Sunday, March 30, 2014

அன்புள்ள ஆசானுக்கு

அன்புள்ள ஜோதிஜி,   
                                  
வணக்கம்.

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக் கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது - நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார். 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் - காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம். 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை. 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம். 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும். 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும். 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள். 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம். 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக. 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். 

அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்


தொடர்புடைய பதிவுகள்








Thursday, March 27, 2014

ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்?

நம் வாழ்க்கையில் நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பல வார்த்தைகள் உண்டு. அதில் ஒன்று தான் "அடுத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்த வேண்டாம்" என்ற வாக்கியமும். 

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வைத்திருக்கும் நம்பிக்கைகள் ஒன்றா? இரண்டா?

மதம், இனம், மொழி, சாதி, ஊர் எனப் பலதரப்பட்ட நம்பிக்கைகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் சுமந்து கொண்டே தான் திரிய வேண்டியுள்ளது. அது தேவையா? என்பதை உணர்வதும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் நமக்கில்லை. பகுத்தறிய விரும்புவதுமில்லை. சரியா? தவறா? என்று கூட யோசிப்பதில்லை. இந்த வார்த்தையே தவறு. நம்மை யோசிக்க விட விடுவதில்லை என்பது தான் சரி. 

நீ இந்த மதத்தில் பிறந்துள்ளாய். இது தான் உன் தெய்வம். இது தான் உன் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்று கோட்டை உருவாக்கி சுற்றிலும் அகழியையும் உருவாக்கி உள்ளேயே வாழ்ந்து உள்ளேயே மரணித்தும் போய் விடுகின்றோம். உலக மாறுதல்களை அறிவது இருக்கட்டும், ஊருக்கு அருகே நடக்கும் மாறுதல்களைக் கூடக் கவனிக்க முடியாத அளவுக்குச் சேனம் கட்டிய விலங்கு போலவே நம் வாழ்க்கை குறுகிய வட்டத்திற்குள் உழன்று முடிந்தும் போய்விடுகின்றது. 

கோவிலுக்குள் சென்றாலும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கவே விரும்புகின்றோம். உண்டியலில் காணிக்கை போடும் போதே நாம் வைத்துள்ள ஆசைகளின் வரவு செலவு அடிப்படையில் கணக்குபுள்ளையாகச் செயல்படுகின்றோம். கோவிலுக்குள் பக்திமானாகச் செல்லும் அனைவரும் வெளியே வரும் போது சீதை விரும்பிய மாயமானை தேடுபவர்களாகத்தான் வருகின்றார்கள். 

கடைசியில் பக்தி என்பது பகல் வேஷம் போல மாறிவிடுகின்றது. 


நாம் வைத்துள்ள எல்லாவிதமான நம்பிக்கைகளும் மதத்திலிருந்து தொடங்கி மத நம்பிக்கைகளுக்குளே முடிந்து போயும் விடுகின்றது. ஏன்? என்று கேட்கக்கூடாது? இது எதற்காக? என்று பார்க்கக்கூடாது. பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை போலவே பார்க்கப்படுகின்றது. 

நம்மை ஒதுக்கி விடக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்பவர்கள் தான் "ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எதையும் "ஆராய்ச்சி மனப்பான்மையில் பார்க்காதே" என்பவர்கள் தான் "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட. 

ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம் தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின் சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக "எல்லாமே விதிக்குள் அடக்கம்" என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது. 

'முயற்சித்தேன் கைகூடவில்லை' என்பதற்கும் 'விதியிருந்தால் அது நடக்கும்' என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார பலத்தைப் பற்றி உணர முடியும். 

வயதாகி விட்டது. உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதில் இரண்டு அர்த்தம் உண்டு என்பதை எப்போதும் நாம் மறந்து விடக்கூடாது. உடல் உறுப்புகள் காலப்போக்கில் அதன் வீரியத்தன்மையை இழப்பதென்பது இயற்கை விதி. ஆனால் இளமையில் போட்ட ஆட்டத்தினால் உறுப்புகள் அந்தர்பல்டி அடித்துச் சத்தியகிரகம் செய்யும் போது தான் ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக ஞானமே பிறக்கின்றது. 

அதாவது நான் திருந்தி வாழ விரும்புகின்றேன். ஆனால் என் மனதை அடக்க முடியவில்லை. அதற்கு ஒரு சாய்வு தேவை என்கிற ரீதியில் தான் பலருக்கும் இந்த ஆன்மீகம் அருமருந்தாக உள்ளது. 

"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது. ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். சீரியல் பைத்தியமாக இருக்காளே என்று சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் 'கடவுள் ஆராய்ச்சி' தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு வளர்ந்திருக்காது. 'கண்டவர் விண்டிலர்' என்ற சொல்லும் போதே "அதெல்லாம் சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ" என்கிற தைரியம் பிறந்திருக்காது. 

மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது. 

எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது. 

விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றி நினைக்கவில்லையே தவிர ஒவ்வொரு காலகட்டத்திலும் மதவாதிகள் நினைக்க வேண்டிய கடவுள்களைத் தவிர மற்ற அனைத்தையும் நினைத்தார்கள். தங்கள் ஆளுமைக்குள் தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அது தொடர்பான வேலைகளை மட்டுமே செய்தார்கள். அக்கிரமங்கள் மட்டும் நின்றதே இல்லை. கல்லடி கொடுத்தார்கள். கழுவில் ஏற்றினார்கள். உண்மைகளை வெளியே வராத அளவுக்கு உக்கிரமாகச் செயல்பட்டார்கள். 

கடைசியில் "பாவத்தைச் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்று மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு பரிதாபமாகக் கூவினார்கள். உன் விதிப் பயன் மாறும் என்றார்கள். பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் திறந்த அணையைக் கை வைத்து தடுக்க முடியுமா? 

மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்க்கும் அளவிற்கு மாறியுள்ளது. ஆனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் மக்கள் தேடிப்போய் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. 

வாழ்க்கையை நேசிப்பவர்கள் வசதியை விரும்புகின்றார்கள். இந்த வசதிகள் கொடுத்த தைரியத்தில் தான் 'சிறப்புத் தரிசனம்' என்ற பெயரில் நானும் ஆன்மீகவாதிதான் என்று திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். 

ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது 'அப்பாற்பட்ட ஏதோவொன்று இருக்கின்றது' என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது. 

அப்போது தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம். வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது. ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் ரொம்பவே முக்கியம். எதையும் உணர மறுக்கும் குருடனிடம் போய் எந்தப் பார்வையை உங்களால் உணர்த்த முடியும்? 

'பலவற்றை உன்னால் உணர முடியாது'? என்று சொல்லியே தன்னை உணர மறுக்கும் மனித கும்பலை மதவாதிகள் வளர்த்தார்கள். அப்படித்தான் வளர்க்கவும் விரும்புகின்றார்கள். உருவாக்கப்பட்ட மதக் கொள்கைகளில் இடைச் சொருகலாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றையும் புகுத்திக் கொண்டே வர இன்று எது உண்மையான ஆன்மீகம் என்ற கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது? 

வாழும் போது மற்றவர்களை வதைப்பவர்களைப் பார்த்து அவன் முன் ஜென்ம பலனால் இன்று அரசாட்சி செய்கின்றான் என்கிறார்கள். வதைபட்டுத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் அதையே தான் சொல்கின்றார்கள்? 

உணர மறுப்பவனின் தவறா? உணர்வே தெரியாதவனின் குறையா? 

எங்கே வந்து முடிந்துள்ளது? 

அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது. 

ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல. 

சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை. 

ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.  

"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 

ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன். 

இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா? 

காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம். 

காலையில் தொடங்கும் வார்த்தைகளே இன்னமும் காபி போடலையா? என்று எரிச்சலுடன் மனைவியைப் பேசத் தொடங்க உள்ளேயிருக்கும் வன்மம் வளரத் தொடங்க வாழ வந்தவளை மதிக்கத் தெரியாதவன் கடைபிடிக்கும் ஆன்மீகம் எதைக் கற்றுக் கொடுக்கும்? குழந்தைகளை கொண்டாடத் தெரியாதவன் சிலைகள் மேல் கொண்டு போய் கொட்டும் பாலையும் தேனையும் ஆண்டவன் மட்டுமல்ல? நக்கிக்குடிக்கும் நாய் கூட சீந்தாது. 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். 

)()()()()()(


(ஆசான் பயணத் தொடர் முடிவுற்றது. ஒவ்வொரு பதிவுக்கும் அற்புதமான வரவேற்பு கொடுத்தவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும், விமர்சனங்கள் மூலம் எனக்குக் கற்றுத் தந்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும், ஆசான் தொடர் பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் அனைவருக்கும் மற்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றி) 

ஏழெட்டு மாதங்களாக உள்ளே உழன்று கொண்டிருந்ததை இறக்கி வைத்த திருப்தி. பலருக்கும் சென்று சேர உதவிய வருண் மற்றும் ஜெய்தேவ்க்கு என் தனிப்பட்ட நன்றி.

என்னைக் குத்தி விட்டுக் குத்தாட்டம் போட வைத்த நண்பர் 'சவுதி எண்ணெய் கிணறு மொதலாளி' பிகேஆருக்கு ஸ்பெஷல் நன்றி

தொடர்புடைய பதிவுகள்.

எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.

Wednesday, March 26, 2014

ஆன்மீகம் எனப்படுவது யாதெனில் - 2


ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல எப்போதுமே பேசக்கூடாத விசயங்கள் பல உண்டு. அது சரியாக இருந்தாலும் பெரும்பான்மையினர் ஆதரவு இல்லாதபட்சத்தில் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். 

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொள்வோமே?  கூடங்குளம் அணுமின் உலை என்பது மிகப் பெரிய கேடு விளைவிக்கும் செயல் என்று அனைவருக்குமே தெரியும்? பத்து தலைமுறைகளையும் வாழ முடியாத அளவுக்கு நாசகார விளைவை தரக்கூடிய சமாச்சாரமது. எந்த அரசியல்வாதியாவது வாயைத் திறக்கின்றார்களா? ஒப்புக்குச் சப்பாணி போலத்தான் உளறி வைக்கின்றார்கள். காரணம் பெரும்பான்மையினர் ஆதரவு இதற்கு இல்லாமல் இருப்பதே இந்தப் போராட்டங்கள் தீவிரப் பாதைக்குச் சென்று சேரவில்லை. 

அத்துடன் நடுத்தரவர்க்கமென்பது எவன் செத்தால் எனக்கென்ன? நாம் பிழைத்திருக்க என்ன வழி? என்று யோசிக்கக்கூடிய வர்க்கமாக இருப்பதால் (இன்று என் வசதிகளுக்கு மின்சாரம் தேவை)அடுத்த தலைமுறைக்குக் கேடு வந்தால் எனக்கென்ன ஆச்சு? என்பதால் மட்டுமே வருடக்கணக்கில் இடிந்தகரை மக்களின் அஹிம்சை போராட்டமானது இன்னமும் முடிவே தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. 

இதே போலத்தான் சாதி மற்றும் மதம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல தனி மனிதர்கள் கூட அதிகம் வாய் திறப்பதில்லை. மதம் குறித்து எழுதினால் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் வந்து நிற்பார்கள். சாதி குறித்து எழுதினால் அனானி ரூபத்தில் ஆவியாக வந்து நிற்பார்கள். அவரவர் சிந்தனைகளைத் தங்கள் மனதிற்குள் தான் வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். தேவைப்படும் சமயங்களில் தேவைப்பட்ட இடங்களில் தேவையான அளவிற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். 

