Thursday, May 15, 2025

இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 4 2025) – 9

Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May

 ()()()

இராமேஸ்வரம் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். எத்தனை நாட்கள் அங்கே தங்கப் போகின்றீர்கள்? என்ன வாடகைக்குள் இருக்க வேண்டும்? இந்த இரண்டிலும் கவனமாக இருக்கவும்.

பணம் அதிகமாக உள்ளது. எனக்கு வசதிகள் தான் முக்கியம். கடவுளைக் கூட நான் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கித் தான் தரிசனம் செய்ய விரும்புவேன் என்பவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. உங்களுக்கு தினசரி வாடகை ரூபாய் இருபதாயிரம் என்கிற அளவுக்கு சிறப்பான விடுதிகள் உள்ளது.

நடுத்தரவர்க்கம் மற்றும் நடுத்தரவர்க்கத்திற்கு கீழே இருப்பவர்களின் பர்ஸ் பழுத்து விடக்கூடாது. இணையம் வழியே அதில் கொடுத்துள்ள படங்கள், செயற்கையாக வழங்கப்பட்ட ஸ்டார் ரேட்டிங், புகழ்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் பார்த்து இது சரியான விடுதியாக இருக்கும் என்று மயங்கி விடாதீர்கள்.  நான் பார்த்தவரைக்கும் என்பது சதவிகிதம் பணம் பறிக்கும் கும்பல் கையில் தான் விடுதிகள் உள்ளது.  அடிப்படை மனிதாபிமானம் என்பது துளியும் இல்லாமல் தான் இந்த தொழிலை அங்கே இருப்பவர்கள் நடத்துகின்றார்கள்.  குறுகிய காலத்திற்குள் ஒவ்வொருவரும் அள்ளிக் குவிக்கின்றார்கள். ஒருவரைப் பார்த்து அடுத்தவர் என்று இது நகர்ந்து கொண்டே போகின்றது. 







காரணம் இங்கே இரண்டு சென்ட் இடம் இருந்தாலும் அதில் ஒவ்வொருவரும் கட்டி வைத்துள்ள விடுதிகள் என்ற பெயரில் உள்ள குடோன்கள் பார்க்க சகிக்காது. வெளியே ஆடம்பர அலங்காரம் இருக்கும். உள்ளே சென்றால் வேறு விதமாக இருக்கும்.


உங்கள் நட்பு வட்டாரம் இருந்தால் ஒரு முறைக்கு இரு முறை நன்றாகக் கேட்டு அதன் பிறகு முடிவெடுங்கள். சுற்றுலா மனோநிலையில் செல்கின்றீர்களா? அல்லது ஆன்மீக மனநிலையில் செல்கின்றீர்களா என்பதனை வைத்து உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். அங்கே சுற்றுலா என்பதற்குப் பெரியதாக ஒன்றுமில்லை. தனுஷ்கோடி என்றாலும் கடைசி வரைக்கும் மத்திய அரசாங்கம் சாலை போட்டு இலங்கை அருகே வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றார்கள். அங்கே போய் அமர இடம் இருக்காது. ஓய்வெடுக்க எவ்வித வசதிகளும் உருவாக்கப்படப்வில்லை. நட்ட நடு அத்துவான பொட்ட வெயிலில் வேர்த்து விறுவிறுத்து வெறுத்துப் போய்த் தான் திரும்பி வர வேண்டும். இப்போது தனுஷ்கோடி ரயில் திட்டத்தை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேலை தொடங்கவுள்ளதாகச் செய்தித்தாளில் படித்தேன்.

மத்திய அரசு காசி போல இந்தத் தலத்தை மிகப் பெரிய சுற்றுலா தலமாக மாற்ற பலவிதங்களில் பல ஆண்டுகளாக மாற்ற முயன்று வருகின்றது. ஆனால் இங்குள்ள மாநில அரசு பல காரணங்களால் அதற்குத் தடையாக உள்ளது அல்லது மெதுவாக நகர்த்துகின்றது. இடம் வழங்குவதைத் தள்ளிப் போடுகின்றது. ஒப்புதல் வழங்குவதில்லை. முக்கியக் காரணம் நாம் புனித தலம் என்று அழைத்தாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடத்தப்பட்டு வருகின்ற கடத்தல் அனைத்தும் இந்தப் பாதை வழியே தான் அதிகம் நடக்கின்றது. அது திருச்சி விமான நிலையம் வரைக்கும் தொடர்கின்றது. பல சமயங்களில் இங்கேயிருந்து தொடங்குகின்றது. சமீப காலங்களில் திருச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வையாபுரி கோபால்சாமி (வைகோ மகன்) திருச்சி விமான நிலைய அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்றார். வந்து போகின்ற இஸ்லாமியர்களை அதிக அளவு சோதனை செய்யக்கூடாது என்பதில் தொடங்கி இன்னும் பல கட்டளைகளை அதிகாரிகளுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுக் கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டு விட்டால் அதனை எடுத்து வர குறிப்பிட்ட நபர்கள் இருக்கின்றார்கள். இந்திய ராணுவ கப்பல் படை சார்ந்த ரோந்து கப்பல்கள் இருந்தாலும் இன்று வரையிலும் இங்கே பாதுகாப்பு இல்லை. அரசாங்கததின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு இந்தப் பகுதியை ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக மாற்ற நினைக்கின்றது.

கடத்தல் காரியங்களில் ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் தான் பங்கு பெற்று உள்ளார்கள் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடாது. மூன்று மத மனிதர்களும் உள்ளனர். பணம் என்ற மூன்று எழுத்து மூவரையும் ஒன்றிணைக்கின்றது.

சமீப காலமாகப் போதை பொருள் என்பது இந்தப் பாதைகளில் வழியே மிகப் பெரிய அளவுக்குக் கடத்தப்படுவதால் என்ஐஏ என்பது இந்தியாவில் தமிழகத்தைக் குறி வைத்து ஒவ்வொரு முறையும் பலரையும் அள்ளிக் கொண்டு செல்கின்றது. இது போன்ற செய்திகள் வெளியே வராத அளவுக்கு அமுக்கி விடுகின்றார்கள்.

நீங்கள் பயணியாகச் சென்று வரும் போது இது போன்ற இருட்டுப் பக்கங்கள் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தத் தலம் என்பது புனிதமான தலமென்பதை இந்தப் பயணத்தில் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

விரதம் இருந்தது, மனதார நினைத்து, உள்ளும் புறமும் ஒரே மாதிரி யோசித்து இராமநாத சுவாமியை தரிசனம் செய்ய வரக்கூடியவர்களுக்கு நிச்சயம் இங்கே அருமையான ஆன்மீக அனுபவம் கிடைக்கும். நான் கோவிலுக்கு உள்ளே இருந்த தருணங்கள் அனைத்தும் அற்புதமானவை. உடம்பில் அதிர்வு இருந்து கொண்டேயிருந்தது. எனக்கு வேறு எங்கும் கிடைக்காத அனுபவம் இது.

கோவிலுக்கு அருகே உள்ளது. விசேட தினம் இல்லாத நாட்களில் சென்றால் இயல்பான கட்டணம். எளிய வசதிகள் தான் இருக்கும்.







காரைக்குடி நகரத்தார் மடம் ஒன்று உள்ளது. செட்டியார்களுக்கு ரூபாய் அறுநூறு (22 மணி நேரம்) மற்றவர்களுக்கு இரண்டு மடங்கு.  இதே போல குளிர்சாதன வசதிகள் என்றால் குறைந்த பட்சம் ரூபாய் 1200.  மற்றவர்களுக்கு வேறு விலை.  காஞ்சி மடம், ஆதினங்களின் மடம், குஜராத்தியர் மடம், வட இந்தியர்கள் சார்பாக தான தர்மத்திற்கு என்று உருவாக்கப்பட்ட மடங்கள் என்று வடக்கு கோவில் வாசல் எதிரே கடலுக்குச் செல்லும் வழியில் வரிசையாக உள்ளது.

எளிய விலை. அருமையான இடம். சாப்பாடு வசதிகள் உள்ளே உள்ளது. நீங்கள் ஆடம்பர பிரியராக இல்லாவிட்டால் நான் மேலே கொடுத்துள்ள அந்தந்த அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு செல்வதற்கு முன்பு பேசிவிட்டு செல்லுங்கள். நான் என் நண்பர்களுக்கு என இதனை ஒவ்வொரு இடமாகச் சென்று பேசி சேகரித்தேன்.  

வட இந்தியர்களாக இருந்தாலும் இங்கே பல வருடங்கள் வாழ்ந்த காரணத்தால் நன்றாக தமிழ் பேசுகின்றார்கள். நம்மவரை விட நம் மேல் அதிக அக்கறை காட்டுவார்கள். நம்பிக்கையுடன் இது போன்ற மடங்களில் தங்கலாம்.  மீண்டும் சொல்கின்றேன். இது போன்ற புனித தலங்களுக்கு வரும் போது எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் வசதிகளை குறைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு உள் மனதை பக்குவடுத்திக் கொண்டு வாருங்கள்.




இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 3 2025) – 8

வாழும் போது பல்வேறு காரணங்கள் அடிப்படையில் அப்பா, அம்மாவை, உடன் பிறந்தவர்களை கவனிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்போம். குற்ற உணர்ச்சி உள்ளே இருந்து கொண்டேயிருக்கும். மன உளைச்சலாக மாறி விடுவதற்குள் இங்கே ஒரு முறை வந்து விட்டுச் செல்லுங்கள்.

இராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்கள் குறித்து அடுத்த பதிவில்...


பயணங்கள் தொடரும்...

No comments: