Wednesday, January 16, 2019

இவர் (தான்) மக்களின் கடவுள் 2



வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 

7. ”பாலைப்பற்றியோ விவசாயத்தைப்பற்றியோ அது வரைக்கும் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தனக்கு எது தெரியும் என்பதை விட எது தெரியாது என்று உணர்ந்தவர்களால் தான் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார் டாக்டர் வர்கீஸ் குரியன்! 

அமெரிக்காவில் தனக்கு அறிமுகமான நண்பர் ஹரிச்சந்திர யாதவை சில நாட்கள் ஆனந்த் வருமாறு கேட்டுக்கொண்டார். அவர் பால் விவசாயிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மூன்று நாட்களுக்கு மட்டும் விருந்தாளியாக வந்த அவர் அமுலில் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்று 35 ஆண்டுகள் அங்கு வேலை செய்தார்! இதுபோல் அமுலின் ஒவ்வொரு துறையிலும் மிகுந்த திறமைசாலிகளைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு தெளிவான முறையில் அவர்களை வழி நடத்தினார் டாக்டர் வர்கீஸ் குரியன். 

குஜராத்தி மொழி ஒருபோதும் அவருக்கு வசமாகவில்லை. ஹிந்தியுமே அரைகுறை தான்! ஆங்கிலத்தில் தான் அனைத்து கருத்து பரிமாற்றங்களுமே. ஆனால் மொழி அவருக்கு ஒருபோதும் ஒரு தடையாக இருக்கவேயில்லை! மிகவும் கவனிக்கப்பட்ட அமுலின் விளம்பரங்கள் படைப்பூக்கம் கொண்டவையும் காலத்திற் கேற்றவையுமாக அமைந்ததில் டாகடர் வர்கீஸ் குரியனுக்கு நேரடி பங்கிருந்தது. 

************ 

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ் கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும் அதன் வணிகச் சாம்ராஜ்ஜியத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன். அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிட்டெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணிநேரத்திற்குள்ளேயே கெட்டு போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக் கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம் டாக்டர் வர்கீஸ் குரியன் தான்! ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான். 

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல. ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம் தான் அமுல்! அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16200 கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்! ஆண்டில் 12000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும் பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலை சிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர் பானங்கள், ஆரோக்கியப் பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாயிகள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே. அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த ’செயல் பெருவெள்ளம்’ (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது. அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது! உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று! எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள். 

மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தவர் அவர்! 

•••••••••••••••• 

8. எதையும் அதிரடியாகப் பேசிவிடுவது குரியனின் பண்பு. கோடைக்காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் மாடுகள் இருமடங்கு பால் கறப்பதால் தான் அதன் காம்புகளை அடைக்கவியலாது எனவே நீங்கள் பாலை அதிகமாக வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் குரியன் முறையிட, மழைக்காலத்தில் மக்கள் இருமடங்கு பால் அருந்துவதில்லை என்பதால் வாங்கமுடியாது என்று அதிகாரிகள் எகிர, இதை எதிர்பார்த்துத் தயாராகச்சென்ற குரியன் ‘ஆனால் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதிசெய்யும் பால்பவுடரை நீங்கள் குறைக்கலாமே?’ என்று கேட்டு ‘நீங்கள் நம் நாட்டுக்கு வேலைசெய்கிறீர்களா நியூஸிலாந்துக்கா?’ என்று கொதிப்பதில் தொடங்குகிறது இவருக்கும் அதிகாரிகளுக்குமான சிக்கல். 

நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்பி இருக்கிறார். 

இந்தியா பால் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூசிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக் காட்டியிருக்கிறார். 

அவரோ மீண்டும் மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார். பயந்துபோய் இடத்தைக்காலிசெய்த அப்பெண்மணி பின் வெகுகாலம் டெல்லி வட்டாரங்களில் ‘குரியன் ஒரு பைத்தியம், என்மேல் எச்சில் துப்புவதாகப் பயமுறுத்தினார்’ என்று சொல்லிவந்தாராம்! 

குரியனின் அபார மூளையும் சமயோசித புத்தியும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. முதலாவது, கூட்டுறவு அமைப்பின் பாலில் ஈக்கள் கிடப்பதாக ஆரம்பத்தில் புகார்கள் வந்தவண்ணம் இருந்திருக்கின்றன. இது ஏதோ சதிவேலை என்று சந்தேகித்த குரியன் ‘அடுத்தமுறை ஈ கிடந்தால் அதைப் பிரேதபரிசோதனைக்கு அனுப்புங்கள்; அதன் நுரையீரலில் பால் இருந்தால் அது பாலில் விழுந்து இறந்தது, இல்லையேல் அடித்து உள்ளே போடப்பட்டது’ என்று அறிக்கை அனுப்ப அதன்பிறகு ஈ விழவேயில்லையாம். 

•••••••••••••• 


நேருமுதல் வாஜ்பேயிவரை அத்தனை பிரதமர்களுடனும் தனிப்பட்ட செல்வாக்கு குரியனுக்கு இருந்திருக்கிறது. நாட்டையும் நாட்டின் விவசாயிகளையும் நேசித்ததும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று உழைத்ததுமே தனக்கு அந்தச் செல்வாக்கை அளித்ததாக எழுதுகிறார். மற்றபடி தான் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் ஐயாயிரம் ரூபாய்தான் (1981ல்) என்கிறார். தன் திறமையைவிடக் குறைவாகச் சம்பளம் பெறுபவர்களைச் சக ஊழியர்களும் மற்றவர்களும் உயர்வாக மதிப்பார்கள் என்பது குரியனின் நம்பிக்கை. 

••••••••••••••••• 

2010-11-ல் அமுலின் வருவாய் 2.15 பில்லியன் டாலர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

••••••••••••

9. இவ்வாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைத் திறம்பட முன்னெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே அமைதியாக வேறொரு சாதனையும் குரியன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. அது என்னவென்றால் உலகிலேயே முதன்முறையாக எருமைப் பாலிலிருந்து பால்மாவு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபடைத்ததாகும். அதுவரை பால்மாவானது பசும்பாலில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்குக் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் பாதிக்கும் மேல் எருமை மாட்டிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது. 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற திரவப் பால் குளிரூட்டப்பட்டு ஒரு சில நாட்களிலேயே நகரங்களில் விநியோகிக்கப்பட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவி வந்தது. இதனால் திரவப் பாலை சேமித்து வைப்பதிலும், சேமித்து வைத்தலுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. 

இந்தச் சூழ்நிலையில் தான் டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் எருமைப் பாலில் இருந்து பால் மாவு தயாரிக்கும் தொழில் நுட்பமானது கண்டு பிடிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாகத் தேவைக்கு அதிகமான திரவப் பாலானது பால்மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் அதிக லாபத்தை ஈட்டியதோடு மட்டுமல்லாமல் பால் உற்பத்தியாளர்களிடையே அதிகப் பால் உற்பத்தி செய்வதற்கு ஓர் உந்து சக்தியாகவும் விளங்கியது. இவ்வாறாக டாக்டர் குரியன் அவர்கள் கிராமப்புற மக்களுக்குப் பால் உற்பத்தி மூலம் நிரந்தரச் சீரான வருமானம் கிடைப்பதற்கு ஒரு முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. 

••••••••••••••• 

10. அமுல் - இந்தியாவின் சுவை (AMUL – The Taste of India) 

டாக்டர் குரியன் அவர்கள் பால் உற்பத்தியைப் பெருக்குவதில் காட்டிய முனைப்பைவிட உற்பத்தி செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதில் பெரும் பங்காற்றினார் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவே தான் டாக்டர் குரியன் அவர்கள் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்குச் சந்தையில் ஒரு விற்பனை பெயர் அவசியம் என்று கருதினார். ஒரு விற்பனை பொருளின் விற்பனைப்பெயர் (Brand Name) மூலமே அந்தப் பொருளானது மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது என்று நம்பினார். 

அது மட்டுமல்லாமல் அந்த விற்பனை பெயருக்கேற்றவாறு விலையும், தரமும் அமையும் பட்சத்தில் அந்த விற்பனை பொருளானது சந்தையில் உள்ள மற்ற பொருளிலிருந்து தனித்துவம் பெறுகிறது என்றும் எண்ணினார். இப்படியாகப் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விற்பனைப்பெயர் தான் இன்று இந்தியா முழுவதிலும் கோலோச்சும் “அமுல்” (AMUL) என்பது. 

••••••••••• 

அமுலின் வெற்றிக்குப் பின்னால், சில முக்கியக் காரணிகள் – Game Changers இருந்தன. 

1. மிகவும் திறன் கொண்ட, மிகக் குறைந்த செலவில் அமைந்த Supply Chain: 

அமுல் மாடலில், அவர்களின் அமைப்பே தரகரின் வேலையையும், தயாரிப்பாளரின் வேலையையும் மேற்கொள்வதால், இரட்டை லாபம் மிச்சம். மேலும், உற்பத்தி மிகச் சீராக நுகர்வோரைச் சென்றடைவதால், உற்பத்தியாளர்களின் உற்பத்தி தேங்குவதில்லை. உற்பத்தி விற்காமல் தேங்கினால், அதில் பணம் முடங்கி, ஏழை விவசாயிகள் தம் தினசரித் தேவைகளைக் கூடப் பூர்த்திச் செய்ய முடியாமல் பாதிக்கப் படுவர். 

அதிகாலை, மாட்டின் மடி விட்டுக் கிளம்பும் பால், சில மணி நேரங்களில், அருகில் உள்ள குளிரூட்டப் படும் நிலையத்தை அடைந்து, குளிரூட்டப் பட்டு, பதனப்படுத்தப் படும் ஆலையை அடைந்து, பதப் படுத்த பட்டு, அடுத்த நாள் அதிகாலையில் நுகர்வோர் வீட்டு வாசலில் பாக்கெட்டுகளாய்த் தொங்கும். தினசரி, பாரதத்தின் பட்டி தொட்டியெங்கும் உள்ள 1 ½ கோடி விவசாயிகளிடமிருந்து, பால் கொள்முதல் செய்யப் பட்டு, மண் ரோடு / கல் ரோடுகளைத் தாண்டி, ஒரு நகரத்தை அடுத்த நாள் தவறாமல் அடையும் Supply Chain ஐ என்ன வென்று சொல்லலாம்?? உலகத் தரம்?????. 

அமுல் இந்த மாடலை 1940லிருந்து வெற்றிகரமாகச் செயல் படுத்தி வருகிறது, தார்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் இல்லாத காலத்திலிருந்து. இன்று, இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று தொழிலதிபர்கள் / பொருளாதார வல்லுநர்களைக் கேளுங்கள்.. இந்தியாவின் கட்டமைப்பு மோசம் என்று சொல்வார்கள்.. சாலைகள் சரியில்லை.. துறைமுகங்கள் சரியில்லை என்று. Bull shit. 

2. சரியான தொழில் நுட்பம் 

அதிக மழையும் வெப்பமும் இருக்கும் சூழலில் உள்ளது நம் நாடு. இங்கே பால் போன்ற, microially sensitive பொருட்களைச் சாதாரணச் சூழலில் எடுத்துச் கையாள முடியாது. சொல்லப் போனால், நமது மாடுகள் வளர்க்கப் படும் சூழல், பால் கறக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றிலுமே நுண்ணுயிர் சுமை, குளிர் பிரதேசங்களை விட, பலப் பல மடங்கு அதிகம். எனவே கறந்த பால் சில மணி நேரங்களில் பதப் படுத்த படாவிட்டால், கெட்டு விடும். இந்தப் பதப் படுத்துதலில் மூன்று கட்டங்கள் உண்டு. 