தனக்குப் பாதிப்பை உருவாக்காது என்ற நிலையில் மட்டுமே ஒருவர் பலதரப்பட்ட தத்துவங்களை வாரி வழங்குவார். இத்துடன் கடவுள் சார்ந்த சிந்தனைகளையும் சோர்த்து வைத்து பார்த்து விடலாமே? 

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை" என்று பொதுப்படையாக பழகியவர்களிடம் சொல்லிப் பாருங்க. உங்களை மேலும் கீழும் பார்ப்பார்கள். சிலரோ துணிந்து "இரத்தம் சுண்டினால் தானாகவே நம்பிக்கை வந்து விடும்" என்பார்கள்.

இதற்கு மேலாக. "அவர் பக்திமான். இது போன்ற தப்புகள் எல்லாம் அவர் செய்திருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது" போன்ற ஐஎஸ்ஐ சான்றிதழ் கொடுக்கும் மனிதர்களையும் பார்க்க முடியும். அதாவது "ஆன்மீகம் என்பது வாழ்க்கை நெறியல்ல. அதுவொரு அங்கீகாரத்தைத் தேடித்தரும் சமாச்சாரம்".

"நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன்" என்று சொல்பவர்களைக் காட்டிலும் அதிகப் பிரச்சனைக்குரியவர்கள் "நான் கடவுள் நம்பிக்கையற்றவன்" என்பவர்கள் தற்போதைய சமூகத்தில் ஒரு நாடக நடிகர் போலவே வாழ்ந்தாக வேண்டும்.

அம்மா ஒரு திசை, மனைவி ஒரு திசை, என்று வீடு ஒரு திசையில் செல்ல இவன் மட்டும் வாயால் கம்பு சுழற்றுவதே வாடிக்கையாக இருக்கும். 

"என் மனைவிக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால் எனக்கில்லை. நாங்கள் கோவிலுக்குச் செல்வோம். நான் வெளியே இருப்பேன். அவர் உள்ளே சென்று வணங்கி விட்டு வருவார்" . போன்ற திரைக்கதைகளை இந்த நடிகர்கள் வாயால் கேட்கலாம். இத்தனை விளக்கமாக எழுதும் நான் இதில் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற கேள்வி வாசிக்கும் பொழுதே உங்கள் மனதில் தோன்ற வேண்டுமே? 

அதற்கு முன்னால் தற்போதைய சமூகச் சூழ்நிலையில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் இந்த ஆன்மீகம் என்ற வார்த்தையை எப்படிப் பார்க்கின்றார்கள்? கடவுள் பக்தி என்பதை எப்படிப் புரிந்து வைத்துள்ளார்கள்? 

'இறை நம்பிக்கை' என்பது தற்போதைய மக்களிடத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியுள்ளளது? என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளச் சில மனிதர்களின் அனுபவங்களைப் பார்த்து விடுவோம். இவர்கள் நான் பார்த்து பழகிக் கொண்டிருக்கும் மூன்று நிலையில் உள்ள மனிதர்கள். 
துவொரு பெரிய ஏற்றுமதி நிறுவனம். கடந்த பத்தாண்டுகளாகப் பல விதங்களில் உச்சத்தைத் தொட்ட நிறுவனமும் கூட. ஆனால் தற்பொழுது இறுதி மூச்சில் இன்றோ? நாளையோ? என்று போய்க் கொண்டிருக்கின்றது. தொழில் ரீதியான காரணக் காரியங்கள் நமக்குத் தேவையில்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பற்றி அவரின் குணாதிசியம் தான் பார்க்க வேண்டும்.  அந்த நிறுவனத்தின் காசாளர் முதல் கணக்காளர் வரை ஒவ்வொரு வருட வங்கிக் கணக்கு ( மார்ச் மாதம்) முடியும் சமயங்களில் இரண்டு நாட்களில் (மட்டும்) ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். 

வருடத்தின் மற்றத் தினங்களில் உலையில் துடிக்கும் அரிசி போலத் தவித்துக் கொண்டிருப்பார்கள். காரணம் சார்பு நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை காரணமாக இருவரும் அதிகளவில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் வர வேண்டிய தொகையை வசூலிக்க முடியாத கோபத்தில் அலுவகத்திற்கே வந்து இவர்களை பொளந்து கட்டிக் கொண்டிருப்பார்கள். அசைந்து கொடுக்க வேண்டுமே?

நிர்வாகம் எவருக்கும் அத்தனை எளிதாகக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையைக் கொடுத்து விடுவதில்லை. முடிந்தவரையிலும் இழுத்துப் பார்க்கும். முரண்டு பிடிக்கும் போது பாதித் தொகை கொடுத்து மீதி காந்தி கணக்கில் ஏற்றி விடுவார்கள். ஆனால் முதலாளி ஒவ்வொரு வருடத்திலும் தவறாமல் புதுக்கணக்குப் போடுவதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் குடும்பதோடு சென்று விடுவார். செல்லும் போது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறையப் பணமும் போகும். காரணம் அந்த வருட லாப நட்ட கணக்கின் அடிப்படையில் வெங்கடாஜலபதிக்கு சேர வேண்டிய தொகையை உண்டியலில் போட்டு விட்டு வருவார். காரணம் வெங்கி அவர்கள் இந்த நிறுவனத்தின் சைலண்ட் பார்ட்னர். 

வர் நெருங்கிய நண்பர் தான். இருபது வருட பழக்கம். இருவரின் ஊரும் அருகருகே தான் உள்ளது. கடந்த ஆறு வருடமாக வேலையில்லாமல் இருக்கின்றார். அவர் மனைவிக்குக் கோவில் கட்டி கும்பிடலாம். அந்த அளவுக்குப் பொறுமையான பெண்மணியை வேறெங்கும் காண முடியாது. இக்கடான சூழ்நிலையில் கூட இருப்பதை வைத்து சமாளித்து விடுவார். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். பள்ளி கல்லூரிக்குச் செல்கின்றார்கள். வறுமை என்ற வார்த்தை ஒரு குடும்பத்தில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அவர்கள் வாழ்க்கையில் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  

ஆனால் நண்பர் காலையில் எழுந்தவுடன் திவ்யமாகக் குளித்து முடித்து நெற்றி நிறையப் பட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினால் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். பத்து மணி வாக்கில் சிக்கியவனை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்குச் சென்று விடுவார். ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் வேலையைப் பற்றி ஞாபகப்படுத்துவேன். உடனடியாக வார்த்தைகள் வந்து விழும். பகவான் பல்லாக்குழி ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார். சனி சுயதிசையில் என்ன செய்வாருன்னு உங்களுக்குத் தெரியாதது அல்ல? என்பார். "அது தான் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்பார். 

இடைப்பட்ட நேரத்தில் கட்டுமரமாய் சேவை செய்து கொண்டிருப்பார். 

வரின் வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மெல்லிய தேகம். ஆனால் களையான முகம். எவரிடமும் அநாவசியமாகப் பேச மாட்டார். கடமையே கண். தானுண்டு தன் வேலையுண்டு என்கிற நிலையில் இருப்பார். நூறு சதவிகிதம் நேர்மையான மனுஷி. நான் அம்மா என்று தான் அழைப்பேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்கும் பணியில் இருக்கின்றார். என் அறைக்கு இவர் மட்டும் உரிமையுடன் வந்து போய்க் கொண்டிருப்பார். 

எனக்குத் தேவையான ஒவ்வொன்றும் இடைவெளி விட்டு வந்து கொண்டேயிருக்கும். பல சமயம் உரிமையுடன் "அதை எடுத்து குடித்து விட்டு வேலையைப் பாருங்களேன்" என்று அதட்டுவார். எவரையும் குறை சொல்ல மாட்டார். சென்ற வாரத்தில் பல நாட்கள் ரொம்பச் சோர்வாகவே தெரிந்தார். காரணம் கேட்ட போது விரதம் என்றார். நான் மேற்கொண்டு எதையும் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. 

சில தினங்களுக்கு முன்பு மதிய வேளையில் பயந்து கொண்டே என் அருகே வந்து "ரெண்டு நாள் லீவு வேண்டும்" என்று கேட்டார். ஏன்? என்று கேட்ட போது கொண்டாத்தா (இந்தப் பகுதியில் உள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ள காளி கோவிலில் வருடந்தோறும் மிக விமரிசையாக நடக்கும் தீ மிதித்தல் )கோவிலில் விசேடம் என்றார்.

"அதுக்கென்ன காலையில் போய்க் கும்பிட்டு விட்டு வந்துடுங்க" என்றேன். "இல்லை பூ மிதிக்கின்றேன்" என்றார்.

சற்று குரலை உயர்த்திச் சப்தம் போடத் தொடங்கினேன். 


"ஏம்மா விளையாடுறியா? புருஷன் இல்லை. கல்யாணம் செய்து ஒரு வருஷத்துல போயிட்டாரு. குழந்தை குட்டிகளும் இல்லை. அக்கா வீட்டில் தான் இத்தனை காலமும் தங்கியிருக்குறே? வாங்குற சம்பளத்தையும் செலவழிப்பதில்லை. இங்கே உங்களுக்கு எந்தக் குறையுமில்லை. இந்த வயசுல போய்த் தீ மீதிக்கிறேன்னு சொல்றீங்க? இது தேவையா?" என்று சொன்னது தான் தாமதம் கரகரவென்று கண்ணில் நீர் வழிய "நீங்க எதுவேண்டுமானாலும் சொல்லுங்க. ஆனால் ஆத்தாவுக்குப் பூ மிதிக்கற பற்றி மட்டும் எதுவும் சொல்லாதீங்க. போன ஜென்மத்திலே நான் செய்த பாவமெல்லாம் இத்தோட போயிடனும். அது தான் என் ஆசை" என்றார். 

தொடர்புடைய பதிவு 

ஆன்மீகம் என்பது யாதெனில்? 

கடற்கரைச் சாலை பயணக்குறிப்புகள்

பயணமும் படங்களும்

Tuesday, March 25, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்?



இன்று வரையிலும் யாரோ, ஏதோவொரு சமயத்தில் பேசி என்னை கோபப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இருபது வருட திருப்பூர் வாழ்க்கையில் நேற்று வரையிலும் புதிதாகச் சந்திக்கும் எவருக்கும் காரைக்குடி என்ற ஊர் பெரிய அளவுக்கு தெரிந்த ஊராக இல்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு.  

டக்கென்று காரைக்கால் தானே? என்பார்கள். 

குறிப்பாக இங்குள்ள முதலாளிகளுக்குப் பிள்ளையார்பட்டி தெரிந்த அளவுக்குக் காரைக்குடி மேல் அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை. அப்படியா? என்று போற போக்கில் இழுத்தபடியே சென்று விடுவார்கள். ரொம்ப நெருங்கிக் கேட்டால் அந்தப் பக்கம் சாப்பாடு நல்லாயிருக்கும்லே? என்று வெறுப்பேற்றுவார்கள்.

இதே போலத்தான் ஆசான் என்னை மேலும் கீழும் பார்த்தார். பயணத்திட்டம் வகுத்துக் கிளம்பிய சமயத்தில் திருவாவாடுதுறை என்ற பெயரை ஆசான் சொன்னபோது நானும் புரியாமல் முழித்தேன். உங்களுக்குத் தெரியாதா? என்று ஆச்சரியமாகப் பார்த்தார். உண்மையிலேயே அன்று தான் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இப்படி ஒரு ஊர் உள்ளது என்றும், அங்குப் பிரபலமான ஆதீனம் உள்ளது என்பதையும் அறிந்தேன். 

தனுஷ்கோடியில் இருந்து கிளம்பி இராமநாதபுரம் தொடங்கி கடற்கரைச் சாலை பயணம் வழியாக பட்டுக்கோட்டை வந்து அடைந்தோம். அங்கே இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாவாடுதுறை வந்து சேர்ந்தோம். திருவாவாடுதுறைக்கு மிக அருகே மயிலாடுதுறை உள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு வந்துள்ளேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு பயணம். இரவு நேர பயணமாக இருந்த போதிலும் சாலையின் இரண்டு பக்கமும் எந்தப் பெரிதான மாற்றமும் இல்லை. அதே குறுகிய சாலைகள். ஒவ்வொரு இடங்களிலும் கிராமத்து முகம் கொண்ட சிறிய ஊர்கள். 

திருவாவாடுதுறை இரண்டுகெட்டான் போலவே உள்ளது. கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் என்பதால் மக்கள் கூடும் இடம் போலத்தான் நகரப்பகுதிகள் உள்ளது.  பெரிதான ஆடம்பரங்கள் எங்குமே இல்லை. முதன் முதலாகச் சூடிதார் அணிந்த கிராமத்துப் பெண்ணுக்கு எப்படித் தடுமாற்றம் இருக்குமோ? அப்படித்தான் இரண்டுங்கெட்டானாக முக்கியச் சாலைகள் இருந்தன. 

ஊருக்குள் நுழைந்து முக்கியச் சாலையில் இருந்து பிரிந்து போடப்பட்டுள்ள தனியார் தார் (இந்தப் பகுதிகள் ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பகுதிகள்) சாலையின் வழியாக ஆதீனத்திற்குள் வந்து சேர்ந்தோம். பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள மடம் மற்றும் அதனைச் சார்ந்த கோவில் உள்ள பகுதிகள். சுற்றிலும் உள்ளே பணிபுரிபவர்களுக்கெனக் கட்டப்பட்ட வீடுகள். உள்ளேயே நீண்ட அகண்ட தார் சாலைகள். இரண்டு புறமும் மரங்கள். வீடுகள் ஒவ்வொன்றின் வயதும் ஏறக்குறைய நூற்றாண்டுகளைக் கடந்ததாக இருக்கக்கூடும். 

ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் வயல் வெளிகள். நீண்ட மதில் சுவர்கள். பாதிக் காரைக்குடி பகுதியில் உள்ள கட்டிங்கள் போலவும் மீதி ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது போலவும் இருந்தது. அருகே இருந்த நகர்ப்புற வளர்ச்சிக்குக்குக் கொஞ்சம் கூடச் சம்மந்தம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. திரைப்படம் எடுக்கத் தேவைப்படும் பகுதியாகவும் எனக்குத் தெரிந்தது. 

மடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது பண்டாரங்கள், பரதேசி போன்ற வார்த்தைகள் உங்கள் நினைவுக்கு வருமென்றே நினைக்கின்றேன். ஆனால் இந்த மடத்தின் உள்ளே சென்று பார்க்கப் பார்க்க மிரண்டு போய் மயங்கி விழாத குறை தான். ஒவ்வொரு பகுதியிலும் கலையம்சமும், அலங்காரங்களும் சேர்ந்து விரிசல் விடாத சுவற்றில் வித்தியாசமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளும் ஓராயிரம் சரித்திர சம்பவங்கள். உள்ளே இருந்த அறிவிப்புப் பலகையை வைத்து யூகித்தபடி முறைப்படியான ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து தொடங்குகின்றது. 

இந்த மடத்தின் பூர்விக வரலாறு, ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள், படிப்படியான வளர்ச்சிகள், ஆதீன பதவிகளில் இருந்தவர்கள், அவர்களின் சாதனைகள், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், பகுதிகள், நிலங்கள் குறித்த குறிப்புகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது இந்திய அரசின் பட்ஜெட் தான் என் நினைவுக்கு வந்தது. ஒரு மினி அரசாங்கமாகவே ஆதீனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  இந்த ஆதீனங்கள் மூலம் யாரும் லாபம்? என்றொரு பெரிய கேள்வி உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். அல்லது தொடர்ந்து படித்து வரும் போது உங்களுக்கே புரியும்.

இந்தப் பகுதிக்குள் நுழைந்த பின்பு வெளியுலகமே துண்டித்தது போலவே இருந்தது. உடம்பில் இருந்த படபடப்பும், வேகமும் குறைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை தந்த சுகத்தை உடனடியாக அனுபவிக்க முடிந்தது. 

ஆசான் திருச்செந்தூரில் ஐந்தாம் வகுப்பு முடித்த பின்பு குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையில் திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு வந்தார். காரணம் ஆசானின் இரண்டு சகோதரிகளின் கணவர்கள் இந்த மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் குடும்பம் என்பதால் மடத்தில் நடக்கும் அத்தனை விசேடங்களுக்கும், மற்றும் கோவிலுக்குப் பூக்கள் கட்டி கொடுப்பது தான் முக்கிய வேலையாக இருந்தது. ஆசான் இங்கிருந்தபடியே பள்ளிக்குச் சென்றதோடு கூடவே அப்போது பதவியில் இருந்த ஆதீனத்திற்கு உதவியாளராகவும் இருந்தார். 

இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமான அனைத்து இடத்தில் இருந்தும் வரி, வசூல் போன்றவற்றைக் கவனித்துக் கொண்டதும் ஆசானே. வரி வசூல் என்றதும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நன்செய் மற்றும் புன்செய் பூமிகள். இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமாக உள்ள வாடகைக்குக் கட்டி விடப்பட்ட கடைகள், கட்டிடங்கள் இன்னும் பலப்பல. இந்த ஆதீனத்திற்குச் சொந்தமான பல இடங்கள் திருச்செந்தூரில் இருந்தது. ஆனால் அது பல தனியாருக்கு சொந்தமானதாக மாறியுள்ளது. அதற்குப் பின்னால் ஏராளமான மர்மக்கதைகள் இருப்பதால் அதைப்பற்றி இந்த சமயத்தில் விலாவாரியாக பேச வேண்டாம் என்றே நினைக்கின்றேன்.

ஆசானுடன் ஆதீனத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற போது சுவராசியம் ஏதுமில்லாமல் உள்ளே ஏதாவது ருசியாகச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் ஆசான் வாயைத் திறந்தால் திருமந்திரத்தை பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்தவுடன் நெற்றி நிறையப் பட்டை. கழுத்தில் கொட்டை மற்றும் மணிகள் உள்ள ஆபரணங்கள் என் கன ஜோராக மற்றவர்கள் எழுவதற்கு முன்பே குளித்து முடித்து தயாராக இருப்பார்.

அதாவது பாருங்க..... ஜோதி என்று ஆசான் தொடங்கினார் என்றால் அரை நூற்றாண்டு கதையைச் சொல்லி முடிக்கும் போது எனக்கு மீண்டும் பசியெடுக்கத் தொடங்கி விடும். இதன் காரணமாகவே ரெண்டு மூணு தேங்காய் மூடிகளை எப்போதும் என்னருகில் தயாராக வைத்திருப்பேன்.

திருவாவாடுதுறையில் வாழ்ந்த போது ஆசான் தங்கியிருந்த வீடு மற்றும் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்த்த போது எனக்குப் பெரிதான ஆச்சரியமல்ல. காரணம் எங்கள் பகுதியில் ஒவ்வொரு செட்டியார் வீடுகளின் அமைப்பைப் போல முற்றம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள், ஊஞ்சல், கரி அடுப்பு, போன்ற அத்தனை பழங்காலத்துப் பழக்கவழக்கங்கள் உள்ள அமைப்பாக இருந்தது. கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒன்று மட்டுமே அங்கே நான் பார்த்த நவீன பொருள். மற்றவை எல்லாமே 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விசயமாகவே இருந்தது. 

திருமூலர் பற்றி முழுமையாக முதல் முறையாக அறிந்து கொண்டது, ஆதீனங்களின் வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆதீனங்களைப் பற்றி தெரிந்து கொண்ட விபரங்கள், சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், அதிகாரப் போட்டிகள், தற்போது பதவியில் இருக்கும் ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதற்குப் பின்னால் உள்ளவர், அதிகாரப் போட்டியில் பாதிக்கப்பட்டவரை நேரிடையாகச் சந்தித்தது அவருடன் உரையாடிய போது மடத்திற்குள் நடந்த, நடந்து கொண்டிருக்கும் திருட்டுத்தனங்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் என ஒரு திகில்படத்தின் கதைக்குச் சமமாகப் பல விசயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. 

சுருக்கமாகச் சொல்லப்போனால் வருடந்தோறும் ஆதீனத்திற்கு வர வேண்டிய வருமானம் என்பது ஏறக்குறைய நூறு கோடி ரூபாய். ஆனால் வந்து கொண்டிருப்பதே இருபதில் ஒரு மடங்கு கூட இருக்குமா? என்று தெரியவில்லை. முக்கால்வாசியை விற்று தினறுவிட்டார்கள். இது தவிர ஆதீன சொத்துக்களை தினந்தோறும் சுரண்டிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

நானே சில சுவராசியமான நிகழ்வுகளை அங்கே பார்த்தேன். 

இதைப்பற்றி விரிவாக எழுதினால் ஏற்கனவே என் மேல் கொலைவெறியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் அலைபேசியில் பேசி காதில் ரத்தம் வர வைத்துவிடுவார்கள். ஆனால் உண்மைகள் எப்போதும் உறங்காது. அதற்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற பாரபட்சம் இல்லை. 

ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தாமதமானாலும் ஒரு நாள் தகுதிகள் தான் சபையில் ஏறும். அதுவரையிலும் தரமற்றது தான் பேயாட்சி நடத்தும்.

தமிழ்நாடு முழுக்க இந்த ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட பல இடங்கள் உள்ளது. இதே போலக் குத்தகைக்கு விடப்பட்ட விவசாயப் பூமிகள். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பலரால் வழங்கப்பட்ட நன்கொடைகள். இதன் மூலம் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் இது போன்ற மடங்களின் மூலம் வளர்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு பலரும் வழங்கி உள்ளனர். 

ஆனால் காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாறியதைப் போலவே இன்று ஆதீனங்களின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போய் ஊழலில் திளைத்து, உண்மைக்கு இடம் இல்லாத அளவுக்கு நிர்வாகம் கெட்டுப் போய் இறுதி மூச்சில் தான் ஆதீனங்கள் உள்ளது.  

பலருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டுவதற்குள் ஆதீனம் என்ற பெயரே இருக்காது என்கிற அளவுக்கு இந்த இடமே விற்பனை பூமியாக மாறிப் போய்விடும் என்றார்கள். 

