Tuesday, May 07, 2013

12 பச்சைத்தீவு

மீண்டும் ஈழ வரலாற்றின் அடிப்படை விசயங்களை தொடர்வோம்.


நாம் இப்போது இந்தியாவுடன் சேர்த்து இலங்கையையும் ஆண்டு கொண்டுருக்கும் ஆங்கிலேயர்களைப் பற்றி சற்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.  

16 ஆம் நூற்றாண்டில் வணிகத்திற்காக இந்தியாவிற்குள் வந்தார்கள். வந்தவர்களுக்கு இந்தியா என்ற நாட்டின் சூழ்நிலை,தட்பவெப்ப நிலை பற்றி எதுவும் தெரியாது.  உள்ளே பேசிக்கொண்டுருந்த மொத்த மொழியைப் பற்றி கூட தெளிவாக அறிந்துருப்பார்களா என்பதும் சந்தேகமே. 

கிழக்கிந்திய கம்பெனியின் தைரியமே அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்துருக்க வேண்டும்.  

நேரிடையான கொள்முதல் என்பதோடு இந்தியாவைப் பற்றிய அப்போதைய பல புனைக்கதைகளும்,காய்த்து தொங்கிக் கொண்டுருக்கும் இரத்தினக் குவியல்களுமே அவர்களை கொண்டு வந்து சேர்க்க முக்கிய காரணமாக இருந்தது. 

அன்று நம்பிக்கையுடன் வந்தவர்களை அவர்கள் பார்க்காத இந்திய வெயில் தான் வரவேற்றது. அன்று வெயிலை வென்று நின்றவர்கள் மொத்த இந்தியாவையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து கணக்கில்லா செல்வங்களையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

அன்று வந்து இறங்கியவர்களின் எண்ணிக்கையும், அப்போது இந்தியாவின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கையையும் இன்று நாம் யோசித்துப் பார்த்தால் வியப்பும், விரக்தியுமே இயல்பாய் தோன்றும்.  

ஒரு வகையில் பார்த்தால் அடுத்தவரிடம் அடிபணியும் குணம் என்பது நமக்கு இயல்பானதாக இருந்துருக்குமோ என்று தோன்றுகிறது. 

நீ என்ன எதிர்பார்க்கிறாய்?  நானே அதற்கு முன் உன் முன்னால் மண்டியிட்டு நின்று விடுகின்றேன் என்பதாகத் தான் தொடக்ககால இந்திய இலங்கை சரித்திர பக்கங்கள் காட்டுகிறது.  

ஆங்கிலேயர்கள் இப்போது எப்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொதுவாக இருந்து கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி இருக்கிறார்களோ இதைப்போலவே தொடக்க தமிழ் மன்னர்களான கரிகால் பெருவளத்தான் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஒற்றுமையின்மையால் சரிந்த பாண்டிய சாம்ராஜ்யங்கள் வரைக்கும் இந்த இலங்கை என்பதும் பொதுவானதாகத் தான் இருந்தது.  

அன்றைய சூழ்நிலையில் சிங்களம் என்றொரு மொழியே இல்லை.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய இலங்கையென்பது தமிழர்களின் மற்றொரு பூமியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்று ஆண்ட மன்னர்கள் அத்தனை பேர்களும் தொலைநோக்குப் பார்வை என்பதை தொல்லை நோக்கமாக கருதியிருப்பார்கள் போலும். 

வாழ்ந்து விட்டுச் சென்ற மொத்த மன்னர்கள் காலத்தின் மிச்சத்தில் எச்சமாகக் கூட இறுதியில் எந்த தடயமும் நிலைபெறவில்லை.  

உள்ளே வந்த போர்த்துகீசியர்கள் தொடங்கி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கருப்பு ஜுலை கலவரத்தின் வரைக்கும் இருந்த மிச்சம் மீதி அத்தனையும் தமிழர்களின் ஆவணங்களையும் ஆதிக்க மனப்பான்மையில் தீயிட்டு மகிழ்ந்தார்கள். 

முதல் 13 நூற்றாண்டுகளில்  சேர்த்து வைத்த அத்தனை கலைப் பொக்கிஷங்களும அடுத்துது வந்த 8 நூற்றாண்டுகளுக்குள் சுவடுகள்  ஏதுமின்றி நீக்கப்பட்டு புதிய கட்டுக்கதைகள் மூலம் வரலாறு மாற்றப்பட்டது.

இலங்கையின் உள்ளே அப்போது இரண்டு இனக்குழுக்களாக இருந்தவர்கள் மொத்தமாக ஒற்றுமையின்றி வாழ்ந்ததும், வந்த அந்நியர்கள் தங்களை ஆட்டிப்படைகின்றார்கள் என்று தெரிந்த போதும் மீற முடியாமல் தவித்ததும், அந்நியர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்து அமளி துமுளியான போதும் கூட அக்கறையில்லாமல் வாழ்ந்தது என்பது ஒரு மகத்தான ஆச்சரியம்.  

போர்த்துகீசியர்கள் (கிபி 1505 முதல் 1658 வரை) முழுமையாக 150 ஆண்டுகள் இருந்து விட்டு, அவர்களைத் தொடர்ந்த வந்த டச்சு ஆதிக்கம் (கிபி 1658 முதல் 1796 வரை) என்று இருவரும் மூன்று நூற்றாண்டுகள் முழுமையாக உள்ளே இருந்தார்கள் என்றால் எந்த அளவிற்கு உள்ளே வாழ்ந்தவர்கள் வாழ்ந்து இருப்பார்கள்?  

16 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மேம்பட்ட கப்பல் வாணிபமும், கிரேக்க, ரோமபுரி வணிகத் தொடர்பும் சேர்ந்து அன்றைய அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்பட்டதாகத்தானே மாற்றியிருக்க வேண்டும். 

