிக்க வைக்கும் நடை அதே சமயத்தில் உண்மைகளை முடிந்தவரைக்கும் அருகே சென்றும் பார்க்கும் துணிச்சலும் உள்ளவர். என் எழுத்துப் பாதையில் இவரின் தாக்கமும் உண்டு. 

நானும் இந்த தளத்தில் முடிந்தவரைக்கும் பல சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி உள்ளேன்.  இது என் எழுத்துலக வளர்ச்சி என்பதாக எடுத்துக் கொள்வதுண்டு. மற்றவர்களின் பாராட்டுக்களை விட எழுத்துலகில் நமக்கே நம் எழுத்தின் மீது ஒரு மரியாதை வர வேண்டும். இன்று வரையிலும் என் பழைய பல கட்டுரைகளை படித்து விட்டு மின் அஞ்சல் வாயிலாக பாராட்டுச் சொல்பவர்கள் அநேகம் பேர்கள் உள்ளனர்.

தேவியர் இல்லத்திற்கு எப்போதும் போல வந்தவர்களுக்கு,அவ்வப்போது  வந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த இணைப்பு உதவக்கூடும் என்பதற்காக இந்த பதிவு. ஏதோவொரு வகையில் இந்த ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிறப்பான அங்கீகாரத்தை தந்துள்ளது.  

இந்த பதிவுகளுக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்தது. விமர்சனப் பார்வையின் மூலம் நான் சென்று கொண்டிருக்கும் பாதை புரிபடத் தொடங்கியது. 

என் எழுத்துப் பயணத்தில் நான்காம் ஆண்டில் முடிவில் நிற்கும் நான் என்னுடைய எழுத்தின் வளர்ச்சியை அங்கீகரித்தவர்களுக்கு நன்றியை இங்கே எழுதி வைப்பது என் கடமையும் கூட.

மாற்றத்திற்கு ஆசைப்படு.....................

(இதில் உள்ள படங்கள் தினந்தோறும் நான் கூகுள் ப்ளஸ் ல் போடும் படங்களில் சில. நான் ரசித்த சிலவற்றை உங்கள் ரசனைக்காக)


















Sunday, May 26, 2013

மரணம் - உத்தரவின்றி தான் உள்ளே வரும்


ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் காதலிக்கப்பட்டவர்களாக, காதலை புறக்கணித்தவர்களாகவோ இருக்கக்கூடும். 

பதின்ம வயது முதல் பல்லு போன காலம் வரைக்கும் மறக்க மறைக்க முடியாத நிகழ்வாக இந்த காதல் இன்றும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த காதல் என்ற உணர்வை கடந்து வராதவர்கள் மிக மிக குறைவாகத்தானே இருக்க முடியும்? 

அது ஒரு பக்க காதல், இருபக்க காதல், இழந்த காதல், தோற்ற காதல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். 

மொத்தத்தில் குறிப்பாக அவரவர் தங்கள் முதல் காதல் அனுபவத்தினை மறப்பதில்லை.  இறந்து போகும் வரைக்கும் மனதின் உள்ளே ஏதோவொரு மூலையில் அந்த நினைவு வெறும் ஏக்கமாகத்தான் இருக்கத் தான் செய்கின்றது. 

ஆனால் காதலைப் போல எவரேனும் மரணத்தினை கொண்டாடுபவர்கள் உண்டா? 

தாங்கள் முதன் முதலாக பார்த்த மரணத்தினை எவரும் மனதில் வைத்திருப்பாரா?  நான் மரணத்திற்காக காத்திருக்கின்றேன் என்று வாய்விட்டு சொல்பவர்கள் உண்டா?

நமக்கு இந்த மரணம் வராது என்பது போல வாழ்பவர்கள் இங்கே அநேகம்பேர்கள். அது உறுதியானது என்று தெரிந்து போதிலும் நம்மில் பலரும் மறந்து போக நினைக்கும் விசயமாகத்தான் வைத்துள்ளோம். 

இறந்து போனவர்களைப் பார்த்து அழும் எவரும் நாமும் ஒரு நாள் இதே போல மரணித்து விடுவோம் என்று கவலைப்படுவதில்லை.  இது போன்ற  பல வினோதங்களை சுமந்து தான் இந்த வாழ்க்கையை அணைவரும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நான் பார்த்த மரண நிகழ்வுகள் பலவற்றையும் இன்னமும் ஒவ்வொரு சமயத்திலும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள் இருப்பதில்லை.  

இரண்டே காரணம் தான். 

ஒன்று உடல் நிலை மோசமாகி விட்டது அல்லது விபத்து.  

ஆனால் இதைத்தான் "அவருக்கு விதி முடிந்து விட்டது.போய்ச் சேர்ந்துட்டாரு" என்று எளிதாக பேசி முடித்து அடுத்த பேச்சுக்கு நாம் எளிதாக நகர்ந்து போய்விடுகின்றோம்.

இன்றும் என் நினைவில் உள்ளது. 

நான் பார்த்த அந்த முதல் மரணம் ஒரு மதிய வேளையில் நிகழ்ந்தது.  

ஆனால் அது மரணம் என்பது எனக்குத் தெரியாது.

அது என் தங்கையின் மரணம்.  

நாலைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் இருந்த தங்கையை அம்மா ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய வேளையில் மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு சென்ற போது நானும் அடம்பிடித்து அம்மாவின் பின்னால் போய்க் கொண்டிருந்தேன். சுட்டெறிக்கும் வெயிலின் தாக்கத்திற்காக தோளின் மேல் சாய்வாக வைத்து ஒரு காசித்துண்டை வைத்து போர்த்திருந்தார்.  

