Monday, January 17, 2011

முஸ்லீம்கள் - நதிமூலம்

இராமநாதபுர மாவட்டத்தை பேசும் போது நாம் மற்றொரு விசயத்தையும் இப்போது பேசியாக வேண்டும்.  அது தான் இந்த மாவட்டத்தில் வாழ்ந்த இஸலாமியர்கள். 

பல்லவர்கள் தொடங்கி கடைசியாக பாண்டியர்கள் வரைக்கும் கால்பந்து போல இந்த மாவட்டம் பலரின் கால் கை பட்டு உருண்டு வந்தாலும் கிபி 1331 ஆம் ஆண்டு மதுரையைத் தலைநகரகாக் கொண்டு முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவர்களின் ஆட்சி கிபி 1371க்குப் பிறகு சரிந்த பிறகு தான் நாயக்க மன்னர்களின் ஆட்சி உருவானது. இதுவே 1393 ஆம் ஆண்டு முற்றிலும் துடைத்தது போல் ஆனது. 

ஆனால் இஸ்லாமியர்கள் என்பவர்கள் எப்படி உருவானார்கள்? 

இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.  சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்த யவனர்களின் பெயரே பின்னாளில் சோனகர் என்று அதனூடே முஸ்லீம் என்றும் உருவானது. ஏற்கனவே நம் பதிவில் கும்மியார் சொல்லியுள்ள மரைக்காயர் என்பது மரக்கலத்தில் வாணிப தொடர்புக்காக உள்ளே வந்தவர்கள் என்பதில் தொடங்கி துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் மூலம் துலுக்கர் என்ற பெயரும் உருவானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான்.  அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும்.  தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்திப்பட்டு அன்றாட வாழ்வில் அப்போது சாதாரண குடிமகன் அனுபவித்த அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மன்னர் ஆண்டாலும் சரி, அவர்களின் சார்பாளர்கள் இருந்தாலும் சரி அடித்தட்டு மக்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம் இந்த இன்ப்பாகுபாடே முக்கிய பாத்திரம் வகித்தது.  

இதற்கு மேல் குலத்தொழில் என்ற போர்வையில் ஒவ்வொருவரையும் ஒரு அளவிற்கு மேல் மேலே வரமுடியாத அளவிற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் அடக்கி ஓடுக்கி வைத்திருந்தனர்.  

எழுந்தால், நடந்தால், நின்றால், பேசினால் குற்றம் என்கிற நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இரண்டு காரியங்கள் செய்யத் தொடங்கினர்.  ஒன்று புலம் பெயர்தல்.  மற்றொன்று தங்களின் மதத்தை மாற்றிக் கொள்ளுதல்.  ஆங்கிலேர்கள் மூலம் உள்ளே வந்த கிறிஸ்துவம் மிக அமைதியாக தங்களின் ஆக்டோபஸ் கரங்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிக் கொண்டுருந்து.  அதைப் போலவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நோக்க அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாக தேர்ந்தெடுக்கத் தொடங்கினர்.

இந்து மதம் என்றால் சாவது வரைக்கும் சுடுகாட்டில் புதைப்பது வரைக்கும் பரவியிருந்த கொடூரத்தை தாங்க முடியாத மக்கள் தங்களுக்கான நல்வாழ்க்கையை இந்த இஸலாமிய மார்க்கத்தை தழுவியதன் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டனர். ஆறாவது நூற்றாண்டில் உள்ளே வந்த அரேபியர்கள் உருவாக்கிய பாதையில் இருந்து இது தொடர்கின்றது.  ஆனால் இடையில் வந்த அந்நிய படையெடுப்புகளால் இது போன்ற கட்டாய கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவே இருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.  இன்றைய முஸ்லீம் மக்களின் பத்து தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்துவாக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 

முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை 

இவ்வாறு சொல்லியிருப்பது இந்து மதத்தை கடல் தாண்டி கொண்டு சென்று முழங்கிய சுவாமி விவேகானந்தர். காரணம் அந்த அளவிற்கு பழைய சமூக வாழ்க்கையில் மனிதர்களை இந்த ஜாதி என்ற மூலக்கூறு சல்லடைக் கண்கள் போல் உற்றுநோக்கிக் கொண்டுருந்தது.  தமிழர்கள் இஸலாம் மதத்தை தழுவ ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே நடைபெறத் தொடங்கியது.


ஊரில் நான் இருந்தவரையிலும் அப்பா இறைச்சிக் கடைக்குள் நுழையும் போதே மாமா என்று தான் முஸ்லீம்கள் அழைப்பார்கள். எனக்கு அப்போது இந்த பாகுபாடுகள் குறித்து அதிகம் தெரியாத போதும் இப்போது குறிப்புகள் வழியாக படித்து உணரும் இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  நான் பார்த்த ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது.

" இதனால்தான் இன்று வரை மற்ற சமயத்தினர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. தமிழர்களான முஸ்லிம்களை தமிழர்களான தலித்துகள் தாத்தா என்றும், யாதவர்களும் தேவர்களும் மாமா என்றும், பரவர்கள் சாச்சா என்றும் இதுபோன்று பல்வேறு முஸ்லிமல்லாத சமூகத்தினர் உறவு வைத்து அழைக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.  தீண்டாமை ஒழிப்பில் தொடர்ச்சியாக பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் இஸ்லாம் தன் பங்களிப்பைச் செலுத்தி வந்துள்ளது. இருப்பினும் கடந்த நூற்றாண்டில் அதன் பங்களிப்பு வீரிய மிகுந்ததாக இருந்துள்ளது."

இந்து மதத்தின் கொள்கை என்று சொல்லப்படுவது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்".  ஆனால் அதுவே இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி" என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் அடித்தட்டு மக்களுக்கு தாங்கள் மாறுவதற்கு ஏற்ற மார்க்கம் இது தான் என்று தேர்ந்தெடுத்ததில் பெரிதான ஆச்சரியமில்லை.

ஆனால் சமகாலத்தில் இஸ்லாமியர்களின் நலனுக்கான என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டுருக்கும் அரசியல் கட்சிகளை அவர்களின் கொள்கைகளை இப்போது இதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதிவில் உள்ளே வரும் போது, காங்கிரஸ் கட்சியை எதிர்க்க கூட்டுச் சேர்ந்த எட்டு கட்சிகளைப் பற்றி பேசும் இவர்களின் தரம் தராதரம் பற்றி பேசுவோம்.

மலேசியாவில் மகாதீர் ஆட்சி புரிந்து கொண்டுருந்த போது தமிழ்நாட்டு முஸ்லீம்களை குறிவைத்து சில சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தார்.  இத்தனைக்கும் மகாதீர் முன்னோர்கள் கூட கேரளாவில் இருந்து போனவர்கள் தான்.  அவரும் அரசியல்வாதி தானே?  ஆனால் மலேசிய தமிழ் முஸ்லீம்கள் அன்று முதல் இன்று வரையிலும் தாய் வீடாக தமிழ்நாட்டைத் தான் கருதுகிறார்கள்.  இன்று கூட அதில் பெரிதான மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. 

நான் திருப்பூரில் பார்த்தவரையிலும் அரபு உருது பேசக்கூடிய முஸ்லீம்கள் எந்த இடத்திலும், குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தங்கள் தாய் மொழியில் தான் பேசுகின்றனர்.  ஆங்கிலம் படித்த மோதாவிகள் கூட தங்கள் மொழியில் திடீர் என்று தாவி என்னை பலமுறை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  அதே போல நான் பார்த்த, பழகிய மலேசிய சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்கள் முடிந்தவரைக்கும் அவர்களின் தமிழ் மொழிப்பற்றை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்.  வருகின்றவர்களிடம் மலாய் ல் பேசுவார்கள்.  உள்ளே இருப்பவர்களிடம் தமிழிலில் தான் தொடர்வார்கள். இது போல பல விசயங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.  இது குறித்து வரலாற்று தகவலில் உள்ள சிறு குறிப்பையும் இதில் படித்துவிடலாம்.

"தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர். தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது." 

" இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும்." 

" இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி,உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன."

118 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா, நான் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தர விழைகிறேன். தமிழக இஸ்லாமியர்களில் இப்போது உள்ளவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து மதம் மாறியவர்கள் வெகு குறைவு. இஸ்லாம் முதன் முதலில் தமிழகத்தில் அறிமுகம் ஆனது கடற்கரைப் பிரதேசங்களில்தான்.அப்போது மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.பின்னர் பெரும் மாற்றம் நிகழ்ந்தது தஞ்சைத் தரணியில். நாகூர் ஆண்டவர் நாகூர் வந்து வாழ்ந்த போது அவரது அற்புதங்களாளும்,பேச்சினாலும் பெரும் பகுதியான சோழ நாட்டு மக்கள் மதம் மாறினர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.இன்றைக்கும் தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்கள் நல்ல நிறமுடையவர்களாகவும்,கூர்ந்த நாசி உடையவர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பெயரைத் தவிர்த்து உருவத்தை வைத்துப் பார்த்தால் பிராமணர்கள் போல தோற்றம் கொண்டவர்களாகவும் இருக்கும் காரணம் அதுதான். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரம்,மங்கலம் என முடியும் பேரைக் கொண்ட பல ஊர்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே இருப்பதற்கு இதுவே காரணம்.உதாரணம் பள்ளி அக்ரஹாரம்,அடியக்காமங்கலம் போன்ற ஊர்கள்.
அடுத்த மதமாற்றம் நிகழ்ந்தது வெள்ளையர்களின் ஆரம்ப ஆட்சி காலத்தில்.அப்போது அவர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட இன்றைய புதுக்கோட்டை,சிவகங்கை,இராமநாடு,மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த முக்குலத்தோர் அந்தச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி கூட்டம் கூட்டமாக இஸ்லாம் மதம் மாறினர். என் முன்னோர்களும் அவர்களில் ஒருவரே. அதன் பின்னர் பெரிதாக இஸ்லாத்திற்கு கும்பலான மத மாற்றம் எதுவும் நிகழவில்லை.நியாயமாகப் பார்த்தால் இஸ்லாத்திற்கு தாழ்த்தப்பட்டோர்தான் அதிக அளவில் மாறி இருக்க வேண்டும்.ஆனால் தமிழகத்தில் இஸ்லாம் ஆனோர் பெரும்பாலும் உயர் சாதியினரே. இது ஒரு வித்யாசமான முரண்.

எம்.எம்.அப்துல்லா said...

// நான் திருப்பூரில் பார்த்தவரையிலும் அரபு உருது பேசக்கூடிய முஸ்லீம்கள் //

அரபு என்பதும் உருது என்பதும் வேறுவேறு மொழி.இரண்டுக்கும் சம்மந்தம் கிடையாது.அரபு என்பது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் ( துபாய்,சவூதி,கத்தார்,குவைத்,ஏமன்,ஓமன்,ஈராக்,ஈரான்) தாய் மொழி. உருது என்பது சுத்தமான இந்தியமொழி. அக்பர் தன் ஆட்சி காலத்தில் தீன் இலாஹி என்ற தனி மதத்தை உருவாக்கினார். அதேபோல தன் மதத்திற்கு தனி மொழி ஒன்று வேண்டும் என்று விரும்பி மொழியியல் வல்லுனர்களிடம் கூறினார். அவர்கள் சமஸ்கிருதம்,ஹிந்தி,பார்சி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையாய் உருதுவை உருவாக்கினர்.இன்றைக்கு இந்தியாவில் அரபுவை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் என்று யாருமே இல்லை. எனவே திருப்பூரிலும் அரபு தாய்மொழி இஸ்லாமியர்கள் இருக்க 101% வாய்ப்பு இல்லை. அரபுக்கும்,உருத்துவுக்குமான குழப்பத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

எம்.எம்.அப்துல்லா said...

// பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதிவில் உள்ளே

//

தேவருக்கு பால் குடுத்த பால்குடித்தாய் ஒரு இஸ்லாமியர்.அவரும் பிறமலைக் கள்ளர்(தேவர்களில் ஒரு பிரிவு) சமூகத்தில் இருந்து குற்றப் பரம்பரைச் சட்டத்தால் மதம் மாறிய ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஆனால் இந்த உண்மையை மறைத்து ஏதோ தேவர் பெற்றோர்கள் சாதி,மத வித்யாசமின்றி இருந்தத்தாக ஒரு கருத்துரை பரப்பப்படுகின்றது. அப்படி சாதி வித்யாசம் பார்க்காதவர்களாக இருந்திருந்தால் அதே இராமநாடு மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் எதோ ஒரு இஸ்லாமியத் தாயிடம் பால் அருந்தச் செய்து இருக்கலாமே?? செய்யமாட்டார்கள்.காரணம் அவர்கள் மீனவ சமூகத்தில் இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் :))

எம்.எம்.அப்துல்லா said...

// யாதவர்களும் தேவர்களும் மாமா என்றும் //

யாதவர்கள் மாமா என்று அழைப்பது சரி. ஆனால் தேவர்களும்,இஸ்லாமியர்களும் மாமா முறை வைத்து அழைப்பதில்லை. தென் மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களில் 90% பேர் தேவர்களாக இருந்து மதம் மாறிய காரணத்தால் தேவர்களும்,இஸ்லாமியர்களும் சீயான் முறை வைத்தே அழைக்கின்றனர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தாங்களின் பார்வையிலும் சில வெளிச்சங்களை உணர்ந்துகொண்டேன் .அதோடு எம்.எம்.அப்துல்லா வின் கூற்றிலும் உண்மைகளை கண்டேன் .மிக எளிமையான எழுத்துக்கள் .மேலும் ஆழமாக தொடருங்கள் .தொடர்கிறேன் . நல்ல பதிவு .வாழ்த்துக்கள் .

கல்வெட்டு said...

அப்துல்லா,
//அக்பர் தன் ஆட்சி காலத்தில் தீன் இலாஹி என்ற தனி மதத்தை உருவாக்கினார். அதேபோல தன் மதத்திற்கு தனி மொழி ஒன்று வேண்டும் என்று விரும்பி மொழியியல் வல்லுனர்களிடம் கூறினார். //

1.இந்தியாவில் "தீன் இலாஹி " மதத்தை கடைபிடிப்பவர்கள் இன்று உள்ளார்களா?

2. உருது பேசும் இஸ்லாமியர்கள் எதில் இருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள்?

http://en.wikipedia.org/wiki/Din-i-Ilahi

3. தீன் இலாகி மதம் என்பது இஸ்லாம் அல்ல. அது இஸ்லாம், சனாதனம்,இன்னும் பலவற்றின் கலவை. அப்படி இருக்க இவர்களுக்கு ஏதேனும் புனித தலம், புத்தம் உள்ளதா?

4. அக்பர் தீன்லாகியானவர். அவரை இன்னும் மொகலாயர் என்று சொல்வது (மொகல்) இஸ்லாமிய அடையாளம் ஆகாதா?

சுட்டிகள் இருந்தால் பகிரவும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ஜோதிஜி,
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக..!

மிகவும் நுண்ணாய்வு செய்து நேர்மையான முறையில் பதிவிட்டிருக்கிறீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

அப்புறம், மேலும் எனக்குத்தெரிந்த வகையில் சில திருந்தங்கள்.

//இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.//--இறைவன் மனிதர்களுக்கு இவ்வுலகில் வாழ அளித்த ஒழுங்குமுறை திட்டம்-நன்னெறி-மார்க்கம்... இஸ்லாம். இதை பின்பற்றிய மக்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டது வேறு யாருமில்லை அதே இறைவன்தான். ஆறாம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொண்டனர். முதலில் கேரள கடற்கரைக்கு வந்த அரேபிய வாணிகர்களை 'நீங்கள் யார்' என்றதற்கு 'நாங்கள் முஸ்லிம்கள்' என்றுதான் பதிலளித்தார்கள்.

//முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான். அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும்//--இதுவும் பல காரணங்களில் ஒன்று. அவ்வளவுதான். முதலில் அரேபிய வணிகர்களின் வியாபார நேர்மையும், கண்ணியமும், ஒழுக்கமும் இங்குள்ளவர்களை ஈர்த்தன. 'ஏன் இப்படி' 'எது காரணம்' என்று கேள்விகள் கேட்க வைத்தன. இதற்கு அப்புறம்தான் இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அவர்கள் சொன்னார்கள். இப்படி ஈர்க்கப்பட்டு கேள்விகேட்டவர்களில் அனைத்து சாதிகளும் அடக்கம்.

//இது போன்ற கட்டாய கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும்//--மிகவும் லாவகமாக வார்த்தைகள் பொருக்கி எடுக்கப்பட்டுள்ளன. அதனால்...பின்னர் தெளிவாக //வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. ... (நடைபெற்றது என)...சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும்.//--இதை பொருந்திக்கொண்டேன். நன்றி.

//அதுவே இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி"//--இதைவிட தெளிவாக "ஒன்றே குலம் ஒரே சாதி ஒருவனே இறைவன்" என்றும் சொல்லலாம்.

மிகவும் மன நிறைவான பதிவு.

தமிழ்மணத்தில் இரண்டு விருதுகள் வென்றிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. கணக்கிலா பாராட்டுக்கள் உரித்தாகுக.

suvanappiriyan said...

விரிவாக அலசி எழுதியிருக்கிறீர்கள். வாளால் பரப்பப் பட்டது இஸ்லாம் என்று இன்னும் எத்தனை காலம் சொல்லப் போகிறார்களோ! பதிவை படித்தாவது தெளிவடைவார்கள் என்று நம்புவோம்.