முதல் கட்டத்தில், பாலில் உள்ள நுண்ணுயிர்கள் பாஸ்ட்யூரைஸிங் மூலம் அழிக்கப் படுதல். இரண்டாவது, பாலை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல, குளிரூட்டப் பட்ட பாலின் குளிர்ச்சியைப் பாதுகாத்துக் கொண்டு செல்லும் கொள்கலன்கள். மூன்றாவது, அதிகக் கொழுப்பு உள்ள பாலில் இருந்து, கொழுப்பை அகற்றி, அதிலிருந்து வெண்ணெய், நெய் போன்றவற்றைச் செய்வது. 

முதலில், இயந்திரங்களை இறக்குமதி செய்த அமுல், பின்னர் தானே வடிவமைக்கவும் துவங்கியது. அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. 

•••••••••••• 

11. தென்மேற்குப் பருவக் காற்றால் மழை பெறும் பாரதத்தில், விவசாயம் ஜூன் மாதத்துக்குப் பின் தான் துவங்குகிறது. மாடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைக்கத் துவங்கும் நேரம் அது. எனவே, பால் உற்பத்தியும் அதிகரிக்கத் துவங்கி, குளிர் காலத்தில் மிக அதிகமாகப் பால் கிடைக்கும். ஆனால், கோடைக் காலத்தில் தீவனம் குறைந்து, பால் உற்பத்தியும் குறையும். ஆனால், நுகர்வோர் தேவை வருடம் முழுவதும் சீராக இருக்கும். 

இதை எப்படிச் சமாளிப்பது?? 

அதிகமாகப் பால் கிடைக்கும் போது, அதைப் பால் பவுடராக மாற்றி வைத்துக் கொண்டு, பற்றாக்குறைக் காலங்களில், அதை மீண்டும் பாலாக மாற்றிக் கொள்வதுதான் வழி. இதற்கு ஸ்ப்ரே ட்ரையிங் என்றொரு முறை உண்டு. அந்த இயந்திரங்கள், அப்போது, ஐரோப்பாவில் தயாரிக்கப் பட்டு வந்தன. அவற்றில், கொழுப்பு குறைவான மாட்டுப் பாலை மட்டுமே பதப் படுத்த முடிந்தது. ஆனால், இந்தியாவில் எருமைப் பால்தான் அதிகம். எருமைப் பாலை பவுடராக்கும்படி, இயந்திரத்தை மாற்றிக் கொடுக்கும்படி அமுல் விடுத்த வேண்டுகோள், நக்கலாக மறுக்கப் பட்டது. 

மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் பயின்று தன்னுடன் வேலை செய்ய வந்த டாலயாவிடம் அந்தச் சவாலைக் கொடுத்தார். வெற்றிகரமாக அந்தச் சவால் முறியடிக்கப் பட்டது. குளிர்காலத்தில் கிடைக்கும் எல்லாப் பாலும் கொள்முதல் செய்யப் பட்டு, பவுடராக மாற்றப் பட்டது. வடகிழக்கில் எப்போதுமே பால் பற்றாக்குறை. பவுடராக மாற்றப் பட்ட பாலுக்கு வடகிழக்கு ஒரு பெரும் சந்தையாக உருவெடுத்தது. ஆனால், பவுடர் பால் விலை அதிகமாக இருந்ததால், ஏழை நுகர்வோருக்கு, அது பெரும் பாரமாக இருந்தது. எனவே, அமுல் மிகக் குறைந்த செலவில், ரயில் மூலம் பாலைக் கொண்டு செல்லக் கொள்கலன்கள் வடிவமைத்தனர். 

மொத்தத்தில், தொழிலுக்கு என்ன தேவையோ, அந்தத் தொழில்நுட்பங்களை அமுலே உருவாக்கிக் கொண்டது. குரியன் போன்ற தொழிநுட்பமும், பொது நலனும் இணைந்த ஆளுமையில்லாமல், இது சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை. இது பெருமளவில் அன்னியச் செலாவணியை மிச்சம் செய்தது மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கும் வழி வகுத்தது. 

3. உற்பத்தியாளர்களின் நலன்: 

அமுல் முழுக்க முழுக்கப் பால் உற்பத்தியாளர்களின் தொழில் அமைப்பு. அவர்களின் தேவைகளுக்கேற்ப, தொழில் முறைகள் அமைக்கப் பட்டன. பால் உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பாலானோர் சிறு மற்றும் குறு விவசாயிகள். ஒன்றிரண்டு கால்நடைகளை வைத்திருப்போரே அதிகம். அவர்களின் மிக முக்கியப் பிரச்சினைகள் என்ன? 

பணம்: சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் பணம் புழக்காட்டம் வருடம் இருமுறை தான். முதலில் கரீஃப் என்று சொல்லப் படும் தென்மேற்குப் பருவக்காற்று மகசூலில் வரும் வருமானம். பின் இரண்டாவது போகமான ரபியின் வருமானம். மற்ற நேரங்களில் பணப் புழக்காட்டம் மிகக் குறைவு. அவர்களால், கால்நடைகளுக்குத் தேவையான சத்தான தீவனத்தை வாங்கக் காசு இருக்காது. எனவே, கொள்முதல் செய்த பாலுக்கு, வாரா வாரம் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது. 

பால் சொசைட்டியிலேயே, கால்நடைத்தீவனமும் விற்கப் பட்டது. மிக ஏழை விவசாயிகள், தினசரி பாலை ஊற்றி விட்டு, அன்றைக்குத் தேவையான தீவனத்தை வாங்கிச் செல்லும் வசதியும் செய்யப் பட்டது. வாரக் கடைசியில், தீவனம் வாங்கியது போக, மீதப் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது. 

கால்நடை நலம்: மனிதர்களுக்கே சரியான மருத்துவ வசதி இல்லாத காலத்தில் கால்நடைகளுக்கெங்கே?? ஆனால், கால்நடைகளின் உடல் நலமும், அவை சரியான நேரத்தில் கருத்தரித்தலும் பால் உற்பத்திக்கு மிக முக்கியம். அமுல், கால்நடை நலத்தைப் பேண, மருத்துவர்களை, கிராமங்களுக்கே கொண்டு வந்தது. செயற்கை முறைக் கருத்தரித்தல், கலப்பினக் கால்நடைகளை உருவாக்கி பால் உற்பத்தியைப் பெருக்குதல் போன்றவற்றை அமுல், தன் தொழிலின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதி அதில் ஈடுபட்டது. 

மகளிர்: விவசாய வீட்டில், பெரும்பாலும், பெண்கள் தான் கால்நடைகளைக் கவனித்துக் கொள்வார்கள். பால் கறப்பது, மேய்ப்பது போன்ற பல வேலைகளிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பது அவர்களே. எனவே, அவர்களின் உடல் நலன் மிக முக்கியமானது. அதில் மிக முக்கியமானது, அவர்களின் மகப்பேற்றுக் காலம். சரியான உணவு, தடுப்பூசிகள் முக்கியம். அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் போனாலோ, குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாது போனாலோ, அது பால் உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும் என்றுணர்ந்து, அமுல், திரிபுவன் தாஸ் ஃபவுண்டேஷன் என்னும் ஒன்றை உருவாக்கி, அதிலும் கவனம் செலுத்தியது. 

4. நுகர்வோர் மற்றும் பொதுநலன்: 

பெரும்பாலும் தொழிலின் முக்கியமான குறிக்கோள் லாபம் சம்பாதிப்பது என்றே கருத்து உள்ளது. ஆனால், பழம்பெரும் மேலாண் அறிஞரான பீட்டர் ட்ரக்கர் அது தவறு என்கிறார். நுகர்வோரின் தேவையை அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாகப் பூர்த்திச் செய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும் என்கிறார். அப்போது லாபம்? – அது அந்த நிறுவனம் மிக நலமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் மட்டுமே என்கிறார். தர வரிசையில் வைக்கும் போது, முதலில் வருவது நுகர்வோர் நலனே. லாபம் அதற்குப் பின் தான். நுகர்வோரைக் குறித்துக் காந்தியும் இதேதான் சொல்கிறார். 

••••••••••••••• 

வெண்மைப் புரட்சியின் துவக்கத்தில் 20 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, Operation Flood -3 ன் இறுதியில் 68 மில்லியன் டன்னைத் தாண்டி உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளரான அமெரிக்காவைத் தொட்டது. 

************* 

ஒரு அரசு திட்டமாக இருந்தும், அவர் தனது தேவைகளுக்காக, தில்லி செல்லத் தேவையே இருந்ததில்லை. ஆனால், சில லைசென்ஸ்களுக்காகச் செல்ல வேண்டியிருந்த காலத்தில், தில்லி பாபுக்கள் (இ.ஆ.ப) நடந்து கொண்ட விதம் அவரை வெறுப்படைய வைத்திருந்தது. தன் சாக்லேட் ஆலைக்கான அனுமதி பெறத் திட்டக் கமிஷன் சென்றிருந்த போது, அனுமதி வழங்க மறுத்த திட்டக் ஆணையக் கமிசார்கள் சொன்னது, ‘அதனால், உள்ளூர் இனிப்பு வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள்’. ‘ஒரு மாட்டைப் பிடித்துப் பால்கறக்கத் தெரியாத நீ என்ன எனக்கு அறிவுரை சொல்வது?’ என்று எகிறி, தனக்கு வேண்டிய அனுமதி பெற்றுச் சென்றார். தில்லியின் அதிகார வர்க்கம் அவரை மிக ஆசையாக வெறுத்து வந்தது. 

*************** 


12. 91 ஆம் ஆண்டு, இந்தியாவைப் புரட்டிப் போட்ட ஒரு ஆண்டு. அந்நியச் செலாவணிச் சிக்கலில் சிக்கிய பாரதத்தைக் காப்பாற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஓரிரவில் ஒழித்தார் அன்றைய நிதியமைச்சர் டாக்டர்.மன்மோகன் சிங். அதில் பாலும் அடங்கும். ஆனால், டாக்டர் குரியன் அதை எதிர்த்தார். 

கூட்டுறவு பால் சங்கங்கள் விவசாயிகளின் நிறுவனங்கள். அவற்றால், தனியார் துறையுடன் போட்டி போட இயலாது என்று. அது மட்டுமில்லாமல், தனியார் துறை வந்தால், லாபம் மட்டுமே குறிக்கோளாகி, அத்தியாவசியப் பொருளான பாலின் விலை ஏறி விடும், விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் கைவிடப் பட்டு, இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்னும் வாதங்களை முன்வைத்தார். அவரின் வாதங்கள் ஏற்கப்பட்டு, பால் துறையில் மட்டும் மீண்டும் லைசென்ஸ் முறை கொண்டு வரப் பட்டது. நிதியமைச்சராகும் முன்பு, இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மன்மோகன் சிங்குக்கு, குரியனின் சாதனை மீது பெரும் மதிப்பு இருந்ததும் ஒரு பெருங்காரணம். (அவர் மகள் தமன் சிங் ஒரு இர்மா பட்டதாரி!) 

