Thursday, August 29, 2019

ப. சிதம்பரம் கைது

இன்று காட்சி ஊடகங்களில் (ஆகஸ்டு 23) தொடர்ந்து ஒலிக்கப்படும் ஒரே பெயர் ப.சிதம்பரம். அவரைப் பற்றி என்ன தான் பாஜக குற்றச்சாட்டு சுமத்தினாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் ஓட்டுப் போடும் பொது ஜனத்திற்கு எட்டப் போவதில்லை அல்லது புரியப் போவதில்லை. காரணம் இவையெல்லாம் பொது மக்களைப் பாதிக்காத அல்லது புரிந்து கொள்ள முடியாது ஹை கிளாஸ் ஊழல் வகையைச் சேர்ந்தது.

பத்திரிக்கைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே தலை சுத்திப் போகும். எங்கிருந்து தொடங்கி எங்கே முடியும்? என்பதனை எத்தனை வரை வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத கண்கட்டி வித்தையான ஊழல் அது.

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தின் மூளையாக, இருதயமாக இருப்பது இரண்டு துறைகள். ஒன்று உள்துறை மற்றொன்று நிதித்துறை.

இன்றைய சூழலில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்தாலும் அவர் ப. சிதம்பரத்தை ஒப்பிடும் போது எல்கேஜி லெவல். அதேபோல உள்துறையில் இருக்கும் அமித்ஷா ப்ரிகேஜி லெவல்.

காரணம் தந்திர பூமியான டெல்லி அரசியலில் படிப்படியாக ஏறியவர் ப.சி. வட இந்தியர்கள் அதிகாரம் செலுத்தும் இடத்தில் தன்னை ஆழ ஊன்றியவர் ப.சி. நிதித்துறை மற்றும் உள்துறையின் நாடி, நரம்பு மட்டுமல்ல இரத்த மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளை ஊடுருவி தன்னை நிரூபித்தவர் ப.சி.

மொழிப்புலமை, அறிவுப்புலமை மட்டுமல்ல தன் செயல்பாடுகளில் வாயிலாகவும் தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்டவர் ப.சி.

எங்கே தவறினார்?

பள்ளிக்கூடம் படிக்கும் சமயங்களில் இருந்தே அவரை மிக அருகிலிருந்து கவனித்தவன் என்ற முறையில் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தவர் என்பதனை மறைக்க விரும்பவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள விசேட நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து உள்ளேன். உரையாடியதில்லை. அப்போது அரசியல் குறித்த புரிதல் இல்லை. வட்டார வழக்குச் சொல்லில் தான் இயல்பாகப் பேசுவார்.

அனைவருடனும் பழகுவார். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அசிங்கமான அரசியல் கலாச்சாரம் எதையும் ஆதரிக்கவும் மாட்டார்.

இன்றைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தனக்காக நான்கு உதவியாளர்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ப.சி வுக்கு உதவியாளர்கள் இல்லை.

இருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டலாம். அவர்கள் அனைவரும் எடுபிடி வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார். தன் அதிகாரத்தை வேறு எவரும் பயன்படுத்த அனுமதிக்கவே மாட்டார்.

திருச்சி வரைக்கும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் வருவார். அவர் பிறந்த ஊரான கண்டணூர் வரைக்கும் பெயருக்கென்று ஒரு கூடுதல் வாகனம் பின்னால் வரும். காவல்துறை பாதுகாப்பு பெரிதாக இருக்காது. உள்துறை, நிதித்துறை வரைக்கும் வந்த போதும் கூட இந்த நடைமுறை மாறவில்லை.

தன்னை எவரும் எதிலும் சிக்க வைத்து விடக்கூடாது. தன் மேல் எந்த கறையும் பட்டுவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் தன் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்திருந்தார். எந்த சிபாரிசும் யாருக்காகவும் செய்ய மாட்டார். தேவையில்லாத விசயங்கள் தன்னிடம் வரும் போது நாசூக்காக நகர்ந்து விடுவார்.

ப. சி கையாண்ட அரசியல் வாழ்க்கை தமிழக அரசியலுக்குத் தொடர்பில்லாதது. இன்னமும் செல்லப்போனால் அது அமெரிக்கா மற்றும் மேற்கித்திய நாடுகளில் பாணியானது. நாகரிகம். நாசூக்கு. எளிமை சார்ந்த கலவையாக இருக்கும்.
இவையெல்லாம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையெடுப்பதற்கு முன்பு வரை இருந்தது.