அம்மாவின் தோளில் சாய்ந்திருந்த தங்கையின் முகம் மட்டும் பின்னால் வந்து கொண்டிருந்த எனக்குத் தெரிந்தது. தங்கையின் கண்கள் பின்னால் வந்து கொண்டிருந்த எனக்கு நன்றாகவே தெரிந்தது.  சட்டை போடாமல், காலால் தெருப்புழுதியை சரட்டிக் கொண்டே தங்கையின் முகத்தை பார்த்த போது என்னைப் பார்த்து சிரித்த தங்கையின் கண்கள் திடீரென்று மாறியது. 

அந்த நொடிப் பொழுது இன்றும் என் நினைவில் உள்ளது.  

அம்மா அருகே இருந்த மருத்துவமனையை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.  தங்கையிடம் பழிப்பு காட்டிக் கொண்டே நகர்ந்து கொண்டேயிருந்த போது தான் அவளின் முகம் மாறுவதைக் கண்டேன்.  கண்கள் மேலும் கீழும் வேகமாக நகர்ந்தது. சற்று நேரத்தில் தலை அம்மாவின் மேல் சாய்ந்தது.  

பத்து வயதில் அந்த வித்யாசங்களை உணரத்தெரியாமல் அம்மாவுடன் நானும் மருத்துவமனையில் சென்ற போது அம்மா தங்கையை அங்கேயிருந்த நீண்ட மேஜையில் படுக்க வைத்த போது தான் அம்மாவுக்கு அந்த வித்யாசம் புரிந்தது.  பதறிக்கொண்டே மருத்துவரை அழைத்த போது குழந்தை இறந்து விட்டதம்மா என்ற வார்த்தையை கேட்ட அம்மா ஓ...வென்று அழுத அழுகையைப் பார்த்த எனக்கு அந்த வித்யாசமான சூழ்நிலையின் தாக்கத்தை உணரத் தெரியவில்லை. 

வீட்டுக்கு வந்து அப்பாவுக்கு தகவல் சொல்லி அவரும் வந்த சேர்ந்த போது "ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய முடியும்" என்று சொல்லிவிட்டு இயல்பான வேலையில் அவர் நகர்ந்த போதிலும் அடுத்த நாள் கூடிய கூட்டமும், வீட்டிற்கு வந்தவர்கள் அழுத அழுகையும் எனக்கு வியப்பாகவே இருந்தது.  தொட்டிலில் தங்கையை படுக்க வைத்து வேங்காவயல் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஊரில் இரண்டு பேருக்கு சண்டை வந்தால் உடனே "நீயெல்லாம் வேங்காவயலுக்கு செல்ற நேரம் வந்துடுச்சுடா........"  என்பார்கள்.  

காரணம் "சீக்கிரம் சாகப்போறே" என்று அர்த்தம்.  

ஊரில் உள்ள முக்கிய வீதிகளைத் தாண்டி கடைத் தெருவின் உள்ளே நுழைந்து, முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீதிகளைத் தாண்டிச் சென்றால் வேங்காவயல் என்ற அந்த சிறிய கிராமம் வரும்.  நான் ஊரில் இருந்த போது  அந்த பகுதியில் அதிகபட்சம் 50 குடும்பங்கள் அந்த பகுதியில் வாழ்ந்திருக்ககூடும். 

ஒரு குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் சுடுகாடாக மாற்றப்பட்டு இருந்தது.  என் தாத்தா காலத்தில் இருந்தே இந்துக்களை புதைக்கும் இடம் தான் 

இந்த வேங்காவயல் கிராமத்தில்தான் புதைத்து, எறித்துக் கொண்டிருந்தார்கள்.  கிறிஸ்துவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் இருந்தார்கள்.  முஸ்லீம்களுக்கென்று தனியாக ஒரு இடம் இருந்தது.

முதன் முதலாக தங்கையின் சடலத்தை சுமந்த தொட்டிலோடு நானும் சுடுகாட்டுக்குச் சென்ற போது தான் அங்கு செய்யப்பட்ட சட்ங்கு சமாச்சரங்கள் தெரியவந்தது.  அதற்குப் பிறகு இன்று வரைக்கும் ஆயிரக்கணக்கான மரணங்களைப் பார்த்து விட்டேன்.  ஏராளமான ஆச்சரியங்களைத் தந்ததே தவிர எதுவும் பெரிய அளவில் அதிர்ச்சியை தந்ததே இல்லை. 

மரணம் பற்றி விபரங்கள் தெரியாத போது வியப்பாக இருந்தது.  முழுமையாக விபரங்கள் புரிந்த போது ஆச்சரியமாக இருக்கிறது.

                                                  +++++++++++++++++++++=

ஊரில் உள்ள நடுவீதியில் யெ.மு சந்து என்பது ரொம்பவே பிரபல்யம்.  

காரணம் யெமு செட்டியார் குடும்பம் என்பது அண்ணாமலை பல்கலைக் கழகம் செட்டியார் குடும்பத்தில் வந்த பங்காளி குடும்பமாக இருந்தது. 

இது தவிர அவர்களின் வீடென்பது ஏறக்குறைய இரண்டு ஏக்கரில் இருக்கும். 

வீட்டின் உள்ளே ஒரு பக்கம் நுழைந்து மற்றொரு பக்கம் வர வேண்டுமென்றால் சந்தின் கடைசி பகுதிக்குத் தான் நம்மை கொண்டு போய் விடும்.  

பர்மா தேக்கும், சிங்கப்பூர் காசும், உலகத்தில் உள்ள அத்தனை கலைநயமும் ஒவ்வொரு இடத்திலும் மிளிரும்.   

ஆனால் அத்தனை பெரிய வீட்டின் பின்புறம் ஆச்சி ஒருவர் தான் இருப்பார்.  மற்ற அத்தனை பேர்களும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்தனர். அந்த வீட்டுக்கருகே இருந்த சந்து தான் எங்களுக்கு பல வகையிலும் உதவிக் கொண்டிருந்தது. 

அகலமான சந்தாக இருப்பதால் அத்தனை விளையாட்டுக்கும் உகந்தாக இருந்தது.  

ஆனால் இதை விட அந்த ஆச்சி நாங்க விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.  திடீரென்று அழைத்து பல விதமான பழங்கள், பலகாரங்கள் கொடுத்து அசரடிப்பார்.  உட்கார்ந்த இடத்தை விட்டு அவரால் நகர முடியாது.  ஏறக்குறைய 120 கிலோ இருப்பார்.  ஏழெட்டு வேலையாட்கள் இவருக்கென்று இருந்தார்கள். அவர்களின் முக்கிய வேலையே இவரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த மற்றும் அவருக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்வதற்கென்றே இருந்தார்கள்.

பெரும்பாலான செட்டியார்களின் வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் தான் அங்குள்ள அத்தனை வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

எப்போதும் போல அன்று விளையாடச் சென்ற போது அந்த வீட்டின் பின்புறம் அதிக அளவு கூட்டம் இருந்தது.  காரணம் புரியாமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மலம் மூத்திரத்தோடு கலைந்த ஆடைகளோடு படுத்துக் கிடந்த ஆச்சியை அங்கிருந்தவர்கள் நகர்த்த முயற்சித்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.  

அவருக்கென்று குழந்தைகளும் இல்லை.  ஒருவரை தத்து எடுத்து வளர்த்து இருந்தனர். அவரும் வெளி நாட்டில் தான் இருந்தார்.  செட்டியாரும் வாழ்வின் முக்கால்வாசி நாட்கள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் தான் இருந்தார். 

அத்தனை பெரிய வீட்டில் இவர் மட்டும் தான் ரொம்ப காலம் தனியாகத்தான் இருந்தார்.  திரண்ட சொத்துக்கள், அழகான வீடு. ஆனால் எந்த அனுபவ சுகமும் அவருக்கு கிடைத்தது இல்லை.  

வீட்டின் பின்புறம் இருந்த காகிதப் பூ மரம் அருகே உள்ள திண்ணையில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார்.  அருகே ஏராளமான பழங்கள், பலகாரங்கள் என்று அணிவகுத்து தனித்தனியான சட்டியில் இருக்கும்.  சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு முதல் தலை முதல் கால் வரைக்கும் விதவிதமான நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.  

எங்களுக்கு எடுத்துக் கொடுக்கும் பலகாரத்தை அவருக்கு திரும்ப கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க ஆச்சி என்று சொன்னால் "எனக்கு ஒத்துக்காதுடா " என்பார்.  

அப்போது ஊரில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பிணம் தூக்கிச் செல்ல "சிவ சிவ சொர்க்கரதம்" என்ற பெயரில் ஒரு வண்டி உண்டு.  மற்ற அணைவருக்கும் பாடை வழியேத்தான் பிண ஊர்வலம் செல்லும். முன்பு தாரை தப்பட்டை என்று பிணத்திற்கு முன்னால் ஆட்டம் பாட்டம் என்று களை கட்டும். இன்று அதுவும் வழக்கொழிந்து விட்டது.

சிவ சிவ சொர்க்க ரதத்தை ஒருவர் இழுத்துக் கொண்டு சென்று விட முடியும்.  இறந்து போன ஆச்சியை முறைப்படி பாதுகாக்க இரண்டு நாட்கள் ரொம்பவே சிரமப்பட்டனர்.  

வந்த ஒவ்வொரு பெரிய மனிதர்களும் தூரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்க வேலையாட்கள் தான் கழுவி, குளிப்பாட்டி, புது சேலை அணிவித்தனர்.  அதுவும் உத்தேசமாகத் தான் சுற்ற முடிந்தது. 

காரணம் அந்த கனத்த உடம்பு பிணமாக மாறியதும் இன்னும் ஊதிப் பெருக்கத் தொடங்கியிருந்தது. 

பள்ளி விடுமுறை என்பதால் முழு நேரமும் அங்கே தான் இருந்தோம்.  பிணத்தை தூக்கும் போது அடுத்த பிரச்சனை உருவானது.  மூன்று பேர்கள் ஒன்றாக சேர்ந்து தூக்கிய போதும் ரொம்ப சிரமப்பட்டனர்.  ஏற்கனவே இருக்கும் அந்த வண்டியில் ஆச்சியின் அந்த கனத்த உருவத்தை ஏற்ற முடியாத காரணத்தால் தனிப்பட்ட முறையில் பலகை ஒன்றை உடனடியாக செய்து வண்டியில் சிரமப்பட்டு ஏற்றி தள்ளமுடியாமல் தள்ளிக் கொண்டு சென்றனர்.  

