Review deviyar-illam.blogspot.com on alexa.com தேவியர் இல்லம் திருப்பூர்

Tuesday, February 09, 2010

அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்

இந்தியா இலங்கையின் உள்ளே நுழைந்த போதும், அதற்கு முன்னாலும் ஊடகத்தில் சொன்ன வாசகம் இது.  

" 72 மணிநேரம் எங்களுக்கு போதும்.  மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டி விடுவோம்"

ஆனால் அன்று மொத்த அதிகாரவர்க்கத்தினருக்கும் முன் இருந்த சவாலான நோக்கம் என்ன தெரியுமா?  பத்து லட்சம் என்று பிரபாகரன் தலைக்கு வைத்திருந்த ஜெயவர்த்னே திட்டத்தின்படி ஒன்று மொத்த விடுதலைப்புலிகளையும் நிராயுதபாணியாக ஆக்க வேண்டும்.  மற்றொன்று, குறிப்பாக பிரபாகரனை தனிமைப்படுத்தவேண்டும்.  இத்துடன் ஜெயவர்த்னே உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றி இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது என்ற இந்த நோக்கங்கள் தான் முக்கிய கடமைகளாக இருந்தது.

அமைதிப்படை உள்ளே வந்ததும், ஆரம்பரமாக விழா நடத்தி பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குகிறோம், அமைதியை மொத்தமாக நிலைநாட்டுகிறோம் என்பதன் அடிப்படையில் கண்ணாமூச்சி ரே ரே என்பது போல் ஆயுத ஓப்படைப்பு வைபவமும் நடந்து முடிந்தது.  இதற்கிடையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள், மற்றும் இந்தியா கொண்டு போயிருந்த ஆயுதங்கள் என்று தரம் வாரியாக தராதரம் இல்லாத குறிப்பாக பிரபாகரனுக்கு எதிர் அணியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துக்கொண்டுருக்கும் நிகழ்ச்சியும் கனஜோராக மறுபுறம் நடந்தேறிக்கொண்டுருந்தது.

காத்து இருந்தவர்கள், வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தவர்கள், மனம் முழுக்க சொல்லமுடியாத வெஞ்சினத்துடன் இருந்தவர்கள் என்று மொத்தமாக குலுக்கல் போடாத குறையாக தேர்ந்தெடுத்து அவர்களை ரா உளவுப்படையின் அடிப்படை சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுருந்தனர்.  தினவெடுத்த தோள்கள் என்ன செய்யும்?   அது அந்தப்பக்கம்.

ஒப்பந்த ஷரத்துப்படி வடக்கு கிழக்கு மகாணங்கள் உருவாக்கபட்டு, முறைப்படியான மற்ற வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  அதற்குப் பிறகு தமிழர்களின் பிரதிநிதிகள் போன்ற சடங்கு சமாச்சாரவேலைகள். இது இந்தப்பக்கம்.

இதற்கு மேலும் உள்ளே இருந்த மற்ற போராளிக்குழுக்கள் உன் பங்கு என் பங்கு எத்தனை? என்று கணக்கீடுகள்.  ரா வின் ஆசிர்வாத வார்த்தைகள் அவர்கள் அத்தனை பேர்களையும் மொத்தமாக மாற்றி இருந்தது.  தொடக்கம் முதல் மற்ற போராளிக்குழுக்களை ஒப்பிடும் போது EPRLF பத்பநாபா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.  ஆனால் இந்திய அமைதிப்படையும், அதிகாரிகள் உருவாக்கிய புரிந்துணர்வும் அவரையும் இந்த மாயையில் விழும் அளவிற்கு மாற்றினார்கள் என்பது மிகுந்த ஆச்சரியம்.

அதுவரைக்கும் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஆனால் இந்திய அமைதிப்படை உள்ளே வந்ததும் சிங்கள குடியேற்றங்கள் அட்டகாசமாக உருவாகிக் கொண்டுருந்தது.

எல்லா சாலைகளும் ரோம் நோக்கி என்பது போல எல்லா பிரச்சனைகளும் பிரபாகரன் நோக்கி என்ற போதிலும் கூட அவரால் அந்த சூழ்நிலையில் அமைதியாய் இருப்பதை தவிர வேறொன்றும் செய்யும் அளவிற்கு இல்லை.  ஆனால் தொடக்கம் முதலே இந்தியாவிற்கு தெளிவான பார்வை? பிரபாகரன் எந்த காலத்திலும், எப்போதும் நமக்கு சாதகமாக இருக்கமாட்டார்?

