Showing posts with label திருப்பூர் தொடர் நிகழ்வுகள். Show all posts
Showing posts with label திருப்பூர் தொடர் நிகழ்வுகள். Show all posts

Saturday, October 12, 2013

குதியாட்ட டாலரும் திருப்பூரின் இறக்குமதியும்

என்னப்பா இன்றைக்கு டாலர் டான்ஸ் ஆடுமா? இல்லை குதிக்குமா?

திருப்பூரில் நடைபயிற்சிக்கென காலையில் நடந்து செல்லும் ஏற்றுமதியாளர்களை நீங்கள் கடந்து செல்லும் போது நிச்சயம் இது போன்ற உரையாடல்களை கட்டாயம் கேட்கமுடியும்.  இன்று திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் காலையில் செய்தித்தாளை பிரித்ததும் முதலில் பார்ப்பதே இந்த டாலர் யூரோ பண மதிப்புகளைத் தான். 

அதற்குப்பிறகே திருப்பூரில் உள்ள எழவு செய்திகளை படிக்கத் தொடங்குகின்றார்கள்.  

முதலில் படிக்கும் செய்தியை வைத்து இன்று வங்கியில் ஆவணங்களை வங்கியில் கொண்டு போய் கொடுக்கலாமா? இல்லை நாளை டாலர் மதிப்பு ஏறியவுடன்  கொடுக்கலாமா? என்று யோசிக்கின்றார்கள்.  இரண்டாவது செய்தியை படித்தவுடன் தான் எப்போது குளிக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகின்றார்கள். 

ஏற்றுமதி தொழிலில் இருந்தால் ஏறிக்கொண்டிருக்கும் டாலர் மதிப்பால் நல்லது தானே என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

அந்த நிறுவனம் திருப்பூரில் முக்கியமான நிறுவனம்.  ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனமும் கூட. வாரத்திற்கு ஒரு முறை ஏற்றுமதி செய்து ஒன்று இரண்டு பில்களை (INVOICE) வங்கிகளில் கொடுக்கும் நிறுவனங்களைப் போலில்லாமல்   வங்கியின் அலுவலக தினங்களில் தினந்தோறும் இரண்டு மூன்று கோடிக்கான ஏற்றுமதி செய்யப்பட்ட ஆவணங்களை வங்கியில் கொடுப்பது வாடிக்கை.  

இது போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கன் டாலரின் ஏற்றம் என்பது பம்பர் லாட்டரி  அடித்தது போல இருக்கும்.  மொத்தமாக  இரண்டு லட்சம் அமெரிக்கன் டாலர் உள்ள பில்களைக் கொண்டு போய் வங்கியில் கொடுக்க, அன்றைய தினத்தின் அடிப்படையில் ஏறிய அமெரிக்க டாலர் மூலம் குறைந்தபட்சம் இந்திய பண மதிப்பில் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் கூட தனியாக கிடைக்கும். இந்த தொகையின் அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத் தொகையின் அளவும் எகிறும். மாதத்தில் 24 நாட்கள் என்று கணக்கு போட்டுப் பார்த்தால் கூட இந்த தொகையே இரண்டரை கோடி என்கிற அளவுக்கு அந்த நிறுவனத்திற்கு உபரி லாபமாக கிடைக்கும்.

ஆகா நல்லது தானே?  என்று சொல்பவர்கள் மட்டும் சற்று முன்னால் வாங்க. உங்களுக்கு மட்டும் ஒரு சின்ன ரகசியம்.  

இது போன்ற நிறுவனமும் இப்போது நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.  ஆச்சரியமாக இருக்கின்றதா?  

உங்களை வெளியே ஓட விட்டு தாக்கினால் என்ன செய்வீர்கள்? முடிந்தவரைக்கும் வேகமாக ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பீர்கள். அதுவே ஒரு அறைக்குள் வைத்து அடிக்கத் தொடங்கினால்?  ஒன்று எதிர்த்து தாக்க வேண்டும் அல்லது அடியை வாங்கிக் கொண்டு அழுது கொண்டு தான் இருக்க வேண்டும்.  

தற்போது திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள்  ஊமைக்காயங்களை வெளியே சொல்ல முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தற்போது இந்தியாவில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடப்பது இரண்டு முனை தாக்குதல் அல்ல.  நான்கு முனைத்தாக்குதல்களில் நாடி நரம்பெல்லாம் கழன்று போய் பேயை பார்த்தவன் கதையைப் போல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மின்சார பற்றாக்குறை, எரிபொருளின் விலையேற்றம், ஆய்த்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை என்று திரும்பிய பக்கமெல்லாம் திகில்பட காட்சிகள் போல இருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கொள்கைகளை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் கொண்டு வந்த போது வானாள புகழ்ந்தவர்கள் இப்போது அது திரும்பி தாக்க முழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.  

சற்று விபரமாக பார்ப்போம்.

இந்த கட்டுரையை எழுதும் நாளில் அமெரிக்கன் டாலரின் மதிப்பு 70 ரூபாய். ஆனால் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் வைத்துள்ள ஒவ்வொரு ஒப்பந்தங்களும் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு அது அன்றைய தின அமெரிக்கன் அல்லது யூரோ நாணய மதிப்பில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.  சிலர் பார்வேர்ட் காண்ட்ராக்ட் போட்டு வங்கியுடன் குறிப்பிட்ட நிலையான பண மதிப்பை பெற்றிருப்பர்.  சிலரோ ஏறப்போகும் அமெரிக்கன் டாலரை நினைத்து வழி மேல் விழி வைத்து காத்திருப்பர்.  

முன்பு ஏறி இறங்கி என மாறிக் கொண்டிருக்க அமெரிக்கன் டாலரின் மதிப்பு தற்போதைய இந்திய பொருளாதார மேதைகளின் செயல்பாட்டால் சர் என்று எகிறிக் கொண்டிருக்கின்றது. இனி இறங்க வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு பல ஏற்றுமதியாளர்களுக்கும் உருவான மகிழ்ச்சி நிலையானதாகவும் இல்லை.  காரணம் பையில் வைப்பது போல வைத்து அப்படியே எடுத்துக் கொண்டது போல கிடைத்த லாபமெல்லாம் கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றது.

இந்த தொழிலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் சற்று விபரமாக பார்ப்போம்.

இன்று பஞ்சாலை தொழில் முற்றிலும் நவீனமாக்கப்பட்டு விட்டது. 80 சதவிகித எந்திரங்கள் வெளிநாடுகளிலில் இருந்தே இறக்குமதியாகின்றது.  வளர்ந்த நிறுவனங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடத்தில் மொத்த நிறுவனமும் இயங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 

ஆனால் இந்த எந்திரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வேண்டிய உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் டாலர் மதிப்பில் கிடைக்கும் லாபங்கள் டான்ஸ் ஆடத் தொடங்குகின்றது. இந்தியாவில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலை மற்றொரு பிரச்சனையில் தவிக்கின்றது. 

இந்தியாவில் வெங்காயத்தின் விலை தங்கம் போல எகிற வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற போது நம் சரத்பவார்  நாம் ஏற்றுமதி செய்யாவிட்டால் மற்ற ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்.  இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை போய்விடும் என்ற அழகான வசனத்தை நாம் படித்து விட்டு மறந்து போயிருப்போம்.  

ஆனால் பஞ்சாலை தொழிலில் உள்நாட்டு நிறுவனங்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் பஞ்சு அனைத்தும் வெளிநாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உடனடி லாபத்தை கணக்கில் கொண்டும், உடைக்க முடியாத லாபியும் சேர்ந்து இந்த பஞ்சு வெளியே பறக்க காரணமாக இருக்கின்றது.  

வாங்கிப் போட்ட கோடிக்கணக்கான வெளிநாட்டு எந்திரங்களில் உற்பத்தியாகும் நூலும் கூட பல இடங்களில் நூறு சதவிகித ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் கடல் கடக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று பின்னலகம் என்று சொல்லப்படுகின்ற நிட்டிங் துறையில் உள்ள எந்திரங்களும் இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக எந்திரங்கள் மூலமே துணியாக மாறுகின்றது. இந்த எந்திரங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்கள் தவிர தினந்தோறும் தேவைப்படும் பலதரப்பட்ட ஊசிகள் அனைத்தும் இன்று வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்தே இந்த துறை இயங்குகின்றது. மாதம் தோறும் இந்த ஊசி சந்தை என்பது பல கோடிகளைத் தாண்டும். ஜெர்மனி, தைவான், கொரியா , சீனா போன்ற நாடுகளே இதில் முன்னிலையில் இருக்கின்றது.

சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சாப்ட் புளோ எந்திரங்களின் நவீனம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. சாயமேற்ற பயன்படுத்தும் முக்கிய சாயங்கள் இரண்டு நிலையில் உள்ளது.  ஒன்று உள்நாட்டு சந்தையில் உற்பத்தியாவது.  

ஆனால் அதன் முக்கிய மூலக்கூறுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்து இருப்பது. மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து நேரிடையாக பலவித சாயங்கள் இந்தியாவிற்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றது.  

இந்திய ரூபாய் பண வீழ்ச்சியின் காரணமாக நேரிடையாக விரைவாக பாதிக்கப்பட்டது இந்த சாயத்துறையே. தற்போது விற்கப்படும் அனைத்து ரக சாயங்களின் விலைகளும் 50 சதவிகிதம் விலையேறி உள்ளது. இதற்கு மேலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்பது இதன் விலையேற்றத்தை மேலும்  அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.  

அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின்படி சுத்திகரிக்கப்பட்ட சாய நீரை உருவாக்க சுத்திகரிப்பு நிலையத்தில் முக்கியமாக மெம்பரேன் என்றொரு சமாச்சாரம் தேவைப்படுகின்றது.  இது உப்பின் அளவை கட்டுப்படுத்தி அதை பிரிக்க உதவும் ஒரு சமாச்சாரம்.  சவ்வூடு பரவல் என்று பள்ளிக்கூடங்களில் படித்த விசயத்தை இப்போது நினைவுக்கு கொண்டு வந்தால் இந்த மெம்பரேன் குறித்து உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.  தண்ணீரில் உள்ள உப்புத்தன்மையை கட்டுப்படுத்துவது. 


இந்த மெம்பரேன் என்பது வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இறக்குமதி மூலமே பெறுவதால் மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த தொழிலில் புழங்குகின்றது.  

சாயம் தேவைப்படும் மற்றொரு துறை பிரிண்ட்டிங் துறைகளும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பிரிண்ட்டிங் துறையில் பயன்படுத்தப்படும் சாயமும் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதால் இறக்குமதி செய்யப்படும் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது.

மேலே சொன்ன துறைகளைப்போல எம்ப்ராய்ட்ரி துறையில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் முதல் முக்கியமாக தேவைப்படும் நூல் வரைக்கும் இறக்குமதி மூலமே அதிக அளவு பெறப்படுகின்றது. மொத்தத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்றைய சூழ்நிலையில் இங்கே ஒரு ஆடை கூட வெளியே வராது என்கிற அளவுக்கு எங்கெங்கு காணினும் புதிய பொருளாதார மாற்றங்கள் உருவாக்கிய நவீன வளர்ச்சியடா என்று நாம் வளர்ந்துள்ளோம்.  

ஆய்த்த ஆடையில் உற்பத்திக்கான ஒவ்வொரு அடியிலும் இன்று வெளிநாட்டு எந்திரங்களின் பங்களிப்பும், அவர்களின் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் முடங்கிப் போய்விடும் அபாயத்தில் தான் இன்றைய திருப்பூர் ஏற்றுமதி நடந்து கொண்டிருக்கின்றது. 

இந்த மாற்றங்கள் எல்லாம் ஏமாற்றத்தை தந்து கொண்டிருப்பது எப்படி?

இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வருவதற்குள் இத்தனை பிரச்சனைகளை கடந்து வந்த போதிலும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் டீசல் மூலம் தான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.  

இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் தன்னிச்சையான வானாளாவிய அதிகாரத்தினால் வாரந்தோறும் விலை எகிற இருப்பு வைப்பதா இல்லை இருப்பதை விற்று விடுவதா என்கிற நிலையில் தான் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள். 

(செப்டம்பர் 2013 ஆழம் மாத இதழில் வெளியான கட்டுரையின் விரிவாக்கம்.)

தொடர்புடைய பதிவுகள்


Sunday, September 09, 2012

ஆழம் -- 2வது படைப்பு -- டல்லடிக்கும் டாலர் நகரம்,



ஒவ்வொரு வாரத்தின் இறுதி மூன்று நாட்களும் திருப்பூர் நகர போக்குவரத்தில் நாம் நீந்தி தான் வரவேண்டியிருக்கும்.  மூச்சு திணறிவிடும்.  பிபி எகிறிவது போல படிப்படியாக வியாழன் தொடங்கும் சாலை போக்குவரத்து நெரிசல் சனிக்கிழமை அன்று உச்சமாய் இருக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களின் சம்பள தினம். தள்ளுவண்டி கடை முதல் டாஸ்மாக் கடை வரைக்கும் எங்கெங்கும் மனித தலைகளாகவே தெரியும்

சனிக்கிழமையன்று கடைநிலை தொழிலாளி கைகளில் கூட 500 ரூபாய் தாள்கள் சர்வசாதரணமாக புழங்கும், குறிப்பாக அவினாசி, பல்லடம், பெருமாநல்லூர் சாலைகளில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் அளவிற்கு ஜனக்கூட்டம் பிதுங்கி வழியும், எங்கு பார்த்தாலும் வாகன இரைச்சலும், மனிதர்களின் அவசர ஓட்டத்திற்குள் தான் நாமும் ஓட வேண்டியிருக்கும்,

இப்போது அத்தனையும் மாறிவிட்டது. ஏறக்குறைய ஞாயிற்றுக் கிழமை போலத்தான் தற்போதைய திருப்பூர் சாலை போக்குவரத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர், அநத அளவுக்கு இந்த ஊரின் முகமே மாறிப் போய்விட்டது. தென் மாவட்ட மக்கள் முதல் தஞ்சாவூர், திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களின் புகலிடமாக இருந்த இந்த உழைப்பாளர்களின் நகரம் சொல்ல முடியாத துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கிறது

ஏற்றுமதி நகரமாக பொருளாதார ரீதியாக உயர்ந்து கொண்டிருந்த திருப்பூர் தற்போது தற்கொலை நகரமாக, திருட்டூராக மாறி இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டது. 

1978 ஆம் ஆண்டு திருப்பூருக்கு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலுக்ககான அங்கீகாரம் கிடைத்ததுமுதல் இலக்காக 1985 ஆம் ஆண்டு 15 கோடி ஏற்றுமதி செய்தது, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த விவசாயக் குடும்பங்கள் ஓரு அளவிற்கு மேல் தங்கள் நிலங்களுடன் போரட வழியில்லாமல் திருப்பூர் பக்கம் நகர்ந்து வர திருப்பூரின் வளர்ச்சி மேலேறத் தொடங்கியது. வருடத்திற்கு வருடம் உழைப்பவ்ர்களின் கூட்டம் அதிகமாக ஆய்த்த ஆடைகளின் ஏற்றுமதியின் வளர்ச்சியும் செங்குத்தாக ஏறத் தொடங்கியது,  

இந்த வளர்ச்சி நம்ப முடியாத அளவிற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் 19,000 கோடியை எட்டியது, காரணம் தினந்தோறும் ஒருவர் 18 மணி நேரம் உழைப்பது என்பது திருப்பூரில் சர்வசாதரணமான விசயமாகும்,


இந்திய அளவில் மொத்த பின்னலாடை உற்பத்தில் 80 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் ஏற்றுமதி ஆகின்றது, திருப்பூரைப் போல இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களான பெங்களூரு, தில்லி, மும்பை, லூதியானா போன்ற இடங்களிலும் இந்த ஆய்த்த ஆடை தொழில் நிறுவனங்கள் இருந்த போதிலும் திருப்பூருக்குள் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் வேறு எங்கும் இல்லை என்பதே உண்மை,  

நூல் முதல் கடைசியாக பெட்டியாக லாரியில் ஏற்றி துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பது முதல் அத்தனை சார்பு தொழிலிலும் அருகருகே இருப்பதால் முதலீடு போட்டவர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடுகின்றது,  இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற இடங்களில் உள்ளவர்களும், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் திருப்பூர் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கின்றது,

ஏறக்குறைய வாழைமரத்தைப் போல இந்த பின்னலாடை தொழிலும்எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை, நூல் முதல் சாயமேற்றிய துணி வரைக்கும் அத்தனையிலும் காசு பார்க்க முடியும். ஏற்றுமதியான பிறகு கூட தரமில்லாத அந்த ஆடைகளுக்கு கூட உள்ளூர் சந்தை என்று தனியாக உள்ளது என்பதால் சிறு, குறு முதலாளிகள் நிறைய உலகம் இது, இதன் காரணமாகவே இங்குள்ள ஏற்றுமதி தொழிலைச் சார்ந்த சார்பு தொழில்கள் இங்கு அதிகம், சார்பு தொழிலும் அதனைச் சார்ந்த உப தொழிலுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ வழி செய்து கொண்டிருக்கிறது

பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் முதல் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் காமதேனு போல அவரவர் உழைப்புகேற்றவாரு வசதிகளை இந்த பனியன் ஏற்றுமதி தொழில் உருவாக்கி தருகின்றது,

சர்வதேச பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2,5 சதவிகிதமேஇதில் 1,5 சதவிகிதம் திருப்பூரிலிருந்து தான் ஏற்றுமதியாகின்றதுமத்திய அரசாங்கத்திற்கு தேவைப்படும் அந்நியச் செலாணியை ஈட்டித் தரும் முக்கிய ஊராக திருப்பூர் இருந்தாலும் கூட இன்று வரையிலும் இந்த ஊரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒரு துரும்மைப் கூட கிள்ளிப் போடவில்லை என்பது தான் உண்மை, இயல்பான உழைப்பில் அவரவருக்கு தோன்றிய வகையில் ஏறக்குறைய குடிசைத் தொழில் போல அபார உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு திருப்பூர் வளர்ந்துள்ளது,

உலகில் எந்த மூலையில் என்ன பிரச்சனை நடந்தாலும் அது உடனடியாக ஏற்றுமதி தொழிலில் பிரதிபலிக்கும்நிலையில்லாத டாலரின் மதிப்பு, வங்கிகளின் கெடுபிடித்தனம், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான், அத்தனையும் தாண்டி மேலேறி வரவேண்டும், இதுவே மத்திய மாநில அரசாங்கத்தின் வருடந்தோறும் மாற்றிக் கொண்டிருக்கும் கொள்கைகள் ஏற்றுமதியின் குரல்வளையை ஒரு பக்கம் நெறிக்க, மூலப் பொருட்களின் விலையேற்றங்கள் அடுத்த பக்கம் நெறிக்க மொத்தத்தில் முழி பிதுங்கி நிற்பவர்கள் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே

பழைய கல்கத்தாவிலிருந்து வந்த இந்த பின்னலாடை தொழில் இன்று சிறிய கிராமமாக இருந்த திருப்பூரை இப்போது மாவட்ட தலைநகராக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதுஆனால் மாவட்ட தலைநகருக்குண்டான எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த ஊரில் இல்லை.  அரசாங்கம் என்பது ஆமை போல நகர மண்ணின் மைந்தர்கள் முடிந்தவரையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்,

தேவையில்லாத செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல் முறையாக நிதி அமைச்சராக ப,சிதம்பரம் பதவியேற்றபோது ஏற்றுமதி செய்வதன் மூலம் மத்திய அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருந்த ஊக்கத் தொகையில் கைவைத்தார்அப்பொழுதே திருப்பூருக்கு முடக்குவாதத்தின் முதல்படி ஆரம்பம் ஆனதுஅது படிப்படியாக வளர்ந்து கடந்த ஆட்சியில் நிலவிய மின தடை பிரச்சனை முற்றிலும் இந்த தொழிலை முடக்கியே போட்டு விட்டது, இன்று ஆட்சி மாறிய போதிலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை, இன்று மூலப்பொருட்களின் விலையேற்றம், சாய்ப்பட்டறை பிரச்சனைகள், பருத்தி ஏற்றுமதியினால் உருவான செயற்கை தட்டுப்பாடு என்று மாறி மாறி இன்று பின்னலாடை நகரை பிணி நகராக்கிவிட்டது,

திருப்பூர் மூலம் அந்நியச் செலவாணியை ஆதாயமாக எதிர்பார்க்கும் மத்திய அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் எந்த கொள்கைதிட்டங்களையும் நடைமுறையில் கொண்டு வந்ததே இல்லை.  உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது, மாற்றம் என்பது மாறாதது தானே? ஆனால் எதிர்கால சவால்களை சந்திக்க தயார்படுத்தாத தொழில் முனைவோர்களுக்கு அரசாங்கம் வழங்காத ஆதரவினால் இந்தியாவில் உள்ள எத்தனையோ தொழில்கள் மூடுவிழாவை நோக்கி போய்க் கொண்டிருப்பதைப் போலவே இந்த ஏற்றுமதி தொழிலும் இறங்குமுகத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது,

தாராளமயமாக்கல் என்றொரு வார்த்தை உலகத்திற்கு அறிமுகம் ஆக திருப்பூருக்கும் போட்டியாக அண்டை நாடுகள் அத்தனையும் முழித்துக் கொள்ள சனி திசை திருப்பூருக்கு ஆரம்பம் ஆனதுபாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை இத்துடன் சீனா போன்ற நாடுகளின் பக்கம் இறக்குமதியாளர்களின் பார்வை திரும்பியதுகுறைந்த விலை என்பதே தாரகமந்திரமாக மாறிப்போனது, இறக்குமதியாளர்களின் குறைந்த விலை எதிர்பார்ப்பை ஈடு ஜசெய்யும் அண்டை நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு அந்தந்த நாடுகளின் கொள்கைகள் வேறு விதமாக உதவிகரமாக இருக்கிறது. 