பிண  ஊர்வலம் மறையும் வரைக்கும் நானும் என் நண்பர்களும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்றோம்.  அவர் காட்டிய அன்பும், கொடுத்த இனிப்பு வகைகளும் என் வாயில் உமிழ்நீராக இருந்தது. எங்களை அறியாமல் வழிந்த கண்ணீர் கூட காரணம் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

                                                                         ++++++++++++++++

நான் திருப்பூருக்குள் வந்த இரண்டாவது வருடத்தில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது உற்பத்தி துறையில் ஒரு பகுதிக்கு பொறுப்பாளராக எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது யூனிட் இன்சார்ஜ் என்ற பெயரில் தினந்தோறும் 18 மணி நேரம் உறங்குவதற்கு நேரமில்லாது வதக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  உள்ளே ஒரு ஒப்பந்தக்காரர் இருந்தார். 

அவர் தான் உள்ளே உள்ள உற்பத்தி சார்ந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பொறுப்பாளராக இருந்தார். அவரை மீறி நாம் எதுவும் செய்து விட முடியாது.  செய்யவும் கூடாது.  முதலாளியின் சொந்தகாரர் என்ற நிலையில் இருந்த அவருக்கு நான் வெறுமனே "கணக்குபுள்ள".  

எழுத படிக்கத் தெரியாத அவரின் உயரம் ஏறக்குறைய ஆறரை அடி உயரத்துக்கு மேலிருக்கும்.  அப்போது நான் அவரை அண்ணாந்து தான் பார்த்து பேசுவேன்.  கொடூரமான புத்தியோடு கோணல்புத்திகாரனாகவும் இருந்த காரணத்தால் என்னை தினந்தோறும் விதவிதமான விதங்களில் சித்ரவதை செய்வது அவரது அன்றாட பொழுது போக்குகளில் ஒன்று.  

என்னை மட்டுமல்ல.  உள்ளே பணிபுரியும் எவரையும் நிம்மதியாக பணியாற்ற விடாமல் வார்த்தைகளால் வதைப்பதென்பது அவருக்கு கைவந்த கலை.  சிவத்த தோலுடன் இருக்கும் அவருக்கு உள்ளே பணிபுரியும் அத்தனை பெண்களும் ஏதோவொரு வகையில் "கடன்" பட்டவர்களாகவே இருந்தனர்.  

எவரும் கேள்வி எதுவும் கேட்ட முடியாது.  மடியாதவர்கள் அடுத்த நாள் உள்ளே வரவும் முடியாது. 

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐந்து மணிக்கு மேல் எவருக்கும் வேலை மேல் நினைப்பு இருக்காது.  கை கால் உதறத் தொடங்கும். சாராயக்கடையில் போய் நின்றால் தான் அவர்களின் உதறல் நிற்கும். 

இவரும் அப்படித்தான்.  

இடையிடையே அவரின் மனைவியும் உள்ளே வந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்.  மனைவி உள்ளே வந்ததும் மட்டையாக மடங்கி விடுவார்.  ஒவ்வொரு பெண்களையும் வசைபாடத் தொடங்கி விடுவார். அந்த வார மொத்த சம்பளத் தொகையை மனைவி தான் வாங்குவார். நிர்வாகத்திடம் இருந்து பெற்ற தொகையை கொடுக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு கொடுத்து விட்டு, முடிந்தவரை அமுக்க வேண்டியதை அமுக்கிவிட்டு மீதியை அவர் மனைவி பத்திரப்படுத்துவார்.  

அந்த கணக்கு வழக்கெல்லாம் நாம் தான் போட்டு காட்ட வேண்டும்.  படிக்க வாசிக்கத் தெரியாதவனிடம் பட்ட பாடுகள் என்பது எழுத்தில் வடிக்க முடியாது.  

பையில் நிறையும் பணத்தை மனைவி எடுத்துக் கொண்டு கிளம்பி விட தனியாக எடுத்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அய்யா தனியாக சீட்டியடித்துக் கொண்டே கிளம்பி விடுவார்.  

இது வாரந்தோறும் நடப்பது என்றாலும் எனக்கு எப்படா அறைக்குச் செல்ல விடுவான் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வேலையையும் முடித்து விட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய சமாச்சாரங்களை கொடுத்து விட்டு எப்போதும் போல அறைக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த போது அறையில் அருகே படுத்திருந்தவன் வேகமாக என்னை எழுப்பினான்.  

அரைகுறை தூக்க கலக்கத்தோடு அவன் பேசியது பாதி தான் என் காதில் விழுந்தது.

"லோகு பஸ்ஸில் அடிப்பட்டு செத்து விட்டாராம்" என்றான். 

அவன் பேசியது காதில் விழுந்தாலும் மனம் உணர முடியாத நிலையில் அசதி அப்படியே மீண்டும் தூக்கத்திற்கு இழுத்துச் சென்றது.  மறுநாள் எழுந்த போது நிறுவனத்திற்குள் அங்கங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஒன்றும் தெரியாமல் மீண்டும் விசாரித்த போது தான் நேற்று நண்பன் பேசியது என் நினைவுக்கு வந்தது.

திருப்பூரில் தாராபுரம் சாலையின் கடைசிப் பகுதியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது.

எப்போதும் போல சனிக்கிழமையன்று முழுமையான மப்பில் ராயல் என்பீல்டு புல்லட்டில் வந்த லோகு எதிரே வந்த லாரியில் நேருக்கு நேர் மோத தூக்கி வீசப்பட்டு அந்த அரசு மருத்துவமனை அருகே அரைகுறை உயிரோடு கிடந்துள்ளார்.  