Chitra said...

ஆச்சர்யமான விஷயங்களை, சுவாரசியமாக தந்து இருக்கீங்க.... நன்றி.

கோவி.கண்ணன் said...

பார்சிகள் மற்றும் துருக்கியர்கள் பேசிய மொழி உருது பெர்சியன் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது, அதுவே டெல்லி சுல்தான்களாலும் பேசப்பட்டது, அதில் ஏராளமான சமஸ்கிரத சொற்கள் கலந்த பின் உருது மொழி வடிவம் பெற்றது, அதை எழுத்தில் எழுதும் போது இஸ்லாமியர்கள் அரபி எழுத்துக்களாலும், இந்துக்கள் வடமொழி எழுதப்பயன்படும் கிருந்த எழுத்துகளாலும் எழுதினார்கள், கிருந்த எழுத்துகளால் எழுதப்பட்டவை பின்னர் ஹிந்தி ஆகியது, இஸ்லாமியர்கள் எழுதுவது உருது என்றாகியது. உருது வெளியில் இருந்து வந்து இந்தியாவில் வடிவம் பெற்ற மொழி, இதன் உடன்பிறப்பு மொழி இந்தி.

*****

இந்தியைத் துறத்தும் முதல்வர் உருதுக்கு பந்தி வைப்பது வெறும் ஓட்டு அரசியல் தான். இந்தியை தமிழர்கள் எதிர்க்க என்ன காரணங்கள் இருக்கிறதோ அது உருதுக்கும் பொருந்தும் என்று தமிழக முதல்வருக்கு உடன்பிறப்பு அப்துல்லா போன்றவர்கள் சுட்டிக்காட்டது என் போன்றோருக்கு வருத்தம் தான்.

*****

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறாததற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களின் உழைக்கும் பெண்களுக்கு ஒத்துவராது என்று முடிவு செய்ததே காரணம் என்று நான் கருதுகிறேன். அள்ளிச் சொருகி களைபிடுங்கும், நாத்துநடும், ஆடவர்களுடன் இணைந்தே வேலை செய்யும் பெண்களுக்கு இஸ்லாமின் ஆடை கட்டுப்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள் ஒத்துவராது என்றே அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.

துளசி கோபால் said...

பதிவை விட வரும் பின்னூட்டங்களிஒல் இருந்து 'இன்னும்' நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது.

தொடர்ந்த கவனிப்பு, இந்தப் பதிவுக்கு உறுதி.

துளசி கோபால் said...

oops..........


//பின்னூட்டங்களிஒல்//

இங்கே அந்த 'ஒ' தட்டச்சுப் பிழை:(

எம்.எம்.அப்துல்லா said...

@ அண்ணன் கல்வெட்டு -

//1.இந்தியாவில் "தீன் இலாஹி " மதத்தை கடைபிடிப்பவர்கள் இன்று உள்ளார்களா?

//

இல்லை.அக்பரின் மறைவோடு அந்த மதமும் அழிந்தது.


// 2. உருது பேசும் இஸ்லாமியர்கள் எதில் இருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள்?

//

உருது மாத்திரம் அல்ல..இந்தியாவில் இருக்கும் எந்த மொழியையும் பேசும் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே.

// 3. தீன் இலாகி மதம் என்பது இஸ்லாம் அல்ல. அது இஸ்லாம், சனாதனம்,இன்னும் பலவற்றின் கலவை. அப்படி இருக்க இவர்களுக்கு ஏதேனும் புனித தலம், புத்தம் உள்ளதா?

//

அந்த மதமே இன்று இல்லை எனும் நிலையில் அவ்வாறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

// 4. அக்பர் தீன்லாகியானவர். அவரை இன்னும் மொகலாயர் என்று சொல்வது (மொகல்) இஸ்லாமிய அடையாளம் ஆகாதா?

//

இல்லை.காரணம் மொகலாயர் என்பது ஒரு இனக்குழுவைக் குறிப்பது.மதத்தைக் குறிப்பது அல்ல. அதாவது தமிழர்கள் என்றால் அதில் பல மதத்தினரும் இருப்பார்களே! அதுபோல முகலாய இனக்குழுவில் அவர் தீன் இலாஹி மதத்தில் இருந்தார் என உணரலாம்.அவரை மொகல் என்று சொல்வதில் தவறு இல்லை.ஆனால்அவரை இஸ்லாமியர் என்று சொல்வது மட்டுமே தவறு.காரணம் இறக்கும்போது அவர் இஸ்லாமியர் அல்ல.

எம்.எம்.அப்துல்லா said...

// பார்சிகள் மற்றும் துருக்கியர்கள் பேசிய மொழி உருது

//

தகவல் பிழை. பார்சிகள் பேசியது பார்சி.துருக்கியர்கள் பேசியது துருக்கியும்,அரபியும்.


// இந்தியை தமிழர்கள் எதிர்க்க என்ன காரணங்கள் இருக்கிறதோ அது உருதுக்கும் பொருந்தும் என்று தமிழக முதல்வருக்கு உடன்பிறப்பு அப்துல்லா போன்றவர்கள் சுட்டிக்காட்டது என் போன்றோருக்கு வருத்தம் தான் //

பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஒரு டூலாக ஹிந்தியை கையில் எடுத்ததுபோல உருதுவையும் கையில் எடுத்தால் கண்டிப்பாக முதல்வரிடம் சொல்கிறேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

// தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறாததற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களின் உழைக்கும் பெண்களுக்கு ஒத்துவராது என்று முடிவு செய்ததே காரணம் என்று நான் கருதுகிறேன். அள்ளிச் சொருகி களைபிடுங்கும், நாத்துநடும், ஆடவர்களுடன் இணைந்தே வேலை செய்யும் பெண்களுக்கு இஸ்லாமின் ஆடை கட்டுப்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள் ஒத்துவராது என்றே அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்

//

நான் அப்படி நினைக்கவில்லை.இஸ்லாம் துரதிஷ்டவசமாக முதன்முதலில் உயர்சாதியினரிடம் சென்று சேர்ந்துவிட்டது.அவர்கள் தாழ்தப்பட்டோர் தங்களுக்கு இணையாக வருவதை விரும்பாது அவர்கள் வருகையைத் தடுத்து இருந்திருக்கலாம். இன்றைக்கு அனைவரும் சமம் எனும் இஸ்லாமியக் கொள்கையை முழுமனதோடு ஏற்கிறோம்.ஆனால் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தில் இணைந்த முதல் தலைமுறைக்கு அந்த பக்குவம் இருந்திருக்காது.எடுத்தவுடன் எவரும் முழு மாற்றத்தை விரும்புவதும் இல்லை,செய்வதும் இல்லையல்லவா??

கோவி.கண்ணன் said...

//தகவல் பிழை. பார்சிகள் பேசியது பார்சி.துருக்கியர்கள் பேசியது துருக்கியும்,அரபியும்.
//

நான் எழுதியவை

as per wiki information

Urdu arose in the contact situation which developed from the Muslim invasions of the Indian subcontinent by Persian and Turkic dynasties from the 11th century onwards,[13] first as Sultan Mahmud of the Ghaznavid empire conquered Punjab in the early 11th century, then when the Ghurids invaded northern India in the 12th century, and most decisively with the establishment of the Delhi Sultanate.

http://en.wikipedia.org/wiki/Urdu

விக்கியில் தகவல் பிழை இருந்தால் அவை சரி செய்யப்பட்டு இருக்கும், ஏனெனில் இந்தத்தகவல் ஆங்கிலத்தில் பலராலும் படிக்கப்படுவது

கோவி.கண்ணன் said...

//பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர்//

நீங்கள் ஏன் பார்பனரை பிராமணர் என்று எழுதுகிறீர்கள் ?
பாரதி 'பார்பானை ஐயர் என்கிற காலமும் போச்சே' என்று எழுதி 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. உங்க்ளைப் போன்றோர் பார்பனரை பிராமணன் என்றால் எழுதுவதைப் நிறுத்தாதவரை பார்பனரல்லாதோரை சூத்திரன் என்று அழைக்கும் இழிவுகளை அகற்றவே முடியாது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிகவும் சிறப்பான கட்டுரை. பெரும்பாலானோர் தொடத் தயங்கும் விசயங்கள். அதை எடுத்துச் சென்ற விதம் நன்று. பாராட்டுகள்.

அதற்கு வந்த, அண்ணன் அப்துல்லாவின் பின்னூட்டங்கள் சிறப்பு.

விசய ஞானம் இல்லாததால், எனக்குக் கருத்து கூற எதுவுமில்லை. தொடருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

யாரும் எடுக்கத் தயங்கும் ஒரு விசயத்தை அதன் தரம் குறையாமல் எல்லாரும் படிக்கும் வண்ணம் அருமையான நடையில் தந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களும் நண்பர்களின் பின்னூட்டக் கருத்துக்களும் எனக்கு நிறைய விசயங்களைச் சொல்லின.

எங்கப்பா மட்டன் வாங்க செல்லும் கடையின் உரிமையாளரை அப்பா அம்மான் (மாமா) என்றழைக்க, அவர் மாப்பிள்ளை என்றுதான் அழைப்பார். நானும் கூட செல்லும் போது வாடா பேராண்டி என்று உரிமையுடன் பேசுவார். அவர் மறைவுக்குப் பின்னரும் அவர் மகன் கள் அப்பா மீது அதே பாசத்துடன் தான் இருக்கிறார்கள். சாதி, மதம் எல்லாம் நாம் வகுத்தவைதானே அண்ணா.

எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரில் இருந்த் முஸ்லீம் சமுதாய மக்கள் பிழைப்புக்காக இடம் பெயர்ந்து செல்ல ரெண்டு மூனு வீடுகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் பள்ளி வாசலில் வருடா வருடம் சந்தனக்கூடு விழாவை சிறப்பாக நடத்துபவர்கள் யார் தெரியுமா அங்கிருக்கும் இந்துக்கள். அவர்கள் அந்த இனிய விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அங்கு ஜாதியோ மதமோ எட்டிப்பார்க்கவில்லை மனித நேயமும் பாசமும் பங்கிட்டுக் கொள்கின்றன.

உமர் | Umar said...

ஜோதிஜி,

முஸ்லிம்களிடம் பேசி பெற்ற விஷயங்களை பதிந்துள்ளீர்கள். பழகி அறியும் விஷயங்கள் வேறு மாதிரியாக இருக்கும். மாலை வருகின்றேன், நிறைய உரையாடலாம்.

அப்துல்லா அண்ணே, நான் சொல்ல நினைச்ச விஷயத்துல நெறைய சொல்லிட்டீங்க.

ஜோதிஜி said...

கும்மியாரே

என்னடா துளசி கோபால் பாராட்டு கொடுத்துட்டாங்க.. செந்தில், அப்துல்லா கொடுத்த ஆக்கபூர்வமான விசயங்கள் என்று பார்த்தால் சாயங்காலம் வந்து சைக்கிளில் ஏற்ப்போறீங்கன்னு பயமுறுத்துவது நியாயமா?

யாரெங்கே........ யாரடா அங்கே.........

நம் கும்மி அமைச்சர் வரும் போது தாரைதப்பட்டைகள் அடிக்கிற அடியில் பிய்ந்து தொங்க வேண்டாமா?

என்ன ஆகப் போகுதோ?

ஆனாலும் உங்களின் ஆக்கபூர்வமான விசயத்தை விமர்சனத்தை துளசி கோபால் போலவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கும்

திருப்பூர் வரலாற்றுக் காதலி.

ஜோதிஜி said...

கும்மியாரே

வலைபதிவில் முதன் முதலாக உச்சந்தலையை மட்டும்
தனது அடையாளமாக வைத்துக் கொடுத்த உங்கள் புகைப்படம் ஆச்சரியத்தின் உச்சம்.

ஜோதிஜி said...

வழக்குரைஞருக்கு வணக்கம்.

கவனப்ப்ரியன் (பெயரே ரொம்ப வித்யாசம்) உங்கள் முதல் பின்னோட்டத்திற்கு நன்றி.

முஹம்மது ஆஷிக் நன்றிங்க. உங்களின் நெகிழ்ச்சி வார்த்தைகளின் மூலம் உணர முடிகின்றது.

கண்ணன் உங்களுக்கு தனியாக சொல்ல முடியாது. காரணம் சாயங்காலம் ஒருத்தரு மிதி வண்டிய கொண்டு வந்து உள்ள விடப் போறாரு போலிருக்கு?

பார்க்கலாம்???????

ஜோதிஜி said...

கல்வெட்டு ராம்ஜி யாகூ வுக்குப் பிறகு ஆச்சரியப்படுத்துபவர் நீங்க தான்.

எஸ்.கே said...

அடடே! பதிவில் மட்டுமில்லாமல் பின்னூட்டங்களிலும் பல தகவல்கள்! நிச்சயம் வரலாற்று விரும்பிகளுக்கு சுவாரசியமான தகவல்கள்! நன்றி அனைவருக்கும்!

Unknown said...

சார் சில விசயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன், நான் கேள்வி எழுப்ப விரும்பியது சில இருக்கிறது, ஆனால் பின்னூட்டம் மூலம் இட்டால் சரிவராது, இன்னொரு நாள் நேரில் கேட்கிறேன்.

vinthaimanithan said...

சிறப்பான பதிவு... கூர்மையான தகவல்களோடு! அப்து அண்ணனின் பட்டை தீட்டல்கள் கூடுதல் மெருகு! வாழ்த்துக்கள் ஜி! ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு வரலாற்று ஆவணமாக இன்னும் கூர்தீட்டுங்கள்! நிறைய எதிர்பார்க்கிறேன்... குற்றப்பரம்பரைச்சட்டம், சேதுபதி மன்னர்கள், மருது சகோதரர்கள்,முத்துவடுகநாதர், வேலுநாச்சி, முதுகுளத்தூர் மற்றும் பசும்பொன் தேவர் பற்றி காய்தல் உவத்தல் இன்றி... மீண்டும் வாழ்த்துக்கள்!

கல்வெட்டு said...

.

நன்றி அப்துல்லா!
இன்ரைய உருது பேசுபவர்கள் தீன் இலாகியில் சேர்ந்து அக்பருக்குப் பின்னர் இஸ்லாமியரானவர்கள் என்றே நினைக்கிறேன்.

சனாதனம் ‍-> தீன் இலாஹி ‍-> இஸ்லாம்

அக்பரால், தீன்லாகிக்காக உருவாக்கப்பட்ட உருது, இவர்களுக்கு தாய்மொழியானதிற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

***


நன்றி ஜோதிஜி!

*

உமர் | Umar said...

பின்னூட்டத்திற்குக் கூட டிஸ்கி கொடுக்கும் முதல் நபர் நான்தானா என்று தெரியவில்லை. ஆனாலும், என்ன செய்வது நீங்கள் இந்த டிஸ்கிகளையும் படித்துதான் ஆகவேண்டும்.

:-)

டிஸ்கி 1: எனது பின்னூட்டத்திற்கு பதிலளிக்க விரும்பினால், எனது பின்னூட்டங்கள் முழுவதையும் படித்துவிட்டு பதிலளிக்கவும்.

டிஸ்கி 2: நான் இங்கு தமிழக முஸ்லிம்களைப் பற்றியும், சில இடங்களில் இஸ்லாமிய வரலாற்றையும் பேசுகின்றேன். இஸ்லாத்தைப் பற்றி பேசவில்லை.

டிஸ்கி 3: டிஸ்கி போட்டதே உரையாடல் வேறு திசையில் சென்று விடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். கடந்த சில நாட்களாக ஒரு நண்பர் கூறிய கொட்டைப்பாக்கு பதில்களின் பாதிப்பே இந்த டிஸ்கிகள்.

.

உமர் | Umar said...

பதிவில் இருக்கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன் சில களநிலைமைகள். தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது.

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் (இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்

ஜோதிஜி பேசியிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் மிகுதியாக உள்ளனர். முந்தையப் பதிவில் பேசியது போல் மரைக்காயர்கள் என்பவர்கள் மரக்கலங்களில் வணிகம் செய்து வந்தவர்கள் (செய்ய வந்தவர்கள் அல்ல, செய்து வந்தவர்கள்). மரக்கலம் + ஆயர் என்னும் வார்த்தை, மரக்கலாயர் என்று மாறி, மரைக்காயர் என்று மருவியுள்ளது. இன்றும் வணிகம் சார்ந்த தொழிலே ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளை வைத்து பராமரிப்பவர் மாவுத்தன் என்று அழைக்கப்பட்டார். அதுபோல் குதிரைகளை பராமரிப்பவர் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனின் குதிரைப் படை குதிரைகளை பராமரிப்பதும், குதிரைகளை வாடகைக்குக் கொடுப்பதும் அவர்களது தொழிலாக இருந்தது. இன்று பெரும்பாலானோர், வியாபாரம் உள்ளிட்ட வேறுத்தொழில்களுக்கு சென்றுவிட்டாலும், திருமணங்களுக்கு குதிரைகளை வாடகைக்கு விடும் சிலர் இருக்கின்றனர்.

இவ்விரு பிரிவினரும் இங்கே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வருபவர்கள். அப்துல்லா கூறியதுபோல் தேவர் சாதியிலிருந்து இருந்து மாறியவர்கள். மரைக்காயர்கள், செட்டியார்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறியவர்களாக இருக்கக்கூடும் என்றொரு கருத்தும் நிலவுகின்றது.

இஸ்லாம் அறிமுகமானப் பொழுதில் இஸ்லாத்தை பரப்ப வந்தவர்கள் அரபி மொழிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை யாரேனும் அழைத்தால், வருகிறேன் என்பதை அரபியில் 'லப்பைக்கும்' என்று கூறுவார்கள். லப்பைக்கும் என்னும் வார்த்தைதான் சுருங்கி லப்பை என்று ஆகிவிட்டது. அவர்கள் இங்கேயே திருமணம் புரிந்து இங்கேயே வாழத்தொடங்கிவிட்டனர். தமிழர்களோடு செய்த திருமணத்தின் காரணமாக, அரபி மொழி பேசுவது குறைந்து தமிழே அவர்களது முதன்மையான மொழியாகியது. காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் அரபி அறியாதவர்களாகவே ஆகிப்போயினர். அப்துல்லா கூறியிருக்கும் அரபியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்பது இவர்களுக்கும் பொருந்தும்.

கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களும் இஸ்லாத்திற்கு மாறினர். அவர்களுக்கென்று தமிழக அரசு தனியாக சாதிப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களிடையே அவர்கள் அலாக்கரை மக்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் கடற்கரையோரம் வசித்ததால் (அலை + கரை) அலைக்கரை என்னும் வார்த்தை பேச்சுவழக்கில் அலாக்கரை என்று வழங்கப்படுகின்றது.

உமர் | Umar said...

பதிவில் இருக்கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன் சில களநிலைமைகள். தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது.

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் (இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்

ஜோதிஜி பேசியிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் மிகுதியாக உள்ளனர். முந்தையப் பதிவில் பேசியது போல் மரைக்காயர்கள் என்பவர்கள் மரக்கலங்களில் வணிகம் செய்து வந்தவர்கள் (செய்ய வந்தவர்கள் அல்ல, செய்து வந்தவர்கள்). மரக்கலம் + ஆயர் என்னும் வார்த்தை, மரக்கலாயர் என்று மாறி, மரைக்காயர் என்று மருவியுள்ளது. இன்றும் வணிகம் சார்ந்த தொழிலே ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளை வைத்து பராமரிப்பவர் மாவுத்தன் என்று அழைக்கப்பட்டார். அதுபோல் குதிரைகளை பராமரிப்பவர் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனின் குதிரைப் படை குதிரைகளை பராமரிப்பதும், குதிரைகளை வாடகைக்குக் கொடுப்பதும் அவர்களது தொழிலாக இருந்தது. இன்று பெரும்பாலானோர், வியாபாரம் உள்ளிட்ட வேறுத்தொழில்களுக்கு சென்றுவிட்டாலும், திருமணங்களுக்கு குதிரைகளை வாடகைக்கு விடும் சிலர் இருக்கின்றனர்.

இவ்விரு பிரிவினரும் இங்கே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வருபவர்கள். அப்துல்லா கூறியதுபோல் தேவர் சாதியிலிருந்து இருந்து மாறியவர்கள். மரைக்காயர்கள், செட்டியார்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறியவர்களாக இருக்கக்கூடும் என்றொரு கருத்தும் நிலவுகின்றது.

இஸ்லாம் அறிமுகமானப் பொழுதில் இஸ்லாத்தை பரப்ப வந்தவர்கள் அரபி மொழிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை யாரேனும் அழைத்தால், வருகிறேன் என்பதை அரபியில் 'லப்பைக்கும்' என்று கூறுவார்கள். லப்பைக்கும் என்னும் வார்த்தைதான் சுருங்கி லப்பை என்று ஆகிவிட்டது. அவர்கள் இங்கேயே திருமணம் புரிந்து இங்கேயே வாழத்தொடங்கிவிட்டனர். தமிழர்களோடு செய்த திருமணத்தின் காரணமாக, அரபி மொழி பேசுவது குறைந்து தமிழே அவர்களது முதன்மையான மொழியாகியது. காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் அரபி அறியாதவர்களாகவே ஆகிப்போயினர். அப்துல்லா கூறியிருக்கும் அரபியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்பது இவர்களுக்கும் பொருந்தும்.

கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களும் இஸ்லாத்திற்கு மாறினர். அவர்களுக்கென்று தமிழக அரசு தனியாக சாதிப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களிடையே அவர்கள் அலாக்கரை மக்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் கடற்கரையோரம் வசித்ததால் (அலை + கரை) அலைக்கரை என்னும் வார்த்தை பேச்சுவழக்கில் அலாக்கரை என்று வழங்கப்படுகின்றது.

உமர் | Umar said...

ஒவ்வொரு கிராமத்திலும் பத்துக்கும் குறைவான குடும்பங்கள் இருக்கும். (குடும்பம் என்பது வம்சம் என்பது போல்) . ஒவ்வொரு குடும்பத்திலும் 100 லிருந்து 200 தலைக்கட்டுகள் இருக்கும். (ஒரு தலைக்கட்டு என்பது கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட அமைப்பு.) பெரும்பாலும் திருமணங்கள் குடும்பத்திற்குள்ளாகவே நடைபெறும். ஒரு குடும்பம் விட்டு வேறொரு குடும்பத்தில் திருமணம் நடைபெற்றாலும் அது அலாக்கரை குடும்பத்தோடு மட்டும் இருக்காது. ஏனெனில், அவர்கள் கீழ் சாதியினர் என்று மற்றவர்களால் கருதப்படுகின்றனர்.

தங்கள் வீட்டு சிறுவர்கள் அலாக்கரை குடும்பத்து சிறுவர்களோடு விளையாடுவதைக் கூட கண்டிக்கும் மற்றக் குடும்பத்து பெண்கள் இன்றும் உள்ளனர். பொதுவாக இஸ்லாமிய ஆண்களுக்கிடையே இவ்வித பாகுபாடு பெரியளவில் தெரியாவிட்டாலும், இஸ்லாமியப் பெண்களிடம் இவ்வித பாகுபாடு இன்றும் நிலவுகின்றது.

இது ஒரு வகை பாகுபாடு என்றால், இஸ்லாமிய ஆண்களாலும் மனிதனாககூட மதிக்காத ஒரு நபர் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார். அவர் நாசுவன் என்று அழைக்கப்படுபவர். நாவிதன் என்னும் சொல் மருவி நாசுவன் ஆகியிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். சொல்லின் மூலம் உறுதியாகத் தெரியவில்லை. ஊருக்கென நேர்ந்து விடப்பட்டவர் அவர். :-(

ஊரில் யாரேனும் இறந்தால், உடலைக் குளிப்பாட்ட இவரைத்தான் அழைப்பார்கள். இதுபோன்ற செயல்கள் எல்லாம் இவருக்கு என விதிக்கப்பட்டவை. இன்றும் மாத சம்பளமாக ரூ.1500 மட்டுமே பெறும் பாவப்பட்ட ஜீவன் இவர். ரம்ஜானின் போது ஊரில் யாரேனும் நல்லுள்ளம் படைத்த ஒருவர் இவருக்கென்று ஒரு உடை எடுத்துக்கொடுத்தால்தான், அவ்வருடத்திற்கு அவருக்கென ஒரு உடை சேரும். இவரை நம்பி ஒரு குடும்பம் வேறு இருக்கும். இதுதான் இன்னும் பரிதாபத்திற்குரியது.

இத்தகைய பகுதிகளை ஒட்டி வாழ்ந்த தலித்துகள், கிருத்துவர்களாக மதம் மாறி, அரசாங்கத்தால் காலனி என்னும் பகுதிகள் கட்டப்பட்டு ஊரை விட்டு தள்ளி வாழத்தொடங்கியுள்ளனர்.

இஸ்லாமியர்களிடையே சாதிப் பாகுபாடு கிடையாது என்று பதிலளிக்க விரும்புபவர்களிடம் சில கேள்விகள் கேட்கின்றேன். நாசுவனை எப்பொழுதாவது 'வா' என்று அழைக்காமல் 'வாங்க' என்று அழைத்திருக்கின்றீர்களா? நாசுவனைப் பற்றி பிறரிடம் பேசும்போது 'அவன்' என்று கூறாமல் 'அவர்' என்று கூறியிருக்கிண்றீர்களா? உங்கள் மனசாட்சிப்படி நீங்களே பதிலளித்துக்கொண்டு சாதிப் பாகுபாடு உண்டா இல்லையா என்று கூறுங்கள்.

உமர் | Umar said...

இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியதற்கு சாதீய அடுக்குமுறைகளும், அடக்குமுறைகளுமே காரணமாக இருந்தன. அதேபோல் மற்ற சாதி மக்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு தடையாகவும் இஸ்லாத்தில் நிலவிய, நிலவும் சாதீய பாகுபாடே காரணமாக இருந்தது.

உமர் | Umar said...

இது தவிர இஸ்லாமியர்களிடையே நிலவும் இன்னொரு பாகுபாடு தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம் பிரிவுகள். உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுக்குக் கீழானவர்களாகத்தான் பார்க்கின்றனர். உருது முஸ்லிம்களின் வீட்டு வாசலில் To Let போர்ட் தொங்கினால், (Only for Urdu Muslims) என்னும் அடைப்புக்குறியை பார்க்க முடியும். முஸ்லிம் லீக் தவிர்த்த இஸ்லாமியக் கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளிடம் கேட்கும்பொழுது, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என்று கேட்பார்களே தவிர, உருது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வேலூர் தொகுதியைக் கேட்க மாட்டார்கள்.

நீங்கள் கூறியிருக்கும் அவர்களது மொழிப்பற்று என்பதை விடவும், தாம் பேசும் விஷயம் கூட இருக்கும் உருது தெரியாத நபருக்கு தேவையற்றது என்னும் தொனியிலேயே அமைந்திருக்கும். நிறுவன நிர்வாகத்தின் மேல்நிலையில் இருக்கும் சிலரைத் தவிர மற்ற உருது முஸ்லிம்கள் மூன்றாம் நபர் தாம் பேசுவதை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்னும் நிலையிலேயே தம்முள் உருது மொழியில் பேசிக்கொள்வார்கள்.

இன்னொரு வகை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போரா முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது பள்ளிவாசலில் போரா முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் தொழ முடியாது. வாசலிலேயே ஒருவர் காவலுக்கு இருப்பார். புதிதாக யாரும் தெரிந்தால், தனியே அழைத்து இது உங்களுக்கான பள்ளி இல்லை; வெளியே செல்லுங்கள் என்று கூறிவிடுவார். அப்படியும் இவர்களது பார்வைக்குத் தப்பி யாரேனும் அப்பள்ளியில் தொழுதுவிட்டால், அவர்கள் சென்ற பின்பு அவ்விடத்தை கழுவி விடுவார்கள். (செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் நினைவுக்கு வருகின்றாரா?)

இஸ்லாத்தில் பாகுபாடு கிடையாது என்று கூறுபவர்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். போரா முஸ்லிம்களின் பள்ளிவாசலில் சென்று தொழுதுவிட்டு என்ன நடக்கிறது என்று பாருங்களேன்.

உமர் | Umar said...

இப்பொழுது தமிழ் முஸ்லிம்கள், உருது முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்வதும், பிறக்குழுக்கள் இடையேயும் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம், முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றதினால் ஏற்பட்ட மாற்றங்கள். இஸ்லாத்திற்கும் இத்தகைய மாற்றங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

ஜோதிஜி,
//இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி" என்கிற ரீதியில் இருந்த காரணத்தால்//

என்னும் உங்கள் பதிவில் இருக்கும் ஒரு வரிக்கு பதில் எழுதப்போய் பின்னூட்டம் இவ்வளவு நீண்டுவிட்டது.

:-)

.

உமர் | Umar said...

பதிவில் இல்லாவிட்டாலும் இங்கிருக்கும் இன்னொரு பின்னூட்டத்தின் அடிப்படையில் இது. சில RSS நபர்களால் இஸ்லாமியர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, வாள்முனையில் இங்கிருந்த இந்துக்கள் இஸ்லாமியர்களாக்கப்பட்டனர் என்பதாகும். எவ்வித அடிப்படை ஆதாரங்களும் அற்ற குற்றச்சாட்டு இது.

முகம்மதுவிற்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுள் உமர் என்றொருவர் உண்டு. இஸ்லாமிய வரலாற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உமரின் ஆட்சிக்காலத்தில், அவரது ஆட்சிக்காலத்துக்குப் பின் என்று. உமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பலவித போர்களை நடத்தி ஆட்சிப் பிரதேசத்தை விரிவாக்கினார். எந்தப் பகுதி அவருடைய ஆளுகைக்குள் வந்தாலும் அங்கிருந்த மக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டனர். கிபி 644 ல் அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட்பின்பு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவர்களால், உமர் அளவுக்கு இஸ்லாத்தைப் பரப்பமுடியவில்லை.

உமரின் ஆட்சியை அடிப்படையாக வைத்து, இங்கிருக்கும் இஸ்லாமியர்களும் வாள்முனையில் முகலாயர்களால் மாற்றப்பட்டவர்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுகின்றது. ஆனால், முகலாயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலும், இலங்கையிலும், கேரளாவிலும் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

ஆயிஷா said...

நேர்மையான முறையில் பதிவிட்டிருக்கிறீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

உமர் | Umar said...

தமிழ்ப்புலவர்களை பட்டியலிட்ட நீங்கள் உமறுப்புலவரை விட்டுவிட்டீர்களே!

ஜோதிஜி said...

கும்மி ராசா

என்ன எழுதுவது என்றே எனக்குத் தெரியவில்லை. மெய் மற்நது போய்விட்டேன். காழ்ப்புணர்ச்சி இல்லாத அத்தனையும் பல கேள்விகளைஉருவாக்கக்கூடியது?

என்னுடைய நண்பன் கலந்தர் லெப்பை என்று ஒருவர் இருந்தார். ஆனால் நீங்கள் சொல்லியுள்ள பல விசயங்கள் நிச்சயம் புத்தக ஞானத்தை வைத்து மட்டும் இது போல எழுத முடியாது. ஆழ்ந்த புரிந்துணர்வு அல்லது அக்கறை இருந்தால் மட்டுமே இது போன்று எழுத முடியும். துளசி கோபால் சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது. நான் பெயருக்கென்று எழுதுகின்றேன். ஆனால் என்னைப் போன்றவர்களை எழுத வைத்துக் கொண்டுருப்பவர்கள் நீங்க, கல்வெட்டு, விந்தை மனிதன், கண்ணன், அப்துல்லா மற்றும் இன்றும் புதிதாக வந்துள்ள இஸ்லாமிய நண்பர்கள். நிச்சயம் இரவுப் பொழுதில் நம்ம அப்துல்லாவுக்கு நிறைய பதில் அளிக்க வேண்டிய வேலை உள்ளது. அப்புறம் செட்டியார்களும் மாறினார்கள் என்பதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா?

உமர் | Umar said...

//வலைபதிவில் முதன் முதலாக உச்சந்தலையை மட்டும்
தனது அடையாளமாக வைத்துக் கொடுத்த உங்கள் புகைப்படம் ஆச்சரியத்தின் உச்சம்//

Top Angle லில் ஒரு புகைப்படத்தை எடுத்து அதை ப்ரோபைல் போட்டோவில் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த வினவு புகைப்படக்காரர், பார்வையாளர்களை பின்புறமிருந்து எடுத்த போட்டோ அது. பதிவின் லிங்க்

கடைசி போட்டோவுக்கு முந்தைய போட்டோவில் தெரியும் பெரிய ஒளி வட்டம் நான்; சிறிய ஒளி வட்டம் அதிஷா. அடுத்திருந்த லக்கி ஒளி வட்டம் கேமராவுக்குள் அடங்கவில்லை.

:-)

.

உமர் | Umar said...

//நிச்சயம் இரவுப் பொழுதில் நம்ம அப்துல்லாவுக்கு நிறைய பதில் அளிக்க வேண்டிய வேலை உள்ளது//

நல்ல வேளை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் நான் பேசுனேன்.

அப்துல்லா அண்ணே ஒரு தேங்க்ஸ் சொல்லிருங்க. இல்லைன்னா, அடுத்தது தஞ்சை மாவட்டமும் ஆரம்பிச்சிருவேன். :-)

உமர் | Umar said...

//ஆனால் என்னைப் போன்றவர்களை எழுத வைத்துக் கொண்டுருப்பவர்கள் நீங்க, கல்வெட்டு, விந்தை மனிதன், கண்ணன், அப்துல்லா மற்றும் இன்றும் புதிதாக வந்துள்ள இஸ்லாமிய நண்பர்கள்//

இந்த மாதிரி எல்லா இடத்துலையும் போயி பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருக்கீங்க; பதிவே எழுத மாட்டேங்குறீங்க அப்படின்னு எங்க பங்காளிங்க கேட்டுக்கிடே இருக்காங்க. :-)

உங்களில் ஒருவன் said...

திரு. கும்மி அவர்களே,

நீங்கள் சொல்லும் அந்த நபரை எங்கள் ஊரில், மோதினார் என்று அழைப்பர். எங்களுக்கு தெரிந்து அவரை அவன், இவன் என்று நாங்கள் அழைத்தலில்லை, மோதினார் பாய் அல்லது பாய் என்றுதான் அழைப்போம். உங்களுக்கு ஒன்றுதெரியுமா? மறுமையில் அதாவது இறைவன் நம்மை உயிர்த்தெழுந்த பிறகு சிலருக்கு உயர்ந்த பதவிகளை, கண்ணியங்களை அளிக்கின்றான்.அதில் நீங்கள் குறிப்பிடும் நபர் மிக உயரமாக இருப்பார் மற்றவர்களைவிட, அதாவது அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல மேலும் அவருடன் நாங்களும் கொடுக்கல் வாங்கள்,பெண் கொடுத்து பெண் எடுப்பர். எல்லாவற்றிர்க்கும் மேலாக இஸ்லாத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட நபரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று எல்லாம் இல்லை, ஒவ்வொரு நபரும் இறந்தவரை குளிக்க வைத்து சுத்தம் செய்தல் அடக்கம் செய்வது வரை கற்றுக்கொள்வது அவசியமாகும், எந்த ஒரு மனிதன் செய்த பாவத்தை அவனது பிள்ளை மேல் சுமத்துவது குற்றமோ எந்த ஒரு தனி நபரும் செய்யும் குற்றம் இஸ்லாத்தை மையப்படுத்தாது. இன்னும் நன்கு விளங்குங்கள். நன்றி

ஜோதிஜி said...

இல்ல கும்மி. பொதுவா பதிவுலகில் இது போன்ற ஆணித்தரமான பிரதிவாதங்களைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் பகிர்வுக்கு நன்றி என்பதோடு ஒரு வருகை பதிவேடு போல கடந்து போய்விடுவதுண்டு. எட்டு மாதங்களுக்கு முன்பு இது போல சிலருக்கு கொடுக்கப் போக சிலர் அடிக்காத குறையாக கடிக்க வந்து விட அத்துடன் எஸ்கேப்பூ. இன்னும் சிலர் புரியலையே என்பதோடு புத்திசாலி ஆயிடுறாங்க.

ராஜநடராஜன், நீங்க, கல்வெட்டு, ரதி, தமிழ்உதயம் ரமேஷ், ராம்ஜி யாகூ, கண்ணன், சில சமயம் அப்துல்லா போன்றவர்கள் எழுதி சாதிப்பதை விட இது போன்ற ஆக்கபூர்வமான பின்னூட்டத்தின் மூலம் பலருக்கும் பல புரிதல்களை உருவாக்குகிறார்கள். இது குறித்து ஒரு பதிவே என்னால் எழுத முடியும். எழுதுவது பெரிய விசயமல்ல. நான்கு புத்தகங்களை வைத்துக் கொண்டு கோர்வையாக சொல்லத் தெரிந்தால் போதுமானது. படிப்பவர்களுக்கு உகந்த நடை இயல்பாகவே நம்மால் உருவாக்க முடியும். ஆனால் கூர்மையான விமர்சனம். சான்ஸே இல்லை. ரெண்டு நாளைக்கு முன்பு கலைஞர் பேட்டிய பார்த்துருந்தா புரியும். மனுசன் பின்னு பின்னுன்னு பின்னுறார். வேறு எவராலும் முடியுமான்னு சந்தேகமே எனக்கு வந்துடுச்சு.

ஒரு சிறு குறிப்பு.

ஆளுநர் உரையில் பிரச்சனையாமே?
அவர்களுக்கு பிரச்சனையே ஆளுநர் உரைதான்.

போட்டு வாங்கி தாக்கி கொடுத்து வாங்கி தாக்கி...... நிருபர்கள் தலையை பிச்சுக்க வேண்டியது.

அது போலத்தான் உங்கள் திறமையும்.

ரொம்ப புகழ்ந்து விட்டேன் என்று நினைக்கவேண்டாம். எழுதிய எனக்கே நீயெல்லாம் என்னடா எழுதியிருக்க. நம்ம கும்மி எழுதினா நீ டம்மிங்ற மாதிரி இருக்கு.

நன்றி கும்மி ராசா.

உமர் | Umar said...

@உங்களில் ஒருவன்

மோதினாரை நீங்கள் மரியாதையாக அழைப்பதுக் கேட்டு மகிழ்ச்சி. உங்களுக்கு முந்தைய தலைமுறையினரும் அப்படியே அழைத்தனரா?

//ஒவ்வொரு நபரும் இறந்தவரை குளிக்க வைத்து சுத்தம் செய்தல் அடக்கம் செய்வது வரை கற்றுக்கொள்வது அவசியமாகும்,//

உங்கள் ஊரில், இறந்தவரின் தனிப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்யும் வேலையை மோதினார் தவிர வேறு யாரும் செய்கின்றார்களா? பள்ளிவாசலில் எடுபிடி வேலைகளுக்கு மோதினாரை பயன்படுத்துவதில்லையா? நன்று. உங்கள் ஊர் மரியாதைக்கொடுக்கப்பட வேண்டிய ஊர். எத்தனை ஆண்டுகளாக இது போன்ற நற்செயல்கள் நடைபெறுகின்றன? உங்கள் ஊர் எதுவென்று தெரிந்துகொள்ளலாமா?

//மறுமையில் அதாவது இறைவன் நம்மை உயிர்த்தெழுந்த பிறகு சிலருக்கு உயர்ந்த பதவிகளை, கண்ணியங்களை அளிக்கின்றான்.அதில் நீங்கள் குறிப்பிடும் நபர் மிக உயரமாக இருப்பார் மற்றவர்களைவிட, //
//எந்த ஒரு மனிதன் செய்த பாவத்தை அவனது பிள்ளை மேல் சுமத்துவது குற்றமோ எந்த ஒரு தனி நபரும் செய்யும் குற்றம் இஸ்லாத்தை மையப்படுத்தாது. இன்னும் நன்கு விளங்குங்கள்//

என்னுடைய டிஸ்கி 2 னையும் பதிவையும் மீண்டும் ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பேசியுள்ளோம். இஸ்லாத்தைப் பற்றி பேசவில்லை.

இஸ்லாம், இஸ்லாமியர் தொடர்பான பதிவு என்றாலே, என்ன கூறியிருக்கின்றனர் என்பதை படிக்காமலே, இஸ்லாமியர்களின் செயல்கள் இஸ்லாத்தை பாதிக்காது என்று பின்னூட்டமிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

உமர் | Umar said...

//எட்டு மாதங்களுக்கு முன்பு இது போல சிலருக்கு கொடுக்கப் போக சிலர் அடிக்காத குறையாக கடிக்க வந்து விட அத்துடன் எஸ்கேப்பூ//

அது அடிக்கடி நடப்பதுதான். :-)நாங்கள் அதிகமாக ஆத்திகர்களின் தளங்களில்தான் பின்னூட்டம் இடுவோம். என்ன நடக்கும் என்று யூகிக்கமுடிகின்றதுதானே.

.

ரிஷபன்Meena said...

பதிவை விட பின்னூட்டங்கள் நன்றாக இருந்தன.

திரு.அப்துல்லாவின் பின்னூட்டங்கள் அருமை. தெளிவா எழுதியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

அடேங்கப்பா, இவ்வளவு விசயமிருக்கா இதில. மெதுவா படிக்கிறேன். இதில நான் அறிந்து கொள்ள நிறைய இருக்கு. நான் சொல்ல ஒண்ணுமில்லை.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நல்லிணக்கப்பார்வையோடு எழுதப்பட்டிருக்கிற இந்த பதிவுக்கு பொருத்தமாக ஒரு பின்னூட்டம் போடலாமென நினைக்கிறேன்.

இந்துவாகப் பிறந்து,கிறுஸ்தவ பள்ளியில் பயின்று,இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மதங்களை கடந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கிளியனூர் இஸ்மத் said...

உங்களின் ஆய்வும் அப்துல்லாவின் ஆய்வும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
எத்தனைதான் மதம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இஸ்லாம் மதம் மாற்றத்தைவிட மனம் மாற்றத்தையே விரும்புகிறது...

தமிழ்மணம் விருதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...

vinthaimanithan said...

நண்பா கும்மி, வர்ற ஒவ்வொரு பாலையும் சிக்ஸரா விளாசிட்டு இருக்கீங்களே! வாழ்த்துக்கள்!

உமர் | Umar said...

//வர்ற ஒவ்வொரு பாலையும் சிக்ஸரா விளாசிட்டு இருக்கீங்களே!//

எல்லாம் ஜோதிஜி குடுக்குற இடம். :-)
மத்த இடத்துல போயி எதிர் கருத்து சொன்னா, இனிமே இந்தப் பக்கமே வராதேன்னு கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிர்றாங்க. நம்ம ஜோதிஜி மட்டும்தான், நாம எதிர்கருத்து சொன்னாலும், நல்லா சொல்லிருக்கே ராசான்னு உச்சி மோந்து பாராட்டுறாரு. :-)

எம்.எம்.அப்துல்லா said...

// என்னுடைய டிஸ்கி 2 னையும் பதிவையும் மீண்டும் ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பேசியுள்ளோம். இஸ்லாத்தைப் பற்றி பேசவில்லை.


//

ஜோதி அண்ணே, கும்மியின் இந்த பதிலுக்குப் பின் இந்த இரவில் எனக்கு பதில் சொல்லும் வேலை இல்லை :))

இருப்பினும் ஓரிரு எதிர் கருத்து மட்டும்.

எனக்குத் தெரிந்து மோதினாரை யாரும் ஒருமையில் அழைப்பது இல்லை.

// உங்கள் ஊரில், இறந்தவரின் தனிப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்யும் வேலையை மோதினார் தவிர வேறு யாரும் செய்கின்றார்களா?

//

எங்கள் மாவட்டத்தில் நிச்சயம் மற்றவர்கள்தான் செயின்றனர்.குறிப்பாக அன்னவாசல் எனும் ஊரில் இறந்தவர்களின் உடலை சுத்தம் செய்யும் வேலையைச் செய்வது அந்த ஊரின் ஜமாத் தலைவரும்,பெரும் கோடீஸ்வரருமான மதிப்பிற்குறிய.a.k.m.ஜமால் அவர்கள்.இன்னும் எத்தனையோ உதாரணம் மாநில அளவிலும் உண்டு.

Anonymous said...

/ சில RSS நபர்களால் இஸ்லாமியர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, வாள்முனையில் இங்கிருந்த இந்துக்கள் இஸ்லாமியர்களாக்கப்பட்டனர் என்பதாகும்

//

கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கும் மேல் இந்த தேசம் இஸ்லாமியர்களால் ஆளப்பட்டது.வாள் கொண்டு மதத்தைப் பரப்பி இருந்தால் இன்றைக்கு இந்தியாவில் இஸ்லாம் மட்டுமே இருந்திருக்கும்.இது ஒன்றே வாளால் இங்கு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதற்கு உதாரணம்.

vinthaimanithan said...

அப்துல்லா அண்ணே!

விதிவிலக்குகள் விதியாகுமா?

ஆனாலும் ஒண்ணை மட்டும் ஒத்துக்குறேன். திண்ணியம் மாதிரி வாயில பீ திணிக்குற அசிங்கம் இந்து மதம் தவிர வேறெங்கும் இல்ல.

vinthaimanithan said...

அப்துல்லா அண்ணனுக்கு இந்த இடுகை மூலமா ஒரு வேண்டுகோள்! சூஃபிஸம் பத்தி நீங்க ஒரு தொடர் எழுதணும்.

Unknown said...

அண்ணே பதிவையும் பின்னூட்டத்தையும் பார்க்கும்போது இதை தொடராக எழுதி எங்கள் பதிப்பகத்துக்கு தரவேண்டும் என இப்போதே முன்பதிவு செய்கிறேன்.

பின்னூடங்களில் விளக்கமளித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக.

விந்தைமனிதன் said...
அப்துல்லா அண்ணே!
//விதிவிலக்குகள் விதியாகுமா?//--இது நிச்சயம் சகோ.கும்மி அவர்களை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி.

//எல்லாம் ஜோதிஜி குடுக்குற இடம். :-)//--மிக்க நன்றி சகோ.ஜோதிஜி அவர்களே. உங்கள் இருவர் பின்னூட்டங்களையும் குறிப்பாய் உங்களின் கும்மி புகழ்பாடும் பின்னூட்டங்களை பார்த்து விட்டு இப்போது புரிகிறது... இது ஏற்கனவே கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட போர்க்களம் என்று.நான்தான் இது தெரியாமல், தேவியர் இல்லம் என்பது 'பூ பூத்த நந்தவனம்' என்று எந்த நதிமூலமும் பார்க்காமல் நம்பி, நேற்று நுழைந்து விட்டேன். மன்னிக்கவும்.

சகோ.அப்துல்லா போலவே நானும் விடைபெறும் முன் சிலவற்றை சொல்லிக்கொள்கிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தமிழக அரசின் ஜாதிச்சான்றிதழில் ஏன் ஜாதி லப்பை என்று போடப்பட்டிருக்கும். எட்டாம் வகுப்பில் ஜாதிச்சான்றிதழ் வாங்கப்போகும்போது, என்னிடம் அந்த அரசு அலுவலர் கேட்டார், என்ன சாதி என்று. அப்போது கூட இருந்த சக மாணவன் அடிக்கடி இல்லாத மீசையை முறுக்கி 'நான் தேவன்' என்பான். அதுவே பெருமை என்று கருதி 'நான் தேவன்' என்றேன். அவர் சிரித்து விட்டு, நீங்க என்ன சாதி என்றார் அப்பாவிடம். தெரியலன்னு சொல்ல... சரி, சரி லப்பை-ன்னு போட்டுடறேன் என்று போட்டுவிட்டார். இதுதான் தமிழக முஸ்லிம்களின் நிகழ்கால சாதி வரலாறு.

மோதினார் என்று ஒருவர் அவசியமே இல்லை. பல பள்ளிவாசல்களில் இப்படி ஒருவர் இருப்பதே இல்லை. அதிராம்பட்டினத்தில் உள்ள பதினாறு பள்ளிவாசல்களில் நான் பலவருடம் தொழுத புதுப்பள்ளியின் மோதினார் யார் என்றே தெரியாது. யார் பாங்கு சொல்ல விரும்புகிறாரோ சொல்வோம். யார் கூட்ட விரும்புகிறாரோ அவர் கூட்டுவோம். டாய்லட்டை உபயோகிப்பவரே சுத்தம் செய்துவிட்டு வந்துவிடுவோம். அப்போதைக்கு யார் தொழுகை வைக்க தகுதியான சீநியர்களோ அவர் தொழுகை வைப்பார். அவ்வளவு எளிமையான மனிதர்கள் அதிரையில்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

என் அப்பா ஊரான பாபநாசத்தில் & அம்மா ஊரான பண்டாரவாடையில் இடையில் உள்ள ராஜகிரி பக்கத்தில் உள்ள வழுத்தூர், அய்யம்பேட்டை எல்லா பள்ளியிலும் மோதினார் உண்டு. மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். எதிர்படும் வேளையில் ஸலாம் சொல்லப்படுவார்கள். நான் ஒவ்வொரு வருடம் போகும்போதும் பாபநாசத்தில் மோதினார் மாறிக்கொண்டே இருக்கிறார். கேட்டால் வேறு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டது/கடை வைத்துவிட்டார் இப்படி காரணங்கள். ஏனெனில் மோதினாராய் இருக்கும்போது வியாபாரத்திற்கான 'முதல்' தன்னாலே சேர்ந்து விடுகிறது.

பாபநாசம் பள்ளிவாசலுக்கு எதிரேதான் என் வீடு. என் தாத்தா இறந்தபோது நான், என் தந்தை, என் தாத்தாவின் ஆருயிர் நண்பர்கள் இருவர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் எதிர்த்த வீட்டுக்காரர் மற்றும் மோதினார் இத்தனை பேரும் சேர்ந்து குளிப்பாட்டினோம். மோதினார் ஒருவர் மட்டும் செய்வது முடியாத காரியம். மேலும் இஸ்லாம் சொல்கிறது... ரத்த சம்பத்தப்பட்ட குடும்ப உறவினர்க்கே இதில் முன்னுரிமை என்று. மோதினார் அனுமதிக்கப்படுவது எதற்கெனில், சிலர் விபரம் தெரியாமல் இருந்தால் சொல்லித்தர.. ஒரு மேற்பார்வையாளர் போல தேவைப்பட்டால் உதவுவார். அதற்கு பணம் வாங்கிக்கொள்வார்.

மேலும் பெட்டியில் உடலை தூக்கிகொண்டு சென்றது முதல், குழி வெட்டியது, உடலை உள்ளே வைத்து மூடியது உட்பட நான், என் வயது நண்பர்கள், பக்கத்துவீட்டார் மற்றும் குழி வெட்டுவதற்காக கூப்பிடப்பட்ட ஒருவர் என் அனைவரும் இணைந்து. அப்போது மோதினார் என்ன நான் வரணுமா என்க, வேண்டாம் பாவா, எங்களுக்கு தெரியும் என்று எப்படி செய்யுறதுன்னு என்று என்னுடைய ஒரு நண்பர் சொல்ல.. பாங்கு சொல்ல நகர்ந்து விட்டார் மோதினார்.

ஸாரி பற்றி சொல்ல மறந்த விஷயம்:
என் உடன் பிறந்த தங்கையின் சாதிச்சான்றிதழில் வேறு சாதி..! ஏனெனில் அது வேறு பதிவு அலுவலகம் வேறு ஒரு பதிவாளர். இங்கு குறிப்பிடப்பட்ட ஏழு அல்லாத வேறு ஒன்று என்பது என் நினைவு. இதற்காக போன் பண்ணி கேட்டபோது தங்கை சொன்ன பதில்- "சரியாக நியாபகம் இல்லை அண்ணே". "சான்றிதழை பார்த்து சொல்லும்மா", "இந்த வீட்டிலே இல்லை.. நம்ம வீட்டிலே தான் இருக்கனும்"." எங்கே வேச்சென்னு தெரியலை, தேடனும்..." "சரி,அத இப்ப எதற்கு கேக்குறே சவுதிலேருந்து?"

