Sunday, July 31, 2011

காங்கிரஸ் குடித்த ரத்தம் -- ஈழம் மேலும் சில உண்மைகள்

ஈழம் குறித்து எத்தனையோ செய்திகள் காணொளிகள் பார்த்து இருப்போம்.  ஆனால் உண்மையான கடைசி கட்ட போர் எப்போது உண்மையிலேயே தொடங்கியது? யார் தொடங்கினார்கள்? மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் லட்சணத்தை இதற்கு மேலும் கலைஞரின் பச்சைத் துரோகத்தை திரு. சுரேஷ் சொல்வதை கேட்டுப் பாருங்க.

இவர் எந்த கட்சியையும் சாராதவர்.

இதற்கு மேலாக போர் முடிவுக்கு வந்த பிறகும், இந்தியா ஈழத்திற்கு வழங்கும்  உதவிகள் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? என்பதை கேட்டுத்தான் பாருங்களேன்.






Sunday, July 24, 2011

படித்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா?


வாழ்வில் துன்பங்களை துயரங்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் நான் பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு.  நாம் இன்னும் முறைப்படி படித்து இருக்கலாமோ? இந்த தொழில் அறிவை முறைப்படி கூர்மைபடுத்தி கற்று இருக்கலாமோ? தெளிவான மொழிப் புலமையை வளர்த்து இருக்கலாமோ? மாறி வந்த சூழ்நிலையை அந்தந்த காலகட்டத்திற்கேற்றபடி மாற்றிக் கொண்டு இருக்க வேண்டுமோ? என்று ஒவ்வொருவிதமாகவும் யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் இந்த எண்ணம் அடுத்து நடக்கும் சில சம்பவங்கள் மூலம் மனம் அமைதியாகி விடும். காரணம் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் என்று பட்டியலிட்டு எனக்குள் வைத்துள்ள அத்தனை விசயங்களையும் பெற்றவர்கள் என்னை விட பின்தங்கி வந்து கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டதுண்டு.  காரணம் பல குறைகளை பெற்ற எனக்கு ஒரு பெரிய நிறை உண்டு. அது தான் இடைவிடாத உழைப்பு.  குறிப்பாக உழைப்புக்கு அஞ்சாத, போராடிக்கொண்டு இருக்க வேண்டிய அவஸ்யத்தை உண்ர்ந்து அடுத்தடுத்த படியில் ஏறிவந்துள்ளேன்.


நம்மிடம் என்ன திறமைகள் இல்லை என்பதை நினைத்துப் பார்த்து நாம் வாழ்கின்ற சூழ்நிலையில் அவற்றை வளர்த்துக்கொள்ளுதல் ஒருபுறம் என்றால் நம்மிடம் இருக்கும் திறமைகளை நாம் சம்மந்தப்பட்ட தொழிலோடு ஒன்றிணைத்துப் பார்த்தல் மற்றொருபுறம். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் என்ன படித்து இருக்குறீங்க என்பதை விட அந்த படிப்போடு அது சார்ந்த மற்ற விசயங்களையில் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கீங்க என்பது தான் முக்கியமாக இருக்கிறது.  படிப்பு என்பது மரம் என்றால் கணினி அறிவு, ஆங்கில அறிவு, ஆளுமைத்திறன், உழைப்பு போன்ற விசயங்கள் மரத்திற்கு கௌரவம் சேர்க்கும் கிளைகளாக இருக்க வேண்டும்.  

இதைப்பற்றி சற்று உள்ளே நுழைந்துப் பார்க்கலாம்.

நான் இருப்பது ஆடைகள் சார்ந்த தொழில்.  அதுவும் ஏற்றுமதி துறை. இந்த துறையில் நான் நுழைந்தது திட்டமிட்டதல்ல. எதிர்பாரத நிகழ்வு. மேலும் திருப்பூரில் உள்நாட்டு வணிகம் என்றொரு தனி உலகம் உண்டு.  தொடக்கம் முதல் அதில் என் கவனம் செல்லவே இல்லை.  என்ன காரணம் என்று தெரியவில்லை. குடும்பத்திற்கோ, நான் படித்த படிப்பிற்கோ இந்த ஆடைத் தொழில் சம்மந்தம் இல்லாதது . ஆனால் இன்று இந்த தொழிலின் நீள அகலத்தை அத்தனையும் பார்த்து விட்டேன். ஆனால் போற்றத்தக்க வகையில் என்னால் உயரமுடியவில்லை.  ஆனால் வெறுக்கத்தக்க வகையில் என்ற நிலையிலும் நான் இல்லை. காரணம் பணம்.  எந்த அளவுக்கு உழைப்பு வேண்டுமோ அந்த அளவுக்கு பணத்தை கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். தோல்வியால் சுருண்டு போய்விடக்கூடாது.  மீண்டும் மீண்டும் படையெடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.  ஆனால் என் எல்லை எதுவரைக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. இதன் காரணமாகவே என் இந்த தொழில் பயணம் அமைதியான நதி போலவே போய்க் கொண்டு இருக்கின்றது. 

காரணம் நான் பெற்ற தோல்விகளையும், என் தொழில் அனுபவத்தில் நான் செய்த தவறுகளும் என்று ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.  அந்த பாடங்களை ஏற்றுக் கொண்டு அடுத்த பயணத்தை தொடங்க அந்த வலி மறந்து விடுகின்றது.  இது போல மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

நான் உள்ளே நுழையும் போது இந்த தொழிலுக்கென்று பல படிப்புகள் இருக்கிறதென்று தெரியாது.  அதுவும் நான் இந்த தொழிலில் நுழைந்த முதல் பத்து வருடங்களில் இந்த துறை சார்ந்த படித்தவர்களை நான் பார்த்ததே இல்லை.  ஆனால் காலம் மாறியது.  உள்ளூர் வாணிபம் அத்தனையும் உலக கூரையின் ஒன்றாக மாறி இதன் போக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தொழிலும் மாறத் தொடங்கிய போது தான் படித்தவர்களுக்குண்டான வாய்ப்புகள் கதவு திறக்கத் தொடங்கியது.  

டெக்ஸ்டைல்ஸ் பட்டயப்படிப்பு முதல் பட்டதாரிகள் வரைக்கும் திடீர் என்று நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட் என்ற பெயரில் அனுமதி பெற்று வருவார்கள்.  ஒரு வாரமோ அல்லது மேற்பட்ட நாட்களோ உள்ளே இருந்து உற்பத்தி சார்ந்த விசயங்களை குறித்துக் கொண்டு செல்வார்கள். நிர்வாகம் அறிவுறுத்தியபடி அவர்களுக்கு மொத்த விசயங்களையும் பாடம் போல சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன். அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் இருக்கின்றேன். 

ஆனால் நான் பார்த்தவரைக்கும் இந்த தொழில் படிப்பு படித்தவர்கள் திருப்பூருக்குள் பெரிய அளவுக்கு ஜெயித்து நான் பார்த்தது இல்லை.  அதிகபட்சம் டெல்லி, பம்பாய், பெங்களூரில் இருந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாளர்கள் நடத்திக்கொண்டு இருக்கும் பையிங் ஆபிஸ் என்ற நிலையில் ஏதோவொரு பதவியை கைப்பற்றிக் கொண்டு ஒரு இயல்பான உல்லாச வாழ்க்கைக்கு தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். சிலர் இங்கேயுள்ள நிறுவனங்களிலும் பணிபுரிகின்றார்கள் இவர்களை நிறுவன நிர்வாகம் அதிக அளவில் மதிப்பதும் இல்லை என்பதும் உண்மை. குறிப்பிட்ட தேவைப்படும் விசயங்களுக்கு கறிவேப்பிலை மாதிரி தான் இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். காரணம் இவர்கள் உடல் உழைப்புக்கு தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த ஆடைத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியவர்களும், முயற்சித்துக் கொண்டு இருப்பவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும், கடின உழைப்புக்கு தயாராக இருப்பவர்களுமே,

ஏன்? ஏன்?

சென்ற பதிவில் திருப்பூருக்கு வேலை தேடி வரும் பட்டதாரிகளைப் பற்றி பேசத் தொடங்கினோம்.  இரண்டு எம்.பி.ஏ பட்டதாரிகள் வேலை கேட்டு வந்தார்கள். ஒருவர் கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்.  அப்பா ஒவ்வொரு வீட்டுக்கும் பால் ஊற்றி கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பவர்.  ஆனால் இவர் தன் குடும்ப சூழ்நிலையைப்பற்றி சற்று கூட கவலைப்படாமல் நவ நாகரிக இளைஞராக எப்போதும் போல ஒரு சைனா கைபேசியை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தவர்.  ஒரு அளவுக்கு மேல் குடும்பத்தினர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் வேறு வழியே இல்லாமல் வேலை கேட்டு அலைந்து கடைசியாக என் முன்னால் நின்று கொண்டிருந்தார். மொத்தத்தில் கடின உழைப்புக்கு தயாராக இல்லாமல் கற்பனை வாழ்க்கையை நிஜ வாழ்க்கையாக நம்பிக் கொண்டிருப்பதை பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. 

மற்றொருவர் ஆவுடையார்கோவில் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்.  குறிப்பாக ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் சான்றிதழ் விபரங்களை வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரை பரிசோதித்த போது அவரின் கடந்த கால பல கஷ்டங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.  கிராமத்து வாழ்க்கை.  முதல் தலைமுறை பட்டதாரி. ஆனால் எம்.பி.ஏ ல் இவர் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவிகிதம்.  கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் வேலைதேடி சோர்ந்து போயிருப்பது அவர் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.  வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கே போய் இப்போது அவர் பார்த்துக் கொண்டிருப்பது திருப்பூரில் கொத்தனார் வேலை. தினந்தோறும் 400 சம்பளம். உடல் உருகி தலைமுடிகள் செம்பட்டையாக மாறி கண்கள் உள்ளே போய் கன்னம் டொக்கு விழுந்து பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது.  

ஆனால் பேசத் தொடங்கிய பத்து நிமிடங்களில் அவரின் உண்மையான ஆளுமைத்திறன், பேச்சுச் திறன், தனிப்பட்ட திறமைகள் அத்தனையும் அவரின் படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல் எரிச்சலை உருவாக்கியது.  இந்த இரண்டு எம்பிஏ பட்டதாரிகளுக்கும் அட்சரம் சுத்தமாக கணினி அறிவு என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  நான் ஏற்கனவே சொன்னபடி ஒருவரிடம் இருக்கும் பன்முகத்திறமை ஒரு நிறுவனத்திற்கு ரொம்பவே முக்கியம். ஒரு வேலைக்கு என்று தேர்ந்தெடுக்கும் நபர்களை வைத்து வேறு எந்தந்த வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயல்பாகவே ஒவ்வொரு நிறுவனமும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.  

இந்த இரண்டு எம்.பி.ஏ பட்டதாரிகள் வாழ்ந்த சூழ்நிலை, படித்த கல்லூரிகள் இரண்டும் வெவ்வேறு.  ஆனால் இருவருக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு.  கற்ற கல்வி இவர்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை அல்லது அதை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை.

இந்த இடத்தில் மற்றொரு நபரையும் நாம் பார்க்க வேண்டும்.  

இவர்கள் இருவருடன் மற்றொரு நபரையும் நான் சந்தித்தேன்.  அவர் டெய்லர் வேலை கேட்டு வந்தவர். பனிரெண்டாம் வகுப்போடு முழுக்கு போட்டு ஒரு வருடம் ஆட்டம் போட்டு திரிந்து விட்டு பனியன் ஜட்டி நிறுவனத்தில் உள்ளே நுழைந்து டெய்லராக மாறி இரண்டு வருடங்கள் அங்கு பலவித அனுபவங்களைப் பெற்று அதன்பிறகு ஏற்றுமதி நிறுவனங்களில் நுழைந்து தன்னை பட்டை தீட்டிக் கொண்டவர். ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்த பிறகு பீஸ் ரேட் என்கிற நிலைக்கு வளர்ந்தவர். வாரம் 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாரித்தவர். மல்டி ஸ்கில் என்று சொல்லப்படும் ஓவர் லாக், பேட்லாக், சிங்கர் மிசின்களை வெகு லாவகமாக இயக்கத் தெரிந்தவர்,. 

சுருக்கமாகச் சொல்லப்போனால் நிறுவன பாஷையில் ஏ கிரேடு ஆப்ரேட்டர்.. இப்போதுள்ள திருப்பூர் சூழ்நிலையில் அவரால் பீஸ் ரேட்டில் வேலை செய்ய வாய்ப்பு இல்லாத காரணத்தால் மிகப் பெரிய நிறுவனங்களில் நிரந்தர வேலையில் அமர்ந்து விட்டால் நல்லது என்ற முடிவின்படி இங்கே வந்துள்ளார். தொழிலாளர் சட்டத்தை இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும்.  நம் நாட்டு சட்டத்திற்குண்டான மரியாதை அல்ல.  பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு இருக்கும் சட்டதிட்டத்தின்படி பலவிசயங்களை ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தில் கடைபிடித்தே ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் உள்ளே வராது.  அதன்படி இந்த டெய்லருக்கு நல்ல வாய்ப்பு.  கடந்த ஐந்து வருடங்களில் இவர் உழைத்த உழைப்புக்கு பிரதிபலனாக இன்று மாதச் சம்பளம், மற்றபடி இவருக்குண்டான மற்ற வசதிகள் என்று எட்டு மணி நேர வேலைக்கு மாதம் 7000 ரூபாய் கிடைக்கும். அது போக தினமும் ஓவர்டைம் முதல் மற்ற வசதிகள் என்று தனியாக கிடைக்கும்.


மேலே பார்த்த பட்டதாரிகளுக்கு நிறுவனம் போனால் போகிறதென்று ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 5000 ரூபாய். தினந்தோறும் 12 மணிநேரம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது? நிர்வாகத்தின் கண்கள் இவர்களின் முதுகில் இருந்துக் கொண்டேயிருக்கும்.

இப்போது சொல்லுங்க? 

புற்றீசல் போல வருடத்திற்கு வருடம் பெருகிக் கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் சாதிப்பது என்ன?  எந்த மாதிரி இளைஞர்களை இந்த சமூகத்திற்கு நமது கல்வித்திட்டம் வழங்கிக் கொண்டு இருக்கிறது?  

அடுத்து?

Thursday, July 21, 2011

உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா Arivai Petra Arputham

இது ஒரு இடைச்சொருகல்,  இன்று என் மின் அஞ்சலுக்கு வந்த இந்த காணொளி மனதை உலுக்கிவிட்டது.

ராஜிவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் தோழர் பேரறிவாளனின் தாய் பேட்டி.

21 வருட சிறைவாழ்க்கை.  ஒரு வாழ்க்கையின் பாதிப்பகுதி. பாதிப்புகளை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

சமயம் இருக்கும் போது முழுமையாக கேட்டுப் பாருங்கள்.



Sunday, July 17, 2011

சமூகம் -- உண்மையான முகம்


தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவிக்கு வந்தவுடன் ஒரு கேள்வி நம் எல்லோருடைய மனதிலும் பலமாக எழுந்துள்ளது.  சமச்சீர் கல்வியை ஏன் இப்படி தடுத்து நிறுத்துகிறார்கள்?  எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.  சமச்சீர் கல்வி வரமா? சாபமா? என்று எழுதியபோதும் கூட இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. 

ஆனால் சமீப காலத்தில் எனக்கு கிடைத்த அனுபங்கள் ஏராளமான அதிர்ச்சியைக் கொடுத்தது.

மூன்று பேர்கள் என்னை வந்து சந்தித்தார்கள்.  அவர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவைப்படும் அலுவலக ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.  இரண்டு முறை என்னை வந்து சந்தித்த போதிலும் எனக்கு பெரிதான ஆர்வம் உருவாகவில்லை. ஆனால் திடீர் என்று நிறுவனத்திற்கு அனுபவம் இல்லாத மூன்று நபர்கள் தேவைப்படார்கள்.

எந்த அனுபவமும் இல்லாதவர்கள் வேண்டும். ஆனால் தினந்தோறும் 12 மணி நேரம் இடைவிடாது உழைக்கத் தயாராக இருப்பவர்கள் வேண்டும் என்று நிறுவனம் என்னிடம் கோரிக்கை வைத்திருந்தது.

அனுபவம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கும் போது நாம் கொடுக்கும் சம்பளத்தை ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

மற்றொன்று தங்குமிடத்தையும் சாப்பாட்டு வசதியையும் நிறுவனமே கொடுத்து விடும் பட்சத்தில் அறிமுகம் இல்லாமல் திருப்பூர் வருபவர்களுக்கு 90 சதவிகித பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். 

என்னைத் தேடி வந்தவர்களிடம் நிறுவனத்தின் தேவையைச் சொன்னபோது உடனடியாக ஆள் அனுப்பும் வேளையில் இறங்கினார்கள். இப்போது என்னை வந்து சந்தித்தவர்களின் தொழில் ரீதியான செயல்பாடுகளை விட அவர்களுடன் நான் உரையாடியது தான் இங்கு முக்கியம்.

"உங்களுக்கு மூன்று பேர்கள் போதுமா?  இல்லை இன்னும் ஆட்கள் தேவைப்படுமா?"

"இப்போதைக்கு மூன்று பேர்கள் போதும்."

"பெண்கள் வேண்டுமா?"

"வேண்டாம். ஆண்களே போதுமானது."

"பட்டதாரி போதுமா?  இல்லை முதுகலை மற்றும் மேற்படிப்பு படித்தவர்கள் வேண்டுமா?"

"அவர்களுக்கு சம்பளம் அதிகம் தேவைப்படுமா?"

"வேண்டாம் 5000 ரூபாய் போதும்.  நீங்க தான் சாப்பாடு தங்குமிடம் வசதி கொடுத்து விடுறீங்களே?"

"தங்குமிடம் இலவசமாக கொடுத்து விடுவார்கள். ஆனால் சாப்பாட்டுக்கு மாதம் 750 முதல் 1200 வரை பிடித்தம் செய்துவிடுவார்கள். மீதிப்பணம் அவர்களுக்கு போதுமா?"

"என்னங்க உங்க பதவியிலிருந்து இப்படி கேட்குறீங்க?  மற்ற நிறுவனங்களில் 3000 முதல் சம்பளம் என்று தொடங்குகிறார்கள்.  நீங்கள் தான் 5000 முதல் 6000 வரைக்கும் சொல்றீங்க."

"சரி அப்ப உங்களுக்கு நிறுவனம் ஏதும் கொடுக்க வேண்டுமா?"

"வேண்டாங்க.  நாங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிறுவனத்தில் கொண்டு போய் சேர்க்கும் போதே தலா ஆயிரம் ரூபாய் சம்மந்தப்பட்டவர்களிடம் வாங்கிக் கொள்வோம்."

எனக்கு தலைசுற்றியது. விடாமல் மேலும் கேட்டேன். அப்போது தான் தற்போதைய சமூகத்தில் படித்தவர்களின் உண்மையான சூழ்நிலை புரியத் தொடங்கியது. அவர் விடாமல் தொடர்ச்சியாக பேசிக்கொண்டுருந்தார்.

"எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 விண்ணப்பங்கள வந்து கொண்டேயிருக்கிறது. நாங்கள் விளம்பரங்கள் கொடுத்து ஆட்களை வரவழைப்பது இல்லை.  எங்களால் பலன் அடைந்தவர்கள் அவர்கள் மூலம் நண்பர்களுக்கு பரவி அதன் மூலம் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ஊனமுற்றவர்கள் அதிகமாக வருகிறார்கள். 

மற்ற மாநிலங்களில் எப்படியோ?  ஆனால் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பட்டதாரிகள் உள்ளனர். மிக எளிய குடும்பத்தில் பிறந்த மகன் மகள் என்று தொடங்கி குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் கஷ்டப்பட்டு படித்து பட்டதாரி ஆகிவிடுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.   முதல் தலைமுறை பட்டதாரிகள் தான் தற்போது மிக அதிகமாக உள்ளது. இவர்களுக்கு ஊருக்குள் இருக்க வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் முடிந்தவரைக்கும் மற்ற இடங்களுக்கு வேலைத் தேடி வரத் தொடங்கி விடுகிறார்கள்.........."  என்று பேசிக் கொண்டே சென்றார்.

இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது.  இங்கே வரக்கூடிய பட்டதாரிகளில் தனிப்பட்ட திறமைகளோ அல்லது வேறு தொழில் சார்ந்த திறமைகளோ இருப்பதில்லை.  பி.எஸ்சி, பி.ஏ, எம்.எஸ்சி, எம்பிஏ என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மாட்டிக் கொள்ள வேண்டிய ஒரு அங்கீகாரத்துடன் வெறுமனே வந்து இறங்கி விடுகிறார்கள். இது குறித்து பின்னால் பேசுவோம்.

ஆனால் தற்போதைய திருப்பூர் நிறுவனங்கள் சில சவால்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டேயிருக்கிறது.  திருவாளர் தயாநிதி மாறன் ஜவுளித்துறைக்கு அமைச்சர் என்ற அந்தஸ்துக்கு வந்து அவர் பதவியை விட்டு துரத்திய இந்த காலகட்டம் வரைக்கும் எதெல்லாம் நடக்கக்கூடாதோ அத்தனையும் நடந்தே முடிந்து விட்டது. பஞ்சு மற்றும் நூல் தொடர்ச்சியாக ஏற்றுமதி, சென்ற ஆட்சியில் உள்ள மின்சார பற்றாக்குறை காரணமாக சிறிய பஞ்சாலை நிறுனவங்கள் தொடர்ச்சியாக மூடல், இதன் காரணமாக நூல் விலை ஏற்றம், இதற்கு மேலாக திருபபூருக்குள் இருக்கும் சாயப்பட்டறை முதலாளிகளின் பேராசைக்கு உச்சநீதி மன்றம் வைத்த ஆப்பு என்று ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று இல்லாமல் நான்கு பக்கமும் பிரச்சனைகளும் சூறாவளியாக தாக்கி "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா" என்கிற அளவிற்கு இந்த தொழிலை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டது.  

70 சதவிகிதம் அரசாங்க கொள்கைகளும், 30 சதவிகிதம் முதலாளிகளின் குணாதிசியங்களுமாகச் சேர்ந்து இன்று திருப்பூர் என்ற நகரம் பரபரப்பு இல்லாத சங்கட வாழ்க்கைக்கு பழகி விட்டது. ஆனால் தொழிலை நடத்தியே ஆக வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள், பெரிய நிறுவனங்கள், வங்கிகளுக்கு பயந்து கொண்டு தம் கட்டி நடத்திக் கொண்டிருப்பவர்கள் என்று அத்தனை பேர்களும் வட நாட்டில் உள்ள சாயப்பட்டறைகளுக்கு துணியை அனுப்பி அங்கிருந்து சாயமேற்றி இங்கே கொண்டு வந்து தைத்து ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  பல நிறுவனங்கள் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் கடனே என்று இந்த தொழிலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


திருப்பூரில் சாயக்கழிவு, மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், என்று ஆயிரத்தெட்டு வக்கணையாக பேசும் நீதிமன்றங்களின் பார்வையில் வடநாட்டில் நடந்து கொண்டிருக்கும் இது போன்ற விதி மீறல்கள் கணகளுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. இன்று வரையிலும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கனஜோராக அங்குள்ள ஆற்றில் கலந்து கொண்டே தான் இருக்கிறது. . கர்நாடகா ஆந்திரா தொடங்கி குஜராத் உத்திரபிரதேசம் வரைக்கும் சகல மாநிலங்களிலும் இந்த சாயப்பட்டறை தொழில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் இது நீதிமன்றம் வரைக்கும் போகாமல் வெளியாகும் சாயக்கழிவு நீருக்கு லிட்டருக்கு இத்தனை பைசா என்று வசூலித்து அதற்குண்டான ஏற்பாடுகளை அந்தந்த நகராட்சி நிர்வாகமே பார்த்துக் கொள்கின்றது.  ஆனால் கடந்த ஆட்சியில் இது குறித்து எந்த அக்கறையும் இல்லாத காரணத்தால் இத்தனை பெரிய சோகம் பல விதங்களிலும் இங்கே பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு சின்ன சந்தோஷம் இப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக இந்த சாயப்பட்டறை பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும் சூழ்நிலையில் இருக்கிறது.  குறிப்பாக அருள்புரம் பொதுசுத்திகரிப்பு நிலையம் விரைவில் செயல்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இப்போது எழுதிக் கொண்டு இருக்கும் இந்த மாலை வேலையில் நண்பர் அழைத்துச் சொன்னபடி பெரும்பாலும் நாளைமுதல் சில பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்.

இதை இந்த இடத்தில் இத்தனை விஸ்தாரமாக பேசக்காரணம்?

இந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.  துணியை சாயமேற்றும் வரைக்கும் எந்த நிலையிலும் கடனுக்கு செய்ய முடியாது.  பஞ்சு, நூல், சாயமேற்ற என்று ஒவ்வொரு நிலையிலும் மொத்த பணத்தையும் முன்பணமாக கொடுத்து செய்தே ஆக வேண்டும்.  ஒரு மாதத்திற்கு உண்டான ஏற்றுமதி ஓப்பந்தக்களுக்காக மட்டுமல்லாமல் அடுத்த மூன்று முதல் ஆறு மாதத்திற்குண்டான அத்தனை ஏற்றுமதி ஓப்பந்தங்களுக்கும் தேவைப்படும் முன்னேற்பாடுகளுக்காக பெரும் பணத்தை கொட்ட வேண்டியுள்ளது.  இதன் காரணமாக மற்ற சிறு நிறுவனங்களுக்கு எவரும் பணம் கொடுப்பதில்லை.  இது தவிர நிர்வாக செலவில் எந்த அளவுக்கு சிக்கனத்தை கடைபிடிக்க முடியுமோ அந்த அளவுக்கு செயலில் காட்ட வேண்டியுள்ளது.  திறமை இருப்பவர்களுக்கு, அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் மூன்று பேர்களை அனுபவம் இல்லாதவர்களை வைத்து வேலை வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இப்போது புரியுமே?  ஏன் அடிமாட்டு சந்தைக்குச் செல்லும் மாடுகளைப் போல பட்டதாரிகள் இங்கே வந்து மாட்டிக் கொள்ளும் அவலம்?

ஆனால் இந்த பட்டதாரிகளிடம் நான் பார்த்த திறமைகள்?  

அடுத்து அதைப்பற்றி பேசுவோம்..  

Sunday, July 03, 2011

வலைபதிவுகள் வரப்பிரசாதம் - 3வது ஆண்டு

என்னுடைய உண்மையான பிறந்த நாளே எனக்கு 20 வயதில் தான் தெரிந்தது. அப்போது தீவிர ஜோதிட ஆராய்ச்சியில் முழு நேரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த நண்பன் கலந்தர் (மத எதிர்ப்புகளையும் மீறி) உந்துதல் காரணமாக நான் பிறந்த அரசு மருத்துமனையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன்.   நான் பிறந்த நாளை கொண்டாடியதும் இல்லை. பிறந்த நாள் வரும் தினத்தன்று அது நினைவில் இருப்பதும் இல்லை.  குழந்தைகள் எனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அவர்களின் பிறந்த நாளை நாங்கள் மறந்து விடுவோம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதத்திற்கு முன்பாக இன்னும் இத்தனை மாதங்கள் இருக்கிறது? என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சியாகவும் இருந்து விடுகின்றது. 

இந்த மகிழ்ச்சியைப் போலவே இந்த நாள் எனக்கு இருக்கிறது. 


காரணம் நான் பெற்ற அனுபவங்கள், வாசித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் உருவாக்கிய தாக்கம் எத்தகையது என்பதை எழுதத் தொடங்கிய இந்த இரண்டு வருடங்களின் மூலம் தான் அதிகம் உணர முடிந்துள்ளது. உண்மையிலே உடலுக்கு உண்டான வயதை விட உள்ளத்தின் வயதான மூன்று என்பது இன்று முதல் தொடங்குகின்றது. 

முதலாம் ஆண்டு முடிவுக்கு வந்த அப்போது வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதிய கட்டுரை இது. அப்போது ஈழம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் அதன் புரிதலை எழுதியிருந்தேன்.  அப்போது பெரும்பாலான வர்களுக்கு நான் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. ஆனால் நாகா உருவாக்கிக் கொடுத்த இந்த தளத்தில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பார்வையாளர்களும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த வேர்ட்ப்ரஸ் ல் 50 ஆயிரம் பேர்களும் வருகைதந்துள்ளார்.  

இந்த எண்ணிக்கையை இங்கே குறிப்பிடக்காரணம் சில விசயங்களை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

வலையுலகில் இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருப்பவர்களின் ஒரே கருத்து படிப்பவர்களுக்கு வசதியாக குறிப்பிட்ட விசயங்களை நீளம் அகலம் பார்த்து எழுத வேண்டும்.  இல்லாவிட்டால் அது வந்து படிப்பவர்களை அடுத்த முறை வராமல் செய்து விடும் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். . 

ஆனால் இதுவரைக்கும் அந்த விதியை உடைப்பதில் தான் கவனம் செலுத்தியுள்ளேன்.  வெற்றியும் அடைந்துள்ளேன்

இதைப் போலவே வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தை திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள். 

வேர்ட்ப்ரஸ் ல் எழுதும் போது சிவகுமார், சேரன், கமல்ஹாசன் குறித்து எழுதியுள்ளேன். குறிப்பாக திரைப்படங்களைப் பற்றி நான் இதுவரையிலும் எழுதியதில்லை. 

வினவு தள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக முதல் முறையாக திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்து எழுதிய கட்டுரை அப்போதையை சூழ்நிலையில்  சொல்ல வேண்டிய எதிர்மறை நேர்மறை நியாங்களை கோர்வையாக்கியதில் நீண்டதாகவே இருந்தது.  தோழர்களும் அப்படியே வெளியிட்டு இருந்தார்கள். அப்போது உயர்பதவியில் உள்ள கனடாவில் இருந்த நண்பர் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்பு கொள்ளவில்லை.  ஆனால் சாயப்பட்டறை கட்டுரையை விட மராத்தான் நீளத்திற்கு அமைந்த நான் வேட்பாளர் ஒரு டைரிக்குறிப்புகள் என்ற கட்டுரையை அவர் படித்தவுடன் அந்த இரவு வேளையில் கனடாவிலிருந்து அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசினார். 

அப்போது அவர் பலவிசயங்களைப் பற்றி பேசினாலும் இன்று உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று என் இரவு நேர கடமைகளை ஒதுக்கிவைத்து விட்டேன் என்று சொன்ன போது அந்த கட்டுரை எந்த அளவுக்கு அவருக்கு தாக்கத்தை உருவாக்கியது என்பதை உணர்ந்து கொண்டேன். 

 இதையே சென்ஷியுடன் ஒரு நாள் முழுக்க தஞ்சை பெரிய கோவிலில் இருந்த போது அவரும் இதே கட்டுரையை குறிப்பிட்டதோடு அன்பால் நெகிழவைத்தார். பத்திரிக்கை துறையில் இருக்கும் தமிழ்மலர் கூட இது போன்ற தேர்தல் ஆணைய செயல்பாடுகளின் சம்பவ கோர்வைகளை யாராவது எழுத மாட்டார்களா? என்று காத்திருந்ததை குறிப்பிட்டு இருந்தார். 

சாயமே அது பொய்யடா என்ற கட்டுரை தான் நான் மதிக்கும் பத்திரிக்கையாசிரியரின் தொடர் வாசிப்பு பார்வையில் பட்டு அதுவே தான் முதல் முறையாக பத்திரிக்கையுலகத்திற்கு அறிமுக இல்லாதவனுக்கு அட்டைபட கட்டுரை அங்கீகாரம் வரைக்கும் கொண்டு சேர்த்தது. 

இன்னும் இதே போல பல நண்பர்களின் உதாரணங்களை குறிப்பிட முடியும்.  

இந்த வருடம் முழுக்க நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான்.  

உங்கள் எழுத்து நடையும், சொல்ல வந்த விசயத்திற்குரிய சரியான புரிதலையும் உருவாக்கும்பட்சத்தில் அது எந்த அளவுக்கு பெரிதாக இருந்தாலும் நிச்சயம் அது பரவலான பாராட்டுரைக்கு கொண்டு செலுத்தும்.  நீங்கள் விமர்சனங்கள், ஓட்டு, பரஸ்பரம் மார்பில் சந்தணத்தை பூசிக் கொண்டிருந்தால் வாழ்க்கை முழுக்க பூசிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.  

மொத்தமாக 330  பதிவுகள் எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் மின் அஞ்சல், ரீடர், மூலம் இணைத்துக் கொண்டவர்களோடு, வளர்ச்சியின் நீட்சியாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக், கூகுள் பஸ் மூலமாக ஏராளமான நண்பர்கள் எனக்கு தொடர்ச்சியாக அறிமுகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். பல மேடு பள்ளங்களைக் கடந்து, ஓரளவுக்கேனும் எழுதக்கற்றுக் கொண்டு நாளை முதல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன். 

இந்த சமயத்தில் மூன்று பேர்களுக்கு என் முதன்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி நிர்வாக குழுவினருக்கு அதிலும் தமிழவெளி நண்பர் புருஷோத்தமன் என் மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றவர்கள் போல வேறு எந்த தளத்திலும் நான் இணைப்பதில்லை. காரணம் அதற்கான நேரம் இருப்பதில்லை. மேலும் நேரிடையாகவே உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டேயிருப்பதால் இந்த சிறிய அங்கீகாரமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.  

இந்த கட்டுரை வேறொரு வடிவத்தில் வந்திருக்க வேண்டியது.  முக்கியமான நண்பர்களிடம் உறுதியளித்தபடி அதை செயல்படுத்த முடியவில்லை.  காரணம் தமிழ்மணம் குறித்து திரு. செல்வராசுவிடம் உரையாடி பதில்கள் வாங்கி வெளியிடலாம் என்று நண்பர்களிடம் பேசி வைத்திருந்தேன். ஆனால் மே 17 இயக்கம் தொடர்பாக அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல், மற்றும் அவரின் தொடர் பயணத்தில் நேரம் கிடைக்காத காரணமோ? இந்த முறை நான் நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.  நிச்சயம் அதை செய்வேன்.. 

சுயமோகம், சுயவிளம்பரம், அதிக சுயபுராணம் எதுவுமின்றி இந்த வலைபதிவுகளை முடிந்தவரைக்கும் செய்திகளை கடத்தும் ஊடகமாகத் தான் கருதுகின்றேன்.  வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும்.  பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூட செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க, படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள்.

என் வீட்டு தோட்டத்தின் வெளியே திரிந்த சிட்டுக்குருவி ஒன்று ஒவ்வொரு நாளும் அறைக்குள் வர பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதை பல முறை கவனித்துள்ளேன்.  கண்ணாடி ஜன்னலை முட்டி முட்டி முயற்சிப்பதைப் போலத் தான் இந்த எழுத்துப் பயணம் எனக்கு பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் தொட ஆரம்பிக்க, அதைப் பற்றிய தேடல் தொடங்க அவற்றைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு தான் சரித்திர அறிவும், அதிக அளவில் சமூக அறிவும் எனக்கு கிடைக்கப் பெற்றது. 

பொருள் தேடுவதும், கிடைத்த பொருளை காப்பாற்றுவதுமே இப்போதைய சமூகத்தில் முக்கியமாக இருக்கிறது. அதனை வைத்தே இங்கே ஒவ்வொரு மனிதர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கின்றது. மனிதர்கள் அத்தனை பேர்களுமே சந்தைச் சரக்காக இருக்கும் சூழ்நிலையில் எனக்குள் உருவாகும் மன அழுத்தத்தை போக்க இந்த எழுத்துப் பயிற்சி பலவற்றையும் எனக்கு கற்றுத் தந்துகொண்டு இருக்கிறது.. 

இந்த வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன்.   தொலை தூரத்தில் இருந்து திடீர் என்று அழைத்து பேசியவர்களும், தொடர்பில் வரும் நண்பர்கள் பேசும் உரையாடலின் மூலமே மட்டுமே பலரும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது. 

குறிப்பாக தெகாவுடன் நாலைந்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரே வயது ஒத்த சிந்தனைகளுடன் அலைந்து திரிந்து உரையாடிய உரையாடல்கள் வாழ்வின் கடைசிவரைக்கும் என்றும் என் மனதில் இருக்கும்.

இந்த இரண்டாவது வருட இறுதியில் என் எழுத்துக்கு பல அங்கிகாரங்கள் கிடைத்துள்ளதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு, இரண்டு தமிழ்மண விருது அங்கீகாரம், வினவு புத்தகத்தில் வந்த கட்டுரை அச்சு ஊடக அங்கீகாரம், புதிய தலைமுறை அட்டைப்படக் கட்டுரை அங்கீகாரம், தொலை தூரத்தில் இருந்து அழைத்துப் பேசியவர்களின் உணர்வு பூர்வமான உரையாடல்கள், வலைபதிவுகளின் மூலம் அறிமுகமாகி குடும்ப அங்கத்தினராக மாறியவர்கள், பல துன்பங்களில் தோள் கொடுத்து சுமந்து நடந்து பாக்கியவான்கள் என்று ஏராளமான ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. நான் எப்போதும் விரும்பி வாசிக்கும் 4 தமிழ்மீடியா குழுமம் அவர்களின் இந்த ஆண்டு நிறைவு நாளில் வெளியிட என்னிடம் ஒரு கட்டுரை வாங்கியுள்ளார்கள்.

திருப்பூரில் பத்திரிக்கையாளராக இருக்கும் நண்பர் மணி நான் ஏற்கனவே திருப்பூர் பற்றி தொடராக எழுதியுள்ள கட்டுரைகளில் ஒன்றான நம்பி கை வை என்ற கட்டுரையை அவரே தேர்ந்தெடுத்து மாலைமலர் (என்று தான் நினைக்கின்றேன்) தொழில் மலரில் வரப்போகின்றது என்று சொல்லியுள்ளார். எனது தளத்தில் மற்றவர்கள் போல் பூட்டு எதுவும் போடவில்லை. ஆனால் வந்து படித்தவர்களிடம் அதிகம் வசவுகள் வாங்காமல் நெசவு துணி போல் உருவான கட்டுரைகள் ஒவ்வொன்றும் எனக்கு ஏராளமாய் கற்றுத் தந்துள்ளது 
ஈழம் பற்றி நான் அதிகமாக எழுதக் காரணம் அதைப்பற்றி தான் இரண்டு வருடங்களில் நிறைய படித்துள்ளேன். 

மேலும் சென்ற தலைப்பில் சார்வாகன் கொடுத்துள்ள விமர்சனத்தைப் பாருங்க.  அது தான் முக்கிய காரணம். என்னுடைய புத்தகங்கள் பதிப்பகத்தில் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. கண்டிப்பு வாத்தியாராக இருப்பதாலும், அவர்களின் கடந்த ஆறு மாத கவனங்கள் தொல்காப்பியம் என்ற 3000 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் இருப்பதாலும் மட்டுமே தாமதம். இதற்கிடையே அணைவருக்கும் தெரிந்த பிரபலமான நிறுவனத்தில் உள்ள பொறுப்பாசிரியர் அடிமைகள் குறித்து எழுதச் சொல்லியிருந்தார். தெரியாத விசயங்களைப் பற்றி எழுதும் போது எத்தனை சவாலானது என்பது உணர்ந்து கொண்டேன். 

பத்து அத்தியாயங்களுக்கு மேல் என்னால் நகர்த்த முடியவில்லை. அவரும் பொறுமையாக பலவிசயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். அவருக்கு என் வணக்கம். ஆனால் இதன் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் அவலவாழ்க்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  

மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று பெயர் வருவதால் எனது ஆசான் மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் தான் தேவியர் இல்லத்து குழந்தைகள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்று ஒரு முறை குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்களின் நோட்டில் எழுதிக் கொடுத்து வாழ்த்துரைத்தார். 

அதையே இந்த வலைதளத்திற்கு பெயராகவும் வைத்துள்ளேன். வேறெதும் சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை. 

2004 முதல் எழுதிக் கொண்டிருப்பவர்களின் தளத்தை கூகுளில் தேடும் போது அவர்கள் தளத்தில் மாதவாரியான விபரங்களையும் பார்க்க முடியும். கடந்த சில மாதங்களாக தேவியர் இல்லத்திற்கும் அந்த அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளார்கள். இது தவிர நேற்று அவர்களிடம் இருந்து எனது தளத்தின் ஒரு வருட செயல்பாடு குறித்து ஒரு நீண்ட அறிக்கை வந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.  நிறைய விசயங்களைப் பற்றி குறிப்பாக அரசியல் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும் உடல் நல குறைவால் எழுதமுடியவில்லை.  காரணம் நான் தேர்தல் சமயத்தில் எழுதிய கட்டுரைகள் அத்தனையும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

அதன் நம்பகத்தனமை உங்களுக்கு பல புரிதல்களை உருவாக்கக்கூடும். 

மறுபடியும் தொழில் வாழ்க்கையில் இப்போது மீண்டும் குறியீட்டுப் புள்ளிகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் இதற்கென்று தற்போது அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. படிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே போய்க் கொண்டு இருக்கிறது.  எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எழுதி என்ன ஆகப்போகின்றது?
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கையில் இப்போது இந்த மடிக்கணினி விளையாட்டுப் பொருளாக மாறி என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின ஆர்வத்தை சுதந்திரத்தை கெடுக்க விரும்பாமல் பெரும்பாலும் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கத்தான் நேரமிருக்கின்றது.  

ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு நான் பலவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். பலரும் சென்ற கட்டுரையின் போதே தங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்தியிருந்தார்கள். 

அணைவருக்கும் என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கின்றேன். கூகுள் ஆண்டவர் ஒருவரின் ஜாதக விபரங்கள் போல் நம் தளத்தைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிரித்து ஏராளமான விசயங்களைக் கொடுத்துள்ளார்கள்.  இந்த ஒரு விசயம் மட்டும் போதுமானது. 

நமக்கு ஓட்டு முக்கியமா? ஈ மொய்ப்பது முக்கியமா? பிரபல்யம் என்ற பட்டம் முக்கியமா? அல்லது பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை,  நாம் வாழும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த வலைபதிவுகள் மூலம் பகிரிந்து கொள்வது முக்கியமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.



.

 Traffic Sources

.
% Visits from Sources11/1/09 - 2/1/1011/1/10 - 2/1/11Difference
Direct36.5%36.8%+0.3%
Referral21.0%19.4%-1.6%
Search Engines27.0%28.0%+1.0%
Other15.5%15.8%+0.3%