ஏன் மாறாமல், தங்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார்கள்? 

நவீன ஆயுதங்கள், அவர்கள் உருவாக்கிய அச்சங்கள் என்று ஆயிரம் காரணங்கள் அணிவகுத்து நம் முன்னால் நின்றாலும் ஏன் ஒன்று சேரவில்லை?  அன்று அவர்களை ஒன்றாக சேர விடாத காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் மொத்த வீழ்ச்சிக்கும் காரணம் அவர்களிடம் இல்லாத ஓற்றுமையின்மை தான் என்று சொல்லத் தோன்றுகிறது.  

மன்னர்களாக இருந்தவர்களும்,ஆளுமையின் மூலம் சகல சந்தோஷங்களையும் அனுபவித்துக் கொண்டுருந்தவர்களும் அன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு  அதுவொரு அதிகாரப் போட்டி.  

அவ்வளவு தான்.

தங்களின் இருப்பை நிலை நிறுத்துவது.  மற்றவர்களை முன்னேறி வர விடாமல் தடுப்பது. 

அதனால் தான் கூறு பிரித்துக் கொண்டு காட்டுக்கு அந்தப்பக்கம் நீ, இந்தப்பக்கம் நான் என்பதாக தங்கள் வாழ்க்கையையும் எண்ணங்களையும் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். 

கடல் பயணத்தின் மூலம் வந்தவர்களுக்கு இவர்கள் காட்சிப்பொருளாக மாறியதில் ஆச்சரியமில்லை.

இன்று வரையிலும் ஏன் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை.  

கல்வியறிவு, தங்கள் எண்ண உயர்வு என்பதெல்லாம் மீறி அவர்களின் ஒவ்வொரு பார்வையும் ஒரு கணக்குப் பார்வை தான்.  

அங்கு ஆள்பவர்களுக்கும், ஆள வர நினைப்பவர்களுக்கும் அந்த கணக்கு தெரியவில்லை என்றால் அதோகதி தான். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அடி எடுத்து வைக்கும் போதே இந்த எதிர்கால கணக்குகளை, வணிகம் சார்ந்த விசயங்களையும் மனதில் வைத்துக்கொண்டு தான் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை, ஆளுமை சட்ட திட்டங்களையும் உருவாக்கினார்கள்.  

இயற்கை வளம் இருக்கும் நாட்டில் பெரிதான கஷ்டம் இல்லை.  இல்லாத நாட்டில் எதிர்கால தங்களின் வளத்திற்கான அத்தனை முன்னேற்பாடுகளை தொடக்கம் முதலே செய்யத் தொடங்கினர்.  

ஆனால் இந்தியாவைப் போல இலங்கை சொஸ்தமான பூமியல்ல. 

வயலும் வயல் சார்ந்த இடமும், மலையும், முகடுகளும்,சுற்றிலும் சுகப்படுத்திக்கொண்டுருக்கும் கடலும், கடல் சார்ந்த விசயங்களும் தான் அங்கு இருந்தன.  

இதற்கு முன்னால் உள்ளே வந்தவர்கள் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு, மிரட்டிக்கொண்டு இருந்தவர்கள். 

அதற்கு மேல் அவர்கள் ஆசைப்பட்டார்களா இல்லை கர்த்தர் ஊழியத்தில் மட்டும் கவனமாக இருந்தார்களா என்பதை நாம் ஆராய வேண்டியதில்லை. 

ஆனால் இப்போது உள்ளே வந்துருப்பவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள்.  அவர்களின் திட்டம் என்பது முன்னால் வந்து இறங்கியவர்களைப் போல் மட்டமாகவா இருக்கும்? 

அன்றைய இலங்கையின் சூழ்நிலையில், மிஞ்சிப் போனால் ஒரு இளநீர் குடித்து விட்டு அப்படியே மொத்த இலங்கையையும் ஒரு சுற்று சுற்றி வரலாம்.  காற்று இதமாக இருக்கும்.  படித்த ஆங்கில கவிதைகளை முணுமுணுத்துக்கொணடு உற்சாகமாக நடை பயிலலாம். 

பசித்தால் ரெண்டு மீன்களை பிடித்து சுட்டு சாப்பிடலாம். மெனக்கெட்டு  இத்தனை தூரம் உள்ளே வந்தவர்கள் காற்று வாங்கவா வந்துருப்பார்கள்.?

அவர்கள் எழுத நினைத்த கவிதைகளின் விதைகள் இப்போது வெறும் பாறாங்கல்லாக, மலையாக, பயன்படுத்த முடியாத பூமியாக இருந்தது. 

அவர்களின் அன்றைய தீர்ககதரிசனப் பார்வை தான் பின்னாளில் இலங்கையை உலகில் தலைசிறந்த தேயிலை, காபிக்கொட்டை விளையும் பூமியாக மாறக் காரணமாக இருந்தது.

சங்க இலங்கியங்கள் சொல்லும் முத்துத் தீவு பின்னாளில் முழுமையாக பச்சைத் தீவாக மாறியது.  

அவர்களின் அன்றைய சிந்தனைகள் தான் மலையகத் தமிழர்கள் என்றொரு புது இனத்தை உருவாக்கியது.  

அவர்கள் தான் இந்தியாவில் இருந்து இலங்கையில் தேயிலை தோட்டத்தை உருவாக்குவதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.  

இலங்கை சரித்திரப் பக்கங்களில் காலப்போக்கில் புதைபொருளாய் மாறியவர்கள்.  

இந்தியாவில் இருந்து ஏன் சென்றார்கள்?

தொடக்க அத்தியாயங்கள்



1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நிறைய படிக்கிறீர்கள். நன்றி.