முஸ்லிம்களில் சாதி: இதற்கெல்லாம் அவ்வளவுதான் முக்கியத்துவம். படிக்க, வேலைக்காக அப்ளிகேஷன் நிரப்பும்போது மட்டும். அரசுக்காக.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இப்போது முஸ்லிம் ஆன் பிள்ளைகள் கத்னா எல்லாம் செய்வது எம்.டி படித்த டாக்டர்கள்தான்... அதுவும் ஆபரேஷன் தியேட்டரில்தான்... அனஸ்தீசியா கொடுத்து. எனக்கும் முப்பது வருடங்களுக்கு முன்பே அப்படித்தான். அப்போது என்னிடம் சில பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். "நாவிதர் என்று ஒருவர் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்.. அவர்தான் அனுபவ முறையில் செய்வார்... ஓரணா, இரண்டணா.. காலமெல்லாம் போய் எம்மவனுக்கு கடைசியா அஞ்சு ரூபாய் வரை வாங்கினார்கள். இப்போது அவங்கல்லாம் இல்லை... இல்லாட்டி இதுக்கு போய் தண்டமா ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்களா? கொஞ்சம் பொறுமையா தேடிப்பார்த்திருக்கலாம்".

மீண்டும்... மோதினார்...
பெண்கள் இறந்தால் அவர்களை யார் கழுவுவார்கள்? என் அத்தை இறந்த போது, என் அம்மா, அந் அம்மாவின் தங்கை, என் அம்மாவின் தோழிகள் இருவர், என் அத்தையின் எதிர்த்த வீட்டுக்கார அம்மா... இங்கே மோதினாருக்கு என்ன வேலை?

முஸ்லிம்கள் மீது பொய் சொல்வதே பிழைப்பாக வைத்துக்கொண்டு அலைவதால் ஒரு லாபமும் இல்லை சகோ.கும்மி.

மேலும் சொல்கிறேன். நான் கல்கத்தா அலிப்பூர் ஜூவில் ஒரு வெள்ளைப்புலி பார்த்தேன். வெள்ளை எலி கூட பார்த்தேன். அப்புறம் வெள்ளைக்காக்கையும் உண்டு அங்கே. அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து புலிகளும் எலிகளும் காக்காவும் வெள்ளை நிறம் கொண்டவை என்று நீங்கள் சொல்வதை கொண்டாட என்றே ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. சொல்லுங்கள் சகோ. கும்மி.

"என் பதிவை விட உங்கள் பின்னூட்டங்களே சூப்பர் கும்மி" என்று சகோ.ஜோதிஜி நாளை புளங்காகிதம் அடைந்து பூரித்துப்பாய் சொல்லிவிடுவார் பாருங்களேன். நீங்க அடிங்க ஜி உங்க கும்மிய...! அதுதானே உங்க வேலை..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.கும்மி தவிர

மற்ற அனைத்து சகோதரர்களுக்கும்:


கும்மி said... January 18, 2011 7:07 PM
//தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது.//

சகோ.கும்மி கூறியதில் இது சத்தியமான உண்மை...

தமிழக அரசு என்று ஒன்று எப்போது வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. முஸ்லிம்களிடத்தில் சாதிபாகுபாடும் சாதி ரீதியான ஒடுக்குமுறையும் ஏளனமும் உள்ளதாக கும்மி கூறுவதை ஏற்றுக்கொண்டவர்கள்... தயவுசெய்து அதற்கு காரணமான தமிழக அரசுக்கெதிராய் போராட்டம் புரியும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாவிட்டால் நாங்கள் பல ஆண்டுகளாய் முஸ்லிம்களிடத்தில் இல்லாத--அவர்கள் நடைமுறைப்படுத்தாத சாதியை புதிதாய் உருவாக்கும் அரசுக்கெதிராய் அவற்றை நீக்க வேண்டி கோரிக்கை வைத்து செய்யும் நெடுநாளைய போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

தட்ஸ் ஆல் யூவர் ஆனர்ஸ்...!

குடுகுடுப்பை said...

பின்னூட்டம் இடும் அளவுக்கு என்னிடம் தகவல் இல்லை. கீழக்கரை காயல் முஸ்லீம்கள், மூர் என்றழைக்கப்படும் அரபி வழிவந்தவர்கள் என்று அறிகிறேன்.

ஜோதிஜி said...

முஹம்மத் ஆஷிக்

இதென்ன இவ்வளவு ஆச்சரியப்படுத் தீ ட்டிங்க.

நந்தவனம், கண்ணிவெடி ச்சும்மா போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கீட்டிங்க.

ஆனால் நான் கும்மியை எதற்காக பாராட்டினேனோ அதை விட பல மடங்கு நீங்க கொடுத்த இந்த வரிகளுக்காக பாராட்டத் தோன்றுகின்றது.

அவர்கள் நடைமுறைப்படுத்தாத சாதியை புதிதாய் உருவாக்கும் அரசுக்கெதிராய் அவற்றை நீக்க வேண்டி கோரிக்கை வைத்து செய்யும் நெடுநாளைய போராட்டங்களில்............

இந்த இடத்தில் ஒரு விசயம். இப்ப உள்ள அரசியல் வியாதிகள் எல்லோருமே மதநல்லிணக்கம் என்கிறார்கள். ஏன் ஒருத்தர் கூட குழந்தைக பள்ளியில் சேரும் போது அவங்க ஜாதிச் சான்றிதழ் கொடுக்க விரும்பாவிட்டாலும் வெறுமனே FC & BC AND OTHERS என்று எழுதிக் கொள்ள வேண்டியது தானே. கமல்ஹாசன் போலவே நானும் போராடி பார்த்து விட்டு போங்கடா நீங்களும் உங்க கொள்கைகளும் என்று நொந்து போயி இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி தம்பி ரோஸ்விக் சொன்ன மாதிரி ஆண்ட கதையை நோண்டி நொங்கு எடுத்து பார்க்கலாம்ன்னு எழுதிப் பழகிக் கொண்டுருக்கின்றேன்.

அப்புறம் உங்க தகவலுக்காக ராஜநடராஜன் திருக்குற்ள் மாதிரி கொடுத்து இருக்காரு பாத்தீகளா?
அவரு இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்துக்கிட்டுருக்காரு. நான் வாழவில்லை. அது ஒன்னு தான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்யாசம். மொத ரெண்டும் எனனைப் பற்றி சொன்ன மாதிரி. உங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துரைக்கு நன்றி நண்பா.

ஜோதிஜி said...

ஜமாத் தலைவரும்,பெரும் கோடீஸ்வரருமான மதிப்பிற்குறிய.a.k.m.ஜமால் அவர்கள்.இன்னும் எத்தனையோ உதாரணம் மாநில அளவிலும் உண்டு.

அப்துல்லா திருப்பூரில் ஸ்டார் நிட்டிங் என்றொரு பெரிய வணிக நிறுவனம் உண்டு. நான்திருப்பூர் வந்த போது பெரியவர் இருந்தார். நீங்கள் குறிப்பிட்ட படி என்னை ஆச்சரியப்படுத்திய பெரிய மனிதர் அவர். மதங்களை கடந்து வாழ்ந்து காட்டி மகானுக்குச் சமமாக இருந்தார். ஏறக்குறைய இன்று அவருடைய தலைமுறைகளும் ஓரளவிற்கு அவரின் பெயரை காப்பாற்றும் அளவிற்குத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். மற்றொரு ஆச்சரியம் அவர் இறந்த போது சகல மத மக்களும், கடை அடைப்பு செய்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். நான் பார்த்தவரையிலும் போற்றக்கூடிய வகையில் வாழ்ந்தவர்.

ஜோதிஜி said...

குடுகுடுப்பை உங்கள் தகவலுக்கு நன்றிங்க.

செந்தில் உங்கள் அக்கறைக்கு நன்றி.

வாங்க இஸ்மத்

ஒவ்வொரு பதிவுக்கும் அப்துல்லா உள்ளே வந்தா நம்ம இடம் வெற்றிடமாக ஆகி விடும் என்பதற்கு இதில் வந்த ரிஷபன் முதல் உங்கள் கருத்து வரைக்கும் என்னை யோசிக்க வைக்கின்றது.

ஜோதிஜி said...

தெகா நீங்க போன பதிவுக்கு சொன்ன பதிலை (படிக்க விரும்ப மாட்டாங்க) அதற்கு நம்ம கும்மியாரு வேறு லைக்றேன் என்று சொல்லியதற்கும்

பாருங்க இப்ப எத்தனை வந்து விழுந்து கொண்டேயிருக்கு.

மாற்றுக் கருத்துக்கள் இருந்த போதிலும் அணைவரும் கடைபிடித்த நாகரிகம் பாராட்டுதலுக்குரியது.

suneel krishnan said...

பின்னூட்டங்கள் தகவல் களஞ்சியம் ,நன்றி ஜோதிஜி ..சிறப்பு நன்றிகளுக்கு உரியவர்கள் அப்துல்லா ,கும்மி

http://thavaru.blogspot.com/ said...

அடுத்ததொடர் எப்பொழுது அன்பின் ஜோதிஜி...

உமர் | Umar said...

மோதினாரை ஒருமையில் அழைப்பதில்லை என்று கூறிய நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நண்பர் 'உங்களில் ஒருவனிடம்' கேட்ட கேள்வி ஒன்றினை மற்றவர்களிடமும் கேட்க விரும்பிகின்றேன். உங்களுக்கு முந்தையத் தலைமுறையினரும் மோதினாரை ஒருமையில் அழைக்காமல் இருந்தார்களா? அப்படி இருந்தால், உங்கள் ஊர் பெயரை வெளியிடுங்கள். சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கான முன்னோடி ஊராக உங்கள் ஊரைக் காட்டி, இன்றும் மோதினாரை மதிக்காமல் நடக்கும் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

அதேபோல் மோதினாருக்கான மாதச் சம்பளம் உங்கள் ஊரில் எவ்வளவு என்பதையும் தெரியப்படுத்துங்கள். அவரது குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான சம்பளமாக இது இருக்கின்றது, மற்ற ஊர்களில் ஏன் இப்படி இல்லை என்று கேட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

// நான் ஒவ்வொரு வருடம் போகும்போதும் பாபநாசத்தில் மோதினார் மாறிக்கொண்டே இருக்கிறார். கேட்டால் வேறு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டது/கடை வைத்துவிட்டார் இப்படி காரணங்கள். // என்று முகம்மத் ஆஷிக் கூறியுள்ளார். இது உண்மை. இவர்கள் கொடுக்கும் சம்பளம் போதாமல், கூடுதல் சம்பளம் கிடைக்கும், மரியாதை கிடைக்கும் வேறு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் வேலையை விட்டு செல்லும் மோதினார் சம்பளக் குறைவு காரணமாக வேலையை விட்டு விட்டார் என்று கூறினால், அடுத்து வரக்கூடிய கேள்வி என்னவென்று ஜமாஅத் தலைவருக்கு தெரிந்திருக்கும். அதற்குரிய பதில்தான் கடை வைத்துவிட்டார் என்று கூறுவது.

// "நாவிதர் என்று ஒருவர் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்.. அவர்தான் அனுபவ முறையில் செய்வார்... ஓரணா, இரண்டணா.. காலமெல்லாம் போய் எம்மவனுக்கு கடைசியா அஞ்சு ரூபாய் வரை வாங்கினார்கள். இப்போது அவங்கல்லாம் இல்லை... இல்லாட்டி இதுக்கு போய் தண்டமா ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்களா? கொஞ்சம் பொறுமையா தேடிப்பார்த்திருக்கலாம்".//

மோதினார் /நாசுவன்/நாவிதர் வாழ்ந்த சமூகச்சூழலை வாசிப்பவர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகின்றேன்.

நான் பொய் கூறியதாகவும், முகம்மத் ஆஷிக் கூறியுள்ளார். மேற்கண்ட அவரது கூற்றுக்களின் அடிப்படையில் நான் சொன்ன பொய்யினை கண்டுபிடித்து புளகாங்கிதம் அடைந்து கொள்ளவும்.

உமர் | Umar said...

மோதினார் பற்றி பேசியவர்கள் ஏன் அலாக்கரை மக்களைப் பற்றி பேசவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை, அவர்களைப் பற்றிய விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். முகம்மத் ஆஷிக் அதிராம்பட்டிணம் சென்றிருந்ததாகக் கூறியுள்ளார். நண்பா, அப்படியே தெற்கே பயணம் செய்தால் மல்லிப்பட்டிணம், கட்டுமாவடி, கிருஷ்னாஜிப்பட்டிணம், மணமேல்குடி, அம்மாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஊடாக தொண்டி வரை அலாக்கரை மக்கள் மீதான பாகுபாட்டை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் நண்பர் 'இப்படிக்கு நிஜாம்' கோட்டைப்பட்டிணம்காரர்தான். அவ்வொல்ட்ட பலக்கம் குடுத்தா, தெரிஞ்சிரப் போவுது. (அவ்வொல்ட்ட - அவர்களிடம், பலக்கம் - பேச்சு: இவை அப்பகுதி பேச்சு வழக்கு). அலாக்கரை மக்களிடம் மற்றவர்கள் சம்பந்தம் வைத்துக்கொள்வார்களா என்று கேட்டுப்பாருங்கள். ஒரு தடவை அப்படியே ஜாலியா போயிட்டு வாங்க. மணமேல்குடி பக்கத்துல கோடிக்காட்டுல டால்பின் பாத்துட்டு வரலாம். அப்படியே அலாக்கரை மக்களின் நிலையையும் அறிந்து வரலாம்.

ஒரு தவறு நிகழ்ந்து, அதனை சரி செய்ய விரும்பினால், முதலில் தவறு நடைபெற்றிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படி ஒத்துக்கொண்டால்தான், அது என்ன வகையான தவறு, அதை எப்படி சரி செய்வது என்னும் வழிமுறைப் புலப்படும். அதை விடுத்து தவறே நடைபெறவில்லை என்று கூறிக்கொண்டிருந்தால் அத்தகைத் தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இஸ்லாமியர்களிடையே நிலவும் பாகுபாட்டினை நான் சுட்டிக்காட்டியுள்ளதே அத்தகைய பாகுபாடுகள் களைய வேண்டும் என்னும் நோக்கில்தான். உணர்வதும் புரிவதும் உங்கள் பார்வையில்.

உமர் | Umar said...

மாற்றுக் கருத்தை முன்வைக்கும்போது அது இரு நபர்கள் நடத்தும் உரையாடல் என்னும் அளவிலேயே நான் பார்க்கின்றேன். அதனால்தான், கருத்துக்கு அப்பாற்ப்பட்டு சில நேரங்களில் கிண்டலும் செய்வது உண்டு. அப்துல்லா சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டாலும், ஒன்றில் மட்டும் மாறுபட்டேன். அதனை கருத்தாகத் தெரிவித்தேன். அவரிடமும் கிண்டலாகத்தான் பேசியுள்ளேன். இதற்கு முன் ஒரு முறை மட்டுமே அவரோடு பின்னூட்டங்களில் உரையாடியுள்ளேன். (அப்பொழுது அவர் பல்பு கொடுத்தது வேறு விஷயம்). அது போலவே, இங்கிருக்கும் மற்ற நண்பர்களோடு உரையாடுகின்றேன். ஒவ்வொரு பின்னூட்டக்களத்தையும் போர்க்களமாக நினைத்து சண்டையிட வருபவர்களின் கண்களுக்கு, நான் உரையாடுவது வேறு விதமாகத் தெரிந்தால், தவறு என்மேல் இல்லை.

உமர் | Umar said...

இஸ்லாமியர்களிடையே பாகுபாடு இல்லை என்று கூறுபவர்கள், தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம்களுக்கிடையே இருக்கும் பாகுபாட்டை எப்படி சரிசெய்வது என்றும் கூறலாம். போரா முஸ்லிம்களின் பள்ளியில் மற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் வாய்ப்பு ஏற்பட இன்னும் எத்தனைத் தலைமுறை காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லுங்களேன். தொழுகை நடத்தியபின்புதானே, திருமணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியும். சமத்துவத்தைப் பற்றியெல்லாம் பேச முடியும்.

உமர் | Umar said...

2004 ல் ஏற்பட்ட சுனாமியால் பலரும் உயிரிழந்தனர். பேரிழப்பு ஏற்பட்டது. அனைவருமே வருந்தினர். ஆனால், ஜெகதாப்பட்டினத்தில் இருக்கும் மக்கள் மட்டும் வருத்தப்படவில்லை. மாறாக வேறொரு உணர்வில் இருந்தனர். அங்கு சுனாமியால் பாதிப்பு இல்லை என்பதால் அல்ல. அதற்கான விடை ஜெகதாப்பட்டினம் அலாக்கரைக்கும் நாகப்பட்டிணம் கீச்சாங்குப்பத்துக்கும் உள்ள தொடர்பு புரிந்தவர்களுக்கு தெரியும். அந்தத் தொடர்பு தெரிந்தால், பாகுபாடு எந்தளவிற்கு வேரூன்றியுள்ளது என்று தெரியும். (சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கீச்சாங்குப்பத்தை சார்ந்தவர்கள்.)

ஜோதிஜி said...

அதற்கான விடை ஜெகதாப்பட்டினம் அலாக்கரைக்கும் நாகப்பட்டிணம் கீச்சாங்குப்பத்துக்கும் உள்ள தொடர்பு புரிந்தவர்களுக்கு தெரியும்

கும்மியாரே போற போக்குல அள்ளித் தெளித்தது போல இருக்கக்கூடாது. இதுவொரு சென்சிட்டிவ் சமாச்சாரம்.
விளக்கம் தேவை.

