Showing posts with label வலைபதிவுகள். Show all posts
Showing posts with label வலைபதிவுகள். Show all posts

Friday, December 17, 2010

தமிழ்மணம் விருதுகளும் விரும்பாதவர்களும்

நான் படித்து வந்த மற்றும் படித்துக் கொண்டுருக்கும் பல எழுத்தாளர்களைப் பற்றி பல செய்திகளை கடந்து வந்துள்ளேன். அவர்கள் வாங்கிய பல விருதுகளை அதன் சர்ச்சையான நிகழ்வுகளும் என் மனக்கண்ணில் வந்து போகின்றது.  எந்த வகையில் பார்த்தாலும் எழுதுபவனுக்கு ஏதோவொரு அங்கீகாரம் முக்கியமாக இருக்குமோ? என்று யோசித்தது உண்டு.



சென்ற வருடம் ஒரு நண்பர் தூர தேசத்தில் இருந்து என்னை அழைத்து இந்த தமிழ்மணம் குறித்து புரியவைத்தார்.  செந்தில் சொல்வது போல் மார்க்கெட்டிங் என்பது இந்த வலைபதிவுகளில் எழுதுவதை விட கடினமானது.  எனக்கு எப்போது அது போன்ற விசயங்களில் கவனம் இருப்பதும் இல்லை.  அதை முழுமையாக விரும்புவதும் இல்லை.  இதன் காரணமாக சென்ற வருடத்தில் அநேக பேர்களுக்கு அறிமுகம் இல்லாமல் நான் எதிர்பார்த்த ஈரவெங்காயம் என்ற தமிழ்மொழியின் 3000 வருட சரித்திரம் இரண்டாவது கட்டத்தோடு மூச்சு வாங்கி விட்டது.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் வாசிப்பவர்கள், வரவேற்பாளர்கள், வாசக நண்பர்கள், அழைத்துப் பேசுபவர்கள், ஆச்சரியப்படுபவர்கள் என்று ஏராளமான நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள். தமிழ்மண விருது போல சமீபத்தில் வீட்டுக்கு வந்து விட்டு சென்றவர் ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்து ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு ஓட்டமாக ஓடிவிட்டார். செல்லும் போது எப்படி இத்தனை வேலைகளுக்கு இடையே இத்தனை நீளமாக உன்னால் எழுத முடியுது? என்று கிள்ளிவிட்டு சென்று விட்டார்.

பதிவுலகத்தில் தேடுதலுடன் இருப்பவர்கள் அநேகம் பேர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

தமிழ்மண விருதுகளில் கலந்து கொள்ள வேண்டும்? நம்முடைய தகுதி என்ன?  போட்டி என்று வரும் போது எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று எப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியாத விசயத்தை ஐந்து நண்பர்களிடம் ஆலோசனையாக கேட்ட போது அவர்கள் கொடுத்த விமர்சனமும், அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த மூன்று தலைப்புகளை தமிழ்மணம் விருதுகள் 2010 பட்டியலில் இணைத்துள்ளேன்.  

பிரிவு செய்திகள் நிகழ்வுகளின் அலசல்

விதி ராஜீவ் மதி பிரபாகரன் ( எண் 84)

( ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்வுகள் குறித்து ஈழம் தொடரில் எழுதப்பட்ட குறிப்பிட்ட பத்து பகுதிகளை ஒரே தலைப்பில் கோர்த்துள்ளேன். எதிர்மறை நியாயங்களுடன் பாரபட்சம் இல்லாமல் எழுதப்பட்டது)

பிரிவு பயண அனுபவங்கள் ஊர் வாழ்வு நினைவோடைகள்

இனிய நினைவுகள் (எண் 36)

தமிழ்மண நட்சத்திரவாரத்தில் வாழ்ந்த ஊரான காரைக்குடியைப் பற்றி ஆசை மரம் என்ற தலைப்பில் தொடங்கிய கட்டுரைகளில் தொடர்ந்த வந்த தலைப்பில் இதுவும் ஒன்று. செட்டிநாடு என்ற பகுதி எப்படி உருவானது என்பதையும் நான் பார்த்த அனுபவ பார்வைகளும் என்பதுமாய் 
எழுதியுள்ளேன்)

பிரிவு பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்


பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை (எண் 13)


இந்திய சுதந்திரம், ஈழம் தொடருக்குப் பின் நான் எழுதிய மூன்றாவது தொடர். நாறும் உள்ளாடைகள் என்ற தலைப்பில் தொடங்கி தற்போதைய திருப்பூர் குறித்தும், சமீபத்தில் உருவான பொருளாதார மந்த நிலை காரணமாக உருவான நிகழ்வுகளை என் அனுபவப் பார்வையில் எளிமையாய் எழுதினேன். இந்தியாவில் உள்ள அடிப்படை வளங்களை அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே உள்நாட்டு தொழில் வளர்ச்சியின் குறியீடு அற்புதமாக மேலே வரும் என்பதை சொல்லியுள்ளேன்.

நண்பர்களே,  இந்த முறை தமிழ்மணத்தில் பங்கெடுத்த தலைப்புகள் அத்தனையும் மிக அற்புதமாக உள்ளது.  நான் விரும்பும், என்னுடன் தொடர்புடைய, சமூக அக்கறையுடன் எழுதக்கூடிய பலரும் என்னுடைய போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.  மேலும் இந்த முறை தமிழ்மணம்  நிர்வாகம் சரியான தலைப்புகள் இறுதியாக தேர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல சிறப்பான விதி முறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.  உண்மைத்தமிழன் சொல்வது போல மூன்று தலைப்புகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதி தான் ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது.

இந்த இடுகையின் நோக்கம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னுடைய எழுத்துக்களை நான் திரும்பி பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்பதை நான் உணர்ந்து கொள்வதற்காக.  உங்களுக்கு இந்த தலைப்புகள் உணர்த்தும் கருத்துக்கள் பிடித்தமானதாக இருந்தால் இரண்டாம் கட்ட தேர்வுக்கு நகர்த்துங்கள்.  

தமிழ்மணம் திரட்டியில் மட்டும் தினந்தோறும் 407 இடுகைகள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.  தமிழ்மணம் போல TAMILISH போன்ற பல திரட்டிகளில் இணைக்கப்படும் ஒவ்வொருவரின் தலைப்புகளும் குறைந்த பட்சம் 700க்கு மேற்பட்டதாக இருக்கலாம்.  ஆனால் எழுதுபவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தமே.  எழுதத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் ஆங்கிலம் போல எளிதாக தட்டச்சுகளில் தங்களில் கருத்துக்களை அடிக்க முடியாத சோம்பேறித்தனம், நேரமின்மை போன்ற பல காரணங்கள் நான் ஆச்சரியப்படும் பலரும் படிப்பதில் மட்டும் தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.  

எனக்கு கிடைத்த அனுபவங்களின்படி வங்கி உயர் அதிகாரி முதல் அரசியல் தொடர்பாளர்கள் வரைக்கும் பலரும் பல பேருடைய எழுத்துக்களை படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் எவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.  இதற்கு மேல் வலைபதிவுகளில் உள்ள வெளியே தெரியாத அரசியல் போன்ற காரணங்களினால் நன்றாக எழுதுபவர்களும் தங்களை வெறும் வாசிப்பாளர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.

விருதுகளுக்கு, அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையிலும் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

வலை பதிவுகளில் சமூகத்தில் பார்த்த, பாதிப்பை உருவாக்கிய விசயங்களை எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உங்களின் தேர்வு உன்னதமாக இருந்தால் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தமிழ்மணம் விருதாக கருதிக் கொள்கின்றேன். உங்களின் வாசிப்பு அனுபவம் தான் உங்களின் வாழ்க்கையை உங்களின் எண்ணங்களை தீர்மானிக்கிறது.  

இந்த போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் வாழ்த்துகள்.  ஏற்பாடு செய்துள்ள தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜோதிஜி