Wednesday, May 14, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 3 2025) – 8

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

 ()()()  

ஐந்தாம் தேதி அதிகாலையில் தான் பூஜை என்பதால் கிடைத்த நேரமெல்லாம் இராமேஸ்வரத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்குள்ளும் காலையிலும் மாலையிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருந்தேன்.காலை எட்டு மணிக்கு மேலே வெயிலின் தாக்கம் அதிகம்.  மதிய நேரமெல்லாம் வெயில் நம் உடம்பில் உள்ள தோலை பிய்ச்சி எடுப்பது போல இருக்கும். வினோதமான சிதோஷ்ண நிலையை உணர்ந்தேன். தீவு என்றாலும் மூச்சு முட்ட வைத்தது.

மூன்று நாட்களும் இருபது கிலோ மீட்டர் நடந்தது வந்துருக்கலாம் என்கிற அளவுக்குக் கோவிலுக்கு வெளியே இந்த ஊர் இரவிலும் பகலிலும் எப்படிச் செயல்படுகின்றது என்பதனைப் பார்த்தேன். வணங்க வந்தவர்களையும், இதை வைத்து வாழ்ந்து கொண்டுருந்தவர்களை ரசித்தேன்.





புனிதம், கடமை என்பது இரண்டு தனித் தனி வார்த்தைகள் தான். ஆனால் இவை இரண்டும் உங்களை கட்டுப்படுத்தும். கட்டிப்போடும். இந்தியாவில் கடமை என்கிற இடத்தில் புனிதம் வந்து அமர்ந்து இருக்கும். புனிதம் இருக்கும் இடத்தில் கடமை காணாமல் போய்விடும்.

நான் என் மகனை, மகளை வளர்த்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை என்று பெற்றோர்கள் கதறுவதைப் பார்க்கலாம். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து கவனித்து வளர்த்ததைப் போலக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குப் பின்னால் உள்ள காரணக் காரணிகளை நாம் பார்ப்பதில்லை. வளரும் போதே நாம் குழந்தைகளுக்கு நாம் விரும்புவதைத் தான் கற்றுக் கொடுக்க விரும்புகின்றோம். சமூகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்பதனை எந்த பெற்றோர்களும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இங்கே இருந்து தான் பிரச்சனை தொடங்கின்றது.






என் பிள்ளையை ஒழுக்கமாக வளர்த்து விட்டால் போதும் என்று மட்டும் தான் நம்புகின்றார்கள். ஆனால் நம் பிள்ளை பழகும் மற்றவர்கள் எப்படியிருக்கின்றார்கள்? அவர்களை சமாளிக்க நம் பிள்ளைக்கு என்ன தனித்திறமை உள்ளது? என்பதனை நாம் உணர்வதில்லை.

நம் சாதி, மதம் சொல்லியிருப்பதை வைத்து அவர்களை உருவமாக மாற்ற முயற்சிக்கின்றோம். ஆனால் குழந்தைகள் வளரும் சூழல் வேறு. தொழில் நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருப்பதை வைத்து அவர்களின் மனமும் வாழ்வும் வேறு விதமான பாதைக்குத் தான் செல்கின்றது. அதைப் பெற்றோர்கள் உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் அநேகம். 

தங்கள் உறவுகளைப் புனிதம் என்ற வட்டத்திற்குள் வைத்து சீராட்டி பாலூட்டி கண்விழித்துக் கஷ்டப்பட்டு வளர்தேன் என்பது குழந்தைகளின் பார்வையில் கேலிக்குரியதாகக் கிண்டலுக்குரி யதாகவே தெரிகின்றது. மாறிவிடுகின்றது.










இன்று எந்தப் பெண் குழந்தைகளும் நெற்றில் பொட்டு வைப்பதை விரும்புவதில்லை. கஷ்டப்பட்டு வைக்கக் சொன்னாலும் கண்ணுக்கு தெரியாத மாதிரி சின்னதாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள். தினமும் கோவில் செல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதாவது செல்ல வேண்டும் என்று நினைப்பு வராத அளவுக்கு ஒரு குழந்தை பெற்றவர்கள் பொத்தி பொத்தி வளர்க்க கடைசியில் குடும்பத்தில் இருந்து திமிறிக் கொண்டு வெளியேறுவது தான் நடக்கின்றது.

கடவுள் நம்பிக்கை என்பதனை ஒரு தனிப்பட்ட கட்சியுடன் தொடர்பு படுத்தும் அரசியல் விளையாட்டு இவர்கள் பலியாகி கடைசியில் வளரும் குழந்தைகள் தடுமாறி தடம் மாறி சென்று விடுகின்றார்கள். தனியார் பள்ளிகள் ஒழுக்கம் என்ற பெயரில் அடிமைத்தனத்தை புகுத்தி எதைப் பற்றியும் கண்டு கொள்ளத் தேவையில்லை என்கிற பொறுப்பற்ற குடிமகனமாக மாற்றி இந்த சமூகத்திற்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.