உமர் | Umar said...

//இதுவொரு சென்சிட்டிவ் சமாச்சாரம்.//

அதனால்தான் விளக்கமாக சொல்லவில்லை. பாகுபாடே கிடையாது என்று கூறுபவர்களும், உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்களும் அப்பகுதி மக்களிடம் கேட்டு அறிந்துகொள்ளட்டும். அப்பகுதியில் வாழ்ந்த, வாழும் மக்களால்தான் இந்த வலிகளை விவரிக்க முடியும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அனைவர் மீதும் சாந்தி நிலவுவதாக.
அப்ஜெக்ஷன்ஸ் யுவர் ஆனர்...

//நான் பொய் கூறியதாகவும், முகம்மத் ஆஷிக் கூறியுள்ளார். மேற்கண்ட அவரது கூற்றுக்களின் அடிப்படையில் நான் சொன்ன பொய்யினை கண்டுபிடித்து புளகாங்கிதம் அடைந்து கொள்ளவும்.//--இதில் நான் சொன்னவை பொய்யா.. கும்மி சொன்னது பொய்யா?

'இப்படிப்பட்டவர்கள்' ஏதோ கூட்டம் கூட்டமாக ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம்கள் அடக்கி வைத்து இருப்பதுபோல ஒரு சாதி என்ற மாயையை உருவாக்கினார். ஆனால், "அப்படியில்லை... டைடல் பார்க்கில் வறுமைக்கோட்டுக்கு(!?)கீழே வேலைபார்த்த ஒரு கணிணி மென்பொருள் வல்லுநர் தன் ஐம்பதாயிரம் ரூபாய் மாதச்சம்பளம் போதாமால் அதிகமாக டாலர்களில் சம்பளம் வாங்க அமெரிக்கா போவது போலத்தான் மோதினார்களும் வருகிறார்கள் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். இதுபோன்றுதான் நாவிதர்களும் காலப்போக்கில் முன்னேறி காணாமல் போனவர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஜகாத் பெற்றவர்கள் பின்னர் தனியாக அதே ஊரில் கடை திறந்து மக்களை கவர முடிவதும் பின்னர் தானே அதே போன்று ஜகாத்தை புதிய மோதினாருக்கு வழங்கவும் முடிவது எதைக்காடுகிறது?

ஜகாத் பெற்ற பணத்திலேயே தன் மகனை உயர் கல்வி படிக்க வைத்து பின்னர் அவர் சம்பளத்தில் கால்நீட்டி சாப்பிட்டுக்கொண்டே கைநீட்டும் பிற ஏழைகளுக்கு ஜகாத் வழங்குவது எதைக்காட்டுகிறது?

அனா காலங்களில் அனாக்களில்தான் சம்பளம். ரூபாய் காலங்களில் ரூபாய்களில். எந்த வேலைக்கு என்ன சம்பளம் என்று கும்மிக்கு தெரியாமல் இருக்கலாம்... ஆனால், மற்றவர்களுக்கு தெரியுமே என்று கும்மி நினைத்தால் இப்படி அர்த்தம் இன்றி பிதற்றி இடங்களை இட்டு நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

உமர் | Umar said...

//இதுபோன்றுதான் நாவிதர்களும் காலப்போக்கில் முன்னேறி காணாமல் போனவர்கள். //

ஆமாம், அப்படியே Team Lead, Project Lead, Project Manager, Project Director, CTO, CEO என்று முன்னேறினார்கள் என்றுதான் நீங்கள் நினைத்துக்கொள்ளவேண்டும். அந்தத் தொழிலே வேண்டாம் என்று விட்டுவிட்டு வேறு தொழிலில் சென்று முன்னேறினார்கள் என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி நினைத்தால் நீங்களும், இஸ்லாமியர்களின் சமத்துவத்திற்கு எதிராக பேசுவதாக ஆகிவிடும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தொடர்ச்சி...

//கும்மி said...இஸ்லாமியர்களிடையே பாகுபாடு இல்லை என்று கூறுபவர்கள், தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம்களுக்கிடையே இருக்கும் பாகுபாட்டை எப்படி சரிசெய்வது என்றும் கூறலாம்.January 19, 2011 1:25 PM //--இப்படி இப்போது கூறுகிறாரா...

முன்னர் என்ன கூறினார்...?

//கும்மி said...
இப்பொழுது தமிழ் முஸ்லிம்கள், உருது முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்வதும், பிறக்குழுக்கள் இடையேயும் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம், முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றதினால் ஏற்பட்ட மாற்றங்கள். இஸ்லாத்திற்கும் இத்தகைய மாற்றங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
January 18, 2011 7:12 PM //

---தான் கூரியதிலேயே என்னே ஒரு முரண்பாடு...!!! இதிலே...இஸ்லாமிய கல்வியறிவு இன்றி வேறேது? இது கிடக்கட்டும்... முதலில்...

டிஸ்கியில் அவர் என்ன சொன்னார்...?
//டிஸ்கி 2: நான் இங்கு தமிழக முஸ்லிம்களைப் பற்றியும், சில இடங்களில் இஸ்லாமிய வரலாற்றையும் பேசுகின்றேன். இஸ்லாத்தைப் பற்றி பேசவில்லை. //

அதில்.. என்ன சொல்கிறார்..?
//இஸ்லாத்திற்கும் இத்தகைய மாற்றங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.// என்று இஸ்லாமை இழுக்கிறார்..!

எந்த மொழியும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை என்பதுதானே இஸ்லாம்? வெவேறு மொழி பேசுபவர்கள் உறவாட வேண்டாம் என்று இஸ்லாம் எங்காவது சொல்லி இருக்கிறதா? இதை விட்டுவிடுவோம்... டிஸ்கியில் இருந்து தடம் மாறாமல் இருக்க முடியாதென்றால் அப்புறம் எதற்கு வெட்டி பந்தா டிஸ்கி?

இவர் விவாத நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் மட்டுமின்றி பதிவுலகின் மாபெரும் பொய் புளுகுனி. இவருடன் இனி எவருமே விவாதிப்பது வெட்டி வேளை.

இனி சகோ.ஜோதிஜி கூட இவருடன் சேர்ந்து கும்மி அடிப்பாரா என்பது சந்தேகமே.

உமர் | Umar said...

//முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றதினால் ஏற்பட்ட மாற்றங்கள்.//

"இஸ்லாமிய கல்வியறிவு" என்பது மிகவும் சிறப்பான புரிதல்.

// இஸ்லாத்திற்கும் இத்தகைய மாற்றங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை//

பள்ளிக்கல்வித் தாண்டாத தலைமுறை இருந்தவரை, இவை நடைபெறவில்லை. இப்பொழுது அனைவருமே கல்லூரி வரையிலும் கல்வி கற்று வேலைக்குச் செல்கின்றனர். அதன்மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தனிப்பட்ட குடும்பங்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம். இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. இதுதான் சொல்லியிருப்பது.

இனிமேல் வேண்டுமானால் இஸ்லாம் என்னும் வார்த்தையை எங்கெங்கு பயன்படுத்தலாம், எத்தனை முறை பயன்படுத்தலாம் என்று முகம்மத் ஆஷிக் அவர்களிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு அதன்படி செயல்படலாம்.

//இவர் விவாத நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் மட்டுமின்றி பதிவுலகின் மாபெரும் பொய் புளுகுனி.//

கலைஞருக்கு அடுத்த பாராட்டு விழாவில் என்ன பட்டம் கொடுப்பது என்று தெரியவில்லையாம். நீங்கள் சென்று ஆலோசனைக் கூறலாம்.

//வெவேறு மொழி பேசுபவர்கள் உறவாட வேண்டாம் என்று இஸ்லாம் எங்காவது சொல்லி இருக்கிறதா?//

மனிதர்களுக்கிடையே நிலவும் வேறுபாட்டை நான் பேசியுள்ளேன். இஸ்லாம் அப்படி சொன்னது என்று சொல்லியுள்ளேனா? அய்யய்யோ இங்கேயும் ஒரு தடவை இஸ்லாம் அப்படின்னு ஒரு வார்த்தையை அடிப்படைவாதி ஆஷிக்கிடம் உத்தரவு வாங்காமல் பயன்படுத்திவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். (அவர் தன்னை அடிப்படைவாதி என்று அழைத்துக்கொள்ளவே விரும்புகின்றார். அவரது விருப்பப்படிதான் அழைத்துள்ளேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்)

.

Rajan said...

தளத்தில் எனது முதல் பின்னூட்டமென்று நினைக்கிறேன்!

ஜீ ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் போடுங்கஜி!

Rajan said...

பங்காளி கும்மி எங்கன்னு தொளாவிட்டு இருந்தா அண்ணாத்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் லெவலுக்கு பிரிச்சு மேஞ்சுட்டு இருக்கார்!

உமர் | Umar said...

//ஜீ ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் போடுங்கஜி!
//

ஓ மகசீயா! ஓ மகசீயா!
நாக்க முக்க நாக்க
ஓம் ஷக்கலக்க
ரண்டக்கா

Rajan said...

//'இப்படிப்பட்டவர்கள்' ஏதோ கூட்டம் கூட்டமாக ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம்கள் அடக்கி வைத்து இருப்பதுபோல ஒரு சாதி என்ற மாயையை உருவாக்கினார்.//

ஒண்ணுன்னு சொன்னா இவரே வாண்ட்டடா 100ங்கிறார்! ;-)

Rajan said...

//டிஸ்கியில் அவர் என்ன சொன்னார்...?
//டிஸ்கி 2: நான் இங்கு தமிழக முஸ்லிம்களைப் பற்றியும், சில இடங்களில் இஸ்லாமிய வரலாற்றையும் பேசுகின்றேன். இஸ்லாத்தைப் பற்றி பேசவில்லை. //

அதில்.. என்ன சொல்கிறார்..?
//இஸ்லாத்திற்கும் இத்தகைய மாற்றங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.// என்று இஸ்லாமை இழுக்கிறார்..!//

சரிங்க அவர்தானே டிஸ்கி போட்டார்! நான் கேக்குறேன் இப்ப சொல்லுங்க!

Rajan said...

//இது ஏற்கனவே கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட போர்க்களம் என்று.நான்தான் இது தெரியாமல், தேவியர் இல்லம் என்பது 'பூ பூத்த நந்தவனம்' என்று எந்த நதிமூலமும் பார்க்காமல் நம்பி, நேற்று நுழைந்து விட்டேன். மன்னிக்கவும்.//

நெஞ்சுக்கு நீதி முன்னுரை கணக்கா கீதுப்பா! என்னா சொற்சித்திரம்!

கல்வெட்டு said...

.

அப்துல்லா ஒரு அப்துல்காலாம் மாதிரி. அவர் பதிவிலேயே முகம்மது எனது வழி என்று சொல்லிவிட்டார். நம்பிக்கையாளரான அவரிடம் முகம்மது அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர் வழி வங்த மதம், குரான், ஹதீஸ் என்று பேசுவது நாகரீகம் இல்லாதது. அதனால் பேசுபொருள் தாண்டி நான் வேறு கேள்வி கேட்கவில்லை. மேலும் புதுக்கோட்டை போன்ற வட்டார இஸ்லாமிய வரலாறு எனக்குத் தெரியாது.

***

ஒரு மனிதன் மனிதத்தன்மையோடு இருக்க அவனுக்கு எந்த மதமும் தேவை இல்லை. அப்படி மதம் வேணும் அப்பதான நான் மனிதனாக இருப்பேன் என்பவர்கள், "கஞ்சா அடிக்காட்டி கைகால் நடுங்கும்" என்று இருக்கும் போதை அடிமைகளுக்குச் சமமானவர்கள். அவர்களை காயப்போட வேறு பதிவுகளில் இருக்கும் உரையாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

**

செங்கொடி என்பவர் கூட எழுதுகிறார். அதை புக்காகப் போடலாமே? ஏன் முயற்சிக்கக்கூடாது? செங்கொடி போன்றவர்களின் எழுத்தை புக்காகப் போட்டால், அடுத்த நிமிடம் கடை சூறையாடப்படலாம். பர்தா பற்றிய முஸ்லீம் பெண்களின் மாற்றுக் குரலையே பதிவு செய்யவிடவில்லை.

***

இங்கே பேசப்படுவது இந்தியாவில் (தமிழகத்தில்) இஸ்லாத்தின் நதிமூலம். அந்த பேசு பொருளில் பேசலாம். எல்லாம் அல்லா செய்வான், இஸ்லாத்தில் சொல்லியிருக்கா? என்ற மத நல்லது / கெட்டது தவிர்க்கலாம்.

1.எப்படி உஸ்லாம் தமிழகத்தில் வந்தது?
2.யார் யார் (எப்பகுதி மக்கள்/ எந்த சனாதன சாதி மக்கள்) முதலில் மதம் மாறினார்கள்?
3.ஏன் மாறினார்கள்?
4.மாறிய நோக்கம் (சாதிக் கொடுமை) மாறியிருக்கிறதா?
5. சந்தனக்கூடு தொடங்கி, சமாதி வழிபாடுவரை ஏன் இப்படி பிரிந்து உள்ளார்கள்?

என்ற அளவில் பேசலாம். எதற்கெடுத்தாலும் அல்லா சொன்னாரா என்றும் புத்த்கத்தில் இல்லை அல்லது இருக்கு என்ற மதவாதக் குப்பைகளை ஒதுக்கிவிட்டு , "அந்த மதம் அதை நம்பி மாறியவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுத்துள்ளதா?" என்று சீர்தூக்கிப் பார்க்கலாம்.


இதையெல்லாம் மதவாதிகள் செய்யமாட்டார்கள். கசாப்புக்கடைக்காரர் எப்படி ஆட்டுக்கு வலிக்குமா என்று சிந்திப்பார்? வெளியில் இருந்துதான் கேள்வி கேட்கமுடியும்.

***

கும்மி சொன்னபடி "முதலில் தவறு உள்ளது, ஆம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது" என்ற அளவிலாவது பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மாற்றுப் பார்வைகளுக்கு வழியுண்டு. அல்லாவவை நம்பியவர்கள் மத்தியில்ல் பாகுபாடே இருக்க முடியாது என்று தீர்மானமாக‌ நம்பிவிட்டால், மேலே பேச என்ன உள்ளது. எல்லாம் சரி மயம்தான். சியா,சுன்னி பிரிவுகள் தாண்டி இன வேறுபாடுகள் , நிற வேறுபாடுகள் அரபியர்களிடமும் உண்டு. காட்டரபி என்று சொல்லப்படும் கறுப்பி அரபிகளுக்கும் வெள்ளை அரபிகளுக்குமே ஒத்துப்போகாது. எந்த மதமும் மக்களை இணைப்பதை முதல் அஜெண்ண்டாவாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. :-(((

.

உமர் | Umar said...

//சந்தனக்கூடு தொடங்கி, சமாதி வழிபாடுவரை ஏன் இப்படி பிரிந்து உள்ளார்கள்//

இதுவும் தொட நினைத்து நீண்ட பின்னூட்டம் அடித்ததில் விட்டுவிட்ட விஷயம். நினைவூட்டியதற்கு நன்றி கல்வெட்டு.

இந்துக்களாக இருந்து மாறியவர்கள் இந்துக்களின் பழக்கவழக்கங்களை அப்படியே தொடர்வதுதான் இந்த விஷயங்கள். குலதெய்வ வழிபாட்டின் நீட்சிதான் தர்காக்கள். தேரோட்டம்தான் சந்தனக்கூடாக மாறியுள்ளது. இன்றும் தீமிதிக்கும் இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். திருச்சி அருகே இருக்கும் பிரான்மலையில் தீ மிதிப்பார்கள். காவடி எடுக்கும், அலகு குத்திக்கொள்ளும் முஸ்லிம்களும் உள்ளனர்.

--
நான் கூறியிருக்கும் இந்த செயல்கள் அனைத்து முஸ்லிம்களும் செய்கின்றார்கள் என்று நான் கூறவில்லை. முந்தைய பழக்க வழக்கங்களை விட முடியாதவர்களும் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இவற்றைக் கூறியுள்ளேன்.

----
இங்கிருக்கும் முஸ்லிம்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் சில RSS அடிவருடிகளால் கூறப்படுகின்றது. இந்த மண்ணின் மைந்தர்கள்தான் முஸ்லிம்களாக மாறியுள்ளனர் என்பதற்கும் இந்த செயல்கள் அடையாளங்கள்.

.

கல்வெட்டு said...

.

அப்துல்லா ஒரு அப்துல்காலாம் மாதிரி. அவர் பதிவிலேயே முகம்மது எனது வழி என்று சொல்லிவிட்டார். நம்பிக்கையாளரான அவரிடம் முகம்மது அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர் வழி வங்த மதம், குரான், ஹதீஸ் என்று பேசுவது நாகரீகம் இல்லாதது. அதனால் பேசுபொருள் தாண்டி நான் வேறு கேள்வி கேட்கவில்லை. மேலும் புதுக்கோட்டை போன்ற வட்டார இஸ்லாமிய வரலாறு எனக்குத் தெரியாது.