ஆசானைப் பொருத்தவரையிலும் ஆன்மீகம் தான் அவர் மூச்சு பேச்சு எல்லாமே. ஆனால் நான் அவற்றைக் கடந்து வந்து விட்டேன். தற்பொழுது எனக்கு தினசரி வாழ்க்கையில் அன்றைய தினம் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றது. நேற்றைய வாழ்க்கையும், நாளைய வாழ்க்கையும் குறித்த யோசனைகளும், பயமும் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்மீகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

எனக்குத் தற்போது எது குறித்தும் வெறுப்பும் இல்லை. விருப்பும் இல்லை. சற்று விலகி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருப்பதால் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ முடிகின்றது. இந்த நிலையை அடைய மற்றவர்களால் முடியுமா? என்றால் அவரவர் அனுபவங்கள் தான் வழிகாட்டியாக இருக்க முடியும். பயணம் முழுக்க ஆசான் பேசிய முக்கிய விசயங்களைக் காதில் வாங்கிக் கொண்டு மற்ற கற்பனை புராணக்கதைகளைக் காற்றோடு விட்டு விடுவதுண்டு.

0o0

இப்போது தான் நாம் தலைப்பில் உள்ள விசயத்திற்கு வந்துள்ளோம். 

அதைப் பற்றி அடுத்தப் பதிவில் பேசுவதற்கு முன்பு இந்தக் கேள்விகளை மனதில் வைத்துக் கொள்ளுங்களேன். 

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 

மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

அடிக்க வருபவர்களும் துடித்து காத்திருப்பவர்களும் அடுத்தப் பதிவு வரும் வரையிலும் .............

ஆதீனம் படங்கள் பார்க்க 

Monday, March 24, 2014

பயணமும் படங்களும் - சுவாசித்த கவிதைகள் 2

இந்தப் பயணம் அடுத்தப் பதிவோடு முடிகின்றது. 

திருவாவாடுதுறையில் நான் முதன் முதலாகப் பார்த்த இந்து மதத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ஆதீனம் என்றொரு உலகத்தைப் பற்றி எழுதுகின்றேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களால் அதிகம் படிக்கப்பட்ட பதிவாக ஒவ்வொரு பதிவும் சிறப்பு சேர்த்துள்ளது.  

அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சில பதிவுகளுக்கு முன் எழுதிய பதிவைப் படித்த நெருங்கிய நண்பர்கள் "நம்பிக்கைகள்" குறித்த என் பார்வை தவறு என்றார்கள். உண்மைதான். ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கும். 

அவரவர் அனுபவங்கள் அதை உணர்த்தும். சாதி, மதம் குறித்து இதுவரையிலும் எனக்குத் தெரிந்த நான் புரிந்து கொண்ட விதங்களில் பதிவுகளில் பகிர்ந்துள்ளேன். 

கடவுள் நம்பிக்கைகள் அல்லது ஏதோவொரு நம்பிக்கைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றியும், குறிப்பாக ஒவ்வொரு மதங்கள் சொல்லும் ஆன்மீகம் குறித்த செய்திகளையும், பின்பற்றும் மனிதர்கள் குறித்தும் தனியாக ஒரு பதிவாக எழுதி விட ஆசை. அதையும் எழுதுவேன். அதற்கு முன்னதாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக இருந்த படங்களை அதிகம் எழுதத் தேவையில்லாத காட்சிகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 

அடுத்தப் பதிவாக வரும் திருவாவாடுதுறையில் நான் பார்த்த சில காட்சிகளை இங்கே தந்துள்ளேன். முழுமையான விபரங்கள் அடுத்தப் பதிவில் வருகின்றது.




                              திருவாவாடுதுறையில் எடுக்கப்பட்ட படங்கள்



தொடர்புடைய பதிவுகள்

ஆசான் காணொளிக் காட்சிகள்    ஒன்று    இரண்டு    மூன்று    நான்கு 




Sunday, March 23, 2014

பயணமும் படங்களும் - சுவாசித்த கவிதைகள்

புகைப்படக்கலையில் எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. ஆனால் இதற்கு அளவு கடந்த பொறுமை தேவை. என்னிடம் சுத்தமாக இல்லை. காரணம் திருப்பூர் வாழ்க்கை கற்றுத் தந்த "நிர்வாகப் பாடங்களின்" காரணத்தினால் வேகம் என்ற வார்த்தையை மட்டுமே அதிகம் கற்றுள்ளேன். இதன் காரணமாக எது நமக்குச் சரியாக வரும்? என்பதை அடையாளம் கண்டு கொண்டு மற்றவற்றை அது சார்ந்த நபர்களிடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம். 

இந்த எண்ணத்தை நான் வளர்த்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் ஒரு பேட்டியில் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் (இது நம்ம ஆளு படப்பிடிப்பு நடந்த சமயத்தில்) எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் சொன்ன அறிவுரையை இப்பவும் மனதில் வைத்துக் கொள்வதுண்டு. 

அவர் அப்போது பாலகுமாரனிடம் சொன்னதாக நான் படித்த வரிகள் இது. 

"நீங்க எதுக்குப் போட்டோகிராபி கத்துக்கனும்ன்னு அவங்க வேலையைக் கெடுத்துக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன வேண்டுமோ? அதை அவர்களிடம் சொன்னால், புரியவைத்து விட்டால் அவர்கள் தந்து விடுவார்கள். உங்களின் உழைப்பு இயக்குநர் வேலையில் இருந்தால் தானே அதில் தனிச்சிறப்பை காட்ட முடியும்" 

நமக்கு எல்லாத்துறையிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டத் துறையில் மட்டுமே நமக்குத் தனிப்பட்ட திறமை சற்று மேலோங்கி இருக்கும் என்பதைக் காலம் உணர்த்தும். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தான் படம் எடுத்துக் கொண்டிருந்த மதன் மற்றும் குமாரிடம் ஒவ்வொரு இடத்திலும் நான் எதிர்பார்ப்பதை சொல்லிவிட்டு ஆசான் உடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

இதுவரையிலும் சென்னை முதல் தனுஷ்கோடி வரையிலுமான உள்ள பயணத்தில் ரசித்து வாசித்த கவிதைகள் போலப் பல படங்களை எடுத்ததை வெளியிடுகின்றேன். தொடர்ந்து திருவாவாடுதுறை குறித்த பதிவோடு இந்த பயணம் முடிவு பெறும். இங்கு வெளியிட்டுள்ள படங்கள் குறித்த தகவல்களை அந்தந்த படங்களோடு தருகின்றேன். 