90களில், தாராள மயமாக்கல் ஒரு பெரும் மதமாகவும், சர்வ ரோக நிவாரணியாகவும் கொண்டாடப் பட்டது. எல்லா லைசென்ஸ்களையும் ஒழித்தாலே இந்தியா முன்னேறி விடும் என்னும் மூட நம்பிக்கை மழைக்கால வெள்ளம் போல நுரைத்தோடியது. அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் பழமைவாதிகளாகவும், செல்லாக்காசுகளாகவும் சித்தரிக்கப் பட்டனர். குரியனும் அதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அவர் பெரும் சாதனையாளர்தான்.. எனினும், அவர் விலகி இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்னும் ஓசைகள் கேட்கத் துவங்கின. 

லைசென்ஸ் முறை வேளாண்மையைப் பாதிக்கும் சில துறைகளில் இருந்தது. உரம், கரும்பு, பால், பூச்சி மருந்து முதலையவற்றில். இதில் கரும்பும், பாலும் கொஞ்சம் வித்தியாசமனவை. அவற்றுள் விவசாயிகளின் நேரடிப் பங்களிப்பு இருந்தது. கரும்பு ஆலை லைசென்ஸ் மத்திய அரசு கையில் இருந்தது. கரும்பு விளையும் வேளாண் பகுதிகளைப் பிரித்து, ஒரு குறைந்த பட்ச கரும்பு விளையக் கூடிய ஒரு வட்டாரத்தை, மத்திய அரசு ஒரு தொழில் முனைவோருக்கு அளித்து, அவருக்குக் கரும்பு ஆலையை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமம் வழங்கும். அந்த வட்டாரத்தில் வேறெவரும் விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்க முடியாது. 

வருடத்தில் சில மாதங்கள் கரும்பு ஆலைகள் இயங்கி, சர்க்கரை உற்பத்தி செய்து, அவற்றை, ஆலைகள் தமது கிடங்குகளில் வைத்து விடுவார்கள். விற்க முடியாது. விற்க, அரசின் அனுமதி தேவை. மத்திய அரசு, மாதா மாதம் ஒவ்வொரு ஆலையும் எவ்வளவு விற்க வேண்டும் என்று ஒரு ஆர்டர் கொடுப்பார்கள். அதில் ஒரு சதவீதம் ரேஷனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இம்முறையினால், வெளி மார்க்கெட்டில் சர்க்கரை விலை கட்டுப் படுத்தப் பட்டது. விலை வீழ்ந்த காலங்களில், விற்கும் அளவைக் குறைத்தும், ஏறிய காலங்களில், விற்பனை அளவை அதிகரித்தும் அரசு மேலாண்மை செய்து வந்தது. இதனால், ஆலைகள் ஒரு சர்க்கரை வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டன (sugar cycle). ஓவ்வொரு 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கரும்பு உற்பத்தி அதிகமாகி, அவர்கள் பணம் முடங்கி, விலை குறைந்து அவர்கள் லாபம் பாதிக்கப் படும். 

அடுத்த ஆண்டு, அவர்கள் விவசாயிகளிடம் இருந்து சரியாகக் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இங்கும் அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு என்ன கொள்முதல் விலை தரவேண்டும் என்று நிர்ணயிக்கும். சர்க்கரை விலை வைக்கும் அரசுத்துறைக்கு நல்ல இரண்டாம் வருமானம் உண்டு. விற்கும் விலையில், கிலோவுக்கு இவ்வளவு என்று ஆலை முதலாளிகளும் தனியே வாங்கிக் கொள்வார்கள். அவர்களிடம் இருந்து ஒரு பங்கை அரசியல்வாதிகள் பிடுங்கிக் கொள்வார்கள். கொள்முதல் விலை குறைந்தால், விவசாயிகள் கொடி பிடிப்பார்கள். அவர்கள் செல்வாக்கு 4 மாநிலங்களில் உண்டு. எனவே, அரசியல் வாதிகள் விவசாயிகளுக்கு நல்ல விலையும் பேசி வாங்கித் தருவார்கள். 

அதே சமயம் சர்க்கரை விலை அதிகரித்தால், அரசாங்கங்கள் ஆடும் – எனவே அரசியல்வாதிகள் அதையும் கவனமாகக் கையாண்டார்கள். 

மொத்தத்தில், ஊழல் மலிந்த, அதே சமயம் அத்தொழிலின் ஐந்து முக்கியப் பங்குதாரர்களுக்கும் (அரசு, அரசியல்வாதி, தொழில் அதிபர்கள், விவசாயிகள், நுகர்வோர்), அதிக நட்டமில்லாமல் நடந்து வந்தது. இந்தியா உலகின் மிகப் பெரும் சர்க்கரை உற்பத்தியாளர். தென்னிந்தியாவின் கரும்பு உற்பத்தித் திறன் உலகில் ஒரு சாதனை. 

கரும்பு வாங்கும் விலையையும், சர்க்கரை விற்கும் விலையையும், சர்க்கரை விற்பனை அளவையும் அரசே நிர்ணயிப்பது தகாது என்று சுதந்திரச் சந்தைப் (free market) பூசாரிகள் குரலெழுப்பினர். அரசும் பணிந்து, சர்க்கரை விதிகளைத் தளர்த்தினர். முதலில், விற்பனை விதிகள் தளர்ந்தன. சர்க்கரை, பொருட்சந்தையில் ஊக வணிகம் செய்யவும் அனுமதித்தனர். சர்க்கரைப் பொருளாதாரத்தை விடப் பல மடங்கு ஊக வணிகம். விளைவு, நாட்டின் சர்க்கரை ஆலைகளில் இருந்த சர்க்கரை அனைத்தும் சந்தைக்கு வந்தன. 

15 ரூபாய் இருந்த சர்க்கரை 11 ரூபாய்க்கு வந்தது. பொருளாதாரப் பலமில்லாத ஆலைகள் அவற்றைக் குறைந்த விலையில் விற்று நொடித்தனர். அவற்றைப் பெரும் சுறாக்கள் கவ்வின. சர்க்கரை ஆலையை விட, அதன் ஏஜெண்டுகள் பெரும் ஆட்களாக உருவாகினர். இரண்டே ஆண்டுகளில், இந்தியாவின் சர்க்கரைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆடியது. தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், விவசாயிகளுக்கும் முதல் அடி. மீண்டும் சர்க்கரை லைசென்ஸ் நடைமுறைக்கு வந்தது. இன்று ஓரளவுக்குச் சர்க்கரைப் பொருளாதாரம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது. 

•••••••••••• 

நல்ல வேளையாக, பாலில் இது நிகழும் முன்பே தடுக்கப் பட்டது. அதற்கு, குரியனின் நேர்மையும், பால் உற்பத்தியில் நடத்தப் பட்ட சாதனையும், அதனால் எழை விவசாயிகள் நேரிடையாகப் பெரும் அளவில் பயனடைந்திருந்ததுமே காரணம். இன்றும் நாடெங்கிலும் தொழில் முனைவோரும் பால் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், பாலின் கொள்முதல் விலையை, கூட்டுறவு சங்கங்களும், அவற்றை ஆதரிக்கும் அரசுகளுமே தீர்மானிப்பதால், பாலின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. வெறும் பாலில் மட்டுமே வியாபாரம் செய்தால் கட்டுபடியாகாதென்று தனியார் துறையினர் தயிர், வெண்ணெய், பால்கட்டி, முதலியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். 

************ 

13. இப்படி, தான் நம்பிய ஒரு கொள்கைக்காகப் போராடி வென்ற குரியன், தன் வாரிசைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வில்லை என்னும் ஒரு ஆதங்கம் பால் துறையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவரின் கீழ், இரண்டு மேலாண் இயக்குநர்கள் இருந்தனர். ஒருவர் டாக்டர்.அனேஜா இன்னொருவர் அம்ரீதா படேல். இதில் அனேஜா, ஒரு hands on knowledge இருந்த ஒரு பால் துறை நிபுணர். ஆனால், அம்ரிதா படேல், விற்பனை மற்றும் பொதுத் தொடர்புகளில் பரிச்சயம் உள்ளவர். மேலும் அவர், முன்னால் நிதியமைச்சர் ஹெச்.எம்.படேலின் மகள். நல்ல அரசியல் தொடர்புகள் உள்ளவர். அந்தச் சஸ்பென்ஸ் நீடித்து, இறுதியில் குரியன் அம்ரிதா படேலைத் தேர்ந்தெடுத்தார். 

அவருக்குப் பிரச்சினைகள் அங்கிருந்து துவங்கின. அம்ரிதா படேலின் நோக்கம் வேறாக இருந்தது. கூட்டுறவுத் துறையை அவர் கார்ப்பரேட் ஆக்கும் செய்யும் நோக்கத்தோடு, சில நடவடிக்கைகளை எடுத்தார். தில்லி மதர் டெய்ரிக்கு தனியார் துறையில் இருந்து மிக அதிகச் சம்பளத்தில் ஒரு C.E.O வை நியமித்தார். அமுல் நிறுவனத்தலைவரை விடப் பலமடங்கு சம்பளம். மொத்தக் கூட்டுறவுத் துறையும், மிதமான சம்பளம், லாப நோக்கின்மை முதலியவற்றால், மிக வளமாக ஓடிக்கொண்டிருந்தது. மிக முக்கியமாக, அமுல் நிறுவனங்களின் அடிப்படை, மக்களாட்சியாகும். 

உற்பத்தியாளர்களால், மேலாளர்கள் நியமிக்கப் பட்டு, நடத்தப்படும் ஒரு இயக்கம். மெத்தப் படித்த மேதாவிகளால், குளிர்பதன அறைகளுக்குள் நடத்தப் படும் ஒன்றல்ல. அதன் அடிப்படையிலேயே தவறு செய்தால் என்னாகும் என்ற கவலை எல்லோரையும் வாட்டியது. இர்மாவின் வழியும் டாக்டர் குரியனின் பாதையில் இருந்து கொஞ்சம் விலகத் துவங்கியது. மிக மோசமாக விளையாடப்பட்ட அந்தச் சதுரங்க விளையாட்டில், அவர் வயதின் காரணமாகவும், மாறிய பொருளாதாரச் சூழல்கள் மற்றும் அரசியலின் காரணமாகவும் வெளியேற நேர்ந்தது 

************ 

"என் வேலை, பால் வியாபாரமல்ல. விவசாயிகளுக்கு, அவர்கள் வாழ்வைக் கொடுப்பது" என்பது குரியனின் கொள்கை. (My job is to empower them) என்பார். ஆனால், தேசிய பால் வள வாரியம், அதை வெறும் பாலாகக் குறுக்கிக் கொண்டு விடக் கூடும். 

இறுதியில், தன் வழிவந்தவர்களாலேயே வெளியேற்றப் பட்டு, எந்த மாநிலத்தின் கடை மக்களின், சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தினாரோ, அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகளால் அசிங்கப் படுத்த பட்டு வெளியேற்றப்பட்டார். 