***

ஒரு மனிதன் மனிதத்தன்மையோடு இருக்க அவனுக்கு எந்த மதமும் தேவை இல்லை. அப்படி மதம் வேணும் அப்பதான நான் மனிதனாக இருப்பேன் என்பவர்கள், "கஞ்சா அடிக்காட்டி கைகால் நடுங்கும்" என்று இருக்கும் போதை அடிமைகளுக்குச் சமமானவர்கள். அவர்களை காயப்போட வேறு பதிவுகளில் இருக்கும் உரையாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

**

செங்கொடி என்பவர் கூட எழுதுகிறார். அதை புக்காகப் போடலாமே? ஏன் முயற்சிக்கக்கூடாது? செங்கொடி போன்றவர்களின் எழுத்தை புக்காகப் போட்டால், அடுத்த நிமிடம் கடை சூறையாடப்படலாம். பர்தா பற்றிய முஸ்லீம் பெண்களின் மாற்றுக் குரலையே பதிவு செய்யவிடவில்லை.

***

இங்கே பேசப்படுவது இந்தியாவில் (தமிழகத்தில்) இஸ்லாத்தின் நதிமூலம். அந்த பேசு பொருளில் பேசலாம். எல்லாம் அல்லா செய்வான், இஸ்லாத்தில் சொல்லியிருக்கா? என்ற மத நல்லது / கெட்டது தவிர்க்கலாம்.

1.எப்படி உஸ்லாம் தமிழகத்தில் வந்தது?
2.யார் யார் (எப்பகுதி மக்கள்/ எந்த சனாதன சாதி மக்கள்) முதலில் மதம் மாறினார்கள்?
3.ஏன் மாறினார்கள்?
4.மாறிய நோக்கம் (சாதிக் கொடுமை) மாறியிருக்கிறதா?
5. சந்தனக்கூடு தொடங்கி, சமாதி வழிபாடுவரை ஏன் இப்படி பிரிந்து உள்ளார்கள்?

என்ற அளவில் பேசலாம். எதற்கெடுத்தாலும் அல்லா சொன்னாரா என்றும் புத்த்கத்தில் இல்லை அல்லது இருக்கு என்ற மதவாதக் குப்பைகளை ஒதுக்கிவிட்டு , "அந்த மதம் அதை நம்பி மாறியவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுத்துள்ளதா?" என்று சீர்தூக்கிப் பார்க்கலாம்.


இதையெல்லாம் மதவாதிகள் செய்யமாட்டார்கள். கசாப்புக்கடைக்காரர் எப்படி ஆட்டுக்கு வலிக்குமா என்று சிந்திப்பார்? வெளியில் இருந்துதான் கேள்வி கேட்கமுடியும்.

***

கும்மி சொன்னபடி "முதலில் தவறு உள்ளது, ஆம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது" என்ற அளவிலாவது பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மாற்றுப் பார்வைகளுக்கு வழியுண்டு. அல்லாவவை நம்பியவர்கள் மத்தியில்ல் பாகுபாடே இருக்க முடியாது என்று தீர்மானமாக‌ நம்பிவிட்டால், மேலே பேச என்ன உள்ளது. எல்லாம் சரி மயம்தான். சியா,சுன்னி பிரிவுகள் தாண்டி இன வேறுபாடுகள் , நிற வேறுபாடுகள் அரபியர்களிடமும் உண்டு. காட்டரபி என்று சொல்லப்படும் கறுப்பி அரபிகளுக்கும் வெள்ளை அரபிகளுக்குமே ஒத்துப்போகாது. எந்த மதமும் மக்களை இணைப்பதை முதல் அஜெண்ண்டாவாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. :-(((

.

ஜோதிஜி said...

ராஜன் நான் ஈழம் தொடர் எழுதிக் கொண்டுருந்த போது வந்து சேர்ந்தீங்க. ஞாபகம் இருக்கா? என்னுடைய தளத்தோடு இணைந்த இந்த முகத்தை பார்த்து யாருடா என்று உங்க தளத்துக்கு வந்த போது ஒரு கதக்களியே நடந்து கொண்டுருந்து.

ஆனால் இப்ப என்னை நண்பர் ஆஷிக் தப்பாக புரிந்து கொண்டுருக்கும் போது நீங்க வேறு வந்து ஒரு கதக்களி ஆடுவது முறையா? தகுமா? அடுக்குமா?

பாட்டெல்லாம் போடமாட்டேன். உங்களை வாழ்த்திப் பா பாடினால் மறுபடியும் நண்பர் வார்த்தைகளால் வீளாசப் போகிறார்.

நண்பர் ஆஷிக் அவர்களே இதில் கொடுத்துள்ள கிளியனூர் இஸ்மத் கூறிய கருத்து தான் என்னுடைய கருத்தும். பாருங்க நம்ம அப்துல்லா எந்த அளவிற்கு எதார்த்தமாக எடுத்துக் கொண்டு உரையாடி உள்ளார். நீங்க என்னடான்னா சுப்ரீம் கோர்ட் வரைக்கும் கொண்டு போன மாதிரி யுவர் ஆனர் என்று பயமுறுத்தீட்டிங்க.

இதையொரு ஒரு உரையாடலாக எடுத்துக் கொள்ளுங்க. இன்னும் 10 வருடங்கள் கழித்து இதை படிப்பவர்களுக்கு நீங்களும் பல புரிந்துணர்வை உருவாக்கியவர் என்கிற விதத்தில் எனக்கு உங்கள் மேல் மரியாதை உண்டு.

இன்று தான் பல தளங்களில் நீங்க கொடுத்த உரையாடிய பல விமர்சனங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

@ சகோதரர் ஆஷிக் - அண்ணன் ஜோதிஜி அவர்களைத் தனிப்பட்ட முறையிலும் நான் அறிவேன்.அவர் மேல் நீங்கள் கொண்ட எண்ணம் தவறு என்பதை எந்த நிலையிலும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.அது எப்படி நட்பாக இருப்பவர்கள் கருத்திலும் ஒன்றாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகின்றீர்கள்?? பெரியாருக்கும்,ராஜாஜிக்குமான நட்பை நீங்கள் அறிந்ததில்லையா?? சங்கைக்குறிய முகமது நபி பெருமானுக்கும்,யூத ரபிகளுக்குமான நட்பை நீங்கள் படித்ததில்லையா?? திரு.கும்மியுடன் நட்பாக இருப்பதால் ஜோதிஜி இஸ்லாம் அல்லது ஆன்மீக எதிப்பாளரா?? சிறுபிள்ளைத்தனம் :(

எம்.எம்.அப்துல்லா said...

// அப்துல்லா அண்ணனுக்கு இந்த இடுகை மூலமா ஒரு வேண்டுகோள்! சூஃபிஸம் பத்தி நீங்க ஒரு தொடர் எழுதணும்

//

உங்கள் வேண்டுகோளுக்கு மிக்க நன்றி விந்தைமனிதன் அண்ணா. ஆனால் என்னைவிட இதை எழுத மிகவும் தகுதி படைத்தவர்கள் அண்ணன் கிளியனூர் இஸ்மத்தும், நண்பர் ஸ்வாமி ஓம்காரும்.அவர்கள் இதை செய்ய முடியாதபட்சத்தில் நான் எழுதுகிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.எம்.எம்.அப்துல்லா அவர்களே,
தங்கள் மீதும் மற்றும் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக.

//திரு.கும்மியுடன் நட்பாக இருப்பதால் ஜோதிஜி இஸ்லாம் அல்லது ஆன்மீக எதிப்பாளரா?? சிறுபிள்ளைத்தனம் :(//--மிக்க நன்றி சகோ. இதில்... எனக்கு முக்கியமான ஒரு சந்தேகம் உள்ளது. அதனால் விளந்ததுவே அனைத்தும்.

இங்கே ஒரு பதிவர், 'இஸ்லாத்தில் சாதி இல்லை' என்று ஒரு பதிவு எழுதுகிறார். அவரை நேர்மையாக ஆராய்ந்து சிறந்ததொரு பதிவு போட்டதற்காக பலர் பாராட்டுகின்றனர்.யாருக்குமே அதுவரை அவர் பதிலளிக்கவில்லை.

ஆனால், 'கும்மி' என்றொருவர் வருகிறார், பதிவை பாராட்டவோ பதிவரை பாராட்டவோ இல்லை. மறைமுகமாக பதிவில் குற்றம் இருப்பதை உணர்த்தி //மாலை வரேன்// என்று நான்கு வரியில் ஒரு பின்னூட்டமிட்டு சென்றுவிட, அவரை தாரை தப்பட்டைகளுடன் வரவேற்க ஆவலாய் உள்ளதாக கூறி மொத்தமாய் பன்னிரண்டு வரிகளில் இரண்டு பின்னூட்டம் இட்டு தன்னை ஒரு காதலியாக்கி, காதலனின் பின் மண்டை தரிசனத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். சரி, இது நட்பு என்கிறீர்கள்..! ஓகே. இருக்கட்டும்.

கும்மி வந்தார்... பதிவை பாராட்டவோ பதிவரிடம் அலாவலாவவோ இல்லை. மாறாக பதிவின் அடிப்படை மையப்பொருளையே குற்றம் கண்டுபிடிக்கிறார். பல பின்னூட்டங்களில்..! இப்போது பதிவர் என்ன சொல்கிறார். 'கும்மிராசா' என்று ஓடோடி வந்து மெய்மறந்து விடுகிறார். என்ன சொல்வது என்றே அவருக்கு தெரியவில்லை. ஏதேதோ சொல்கிறார். சரி. இதுவும் நட்பு.


கும்மி said... January 18, 2011 7:12 PM //ஜோதிஜி,
//இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி" என்கிற ரீதியில் இருந்த காரணத்தால்//
என்னும் உங்கள் பதிவில் இருக்கும் ஒரு வரிக்கு பதில் எழுதப்போய் பின்னூட்டம் இவ்வளவு நீண்டுவிட்டது.//--இதற்கு என்ன அர்த்தம்?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தொடர்ச்சி...

இப்போது இப்பதிவின் ஆசிரியர் என்ற முறையில் சகோ.ஜோதிஜி அவர்களுக்கு என் கேள்விகள்.

சகோ.கும்மி சொன்னது அனைத்தும் உண்மை என்றால் உங்கள் பதிவின் கருப்பொருள் பொய். பதிவு பொய் என்றால் கும்மி சொல்வது அனைத்தும் மெய்.

சகோ.கும்மி சொன்ன எதையும் நீங்கள் மறுக்காத நிலையில், ஏன் இப்படி 'இஸ்லாத்தில் சாதி இல்லை' என்று ஒரு பொய்யான ஒரு பதிவை எழுதினீர்கள்?

நீங்கள் எழுதிய பதிவு மெய் என்றால், சகோ.கும்மியின் பின்னூட்டங்களை மறுக்காதது ஏன்? தெரியாது என்றால், மறுத்தவர்களை கும்மியுடன் கூடி கும்மியடித்து எள்ளி நகையாடியது ஏன்?

உங்களிடம் எதற்காக இந்த இரட்டை நிலை? இரண்டு எதிரெதிர் கருத்துக்களையும் ஆதரிப்பது சுயநினைவுடன் இருப்பவருக்கு அழகா?

ராஜாஜியும் பெரியாரும் நண்பர்களே. ஓகே. ஆனால், பெரியார் எப்போதாவது, 'பார்ப்பணியம் சரியான கொள்கைதான்', என்று தன் தலித் தொண்டர்களை ஊருக்கு வெளியே தள்ளிவைத்து விட்டு தான் மட்டும் ராஜாஜிக்காக கோவிலுக்குள் சென்று அவருடன் சேர்ந்து சாமி கும்பிட்டு அங்கப்பிரதட்சினை செய்தாரா?

ராஜாஜியும் பெரியாரின் நட்பிற்காக என்று கூறி, கருவாடு கடித்துக்கொண்டே 'கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள்' என்று நாத்திகம் முழங்கினாரா?

'நட்பிற்காக நாங்கள் இருவரும் அவ்வப்போது இப்படித்தான் எங்கள் கொள்கைகளை கொலை செய்து கொள்வோம், யாரும் கண்டுக்காதீங்க ' என்றிறுந்தால்... தொண்டர்கள் அவர்களை எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள் அல்லவா?

'நட்பு வேறு;கொள்கை வேறு' என்று மிகவும் தெளிவாக இருந்தவர்கள், எப்படி இவர்களுக்கு உதாரணம் ஆக முடியும், சகோ.அப்துல்லா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//Team Lead, Project Lead, Project Manager, Project Director, CTO, CEO //--ஹா..ஹா..ஹா...

நான் டைடல் பார்க்கிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் அதே துறையில் தான் உயர் பதவிகளில் சென்று சம்பாதித்தார்கள் என்று சொல்லவே இல்லையே...!?

சரி.. அப்படியே நீங்கள் எடுத்துக்கொள்வாதாக இருந்தால்...

நாவிதர்... to....==>> Team Lead, Project Lead, Project Manager, Project Director, CTO, CEO

என்றோ,

மோதினார்... to ... ==>> Team Lead, Project Lead, Project Manager, Project Director, CTO, CEO

என்றோ அதே துறையில் இருப்பதாக இன்றுதான் அறிகிறேன். பாவம், இது தெரியாமல்... இவர்கள் தங்கள் விலைமதிப்பற்ற பத்து பதினைந்து வருட service experience-களை வீணடித்து விட்டு புதிதாக வேலைகளை தேடிக்கொண்டார்களே..!

தமிழகத்தின் அனைத்து மோதினார்களும் மற்றும் நாவிதர்கள் என்று எங்கேனும் யாரும் மிச்சமிருந்தால்... தங்களின் experience certificates-உடன், சகோ. கும்மி அவர்களிடம் சென்று தங்களின் அதே துறையில் உயர் வேலைவாய்ப்புக்கள் பற்றி கன்சல்ட் பண்ணிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... டும்..டும்..டும்...

ஜோதிஜி said...

முஹம்மத் ஆஷிக் said...

நண்பா நலமா? நிறைய விசயங்கள் பேசியிருக்கீங்க?

அப்துல்லா இது குறித்தும் என்னைப் பற்றியும் உங்களுக்கு புரிய வச்சுருக்காரு. ஆனா உங்களை ஏதோவொரு வகையில் இந்த பின்னோட்டங்கள் தொந்தரவு படுத்தியிருக்கு அல்லது சங்கடத்த உருவாக்கியிருக்கு என்பது மட்டும் புரியுது.

சில விசயங்களை தெளிவு படுத்த விரும்புகின்றேன். இருங்க......... ஓய்வு நேரத்தில் தான் என்னால் வர முடியும். உங்களுக்கு பதில் அளிககாமல் எனக்கு என்ன பெரிதான வேலை? காத்திருக்கவும் நண்பா..........

எம்.எம்.அப்துல்லா said...

// 'நட்பு வேறு;கொள்கை வேறு' என்று மிகவும் தெளிவாக இருந்தவர்கள், எப்படி இவர்களுக்கு உதாரணம் ஆக முடியும், சகோ.அப்துல்லா? //

ஆஷிக் அண்ணன், உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவுவதாக. திரு.கும்மியை பதிவுகளின் ஊடாக அறிந்தவகையில் நாத்தீகர் என்பது புரிகின்றது.அவருடன் கொண்ட நட்பிற்காக ஜோதி அண்ணன் தன் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கவில்லை.அதேபோல ஜோதிஜியுடன் விவாதிப்பதால் மனம் மாறி கும்மியும் கோவிலுக்குப் போவதாகத் தெரியவில்லை. எங்கே இருவருக்குமிடையில் கொள்கைமாற்றம் நிகழ்ந்தது என்று எனக்கு விளங்கவில்லை :(

சரிவிடுங்கள்.அவரவருக்கு அவரவர் புரிதல்.அதேபோல நீங்கள் எழுப்பிய சில அடிப்படையான,நியாயமான கேள்விகளுக்கு ஜோதி அண்ணன் அளிக்கப்போகும் பதிலைக் காண உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கிளியனூர் இஸ்மத் said...

// விந்தைமனிதன் அண்ணா !என்னைவிட இதை எழுத மிகவும் தகுதி படைத்தவர்கள் அண்ணன் கிளியனூர் இஸ்மத்தும், நண்பர் ஸ்வாமி ஓம்காரும்.அவர்கள் இதை செய்ய முடியாதபட்சத்தில் நான் எழுதுகிறேன்.//

சகோதரர் அப்துல்லா அவர்களே!
உங்களிலிருந்து வெளிப்படுகின்ற ஆன்மீகக் கட்டுரையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.என்னை பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

anbarae unga; main katturaiyai maatthiam engalin ivvaruda meelaadh malaril inaitthuk kolla mudivu seithullom. nalla padhivu. idhu viyaabaaramatra veliyeedu. enavae nallavai engirundhaalum aetruk kolvom. iraivan ungalukku arul seyya praartthikkirom.
nandri.
anbudan,
nukthasulthan@gmail.com.
thokuppaalar,
jasmin meelaadh malar 2011
vaedhalai. ramanathapuram dt.

Thenammai Lakshmanan said...

ஜோதிஜி முழுவதும் படிக்க ஒரு மணிநேரம் எடுத்துக் கொண்டது..

பின்னூட்டங்கள் வழியும் நிறையத் தகவல்கள்.. என்றும் மேலோட்டமாகவே படிக்கும் நான் ஆழ்ந்து படித்தேன்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.. வித்யாசமாக இருந்தது..

என்ன சொல்வது எனத் தெரியலை..

எப்போதும் பகிர்வுக்கு நன்றி என்று பின்னூட்டம் இடும் என்னை கிண்டலடிப்பதுபோல் இருந்தது வருகைப் பதிவேட்டில் கையெழுத்து என்பது..

அடுத்த களத்தில் புகுந்துள்ளீர்கள்.. யார் மனமும் புண்படாத வகையில் இன்னும் விரிவாக இந்த இடுகைகள் செல்லட்டும்.. முடிந்தவரை முயற்சியுங்கள்..