காவல் துறைக்கு பயந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  எந்த உதவியும் செய்யாத காரணத்தால் பத்து நிமிடத்திற்குள் லோகு பரலோகம் சென்று விட்டார்.

மறுநாள் நிறுவனத்தில் உள்ள மொத்த நபர்களும் ஒரு வேனில் மருத்துவமனைக்குச் சென்ற போது பிணவறையின் முன் பகுதியில் ஒரு நாற்காலியில் உடம்பை கிடத்தி போர்த்தியிருந்தார்கள். 

காவல் துறையின் அனுமதிக்காக மற்றும் செய்ய வேண்டிய கடமைகளுக்காக உள்ளே கொண்டு போகாமல் வெளியே வைத்திருந்தார்கள். சென்ற பாதிப் பேர்கள் பயந்து கொண்டு பின்வாங்க நான் ஆர்வமாய் முதலாளி பின்னால் சென்று அந்த ரத்தக்கறை படிந்த வெள்ளைத் துணியை நீக்கிய போது லோகுவின் முகத்தைப் பார்த்தேன்.  

முகத்திலிருந்து மார்பு வரை பிய்த்து எறியப்பட்டு சதைக்கோளம் போல உறுப்புகள் இடம் மாறி கோணல் கோலம் போடப்பட்டு இருந்தது. முதலாளியின் உறவினர் என்பதால் அவரின் மெல்லிய குரல் என் காதில் கேட்ட போதும் எவ்வித குற்றவுணர்ச்சியும் தோன்றாமல் அந்த சிதைந்த உருவத்தை பார்த்துக் கொண்டேயிருந்தேன். 

"பாவி குடிக்காதே குடிக்காதே என்று சொல்லியும் அல்ப ஆயுசில் போயிட்டானே" என்று மெல்லிய கேவலுடன் துண்டை வாயில் வைத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தார்.  

எனக்கு எந்தவித துக்கமோ, பரிதாப அழுகையோ வரவில்லை.  

அடுத்த நாள் எப்போதும் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. 

ஒரு வாரம் கழித்து அவர் மனைவி வந்தார்.  அந்த வாரம் சனிக்கிழமையன்று என்னிடம் மொத்த கணக்குகளை வாங்கிக் கொண்டு சென்றார்.  நிர்வாகம் கொடுக்க வேண்டிய மொத்த தொகையையும் கொடுத்து அனுப்பியது.

அடுத்த வாரம் என் அறையில் இருந்த நண்பன் சொன்னான்.

லோகுவின் மனைவி உன் யூனிட்ல் இருந்த அந்த சின்னவயசு சிங்கர் டைலரை கூட்டிக் கொண்டு சென்னை சென்று விட்டது என்றான்.   

மீதி அடுத்த பதிவில்....................

Friday, May 24, 2013

டாலர் நகரம் எனது பார்வையில்…….கவிப்ரியன் (2)


இழப்பதற்கு ஒன்றுமில்லை’யில் ஆறுமுகத்தின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். படிப்பறிவு இருப்பவனைவிட பட்டறிவுடன் உழைப்பும் அதிர்ஷடமும் இருந்தால் கோடீஸ்வரனாவது (திருப்பூரில்) சாத்தியமே என்ற செய்தி வியப்பைத்தான் ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்தக் காலத்தில் அரசியல்வாதியினால்தான் (அதிகாரத்திலிருக்கும்) கோடீஸ்வரனாவது சாத்தியம். 

மற்றவர்கள்…………….?பெண்களில் பலர் உழைக்கவே தயாராயில்லாமல், உல்லாச வாழ்க்கையை அனுபவிக்க உடலை மூலதனமாக்கிய வாழ்க்கைக்கு நகரத்தொடங்கியிருப்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. ‘பணத்துக்குப் பணம், சுகத்துக்கு சுகம்’ இந்த வார்த்தையை இத்தனை வருட ‘சென்னை’ வாழ்க்கையில் பலரிடம் கேட்டிருக்கிறேன். 

பணம் என்கிற பலவீனத்துக்கு இவர்கள் சகலத்தையும் இழக்கத்துணிகிறார்களா இல்லை ‘உடல்’ என்ற ஒன்றைக்காட்டி ஆண்களின் பலத்தை பலவீனமாக்குகிறார்களா என்று பட்டிமன்றம்தான் நடத்தவேண்டும்.

இப்படித்தான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறைஅட்டையைப் போல ஒட்டிக்கொண்டு சகலத்தையும் உறிஞ்சியபின் வேறொருவரைத் தேடிப்போகும் மனசாட்சியற்றவர்களை என்ன சொல்வது? 

இருதரப்பிலும் தவறு உண்டென்றாலும், இங்கே இது தொழில் தர்மமாக மாறிவிடுகிறது. காசு இருந்தபோது கம்பனி கொடுத்தேன். இப்போ இல்லியா ஆளைவிடு. நான் யார்கூட போனா உனக்கென்ன? இந்த உரையாடல் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

இவர்கள்தான் சாதனைப் பெண்மணிகளாய்………. ச்சே…

கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் படும் அல்லல்களையும், அவர்களின் இயந்திர வாழ்க்கையையும் படிக்க படிக்க வேதனைதான் மிஞ்சுகிறதுஒரு ஜான் வயிற்றுக்காக, மானத்தை மறைக்கும் ஆடைக்காக மனிதர்கள் படும் அவஸ்தைகள் மனசைப் பிசைகிறது.

யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக்கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்!... எதுகுறித்தும் அக்கறை இல்லை’. ஏனென்றால் அடுத்தவேளை உணவுக்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மற்ற எதுவுமே முக்கியமாகத் தெரியாத அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினால்தான் உண்டு கொழிக்கும் அதிகார வர்க்கத்தின் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை?!


மூணும் பொட்டப்புள்ளையா பெத்திருக்கே….’. இதில் மூணுக்கு பதிலாக  ரெண்டு இதே வார்த்தையைத்தான் நானும் இன்றுவரை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

இதே அனுபவங்களைத்தான் நானும் பெற்றிருக்கிறேன்

என்னோடு படித்தவர்கள் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத அளவில் பணக்காரர்களாய் மாறிவிட்டிருக்க, நான் மட்டும் ஏதோ ஒரு வேலையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டிருக்க முடியாமல் அல்லது உழைப்புக்கு மரியாதை இல்லாத இடத்தில் தொடர்ந்து வேலை பார்க்கமுடியாமலோ வேலையை உதறிவிட்டு வீடு வரும் எண்ணத்தில் இருக்கும்போதெல்லாம் என் அம்மாவும் இப்படித்தான் கூறுவார்கள்

என் நிலைமையை எப்படி இவருக்கு புரியவைக்க முடியும்?

இந்த வயதிலும் சான்றிதழ்களை தூக்கிக்கொண்டு நிறுவனங்களின் படியேறிசொந்த ஊருக்குப் பக்கத்தில் வேலை கிடைத்து விடாதாஅல்லது சுயதொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியோடு இருக்கும் என்னை, அம்மாவின்வேலையை மட்டும் விட்டுடாதேடாஎன்ற வார்த்தைகள்தான் இந்த வேலையிலும் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் காலத்திற்கு தகுந்தமாதிரி வேறொரு வடிவம் எடுத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் அவதாரங்கள் இன்றைய சூழலில் திருப்பூரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற அவலத்தை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இயற்கை விவசாயம், மரபணு விதைகள், விளம்பரயுகம், உள்ளூர் சந்தை, உலக சந்தை, அவைகளின் சட்டதிட்டங்கள், போட்டி போடும் சீனா, தரகர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சாயப்பட்டறைகள், அது உருவாக்கியிருக்கும் மாசு என எல்லாவற்றையும் அலசியிருக்கிறார்.

தண்ணீரில் விளையாடிய நாடுடா!’ என்ற தலைப்பில் தனியே பதிவுகூட எழுதியிருக்கும் இவர், தண்ணீரைப் பற்றி தாராளமாகவே விவரிக்கின்றார். எனக்கென்னவோ இதில் குழப்புகிறார் என்றுதான் தோன்றுகிறது

அதாவது சாயத்தொழில் நடக்கத் தண்ணீரை பயன்படுத்தியே தீரவேண்டும். இதனால் நிச்சயமாக நீர் மாசுபடும். சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதையும், அது எவ்வளவு விஷத்தன்மை உடையது எனபதையும், விவசாயமும் குடிநீரும் இதனால் எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும் இவரே விவரிக்கிறார். அதே சமயத்தில் ஸீரோ டிஸ்சார்ஜ் சாத்தியமில்லை என்கிறார்

வேறு என்னதான் வழி?

ஒன்று சாயப்பட்டறைகளை மூடி விளைநிலங்களையும், குடிநீரையும் இனியாவது பாதுகாக்கவேண்டும். அல்லது திருப்பூரை தொடர்ந்து டாலர் நகரமாக தக்கவைத்துக்கொள்ள குடிநீரையும், விளைநிலங்களையும் நிரந்தரமாக விஷத்தன்மையுள்ளதாக மாற்றி, தண்ணீருக்காக தனியாரிடம் தொடர்ந்து கையேந்த வேண்டும். மற்ற நாடுகளில் இதற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாம்

இவரே சொல்வது போலஅத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்’.

எங்கள் வேலூர் மாவட்டமும் இதே போன்ற பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை என இங்குள்ள தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி உவர்ப்பாகி உப்பாகி பல வருடங்களாகிறது

ஒரே ஆறுதல் பாலாறு. அங்கிருந்து பெறப்படும் நீரால்தான் மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் ஏதாவது பிரச்னை என்றால்…. தண்ணீர் தண்ணீர் படத்திலுள்ளது போலத்தான். ஆனால் பாலாறோ தண்ணீர் பார்த்து பல வருடம் ஆகிறது. நல்ல மழையும் இல்லை. ஆற்றிலே தண்ணீரும் இல்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில்….

பெண்களின் உழைப்புதான் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற ஆண்களைக் கொண்ட குடும்பங்களில் எல்லாப் பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. வீட்டிலும் உழைப்பு, வெளியிலும் உழைப்பு. முடியாமல் போகும் பட்சத்தில் வலை விரிக்கவோ அல்லது வலையில் விழவோ தயாராகிவிடுகிறார்கள்.

பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்கும் விடுதலை இவர்களை எல்லை தாண்ட வைக்கிறது. இது திருப்பூரில் மட்டுமல்ல 

எல்லா தொழில் நகரங்களிலும் வேரூன்றி பல வருடங்களாகிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி வளாக மண்டலத்தில் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். புதிய நட்பும், புதிய உறவுகளும் அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களாலும், வசதிவாய்ப்புகளாலும் மனம் சலனமடைந்து வீட்டுப்பிரச்னைகளிலிருந்து விடுபட தவறான கள்ள உறவுகளில் வீழ்ந்து சீரழிகிறார்கள்

இதை ஜோதிஜி நயமாக, ‘காமம் கடத்த ஆட்கள் தேவைஎன்ற தலைப்பில் அலசியிருக்கிறார். ‘இவ்வாறான மாற்றங்கள் எதிர்கால சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்என்ற இவரின் வரிகள் நூறு சதவிகிதம் உண்மையே!