அமைதி ஒப்பந்தத்தின்படி ஒவ்வொன்றையும் வரிசைக் கிரமமாக இந்தியா தான் உருவாக்கும்,  நேரிடையாக ஜெயவர்த்னேவுடன் எவரும் பேசக்கூடாது.  இந்தியா உருவாக்கியிருந்த வெளியில் சொல்லாத சட்டம் இது.  வடக்கு கிழக்கு மகாண பிரதிநிதிகள் என்று தேவைப்படும் 12 பேர் அடங்கிய பட்டியலில் பிரபாகரன் கொடுத்த ஏழு பேர்கள் நேரிடையாக ஜெயவர்த்னே கைக்குச் சென்றது.  காரணம் இந்த நேரம் மிக முக்கியம்.  மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்பட்சத்தில் எதிர்கால பிரச்சனைகளை உருவாக்கலாம்.  தான் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று தொடக்கம் முதலே பிரபாகரன் அறிவித்த காரணத்தால், தான் தேர்ந்தெடுக்கும் ஆட்களை சபையில் உருவாக்க வேண்டிய அவசர அவஸ்யங்கள் அவருக்கு.
 இதனைக்கண்ட இந்தியா " இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப்புலிகள் குந்தகம் விளைவித்தால் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும்"  என்று மிரட்டலோடு வானொலியில் (2.10.1987)விடுதலைப்புலிகளை திட்டிதீர்த்தது.

வந்தது அமைதியை நிலைநாட்ட.  ஆனால் அமைதியை உருவாக்குவதைவிட , உருவாகாமல் இருக்க என்னன்ன காரண காரியங்கள் தேவையோ அத்தனையும் தொடர்ந்து நடத்திக்கொண்டுருந்தது.

என்ன காரணம்?  பிரபாகரன் ஒரு சக்தி.  இந்தியா மற்றொரு மிகப்பெரிய சக்தி.

ஒரே நோக்கம் இவருக்கு இனி பணிந்து தான் ஆகவேண்டும்.  வேறு வழியில்லை.  அவர்களுக்கு எப்போதும் இந்தியாவிற்கு இலங்கை அடிபணிந்து இருக்க வேண்டும்.  எல்லாம் சரிதான்.

பிரபாகரன் கட்டளையிட்டால் அதிகபட்சம் பத்து நிமிடம்.  முடிவு தெரிந்து விடும்.  ஆனால் இந்தியாவிற்கு?

ராஜீவ் காந்தி முதல் கடைசி இராணுவ வீரன் வரைக்கும் மிகப்பெரிய ஜனநாயக வலைபின்னல்.  இயல்பான வலைபின்னல் என்றாலும் பரவாயில்லை.  பிரதமர், பிரதமரின் தனிச் செயலாளர், மற்ற செயலாளர்கள், ராணுவ செயலாளர்கள், தலைமை தளபதி, அயலுறவுக்கொள்கை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட அத்தனை நபர்கள் என்ற நீண்ட தண்டவாளமாக போய்க்கொண்டே இருக்கிறது.  பிரபாகரன் ராஜீவ் காந்தி என்ற இந்த இரண்டு தண்டவாளங்கள் மட்டும் இருந்து இருக்குமேயானால் நிச்சயம் அன்றே ஒரு முடிவுக்கு வந்து இருக்கும்.

ஆனால் இடையில் ஒருவர்?  அவர் தான் ஜே.என்.தீட்சித்.  மொத்த வலைபின்னல்களையும் தனக்குச் சாதமாக மாற்றியதும், இராணுவ அதிகாரிகளின் பின்னால் சொல்லப்பட்ட பேட்டிகள் வாயிலாக நாம் உணரப்போகும் விசயங்களும் எந்த அளவிற்கு ஒரு தனி மனித ஈகோவால் ஒரு இனம் அழிக்கப்பட காரணமாக இருந்ததை தொடரும் போது உங்களுக்கு புரியும்?

ஒரு வகையில் பார்க்கப்போனால் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவை விட ஜெயவர்த்னேவுடன் அனுசரித்து மொத்த பிரதிநிதிகளை உருவாக்கிவிடலாம் என்ற பிரபாகரன் மனதிற்குள் கொண்டுருந்த நம்பிக்கையும் இந்தியா தவிடுபொடியாக்கிக்கொண்டுந்தது.  ஜெயவர்த்னே மனதில் எத்தனை எதிர்கால திட்டங்கள் இருந்து இருக்குமோ அத்தனை திட்டங்கள் பிரபாகரன் மனதிலும் இருந்து இருக்கத்தான் வேண்டும்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து தொலைத்து விடலாம் என்கிற மனோநிலை.

அமைதி என்கிறார்கள்.  ஆனால் அமைதியைத் தவிர அத்தனை அலங்கோலங்களையும் நடத்திக்கொண்டுருக்கிறார்கள்.  பேசினால், உட்கார்ந்தால், நடந்தால் குற்றம்?  என்ன செய்யவது?  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி அன்றைய தினத்தில் இந்திய நடவடிக்கைகளில் தான் அதிகம் தெரிகிறது.
சமாதானமா கிலோ என்ன விலை? என்று கேட்டுக் கொண்டுருப்பவர் கையை தூக்கிக்கொண்டு முன் வர ஐயோ நீ கையை தூக்கியதும் தவறு என்பதாக இந்தியாவின் நடவடிக்கைகள்?

இது போன்ற காரண காரியங்களை சுருதி சுத்தமாக நிறைவேற்ற தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த PLOTE இயக்கத்தினர். செல்வம் தலைமையில் இருந்த TELO. பத்பநாபா தலைமையில் இருந்தவர்கள், EPRLF போன்றவர்களை மற்றொரு பக்கம் அங்கங்கே களம் இறக்கிக்கொண்டுருந்தார்கள்.

இவர்கள் உருவாக்கிய கிழக்கு மகாண பகுதியில் நடந்த மொத்த கூத்துகளும், தொடக்கத்தில் இவர்கள் போட்ட வம்புச்சண்டைகளில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்து தன்னை தங்களை ஒவ்வொருவரும் உயர்வாக கருதத் தொடங்கினார்கள்.  காரணம் பின்னால் இந்தியா இருந்து கொண்டு கொம்பு சீவிக்கொண்டுருக்கிறது.

விடுதலைப்புலிகளை அழித்து ஒழிக்க உதவிய ஒரே காரணமே தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதியாக கருதிக்கொண்டு மேலும் தங்கள் புனிதப்பணிகளை தொடங்கினர்.  இதன் உச்சக்கட்டம் அப்போது PLOTE அமைப்பில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த மாணிக்கதாசனும், எஸ்.காஸ்ட்ரோவும் கொடுத்த அறிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது.

" விடுதலைப்புலிகள் அமைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வரவில்லையென்றால் நாங்களே அவர்களை கொன்று அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை"

இவர்கள் மூலம் நடந்த சண்டையில் அப்போது ஏறக்குறைய 200 விடுதலைப்புலிகள் இறந்தனர்.  இவர்களிடம் தப்பிக்க ஓடியவர்களை அமைதிப்படை விரட்டி அடித்தது.  தொடர்ச்சியான வன்முறை.  கலவரங்கள், வன்முறைகள்.

தொடக்கத்தில் தொடங்கியது அவர்கள்.  ஆனால் மொத்தத்தையும் இறுதியில் முடித்து வைத்தது பிரபாகரன்.  சூழ்நிலையை உருவாக்கிய அவர்கள்.  ஆனால் சாதகமாக்கிக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள்.

இதன் தொடர்ச்சியாக தினந்தோறும் ஒரு மணி நேரம் "அமைதி நிகழ்ச்சி"  என்று வானொலியில் தினந்தோறும் விடுதலைப்புலிகளை இந்தியா திட்டி தீர்த்தது.

பொறுத்து பார்த்த பிரபாகரன் இறுதியாக " இந்தியா தனது உளவுப்படையை வைத்துக்கொண்டு தேவையில்லாத நபர்களை வளர்த்து அவர்களுக்கு அந்தஸ்த்து கொடுத்து எங்கள் வாழ்வுரிமை போராட்டங்களை முடக்க நிணைக்கிறது"  என்றார்.

ஒப்பந்தப்படி செப்டம்பர் 10ந் தேதி பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  ஆனால் அதைவிட யாழ்பாணம் அமைதிக்கான சூழ்நிலையில் தற்போது இல்லை என்று ஆட்சி அதிகாரத்தை தான் கைப்பற்றும் நோக்கோடு இந்தியா முயற்சிக்க ஒவ்வொன்றும் கோர்த்து முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தியது.