ஒரு இஸ்லாமியர், கிறிஸ்துவர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் வேறு. ஆனால் இந்து மதம் என்ற எண்ணத்தில் எவரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில்லை. பதிலாகத் தன் சாதி என்கிற வட்டத்திற்குள் வைத்து தான் தங்களுக்குரியதை வைத்துக் கொண்டு வாழ்க்கை வாழ விரும்புகின்றார்கள். மதம், அது சார்ந்த கொள்கைகள், கோட்பாடுகள், பாரம்பரியம், கலாச்சாரம், குடும்ப பெருமைகள், முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்று அனைத்தையும் இன்று அரசியலாக மாற்றியுள்ளனர். அவசியம் இல்லை என்பதாகவும் கருதுகின்றார்கள்.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இயற்கையைப் போற்றுவார்கள். மதிப்பார்கள். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு பெயர். பின்னால் புராண கதைகள். ஆறு, குளம், ஏரி, கண்மாய் என்று தொடங்கிக் கடல் வரைக்கும் அதனை எப்படியெல்லாம் சீரழிக்க முடியும் என்பதனை நம் மக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். புனிதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு கடமை என்பதனை மறந்து ஆசைக்கும், பேராசையுமாக அலையும் பதர்களாக இருக்கும் நம் மக்களை ஒவ்வொரு ஆன்மீக தலங்களில் வாழும் தெய்வங்களும் அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களும் நிரம்பி வழிகின்றது. ஆன்மீகம் நீக்கமற வளர்ந்துள்ளது என்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆசைகள் பேராசைகளாக மாறி ஆண்டவரை அரசியல்வாதிகள் போல நம் மக்கள் மாற்றி விட்டார்கள். அதை வைத்து கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

நீ எனக்கு இவையெல்லாம் தந்தாக வேண்டும் என்று சாமியிடம் மிரட்டும் அளவுக்கு மக்களின் மனம் மாறியுள்ளது. சடங்கு, சம்பிராதயம் என்பதெல்லாம் மாறி ஜோசியர் சொன்னார் என்பதற்காகச் சாங்கியம் செய்ய மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர்.

இன்று ஒவ்வொரு கோவிலும் இங்குள்ள சோசியர் மூலம் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு இத்தனை வாரம் சென்றால் போதும் என்பதை மக்கள் ஒவ்வொருவரும் வேதவாக்காக நினைத்து பின்பற்றுகின்றார்கள். நடக்குமா? நடக்காதா? நடந்ததா? என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை.

கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த ஊருக்குப் பலவகையில் வருமானம். ஆனால் சுகாதாரத்தை அரசினால் ஓர் அளவுக்கு மேல் பேணிக் காக்க முடிவதில்லை. கோவில் தலங்களைச் சாக்கடை போல மாற்றி விடுகின்றார்கள். அவசரம். எல்லாமே அவசரம் என்கிற ரீதியில் செயல்படுவதால் இன்றைய ஆன்மீகம் என்பது வெறுமனே காட்சிப் பொருளாகவே உள்ளது. உள்ளார்ந்த இறையருள் தேடும் வேட்கை என்பது இல்லவே இல்லை.

 








இராமேஸ்வரத்தில் நான் இருந்த நாட்களில் நாலைந்து முறை கடலில் சென்று குளித்து இருப்பேன். கடலுக்கு வெளியே மற்றும் கடலுக்கு உள்ளே நம் மக்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் எழுத்தில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. மக்கள் வந்து போய்க் கொண்டு இருக்கின்ற புழங்கிக் கொண்டேயிருக்கும் இடங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் செயல்பட வாய்ப்பில்லை. ஊழல் மிகுந்த நம் நாட்டில், ஆட்கள் பற்றாக்குறை உள்ள நம் அதிகாரவர்க்கத்தில் என்ன தான் முயற்சி செய்தாலும் மக்களே திருந்தாத வரைக்கும் எந்த இடத்திலும் பெரிய மாற்றங்களை உங்களால் கொண்டு வரவே முடியாது.

இராமேஸ்வரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருந்தும் வருமானம். கட்சிகளின் பெயர்கள் மட்டும் தான் வேறு. அனைவரும் உள்ளே ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கததிற்குச் செல்ல வேண்டிய பணம் அனைத்தும் அங்கே தனி நபர்களின் பைகளுக்குத்தான் அதிகம் செல்வதைப் பார்த்தேன்.

இந்துத்துவா அமைப்புகள் என்று சொல்லக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்றவற்றில் இருப்பவர்களின் தகுதியை இந்த முறை அங்கே சென்று பார்த்தேன். திமுக, அதிமுக எல்லாவகையிலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு வெளுத்துக் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். கட்சி பெயர்களை வைத்துக் கொண்டு புரோக்கர்களாக இருக்கின்றார்கள். புரோக்கர்களாக இருப்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஏதோவொரு கட்சி பின்புலத்தைத் தேவைப்படும் நேரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் பார்த்தேன்.