*************** 

குரியன் அமுல், தேசிய பால்வள வாரியம், தேசிய கூட்டுறவு ஒன்றியம், தேசிய பால் இயந்திர உற்பத்திக் கழகம் என்று 30 நிறுவனங்களைத் தம் வாழ் நாளில் உருவாக்கினார். நேருவைப் போல அவர் ஒரு institution builder. அவரை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் அவர் ஒரு சர்வாதிகாரி என்று சொல்வார்கள். அது வெளியில், மற்றவர்களுக்காக அவர் உருவாக்கிக் கொண்ட ஒரு மேல் பூச்சு. அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று ஜெயகாந்தன் சொன்னதைப் போல. 

உண்மையில், தன் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு, சில அடிப்படை விழுமியங்களை அளித்து விட்டு, முழுப் பொறுப்பையும் அவர்கள் கையில் கொடுத்து விடுவார். ஆனால், அவர்கள் செய்த வேலைகளை, review செய்யும் போது, மிகக் கூர்ந்து கவனிப்பார். ஒவ்வொரு சிறு பிழையையும், பரிபூரணமில்லாத வேலையையும் மிகக் கடுமையாக விமரிசிப்பார். அதில் வெளிப்படும் எள்ளல், அற்பங்களை மிகக் காயப்படுத்தி விடும். ஆனால், உண்மையான மனிதர்களை மேம்படுத்தவே செய்யும். 

************ 

14. விளம்பரத் துறையிலும், குரியன் ஒரு தனிமுத்திரையைப் பதித்தார். வாரா வாரம் வரும் அமுல் ஹோர்ட்டிங்குகளில், கார்ட்டூன் மூலம் அன்றைய நாட்டு நடப்புகள் விமரிசிக்கப் படும். அதன் முன் வரைவை ஒரு முறை பார்த்து, அதை உருவாக்கிய விளம்பர நிறுவனத்துக்கு அனுமதியளித்த டாக்டர் குரியன் பின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும், தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. ஒரு முறை கூட அந்த விளம்பர நிறுவனத்துக்கு யோசனை சொன்னதில்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வதென்று தெரியும் என்பதே அவர் நிலை. இன்று இந்தியாவின் தலைசிறந்த விளம்பர கேம்பேயின் அந்த வாரந்தர ஹோர்டிங் என்பது அத்துறை நிபுணர்களும் அனைவருமே ஒத்துக் கொள்ளும் விஷயம். 

இவ்வளவு ஒரு பெரும் பங்களிப்பு அவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்று பார்த்தால் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பத்ம விபூஷன், மகசேசே மற்றும் உலக உணவுப் பரிசு போன்றவை. ஆனால், இம்மாபெரும் சாதனைக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசோ, பாரத ரத்னாவோ கிடைக்கவில்லை என்பது ஒரு பெரும் சரித்திரச் சோகம்தான். இஸ்ரோ ராக்கெட் விடுவதைப் பார்க்க நேரம் இருந்த பிரதமருக்கு, நேரில் சென்று ஒரு அஞ்சலி செலுத்த கூட நேரமில்லை.. பாவம். குரியன் மரித்த நாளில், ஆனந்தின் அருகில் உள்ள நதியாதில் ஒரு பால் பண்ணையைத் திறந்து வைக்க வந்த மாநில முதல்வருக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த நேரமில்லை. 

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் – இந்தச் சாதனைக்காக, இந்திய அரசிடம் இருந்து ஒரு பைசா அவர் பெறவில்லை. 

பால் உற்பத்தி மிக அதிகரித்து, மீந்த பட்டர் ஆயிலை, ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, கடலில் கொட்ட இருந்தார்கள். அதை இலவசமாகப் பெற்று, இந்தியாவில் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தில் துவங்கினார் டாக்டர்.குரியன். அது மட்டுமில்லாமல், 35 ஆண்டுகளாக, தேசிய பால் வள வாரியத்தில் பணி புரிந்ததற்காக, அவர் சம்பளம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பால் உற்பத்திச் சாதனை, குரியன் நாட்டுக்கு அளித்த பரிசு. 

ஒரு தலைவராக, தன்னலம் கருதாத மேலாளராக, institution builder ஆக, பொது நல ஊழியராக என்று எந்த நோக்கில் பார்த்தாலும், இந்தியப் பொது வாழ்வின் ஈடு இணையற்ற ஒரு மனிதராகக் குரியன் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார். 

முழுமை பெறாத கனவு : தன்னுடைய சுயசரிதையில், ‘தனது ரத்தத்தை வேர்வையாகச் சிந்தி நமக்காக உணவை தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன் நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும் அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வெற்றி எதிரிகளைக் கொண்டுவரும். பல சூழ்ச்சிகள். மத்திய அரசு குரியன் மேல் குற்றச்சாட்டுக்களைக் குவித்தது. 2006 இல் குரியன் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 

குரியன்மீது வீசப்பட்ட குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. 2012 இல் மறைவதுவரை அவர் மனதைச் சுயநலக்காரர்கள் காயப்படுத்தினார்கள். அவருக்கு இருந்த ஒரே ஆசுவாசம் ஏழை விவசாயிக்கும், பாலுக்காக அழும் குழந்தைக்கும் அவர் தெய்வம். 

குரியனின் பங்களிப்பு உலகைக் காத்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 10 கோடிக்கும் மேலான மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

(முற்றும்)



நன்றி  (எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் திரு.பாலா அவர்களால் எழுதப்பட்ட வெண்மைப்புரட்சி கட்டுரையில் இருந்து பெரும்பாலான பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளது.)



இவர் (தான்) நம் கடவுள் முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) )


இவர் (தான்) மக்களின் கடவுள்  வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 


Sunday, January 13, 2019

இவர் (தான்) மக்களின் கடவுள்

வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 

"தோல்வி என்பது ஜெயிக்காமல் இருப்பதல்ல; நம் முழுத் திறமை களையும் பயன்படுத்தாமல் இருப்பது, சமூகத்துக்காக எதுவுமே செய்யாமல் இருப்பது". - வர்கீஸ் குரியன் 

சர்வதேச அளவில் "பால் வளத்துறை நிபுணர்' என்ற அங்கீகாரம், பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான். 


1. ‘எனக்கும் ஒரு கனவிருந்தது’ என்ற புத்தகம் அவரது தன்வரலாறு. நல்லமுறையில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலைப்போலப் பதிந்துபோகும் படிப்பினைகளும், செயல்பட உத்வேகமும் தருவது வேறொன்றில்லை. நிச்சயமாக இப்புத்தகம் அவ்வரிசையில் வைக்கத்தகுந்தது. 236 பக்க நூலில் அதிகபட்சமாக ஒரு பத்துபக்கம் தன் குடும்பத்தை, சொந்தவாழ்வைக்குறித்து எழுதியிருக்கிறார். மற்றதெல்லாம் நலிந்துபோய்க்கிடந்த பாலின் கதை, கிராமங்களை முன்னேற்றுவதையே குறிக்கோளாகக்கொண்டு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த தீர்க்கதரிசிகளின் கதை, தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் திறமையான கூலிக்காரன் என்ற பெருமையுடன் அவர் கூட்டுறவுச் சமூகங்கள் அமைத்து வெற்றிகண்ட ஐம்பதுவருட முயற்சியின் கதை, அரசிடமும் அதிகாரிகளுடனும் நியாயம் தன் பக்கம் என்ற ஒரே தெம்பில் துணிந்து மல்லுக்கு நின்ற கதை. 

••••••••••••••• 

இன்றைக்கு நமக்குப் பால், தயிர், வெண்ணெய் எனப் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வர்கீஸ் குரியன் தான். அடிப்படையான தேவை அவை ஏன் மக்களுக்குக் கொண்டு சேரவில்லை என்பதைக் கண்டுபிடித்த எளிய தொழில்நுட்பங்களின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மாபெரும் வெண்மை புரட்சியைச் செய்திருக்கிறார் வர்கீஸ் குரியன். 

60 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவைப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்து வந்தது. குரியன் அதனை உடைத்துக் குழந்தைகளுக்கான உணவையும் அறிமுகம் செய்யப் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை பயங்கரமாகச் சரிந்தது. 

இவ்வளவு சாதனைகளும் ஒரே நாளில் நிகழ்ந்தவை அல்ல. எண்ணற்ற போராட்டங்களைச் சந்தித்தார் குரியன். இதில் இருக்கும் அடிப்படை சிக்கல் என்ன தெரியுமா? குரியன் பணியாற்ற வேண்டியது முழுக்கப் படிக்காத ஏழை விவசாயிகளிடம். ஏற்கனவே பெருநிறுவனங்களால், இடைத்தரகர்களால் சுரண்டப்படும் அவர்களிடம் எதைச் சொல்லி என் திட்டத்தை நிறைவேற்றுவது என்று நினைக்கவில்லை குரியன்? அவர்களுக்குப் புரியும் எளிய முறையில் நவீன தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். 
அவர் என்ன நினைத்தாரோ அதுவே நடந்தது. 

••••••••••••••••

2. குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி. 

விவசாயமே தொழில். அப்பகுதியில் "ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர். 

"பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கிக் கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை. 

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், ""வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார். 

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே. 

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது. 

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் - அமுல்) ""அமுல்'' என்கிற மந்திரச் சொல் ஆனது. 

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் "யுனிசெஃப்' அமைப்புக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது. 

""பசியிலிருந்து விடுதலை'' என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன். 

••••••• 

3. குரியன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். வசதியான குடும்பம். அப்பா அரசு டாக்டர். அவருக்கு அடிக்கடி இட மாற்றம் வரும். அதனால், பல பள்ளிகளில் படிப்பு. கோபிசெட்டிப்பாளையத்தில் இருக்கும் டயமண்ட் ஜூப்லி உயர்நிலைப் பள்ளியும் அவற்றுள் ஒன்று. கல்லூரிப் படிப்பு முழுக்கச் சென்னையில்தான். லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படிப்பில் நல்ல மதிப்பெண்கள். அதே சமயம், டென்னிஸ், பேட்மிண்டன், பாக்சிங் ஆகிய விளையாட்டுகளில் பரிசுகள். தேசிய மாணவர் படையில் ``மிகச் சிறந்த மாணவர்’’ பதக்கம். 

குரியனின் லட்சியம் ராணுவத்தில் சேருவது. கிண்டியில் படிப்பை முடித்தவுடன் ராணுவ வேலையும் கிடைத்தது. அம்மா அவரை அனுப்ப மறுத்தார். குரியன் சோகத்தோடு மிலிட்டரி கனவுக்குக் குட்பை சொன்னார். 

குரியனின் தாய்மாமன் ஜான் மத்தாய் டாடா ஸ்டீல் கம்பெனியில் உயர் பதவியில் இருந்தார். (பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார்.) அவர் உதவியால், குரியனுக்கு ஜாம்ஷெட்பூரில் வேலை கிடைத்தது. குரியன் தன் காலில் நிற்க விரும்புபவர். அம்மா வற்புறுத்தியதால் சிபாரிசால் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டார். என்னதான் திறமையால் முன்னேறினாலும், மாமா சிபாரிசு மட்டுமே காரணம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இங்கிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? 

அப்போது பிரிட்டீஷ் அரசாங்கம். இந்தியா விலிருந்து 500 இன்ஜினீயர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கான முழு ஸ்காலர்ஷிப் தரும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. மெட்டலர்ஜி எனப்படும் ``உலோகவியல்’’ பிரிவின் கீழ் குரியன் விண்ணப்பித்தார். 

நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்றார். இப்போது விதி போட்டது ஒரு பகடை. உலோகவியல் துறையில் இடங்கள் நிரம்பிவிட்டன, பால்பண்ணை பொறியியல் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்று சொன்னார்கள். மாமா நிழலிலிருந்து தப்ப வேறு வழி தெரியவில்லை. குரியன் சம்மதித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது. 

குரியனுக்குப் பால்பண்ணை இன்ஜினீயரிங்கை வாழ்க்கையாக்கிக்கொள்ளப் பிடிக்கவேயில்லை. ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார். மிச்சிகனில் உலோகவியல் படிப்பில் சேர்ந்தால், இந்திய அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்? அதையே செய்தார். உலோகவியல் துறையில் முதுகலைப் பட்டம் வாங்கினார். இந்தியா திரும்பினார். தன்னை மாட்டும் பொறிக் காத்துக்கொண்டிருக்கிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது. 

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் படிக்கப்போகும் மாணவர்கள் அரசு ஒதுக்கும் வேலையில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும். குரியனை கெய்ரா மாவட்டத்தில் ஆனந்த் என்னும் ஊரில் இருந்த பால் பண்ணைக்கு இன்ஜினீயராக நியமித்தார்கள். போகாவிட்டால், பெரும் தொகையை அபராதமாகக் கட்டவேண்டும். குரியனிடம் அத்தனை பணமில்லை. அதுவரை கேள்விப்பட்டேயிராத பட்டிக்காடு, மனம் வெறுக்கும் பால்பண்ணை வேலை. வேண்டா வெறுப்பாகப் புறப்பட்டார். வேலையில் சேர்ந்தார். ஒரே சிந்தனைதான், இது சிறைவாசம். எப்படியாவது சீக்கிரம் தப்பவேண்டும். குரியன் பலமுறை வேலையை ராஜிநாமா செய்தார். அரசாங்கம் ஏற்க மறுத்துவிட்டது. 

ஆனந்த் ஊரில் பிரிட்டீஷ் அரசாங்கம் நிறுவிய ஒரு பழைய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இருந்தது. இந்தப் பழைய தொழிற்சாலையைத் தங்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு இலவசமாகத் திரிபூவன்தாஸ் பெற்றார். பல இயந்திரங்கள் பழுதுபட்டிருந்தன. 

அந்த ஏரியாவிலேயே ஒரே இன்ஜினீயர் குரியன் மட்டுமே. அவரிடம் உதவி கேட்டார். குரியன் உடனேயே போய் ரிப்பேர் செய்துகொடுத்தார். திரிபூவன்தாஸ் அடிக்கடி உதவிக்கு அழைப்பதும், குரியன் தயங்காமல் கை கொடுப்பதும் வாடிக்கையாயின. திரிபூவன்தாஸூக்கு குரியன் திறமைமீது பிரமிப்பு; குரியனுக்குப் பெரியவரின் லட்சிய வேகத்தின் மேல் மரியாதை. 

சில மாதங்கள். பழைய இயந்திரங்கள் இனி மேல் காயலான் கடைக்குப் போகத்தான் லாயக்கு என்னும் நிலை. குரியனின் ஆலோசனைப்படி திரிபூவன்தாஸ் 60,000 ரூபாய் கடனாகப் புரட்டினார். புதிய இயந்திரம் வந்தது. குரியன் அதை நிறுவினார். இப்போது ஒரு திருப்பம். அரசாங்கம் குரியனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டது. 

திரிபூவன்தாஸ் பதறினார். இந்த இளைஞரை நம்பிப் பெரும்பணம் கடன் வாங்கியிருக்கிறோம். இவர் போய்விட்டால் நூற்றுக்கணக்கான கிராம வாசிகளின் எதிர்காலம் சிதறிவிடும். ஆகவே, “இரண்டு மாதங்கள் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியுங்கள். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கள்” என்று வேண்டினார். குரியன் சம்மதித்தார். இரண்டு மாதம், 56 வருட பந்தமானது. 

•••••••••• 

4. கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகியாகக் குரியன் பதவியேற்றார். தான் பார்ப்பது வெறும் வேலையல்ல, இந்தியாவின் முதுகெலும்பான கிராமவாசிகளை முன்னேற்றும் லட்சியப் பயணம் என்று அவருக்குத் தெரிந்தது. இனிமேல், அவர் நிகழ்காலமும், எதிர்காலமும் கிராம மக்கள்தாம். 
அப்போது பால் லிட்டர் இரண்டு ரூபாய்க்கு விற்றது. இதில் மாடு வளர்ப்போருக்குக் கிடைத்தது வெறும் இரண்டு அணா. குரியன் பால் வாங்குவோரிடம் போராடி விவசாயிகள் பெறும் வருமானத்தை அதிகமாக்கினார். மாடுகளின் கறவையை அதிகமாக்க, தீவனம், நோய்த் தடுப்பு ஆகியவை பற்றி ஆலோசனைகள், உதவிகள். விவசாயிகள் கூட்டம் கூட்டமாகக் கூட்டுறவுச் சங்கத்தில் இணைந்தார்கள். ஏராளமான பால் கொள்முதல். 

இந்த நாட்களில் நியூசிலாந்து, இந்தியாவுக்குப் பால் பவுடரை இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தது. மும்பையில் பாலோடு இந்தப் பவுடரைக் கலந்து விற்பனை செய்தார்கள். இது அரசாலும், ஆரோக்கியத் துறை ஆலோசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான். ஆனால், குரியனின் பாலுக்கான தேவை குறைந்தது. பால் வீணானது. 

பால் பவுடர் தயாரிக்கக் குரியன் விரும்பினார். ஆனந்தில் இருந்தவை எருமை மாடுகள். பசுமாட்டு பாலிலிருந்து மட்டுமே பவுடர் தயாரிக்க முடியும், கொழுப்புச் சத்து அதிகமான எருமை மாட்டுப் பாலிலிருந்து முடியாது என்று தொழில்நுட்ப மேதைகள் நினைத்தார்கள். ஆனால், குரியனின் சகாக்கள் இந்த ``முடியாததை” முடித்துக் காட்டினார்கள். பால் பவுடர், வெண்ணெய் ஆகியவை தயாராயின. அப்போது குழந்தைகள் உணவை, கிளாக்ஸோ, நெஸ்லே ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்தன. அமுல் குழந்தைகள் உணவை அறிமுகம் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் மறைந்தது. 

மார்க்கெட்டிங்கிலும் தான் ஜீனியஸ் என்று குரியன் நிரூபித்தார். ``அமுல்” என்னும் பிராண்ட் பிறந்தது. கவர்ச்சியான விளம்பர வாசகங்கள், மக்கள் மனதை கொள்ளைக் கொண்டன. விற்பனை நாளடைவில் அமோக வளர்ச்சி கண்டது. 

*********** 

1940 களில் மும்பை பால் ப்ளானுக்காக, ஆனந்தில் இருந்து பால் கொள்முதல் செய்யத் துவங்கியது தனியார் நிறுவனம் ஒன்று. ஆனால், விரைவில் பால் உற்பத்தி அதிகரிக்கவே, விவசாயிகளிடம் பால் மிகுந்து போனது. அவர்கள் ஒன்று சேர்ந்து, சர்தார் வல்லப் பாய் படேலிடம் சென்று முறையிட்டனர். அவர் உடனே தன் சீடர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் திரிபுவன் தாஸ் படேலிடம், ’இவர்களை ஒன்றிணைத்து, ஏதேனும் செய்து கொடு’ என்று ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு, அவர்கள் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஒன்று துவங்கி, பால் கொள் முதல் செய்து, மும்பை அனுப்பத் துவங்கினர். கொஞ்ச நாளில், திரிபுவன் தாஸ் படேல் இதை முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டு நடத்தினார். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்பதே சுருங்கி அமுல் என்றானது. 

ஆனால், பாலின் தரம், தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறுபட்டு, மிகச் சிரமங்களுக்கு உள்ளானது அமுல். அப்போது, அருகே அரசாங்க பால் க்ரீம் நிலையம் ஒன்று இருந்தது. அதில் வெளிநாட்டுக்கும் அரசு செலவில் படிக்கப் போய்த், திரும்ப வந்த ஒரு மலையாள வாலிபர் வேலையில் இருந்தார். அவருக்கு அங்கே சும்மாயிருக்கும் வேலை. அரசு செலவில் படிக்கச் சென்றதனால், மூன்றாண்டுகள் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றொரு ஒப்பந்தம் இருந்தது. 

பெரும்பாலும் சைவ உணவுப் பழக்கம் உள்ள குஜராத்தில் மாட்டுக் கறி சாப்பிடும் மலையாளக் கிறித்துவருக்கு வாடகை வீடு கிடைப்பது முதல் பல சங்கடங்கள் இருந்தன. வார இறுதிகளில், விடுமுறை நாட்களில் மும்பைக்கு ரயில் பிடித்துச் சென்று, தாஜ் ஹோட்டலில் தங்கி, வயிறார உண்டு, ஊர் சுற்றிச் செல்வார். எப்போதடா மூன்றாண்டுகள் முடியும் என்று காத்திருந்த காலத்தில் ஒரு நாள், அருகில் இருந்த விவசாயிகளின் கூட்டுறவுப் பால்பண்ணை நடத்தி வந்த திரிபுவன் தாஸ் படேல் அவரைச் சந்திக்க அழைத்தார். 

அவரும் திரிபுவன் தாஸ் படேலும், கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு நேரத்தில் சந்தித்தனர். 

தட்ப வெப்ப நிலை காரணமாக, பால் கெட்டுப் போகும் தன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டார் படேல். ப்ளேட் பாஸ்ட்யூரைஸர் என்னும் இயந்திரத்தைப் பரிந்துரைத்து, அந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் குரியன். பின்பு பேசிக் கொண்டிருக்கையில், தனது ஒப்பந்தம் முடிவதாகவும், விரைவில், ஆனந்தை விட்டுச் செல்வதாகவும் சொன்னார் குரியன். தன் உடைமைகளைப் பேக் பண்ணி வைத்துவிட்டிருந்தார் அப்போது. “ஆனந்துக்கு நீங்கள் தேவை, இருங்கள்” என்று அவரை இருக்கச் சொன்னார் படேல். அன்று தனது பயணத்திட்டத்தைக் கைவிட்டவர், இறுதி வரை ஆனந்தை விட்டு வெளியேறவில்லை.குரியன் என்னும் தொழில்நுட்ப வல்லமையும், மேலாண் திறனும் கொண்ட மாமனிதரின் மேலாண்மையில், மெல்ல மெல்ல, அமுல் ஒரு பெரும் நிறுவனமாகியது. 

••••••••••••• 

5. கெய்ரா பகுதியில், "பால்ஸன்' என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார். 

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்துப் பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்குப் பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்குத் தீவிரமாக முயன்றார். 

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகைப் பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த "கிளாங்கோ', "ஆஸ்டர் மில்க்' போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் "குழந்தை உணவுப் பவுடர்கள்' இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன. 

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது. 

••••••••••••• 

 இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை. 

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது. 

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது. 

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது. 

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான "பிராண்டு' பெயர்களில் "அமுல்' ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று "குரியன் மாடலை'ப் பின்பற்றுகின்றன. 

குரியன் அடிக்கடி கூறி வந்தார். ""நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!'' கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! 

