Friday, June 21, 2019

கடவுச்சீட்டு

கடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா? நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா? என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். மகளிடம், மனைவியிடம் இதே விசயத்தை மீண்டும் மீண்டும் சொன்ன போது சரி சரி உங்கள் மோடி புராணம் போதும்? பொத்தவும் என்று உத்தரவிட்டனர்.

காரணம் கோவையில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடந்த சமாச்சாரங்கள்.

மகள் தான் சொன்னார். கடவுச்சீட்டு தேதி முடியப் போகின்றது என்றார். ஆகா இதை வைத்து இந்தத் துறை எப்படிச் செயல்படுகின்றது என்று இணைய தளம் வாயிலாக உள்ளே சென்ற போது பூ மாதிரி வழுக்கிக் கொண்டே சென்றது. எந்த தொந்தரவும் இல்லை. எந்த சிக்கலும் கடைசி வரைக்கும் உருவாகவே இல்லை. அடித்துத் திருத்தி மாற்றி என்று எத்தனை முறை செய்தாலும் அனைத்துக்குமான எளிமையாக இணையதளத்தை அமைத்துள்ளனர்.

உள்ளே நுழைந்து அவர்கள் கேட்ட ரூபாய் 1500 கட்டி முடித்தவுடன் தேதி குறிப்பிட்டு இந்த மணிக்கு வந்து விடவும் என்று முகவரியுடன் மின் அஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவித்தனர். ஈரோடு, கோவையில் இரண்டு இடங்கள், தபால் நிலையம் என்று நமக்குத் தேவையான வழிமுறைகளையும் காட்டுகின்றனர். நமக்கு அருகே உள்ள இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அரைமணி நேரம் முன்பே அங்கே சென்று விடுவது என் வாடிக்கை. ஆனால் இங்கே ஒரு மணி நேரம் முன்பே சென்று விட்டேன். வாசலில் நின்ற பெண்மணி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு அங்கே அமரவும். கால் மணி நேரம் கழித்து நானே அழைக்கின்றேன் என்றார். குரலில் அதிகாரம் இல்லை.

அரசாங்க அலுவலகம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும்? என்ன கேட்பார்களோ? எவ்வளவு கேட்பார்களோ? எப்படி நடத்துவார்களோ? என்று. இருபது நிமிடம் முன்னால் சென்ற போது அந்தப் பெண்மணி எங்கே செல்ல வேண்டும்? எங்கே அமர வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? என்று வகுப்பு போல எடுத்தார். கூட்டமே இல்லையே? மக்கள் உள்நாட்டில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தேன்.

நான்கு நபர்கள். நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆதார் அட்டை, பழைய கடவுச்சீட்டு இரண்டையும் காண்பித்தவுடன் நகல் எடுக்க அறிவுறுத்தினர். அதற்கும் உள்ளே வசதி வைத்துள்ளார்கள். முதல் ஆச்சரியம். மொத்தமே மூன்று நிமிடம்.
மீண்டும் வாங்கி பரிசோதித்து விட்டு அடுத்த நிலைக்கு அனுப்பினார். இங்கு மொத்த நபர்களையும் வழிகாட்ட ஒரு தனியாகப் பெண் ஒருவர் இருந்தார். தடுமாறுபவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்.

அடுத்த நிலையில் சென்ற போது அவர்கள் பரிசோதித்து விட்டு ஒரு டோக்கன் சீட்டுக் கொடுத்து அடுத்த நிலைக்கு நகர்த்தினர். மொத்தம் மூன்று நிமிடங்கள்.

டோக்கன் எண் திரையில் தெரிகின்றது. இப்போது முக்கியமான கட்டம். நம் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு நம்மைப் புகைப்படம் எடுக்கின்றார். இரண்டு கைகளையும் வைத்து ஸ்கேன் செய்கின்றார். இரண்டு கட்டை விரலையும் ஸ்கேன் செய்கின்றார். அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
அங்கு ஒரு பெண் இருக்கின்றார். அவர் வழிகாட்டுகின்றார்.

இறுதியாக தலைமையாளரிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றார். நம்மைப் பார்த்துவிட்டு, ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு பழைய கடவுச்சீட்டில் கேன்சல் என்று குத்தி முடித்து, மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.

தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே இடத்தில் கூட கூச்சல் இல்லை. சப்தம் இல்லை. அடிதடி இல்லவே இல்லை. ஒரு ஊழியர் கூட ஏட்டிக்குப்போட்டியாக பேசவே இல்லை. அலுவலகம் மிக சுத்தமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழில் அதுவும் சுத்தமான பிழையில்லாத தெளிவான அழகான தமிழ்மொழியில் எல்லா இடங்களில் பளபளப்பான போர்ட்டில் வாசகங்கள் நம்மை வரவேற்கின்றது.

வழிகாட்டுகின்றது.

நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது. ஒரே காரணம் டாடா குழுமத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம்.

ஒரு முக்கியமான மக்கள் சேவையில் தொழில் நுட்பமும், தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய நிர்வாகமும் ஒன்று சேர்ந்தால் சாதாரண பொதுமக்களும் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதனை அன்று தான் முதல் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

கடந்த பாஜக ஆட்சியில் மோடி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார். இங்கே தங்குவதே இல்லை. வெளியுறவு அமைச்சரையும் அழைத்துக் கொண்டு செல்வதே இல்லை என்று குறையாய் பலரும் குறைபட்டுக் கொண்டார்கள். ஆனால் மோடி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை இங்கேயே இரும்மா? இங்குள்ள வேலையைக் கவனித்துக் கொள்ளம்மா? என்று விட்டு விட்டுச் சென்று இருப்பார் போல.

சிறுநீரகம் பழுதுபட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கும் அம்மா சுஷ்மா அவர்களே நீடூழி வாழ்க. என் வாழ்நாளுக்குள் ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும்? அத்துடன் தனியார் உள்ளே நுழைந்து கைகோர்க்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல நிர்வாகத்தையும், வெளிப்படையான விரைவு சேவைகளையும் வழங்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்.

என் வாழ்நாளுக்கும் இப்படி ஒரு வாய்ப்பை, ஆச்சரியத்தைப் பார்க்க வாய்ப்பு கொடுத்து உணர்த்தியமைக்கு நன்றி. நன்றி. 


22 comments:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

உண்மைதான். சரியான முன்னுதாரணம்.

Jayakumar Chandrasekaran said...

New Delhi, India, October 13, 2008: Tata Consultancy Services announced that it has a signed a deal with the Ministry of External Affairs (MEA), Government of India, for the Passport Automation Project - the largest mission-critical E-governance project valued at over Rs.10,000 million. After implementation of the Project which will be managed end-to-end by TCS, the Ministry expects the process of issuing a new passport to be completed in three working days, while passports issued under the Tatkal scheme will be dispatched on the same day, subject to address and police verifications of applicants. The Master Service Agreement was signed between representatives of TCS and the MEA in New Delhi today.

The project cost is valued over Rs.10,000 million and the project will be implemented within a Buy-Own-Operate-Transfer or BOOT framework with pilot project operation within 19 months. The countrywide roll-out of the Passport Automation Project will take place within six years and the Government will open 77 Passport Filing Centers across the country in a phased manner. TCS will have end-to-end responsibility of implementing this project.

Speaking on the occasion, Shivshankar Menon, Foreign Secretary, Ministry of External Affairs said: “The Passport Seva Project, based on a public-private partnership model, aims to provide passport-related services to Indian citizens in a speedy, convenient and transparent manner. The sovereign and fiduciary function of granting and issuing passport remains with MEA and TCS will be our technology and operations partner in this project”

S Ramadorai, CEO and Managing Director, TCS said, “We believe that this mission mode project of national importance will make delivery of passport services truly world class in nature. This project reiterates TCS’ commitment to help government deliver citizen services more efficiently through technology and process improvements and will transform passport service delivery to the citizens of India.”

bandhu said...

என் மகனுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் புதுப்பித்த அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நாங்கள் குடியிருப்பது அமெரிக்காவில் பெரிய நகரம். மகன் மைனர் என்பதால் நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்று சட்டம். இல்லையேல் தபாலில் அனுப்பி புதுப்பித்துக்கொள்ளலாம். புதுப்பித்த பாஸ்போர்ட் 4 முதல் 8 வாரத்துக்குள் கைக்கு கிடைக்கும்.

நேரில் செல்ல பல (எல்லாவற்றிலும் அல்ல) தபால் நிலையங்களில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு அருகில் உள்ள சில தபால் நிலையங்களுக்கு செல்ல முடியும் என்று தெரிந்தது. அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க நேரில் செல்லக்கூடாது. தொலைபேசியில் தொடர்பு கொண்டுதான் எடுக்க வேண்டும் என்று தெரிந்தது. அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க கூப்பிட்டால் ஒரே மாதிரி எந்த தபால் அலுவலகத்திலும் இதற்கென்று கொடுத்த போனை எடுக்கவே இல்லை! கடைசியில், மறுபடி மறுபடி எடுக்கும் வரை கூப்பிடும் ஒரு மொபைல் ஆப் மூலம் ஒரு தபால் நிலையத்தை தொடர்பு கொள்ள முடிந்தது. அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது 6 வாரங்களுக்கு பிறகு! சுத்தம்!

அப்பாயிண்ட்மெண்ட் தேதி அன்று எல்லா டாக்குமெண்டும் கொடுத்தவுடன் அதற்கான பீஸ் $110 கட்டினோம்.

அதன்பிறகு 6 வாரங்கள் கழித்து பாஸ்போர்ட் வந்தது.

இந்தியா அமெரிக்காவை விட பெட்டர், இந்த விஷயத்தில்!

Jayakumar Chandrasekaran said...

அதாவது கடவு சீட்டு மின்மயமாக்கும் பொறுப்பு மன்மோகன் சிங் காலத்திலேயே அமுலுக்கு வந்து விட்டது.


ஸ்ரீராம். said...

நல்ல செய்தி.

KILLERGEE Devakottai said...

எனது மகனுக்கு கடவுச்சீட்டில் மனைவி பெயரைச் சேர்ப்பதற்காக போய் மூன்றே தினங்களில் வேலை முடித்தது நண்பரே.

இவ்விடயத்தில் டிஜிடல் இந்தியா என்பது உண்மையே..

Viswam said...

ஜோதிஜி சார் நான் டீசல் அதிகாரி . இந்த ப்ரொஜெக்ட்டில் பணியாற்றியவன். உண்மையில் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இந்த சாதனையில் பங்கு மிக குறைவு. . 2008 இல் இந்த ப்ரொஜெக்ட்டை வாங்கினோம். 2011 ல் முடித்து விட்டோம். அதன் பின்னர் பராமரிப்பு மட்டுமே.

ஜோதிஜி said...

நீங்க சொல்வது உண்மை தான். இது போன்ற பல திட்டங்களை அவர்கள் உருவாக்கினார்கள். கொண்டு வந்தார்கள். கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் முறைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது பாஜக என்பதால் அஸ்திவாரம் உருவாக்கியவர்கள் வெளியே தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

மகளிடம் எப்போதும் சொல்வதுண்டு. வெளிநாடுகளில் நம்மிடம் இருக்கும் காசு பொறுத்து தான் வாழவே முடியும். ஆனால் இங்கே காசே இல்லாவிட்டால் கூட வாழ முடியும் என்று.

ஜோதிஜி said...

நன்றி ராம்

ஜோதிஜி said...

ஆச்சரியம் தான். நன்றி.

ஜோதிஜி said...

ஆகா......... வாழ்த்துகளும் நன்றியும்.

ஜோதிஜி said...

நன்றி

மானுடன் said...

வணக்கம்.உங்கள் தளத்தை பார்வையிடும் ஒருவன் என்கிற முறையில் தமிழகம் மோடியை புறக்கணிப்பதைப்ப் பற்றிய உங்கள் அங்கலாய்ப்பு பதிவை படித்த. போது அது துருத்திக் கொண்டு தனியே ஒட்டாமல் தெரிந்தது.அது உங்கள் சொந்த கருத்து என்பதால் எனக்கு அதில் பெரிய உறுத்தல் இல்லை.ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் வெறுப்பில் பிஜேபி ஆதரவளிக்கும் மனநிலை என எடுத்துக் கொண்டேன்.ஆனால் இந்த பதிவு எனக்கு உள்ளபடியே மிக ஏமாற்றம் அளித்தது.உங்கள் பதிவுகளில் இதுவரை எத்தனை முறை பொய்யுரைத்தீர்கள் என நான் ஆராய முனையவில்லை.ஆனால் உங்கள் மனைவி சொன்னதைப்போல "மோடி புராணம்" என்று வந்துவிட்டால் அல்லேலூயா கோஷ்டியினர் போல பொய் பேசுவதை வள்ளுவர் சொன்ன வாய்மையாக கருதிக்கொள்ளும் நிலையை உங்களிடமும் காண்கிறேன்.முதல் பொய் ஒரு 8 வருடத்திற்கு மேலாக நடந்துவரும் சேவா கேந்திர செயல்பாட்டை 5 வருடமாக ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி ஆட்சியில் நிகழ்வதை போன்று சித்தரித்தது.அது வெறுமனே தகவல் பிழை என உங்களைப் போன்ற விபரமானவர்கள் கூறினால் நம்புவது சிரமம்.இரண்டாவது பொய்,


//மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.//

இது ஒரு மிகைப்படுத்தி எழுதப்பட்டது.அந்த கடைசி நிலை அதிகாரி உண்மையில் அரசு அதிகாரியாவார் TCS ஆள் அல்ல.அந்த 'வாழ்த்துகள்' என்கிற நாகரீக வார்த்தைகள் அவரைப்போன்ற அரசாங்க அதிகாரிகள் மரபணுவிலேயே கிடையாது.நானும் மூன்று முறை சேவா கேந்திரா சென்றிருக்கிறேன்.அந்த நல்வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை என வேண்டுமானால் உங்களை இந்த 'பொய்' எழுதிய குற்றச்சாட்டை விட்டு விடுவிக்கலாம்.போகட்டும்.ஆனால் இந்த கீழ்காணும் விஷயம் இருக்கிறதே.....

//நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது//

ஆம் எனக்கும் 1/2 மணி நேரத்தில் சேவா கேந்திராவை விட்டு வந்து விட முடியும் என்பது கனவாகவே இன்னமும் தெரிகிறது.

இப்போது நான் நேரடியாக கேட்கிறேன். எல்லா அரசு அலுவலகங்களையும் TCS அல்லது தனியார் நிறுவனங்கள் போலவே கட்டமைப்பை மேம்படுத்தி அரசு அலுவலர்களின் சேவையாற்றும் தரத்தையும் உயர்த்துவது என்ற இலக்கில் வெற்றி பெற்றால் நாம் பிரதமரை பாராட்ட வேண்டுமா? அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரா போல எல்லா அலுவலகங்களையும் தனியார் கம்பெனிகளுடம் உள் குத்தகைக்கு விட்டு விட்டால் பாராட்டலாமா? அதுபோக உங்கள் சொந்த தனிப்பட்ட விபரங்கள் TCS போன்ற தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பது சரியானது தானா?