இராமேஸ்வரம் முழுக்க எங்குத் திரும்பினாலும் குப்பை. கடலுக்கு உள்ளே தலை மூழ்கிப் போகும் அளவுக்கு உள்ளே சென்றாலும் அவரவர் பூஜை முடித்துத் தங்கள் ஆடைகளை அப்படியே கழட்டிப் போட்ட அனைத்தும் காலில் சிக்க நமக்கு ஒரு மாதிரியாக உள்ளது. கடல் மணற்பரப்பில் அதே போலப் பழைய ஆடைகளும் பூஜை செய்து முடித்துத் தூக்கி எறியப்படும் சாமான்களும். அரசாங்கம் அறிவிப்புப் பலகைகள் வைத்து இருந்தாலும் மக்கள் தங்கள் பாவத்தைக் கழித்து விட்டால் போதும் என்கிற அவசரத்தில் தான் இருக்கின்றார்கள்.

கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்யக்கூடிய பிராமணர்கள், பிரமணர்கள் அல்லாதவர்கள் என்று பல பிரிவுகள் உள்ளது. அதே போல மடங்கள் என்று தனியாக அங்கங்கே உள்ளது. அங்கும் பூஜைகள் செய்யப்படுகின்றது. வெவ்வேறு விதமான கட்டணங்கள். எல்லாருக்கும் சங்கம் உள்ளது. கழுத்தில் கட்டாயம் மாலை போல அடையாள அட்டையை மாட்டியிருக்கின்றார்கள். மக்கள் அனைவருக்கும் இறந்த பிறகு தான் பாசம் அதிகம் பொங்கும் போல.

மலை மலையாகப் பழைய ஆடைகள் அங்கங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதனை வண்டி வண்டியாக எடுத்துக் கொண்டே செல்கின்றார்கள். அதுவொரு சிறந்த தொழில். அதனை மீண்டும் உருவாக்கும் செய்து விற்பனை செய்ய ஒரு குழு தொடர்ந்து இரவு பகலாகச் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. நான் என் ஆடைகளைக் கவனமாக அந்த வண்டியில் இருப்பவர்களிடம் தான் கொண்டு போய்க் கொடுத்தேன்.

ஒரு சங்கின் விலை, ஒரு பாசிமணி விலை பத்து ரூபாய் அடக்க விலை என்றால் அது பத்து மடங்குக்கு மேலே விற்கப்படுகின்றது. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை. தமிழ் மொழி பேசினால் தவிர்க்கப் பார்க்கின்றார்கள். இந்தி மொழி என்றால் அல்வா போல அழைக்கின்றார்கள்.

அம்மா இறந்து மூன்றாவது நாள் இராமேஸ்வரம் வந்து இறந்த போது கடற்கரையில் அமர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பூஜை செய்து இறுதியில் மொட்டை போட ஒரு கூடத்துக்குச் சென்றோம். அங்கே மொட்டை அடிக்க இலவசம் என்று தமிழக அரசு எழுதியிருந்த வாசகத்தைப் படித்தேன். ஆனால் அங்கே இருந்த ரௌடிக் கும்பல் அதை மதிக்காமல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்காமல் தங்கள் பிரயோகத்தைக் காட்ட நினைத்தது. சண்டை போடாமல் அமைதியாக வந்து அதிகாரவர்க்கம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மனு அனுப்பினேன். இப்போது இங்கே ஏதாவது மாறுதல் நடந்து இருக்குமா என்று இந்த முறை மொட்டை அடிக்கச் சென்ற போது மொத்த நிர்வாகத்தையும் மாற்றியிருந்தார்கள். 

நாவிதர்கள் பணம் வாங்கும் சிஸ்டத்தை உருவாக்கியிருந்தார்கள். இடைத்தரகர்கள், ரௌடிக் கும்பல் எவரையும் காணவில்லை. ஒன்றும் தெரியாத மாதிரி அங்கே இருந்த ஒருவரிடம் "போன வருடம் வேறு மாதிரி இருந்ததே? இப்போது ஏன் இப்படி மாறியுள்ளது"? என்று கேட்ட போது அவர் "யாரோ எழுதிப் போட்டு விட்டார்கள். பெரிய அதிகாரி சோதனைக்கு வந்தார். எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்" என்றார். 

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 2 2025) – 7

என்னைப் போல அம்மா அப்பாவை இழந்தவர்கள் கௌரவமாக மொட்டை அடித்துத் தங்கள் விருப்பப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டு செல்ல ஒரு பாதையை உருவாக்கியதில் மகிழ்ச்சி. ஆனால் எவருக்கும் தெரியாது.

தங்கும் இடங்கள் குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.

No comments: