Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May
()()()
நண்பர் மூலம் அறிமுகமாகியிருந்த அய்யரிடம் முதல் நாளே என் விருப்பங்களைச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் செய்ய வேண்டியது என்ன? என்பதனை விரிவாக விளக்கியிருந்தேன். அய்யர் என் மனநிலைக்கு ஒத்துப் போக வேண்டும். என் விருப்பத்தின் அடிப்படையில் பூஜை செய்ய வேண்டும். அவசரமின்றி நிதானமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இறையருளால் நண்பர் மூலம் நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல மனிதர் அறிமுகம் ஆனார்.
முதல் நாள் மாலை நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு அதிகாலையில் நீங்கள் எழும் போது இரண்டு மணிக்கே என்னை எழுப்பி விடுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். நான் இராமேஸ்வரம் சென்று இறங்கிய நாள் முதல் ஒரு நாள் கூட இரவு முழுமையாகத் தூங்கவே இல்லை. அந்த நேரங்களை உள்ளே சுற்றிப் பார்க்கப் பார்க்க பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அத்தனை விதமாகவும் பயன்படுத்திக் கொண்டேன். காரணம் மீண்டும் இதே போல வாய்ப்பு அமையுமா? என்பது நான் அறியேன். மனம் இனி உறுத்தாது.
மே 4 இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு எழுந்து விட்டேன். நமது உடல் செயல் இயக்கம் சரியாகச் செயல்பட்டால் நம் மனம் சொல்வதை உடம்பு கேட்கும். அலாரம் தேவைப்படாது. அடுத்த ஒரு மணிநேரத்தில் காலைக் கடமைகளை முடித்து விட்டு கீழே வரவேற்பரை வந்து அமர்ந்து கொண்டேன். சரியாக மழை பெய்யத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக வெயிலால் வாட்டி வதக்கிக் கொண்டு இருந்த சூழல் மாறி முதல் முறையாக மழை பெய்யத் தொடங்கியது.
அம்மாவுக்கு மற்றும் இறந்த முன்னோர்கள் அனைவருக்கும் பூஜைகள் செய்யக் கிளம்பத் தயார் ஆன போது மழை பெய்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே நின்று விடும் என்றே நினைத்தேன். வெளுத்து வாங்கத் துவங்கியது.
தங்கியிருந்த இடத்தில் இருந்து கடற்ரையை ஒட்டியிருந்த காஞ்சி மடம் என்பது ஐந்து நிமிடம் நடக்கும் தூரத்தில் இருந்தது. நான் அந்தச் சமயத்தில் அய்யரை அழைத்த போது அவர் நேரத்தைப் பார்த்து விட்டு இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அழைத்து இருக்கலாமே? என்று சொன்னார். நான் தயாராகி இருக்கின்றேன் என்று சொன்ன போது ஆச்சரியப்பட்டார். தூங்கவே இல்லையா என்றார். ஒரு மணி நேரம் கழித்து அய்யர் எனக்கு ஒரு குடையை எடுத்துக் கொண்டு விடுதி வர இருவரும் இடைவிடாமல் பெய்து கொண்டு இருந்த மழையில் நனைந்து கொண்டே மடத்தின் வாசலுக்குச் சென்றோம். அவர் மழை பெய்தது குறித்து சில சகுனம் சார்ந்த நல்ல விசயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
இந்தப் பயணத்தில் இராமேஸ்வரம் என்ற தீவு மற்றும் இராமநாத சுவாமி கோவில் என்பது அதிகாலை. காலை. மதியம். மாலை. இரவு. நள்ளிரவு என்று ஒவ்வொரு நேரத்திலும் எப்படி இயங்குகின்றது என்பதனை நான் முழுமையாகப் பார்த்தேன். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் நடந்து சென்றேன்.
அந்தப் பகுதியில் மழை காரணமாக மின்சாரம் தடைபட்டு இருந்தது. இருட்டில் கடலைப் பார்த்தேன். வானத்திலிருந்து வந்து கொண்டு இருந்த மழையைப் பார்த்தேன். அம்மா மற்றும் அப்பா வகையில் உள்ள அனைவரின் புகைப்படங்களையும் முதல் முறையாக எடுத்துச் சென்று இருந்தேன். மடத்திற்குள் கோசாலை போல மாடுகளை வைத்து பராமரிக்கும் இடம் ஒன்று இதற்கென்று உள்ளே தனியாக உள்ளது.
முக்கால் மணி நேரத்தில் பூஜை முடிந்தது. மணி அதிகாலை நான்கு. கடலில் 36 முறை பிண்டங்களைக் கரைத்து மூழ்கி எழ வேண்டும் என்று அய்யர் சொன்னார். அத்துடன் குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே சென்று விடுங்க. நீங்க விரும்புவது போலக் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்றார். நான்காவது வளைவு பக்கம் சென்று இருள் புலராத அதிகாலையில் சூரியன் வராத நேரத்தில் பிரம்ப முகூர்த்தத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பு என்று ஐந்து பூதங்கள் சாட்சியாக, என் கண்களுக்குத் தெரிந்து வாழ்ந்த முன்னோர்கள், தெரியாமல் அதற்கு முன்னால் வாழ்ந்த பாட்டன்களை, பூட்டன்களையும் பெயர் சொல்லி உணர்வு பூர்வமாக உள் அர்த்தமாக 36 முறை கடலின் உள்ளே மூழ்கி பூஜை செய்து தட்டில் கொண்டு போயிருந்தவற்றை கடலில் கரைத்தேன்.
நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொன்னது போல மொட்டை அடிக்கும் இடத்தில் உருவான மாற்றங்கள் என்பது காலை ஐந்தே முக்கால் மணிக்குத்தான் அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள். முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். திரும்பி அறைக்கு வந்து அருகே இருந்த பேருந்து வழியாகப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.
இராமேஸ்வரம் பேருந்து நிலையம் என்பது கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைத்து இருந்தார்கள். ஊருக்குள்ளே வரும் இடத்தில், நுழைவு இடத்தில் உருவாக்கப்பட்டு இருந்த பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி. நேரிடையாகப் பேருந்து இல்லை. மதுரைக்குத் தான் அதிகப் பேருந்துகள் இருந்து. திருச்சிக்கு ஒன்பது மணிக்கு தான் கிளம்பும் என்றார்கள். யோசிக்கவில்லை. காரணம் திருச்சி ரயில் நிலையத்திற்க மாலை நான்கு மணிக்குள் இருக்க வேண்டும் என்ற அவசரம் இருந்தது.
பரமக்குடி, இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை என்று மாறி கடந்து வந்து திருச்சி வந்து சேர்ந்தேன். மதியம் மூன்று மணி. ஏற்கனவே கும்பகோணம் கோவை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவு செய்து இருந்தேன். திருப்பூர் வந்து சேர்ந்த போது இரவு எட்டு மணி. வீட்டுக்குள் நுழைந்த போது எட்டே முக்கால் ஆகியிருந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு முழுமையாக ஐந்து நாட்கள் கோவிலுக்காக, அம்மாவுக்காக என்னை முழுமையாக மாற்றிக் கொண்டது இந்த முறை தான்.
வீட்டுக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் மகள்கள் இருவரும் அவரவர் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகளைச் சொன்னார்கள். அதனை நான் ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். மே 5 காலையில் தான் அவர்களுக்கு அந்தச் செய்தி வந்து சேர்ந்து இருந்தது. நான் பூஜை முடித்து வெளியே பயணம் செய்து கொண்டு இருப்பேன் என்று நினைத்துச் சொல்லாமல் இருந்தோம் என்றார்கள்.அந்தச் சமயத்தில் அதாவது நான் வந்து இறங்கிய நாளில் என் காதுக்கு வந்தது அம்மாவின் ஆசிர்வாதம் என்றே எனக்குத் தோன்றியது.
இது குறித்து இன்னும் சில விசயங்களைப் பற்றித் தனியாக மீண்டும் எழுதுவேன். இந்தத் தொடரின் மூலம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய சில தகவல்கள் உள்ளது.
மனதோடு தொடர்புடைய ஆன்மீகம் உங்கள் குலத்தைக் காக்கும்.
போலித்தனத்தை விரும்பாதீர்கள்.
கோவில் தலங்களில் பணம் இருக்கின்றது என்பதற்காக உங்கள் விஜபி தனத்தைக் காட்டாதீர்கள்.
சாமிக்கு உங்களைப் பற்றி மட்டும் உள்ள உங்கள் பரம்பரையைப் பற்றியும் தெரியும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கட்டும்.
சரியான பிரார்த்தனை என்பது உங்கள் குடும்பத்தை வழிநடத்தும். நீங்கள் செல்லக்கூடிய பாதையில் வழிகாட்டியாக இருக்கும்.
ஆன்மீகம் என்பது வெறுமனே கடவுளிடம் சென்று முறையிடுவது மட்டுமல்ல.
உங்களால் முடிந்த அளவுக்குச் சக மனிதர்களுக்கு உதவ வாய்ப்பு அமையும் போது உதவுங்கள்.
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கிரகங்களே.
அரசாங்கத்தைக் குறை சொல்வது இருக்கட்டும்.
அரசியல்வாதிகள் மேல் எரிச்சலடைவது ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால் ஜனநாயகம் என்பது நல்ல சுதந்திரத்தை தரும்.
அதைப் பயன்படுத்துவதும் நாசமாக்குவதும் சக மனிதர்கள் தான். நிச்சயம் நேரிடையாகவே மறைமுகமாகவே அதனைத் தட்டிக் கேளுங்கள்.
மனு அனுப்பினால் நிச்சயம் நடவடிகக்கை எடுக்கின்றார்கள்.
நான் கடந்த மூன்று வருடங்கள் என் வீட்டைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் முதல் இராமேஸ்வரத்தில் நான் பார்த்த மோசமான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு எழுதி அனுப்பிச் சாதித்துள்ளேன். தலைமை அலுவகம் சிவகங்கையில் இருந்து நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று ஆணையர் கையொப்பமிட்டு எனக்குக் கடிதம் எழுதியதை நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
இன்று வரையிலும் ஆரோக்கியம் தான் எங்கள் குடும்பச் சொத்தாக உள்ளது. என் கையில் எதுவுமில்லை.
யாரோ எங்கிருந்தோ ஆட்டுவிக்கின்றார்கள்.
நாம் ஆடுகின்றோம்.
நமது திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு, உத்வேகம், தன்னம்பிக்கை போன்ற அனைத்தையும் நம்புங்கள்.
கூடவே நம் அறிவை அழிவு சக்திகளுக்குப் பயன்படுத்தி விடக்கூடாது. அதற்காக உள்ளூற ஒரு பயம் இருக்க வேண்டும்.,
அதற்காகவாவது ஆன்மீக நம்பிக்கையை நாம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் இனிமேலாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.
உடன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அன்பு. வாழ்த்துகள். வணங்குகின்றேன்.
ஜோதிஜி திருப்பூர்
17.05.2025
Sivapuranam | சிவபுராணம் | S.P.Balasubramaniyam | S.P.பாலசுப்ரமண்யம்
No comments:
Post a Comment