இறுதியாக நான் வேண்டுவது மோடியின் மீதான உங்கள் அபிமானம் நியாயப்படுத்த இயலாத நிலையில் (GSTயால் காலி செய்யப்பட்ட திருப்பூரில் இருந்து கொண்டு) அதை உங்கள் தனிப்பட்ட 'இச்சையாக' நினைத்து மறைத்து வைத்துக் கொள்வது உங்க தளத்தை நம்பி படிக்கும் என் போன்றோருக்கு செய்யும் நியாயமாக இருக்கும்.ஒரு சங்கியைப்போல உங்களை ஒதுக்க வேண்டிய அவலமும் எனக்கு நேராது.

நன்றி.

மானுடன் said...

மொபைல் மூலமாக பதிவிடும் போது எழுத்து மற்றும் இலக்கண பிழைகள் வந்துவிட்டன. பொதுவாக நான் யாருக்கும் கருத்துரைக்க முயன்றதில்லை.எனவே "ஆஹா அருமை நன்றி" என்கிற பாணியில் பதில் எழுதாமல் பொறுப்பான பதிலாக வரும் என நம்புகிறேன்

Anonymous said...

பதிவர் வவ்வால் உங்கள் நட்ப்பில் இருந்திருக்கின்றார் என்பதை அறிந்தேன்
ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இப்போது இல்லை ..
தங்களுக்கு ஏதாவது தெரியுமா ?

ஜோதிஜி said...

புனைப் பெயரில் வந்தது முதல் தவறு. சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இரண்டாவது தவறு. வந்து எழுதிய விமர்சனத்திற்கு நன்றி.

ஜோதிஜி said...

பிழைகள் எதுவும் இல்லை. எழுதுவது புரிந்தால் போதும். இந்த அளவுக்கு அலைபேசியில் எழுதியதற்கு வாழ்த்துகள். நன்றாக தெளிவாக எழுதிவிட்டு நாகரிகமற்ற வார்த்தைகளை எழுதியது அது உங்கள் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டேன்.

ஜோதிஜி said...

அனானி வடிவில் வந்தாலும் உங்கள் பெயருடன் கீழே எழுதலாம்.

Rathnavel Natarajan said...

கடவுச்சீட்டு - பாஸ்போர்ட் எடுப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது, நடைமுறைகளை எவ்வளவு துரிதமாக்கியிருக்கிறார்கள், எவ்வளவு எளிமைப்படுத்தியிருக்கிறார்கள், எவ்வளவு சிறப்பாக செய்லபடுகிறார்கள் என்பதை திரு ஜோதிஜி விரிவாக எழுதியிருக்கிறார். எனக்கும் இந்த அனுபவம் உண்டு. பாஸ்போர்ட் புதுப்பிக்க திங்கள் கிழமை மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் சென்றோம். புதன் கிழமை விரைவுத் தபாலில் பாஸ்போர்ட் எங்கள் கைக்கு வந்து விட்டது. - இந்த் அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

நன்றி

கிரி said...

நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டது போல, காங் ஆதார் உட்பட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இது எனக்கு புரியாத புதிர்.

நல்ல திட்டங்களை கொண்டு வரும் காங், ஏன் அதை செயல்படுத்த தயங்குகிறது? யார் அவர்களை தடுக்கிறார்கள்.

இதே ஆதார் வந்த போது எதிர்த்த மோடி தான், அதை சிறப்பாக செயல்படுத்தி திட்டுகளை வாங்கி தற்போது பாராட்டுக்களை பெற்று கொண்டு இருக்கிறார்.

ஆதார் அட்டை பல சிரமங்களை குறைத்துள்ளது என்றால் மிகையல்ல.

GST கூட காங் தான் ஆனால், செயல்படுத்தியது மோடி.

காங் கிட்ட நல்ல திட்டங்கள் உள்ளது ஆனால், செயல்படுத்தும் உறுதி இல்லை. மற்றவர்களின் எதிர்ப்புக்கு பயந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தாமல் தவற விட்டு விட்டார்கள் என்று கருதுகிறேன் அல்லது பெரும்பான்மை பலம் இல்லாதது காரணமா?