வெறுத்துப்போனவர்களின் திலீபனும் ஒருவர். அவர் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கியதும், அதை இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்ததும், இறுதியில் அவர் இறந்த போது இந்தியாவில் இருந்து சென்ற அமைதிப்படையின் தலையில் ஏழரை பகவான் தன்னுடைய முதல் சுற்றை தொடங்கியிருந்தார்?

திலீபன் ஏன் இறந்தார்?

Sunday, February 07, 2010

பிரபாகரன் பொதுக்கூட்டம்

கூட்டத்திற்கான தலைப்பு " நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்"  யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக லட்ச மக்களுக்கு மேல் திரண்டுருந்த பொதுக்கூட்டத்தில் பினவருமாறு உரையாற்றினார்.

அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே,

" இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.   நமது சக்திக்கு அப்பாற்பட்ட,  உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வின் இறுதி என்பது சாதகமா இல்லை பாதகமா? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்கத்தையோ,  போராளி குழுக்களையோ கலந்து ஆலோசிக்காமல் திடுமென நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று.  டெல்லிக்கு என்னை வரவழைத்த போது கூட முழுமையான விபரங்கள் தெரியாது.  மொத்த விபரங்களையும் சொன்ன போது இந்திய அரசின் தந்திரம் எங்களுக்கு புரிந்தது.  நம்முடைய நலத்தை விட இலங்கை இந்தியாவின் பிராந்திய நலத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த நாங்கள் எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லை.  ஆனால் எங்களின் எதிர்ப்பு மொத்தமும் அர்த்தமற்றதாய் போய்விட்டது.  அவர்களின் ஆதிக்கத்திற்கு நாங்கள் அணிபணிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.  வேறு வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்க வழிமுறைகளை, நோக்கங்களை, கடந்து வந்த மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கின்றது.  15 வருடங்களாக பாதுகாத்து பயணித்து வந்த பாதை இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கிறது.  எங்களை நிராயுதபாணிகளாக மாற்றுவதில் இந்தியா வெற்றி கண்டுருக்கிறது. இனவாத சிங்கள அரசின் மீது என்றும் எமக்கு நம்பிக்கை வரப்போவது இல்லை.  ஆனால் பாரதப்பிரதமர் அதற்கென்று சில தனியான வாக்குறுதிகள் தந்துள்ளார். எமது மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருப்பதாக தெரிவித்துள்ளார்.  சிங்கள படைகள் இனி தமிழர் அழிப்பு என்ற நோக்கத்தில் இறங்காது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.  இதன் அடிப்படையில் எங்கள் ஆயுதங்களை இந்தியாவில் இருந்து வந்துள்ள அமைதிப் படையிடம் ஒப்படைக்க என்று முடிவு எடுத்தோம்.   தீலீபன்
எமது மக்களின் பாதுகாப்புக்காக நல்வாழ்வுக்காக நாம் எத்துணை போராட்டங்களை, இழப்புகளை சந்தித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது மக்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்களையும் இந்தியாவிடம் நாம் ஒப்படைக்கின்றோம் என்றால் மொத்த பாதுகாப்பும் இனி இந்தியாவின் பொறுப்பு என்று அர்த்தம். இந்த நிகழ்வு எங்களுக்கான பின்னடைவு என்றபோதிலும் நம் மக்களின் விடிவுகாலம் என்பதில் உறுதியாக இருப்பதால் நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம்.
நாங்கள் இந்த ஆயுதங்களை ஒப்படைக்காமல் போனாலும் இந்திய ராணுவத்துடன் மோத வேண்டிய துர்பாக்ய நிலைமை ஏற்படும்.  இதை நாங்கள் விரும்பவில்லை.  நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்.  இந்திய வீரனுக்கு எதிராக எங்கள் ஆயுதம் போராடாது.  இனி எங்கள் மக்களை பாதுகாக்கும் மொத்த பொறுப்பும் இந்திய வீரர்களுக்கு சொந்தமாகின்றது.   ஈழத் தமிழன் ஒவ்வொருவர் உயிருக்கும் உடைமைக்கும் இனி இந்தியாவே பொறுப்பு.    இந்த சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

" தமிழீழ தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தர இறுதி தீர்வாக இருக்கமுடியும் " என்ற என்னுடைய அசையாத நம்பிக்கை என்றும் மாறப்போவது இல்லை.   இந்த நோக்கத்திற்காகவே இறுதிவரை நான் போராடுவேன் என்பதை இங்கு அழுத்தமாக தெரியப்படுத்த விரும்புகிறேன்.  போராட்ட களம் மாறலாம்.  ஆனால் எமது லட்சியங்கள் மாறப்போவது இல்லை. இந்த லட்சியம் நாம் அடைய வேண்டுமென்றால் உங்கள் அத்தனை பேர்களின் ஒத்துழைப்பு அவஸ்யம் தேவையாய் இருக்கிறது.

தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற, அல்லது தேர்தலில் போட்டிட வேண்டிய அவஸ்யம் எமது இயக்கத்திற்கு ஏற்படலாம்.  ஆனால் நான் எந்த காலத்திலும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.  முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவது இல்லை.  இதை நான் உறுதியாக சொல்ல விரும்புகிறேன் "

பிரபாகரன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல.  உணர்வுகளும் அத்தனை சீக்கிரமாக அவரைப் பாதிப்பதும் இல்லை.  ஆனால் அன்றைய பொதுக்கூட்டம் முடிக்கும் போது எந்த மனோநிலையில் இருந்து இருப்பார் என்பதை மொத்த நீண்ட உரையை படிக்கும் போது சின்னக்குழந்தைக்கு கூட புரியும்?

மிகப்பெரிய ஆச்சரியம் உலக ஊடகங்களும், இந்திய பத்திரிக்கைகளும் இந்த பேச்சை வெகுவாக பாரட்டின.  முக்கியவத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஏறக்குறைய பிரபாகரனுக்கு இரண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு உள்ளே அழுந்திக்கொண்டு உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை.  இந்த பொதுக்கூட்டம் என்பது கூட தன்னுடைய உணர்வுகளுக்கான வடிகால் போல் தான் இருந்தது.

இது போன்ற சூழ்நிலையில் சராசரி மனிதன் மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை தான் அதிகமாக இருக்கும்.  அமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட அடுத்தநாளே இதயவலி வந்துவிடும் தியாகிகளுக்கும் 15 ஆண்டுகளாக உயிர்வெறுத்து போராடிய, களமாடியவருக்கும் உள்ள இந்த நிகழ்வை உங்களால் வித்யாசம் கொண்டு பார்க்க முடிகின்றதா?

ஆனால் பிரபாகரனுக்கு மட்டுமல்ல ஆயுத ஒப்படைப்பு என்ற சடங்கில் நடந்த நிகழ்வின் போது மற்ற போராளிகளின் ஆத்திரமும், அவநம்பிக்கையும் வெளியே காட்டுவதாக இருந்தது.  அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் உள்ளே இருந்த உணர்வலைகள்.  ஏறக்குறைய சாவுச் சடங்கு போல் தான் அது நடந்தது.  வெளியே சிரிப்பு.  உள்ளே அழுகை.

பிரபாகரனுடன் டெல்லிக்கு பயணித்தாரே யோகி, முதன் முதலாக தான் வைத்திருந்த துப்பாக்கியை ஒப்படைக்க வந்த காத்திருந்த (இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்திய திபேந்தர் சிங், மற்ற பல அதிகாரிகள்)வர்களிடம் கையில் கொடுக்காமல் மேஜை மீது வைத்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த போது இதற்கென்று வரவழைக்கப்பட்ட மொத்த உலக ஊடக மக்களுக்கும் ஏமாற்றம்.  வேறென்ன செய்யமுடியும்?  அதிகாரவர்க்கத்தினர் எப்போதும் போல ஜாலியோ ஜிம்கானா தான்.

பிரபாகரன் தாங்கள் வைத்திருந்த மொத்த ஆயுதங்களையும் ஒப்படைத்து இருப்பார் என்றா கருதுகிறீர்கள்?  லொக்கடா, டக்கடா இந்திய வகை ஆயுதங்கள் அதற்கென்று பொறுக்கி எடுத்து வைத்திருப்பார்.   இவர் பக்கம் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம்.

இவர்கள் ஒப்படைத்த இந்த ஆயுதங்களுடன், ரா உளவுப்படை கொண்டு வந்து சேர்த்து இருந்த மற்ற ஆயுதங்களையும் சேர்த்து தான தர்மமாக உள்ளே வலுவிழந்து வாழ்ந்து கொண்டுருந்த EPRLF,PLOTE.TELO போன்ற மற்ற போராளிக்குழுக்களுக்கு கனஜோராக இந்திய அமைதிப்படை வழங்கிக்கொண்டுருந்தது.  இது அந்தப் பக்கம் கண்ணாமூச்சி ஆட்டத்தின் தொடக்கம்.

அப்படியென்றால் நம்முடைய அரசியல் ஞானி செய்து கொண்டுருக்கிறார்?  ராஜீவ் காந்தி சொன்னபடி " இடைக்கால நிர்வாக அரசு"  எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? என்ற விடுதலைப்புலிகள் கேட்ட போது கொட்டாவி விட்டு தூக்க கலக்கத்தில் எழுந்தவர் போல் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் பார்த்து திரு திருவென்று முழித்தார்.

சிந்தனை அதிகம் பெற்றவர் மறப்பது இயல்பது தானே?

புது ரத்தம் பாய்ச்சப்பட்ட மற்ற மொத்த போராளிக்குழுக்களுக்கும் வந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே?   இரவு வேளைகளில் ரகஸ்யமாய் கிழக்கு மகாண கரையோரப் பகுதிகளில் கொண்டு போய் இந்தியாவின் உதவியோடு இறக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட கடற்கரை கிராமத்துப் பக்கம் டெலோ இயக்கத்தினர் பறபறவென்று பல்லை கடித்துக்கொண்டு காத்துருந்தனர்.

தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பல்வலியோடு இரண்டு காலும் வீங்கியிருந்தால் ஒருவனுக்கு எப்படியிருக்கும்.  புதுரத்தம் பாய்ச்சப்பட்டவர்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை காக்க வேண்டும்.  ரா உளவுத்துறை திருவிளையாடலை மறு பக்கம் சமாளிக்க வேண்டும்.  எப்போது வேண்டுமானாலும் ரத்தம் குடிக்க காத்துருக்கும் இலங்கை இராணுவம்.  இப்போது இந்திய வீரர்கள் பேசும் (ஹிந்தி) மொழியும் புரியவில்லை.  அவர்களின் ஆதரவும் கிடைக்குமா என்ற சந்தேகம்.

வெறியுடன் வாழ்ந்தவரை நீ ஒரு வெகுளி? என்பது போல் எச்சமாக நினைத்த வல்லரசு தான் வகையாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை அறியாமலே வலை பின்னத் தொடங்கியது.   வகைவகையான வலைபின்னலை பார்த்து வளர்ந்த பிரபாகரன் அவசரப்படவில்லை.  ஏன் வந்த ஆத்திரத்தைக்கூட உள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.  தன் முன்னால் மூத்திரம் போக அஞ்சியவர்கள் கூட இன்று ரவுண்டி கட்டி அடிக்க காத்துக்கொண்டுருப்பது கண் முன்னே தெரிகிறது.  அவர்களால் சிலரைக்கூட இழந்தாகி விட்டது.  நாம் கைவைத்தால் மொத்தமும் நம்மால் தான் நடந்தது என்று சுபம் போட்டு முடித்து விடுவார்கள்.

அவர்களின் தைரியம் என்பது பின்னால் உள்ள இந்தியா கொடுக்கும் தைரியம்.  நாம் என்ன தவறு செய்தோம்?  இந்தியா விரும்பிய அத்தனை இழுப்புக்கும் தானே போய்க் கொண்டுருக்கிறோம்?  இன்னமும் நம்மை விரும்பாமல் ஏன் அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்?
மக்கள் முன்னால் பேசிய பேச்சு மாறிவிடுமோ என்ற அச்சம் அவரை அலைக்கழித்தது.    இப்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது.  உலகம் முழுக்க கவனித்துக் கொண்டுருக்கிறது.  என்ன செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டுருந்த போது தீலிபன் தன்னுடைய உண்ணா நோன்பு போராட்டத்தை தொடங்கி விட்டார்.

காரணம் தீலிபனுக்கு டெல்லியில் நடந்த மொத்த " Gentlemen Agreement " முழுமையும் தெரியும்.  ஏமாற்றத்தின் தொடக்கம் புரிந்து விட்டது.  ஒரு வகையில் உண்ணாநோன்பு இறுதியில், இறந்த தீலீபன் மரணம் என்பது எந்தவித தாக்கத்தை உருவாக்கியது தெரியுமா?

வல்லரசு தலையில் எழரை பகவான் வந்து அமர்ந்த தருணமிது.