Saturday, February 16, 2019

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் 

(வெற்றியின் ரகசியங்கள்) 

ஆங்கிலத்தில் எழுதியவர் , மால்கம் கிளேட்வெல் 

அற்புதமான தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் சித்தார்த்தன் சுந்தரம். 

விகடன் வெளியீடு. 

கடந்த ஆறேழு மாதங்களாக வார இதழ்கள் வாசிப்பை முழுமையாகவே நிறுத்தி விட்டேன். வேறு வழியே இல்லாமல் திருப்பூருக்குள் நடக்கும் உள்ளுர் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி பத்திரிக்கைகள் வாசித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மற்றபடி செய்திகளை அறிந்து கொள்ள அவ்வப்போது இணையத்தின் மூலம் தெரிந்து கொள்கிறேன். 

தமிழில் அக்கிரமம் என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு இப்போது எனக்குத் தெரிந்து முதன்மையான இடத்தில் இருப்பது ஊடகத்துறை. 

தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைத் துறை என்று பாரபட்சமில்லாமல் இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றது. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் பலவிதமான எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வாட்ஸ்அப் என்பது நம்பகத்தன்மை இல்லாத புரளிகளை அடிப்படையாக் கொண்டு அலைபேசி என்ற சின்னதிரை வழியாக உங்களை வந்து அடைவது. 

அதுவே பெரிய திரை என்றால் தற்போதைய தொலைக்காட்சி. 

ஒரு மணி நேரம் முழுமையாக ஒரு தொலைக்காட்சியை நீங்கள் பார்க்க நேரிட்டால் உங்களுக்கு இல்லாத நோய்கள் உங்களுக்குள் வந்து விட்டது போலப் பிரமை உருவாகும். கட்சி, மதம், சாதி என்ற ஆதரவில் தங்கள் லாபவேட்டைக்கு மனிதர்களை விலங்குகள் போலவே மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 

முழுமையாகப் புறக்கணிக்க முடியாது என்றாலும் நாம் இவற்றைப் புறக்கணித்தால் நம் வாழ்க்கை ஒன்று மாறிப்போய் விடாது என்பதனை சமீப கால அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். 

தற்போதைய ஊடகங்கள் அவரவர் வாழ்க்கையில் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைகளைச் சீர்குலைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பது முற்றிலும் உண்மை. 

பொதுவாகப் போட்டிகள் அதிகமாகும் போது தனிப்பட்ட மனிதர்களும், நிறுவனங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தங்கள் திறமையை அதிகபட்சமாக வெளிக்காட்டி தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்பதே உலக நியதி. ஆனால் குறுக்குவழிகளில் செல்வது என்பது மற்றொரு வழி. இரண்டாவது வழியைத்தான் பெரும்பாலான தற்போதைய பத்திரிக்கைகள் (ஊடகத்துறை) கடைபிடிக்கின்றன. போட்டிகள் அதிகமானதால் எது செய்தி? எது செய்தியில்லை என்ற பாரபட்சமின்றிக் கலந்து கட்டிக் கொடுக்கின்றார்கள். 

மனசாட்சி என்பதே இல்லாமல் துணுக்குச் செய்திகளை, பத்துப் பைசாவிற்கு மதிக்க முடியாத நிகழ்வுகளை , சுயநல அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் பயமுறுத்தும் இசையுடன் உங்கள் வீட்டுக்குள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. பத்திரிக்கை உலகத்திற்கென்று லாபம் என்பதற்கு அப்பாற்பட்டு சில தனியான கொள்கைகள் இருந்தன. ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் சில குறிப்பிட்ட நபர்களின் வழிகாட்டலின்படி நடந்தது. ஆனால் தற்போது எவ்வித முன் அனுபவமின்றிக் கத்துக்குட்டிகளை வைத்து, ஒப்பந்த அடிப்படையில் லாபம் என்பதனை மட்டுமே குறியாகச் செயல்படும் பத்திரிக்கை உலகத்தை இனி நாம் பேசத் தேவையில்லை. 

புறக்கணிப்பது தான் சிறந்த வழி என்ற நோக்கத்தில் புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். 

பொருட்களின் தரத்தை விட அந்தப் பொருளுக்குச் செய்யப்படும் விளம்பரமே முக்கியம் என்ற நிலையில் சமூகத்தை ஊடகத்துறை மாற்றியுள்ளனர். இதன் மூலம் மட்டுமே மக்களின் மனதை மாற்ற முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இப்போது ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொரு துறையிலும் தெளிவான, அழகான, நாகரிகமான பொய்களுடன் ரசிக்கக்கூடிய அளவில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்கள் பொருட்களின் மேல் காட்டுவதில்லை என்பது தான் எதார்த்த உண்மை. மக்கள் இதனைத்தான் விரும்புகின்றார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. 

தரம் குறைந்த பொருட்களை விலை அதிகமாகக் கொடுத்து வாங்கும் புதிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாம் தான் சுயபுத்தியுடன் செயல்பட வேண்டும். 

வயதாகும் போது எல்லாவற்றையும் குறையாகவே பார்ப்பது என்ற நோக்கத்தையும் கடந்து பலவற்றையும் யோசிக்க வைத்த புத்தகங்களை வாசிக்கத் துவங்கி உள்ளேன். இனி வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற சூழலில் தான் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் என்ற புத்தகம் எனக்கு அறிமுகமானது. 

பள்ளிப்பருவம் முதல் நேற்று வரை நாம் எத்தனையோ புத்தகங்கள் படித்து வந்திருப்போம். சில புத்தகங்கள் மட்டும் தான் ஆச்சரியத்தையும் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத அளவிற்குத் தாக்கத்தை உருவாக்கி நமக்குப் புதிய பாதையை அடையாளம் காட்டும். நான் சமீபத்தில் வாசித்த இந்தப் புத்தகத்தை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். 

இந்தப் புத்தகத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு தொழிலில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் இதுவரையிலும் நான் இருக்கும் துறையில் பெற்ற அனுபவங்கள் மூலம் எவையெல்லாம் சாதகம்? எவையெல்லாம் பாதகம் என்று என் மனதில் பட்டியலிட்டு வைத்திருந்தேனோ அதனை இந்தப் புத்தகத்தில் படம் வரைந்து மிக அழகாகப் பாகம் குறித்துப் புரிய வைத்துள்ளார்கள். 

இங்கு வெற்றி பெற்றவர்கள் சிறிய விசயத்தைச் செய்தாலும், பேசினாலும் அது பெரிதாகப் பேசப்படும் பார்க்கப்படும். அதுவே பொருளாதார ரீதியாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர்கள் பேசக்கூடிய எந்தக் கருத்துக்கும் முக்கியத்துவம் கிடைப்பது அரிது. 

இங்கே வெற்றியாளர்கள் எவரும் தங்களுடைய வெற்றிக்கான கதையை முழுமையாகச் சொல்லிவிட மாட்டார்கள். காரணம் அதற்குள் இருக்கும் அசிங்கங்களை வெற்றி பெற்றதும் நாம் வாழும் சமூகம் சிங்கமாக மாற்றிவிடும். 

இந்தப் புத்தகத்தில் உலகப் பணக்காரர்கள் பலரையும் பற்றிப் பேசியுள்ளார்கள். 

பில்கேட்ஸ் தொடங்கிப் பல்வேறு உலக அளவில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து இருக்கின்றார் நூலாசிரியர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வளரும் போது அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட வாய்ப்பு, அவர்கள் பயன்படுத்திய விதம், அவர்களுக்கு மட்டுமே அமைந்த சூழல் என்று தொடங்கி நாம் இதுவரையிலும் யோசித்துப் பார்க்க முடியாத அனைத்துக் கோணங்களிலும் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியுள்ளார். 

வெற்றி என்பது வெறும் உழைப்பினால், திறமையினால் மட்டும் வருவதில்லை. புறக்காரணிகள் பலவுண்டு. அதனை எவரும் எந்த இடத்திலும் சொல்வதில்லை. அதனைப் பற்றித்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர். 

நீங்கள் வென்றவர்கள் என்ற முறையில் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வெல்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர் என்றால் காரணக் காரியங்களைக் கோர்த்துப் பார்க்க முடியும். எந்த வகையில் பார்த்தாலும் உங்கள் மனம் சார்ந்த செயல்பாடுகளில் இந்தப் புத்தகம் முக்கியமான தாக்கத்தை உடனே உருவாக்கும் வல்லமை கொண்டது. 

நிச்சயம் தமிழில் மிக அழகாக நேர்த்தியாக எழுதிய நண்பர் சித்தார்த்தன் சுந்தரம் பாராட்டுக்குரியவர். அவர் எழுதிய எழுத்தைப் போலவே அவரும் உரையாடும் போது நமக்கு நம்பிக்கையூட்டக்கூடியவராக இருக்கின்றார். 

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் என் மனம் சார்ந்த செயல்பாடுகளில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதி வைக்க விரும்புகின்றேன். 

)()()()()(





Monday, February 04, 2019

நல்ல மனம் வாழ்க

"மிகவும் வருத்தம் தரும் செய்தி!

தேவையே இல்லாமல் அவருடன் கடவுள் இல்லை என்று விவாதம் செய்து இருக்கிறேன். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று ஒதுங்கிப் போயிருக்க வேண்டும். தவிர்த்து இருக்கனும். அதன் பிறகு அவருடன் கடைசிவரை சமாதானம் எதுவும் செய்து கொள்ள முடியவில்லை- ஒவ்வொருவர் நம்பிக்கையில் அவரவர் பிடிவாதமாக இருந்ததால்.

அவர் தந்தை மிகவும் வயதாகி 90 வயதுக்குமேல் வயதானக் காலத்தில் மிகவும் கஷ்டப் பட்டு சில வருடங்கள் முன்புதான் உலகை விட்டுச் சென்றார். அப்போது மிகவும் வயதாகி இறப்பது வரமா/ இல்லை சாபமா என்று ஒரு பதிவெழுதினாரென்று நினைக்கிறேன். தந்தைபோல் கஷ்டப்படாமல் நாம் நிம்மதியாகப் போயிவிடனும் என்பதுபோல் ஒரு ஆதங்கமே அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

யாரின் முடிவாலும் பாதிக்கப் படுவது அவரவர் குடும்பத்தினரும், நண்பர்களுமே. அவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்."

நண்பர் வருண் எழுதிய வார்த்தைகளைப் படித்து முடித்த போது மனம் சற்று கலங்கிப் போனது. திரு. தமிழ் இளங்கோ குறித்துப் பல நினைவுகள் வந்து போனது.

நண்பர் ராஜ நடராஜன் பணியில் இருந்த போதே வளைகுடா நாட்டில் திடீரென்று மருத்துவமனையில் சேர்த்தும் இறந்து போனார். அவருக்கும் இருதயப் பிரச்சனை தான். அவர் விருப்பப்படி உடலைக் கோவையில் தான் தகனம் செய்தார்கள். கடைசி வரை அருகே இருந்தேன். அவர் தளத்தில் பார்த்த நிகழ்வுகளை பின்னூட்டத்தில் எழுதினேன். அவர் குறித்த தகவல்களை உண்மையான விசயங்களை அப்படியே பலருக்கும் கொண்டு சேர்த்தேன். காரணம் அவர் எவருடனும் நேரிடையான தொடர்பில் இல்லாதவர். முகத்தை எந்த இடத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்.

ராஜ நடராஜன் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். எழுத்துக்கு அப்பால் சில தொழில் முயற்சிகளில் இருவரும் இருந்தோம். கைகூடவில்லை. அவர் திடீர் மரணம் எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிகளவு சோகத்தை உருவாக்கியது. அதன் பிறகு கலக்கத்தை உருவாக்கியது தமிழ் இளங்கோ அவர்களின் மரணம்.

ஒரு பயணத்தில் முகநூலில் நான் வாசித்த குமார் எழுதியதன் மூலம் தமிழ் இளங்கோவின் மரணம் என்னை அதிர்ச்சியடையவைத்து.

தமிழ் இளங்கோ அவர்களைப் புதுக்கோட்டை விழாவில் சந்தித்துள்ளேன். அதற்கு அப்பாலும் என் மேல் தனிப்பட்ட பிரியம் கொண்டவர். காரணம் என் வெளிப்படையான எழுத்துக்கள் அவரை ரொம்பவே ஈர்த்தது என்று ஒவ்வொருமுறையும் அலைபேசியில் பேசும் போது சொல்வார். தோன்றும் போது அழைத்துப் பேசுவதுண்டு.

சமீபத்தில் அவர் திருச்சியில் காவேரி மருத்துவமனையில் இருதய நோய்க்காக அவர் சென்றது முதல் அங்கே நடந்த மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகளை மேலோட்டமாக அவர் பதிவில் எழுதியிருந்தார். நான் அடிப்படை விசயங்களைப் புரிந்து கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். அப்போது நானே உங்களை அழைத்துப் பேச வேண்டும். நீங்க மட்டும் தான் அப்படியே பயப்படாமல் எழுதக்கூடியவர். அங்கு நடப்பது மருத்துவமனை செயல்பாடுகள் அல்ல. திட்டமிட்டுப் பணம் பறிக்கும் கழுகுக்கூட்டங்கள் என்று தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த மருத்துவமனையில் நடந்த சமாச்சாரங்களைப் பற்றிப் பேசினார்.

"ஏன் மறுநாளே அழைத்துச் சொல்லியிருக்கலாமே?" என்று நான் கேட்ட போது "நீங்க இருக்கும் பதவியில் எந்தச் சமயத்தில் அழைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்?" என்றார். இந்த வருட ஆங்கில வருட புத்தாண்டு அன்று அழைத்துப் பேசி வாழ்த்து சொன்னேன். "தொடர்ந்து கணினி முன்னால் அமர்வது கடினமாக உள்ளது" என்று பேசினார்.

அவரின் கடைசிப் பதிவு சென்றவருடம் நவம்பர் மாதத்துடன் முடிந்துள்ளது.

தமிழ் இளங்கோ அவர்களைப் பற்றி என்னால் சில வார்த்தைகள் சொல்ல முடியும். நான் அவரைப் பார்த்தவரையில், பழகிய வரையில், அவர் எழுத்துக்களை வாசித்த வரையில் இப்படி எழுதத் தோன்றியது.

அவர் தனக்கென ஒரு உலகத்தை வைத்திருந்தார். அந்த உலகத்தில் எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டும் நிரப்பி வைத்திருந்தார். எவருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எழுதும் எழுத்துக்களில் கூட எவரையும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் அதிகக் கவனம் காட்டினார். தனக்கான கடமைகள் என்பதில் வரையறை வைத்திருந்தார். ஆன்மீகம் மிகச் சிறந்த வழிகாட்டி. தனக்கு உதவும் மருந்து என்பதில் உறுதியாக இருந்தார்.

எல்லாமே சரிதான்.

ஒரே ஒரு விசயத்தில் தான் மிக மிகப் பின்தங்கியிருந்தார் என்று தோன்றுகின்றது.

தன் மனரீதியான செயல்பாட்டில் அறுபது வயது கடந்தும் ஒரு குழந்தைக்குண்டான மனோபாவத்தில் தான் வாழ்ந்து இருக்கின்றார். சுற்றிலும் உள்ள உலக மாற்றங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்தே வாழ்ந்துள்ளார். துஷ்டனைக் கண்டால் தூர விலகிப் போ என்று சின்ன வயதில் சொல்லி வளர்ப்பார்களே? அதே போலக் கடைசி வரைக்கும் வாழ்ந்துள்ளார்.

நீங்கள் ஆன்மீக பிரியரா? வெறியரா? அது குறித்து நான் எந்தக் கேள்வியும் கேலியும் வைக்கப்போவதில்லை. அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அது உங்களின் அந்தரங்கமான செயல்பாட்டில் ஒன்று.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான ஆன்மீகம் என்பது உங்களை உங்களுக்கே உணர்த்துவது. உங்கள் மன அழுக்குகளைக் களைய உதவுவது. நடந்த பிரச்சனைகள் முதல் நடக்கப் போகும் பிரச்சனைகள் வரைக்கும் எதுவும் உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க முடியாத கவசத்தை உங்களின் மன எழுச்சி உருவாக்கக்கூடியது. அது போன்ற ஒரு மனரீதியான ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

ஆனால் நம்மவர்கள் செய்யும் வழிபாடு அனைத்தும் உள்ளும் புறமும் அலசாத சுயதிருப்திக்காகச் செய்யப்படும் வழிபாடுகளே. அது போன்ற சமயங்களில் தான் தனக்கு உருவாகும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெல்ல முடியாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். உண்மையிலேயே தியானத்தைச் சரியான முறையில் கற்றவர்கள் அவரவர் நம்பும் இறைசக்தியை அவர்கள் வாழ்நாளில் கண்டடைய முடியும் என்பதே என் பார்வை. அல்லது அவரவர் விரும்பும் தனிப்பட்ட மன அமைதியை பெறமுடியும்.

இது குறித்துத் தமிழ் இளங்கோ அவர்களிடம் சற்று மென்மையாகப் பேசியுள்ளேன்.

"நான் இனிமேல் இதையெல்லாம் எங்கே போய்க் கற்பது?" என்றார்?

அவர்(வங்கிப் பணியில்) அரசு பதவியில் இருந்தார். பணி (விருப்ப) ஓய்வு பெற்று தனக்கான வாழ்க்கையை வாழ்ந்தவர். அரசு பதவியில் மனைவி, மற்றும் பொறுப்பான மகன் என்று தன் கடமைகளை மிகச் சரியான நிறைவேற்றியவர் தன் மனம் சார்ந்த ஒழுங்குமுறைகளைச் சரியாக வகுத்துக் கொள்ளாத காரணங்களே அதிக அளவு தனிப்பட்ட பயங்களை உருவாக்கியுள்ளது என்பதனை அவர் உரையாடும் போது பலமுறை உணர்ந்துள்ளேன்.

நல்லவர், பண்பானவர் போன்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் மாறிய உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வயது ஆகும் போது பலருக்கும் ஆன்மீகம் என்பது ஒரு விதமான மருந்து தான். அதில் எனக்குத் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் மாறிய சூழலில் தன் மனோபக்குவத்தையும் அவரவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே அறுபது வயது கடந்தவர்கள் மீண்டும் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பத் தொடங்குகின்றார்கள் என்பது வாடிக்கை. தமிழ் இளங்கோ அவர்கள் மொத்த குழந்தைகளைப் போல மருத்துவமனைகள் என்றாலே நடுநடுங்கும் அளவிற்கு வாழ்ந்துள்ளார். இதுவே அவரின் மரணத்தை முன் தேதியிட்டு தள்ளியுள்ளது என்று தான் எனக்குத் தோன்றுகின்றது.

மருத்துவமனை சென்றது, திரும்பிவந்தது, அவர் எப்போதும் செல்லும் மருத்துவர் கொடுத்த தவறான ரிப்போர்ட், அந்த நேரத்தில் மருத்துவர் இல்லாமல் ரிப்போர்ட் வேறு நபர் கொடுத்தது, ரிப்போர்ட்டில் எழுதிய தவறான பார்வை என்று அவரின் உரையாடல்கள் இன்னமும் என் மனதில் வந்து போகின்றது. இதுவே அவரின் மனப்போராட்டத்தை அதிகமாக்கியது என்று பேசும் போது சொன்னார். மரணப் பயம் என்பது எவராலும் அறுதியிட்டுக்கூற முடியாது.

எழுதும் எனக்கு என் மரணம் எப்போதும் எந்த நிலையில் வரும் என்று எனக்குத் தெரியாது? ஆனால் அதன் அறிகுறித் தெரிந்தாலும் அதன் பயத்தை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். காரணம் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் அதிக அளவு துன்பப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணமே முக்கியக் காரணம்.

இந்த இடத்தில் தான் நம் மக்கள் கோட்டை விடுகின்றார்கள். தவிர்க்கவே முடியாது மரணம் என்றாலும் கடைசி நிமிடம் வரைக்கும் தவிதவித்து விடுகின்றார்கள்.

எங்கள் வீட்டில் தாத்தா முதல் அக்கா வரைக்கும் அவர்களின் கடைசிக் காலம் நடந்து ஒவ்வொரு நிகழ்வும் இன்றும் மனக்கண்ணில் ஓடிக் கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு சமயத்திலும் மகள்களிடம் உரையாடும் போது மரணம் குறித்த உள்ளும் புறமும் உள்ள விசயங்களைப் பற்றி இப்போதே அவர்களுடன் பேசத் தொடங்கியுள்ளேன்.

நிச்சயம் தமிழ் இளங்கோ இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய ஆரோக்கியம் உள்ளவர். எந்தத் தேவையற்ற பழக்கமும் இல்லாதவர். வாழ்க்கையை அழகாக, தெளிவாக, அமைதியாக வாழ்ந்தவர்.

அவர் சேர்த்து வைத்த ஆரோக்கியம் அனைத்தும் அவர் வளர்த்து வைத்திருந்த மனபயங்கள் தான் அவரைத் தின்று தீர்த்து விட்டது. இதன் காரணமாகவே மரணம் நோக்கி முன் தள்ளியுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். தன் அப்பாவைப் போல மற்றவர்களுக்குப் பாரமாக இருந்து விடுவோமா என்ற எண்ணம் அவரை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவர் வாழ்க்கையை. அவர் கடமைகளைச் செம்மையாகச் செய்துள்ளார். வாழ்க்கை என்னும் தொடர் ஓட்டத்தில் அவர் மகன் அப்பா செய்ய விரும்பிய கடமைகளை இனிமேல் செய்வார் என்று நம்புகின்றேன். 

திரு  தமிழ் இளங்கோ அவர்களுக்குத் தேவியர் இல்லத்தின் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

நண்பர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்புகள். 


http://avargal-unmaigal.blogspot.com/2019/02/blog-post.html