வளர்ச்சியடையாத நாடுகளிலில் இருந்து இறக்குமதியாகும் பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரி இலவசம் என்பது உருவாக மொத்தமாக அத்தனை இறக்குமதியாளர்களும் இந்தியாவை புறக்கணிக்கத் தொடங்கினர். இதனை FREE TRADE AGREEMENT ஃப்ரி டிரேட் அக்ரிமெண்ட் என்கிறார்கள்,

திருப்பூருக்குள் இரண்டு உலகம் உண்டு, ஒன்று இந்திய சந்தையை அடிப்படையாக வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் உள்நாட்டு தயாரிப்புகளான பனியன் மற்றும் ஜட்டிகள், மற்றொன்று ஏற்றுமதி சார்ந்த அத்தனை வகையான ஆடை ரகங்களும், ஆனால் இரண்டு சந்தைகளுக்கும் நூல் என்பது முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது, அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் முதல் இப்போதைய சரத்பவார் வரைக்கும் கொண்டு வந்த பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன,  

பஞ்சாலைகளுக்கு தேவைப்படும் பருத்தி ஏற்றுமதி என்ற பெயரில் பறக்கத் தொடங்கியது. நம்மோடு தொழில் ரீதியான போட்டி போட்டுக் கொண்டுருக்கும் பக்கத்து நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதியாக அவர்கள் நம்மிடம் வாங்கும் பஞ்சை வைத்துக் கொண்டே சவாலே சமாளியாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலை உண்டு இல்லை என்று ஆட்டிப் படைக்கத் தொடங்கினர்.
  

ஏற்றுமதி என்ற நோக்கத்தில் விளைந்த பஞ்சுகளும் பதுக்கல் மூலம் கடத்தப்பட, இதற்கு மேலாக ஆன்லைன் வர்த்தகம் மூலம் பஞ்சின் விலை வானம் அளவிற்கு உயரத் தொடங்கினமின் தடை காரணமாக டீஸல் போட்டு பஞ்சாலையை ஓட்ட முடியாதவர்கள் படிப்படியாக தங்கள் உற்பத்தியைக் குறைக்க நாங்கள் வைத்தது தான் விலை என்று சந்தடி சாக்கில் மற்ற பஞ்சாலைகள் சிந்து பாடிக் கொண்டுருக்கிறார்கள். 

திருப்பூரிலிருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடை விலைக்கும் அண்டை நாடுகளின் விலைகளின் வித்தியாசம் இருக்க அத்தனை இறக்குமதியாளர்களும் திருப்பூரை புறக்கணிக்கத் தொடங்க போட்டி போட முடியாத ஏற்றுமதியாளர்கள் தங்களின் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இன்று வங்கியில் வாங்கிய கடனுக்கு பயந்து கொண்டு தொழில் என்ற பெயரில் ஒரு ஷிப்ட்டை ஓட்டிக் கொண்டுருக்கிறார்கள்.  இறக்குமதியாளர்கள் சொன்னபடி ஏற்றுமதிக்கு தேவைப்படும் அத்தனை வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் அமைத்து விட்டு இன்று ஒப்பந்தங்கள் இல்லாமல் பல பெரிய நிறுவனங்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகைமற்றொரு பக்கம் தங்களுடன் இருக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தக்க வேண்டிய அவசியம்ஒரு நிறுவனம் ஒரு வாரம் தொடர்ச்சியாக வேலை இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு தொழிலாளி எளிதாக வேறொரு நிறுவனத்திற்கு மாறி விடுவார்மறுபடியும் நினைத்த நேரத்தில் அந்த தொழிலாளியை வரவழைப்பது மிகக் கடினம்,  

இதுவே அந்த தொழிலாளி பல நிறுவனங்கள் மாறிச் செல்ல அவரின் சுய திறமையும் மங்கிப் போய் இன்றைய பிழைப்புக்கு என்ன வழி என்று சிந்தனைகளும் மாறிப் போய்விடுகின்றது, எவரை குற்றம் செர்ல்ல முடியும்? உழைப்பாளர்களின் உலகமான திருப்பூர் இன்று ஒப்பாரி வைத்தாலும் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை மனதிற்குள் திட்டிக் கொண்டுருக்கின்றது,

சில வாரங்களுக்கு முன்னால் இங்கு திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012 என்றொரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது,  பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் அரசாங்கத்தின் சார்பாக வந்திருந்த அதிகாரவர்க்கத்தினரிடம் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக வெளிப்படுத்தினர்,  இலவச செல்போன் கொடுக்க திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்க தயாராக இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டி இந்த ஊர் மக்களை காப்பாற்றப் போகின்றார்களோ?

நன்றி - 'ஆழம்' மாதாந்திர இதழ் 

Sunday, June 10, 2012

வேகத்தில் செத்து விடு

ஆறாவது படிக்கும் போது கிடைத்த கோடை விடுமுறையின் போது சைக்கிள் கற்றுக் கொண்டதாக ஞாபகம்.  அப்போது உடன் படித்த வகுப்புத் தோழன் அனந்த ராமனிடம் மட்டும் சைக்கிள் இருந்தது. அதுவும் அவன் அப்பா அரசாங்க ஊழியராக இருந்த காரணத்தால் அந்த வண்டியை ஞாயிறு கிழமை சமயத்தில் மெதுவாக நகர்த்தி எடுத்துக் கொண்டு வரச் செய்தோம். அந்த சைக்கிளை வைத்து குரங்கு பெடலை அடித்து அடித்து நாலைந்து நாட்களில் யெ.மு வீட்டுச் சந்தில் நன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டேன்.  

அந்த சைக்கிள் மூலம் மற்ற சந்துகளுக்கும் பயணம் செய்த போது தொடங்கிய வேகம் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருந்தது.  குரங்கு பெடலில் இருந்து கை விட்டு ஓட்டும் அளவுக்கு வளர்ந்தது.  பேய் வேகம் போல சந்துகளில் ஓட்டியிருக்கின்றேன்.  அதன் பிறகே வீட்டுக்குள் இருந்த ஒரே சைக்கிளில் ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. அப்பா இல்லாத சமயங்களில் திருட்டுத்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  

சைக்கிளில் தொடங்கிய பயணம் பைக் வரைக்கும் வந்து நின்ற போது இன்னும் வேகம் அதிகமானது. பைக்கில் உள்ள ஆக்ஸிலேட்டர் என்ற பகுதி முறுக்குவதற்கு மட்டுமே என்று முடிந்தவரைக்கும் புகை பறக்க உயிர் பயமின்றி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு ஏறக்குறைய 13 வருடங்களுக்குப் பிறகு தான் மனதில் ஒரு நிதானம் வந்தது.  இரண்டு சக்கர வாகன ஆசையும் தீர்ந்தது. கூடவே முதுகு வலியும் நிரந்தரமாக வந்து சேர்ந்தது. 

மூச்சு முட்ட அசந்து போயிருக்கின்றேன்.  ஆனால் பயம் மட்டும் வந்ததே இல்லை.  நல்லவேளையாக பெரிதான எந்த விபத்திலும் மாட்டியதுமில்லை. ஓரே ஒரு முறை சென்னையில் பெரம்பூர் பெராக்ஸ் சாலையில் கொட்டிக்கிடந்த திரவங்களில் திரைப்படங்களில் வருவது போது பல அடி தொலைவு சறுக்கிக் கொண்டே போய் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது.

காலச்சக்கரத்தில் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது.  ஆட்டோ முதல் அத்தனை வண்டிகளையும் ஓட்டியிருக்கின்றேன். ஓட்டும் வண்டியின் ஜாதகம் பற்றி எதுவுமே தெரியாமல் ஈரோடு செல்லும் சாலைகளில் இரவு பகல் பாராமல் பல முறை விரட்டி சென்று இருக்கின்றேன். சொந்தமாக கார் வந்த போதிலும் அந்த வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  முக்கிய காரணம் ஓட்டும் வாகனத்தின் உச்ச பட்ச வேகம் என்ன? எப்படி கையாள வேண்டும்? அதன் குதிரைதிறன் வேகம் என்றால் என்ன? அதன் எதிர்விளைவுகள் என்று எதையுமே யோசிக்காமல் உடைந்த சாலைகளில் வேகத்தை குறைக்காமல் கியர் மாற்றாமல் மடையனாக ஓட்டிச் சென்றுள்ளேன்.  பல முறை வண்டிக்குத் தேவையான செலவுகளை அழுது கொண்டே செய்துள்ளேன். 

எண்ணங்கள் மட்டுப்படவில்லை.  மனதில் எந்த மாறுதல்களும் உருவாகவில்லை.

இன்னும் லாரியில் மட்டும் ஏறியதே இல்லை.  மற்றபடி அத்தனை வாகனங்களிலும் ஏறி இறங்கியாகி விட்டது. அந்த அளவுக்கு இந்த நான்கு சக்கர வாகன பைத்தியம் பாடாய் படுத்தியது.  ஒவ்வொருவருக்கும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெரிய மாறுதல்கள் உருவாகும் என்பது பொது விதி.  ஆனால் அதிலும் நான் விதிவிலக்காக இருந்துள்ளேன்.  ஆனால் சண்டிக்குதிரையை உலுக்கிப் பிடிக்க வருபவர்கள் தான் குழந்தைகள் என்பதை தான் மெதுவாக கண்டு கொண்டேன். 

குழந்தைகள் வளர வளர, குடும்பத்தினருடன் வாகனத்தில் வெளியே செல்லும் போது மனம் படும் சொல்லி மாளாது.  எத்தனை பேர்களை கதறடித்தோமோ?  எந்தந்த சமயத்தில் பயங்காட்டினோமோ தெரியவில்லை. அதன் மொத்த அவஸ்த்தைகளையும் இப்போது தான் கண் எதிரே அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.  கூடவே நமது சாலைகளின் அவலங்களையும் பயணிப்பவர்களின் புத்திசாலிதனத்தையும் ரொம்பவே யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இப்போது ஓட்டிக் கொண்டிருக்கும் வாகனத்தின் சிசி அளவு 2000.  ஆனால் குடும்பத்தினர் உங்களுக்கெல்லாம் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி தான் லாயக்கு என்று கிண்டல் செய்யும் அளவுக்கு மிதி வண்டி வேகத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். 


ஒரு வாகனத்தின் முழுமையான குதிரைத்திறன் வேகம் எப்போது தெரிய வருகின்றது என்றால் நாம் கூட்டத்திற்கிடையே ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும் சூழ்நிலையில் தான் புரிகின்றது. அந்த சூழ்நிலையில் தான் அந்த வாகனத்தை நாம் எந்த அளவுக்கு கையாளவேண்டும் என்ற புத்திசாலித்தனம் புரிகின்றது.  ஆனால் பாதசாரிகளுக்கு அதை புரியவைக்க முடியாது என்பதையும் உள் மனம் சொல்லத் தான் செய்கின்றது.  எவர் மேலாவது இடித்தால் மகா குற்றம்.  வண்டியை மற்ற வாகனங்களில் இருந்து இடிபடாமல் கர்த்துக் கொள்வதும் அதை விட முக்கியமாக இருக்கிறது.

கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர்களை அழைத்து வரும் பொறுப்பின் காரணமாக சென்றவனுக்கு கூடுதல் பரிசாக கடலூர், பாண்டிச்சேரி வரைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.  கடல் அலைகளில் காலை நனைத்தே ஆக வேண்டிய கட்டாய நிர்ப்பந்ததையும் உருவாக்கினார்கள். ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த அந்த பயணத்தின் போது சாலை விபத்துகள் இந்தியாவில் ஏன் இந்த அளவுக்கு தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்..

சேலத்திற்கு பல முறை நான்கு சக்கர வாகனங்களில் தொழில் நிமித்தமாக சென்றுள்ளேன். ஈரோட்டுககுச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் சங்ககிரி வழியாக செல்லும் மாற்றுச் சாலையில் சென்றுள்ள போதும் இயல்பான வேகத்தில் தான் சென்றுள்ளேன். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த சாலை வசதியில் ஒவ்வொருவரும் நிதானமான வேகத்தில் பயணிக்க முடியும். இடையிடையே வரக்கூடிய ஊர்களில் உள்ள கடைத்தெருக்களில் உள்ள கூட்டத்தை தாண்டிச் சென்றால் கொஞ்சம் கூடுதலான வேகத்தில் செல்ல முடியும்.. 

ஆனால் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் சொல்லி வைத்தாற் போல் நாம் ஓட்டிச் செல்லும் வாகன வேகத்திறன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விட முடியும், தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் ஒட்டுநர்களுக்கு கிடைத்த வேகம் அலாதியானது. 


ஆனால் இந்த ஆனந்தமான பயணத்திற்கு சமூகம் கொடுத்த விலை துயரமானது. மரங்களே தேவையில்லை என்பது போன்ற சூழ்நிலையை எளிதாக உருவாக்கி விட்டார்கள். கூடவே தேசிய நெடுஞ்சாலை பயணம் என்பது மிக மிக ஆபத்தானது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.  குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் நீங்கள் பயணித்திருந்தால் உங்கள் உயிர் உங்கள் கைகளில் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

வண்டிகளில் உள்ள விளக்கு வசதிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள மறுக்கும் ஒரு முட்டாள் சமூகத்தை தாண்டி தான் நீங்கள் உயிருடன் வீட்டுக்கு வர வேண்டும்.  கண்களை கூச வைக்கும் விளக்கை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி போட்டுக் கொண்டு ஸ்பைடர் மேன் போல பறந்து வருவதைப் பார்த்து பல முறை உலகில் உள்ள அத்தனை சக்தியையும் வேண்டிக் கொண்டு ஒரு ஓரமாக நிறுத்திக் கொண்டதுண்டு. இதன் காரணமாக இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல வேண்டிய அவசிய சூழ்நிலை உருவானாலும் அடுத்த நாள் பகலுக்கு அதை மாற்றிவிடுவதுண்டு. 

திருப்பூருக்குள் பயணிக்கும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திலும் ஊருக்குச் செல்லும் போது அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் ஓட்டும் வழக்கத்தை கொண்டுள்ள எனக்கு தேசிய நெடுஞசாலையில் செல்லும் வண்டிகளின் வேகத்தைப் பார்த்தால் மனதில் கிலியடிக்கின்றது.  உத்தேசமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பறக்கின்றார்கள். டெயோட்டா காரில் நண்பர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் சென்றடைந்தாக சொன்ன போது ரயிலின் வேகத்தை ஒப்பிட்டுக் கொண்டேன். 

தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களுக்கு அற்புதமான வசதிகள் இருக்கிறது.  இந்த வசதிகளுக்காகவே வரி என்ற பெயரில் கொள்ளை ரூபத்தில் வசூலிக்கிறார்கள்.  ஆனால் சாலைகளின் இடையே விபத்து எதுவும் நடந்தால் நிச்சயம் உங்கள் ஜாதகத்தை தான் நம்பிக் கொள்ள வேண்டும்.

அருகில் மருத்துவமனை எங்கே உள்ளது? அந்த மருத்துவமனைக்கு உங்களை யார் கொண்டு போய் சோர்ப்பார்கள்?  எப்போது சேர்ப்பார்கள் என்பதெல்லாம் படைத்தவனுக்கே தெரியும்? எந்த இடங்களிலும் எந்த வசதியும் இல்லை.  நாம் தான் நம் உயிருக்கு உத்திரவாதம்.  ஆனால் எவரும் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. குறிப்பிட்ட இடங்களைப் பற்றி அறிவிப்பாக விளக்கும் தெளிவான வசதிகள் இன்னமும் மேம்படுத்த வேண்டும்.  கொஞ்சம் அசந்தாலும் வேறு பாதையில் நாம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

நாம் ஓட்டும் வண்டியில் வேக முள் நூறைத் தொடும் போது குடும்பம் நினைவில் வந்து போகின்றது.  காரணம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போதிலும் எப்போது என்ன நடக்கும் என்பதே புரிந்து கொள்ள முடியவில்லை.  திடீரென்று ஒரு வாகனத்தில் குறுக்கில் இருந்து ஒருவர் வருகின்றார்.  அதைத் தாண்டி சென்றால் முன்னால் சென்று கொண்டிருப்பவர் திரும்பப் போகின்றேன் என்ற சமிக்ஞை இல்லாமல் சர்ரென்று திரும்புகின்றார். 

வியர்த்து விடுகின்றது.   

ஏற்கனவே ஈரோடு செல்லும் பாதைகளில் இருந்த மிச்சம் மீதி மரங்களைப் பார்த்த எனக்கு தற்போது எங்கு பார்த்தாலும் பொட்டைக்காடுகளாகத் தெரிகின்றது.  நான் பயணித்து வந்த ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மரங்களே இல்லை என்கிற அளவுக்கு நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகம்.  வாகனத்தில் உள்ள குளிர்சாதன வசதியை பயன்படுத்த விரும்பாத எனக்கு அடிக்கும் வெக்கையில் மயக்கமே வந்து விடுகின்றது. நாம் சொந்த விருப்பங்களை குடும்பத்தினர் மீதி திணிக்க முடியாத சூழ்நிலையில் அடிக்கும் வெக்கை காற்றில் குழந்தைகளில் மூச்சு முட்டி மயக்கம் போடும் நிலைக்கு வந்து விடுகின்றார்கள். மரங்களை மட்டும் இழக்கவில்லை.  வசதிகளுக்காக மனிதத்தையும் இழந்து தற்கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..  

வெளிநாடுகளில் முறைப்படியான ஓட்டுநர்கள், உரிமங்கள், அது தொடர்பான சட்டங்கள், குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை என்ற சூழ்நிலை எதுவும் இந்தியாவில் இல்லை.  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூருக்குள் துணை நிறுவனங்கள் முதல் சுமாரான நிறுவனங்கள் வரைக்கும் சுமாரான சம்பளம் என்பதை மனதில் வைத்துக் கொண்டே ஓட்டுநர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். இவர்களைத்தான் தங்களது அத்தனை வாகனங்களுக்கும் ஓட்டுநர்களாக வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் தென் மாவட்டத்தில் உள்ள வண்டிகளில் கிலி (கீளீனர்) யாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சந்தர்ப்ப வசதிகளை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்களாக அவதாரம் எடுத்தவர்கள்.

இவர்கள் தான் திருப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை கிலியடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற மொத்த நாட்டிலும் ஓட்டுநர்களின் தரம் இருக்கின்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்டமும் ஒரு குறிப்பிட்ட துறைக்கு தனிப்பட்ட முறையில் லஞ்சத்தை உருவாக்க காரணமாக இருக்கிறதே தவிர உருப்படியான முடிவு கொண்டு வருவதாக இல்லை. 

இதைப் போலவே தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் 70 சதவிகித விபத்துக்கள் மனிதர்களின் அவசரத்தினால் மட்டுமே நடக்கின்றது. முக்கிய காரணம் நாம் அவரை முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாகின்றது.  பின்னால் வந்து கொண்டிருப்பவர்கள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் முந்திச் செல்ல முற்படும் போது தான் உருவாகின்றது. எதிரே வரும் வண்டியின் அதிகபட்ச வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு வாகன்த்தில் உள்ளவர்களும் பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.  கூடவே அருகே வரும் வண்டியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பரிசும் கிடைத்து விடுகின்றது.  நாம் முறைப்படி சாலை விதிகளை கடைபிடித்துச் சென்றாலும் நாம் சரியாக வீடு வந்து சேர முடியுமா? என்பது நிச்சயமற்ற நிலையில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. 
இது தவிர பாயிண்ட் டூ பாயிண்ட் என்று சாலைகளில் பறக்கும் தனியார் பேரூந்துகள் என்ற பெயரில் எமதர்ம ராஜாக்கள் பலரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் வாகன்த்திற்கு பின்னால் வரும் போது இவர்கள் அடிக்கும் அலார சப்தம் என்பது உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால் நிச்சயம் மாரடைப்பில் இறந்து விடுவீர்கள். 

நாரசாரமான சங்கேத மொழி போல தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே வருவார்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள கோபப்படாமல் ஒதுங்கியே ஆக வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் அருகே சாலையை கடக்க முற்பட்ட பள்ளிக்குழந்தை ஒன்று எதிரே வந்த லாரியின் வேகத்தைப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் நடு சாலையில் அப்படியே நின்று விட்டது.  கூட வந்த மற்ற குழந்தைகள் ஓடி விட்டார்கள்.  வந்த லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர் குழந்தையின் மேல் ஏற்றி நூறடி தாண்டி தான் அவரால் நிறுத்த முடிந்தது.  கண் எதிரே கண்ட எனக்கு அந்த குழந்தையின் சிதைந்த உறுப்புகள் துடித்த துடிப்புகளில் என்து இதயமே நின்று அழுகை என்னை அறியாமல் வந்து விட்டது.  

அந்த குழந்தையின் பெற்றோர்கள் காலையில் எப்படி அனுப்பியிருப்பார்கள்? இந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரியுமோ? தெரியாதோ? எத்தனை மணிக்கு தகவல் சொன்னார்கள்?  அவர்களுக்கு இந்த குழந்தை ஒன்று மட்டும் தானா?  பல கேள்விகள் என் மனதில் வீட்டுக்கு வந்து சேரும் வரைக்கும் ஓடிக் கொண்டேயிருந்தது.  உருவான கை கால் நடுக்கத்தில் வாகனத்தைக் கூட சரியாக கையாள முடியவில்லை. நிச்சயம் அந்த விபத்தை உருவாக்கிய ஓட்டுநருக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் எந்த பெரிய பிரச்சனைகளையும் அவர் வாழ்க்கையில் உருவாக்கி விடாது. இன்னும் நாலைந்து மாதங்களில் அவர் இது போல எத்தனை விபத்துக்களை உருவாக்குவாரோ?

இதில் ஆச்சரியப்படக்கூடிய ஒரே ஒரு சமாச்சாரம் என்ன தெரியுமா?  

ஒருவர் தான் பயணிக்கும் பாதையில் பார்க்கும் எந்த கோர விபத்தும் அவரை எந்த நிலையிலும் பாதித்ததாக தெரியவில்லை.  அவர்களின் வேகமும் குறைந்ததாக தெரியவில்லை.  

எந்த வாகனத்தில் சென்றாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். 

நமது மனம் எதைக்கண்டும் கோபப்படாமல் நிதானமாக இருந்தே ஆக வேண்டும். எந்த சேதாரமும் இல்லாமல் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும்  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றேன் என்ற நினைத்துக் கொண்டு நடு சாலையில் அவர்களுட்ன் மல்லுக்கட்டி நிற்பதைக் காட்டிலும் எப்படி சரியாக சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் கடைபிடித்து அமைதியாக வந்து விட்டாலே போதுமானது. 

அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம் உயிர் நம் கையில்.

காரணம் இது காந்தி தேசம்.  நாம் தான் நமக்குத் தேவையான அளவுக்கு சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, May 23, 2012

பணக்கார வாரிசுகள்


 பணக்காரர்களின் உலகம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதோவது யோசித்து பார்த்ததுண்டா? உங்களைப் போலவே நானும் பத்திரிக்கைகளில் வரும் உலக பணக்காரர்களின் வரிசைகள் முதல்,  உள்ளூர் பணக்கார்களின் வரிசைகள் வரையிலும் படித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

மற்ற நாடுகளின் எப்படியோ? ஆனால் இந்தியாவில் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் மிகப் பெரிய புத்திசாலிதனமோ, கடுமையான உழைப்போ தேவையில்லை.  ஆனால் நிச்சயம் சாமர்த்தியம் என்பது அவசியம் தேவை.  குறிப்பாக தரகு வேலை பார்க்கத் தயாராக இருந்தால் எந்த துறையிலும் எளிதாக ஜெயித்து மேலே வந்து விடலாம்.

நாம் பேசப் போவது பணக்கார உலகத்தின் அரசியல்,பண செல்வாக்கைப் பற்றியல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பணம் கடத்தப்படுத்துவதும், அதை கையாளும் வாரிசுகளின் வாழ்க்கையைப் பற்றியுமே பேசப்போகின்றோம்.

சாதாரண நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கையின் போராட்டத்தை போல இவர்களின் போராட்டங்கள் எது குறித்து இருக்கும்? எப்படி இருக்கும் என்பது போன்ற பல கேள்விகளை அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. அதை இப்போது மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மனதில் இருக்கும் ஆச்சரியங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

திருப்பூரில் நான் கடந்து வந்த பாதையில் பார்த்த பல முதலாளிகளின் வாரிசுகளை தொடக்கம் முதலே பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் பல விசயங்களை உத்தேசமாகத்தான் மனதில் வைத்திருந்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கும் முதலாளிகளின் வட்டத்திற்கும் இடையே பல படிகள் இருந்தன,  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளும் முன்பே அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் எதையும் மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் கடந்து வந்துள்ளேன்.  ஆனால் தற்போதுள்ள பதவியின் காரணமாக மங்கலாக பார்த்த பல விசயங்களை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

வியப்பு ஒரு பக்கம்.  வேதனை மறு பக்கம்.

நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு வெளி உலகம் அறிமுகம் ஆனது முதல் இன்று வரை தினந்தோறும் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள். திருப்பு முனைகளை சந்தித்துக் கொண்டே தான் வருகின்றேன். இருந்த போதிலும் பல புதிர்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதார்த்த வாழ்க்கையின் ஆச்சரியங்களை வேடிக்கை பார்த்துக கொண்டிருக்கின்றேன்.  

இந்தியாவில் உள்ள சொல்லி மாளமுடியாத ஏற்றத்தாழ்வுகளும் அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும் தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும் என்னை ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கின்றது. தவறு யார் மேல்? என்பது போல பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அதற்கான முழுமையான விடைகள் கிடைத்தபாடில்லை.  ஒன்றோடு மற்றொன்று, அதோடு இன்னோன்று என்று ஒவ்வொரு மனிதர்களின் குறைகளும் நிறைகளும் கண்ணில் தெரிகின்றது. மொத்தத்தில் உழைக்க விரும்பாதவர்களின் கூட்டம் மட்டும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றது,.

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் கல்லூரி வரைக்கும் ஒரு ஆசையும், வேலைக்கு வந்த பிறகு மற்றொரு விதமாகவும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். வாழ்ந்து முடிக்கும் போகும் ஏக்கத்தை மட்டும் தங்களின் வாரிசுகளுக்கு கடத்தி விட்டு இறந்தும் போய் விடுகின்றனர். பல நடுத்தரவர்க்க இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கையை பணம் படைத்தவர்களின் வாரிகளின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் பணக்காரர்களின் குடும்ப வாழ்க்கையென்பது வேறுவிதமாகவே உள்ளது.

தொடக்கப்பள்ளி வாழ்க்கையில் பத்து பைசா ஐஸ்க்கு ஏங்கிய காலமும், பள்ளி இறுதியில் எப்படியாவது ஒரு திரைப்படத்திற்கு போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்தை கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது.  கட்டுப்பாடுகள் ஒரு பக்கம். கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டளைகளை மறுபக்கம். இத்தனையும் கடந்து வந்து தான் என்னுடைய இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தனிப்பட்ட என் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாத போதும் கூட லட்சியங்களை எட்ட முடியாதவர்களின் வாழ்க்கையை மறுபக்கம் பார்க்க வேண்டியதாக உள்ளது.

ஆனால் திருப்பூருக்குள்ளும் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பல நிறுவன முதலாளிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி வாழ்க்கையென்பது வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கைக்கு சரி சமமாகவே இருக்கிறது.  கலாச்சார சிதைவு என்று ஒரு சொல்லில் இதை கொண்டு வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும் ஒரு நிறுவன சாம்ராஜ்ய  சரிவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்பது தான் உண்மை.  பள்ளிக்கூட படிப்பறிவு உள்ள ஒருவர் தன் கடுமையான உழைப்பால் 30 வருடங்களாக பாடுபட்டு சேர்த்து உருவாக்கிய ஒரு ஏற்றுமதி நிறுவன சாம்ராஜ்யத்தை வாரிசுகள் பொறுப்புக்கு வந்த நாலைந்து வருடங்களில் தலைகீழாக மாற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நிறுவனத்தின் நட்ட கணக்கினால் வாரிசுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால் இந்த நிர்வாகத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றது.

பணக்கார வாரிசுகளின் பள்ளி வாழ்க்கையென்பது வேறு விதமாக உள்ளது. இந்த பள்ளியில் தான் சேர வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொருவிதமான தராதரம். அந்த பள்ளியின் தரம் குறித்த கவலையை விட சமூக கௌரவம் அல்லது ஸ்டேடஸ் சிம்பல் என்பதாகத்தான் இவர்களின் வாழ்க்கை தொடங்குகின்றது. நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பும், சேர்த்த பிறகும் மனதில் கொண்டிருக்கும் கவலைகளை பட்டியலிட முடியாது. கல்வி குறித்த அக்கறை, எதிர்காலம் குறித்த கவலை, பிள்ளைகள் பெறவேண்டிய மதிப்பெண்களின் அவசியம் போன்ற எதுவும் பணக்கார வாரிசுகளுக்கு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்...

மொத்தத்தில் இவர்களுக்கு எது குறித்தும் கவலையில்லை. வாகனம், வண்டி, பாக்கெட் மணி, முதன்மையாகவும், கல்வியென்பது இரண்டாம் பட்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் பிஞ்சில் பழுத்த பழமாக வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டிய சந்தோஷங்களை உடனடியாக அனுபவிக்கும் வேகமும் என்னை ரொம்பவே யோசிக்க வைக்கின்றது.  ஒரு பள்ளியில் ஆறாவது படிக்கும் பையன் கெட் டு கெதர் பார்ட்டீ என்ற பெயரில் ஷாம்பெய்ன் மற்றும் பீர் போத்தல்களை பயணிக்கும் வாகனத்தில் கொண்டு போய் மொத்தமாக இறக்கி கொண்டாடிய கொண்டாட்டங்களை பார்த்த போது கனவா நிஜமா என்பது போலவே இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய பணத்தில் மட்டும் குறியாக இருப்பதால் மௌன சாட்சியாகவே அங்கீகாரம் கொடுத்து இவர்களை கெடுத்துக் கொண்டுருக்கிறது.

இவர்கள் தட்டுத்தடுமாறி பள்ளி இறுதியை தாண்டி விட்டால் போதும். நிச்சயம் ஏதோவொரு ஒரு வெளிநாட்டில் பணம் கட்டி அல்லது பணம் கொடுத்து ஒரு டிகிரியை வாங்க வைத்து விட்டால் வாரிசுகளின் கல்வி வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுகின்றது. நிச்சயம் ஆங்கிலம் பேசமுடியம். இந்த ஒரு தகுதியே போதும் என்ற நிலையில் இருப்பதால் சமூக, தொழில் அங்கீகாரத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடிகின்றது.


நம்மூர் சாதாரண பி.காம் பட்டப்படிப்புக்கு அமெரிக்காவில் தனது மகனை படித்து வைக்க ஒரு முதலாளி செலவளித்த தொகை ஒரு கோடி ரூபாய்.  பையன் இப்போது நிர்வாகத்திற்கு வந்து விட்டார். திருபபூருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் 12 வருடமும் குடும்ப வாடையே இல்லாமல் படித்து, குடும்பத்தினர் விரும்பியபடி வெளிநாட்டிலும் படித்து முடித்து நிர்வாக பொறுப்புக்கு உள்ளே வந்த முதல் வருடம் நிறுவனம் இழந்த தொகை சுமார் ஆறு கோடி. குடும்ப பாசமும் இல்லை. அப்பா உழைத்த உழைப்பின் அக்கறையும் தெரியாமல் அடுத்தது எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் எடுத்த முடிவுகளால் நிர்வாகம் தள்ளாடிக் கொண்டு மூடுவிழாவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிர்வாகத்திற்கு பாதிப்பு என்பதை விட நிர்வாகத்தை நம்பிய பல துணை நிறுவனங்கள் தெருக்கோடிக்கு வந்து பல பேர்கள் கடனுக்கு பயந்து காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் வாரிகளின் எண்ணங்கள் உயர்வாக இருக்கலாம். உழைப்பும், நேர்மையும் கூட அதிகமாக இருக்கலாம்.  ஆனாலும் இவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற நிர்வாக வாசனை தெரியாத கூமுட்டைகளிடம் தங்களை அடகு வைத்துக் கொண்டு வாழ வேண்டியதாக உள்ளது. இதிலும் சிலர் மட்டும் உடைக்கப்பட வேண்டிய வளையங்களை உடைத்துக் கொண்டு உன்னதமான இடத்தை நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Monday, September 05, 2011

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் -- புரட்சித்தலைவி


மற்ற ஊர்களில் எப்படியோ?  

ஆனால் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை முதலாளிகளுடன் பொதுமக்களும் நடந்து முடிந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளை தெரிந்து கொள்ள ரொம்பவே ஆவலாக இருந்தனர்.  

ஆட்சி மாற்றமா? அதே ஆட்சியா என்பது ஒரு திகில் கதையின் இறுதிப்பக்கம் போலவே இருந்தது.

காரணம் கலைஞர் கருணாநிதி.


அவர் ஆண்டு கொண்டிருந்த அரசாங்கத்திற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தது.  திருப்பூர் மேல் கரிசனம் காட்ட கடைசி வரைக்கும் அவருக்கு மனமில்லை.  சொந்த காரணங்களா? இல்லை கடந்த கால கோவை மாவட்ட ஓட்டு தான் காரணமா என்பதை இன்று வரை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. சொந்த காரணங்கள் என்றால் வதந்திகள் தினந்தோறும் ரெறக்கை கட்டி பறந்து கொண்டுருந்தன.  

எது உண்மை? எது பொய் என்பது கூட இன்று வரைக்கும் புரியாத புதிராக இருந்தது.

இப்போது சில விசயங்களை வெளிப்படையாக பேசித்தான் ஆக வேண்டும்.  

தயாநிதி மாறன் ஜவளித்துறைக்கு அமைச்சராக ஆன பிறகு அவரின் தனிப்பட்ட பார்வை பஞ்சாலை பக்கம் திரும்பியது. குறிப்பாக மாறன் தொலை தொடர்புக்கு அமைச்சராக இருந்த போது எப்படி சன் குழுமத்திற்காகவே என்று அந்த துறையை மாற்றினாரோ அதைப்போலவே இந்த ஜவுளித்துறையும் மாறத் தொடங்கியது. கோடிக்கணக்கான பேர்கள் வாழ்க்கையிழந்து தெருவுக்கு வந்தனர்.  பஞ்சை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பஞ்சை பராரியானார்கள். இது முற்றிலும் உண்மை.

ஆந்திரா முதல் மற்ற அத்தனை தென் மாநிலங்களிலும் இருந்த நலிவடைந்த பஞ்சாலைகளை சன் குழுமம் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிக பஞ்சு விளைச்சல் உடைய குஜராத்திலிருந்து பஞ்சு பொதிகள் தென் மாநிலங்களுக்கு வருவதை விட கடல் கடக்கத் தொடங்கியது.

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் சரத்பவார்.  அவருக்கு எல்லாவகையிலும் ஒத்துழைத்து காரியம் சாதித்து கல்லா கட்டிக் கொண்டிருப்பவர் தயாநிதி மாறன். சேர்த்த பணத்தை இந்த துறையில் முதலீடு செய்து லாபம் பார்த்தவர் சச்சின் டெண்டுல்கள் மற்றும் பலர். தெருவுக்கு வந்தவர்கள் இந்தியா ஜனநாயக நாடு என்று நம்பிக்கை கொண்டுள்ள அப்பாவி பொது ஜனம்.

இலங்கை மற்றும் நேபாளம் வரைக்கும் சன் குழுமம் இந்த பஞ்சாலை மற்றும் ஆய்த்த ஏற்றுமதி தொழிலை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

அழகிரி திருப்பூரில் உள்ள (கொங்கு முன்னேற்ற கழகம்) பெஸ்ட் ராமசாமியுடன் சேர்ந்து தூத்துக்குடியில் மிகப் பெரிய முதலீட்டில் சாய்ப்பட்டறை கழிவு நீரை சுத்திகரிக்கும் மெகா திட்டத்தை தொடங்க பூர்வாங்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். 

மீண்டும் ஆட்சியில் அமைந்ததும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கும்.  இதனால் கிடைக்கப் போகும் லாபம் கணக்கில் அடங்காது.  

இதைப் போலவே திருப்பூர் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேலுடன் சன் குழுமம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.  சென்னையில் ஒரே கூரையின் கீழ் வரும் அளவுக்கு மிகப் பெரிய ஏற்றுமதி தொழிற்கூடம் அமைக்கப்பட உள்ளது.

இதைப் போலவே பல விசயங்கள். உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றி கவலைப்படாமல் ஆளாளுக்கு ரவுண்டு கட்டி திமுக அரசாங்கத்தை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தனர் என்பது மட்டும் உண்மை.

ஆனால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க கலைஞர் கருணாநிதி மட்டுமே.  அதன் அவஸ்த்தைகளைத் தான் இன்று அவர் நொந்து கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறார்.


சில விசயங்களை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னும் நிலம் சம்மந்தப்பட்ட பல விசயங்கள் உண்டு. இது அத்தனையும் உண்மையா இல்லை பொய்யா என்று தெரியாமல் கலைஞர் ஆட்சியில் இருந்த போது நாளொரு மேனி பொழுதொரு (சாய) வண்ணமுமாய் வதந் தீயாய் பரவிக் கொண்டேயிருந்தது. ஆனால் எந்த முதலாளிகளும் இதைப்பற்றி பேசக்கூட பயந்தார்கள்.  காரணம் உபிகளின் அன்புப்படியில் சிக்கியிருந்த முன்னாள் தோழர் கோவிந்தசாமி போல ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.

மொத்தத்தில் அத்தனையும் அவரவர் சுயநலம் சார்ந்த சமாச்சாரங்கள்.


++++++++++++++++++++++++++++++++++++++

இப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூருக்கென்று கொடுத்த வாக்குறுதிகள் என்னவாச்சு என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணவேண்டும்.

தேர்தல் பிரச்சார கோவைமாவட்ட சுற்றுபயணத்தின் போது குறிப்பாக திருப்பூர் மாவட்ட மக்கள் கலைஞர், ஜெயலலிதா இருவரிடமிருந்து எந்த மாதிரியான வாக்குறுதிகள் வரப்போகின்றது? என்று ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தனர்?

மூடிக்கிடக்கும் சாயப்பட்டறைகளை திறக்க என்ன செய்யப் போகின்றார்கள்?

காரணம் தேர்தல் சமயத்தில் தொழில் பாதுகாப்பு குழு என்ற அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்கள் (?) ஒன்று கூடி பல விசயங்களில் கலைஞருக்கு தர்மசங்கடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.  கலைஞரும் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு இவர்களின் நோக்கமும் கடைசியில் கேலிக்குறியாக கேள்விக்குறியாக போனதென்பது தனிக்கதை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்போதும் போல கலைஞர் அவினாசி பேரூந்து நிலையத்திற்கு அருகே பேசிய பேச்சில் திருப்பூர் மறுவாழ்வு திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவேன் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு அவர் பயணித்த காண்வாய் போய்க் கொண்டேயிருந்தது. பெஸ்ட் ராமசாமியை காருக்கு அருகே வரவழைத்தவர் என்னய்யா எப்படியிருக்கு என்று கேட்க ராமசாமியின் நம்பிக்கை வார்த்தைகள் கிணற்றுக்குள் இருந்து வரும் குரலைப் போலவே இருந்தது.  கலைஞர் டாட்டா..... பை... பை....என்று போயே விட்டார்.  மக்களும் தனக்கு மொத்தமாகவே டாட்டா......பை....பை... என்று காட்டப் போகின்றார்கள் என்பது அவருக்கு தெரியாமலே இருந்தது.

ஆனால் ஜெயலலிதா ஆணித்தரமாக பேசினார்.  நம்பிக்கையளித்தார்.  

மற்றவர்களுக்கு எப்படியோ?  

எனக்கு ஜெயலலிதா குறித்து அவரின் உறுதி மொழிகள் குறித்து நம்பிக்கை வரவேயில்லை.  காரணம் அவரின் கடந்த கால செயல்பாடுகள் அத்தனையும் என மனதில் வந்து போனது. 

மாற்றம் என்பது மாறாதது தானே?  வந்தது மாற்றம். 

சாதாரணமான மாற்றம் அல்ல.  இலையை நக்கி சாப்பிட்டது போல திமுக என்றொரு கட்சியே விஜயகாந்திற்கு பல படிகள் கீழே என்பது போல மக்கள் கலைஞருக்கு கொடுத்த அடி பெரியவர் சாகும் தருவாயில் கூட நினைத்துப் பார்க்கக்கூடியது.

ஜெயித்தே விட்டார் ஜெயலலிதா.

முதல்வராகப் போகும் அம்மையார் ஜெயலலிதாவின் வெற்றி விழா ஆரவாரங்களை தலைவர்களின் பேட்டிகளை தொலைக்காட்சிகளில் நான்  தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஆனால் மனதிற்குள் இருந்த பயம் மட்டும் சப்பரமிட்டு அப்படியே இருந்தது.  காரணம் ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவியேற்க இரண்டு தினங்கள் இருந்த போது நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது.

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு" என்றார்.

"ஏன் வீட்டுக்காரம்மா நேத்து ஏதும் பாராடுற மாதிரி நடந்துக்கிட்டிங்களா?" என்றேன்.

"அட நீங்க வேற? அம்மையார் திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை இப்பவே வேலை வாங்க ஆரம்பித்து விட்டார்.  சாய்ப்பட்டறை பிரச்சனை சார்பாக அத்தனை கோப்புகளையும் போய்ஸ் தோட்டத்திற்கே எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.  அதிகாரிகள் கலங்கிப் போயி இருக்காங்க" என்றார். 

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகளாக என் காதுகளுக்கு வந்து கொண்டேயிருந்தது. ஒவ்வொரு கட்டமாக நகர்நது கொண்டேயிருப்பதாக தெரிய உண்மையிலேயே அம்மையாரின் மனம் மாறிவிட்டதோ? என்று எண்ணத் தொடங்கினேன்.

முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக சென்னையில் நடந்து கொண்டே இருந்தது.  விவசாயிகள், முதலாளிகள், அதிகாரிகள் என்று அந்த பேச்சு வார்த்தைகள் தினந்தோறும் நீண்டு கொண்டேயிருந்தது.  ஆனால் முடிவுக்கு வந்தபாடில்லை.

விவசாயிகள் சார்பாக பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கபடி ஆட்டமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் மனம் இரங்குவதாக தெரியவில்லை.  சாயப்பட்டறை என்ற தொழிலே இனி திருப்பூரில் இருக்கக்கூடாது என்கிற ரீதியில் பேசத் தொடங்கினர்.  

உச்சகட்டமாக "எதுவென்றாலும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கின்றோம்" என்கிற ரீதிக்கு வாக்குவாதம் முற்றிப் போக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி விவசாயிகளை ஒருமையில் மிரட்டும் வரைக்கும் சென்றது.  ஆனால் விவசாயிகளின்  பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை.  அம்மையார் ஜெயலலிதா அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் அதிகார வரம்பு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தானே?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புரிந்து விட்டது. 

சரி.. இனி மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது.

அம்மாசாமி தலையிட்டால் தான் இந்த மண்டையிடி ஒரு முடிவுக்கு வருமென்று பேச்சுவார்த்தை பந்தை அம்மா பக்கம் தள்ளிவிட அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.  

அம்மா பேச்சுவார்த்தை என்றால் மற்றவர்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.  அல்லது வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் அம்மாவே சரணம் என்ற துதியை முழங்கிவிட்டு வர வேண்டும்.  

இது தானே மரபு.  அந்த மரபின் வழியில் அடுத்த கட்டம் நகர்ந்தது.

அம்மையாருக்கு ஒரு சவால் காத்திருந்தது. 


சாயப்பட்டறை முதலாளிக்கு சார்பாகவும் இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் விவசாயிகளுக்கு, அவர்களின் வாழ்வாதரத்திற்கு அதிமுக அரசு எதிராக இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதையும் உணர்த்திக் காட்ட வேண்டிய அவஸ்யத்தில் இருந்தார்.  

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தே ஆக வேண்டும்.

உண்மையிலேயே அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.  அதே போலவே அறிக்கை வந்தது.  விவசாயிகளுக்கு ஆதரவாக நஷ்டஈடு என்பதாகவும், சாயப்பட்டறை தொழிலுக்கு வட்டியில்லா கடனாக இருநூறு கோடி அரசே வழங்கும் என்பதாகவும் சொல்லி திருப்பூர் மொத்த மககளின் வயிற்றில் சாயம் கலக்காத தண்ணீரை வார்த்தார்.

++++++++++++++++++++++++++++++++



இப்போது வேறு சில சமாச்சாரங்களையும் நாம் உள்ளே புகுந்து பார்க்கலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடத்தப்பட்ட இரண்டு பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடியக் காரணம் ஒன்றே ஒன்று தான்.  

பணம்.  

அதுவும் விவசாயிகளின் நஷ்டஈடு என்கிற ரீதியில் 400 கோடி ரூபாய சாயப்பட்டறை முதலாளிகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்தது.   ஏனிந்த பணம்? இதுவரையிலும் சாயக்ழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நஷ்டஈடு. அதற்கு செந்தில் பாலாஜி ஒரு கட்டத்திற்கு மேல் விவசாயிகளின் சார்பாக உள்ளே பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கூறிய வார்த்தை முக்கியமானது.  

" விவசாயம், விவசாயிகள் எந்த அளவுக்கு இந்த அரசாங்கத்திற்கு முக்கியமோ அதே அளவுக்கு திருப்பூர் தொழில் வளர்ச்சியும் முக்கியம்.  உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை எங்களுக்கும் உண்டு.  குறிப்பாக ஆறு, நிலங்கள் அத்தனையும் அரசாங்கத்தின் சொத்து. எங்கள் கவனம் அதிலும் உண்டு " என்ற போது தான் விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  அதன் பிறகே அம்மையாரின் அறிவிப்பும் வெளியானது.  

ஆனால் ஜெயலலிதா சில விசயங்களில் மிகுந்த அக்கறை எடுத்து செயல்பட்டார் என்பது கண்கூடு.

சாயக்கழிவு நீர் என்கிற பிரச்சனையை இரண்டு விதமாக கவனித்தார். 

தற்காலிக தீர்வு.  நிரந்தர தீர்வு.  

நிரந்தர தீர்வு என்றால் உடனடியாக எல்அண்ட டி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவர்களிடம் திட்ட அறிக்கை கேட்டார். கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் முழுமையாக இரண்டு வருடம் ஆகும் என்பதை அவர்கள் சுட்டிக் காட்ட அந்த திட்டம் உடனடியாக கவைக்கு உதவாது என்ற முடிவுக்கு வந்தார்.  ஆனால் இன்னமும் அந்த நோக்கத்தை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருப்பது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  

தற்காலிக தீர்வு என்பதை கருத்தில் கொண்டு முடிந்த வரைக்கும் சாய்ப்பட்டறை முதலாளிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் காட்ட வேறொரு பக்கத்தில் இருந்து ஆப்படித்தார்.

வெளியாகும் கழிவு நீரை முறைப்படி சுத்திகரிப்பு செய்து தான் அனுப்புகிறார்களா? என்பதை கவனிக்கும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுரை வழங்கினார்.  காரணம் இந்த பிரச்சனை இன்னமும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்காகும். கயிறு என்ற நினைத்து பாம்பை தொட்ட கதையாக மாறிவிடக்கூடாது என்ற புத்திசாலித்தனமும் அவரிடம் இருந்தது. ஏற்கனவே ஜீரோ டிஸ்சார்ஜ் என்பது முடியும் என்பதை அவசரப்பட்டு ஒத்துக் கொண்ட சாயப்பட்டறை முதலாளி வர்க்கம் இப்போது பேய் முழி முழித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின் தடை ஒரு பெரிய சவால் என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.  அதுவும் இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. 

வேறென்ன பிரச்சனை?

1974 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் சட்டம் தான் இப்போது முதலாளிகளுக்கு இருக்கும் ஒரு பெரிய சவாலாகும். இந்த சட்டத்தின் படி வெளியாகும் சாயக்கழிவு நீரில் டிடிஎஸ் ( டோட்டல் டிசால்வ் சால்ட்) அளவு 2100 என்கிற ரீதியில் இருக்க வேண்டும்.  

ஆனால் நடைமுறை எதார்த்தம் கேள்விக்குறியது.

கடந்த ஒரு வருடமாக சாயக்கழிவு நீர் அதிக அளவு நொய்யல் ஆற்றில் கலக்கவில்லை.  ஆனாலும் திருட்டுத்தனமாக இன்னமும் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகள் மூலம் ஓரளவிற்கு இந்த சாயத்தண்ணீர் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.  

ஆனால் சாதாரணமாக வீட்டு கழிவு நீர் (குளித்தல், துணி துவைத்தல்) இது தவிர அன்றாட உபயோகங்கள் மூலம் வெளியாகும் நீரின் வரத்து, திருப்பூருக்குள் இருக்கும் ஒவ்வொரு உணவகத்திலிருந்தும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் தண்ணீர் மற்றும் கழிவுகள் என்று எல்லாவகையிலும் இந்த நொய்யல் ஆறு தன் பங்குக்கு அமைதியாக வரவு வைத்துக் கொண்டே தான் இருக்கிறது. . 

ஆற்று வளத்தை, நில வளத்தை, நீர் வளத்தை பாழாக்க சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் ஆடம்பர மற்றும் அத்யாவ்ஸ்ய தேவைகளுக்கு என்று கெடுத்துக் கொண்டேதான் இருக்கின்றான்.  

இந்த விபரங்களை இந்த இடத்தில் விஸ்தாரமாக பேசக் காரணம்?

சாதாரணமாக சவுக்காரம் போட்டு துணி துவைக்கும் போது வரும் தண்ணீரே அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி 2100 க்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். மற்ற சமாச்சாரங்களும் கலந்து வெளியாகும் நீரின் அளவில் இந்த டிடிஎஸ் அளவு பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும்.

இதைப் போலவே திருப்பூரில் சர்வசாதாரணமாக 3000 அடிகளுக்கு மேல் போர் போட்டாலும் தண்ணீர் வராது. அந்த அளவுக்கு இறுகிய பாறை அமைப்பு உள்ள பூமி இது.

இதுக்கு மேலே இங்கே உள்ள தண்ணீரில் இயல்பாகவே உப்பின் அளவு அதிகம்.  எல் அண்ட டி நிறுவனம் திருப்பூருக்குள் வந்த பிறகே மக்கள் ஓரளவுக்க்கு நல்ல தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. இந்த திட்டத்தையும் கொண்டு வந்த அம்மையார் ஜெயலலிதாவுக்கே திருப்பூர் மக்கள் நன்றி கடன்பட்டுள்ளார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் நொய்யல் ஆற்றில் ஓடும் நீரை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனைக்கு என்று எடுத்துப் பார்த்தால் சாயக்கழிவு நீர் கலக்காமலேயே உச்சமான டிடிஎஸ் அளவை காட்ட முடியும்.  இதை வைத்தே ஒருவர் நீதிமன்ற தடை வாங்கிவிட முடியும்.

+++++++++++++++++++++++++++++

கற்பக வினாயகம் நீதியரசராக இருந்த போது விவசாயிகள் சார்பாக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. ஈரோட்டுப் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரே இதற்கு தலைவர்.  இதைத்தான் மோகன் கமிட்டி என்கிறார்கள். இவரைப்பற்றி ஆச்சரியமான பல தகவல்கள் உண்டு. எளிமையின் மறு உருவம்.  அதிகமாக சைக்கிளை பயன்படுத்துபவர். 100 சதவிகித நேர்மையாளர்.  இல்லற வாழ்க்கையில் குழந்தை தேவையில்லை என்று கருத்தடை செய்து கொண்டவர். இவரின் மனைவியும் பொதுவாழ்க்கையை சமூக பணிக்காக அர்பணித்துக் கொண்டவர்கள்.எதற்கும் அஞ்சாதவர்.இன்னமும் சொல்லப்போனால் எதற்குமே வளைந்து கொடுக்காதவர். சாயப்பட்டறை முதலாளிகளுக்கு இவர் தான் இன்றைய மிகப் பெரிய சவால்.  