மகன் தலையெடுத்த பின்பு அவர் வாழ்க்கை வேறு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றது. இப்போது ஒன்றை நாம் நன்றாகக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். தற்போது நீங்களும் நானும் பார்த்துக் கொண்டிருக்கும் பஞ்சத்திற்கு வந்து அரசியல் மூலம் கொள்ளையடித்து சம்பாரித்து முதல் தலைமுறை செல்வந்தர் அல்ல ப.சி.

அவர் பிறப்பதற்கு முன்பு மூன்று தலைமுறைகளும் தமிழக அளவில்,பக்கத்து மாநிலங்களில் நிரந்தரமாகக் காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்த சொத்துக்கள் ஏராளம். ப.சி வின் தாத்தா முதல் வாழ்க்கை தொடங்கிய ப.சி வாழ்க்கை என்பது வரைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் அடுத்த மூன்று தலைமுறைகள் சேர்த்து சொத்துக்களோடு சேர்க்க முடியாது அளவுக்குத்தான் இருந்தது.

குலம், கோத்திரம், பராம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், அதிர்ந்து பேசாத நாகரிகம் என்று பர்மா, சிங்கப்பூர், இலங்கை என்று தொடங்கி கர்நாடகாவின் சிக்மங்களூர் வரைக்கும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இன்னமும் உள்ளது.

இதையும் மீறி, இவையெல்லாம் போதாது என்று மகன் உருவாக்கிய வாழ்க்கை இன்று ஓடிவிட்டார் சிதம்பரம் என்று ஊடகங்கள் அலறும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அவர் 35 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசில் முக்கிய நபராக இருந்துள்ளார். ஆனால் தன்னை ஜெயிக்க வைத்த சிவகங்கை மக்களுக்கு ஒரு பிட்டு கூட எடுத்துப் போடவில்லை என்பதனை விட அதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பது தான் உண்மை. உயர்தர கணவான் வாழ்க்கையை விட்டு அவர் கடைசி வரைக்கும் கீழே இறங்கி வரவே இல்லை. அரசியல் என்பது அலுவலகம், கோப்பு, எழுத்துக்கள், திட்டங்கள், திட்டமிடுதல் என்பதாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தவர்.

ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று பெயர் எடுத்து இருக்கலாம். உள்ளூரில் அவரால் ஆயிரம் பேர்களை ஒன்று திரட்டும் சக்தி இல்லாதவராக இருந்த போதிலும் காலம் போட்ட கோலத்தில் பிரதமர் பதவிக்கு மிக அருகே வந்தவர். இன்று அதே காலம் அவரை அலங்கோலமாக்கியுள்ளது.

பாஜக ப.சி வை எப்படிக் கையாள்கின்றது?

1. அரசியலில் இமேஜ் மிக மிக முக்கியம். ப.சி உள்ளூரில் செல்வாக்கு இல்லாதவராக இருக்கலாம். ஆனால் உலக அளவில் அவர் உருவாக்கிய தாக்கம் அதிகம். இந்தியா முழுக்க நடுத்தரவர்க்கத்திற்கு மேலே உள்ள மக்கள் அவரைக் கண்டு ஆச்சரியப்படுபவர்கள் அதிகம். அவரை கவனத்துடன் பார்ப்பவர்களும் உண்டு. அந்த இமேஜ் காலி செய்வது பாஜகவின் முதல் திட்டம்.

2. இதுவரையிலும் தான் சார்ந்த வழக்குக்காக 27 முறை வாய்தா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்ட நடுராத்திரி 1 மணிக்குக்கூட எழுந்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்கிறார்கள். சிதம்பரம் வெளியே இருக்கலாம் என்கிறார்கள். சட்டத்தின் சந்து பொந்துகள் அனைத்திலும் யாரோ ஒருவர் மெர்குரி விளக்குப் பொருத்தி வெளிச்சம் பாய்ச்சுக் கொண்டேயிருக்கின்றார்கள். முதல் ஐந்தாண்டு பாஜகவின் ஆட்சியில் இதை உடைக்க முடியவில்லை. முயன்றார்கள். ஆனால் தோல்வியைத் தழுவினார்கள். நீதிமான்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலம் காங்கிரஸ் வந்து விடும் என்றே நம்பினார்கள். மக்கள் காங்கிரஸ் நட்டுக்குத்தலாக ஆற்றின் நடுவே மாற்றிக் கொண்டு விடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது முன்ஜாமீன் இல்லை என்று பம்முகின்றார்கள்.

3. காங்கிரஸ் ப. சி போன்ற புத்திசாலிகளைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தாலும் எவரும் சிக்க மாட்டார்கள். காங்கிரஸ் இந்த முறை உருவாக்கிய தேர்தல் அறிக்கை ப. சி உருவாக்கியது தான். ராகுல் பேசிய சிறப்புத் திட்டங்கள் என்ற கண்ணாமூச்சி அனைத்தும் ப.சி மூளை உதித்தது தான். என்ன ஆச்சு? விழலுக்கு இறைத்த நீராயிற்று? ப.சி விலக நினைத்தாலும் காங்கிரஸ் அவரை விட முடியாத சூழலில் தான் உள்ளது.