நாம் வாசித்து முடிக்கும் போது அதிகச் சிந்தனைகளைத் தூண்டும் வரிகள் பல சமயம் நமக்கு மன உளைச்சலோடு சோர்வையும் தந்து விடும். 

அது போன்ற தாக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காகவும் இந்தப் படங்கள் என்னளவில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதற்காகவும் இந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு. 

நன்றி.


ஆசானின் திருச்செந்தூர் வீட்டில் எடுக்கப்பட்ட படம். இந்தச் சாவி தயார் செய்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.


ஆசான் வீட்டின் உள்ளே நுழைந்த போது இந்தக் கதவு என்னை சுண்டி இழுத்தது. ஆசான் வீட்டில் அவரின் அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் வசித்து வருகின்றனர். அவர்களின் பழக்கவழக்கங்களும் ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை முறைகளைப் போலத்தான் உள்ளது. மொத்ததில் ஆன்மீகத்தை உயிர் மூச்சாக வைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

காலை உணவை இங்கே சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் வெளியே சென்ற பிறகு இந்த கதவின் பக்கவாட்டில் ஏறிக் கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பயணம் செய்து உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைத் தனத்திற்கு தீனி கொடுத்தேன்.


முக்கிய சாலையில் இருந்து ஐந்தடி தூரம் கீழே உள்ள வீடு.  கடந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு சாலையின் உயரம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்பதற்காக உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்.


இன்று "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் உருவான பிறகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் காணாமல் போய் நவீன ரக பொருட்கள் நம் வாழ்க்கையை ஆக்ரமித்து விட்டன. சொளகு, அம்மிக்கல், ஆட்டுக்கல், போன்றவை தேவையில்லாமல் போய்விட்டது. 

எங்கள் காரைக்குடி பகுதியில் திருமணத்தின் போது சீர் கொடுப்பது முதல் அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது வரைக்கும் வெண்கலச் சொம்பு மற்றும் பானைகள் தான் பயன்பாட்டில் இருந்தது.  

இன்றோ எவர்சில்வர் தொடங்கி பிளாஸ்டிக் குடங்கள் என்று மாறி இன்னமும் அதன் உருவமும் வடிவமும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் இது சார்ந்த தொழிலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது எந்த தொழிலுக்கு மாறியுள்ளார்களோ?






இந்த மின் விசிறியின் வயது அரை நூற்றாண்டு. இன்று வரையிலும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது. 

விளம்பரம் தேவைப்படாமல் இருந்த வரைக்கும் உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தரத்தில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தார்கள்.  இன்று விளம்பரங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று மாறிய நிலையில் மக்கள் பையில் உள்ள பணத்தை அவர்கள் அனுமதியோடு எப்படி திருடுவது  என்பதாக தொழில் முறைகள் மாறியுள்ளது. 

இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நாகரிகம் என்ற பெயரில் பலரும் பலவற்றை கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள். 


திருச்செந்தூர் என்ற ஊரில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத போதும் கூட இங்கு வருகின்ற அத்தனை பக்தர்களும் சராசரி வருமானத்திற்கு கீழே உள்ளவர்களாகத்தான் உள்ளனர். இவர்கள் தான் அதிக அளவில் தென்படுகின்றனர். இது குறித்து மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.


கடல் அழகு. கடலை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது அதனை விட அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பது போல இவர்களின் ஆட்டமென்பது மொத்தத்திலும் அழகு.


ஆசானுடன் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஒன்றாக படித்த பள்ளிக்கூட தோழர் இவர். இருவரும் வாடா போடா என்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது கொஞ்சமல்ல நிறைய வியப்பாகவே இருந்தது. மாறாத குணம் இருந்தால் வாழ்க்கையின் இறுதி வரையிலும் மனதிற்குள் இருக்கும் குழந்தைத்தனம் மாறாது என்பது உண்மை தானே?


பாம்பன் பாலம் என்ற ஒரு வார்த்தை உருவாக்கும் தாக்கத்திற்காகவே எடுக்கப்பட்ட படம்.


தனுஷ்கோடி என்ற ஊருக்குள் நுழைந்த தருணத்தில் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். பாதை மட்டுமல்ல. பயணமும் கடினம் தான். மாறி மாறி சென்று வந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு வாகனங்களும் இந்த டயர் பாதை அடையாளத்தை வைத்து தான் வண்டியை இயக்குகின்றார்கள்.


இந்த படங்களை பதிவேற்றிக் கொண்டிருந்த போது என் அருகில் இருந்த அழகான ராட்சசிகள் நான் எழுத முடியாத அளவுக்கு கையை தடுத்து ரவுசு செய்து கொண்டிருந்தார்கள். காரணம் அவர்களை நான் அழைத்துக் கொண்டு செல்லவில்லையாம்?

இதையும் எழுதி விடுவேன் என்று மிரட்டிய போதும் நீங்க எழுதுங்க? படிப்பவர்களும் எங்களுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்கிறார்கள். 

நீங்களே சொல்லுங்க. செல்லும் இடமெல்லாம் இவர்களை சுமந்து கொண்டு செல்ல முடியுமா?  இவர்களுக்கு நான் கொடுத்துள்ள அளவு கடந்த சுதந்திரம் பல சமயம் என்னையே திருப்பித் தாக்கும் பூமராங் போலவே உள்ளது. 
                                நம்புங்கள், நம் வாழ்க்கையும் கடைசியில் இப்படித்தான்.

தொடர்புடைய பதிவுகள்