இவர் மட்டும் சற்றே குனிந்திருந்தால் இன்று மகா கோடீஸ்வராக ஆகியிருக்கக்கூடும்.  நீதியரசர் கற்பக விநாயகம் கொடுத்த தீர்ப்பின்படி சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு என்கிற ரீதியில் ஒவ்வொரு சாயப்பட்டறை முதலாளிகள் வெளியே விடும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஏழு பைசா என்கிற ரீதியில் பண்ம் வசூலித்து கருவூலத்தில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்த தொகை இப்போது ஏறக்குறைய 18 கோடி என்கிற அளவுக்கு இருக்கிறது. 

இது போக முதலாளிகள் கட்டிய டெபாஸிட் தொகை 76 கோடியும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பணம் விவசாயிகளின் கைக்கு போக வேண்டுமென்றால் உச்சநீதி மன்றம் ஒரு முடிவை இறுதியாக அறிவிக்க வேண்டும் அல்லது விவசாயிகள் தொடுத்த கேஸை வாபஸ் வாங்க வேண்டும்.  ஆக மொத்தம் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு உண்டான பாதிப்புகளைப் போலவே விவசாயிகளுக்கும் பயங்கரமான பாதிப்புகள் உருவாகியுள்ளது.

++++++++++++++++++++++++++++++


கலைஞர் ஆட்சியில் செயல்படாமல் இருந்த பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது மெதுவாக செயல்படத் தொடங்கியுள்ளது. அம்மையார் ஜெயலலிதா கொடுத்துள்ள அறிவுரையின் பேரில் திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது தங்களது சோதனை முயற்சிகளை தொடங்கியுள்ளது.  திருப்பூரில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான சுத்திகரிப்பு நிலையங்கள் உண்டு.

ஒவ்வொருவரும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இப்படி சாதித்து விடுவோம்? அப்படி சாதித்து விடுவோம்? சொட்டு கழிவு நீர் கூட வெளியே வராது? எங்களிடம் நவீன முறைகள் உண்டு என்று உதார் காட்டிய கணவான்கள் இப்போது முழி பிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

காரணம் எவரிடமும் முறைப்படியான தொழில் .நுட்ப அறிவும் இல்லை. தொழில் நுட்ப அறிவை தரக்கூடியவர்களை இன்று வரைக்கும் அணுகவும் இல்லை. 


ஒரே காரணம் பேராசை, போட்டி, பொறாமை.

ஒரு நிறுவனம் அல்லது தொழில் வளரும் போதே அதன் எதிர்கால சவால்களை குறித்து யோசிக்கக் கற்று இருக்க வேண்டும்.  அவ்வாறு கற்று இருந்தவர்கள் இப்போது ஜாம் ஜாம் என்று 9 சாய்ப்பட்டறைகளை ( மிகப் பெரிய முதலீடு) நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இது தவிர அரசாங்கம் சொல்லியுள்ள சட்ட திட்டத்தின்படி கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதிகளுடன் இப்போது 65 சாயப்பட்டறைகள் தயாராக உள்ளது.  மோகன் கமிட்டி இத்ற்கு ஓ.கே. சொல்ல வேண்டும்.

கடந்த ஆறேழு மாதமாக இதுவும் இழுத்துக் கொண்டே போகின்றது.  700க்கும் மேற்பட்ட டையிங் நிறுவனங்களில் இப்போது திருப்பூருக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பது 20க்குள் இருக்கக்கூடும்.

சென்ற ஆட்சியின் போது கலைஞர் திருப்பூருக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்றார்கள்.  


ஆனால் அம்மையார் உதவிக்கரத்தை நீட்டிவிட்டார். உதவியை பெறவேண்டிய முதலாளிகளின் கைகள் தான் இப்போது முடக்குவாதத்தில் இருக்கிறது. காரணம் இதுவரையிலும் ஒவ்வொரு சாயப்பட்டறைகளும் வெளியாகும் சாயக்கழிவு நீர் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை. மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுத்த மொத்த லஞ்சப்பணத்தை அணைவரும் சேர்ந்து நிறுத்தி வைத்து ஆக்கப் பூர்வ திட்டங்களில் செயல்படுத்தியிருந்தாலே இந்நேரம் பொன்னான நேரமாக இருந்து இருக்கக்கூடும்.

இப்போது அம்மையார் ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று  (COMMON  Effluent TREATMENT PLANT  சிடிபி) 10 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக அளித்துள்ளார்.

அரசாங்கம் சொல்லியுள்ள சட்டதிட்டத்தின்படி செயல்பட வேண்டும்.  ஆனால் பலன் பூஜ்யம்.  தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொழில் நுட்பத்தை கண்டுவர சாயப்பட்டறை முதலாளிகள் குஜராத் வரைக்கும் சென்றார்கள்.  ஆனால் அங்குள்ள தொழில் நுட்பத்தை பார்க்காமலேயே திரும்பி வந்து விட்டார்கள்.  ப்ரைன் சொல்யூஷன்ஸ் என்றொரு நவீன சுத்திகரிப்பின் மூலம் நாங்கள் சாயக்கழிவு நீரை ஆவியாக்கி விடுகின்றோம் என்று சொல்லிவிட்டு சுடச்சுட ஆவி பறக்க இட்லி சாப்பிட்டது தான் மிச்சம். திருப்பூரில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கிறது.  ஆட்களும் சரியில்லை.  முன்னேற்பாடுகளையும் முறைப்படுத்த ஆளுமில்லை..

+++++++++++++++++++++++++++++

ஏற்றுமதியாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் தேவைப்படும் துணிகளை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே ஏற்கனவே சாயப்பட்டறைகள் அடித்த கொள்ளைக்கு முடிவு வந்து விட்டது என்கிற சந்தோஷமே முக்கிய காரணம். வடநாட்டில் செய்யப்படும் சாயமேற்றிய துணி திருப்பூர் அளவுக்கு தரமில்லை என்ற போதிலும் அவரவர்கள் தங்கள் அளவுக்கு ரிஸ்க் எடுத்து இந்த தொழிலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் திருப்பூர் பிரச்சனை போல குஜராத்தில் இல்லை. காரணம் அரசாங்கத்தின் கொள்கைகள். அங்கு இந்த சாயக்கழிவு நீரை ஓரளவுக்கு சுத்திகரித்து கடலில் கலந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் அரசாங்கமே பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறது.

இது தவிர ஏற்றுமதியாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி பல்வேறு மாநிலங்களில் இங்கே இருந்த சாய்ப்பட்டறைக்கு தேவைப்படும் சமாச்சாரங்களை கொண்டு போய் துணியை சாய்மேற்றி கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.  

மாட்டிக் கொண்டாரடி மைனர் காளை என்பது போல சாய்ப்பட்டறை முதலாளிகள் இப்போது பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

அரசாங்கம் உதவ காத்திருக்கிறது.  ஆனால் உருப்படியான திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.  

இது தவிர ஒவ்வொரு சாயப்பட்டறைகளும் தாங்கள் சாயமேற்ற வாங்கும் தண்ணீரின் அளவை அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும்.  தண்ணீரை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதையும், எத்தனை லிட்டர் சாய்ககழிவு நீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பினார்கள் என்பதையும் கணக்கில் கொண்டு வர வேண்டும்.

கணக்கு டேலி ஆக வில்லை என்றால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் டவுசரை கழட்டி விடுவார்கள். சென்ற ஆட்சியில் கட்டுகட்டாய் பணத்தை சாக்குப்பையில் அள்ளிக் கொண்டது போல இப்போது முடியாது.  முழுமையான நேர்மை இல்லை என்றபோதிலும் கூட அம்மையார் குறித்த பயம் அடிமட்ட அதிகார வர்க்கம் வரைக்கும் பரவியுள்ளது என்பது கண்கூடு.

எப்படி தெரியுமா?


சாயப்பட்டறை முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் வரைக்கும் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே ஆன் லைன் சமாச்சாரங்கள். இந்த பொது சுத்திகரிப்பு நிலைய கணக்கு வழக்குகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் மெயின் சர்வர் சென்னையில் இருக்கிறது.  தினந்தோறும் வரவு செலவு கணக்கை நொடிப் பொழுதில் கண்டு பிடிக்க கண்கொத்தி பாம்பாக ஒரு அதிகார கூட்டமே இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சாயப்பட்டறைகளுக்கும் தனித்தனி பாஸ்வேர்ட்.  எவரும் உள்ளே புகுந்த உழப்ப முடியாது.  கணக்கு தப்பென்றால் நடு இரவில் குறிப்பிட்ட சாய்ப்பட்டறைக்கு அதிகாரிகளின் வருகை நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  கேள்வி எதுவும் இல்லை.  உடனடியாக சீல் வைத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்று விடுவார்கள். மறுபடியும் கோப்புகளை புரட்டிப் பார்க்கவே ஆறு மாதம் ஓடிவிடும்.

இதன் காரணமாகவே வர்றான் வர்றான் பூச்சாண்டி என்கிற ரீதியில் ஒவ்வொரு சாய்ப்பட்டறை முதலாளிகளும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். 

உழைப்பு மட்டும் இருந்தால் பணம் பார்த்து விடலாம்.

ஆனால் பணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது சமூகம் குறித்த அக்கறையும் வேண்டும்.

சமூகம் குறித்த அக்கறை கூட தேவையில்லை. ஆனால் தாங்கள் சார்ந்துள்ள தொழிலின் எதிர்கால போக்கை ஒவ்வொருவம் தீர்மானமாய் உணர்ந்திருக்க தெரிய வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை தொழில் திறமைகளை தொழில் அதிபர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? என்பதே அம்மையார் ஜெயலலிதா உருவாக்கிய இந்த திட்டம்.

இந்த கட்டுரை அதீதம் இதழ நண்பர் திரு. கார்த்திக் அவர்களின் வேண்டுகோளின் எழுதப்பட்டது.  அதீதம் குழு நண்பர்களுக்கு நன்றி.

இது தொடர்பான மற்ற கட்டுரைகள்

சாயமே இது பொய்யடா

ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?

அழுவாச்சி காவியம் கதாநாயகன்


நான் வேட்பாளர் டைரிக்குறிப்புகள்