இன்னும் மனதில் தோன்றுபவைகளையெல்லாம் எழுத விமர்சனம் என்ற இந்த எல்லை போதாது

தவிர ஜோதிஜியின் பதிவுகளைப் போல நீளமாகப் போகக்கூடிய(?) அபாயமும் உண்டு

மொத்தத்தில் திருப்பூரின் வரலாற்றைச் எதிர்காலத் தலைமுறைக்குச் சொல்லப்போகிற மிக முக்கியமான நூல் இந்த ‘டாலர் நகரம்’.

நட்புடன்,
கவிப்ரியன்.


Wednesday, May 22, 2013

டாலர் நகரம் எனது பார்வையில்…….கவிப்ரியன்


இது டாலர் நகரத்தைப் பற்றிய நூலா? ஜோதிஜி அவர்களின் வாழ்க்கை வரலாறா?....அல்லது இரண்டும் கலந்த கலவையா?

பிரித்தறிய முடியாத அளவிற்கு தன் வாழ்க்கை அனுபவங்களை திருப்பூர் நகர பின்னணியில், தனக்கே உரித்தான எழுத்து நடையில், அழகான பிண்னலாடையைப் போல பிண்ணியெடுத்திருக்கிறார் ஜோதிஜி!

பின்னலாடைக்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் போலவே ‘டாலர் நகரத்தின்’ உருவாக்கத்தில் உள்ள உழைப்பையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
புத்தகத்தைத் திறந்தவுடன் தொடக்கத்திலே உள்ள வரிகளைப்போலவே ‘நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை எனில் அதை நீங்களே எழுதத் தொடங்குங்கள்’ என்ற அழுத்தமான வரிகள்தான் வரவேற்கிறது. 

வாசிப்பு பழக்கம் உள்ள அனைவருக்கும் இயல்பாகவே ஒரு கனவு மனதிற்குள் குடி வந்துவிடும். நாமும் எழுத்தாளனாவது என்கிற கனவுதான் அது. எழுத எண்ணம் வரும்போதெல்லாம், ‘எழுதுவது எப்படி?’ என்ற எனது கேள்விக்கு ‘சுஜாதா’ அவர்கள் ‘சொந்தக் கதையை எழுதாதீர்கள்’ என்று சொன்னதுதான் ஞாபகத்திற்கு வரும்.

நமக்கு நேர்ந்தவைகளையும், நமது வாழ்க்கை அனுபவங்களையும் எழுதாமல் வேறு எதைத்தான் எழுதுவது? எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை ஜோதிஜியிடம் இருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும். சமூக பொறுப்புணர்வு என்பது அறவே இல்லாமற் போய்விட்ட இந்தக்காலத்தில், மிகப்பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு ஓய்வில்லாத உழைப்புக்கிடையிலும் வற்றாத ஆர்வம் காரணமாக சமூக அவலங்களை தணியாத தாகத்துடன் பதிவுலகில் மெகா பதிவுகளை எழுதிவரும் இவரை வியப்புடனே கவனித்து வருகிறேன். 

எப்படி முடிகிறது இவரால்?... என எனக்குள்ளே கேள்விகள் ஆயிரம்!

புத்தகத்தை வரவழைத்துவிட்டு நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டபடியால் உடனடியாக புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் புத்தகம் கைக்கு கிடைத்த பின்பும் என்னால் படிக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவசர கோலத்தில் படிக்கக்கூடாது. பொறுமையாக ரசித்துப் படிக்கவேண்டும். விமர்சனமும் எழுதி அனுப்பவேண்டும் என்ற ஆசையினால் ஆழ்ந்து படிக்க திட்டமிட்டேன். 

ஆனாலும் ஒரு இரயில் பயணம்தான் இதை முடிவுக்கு கொண்டு வந்தது.

எழுத்தாளர் ஆகவேண்டும், புத்தகம் போடவேண்டும் என்று  ஆசைப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கு வலைப்பதிவு உலகம்தான் வடிகாலாக அமைந்தது. என்னைப் போல பெயருக்கு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு அதை சரியாக பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். ஆனால் பதிவுலகில் அசைக்க முடியாத இடத்தையும், அருமையான நண்பர்களையும் பெற்று, டாலர் நகரத்தை நம் கைகளில் தவழ விட்ட ஜோதிஜிக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். இனி புத்தகத்திற்கு வருவோம்….

வாலிப வயதில் பிழைப்பிற்காக அல்லது வேலைக்காக ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் நகர வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளைஞனின் கதையாக டாலர் நகரம் தன் பயணத்தைத் துவங்குகிறது. சூது வாது நிறைந்த நகர வாழ்க்கையின் நீர்த்துப்போன குணாதிசியங்களையும், பல்வேறுபட்ட மனிதர்களையும் படம் பிடித்துக்காட்டும் இவர் இதற்குப் பின்னால் சொல்லும் ஒரே விஷயம் ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’.