சோனியாவிற்கும், ராகுலுக்கும் என்ன தெரியும்?

அது ப.சி விற்கு நன்றாகவே தெரியும். அதைவிடக் கோபுரத்தைத் தாங்கும் எந்த கல்லை உருவினால் சரியும் என்பது பாஜகவிற்கு நன்றாகவே தெரியும்? மேலும் தங்கள் திட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களை ப.சி போன்றவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் பகிங்கிரப்படுத்தும் போதும் உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று மக்கள் முழித்துக் கொண்டு விட மாட்டார்களா? இப்போது பாஜக ப.சி விசயத்தில் செய்து கொண்டிருப்பது அனைத்தும் இனி அவர் பொதுவெளியில் எது பேசினாலும் எடுபடாமல் இருப்பதற்கான ட்ரையலர்.

அதெல்லாம் சரி?

இத்தனைக்கும் காரணமான மகனின் எதிர்கால அரசியல் வாழ்க்கை எப்படியிருக்கும்?

போங்கடா நீங்களும் அரசியலும் என்று அப்பாவிற்குப் பின்பு வெளிநாட்டில் செட்டிலாகி விடுவார்.

காரணம் ஆயிரம் பத்தாயிரம் கோடி என்றால் கூட பரவாயில்லை. கால்குலேட்டர் கதறும் அளவிற்குச் சேர்த்த சொத்துக்களைப் பார்ப்பாரா? மக்கள் சேவை செய்வாரா?

காட்சி வடிவில்...........




ப.சிதம்பரம், அவரது குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகள் என்ன...? பின்னணி...?



வாசிக்க......


ஒரே நாடு. ஒரே ரேசன் அட்டை

பாஜக அடித்த முதல் சிக்ஸர்


ஆறாவது தலைமுறையில் நாம் நினைக்கப்படுவோமா?


உங்கள் வீட்டில் இரட்டையர்கள் இருக்கின்றார்களா?


நீட் 2019 - ஆள் பிடித்து தரும் அதிகாரபூர்வ அமைப்பு...


உங்கள் பெயர் என்ன?


கழகம் வேறு. கல்வித்தந்தையர்கள் வேறு.


திமுக கல்வித்தந்தையர்கள்?


உயர்ந்த மனிதர்கள் 2


உயர்ந்த மனிதர்கள்


14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கே மறுபடியுமா...? முகநூலில் வாசிக்கும் போதே தொண்டை "தெக்" ஆச்சி...!

KILLERGEE Devakottai said...

அற்புதமான கட்டுரை நண்பரே...
நீங்கள் சொல்வதுபோல் மகனின் தலையெடுப்புக்கு பிறகே இந்த தலைகுனிவு.

பாரம்பரியமாக சேர்த்து வைத்த சொத்தும் இன்று பாவச்சொத்தாக போனதற்கு காரணம் பணப்பேய் அவர்கள் குடும்பத்தை பிடித்து விட்டதே...

கால்குலேட்டர் கதறுவது உண்மையே...

KILLERGEE Devakottai said...

யூஏஈ-யில் பார்க்கிங் கட்டணம், டோல்கேட் ஸிஸ்டம் எல்லாவற்றுக்கும் ஐடியா கொடுத்து அரேபியர்களிடம் லம்பாவாக பணம் பெற்றதற்கு யூஏஈ-வாழ் இந்தியர்களின் சாபங்கள் பலிக்கத் தொடங்கி விட்டது.

அத்தி வரதர் உண்மையான தெய்வம்தான் போலும்...

ஜோதிஜி said...

நீங்க சொன்னதை விண் டிவி மணி என்பவர் எழுதி உள்ளார். அதை கீழே தந்துள்ளேன்.

ஜோதிஜி said...

ஏன் ப.சிதம்பரத்தை பொதுவாக யாருக்கும் பிடிக்கவில்லை?

1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட...

2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு!

3. நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்....

4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்

5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது.

6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது!

7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது!

8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது.

9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56

10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது.

11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி.

ஜோதிஜி said...


12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர்.

13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்! A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது!

B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்!

C. அடுத்த நாள் 14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது!

D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா!

14. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது!

15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது!

எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை!

16) அமெரிக்காவை காப்பியடித்து, அதே பெயரில், Counter Terrorism Centre ஏற்படுத்த முயன்று, ஜெயல்லிதாவால் எதிர்க்கப்பட்டது.

17) "எல்லைப் பாதுகாப்புப்படை" ( Border Security Force)/" ரயில்வே பாதுகாப்புப்படை" ( Railway Protection Force) சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, ,மாநில அரசுகளைக் கேட்காமலேயே, மாநிலங்களுக்குள் நுழைந்து, விசாரணை, கைது செய்யலாம் என திருத்தங்களைக் கொண்டு வந்தபோது, ஜெயல்லிதாவில் எதிர்க்கப்பட்டது.

18) ஸ்டெர்லைட் ஆலையின் கம்பெனியான வேதாந்தாவிற்கு, சட்ட ஆலோசகராக, பிறகு இயக்குனராக, இருந்து ஆதரித்தது. தான் நிதியமைச்சர் ஆனதும், மனைவி நளினியை வேதாந்தாவின் சட்ட ஆலோசகராக ஆக்கியது.

19) " பச்சை வேட்டை" ( Green Hunt) என்ற பெயரில், இந்தியாவின் இதயமான சட்டீஸ்கர், ஜார்கண்ட், பிகார், ஒடிசா, பேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பெயரில், தான் "உள்துறை அமைச்சராக" இருக்கும் போது, ஆதிவாசிப் பழங்குடி மக்களை வேட்டையாடிய கொடுமை.
20) சிவகங்கையில் தோற்று விட்டு வென்றதாக மாற்றியதை, முல்வர் ஜெயல்லிதா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஊடகங்களுக்கி கூறியதால், அவரை பழிவாங்க எடுத்த வழக்கு, தண்டனை, வரை தொடர்ந்த போக்கு.

21) இந்தியாவிற்கு பட்ஜெட் போட்டது போல எங்களுக்கும் போட்டுக்கொடுங்கள் என்று கேட்ட " செளதி அரேபிய அமெரிக்க சார்பு மன்னருக்கு" 90 ன் தொடக்கத்தில், பட்ஜெட் போட்டுக் கொடுத்து,
அதில் "இந்தியா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடையாள அட்டைக்கு" 150 ரியால் இருந்ததை, 500 ரியாலாக ஏற்றி விட்ட கொடுமை செய்தவர்.


KILLERGEE Devakottai said...

ஆம் நண்பரே தாங்கள் கடைசியாக சொன்ன (21) வது உண்மையே.

இந்தியர்கள் அனைவரும் இவரை மன்னிக்கவும் இவனை திட்டிக்கொண்டுதான் இருப்பர்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிதம்பரம் அவர்களைப் பற்றிய பல செய்திகளை அறிந்தேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

கிராமத்துப்பக்கங்களில் கொச்சையாகச் சொல்கிற மாதிரி, "அப்பன் .......அவிழ்த்த நேரம் சரியில்லே" மாதிரி எல்லாப்பழியும் மகன் மீதுதானா ஜோதிஜி! அந்த மகன் அறியாப்பிள்ளையாக இருந்த நாட்களிலேயே ஹர்ஷத் மேத்தா ஊழல் காலம்! Fairgrowth நிறுவனப்பங்குகள் மோசடி விவகாரத்திலேயே திரு & திருமதி பெயர்கள் நாறியதே! பாவம் கார்த்தி! அப்பனுக்குத்தப்பாமால் பிறந்தபிள்ளை என்று சில வருடங்களுக்கு முன்னால் முக அழகிரியைப் பற்றி ஒரு புத்தகமே வெளியிட்ட மாதிரி, இப்போது வம்புவழக்குகள் கார்த்தியை அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்றுதானே சொல்கின்றன!

மீண்டும் வருவேன்! சொல்ல நிறைய இருக்கிறது.

G.M Balasubramaniam said...

அரசில் இருக்கும் கட்சிலள் வேண்டுமென்றே seyyum ஒரு vendeta செயல் போல் இருக்கிறது அதுவும் இப்போதய பாஜக ஆட்சி அதில் அதிகமே செயல்படுகிறது இது இவர்கள் ஆட்சி பறிபோனபின் மற்றவர்களால் தொடரப்படும்

ஜோதிஜி said...

வாங்க வாங்க. அடுத்து சீனாதானா குறித்து மற்றொரு பதிவும் உள்ளது.

ஸ்ரீராம். said...

தலைசுற்றும் அரசியல், ஊழல்.

வெங்கட் நாகராஜ் said...

கேடுகெட்ட அரசியல்... எத்தனை பணம் இருந்தாலும், சொத்து இருந்தாலும், இன்னும் இன்னும் வேண்டும் என்ற ஆசை இருக்கும்வரை சேர்த்துக் கொண்டே இருப்பது தான் மனித இயல்பு.

நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

bakki said...

வார்த்தை அலங்காரம்