************* 

6. 1964. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார். கிராமங்களின் முன்னேற்றம் கண்டு பிரமித்தார். இதே புரட்சியை நாடு முழுக்க நடத்திக் காட்டுமாறு குரியனைக் கேட்டுக்கொண்டார். இதற்காக, 1965 இல் குரியன் தலைமையில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) என்னும் அமைப்பை மத்திய அரசாங்கம் உருவாக்கியது. Operation Flood என்னும் பெயரில் குரியன் பால் உற்பத்தியை உபரியாக்கும் கனவைத் தொடங்கினார். தன் செயல்பாடுகளை இந்தியா முழுக்க விரிவாக்கினார். 

1997. உலகில் அதிகமான பால் உற்பத்தி செய்த நாடு இந்தியா! 

50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது. இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தகப் பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அமுல் பிராண்ட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு பால் பண்ணைகள் இன்று ரூ. 10,000 கோடி என்ற அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. பால், வெண்ணெய், நெய், தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரீம், சாக்லேட் உள்படப் பல பொருட்களை அமுல் தயாரிக்கிறது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் 30 லட்சம் விவசாயிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது அமுல்.

அமுல் பிராண்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பால் உற்பத்தி மாடல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின், நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல பிராண்டுகள் நடைமுறைக்கு வந்தன. 

மீதி அடுத்த பதிவில்






Wednesday, January 09, 2019

இவர் (தான்) நம் கடவுள்



முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) 

கடந்த பதினைந்து வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவற்றால் இன்று இந்தியாவில் எல்லோரது கைகளிலும் செல்பேசி. போகுமிடங்கும் மக்கள் செல்பேசியில் பேசிக்கொண்டே செல்கிறார்கள் அல்லது SMS அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ! இன்று இந்தியாவில் உள்ள செல்பேசிகளின் எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட 60 கோடி. 

ஆனால்.. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை (Telecommunications infrastructure) காயாலன் கடைக்கு ஒப்பிடலாம். ஒருவர் வீட்டில் கருப்பு கலரில் ஒரு தொலைபேசி இருந்தால் அவர் மிகப் பெரிய பணக்காரர் அல்லது பெரிய அரசு அதிகாரி. அந்த தொலைபேசியில் பெரும்பாலும் டயல் டோனுக்கு பதில் “கொர்” என்ற சத்தம்தான் வரும் அல்லது வேலை செய்யாது. நீண்ட தூர (STD/ISD) அழைப்பு வசதிகள் கிடையாது. வெளி ஊர்கள் மற்றும் வெளி நாடுகளுக்குப் பேச வேண்டுமானால் டிரங் கால் (Trunk Call) பதிவு செய்து விட்டு மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். 97% சதவீத கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கிடையாது. இப்படி இருந்த இந்திய தொலைபேசித்துறையை 1984-ஆம் ஆண்டு சி-டாட், C-DOT (Centre for Development Telematics) என்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி திரும்பிய பக்கமெல்லாம் PCO (Public Calling Office) எனப்படும் பொது தொலைபேசி நிலையங்கள் அமைத்து, கிராமங்களில் தொலைபேசி இணைப்பங்களை நிறுவி தொலைபேசியை சாமன்ய மக்கள்களும் உபயோகிக்கும் சேவையாக மாற்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் சாம் பிட்ரோடா. எல்லோராலும் டாக்டர்.சாம் என்று அன்போடு அழைக்கப்படுபவர். 

சாம் பிட்ரோடா, 1942 ஆம் ஆண்டு மே 4ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள டிட்டலார்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் குஜராத் மாநிலத்திலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு குடி பெயர்ந்து வந்த ஓர் தச்சு ஆசாரி (carpenter). அவர் நடத்தி வந்த கடையில் வந்த வருமானத்தில் தன்னுடைய 8 குழந்தைகளையும் பள்ளியில் படிக்க வைத்தார். சாம் 11 வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 22 வயதில் மாகாராஸ்டிரா சாய்ராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் (Physics) முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அவரது தந்தை கொடுத்த $400 டாலர் பணத்துடன் 1964 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் உள்ள Illinois Institute of Technology கல்லூரியில் மின்சாரத்துறை முதுகலை (M.S in Electrical Engineering) பட்டப்படிப்பில் சேர்ந்தார். எல்லா இந்திய மாணவர்களைப்போலப் பகுதி நேர வேலை பார்த்து அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு படிப்பை முடித்தார். சிகாகோவில் உள்ள GTE என்ற நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து 1974 ஆம் ஆண்டு வரை GTE நிறுவனத்தில் எண்ணியல் மின்விசையமைப்பு (Digital Switching) என்ற துறையில் ஆராய்ச்சி பொறியாளராக பணியாற்றினார். 

அவர் கண்டுபிடித்த ஆராச்சிகளுக்காக வாங்கிய வடிவமைப்புகள் (Patents) முப்பதுக்கும் மேல். இந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க குடியுரிமையும் (US Citizenship) பெற்று தனது பெரும்பாலான சகோதர சகோதரிகளையும், பெற்றோர்களையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு விட்டார். 

சாம் தனது தந்தையாரின் அறிவுரையின்படி 1974 ஆம் ஆண்டு இரண்டு அமெரிக்க நண்பர்கள் கொடுத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு வெஸ்காம் ஸ்விட்சிங் (Wescom Switching, Inc) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 20 வடிவமைப்புகளை (Patents) கண்டுபிடித்து, ஆறு ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்தை ராக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்திடம் விற்றதின் மூலம் அவருக்குக் கிடைத்த பணம் $4 மில்லியன் டாலர்கள். டாக்டர்.சாம் 38 வயதில் ஒரு அமெரிக்க கனவு சுயமுனைப்பு கோடிஸ்வரர் (American dream self-made millionaire). 

1981 ஆம் ஆண்டு சாம் விடுமுறைக்காக இந்தியா வந்து ஒரிஸ்ஸாவில் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றிற்கும் வேளையில் அங்கிருந்து ஒரு முக்கியமான காரணத்திற்காக அமெரிக்காவிற்கு தொலைபேச வேண்டிய நிலைமை. ஆனால்.. அந்தக் கிராமத்திலிருந்து அவரால் தொலைபேச முடியவில்லை. விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பி வந்தவுடன் மனமெல்லாம் இந்தியாவைப்பற்றித்தான். அவருக்கே தன்னைப்பற்றி ஒரு குற்றவுணர்வு. 38 வயதில் தொலைத்தொடர்பு துறையில் 50க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை (Patents) கண்டு பிடித்து கோடிஸ்வரனாக ஆகிவிட்டேன். 

ஆனால்.. என் தாய்நாட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய தொலைபேசி கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்திய தொலைபேசித்துறை மேல்நாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளை (Mechanical Switches) கோடிக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு பற்றி எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான DOT (Department of Telecommunications)யிடம் இல்லை. இந்த நிலைய மாற்ற வேண்டும் மனதில் ஒரு உறுதி எடுக்கிறார். 

****** 

சாம் சிகாகோ நகரிலிருந்து இந்திய தொலைபேசித்துறை (DOT-Department of Telecommunications) நிறுவனத்தின் தலைவர் அவர்களுக்கு தன்னைப்பற்றியும், இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்புக்குச் செய்ய வேண்டிய செயல் திறன்கள் பற்றி ஒர் கடிதம் எழுதினார். ஆனால்.. அந்தக் கடிதத்திற்கு எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதே கதைதான்.... நோ பதில். தனது முயற்சியில் சளைக்காமல் மூன்றாவது கடிதம் எழுதினார். மூன்றாவது கடிதத்திற்கு DOT தலைவரிடமிருந்து பதில் வந்தது. அதில் தன்னை டில்லியில் வந்து நேரில் பார்க்குமாறு எழுதியிருந்தார். இதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஏழு மாதங்கள்! 

சாம் உடனே சிகாகோவிலிருந்து கிளம்பி டில்லி வந்து DOT தலைவரைப் பார்த்து தனது செயல் திட்டங்களை விளக்கிக் கூறினார். அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த DOT தலைவர், உங்கள் திட்டங்கள் அருமையானவை. ஆனால் அதற்கு நிறையச் செலவுகள் ஆகும். நிறையக் கொள்கை அளவிலான மாற்றங்கள் (Policy Changes) தேவை. அதற்கான அதிகாரம் எனக்கும் கிடையாது, தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் கிடையாது என்றார். 

“அப்படியென்றால் அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது?” என்று கேட்டார் சாம். 

“பிரதமர்” 

“நான் பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்றார் சாம். 

இதைக்கேட்டு ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார் DOT தலைவர். 

என்னடா இவன் தொடர்ந்து லெட்டர் எழுதி இம்சை கொடுக்கிறானேன்னு கூப்பிட்டு பேசுனா, சர்வ சாதாரணமா பிரதமரிடம் அழைத்துக்கொண்டு போன்னு சொல்றான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால 39 வயது சாமின் இளமை, அவருடைய சாதனைகள், அவருடைய கண்களில் இருந்த ஒரு வெறி ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட DOT தலைவர் என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் உடனே முடியாது, பல நாட்கள் ஆகலாம் என்கிறார்.

 ”பரவாயில்லை நான் ஒரு மாதம் வரை டில்லியில் தங்கும் திட்டத்தோடுதான் வந்துள்ளேன். வெயிட் செய்கிறேன்” என்றார் சாம். 

DOT தலைவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சாமிற்கு இரண்டு வாரங்கள் கழித்து பிரமதர் இந்திரா காந்தியிடம் பேசுவதற்கு 10 நிமிடங்கள் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொடுத்தார். 

ஆனால் சாம் எனக்கு 10 நிடங்கள் போதாது. 10 நிமிடங்களில் ஒன்றும் தெளிவாக எடுத்துக் கூற முடியாது. ஒரு மணி நேரம் வேண்டும் என்றார்.

என்னடா இவனோடு ஒரே தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டே பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதமர் அலுவலகம் முடியாது என்று கூறிவிட்டது.

 சாம் DOT தலைவருக்கு மிக்க நன்றி கூறிவிட்டு, பிரதமரிடம் ஒரு மணி நேரம் அப்பாயின்மெண்ட் கிடைக்கும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள் நான் திரும்பி வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு சிகாகோ திரும்பி வந்துவிட்டார். 

பிரதமரிடம் கிடைத்த 10 நிமிட அப்பாயின்மெண்டை வேண்டாமென்று கூறி திரும்பிச் சென்ற சாமின் உறுதி DOT தலைவருக்கு அவரின் மேல் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தனது நண்பர்களின் உதவியுடன் சாமைப்பற்றியும் அவருடைய செயல் திட்டங்கள் பற்றியும் அப்போது தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்ட பைலட்டாகா பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியிடம் கொண்டு சேர்த்தார். 

ராஜீவ் காந்தி சாமைப் பற்றி விபரங்களைச் சேகரித்து கொடுக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், RAW-விடம் கேட்டிருக்கிறார் (Background and Security checks) 

சாம் டில்லியிலிருந்து சிகாகோ திரும்பி ஆறு மாதங்களாகியும் DOT தலைவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் ராக்வெல் (Rockwell) நிறுவனத்தில் அவருடைய துணைத் தலைவர் (Vice President) வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாமிற்கு பிரதமர் அலுவகத்திலிருந்து அவருக்குப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு மணி நேர அப்பாமெண்ட் பற்றிய தகவல் வருகிறது. 

பிரதமர் அலுவகத்திற்கு தனது வருகையை உறுதி செய்து தகவல் அனுப்பிவிட்டு பிரதமருடனான சந்திற்பிக்கு தேவையான பிரசண்டேசன் சிலைடுகள் (Presentation slides) தாயார் செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார். 

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லிக்கு வந்து பிரதமரை சந்திக்க சென்றார். அங்குப் போனால் பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பக்கத்தில் ராஜீவ் காந்தி மற்றும் காபினெட் மந்திரிகள் அந்த கான்பரன்ஸ் அறையில். தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்பின் அவசியம், அதற்கான தொலைநோக்கு திட்டம் பற்றிய தனது பேச்சை தொடர்ந்தார். இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களிடமிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளித்து விளக்குகிறார். அவர் அளித்த தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. இந்தியாவின் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தில் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை (Digital Switches) தயாரிக்க வேண்டும். 

2. இந்திய தொலைப்பேசித்துறை காலாவதியான தொழில்நுட்ப இயந்திரவியல் நிலைமாற்றிகளை (Mechanical Switches) இனிமேல் வாங்கக்கூடாது 

3. இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்ப எண்ணியல் மின்நிலைமாற்றிகள் சந்தைக்கு வரும்வரையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பெரு நகரங்களின் தேவைக்கு மேல் நாட்டு நிறுவனங்களிலிருந்து விலை அதிகமானாலும் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை வாங்க வேண்டும் 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

கூட்டம் முடிந்தவுடன் ராஜீவ் காந்தி வந்து சாமின் கைகளைக் குலுக்கி, கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இந்த சந்திக்க நான்தான் ஏற்பாடு செய்தேன் என்கிறார். தன் வயதுடைய இளைஞரான ராஜீவ் காந்தியை நன்றியுடன் பார்க்கிறார் சாம் (ராஜீவ் சாமைவிட இரண்டு வயது இளையவர்). ஒரு ஆழமான நட்பின் தொடக்கம்.......!! 

********** 

ராஜீவ் காந்தியுடனான அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சாமும் ராஜீவும் அடுத்த சில நாட்களில் பல முறை சந்தித்துப் பேசி நெருங்கிய நண்பர்களானார்கள். பிரதமர் இந்திரா காந்தியுடன் நடந்த சந்திப்பு முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய மந்திரிசபை சாம் தலைமையில் இந்திய தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிலையத்தை (C-DOT, Centre for Development of Telematics) அமைக்க 50 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 

1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் C-DOT டில்லியில் தொடங்கப் பட்டது. சாம் பிரதமர் இந்திரா காந்தியிடம் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளித்தார். 

C-DOT தொடங்கி மூன்று வருடத்திற்குள் 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (128 Lines Rural Automatic Exchange) உற்பத்தி செய்து விடுவோம். 

ஐந்து வருடத்திற்குள் நகரங்களுக்குத் தேவையான 10,000 தொலைபேசி இணைப்புகள் கொண்ட எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (10,000 Lines Multi Base Module Digital Exchange) உற்பத்தி செய்து விடுவோம். 

சாமின் பெற்றோர்கள் சிகாகோவில் சாமுடன் செட்டிலாகிவிட்டார்கள். சாமின் குழந்தைகள் சிகாகோவில் படித்துக் கொண்டிருந்தார்கள். எனவே சாமின் குடும்பம் சிகாகோவிலிருக்க சாம் மட்டும் டில்லிக்கு வந்து C-DOT பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனக்கு அளிக்கப்பட்ட ஒரு காரியதரிசியுடன் சாம் 1984 ஆகஸ்ட் மாதம் C-DOTன் பணிகளைத் தொடங்கினார். சாம் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அரசாங்க நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என்ற விதிமுறையின்படி சாம் பெற்றுக்கொண்ட சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய். 

இந்தியாவில் உள்ள அனைத்து I.I.T (Indian Institute of Technology) மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூக்குச் சென்று மாணவர்களிடம் உரையாற்றினார். சாமின் உத்வேக உணர்ச்சி மிகுந்த பேச்சைக்கேட்ட மாணவர்கள் C-DOTல் சேர முன் வந்தனர். இதில் பாதி பேர் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்புக்காக செல்லவிருந்தவர்கள்! ஒரே மாதத்தில் 50 சிறந்த இளம் பொறியிலாளர்களைச் தேர்வு செய்தார் சாம். இப்படி இரவு பகலாக உழைத்து C-DOTஐ உருவாக்கிக் கொண்டிருக்கும்போது இடியென வந்து தாக்கியது அக்டோபர் மாதத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கொலை! ஆனால் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி! சாமின் நெருங்கிய தோழர். ராஜீவ் பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதம் கழித்து சாமிடம் சொன்னது “நம்முடைய தொலை நோக்கு திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. எவ்வளவு செலவானும் பரவாயில்லை. நான் துணை நிற்பேன். உங்கள் பயணத்தை தொடருங்கள்”. 

மேல் அதிகாரிகளுக்குச் சார் போடுதல், கூழைக் கும்பிடு போடுதல் போன்ற நிர்வாகத்தால் புரையோடிக் கிடக்கும் அரசாங்க அலுவலகங்கள் உள்ள இந்தியாவில் முதன் முதலில் C-DOT என்ற அரசாங்க நிறுவனத்தில் ”திறந்த பண்பாடு (Open Culture)” என்ற அமெரிக்க பாணி வேலை பார்க்கும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர் சாம். அதன்படி யாரும் சார் போடுதல் கூடாது, எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மேல் அதிகாரிகளைப் பார்த்து பாரும் எழுந்து நிற்கக் கூடாது, பயப்படாமல் தைரியமாக மீட்டிங்கில் பேச வேண்டும், தேவையென்றால் சாமை எதிர்த்துப் பேசி கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் ஒரு சில உதாரணங்கள். 

மத்திய அரசாங்க நிறுவனங்களுக்குச் சம்பள அடிப்படை உள்ளதால் C-DOT பொறியிலாளர்களுக்கு அதற்கு மேல் கொடுக்க முடியாது என்ற காரணத்தால் சாம் பிற சலுகைகளை அள்ளிக்கொடுத்தார். அவற்றில் ஒரு சில: 

1. C-DOT செலவில் வசிக்க வீடு (C-DOT leased accommodation) 

2. வீட்டிலிருந்து அலுவலகம் போய் வர கார் 

3. 365 X 24 கேண்டினில் இலவச சாப்பாடு 

4. விளையாடி ரிலாக்ஸ் செய்ய இண்டோர் விளையாட்டு அரங்கம் 

5. அலுவலக பயணத்திற்கு விமானப் பயணம். அந்தக் கால கட்டத்தில் I.A.S அதிகாரிகளுக்குக் கூட விமானப் பயணம் கிடையாது. முதல் வகுப்பு ரயில் டிக்கெட்தான். முக்கியமான மூத்த I.A.S அதிகாரிகள்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும்.. 

அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த தனியார் நிறுவனங்களில் கூட இளம் இஞ்சீனியர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடையாது! இந்த சலுகைகள் மற்றும் சாமின் வழிகாட்டுதலில் C-DOT இளம் பொறியாளர்கள் வேலை, வேலை, வேலை என்று ஒருவித வெறியோடு கடுமையாக உழைத்தார்கள். வேலை, சாப்பாடு மற்றும் விளையாட்டு என்று ஒரு கல்லூரி விடுதி போலத்தான் இருக்கும் C-DOT அலுவலகம். சாமுடைய குடும்பம் சிகாகோவிலிருந்ததால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சாம் அலுவகத்தில்தான் இருப்பார். இளைஞர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தல், டேபிள் டென்னிஸ் விளையாடுதல், முதுகில் தட்டிக்கொடுத்து வேலை வாங்குதல் என்று ஒரு சக நண்பன், சகோதரன்போல் பழகுவார். C-DOT தலைவர் என்று ஒரு சிறிய பந்தாகூட இருக்காது. 

சாம் மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்குறுதிப்படி 1987ஆம் ஆண்டு C-DOTன் சொந்த தொழில்நுட்பத்தில் உருவான 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தானியங்கி கிராமப்புற இணைப்பகம் தாயார்!. இந்த சமயத்தில் C-DOTன் பொறியியலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 பேர். சராசரி வயது 25! டில்லி, பெங்களூர் என்ற இரு இடங்களில் அலுவலகங்கள். 

இந்தியாவின் பிரதமரும், தன்னுடைய நண்பருமான ராஜீவ் காந்தி முன்னிலையில் 128 இணைப்புகள் கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் (128 RAX – Rural Automatic Exchange) வழியாக 1987 ஆம் ஆண்டு தொலைபேசி இந்திய தொலைபேசித்துறை வரலாற்றில் சாதனை நிகழ்த்திக் காட்டினார். 

இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. உறுதியான வடிவமைபு (Rugged Design); குறைந்த மின்சாரத்தில் இயங்குவது (Less power consumption). கிராமங்களில் மின்சாரத் தடைகள் இருக்கும் என்பதால் A/C இல்லாமலேயே வேலை செய்யும். 

2. உலகிலேயே கிராமங்களுக்காக குறைந்த (128 Lines) தொலைபேசி இனணப்புகள் கொண்ட மிகச் சிறிய முதல் தானியங்கி எண்ணியல் நிலைமாற்றி இணைப்பகம் (Digital Automatic Exchange) 

3. பல வடிமைப்புகள் (Patents) கொண்டது 

அடுத்து செய்ய வேண்டியது, இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தை இந்திய தொலைபேசி கட்டமைப்பில் சோதனை செய்து (Field Trial) , அதிக அளவில் உற்பத்தி செய்வது (Mass Production). ஆனால் அதற்கு காத்திருந்தன இந்திய அரசாங்க ஊழல் அதிகாரிகளின் எதிர்ப்புகள். அந்த எதிர்ப்புகளை சாம் எப்படிச் சமாளித்தார்?

 ******** 

தொலைபேசித்துறை (DOT) உயர் அதிகாரிகள் மேல் நாட்டு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்கிக்கொண்டிருந்தார்கள். C-DOT மற்ற அரசாங்க நிறுவனங்களைப் போல் சொன்ன நேரத்தில் எதையும் முடிக்க மாட்டார்கள், கொஞ்ச நாட்களில் மூடி விடுவார்கள் என்று நினைந்திருந்தார்கள். 

ஆனால், சாம் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக 128 Lines RAX உற்பத்தி செய்து காட்டியபோது மிரண்டு விட்டார்கள். காரணம்... C-DOT மிடமிருந்து எண்ணியல் விசைமாற்றிகளை தொலைபேசித்துறை வாங்கினால் அவர்களுக்கு லஞ்சம் கிடைக்காது! எனவே C-DOT 128 Lines RAX இணைப்பகத்தை தொலைபேசித்துறை கட்டமைப்பில் சோதனை செய்ய (Filed Trial) தாமதப்படுத்துதல், தேவையானவற்றை செய்து கொடுக்காமல் இழுத்தடித்தல் போன்ற பல தொல்லைகளை C-DOTக்கும் சாம் அவர்களுக்கும் தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கொடுத்தார்கள். 

சந்தையில் போட்டித்தன்மை இருந்தால்தான் எண்ணியல் விசைமாற்றிகளின் விலை குறைவு, சந்தை ஆற்றல் (Market Efficiency) ஆகியவை மேம்படும் என்று சாம் யோசித்து C-DOT-ன் எண்ணியில் விசைமாற்றிகளை பொதுத்துறை மற்றும் L&T, WS Industries போன்ற தனியார் நிறுவனங்களுக்கு C-DOT தொழில்நுட்பத்தை ராயல்டி (Royalty) அடிப்படையில் விற்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 ITI (India Telephone Industries) எனப்படும் பெங்களூரில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்திடம்தான் C-DOT தனது எண்ணியல் விசைமாற்றி தொழில்நுட்பத்தைக் கொடுக்க வேண்டும். ITI மட்டும்தான் C-DOT எண்ணியல் விசைமாற்றிகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ITI பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற ஒரு ஆற்றலற்ற (Inefficient) நிறுவனம். ITI-யிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்பது தொலைபேசித்துறை உயர் அதிகாரிகளின் கணக்கு (என்னா... ஒரு வில்லத்தனம்!). ஆனால் சாம் ஒரு போதும் முடியாது என்று கூறிவிட்டார். 

தொலைபேசித்துறை அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளை ராஜீவ் காந்தியிடம் எடுத்துக் கூறினார் சாம். அதற்கான தீர்வு என்ன என்று ராஜீவ் சாமிடம் கேட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி சார்ந்த நிறுவனங்களான DOT (Department of Telecommunications), TEC (Telecommunication Engineering Centre), C-DOT (Centre for Development of Telematics), ITI (Indian Telephone Industries) ஆகியவற்றையெல்லாம் Telecom commission எனற ஒரு அமைப்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். 

உடனே ராஜீவ அப்படியே செய்து விடலாம்... நீங்களே Telecom commission தலைவர் ஆகி விடுங்கள் என்றார். மேலும் ராஜீவ் ”நீங்கள் அமெரிக்க குடிமகன் (American Citizen), இதற்கு மந்திரிசபையில் பலத்த எதிர்ப்பு இருக்கும். நீங்கள் அமெரிக்க குடியுரிமையை கொடுத்து விடுங்கள். உங்களுக்கு காபினெட் மந்திரி அந்தஸ்தில் Scientific Advisor to Prime Minister என்ற பதவி கொடுக்கிறேன்” என்றார். அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பைச் சமாளித்து தனது செயல் திட்டங்களைச் செயல்படுத்த ராஜீவ் சொல்வதுதான் சரியான வழி என்று முடிவு செய்து 1987 ஆம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கொடுத்துவிட்டு பிரதமரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) மற்றும் தொலைபேசித்துறை குழு (Telecom Commission) தலைவர் என்ற பதவிகளை ஏற்றுக்கொண்டார். சாமின் மனைவியும், குழந்தைகளும் டில்லிக்கு வந்து .சேர்ந்தார்கள்.

அதிகாரமுள்ள இரண்டு பதவிகள் சாமிடம் இருந்ததால் அரசாங்க அதிகாரிகளின் தடைகளை தவிடுபொடியாக்கிவிட்டு முன்னேறினார். 

தடை போட்ட உயர் தொலைபேசித்துறை அதிகாரிகளைப் பெண்டு நிமித்தினார். சாம் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் என்பதால் எல்லா மந்திரிகளும், தலைவர்களும் சாமிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். சாம் தனது திட்டப்படியே C-DOT எண்ணியல் விசைமாற்றிகள் மற்றும் தொலைபேசி அனுப்புதல் (Telecom transmission) உபகரணங்கள் தயாரிக்கும் உரிமைகளை ராயல்டி அடிப்படையில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கினார். 

128 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் தொலைபேசித்துறை கட்டமைப்பில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 256 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகமும் தயாராகி சோதனை செய்யப்பட்டது. 40 நிறுவனங்கள் இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தியாவில் உள்ள கிராமங்கள்தோறும் கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. 

1988 ஆம் ஆண்டில் சிறிய நகரத்துக்கான 512 Lines SBM (Single Base Module) தொலைபேசி இணைப்பகம் ரெடி. பெரிய நகரத்துக்கான 10,000 lines தொலைபேசி இணைப்பகம் குறித்த 5 ஆண்டுகளில் முழுவதுமாக தாயார் ஆகவில்லை. ஆனால் அதன் நகல் (Prototype) தாயாராக இருந்தது. 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள அல்சூர் (Ulsoor) தொலைபேசி இணைப்பகத்தில் C-DOT-ன் 10,000 Lines தொலைபேசி இணைப்பகதின் சோதனை (Field Trial) தொடங்கியது. இதன் சிறப்பு என்னவென்றால் 1000 தொலைபேசி இணைப்புகள் தொடங்கி தேவைக்கேற்ப Base Module-களை இணைத்து 10,000 இணைப்புகள் வரை கொண்டு செல்லலாம். 

இந்தக் காலகட்டத்தில் டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மேல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணியில் நிலைமாற்றிகள் வாங்கி தொலைபேசித்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் STD/ISD தொலைதூர சேவைகள் தொடங்கப்பட்டன. நகரங்களில் PCO (Public Calling Office) எனப்படும் மஞ்சள் நிற பொது தொலைபேசி நிலையங்கள் அமைக்கப்பட்டன. PCO அமைக்க ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. வருமானத்தில் PCO உரிமையாளர்களுக்கு 20% கமிசன் கொடுக்கப்பட்டது. 

இவ்வாறாக சாமின் திட்டங்கள், கனவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருக்காது. தோல்விகள், சோதனைகள் எல்லோருக்கும் வரும். அது கடவுளின் நியதி.... Law of Average! 1989 ஆம் ஆண்டில் சாமிற்கு மிகப் பெரிய சோதனை வந்தது. அதன்பின் ஏற்பட்ட தொல்லைகள், மன அழுத்தங்களால் சாமின் 48 வயதில் 1990 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)..... ஏன்? 

********* 

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. வி.பி.சிங் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றியது. கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருக்ஷ்ணன் தொலைத் தொடர்பு மந்திரியானார். சாம் தனது அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொலைத் தொடர்பு குழு தலைவர் அரசியல் சாராத பதவி (Non political appointment) என்பதால் இந்தப் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. தான் தொடங்கிய திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். 

சாம் அவர்கள் ராஜீவின் நண்பர் என்பதை மனதில் கொண்டு தொலைத் தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் சாமிற்கு பல தொல்லைகள் கொடுத்தார். ஆனால் சாம் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தனது திட்டங்களைத் தொடர்ந்து செயல் படுத்தும் வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பல மாதங்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தும் தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்யாமல் வேலை பார்க்கும் சாமை பார்த்து கோபம் கொண்டு சாம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விசாரணைக் கமிசன் அமைத்தார் உன்னிகிருக்ஷ்ணன். 

இதை சாம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. கோடிக் கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்கக்கூடிய வேலையை விட்டு விட்டு இந்தியாவிற்குத் திரும்பி வந்து ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இரவு பகலாக தாய்நாட்டிற்கு உழைத்த என் மீதா ஊழல் குற்றச்சாட்டு என்று வேதனையில் துடித்தார் சாம். இதன் பலன் 1990 ஆம் ஆண்டில் தனது 48 வயதில் சாமிற்கு பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)

இந்தியா முழுவதும் உள்ள விங்ஞானிகள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு பொறியிலாளர்கள் கொதித்துப் போய் அரசங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமிற்கு நான்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா கூறி தொலைத்தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் அரசாங்கம் ஆட்சியை இழந்தது. சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவில் பிரதமரானர். பை பாஸ் அறுவை சிகிச்சை முடிந்து பல மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொலைத் தொடர்பு குழு தலைவர் பணிக்குத் திரும்பினார். 

ஆனால் 1991 ஆம் ஆண்டு மே மாதம் தனது உற்ற தோழன் ராஜீவ் காந்தி கொலையால் சாம் மிகவும் மனமொடிந்து போய்விட்டார். நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ராஜேக்ஷ் பைலட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு 1991 ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்துடன் சிகாகோவிற்கு திரும்பிச் சென்று விட்டார் சாம். 

சிகாகோவிற்கு திரும்பி வந்தபிறகு சில காலம் ஓய்வெடுத்து விட்டு C-SAM, Inc என்ற நிறுவனத்தை தொடங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்திய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்து அதன் தலைவராக சாம் அவர்களை தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அறிவுசார் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி 300-க்குக் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் அறிவியல் ஆலோசராக (Scientific Advisor to Prime Minister) ஆக பணியாற்றி வருகிறார். 

இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு சாம் அவர்களுக்கு “பத்மபூசன்” விருது வழங்கி கவுரவித்தது. 

••••••••••••••••••

கட்டுரையை எழுதியவர் என் நெருங்கிய நண்பர் ரவி.  வெட்டிக்காடு என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இன்று தொலைதொடர்பு சார்ந்த சர்வதேச நிறுவனத்தில் இயக்குநராக சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார். இந்தக் கட்டுரை மொழிமாற்றம் செய்யப்பட்டது அல்ல. இவர் தனது சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுதப்பட்டது. ஐந்து பகுதிகளாக வெளியிட்டு இருந்தார்.  நான் செம்மைபடுத்தி ஒரே பகுதியாக மாற்றியுள்ளேன்.

1. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாம் அவர்கள் தொலைத் தொடர்பு குழு தலைவராக பணியாற்றிய போது அவரது அலுவகத்தில் புது கணினியை நிறுவி Novell LAN கணினி கட்டமைப்பில் இணைத்து சாம் அவர்களுக்கு Novell LAN கணினி கட்டமைப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த 22 வயது சிறியவன் விளக்கியிருக்கிறேன். சாம் அவர்களுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பிரமிப்புகளுக்கு தனி பதிவு தேவைப்படும். சாம் அவர்கள் தொடங்கிய C-DOT நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணி C-DOT-க்கு விண்ணப்பம் செய்து தேர்வாகி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் C-DOT, Bangalore-ல் சேர்ந்தேன். 

2. இந்திய தொலைத் தொடர்பு கட்டமைப்புக்கு வெவ்வேறு கால கட்டத்தில் ஒரு துளி பங்காற்றியிருக்கிறேன் 

1992-1992 ஆம் ஆண்டுகளில் C-DOT-ல் பணியாற்றியபோது C-DOT முதல் 10,000 தொலைபேசி இணைப்புகள் இணைப்பகம் சோதனையில் (Field Trial) பணியாற்றியது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல C-DOT எண்ணியல் 500-2000 Lines தொலைபேசி இணைப்பகங்களை நிறுவியிருக்கிறேன் 

1998 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கட்டணம் இல்லா (Toll Free ) தொலைபேசி சேவையை அறிமுகப் படுத்திய புராஜக்டில் C-DOT-டோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன் 

2006-2007 ஆம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் Voice Over IP கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் நானும் ஒருவன் (Architect) 
2008 ஆம் ஆண்டு முதல் BSNL, MTNL, Reliance Communications, Bharti AirTel போன்ற நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை கட்டமைப்பு (Next Generation Networks) என்ற தொழில் நுட்பத்திற்கு ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறேன்.