எல்லா இளைஞர்களுமே கிராமத்து வாழ்க்கை அல்லது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேல்படிபிற்காகவோ அல்லது வேலை தேடியோ நகர்ப்புறம் நோக்கி நகர்வது வாடிக்கைதான் என்றாலும் இந்த இனுபவங்களை எழுத்தில் கொண்டுவருவது சற்று சிரம்மான காரியம்தான். 

ஆனந்த விகடனில் ராஜூமுருகன் எழுதுவதைப்போல இது ஒரு அலாதி அனுவம். நினைக்க நினைக்க, நம் நினைவுகள் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கி அதை மீட்டெடுத்து எழுத்தாக்குவது சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கிறது. நானும் கூட இப்படித்தான் நண்பனிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சென்னைக்கு முதன்முதலில் பயணமானேன்.

போட்டி, பொறாமை, அதனால் உருவாகும் எதிரிகள், பெண்கள் சகவாசம், தலைக்கனம், பணம் பணம் கொடுக்கும் தைரியம், திமிர், பணத்திற்காக எதையும் செய்யும் துணிச்சல் என மனித வாழ்வில் மனித உணர்வுகளே இல்லாமல் போகும் சூழ்நிலையில் உழைப்பு அதுவும் கடினமான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் (திருப்பூரில்) உயரலாம் என்ற இவரது ஒவ்வொரு அனுபவங்களை கோர்வையான சம்பவங்களில் நமக்குத் திரைப்படத்தைப் போல நமக்குக் காட்டுகிறார். 

நண்பர்களைக் குறிப்பிடுவதைப் போலவே எதிரிகளையும் குறிப்பிடுகிறார்.

உயைப்பற்றி உயர்வாய்ச் சொல்லி கூடவே அதிர்ஷடத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 

ஏனென்றால் நமது நாடு உழைப்புக்கு மரியாதை கொடுக்காத நாடாகி பல வருடங்கள் ஆகிறது. பணம், செல்வாக்கு, அதிகாரம் என இவையே எல்லா இடங்களிலும் கோலோச்சி உழைப்பை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. செல்வாக்கு உள்ளவனின் சின்னவீடு நினைத்தால் கூட உண்மையாய் இருப்பவனை, உழைப்பவனை எட்டி உதைத்து வெளியேற்ற முடியும் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

பின்னலாடைத் தொழில் பற்றிய எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறரார். 

ஆனால் என்னைப் போன்ற அந்த தொழில் பற்றி தெரியாத புதியவர்களுக்கு ஒரு முறை திருப்பூர் சென்று வந்தால்தான் அதன் முழு பரிமாணமும் விளங்கும் என நினைக்கிறேன். நிர்வாகத்திறன், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் தன்மை, புதியன கற்றுக்கொள்ளல், வாய்ப்புகளை பற்றிக்கொள்ளல், எதிரிகளை சமாளித்தல், தவறான பாதைக்குத் திரும்பாமை என இவரின் எல்லா அனுபவங்களும் வரும் தலைமுறைக்கு பாடமாக இருக்கவேண்டிய விஷயங்கள்.

வெற்றி பெறும்வரை உழைப்பே கதியென்று இருப்பவர்கள் வெற்றி பெற்று உச்சாணிக்குப் போனபின் பின்னால் உழைத்துக் கொண்டிருப்பவர்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. உதவுவதும் இல்லை.

 என் உழைப்பு, என் உழைப்பு என்கிற திமிர்த்தனமான கர்வமும், பணத்தின் மீதான அதீத வெறியும் அதிகமாகி கல்நெஞ்சக்காரர்களாய் மாறிப்போனவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம். 

இவர்களிடம் ஆலோசனைக்குப் போனால் வெற்று அறிவுறைகளும், சுய தம்பட்டமும்தான் பதிலாகக் கிடைக்கும்.

முதல் 5 அத்தியாயங்களில் திருப்பூரின் ஆரம்பகால அனுபவங்களையும், இவரின் படிப்படியான முன்னேற்றங்களையும் அசைபோட்ட இவர், அடுத்ததாக ‘ஆங்கிலப் பள்ளியும் அரைலூசுப் பெற்றொர்களும்’ என்ற ஆறாவது அத்தியாயத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டார். குறிப்பாய் இந்தப் பகுதியை என் மகள்கள் விரும்பிப் படித்தனர்.

உலகம் தெரியாத இளைஞனாய் இருக்கும்போது, இலட்சிய வேகங்கள் அதிகமிருக்கும். இப்படித்தான் தமிழ் மொழிப்பற்றினால் உள்ள வேகத்தால் எனது அண்ணியாரிடம் (அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதை கிண்டலடித்து) என் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன் என்று சபதம் எல்லாம் செய்தேன்.

இப்போது அந்த சம்பவத்தை அவர்கள் மறந்தே போயிருப்பார்கள். ஆனால் என் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தபோது நான் தடுமாறித்தான் போனேன்.

சமூக நிர்பந்த்தத்திற்கு நான் அடிபணிந்து போனேன். எனது சபதமெல்லாம் சரணாகதியாகி விட்டிருந்தது. நாளை என் பிள்ளைகள் வளர்ந்து ‘ஏனப்பா எங்களை அதுமாதிரி படிக்க வைக்கவில்லை’ என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என் லட்சியத்திற்கோ அல்லது என் இயலாமைக்கோ அவர்களை பலி கொடுப்பதா? 

இறுதியில் நானும் ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.

டாலர் நகரம் எனது பார்வையில்…………. தொடரும்…

நன்றி திரு. கவிப்ரியன்


தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க