வாழ்த்துக்கள் தமிழ் மணம் விருதுகளுக்கு..

ஜோதிஜி said...

1

ஆன்றோர்களே, சபையோர்களே, அறிவார்ந்த நண்பர்களே, இந்த பின்னூட்டங்களை படித்துக் கொண்டுருப்பவர்களே, எதிர்காலத்தில் படிக்கப் போகின்றவர்களே சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் நண்பபேண்டா என்றழைத்தும் எதிரிடா என்று வாளைச் சுழற்றிக் கொண்டுருக்கும் ஆஷிக் அவர்களுக்கு இந்த நீண்ட சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அளவிற்கு காலம் செய்ய கோலத்திற்காக வருந்துகின்றேன். வெட்கப்படுகின்றேன். துக்கப்படுகின்றேன், துயரப்படுகின்றேன். (இப்படி பேசித்தானே நம்ம அரசியல்வாதிகள் பொதுஜனங்களை சுதியேத்துறாங்க???)

சாலமன் பாப்பையா போல நம்ம அப்துல்லா பொதுவாய் புரியவைத்தும் கூட நண்பர் விடத்தயாராய் இல்லை என்பதும் நான் கும்மியாரை தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுத்தது தப்பாகி போய்விட்டது. அடுத்து அவர் கொடுத்த மறுமொழிகளை மறுக்காமல் இருந்ததும் நான் செய்த பெரிய குற்றம் என்றும் ஒரு பெரிய ஓலையை நீட்டி முழங்கியிருக்கிறார். என்ன கொடும மாதவா?

ஜோதிஜி said...

2/ இந்த இல்லத்திற்குள் வருகின்றவர்களை கரம் சிரம் புறம் பார்க்காமல் நீ இப்படித்தான் பேச வேண்டும், எழுத வேண்டும், பகிர்வுக்கு நன்றி ஒற்றைச் சொல்லோடு ஓடிப் போய்விட வேண்டும் என்று நான் உத்தரவிட வேண்டுமென்றால் என்னைப் போல முட்டாள்கள் வேறு எவரும் இருக்க முடியாது?

சுதந்திரம் என்பது நம்மால் உணர விரும்பாத, உணர்ந்து கொள்ள தேவைப்படாத ஒரு வஸ்துவாகவே இந்தியாவில் இருக்கிறது. அரசியல் கட்சிகளில் தான் கட்டம் கட்டுகிறார்கள் என்றால் வலைபதிவுகளிலும் இது போன்ற கட்டம் கட்டுவது முறையா நண்பா?

இப்போது எழுதிக் கொண்டுருக்கும் விசயம் இராமநாதபுரம் மாவட்டம் என்றொரு சின்ன கருவை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாவட்டத்தில் தான் நான் பிறந்தேன். என் தலைமுறைகளைப் பற்றி யோசிக்க யோசிக்க இதற்கு முன்னால் அதற்கு முன்னால் என்று செல்லும் போதும் கொஞ்சம் சுவைபட யோசிக்கலாம் என்று ஒவ்வொரு விசயமாக தாண்டி வந்து கொண்டுருக்கின்றேன். அதில் ஒன்று தான் இப்போது எழுதிய இந்த இஸ்லாமியர்கள் குறித்து என்னுடைய மேலோட்டமான பார்வை. இது இஸ்லாமியர்களின் வரலாற்றுச் சரித்திரம் அல்ல. நிறைகுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டிய அவஸ்யமும் எனக்கில்லை. இதில் செந்தில்வேலன் சொல்லியுள்ளபடி எவரும் தொடத் தயங்கும் விசயத்தை நாகரிமான முறையில் தான் கொண்டு செலுத்தவே விரும்புகின்றேன்.

ஜோதிஜி said...

3/ நண்பா நீங்க எப்போது இருந்து இந்த இல்லத்து எழுத்துக்களை படிக்கீறீங்கன்னு தெரியாது? ஆனால் இதில் பின்னூட்டங்கள் இடும் பல நண்பர்கள் படிப்பதோடு நம்மளோட ஒன்னுமன்னா பங்காளிங்க போல பழகுறவுங்க. பெரும்பாலும் தினந்தோறும் பேச்சு வார்த்தைகளில் இருக்குறவுங்க. அவங்ககிட்ட நான் போய் என் எழுத்து எப்படி? கருத்து எப்படின்னு கதை விடமாட்டேன். நம்ம பங்காளி தெகா கிட்ட கேட்டுப் பாருங்க. அவரு அடிக்கடி என்னை நாஸ்டி பெல்லோ என்று திட்டும் அளவிற்கு கிண்டலும் கேலியாகத்தான் உரையாடுவோம். கும்மியாருக்கு நான் வரவேற்பு கொடுத்தது ஒரு நகைச்சுவைக்காக என்பதை நீங்க எடுத்துக் கொள்ள விரும்பாமல் இதென்ன புதுமையான அடம்? எழுத்து என்பது வேறு. பழக்கம் என்பது வேறு. அரசியல் நாகரிகம் உள்ள அறந்தாங்கி தொகுதி திருநாவுக்கரகரிடம் கொஞ்சம் பழகிப் பாருங்களேன். மூன்று மத மக்களும் ஏன் அவருடை தனிப்பட்ட முறையில் விரும்புறாங்கன்னு புரியும்.

ஜோதிஜி said...

4/ அப்புறம் கும்மி மட்டுமல்ல அவரு பங்காளிங்க கூட சாமி பூதம் போன்ற எல்லாவற்றையும் தட்டி பெண்டு நிமித்திக்கிட்டு இருக்குறவுங்க. அதனால நான் போய் அவங்கிட்ட வீரமணி போல அல்லது ராமகோபாலன் போல நீட்டி முழுங்க மாட்டேன். ஆனால் மாற்றுக் கருத்து இருக்கிறவர்களிடத்தில் உள்ள பல விசயங்களை என்னால் பொறுமையாக கண்டு கொள்ள முடியும். தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வேன். இல்லாவிட்டால் எஞ்சாமி உசந்ததுன்னு என் மனசுக்குள்ள தான் வச்சுக்குவேன். அதைப் போய் வெளியே துப்ப விரும்ப மாட்டேன்.

ஜோதிஜி said...

5/ வலைபதிவுகளில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழம் குறித்து எழுதி உதைபடாமல் எழுந்து வந்தவர்கள் மிகக்குறைவு. மதம் போன்று அல்லாமல் அது சர்வ தேச உலகிலும் வாழ்ந்து கொண்டு பல லட்சக் கணக்கான வாழ்வியல் அவலம் சார்ந்த விசயம் இது. எனக்கு பிரபாகரன் என்பவர் என் குடும்பத்தில் பிறந்தவர் போலத்தான் நான் கருதிக் கொள்கின்றேன். அவரின் ஆளுமையை வேறு எவரும் எனக்கு தநது இருக்கமாட்டார்கள். அதற்காக அவரின் புகழை பரப்ப வேண்டும் என்ற அவஸ்யமில்லை. அவரைப்பற்றி யோசிக்கும் போதே அவரின் நிறை குறைகளையும் யோசித்து தான் எழுதினேன். பழைய பதிவுகளை படித்துப் பாருங்கள். எவரும் உங்க அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டது இல்லை. இந்த ஈழம் தொடர் எத்தனை பேர்களை சென்று அடைந்தது என்று நம்ம அப்துல்லா அவர்களிடம் வாய்ப்பு இருந்தா கேட்டுப் பாருங்க.

ஆஷிக் கொஞ்சம் பொறுமையா இருங்க. என்னை விட நிச்சயம் வயது உங்களுக்கு கம்மியாத்தான் இருக்கும்.

ஜோதிஜி said...

6/ இதுக்கு பதில் கொடுத்து இதை நீட்டீக்க விரும்ப மாட்டீங்கன்னு நினைக்கின்றேன்.
காரணம் நீங்க எந்த ஊருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் பெருநகரகங்கள், மாநிலங்கள், வெளிநாடுகள் பலதும் பார்த்து, வாழ்ந்து, கொடுத்த அனுபவங்கள் அதிகம் என்னிடம் இருப்பதால் இதுவரைக்கும் நான் எதற்காகவும் பயந்ததும் இல்லை. பின்வாங்கியதும் இல்லை. உங்களை விட பலமடங்கு இறை அச்சம் உள்ளவன். உலகில் இறைசக்தி ஒன்று உண்டு உறுதியாக நம்பிக்கை வைத்து இருப்பவன். இது புத்தகங்களைப் பெற்ற அனுபவம் அல்ல. என் வாழ்க்கை கொடுத்த அனுபவம். அதுக்காக கும்மியோடு போய் நான் பழகக்கூடாது என்றால் நீங்கள் வாழ்ந்து கொண்டுருப்பது வேறொரு உலகில் என்று அர்த்தம். உங்களின் இருட்டுச் சிந்தனைகளை போக்க வேண்டுமென்றால் உங்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டும். அதன் மூலம் உங்கள் கருத்து எந்த அளவுக்கு உறுதியானது உண்மையானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

உணர முடிந்தால் உண்மையானவன்
இல்லாவிட்டால்................................?

ஜோதிஜி said...

ஆஷிக் எங்க ஊருக்காரவுக தான் தேனம்மை. அவங்கள நான் நக்கல் செய்து இருப்பதைக்கூட எப்படி எதார்த்தமா எடுத்துக்கிட்டு பேசிட்டு போயிருக்காங்கன்னு பாத்தீகளா? இது தான் நாகரிகம். மறுபடியும் உள்ளே வந்த இஸ்மத் அவர்கள் கொடுக்கும் நாகரிகத்தையும் பார்த்துக் கொள்ளுங்க. உணர்ச்சி வசப்பட்டால் நம்மள வச்சு அரசியல் வியாதிங்க தட்டுற கும்மி போதாதா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.கும்மி
:)

@ சகோ.அப்துல்லா
:)

@ சகோ.ஜோதிஜி

//இதுக்கு பதில் கொடுத்து இதை நீட்டீக்க விரும்ப மாட்டீங்கன்னு நினைக்கின்றேன்.//

:) :)

தங்கள் மீதும் மற்றும் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

உமர் | Umar said...

முஹம்மத் ஆஷிக், அப்துல்லா, ஜோதிஜி மற்றும் அனைவருக்கும் நன்றியும், அன்பும், வணக்கமும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைத்தையும் பொறுமையாக படித்து முடித்தேன். ஆச்சர்யமான தகவல்கள், அருமையான கட்டுரை, பின்னூட்டங்கள். நன்றி சார்.

/////கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே பதிவையும் பின்னூட்டத்தையும் பார்க்கும்போது இதை தொடராக எழுதி எங்கள் பதிப்பகத்துக்கு தரவேண்டும் என இப்போதே முன்பதிவு செய்கிறேன். /////

ஜோதீஜி சார், நீங்க மனது வைத்தால் கண்டிப்பாக இது நடக்கும். மற்ற நண்பர்களையும் ஒருங்கிணைத்து செய்யலாமே? காத்திருக்கிறோம்!

Rathnavel Natarajan said...

தங்கள் பதிவு படிதேன். பதிவிலிருந்தும், பின்னூட்டங்களிலிருந்தும் நிறைய தகவல்கள் கற்றுக்கொண்டேன். பதிவு எழுத நிறைய உழைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

.

இக்பால் செல்வன் said...

தமிழ் இஸ்லாமியரின் வாழ்வை ஆய்வறியும் போது, நாம் கேரளா இஸ்லாமியர்களையும், இலங்கை இஸ்லாமியர்களையும் கணக்கில் எடுப்பது மிகவும் அவசியம்......இரு பிரிவும் தமிழ் இஸ்லாமியத் தோன்றல்கள் தான்.

அதாவது தமிழ்நாட்டில் இஸ்லாம் எதோ ஒருக் காலக்கட்டத்தில் மிக வேகமாய் பரவி பின்னர் தணிந்து இருக்க வேண்டும். ஆரம்பக் கால இஸ்லாமிய சமயம் கடற்கரையோரம் இருந்த சாதிகளிடமே பரவியது என்பது உண்மை.

குறிப்பாக கடற்கரை வர்த்தகங்களில் ஈடுப்பட்ட செட்டியார், வணிகர் ஆகியோரிடமே இஸ்லாமி அறிமுகமானது. காரணம் இவர்கள் அடிக்கடி வியாபார நிமித்தமாக அரபு நாடுகள் சென்றதும். அரபிகள் இங்கு வந்ததுமே. நன்கு கவனித்தால் இஸ்லாம் அந்தக் காலத்தில் துறைமுக நகரங்களை அண்டியே செழித்துள்ளது.

ஒன்று நாகைப்பட்டினம் பகுதி, இன்னொன்று கீழக்கரைப் பகுதி, இன்னொன்று கொடுங்கையூர் அல்லது கொல்லம் பகுதி, கள்ளிக்கோட்டை அல்லது கோழிக்கோடு பகுதி, இலங்கையின் மாந்தை அல்லது மன்னார் பகுதி, தோன்றி முனை அல்லது காலே பகுதி, மட்டக்களப்பு........

இஸ்லாமி இந்த மக்களைச் சார்ந்தக் காலங்களில். அந்தக் கடற்பட்டினத்தில் ஆதிக்கம் செலுத்திய வணிகர்களிடமே வந்து சேர்ந்தது. அவர்களைத் தொடர்ந்து அது பிராமணர்களையும் ஈர்த்துக் கொண்டது. இது ஆரம்பக் கால வழிமுறை.

இரண்டாவது இஸ்லாமிய தாக்கம், தேவர் இனத்தில் வரவில்லை. மாறாக மதுரை சுல்தான், ஆற்கடு நவாபு ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டவை. ஆற்காடு நவாபு ஆறுகைக்குள் வந்த வாணம்பாடி, வாளஜாபாத், சைதாப்பேட்டை பகுதியில் வடநாட்டில் இருந்து அரசுக் காரியங்களுக்காக வந்த மக்கள், இஸ்லாமியர்கள். அவர்களின் வழித்தோன்றலே இன்றளவும் உருது பேசி வருகிறார்கள்.

இன்னொரு பிரிவு யவனர் என்றறியப்பட்ட கிரேக்கர்கள். இவர்கள் பாண்டியர்களிடம் அரசுக் கருமம் செய்தவர்கள். யவனர்கள் அரபியாவில் கலப்புற்று, அவர்கள் இஸ்லாமைத் தழுவிக் கொண்டவர்கள். அதன் நீட்சியாக இவருகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

மற்ற பிரிவு தேவர்கள், ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டு மதம் மாறியவர்கள்.

இறுதியாகவே 20 நூற்றாண்டில் அங்கொன்று இங்கொன்றாக தலித்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.
மீனவ இஸ்லாமியரும் இவ்வகையே ....

கும்மி சொன்ன அந்த 7 சாதிமுறை உண்மைதான். மேட்ரோமோனியலில் அந்த ஏழு சாதிகள் 90 சதவீதம் வேறு சாதிப் பெண்களை மணம் முடிப்பதில்லை தான்.

இந்து மதத்தை விடவும் இஸ்லாத்தில் சாதிய வீரியம் குறைவே என்பது உண்மை. ஆனால் 100 சாதியே இல்லை என்றுக் கூறுபவர்கள் பொய் சொல்பவரகளே !

தலித்கள் இஸ்லாத்தில் இணைந்த உடனே இஸ்லாத்தில் சமூக அந்தஸ்து கிடைத்துவிடாது. ஆனால் அவர்களை குட்டிய இந்து சமயத்தில் அந்தஸ்து கிடைக்கும். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால். அவர்களை மிதிக்க மாட்டர்கள்.....
பொருளாதார அந்தஸ்து பெற்றால் மட்டுமே அவர்கள் இஸ்லாத்துக்குள் தலை நிமிர முடியும்.......

மற்றொன்று கிருத்துவத்தில் மீனவர்/தலித்கள் அதிகம் சேர்ந்தமைக்கு காரணம். பெண் விடுதலை அலல்து உழைக்கும் பெண்களை தடுக்கும் மனோபாவம் அதில் இல்லை என்பதால் தான். இஸ்லாத்தில் அது 100 சதவீதம் சாத்தியம் இல்லை....

மற்றபடி இஸ்லாம்ல் வாளால் பரவியது , அவர்கள் அரேபியா இறக்குமதி என்பது எல்லாம் புரூடா.....

பி.கு. நான் இஸ்லாமியர் இல்லை .... ஆனால் இஸ்லாத்த்தை மதிப்பவன்..... ..

ஜோதிஜி said...

செல்வன வாய்ப்பிருந்தால் விருப்பப்பட்டால் என் மின் அஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

திகைத்துப் போய்விட்டேன். நன்றி.

தருமி said...

//நியாயமாகப் பார்த்தால் இஸ்லாத்திற்கு தாழ்த்தப்பட்டோர்தான் அதிக அளவில் மாறி இருக்க வேண்டும்.ஆனால் தமிழகத்தில் இஸ்லாம் ஆனோர் பெரும்பாலும் உயர் சாதியினரே. இது ஒரு வித்யாசமான முரண்.//

என் நினைவும் இதுவே. அதற்கான குறிப்பும் கேள்வியும் இங்கே.

mohamedali jinnah said...

அன்புடையீர் ,
தங்களுக்கு எனது வாழ்த்துகள் .இப்படி ஒரு சிறப்பான கட்டுரையை தாங்கள் தந்தமைக்கு நன்றிகள் .கட்டுரையோடு கருத்துரைகளும் மிகவும் சிறப்பாக உள்ளது .சரித்திர கட்டுரைகள் தரும்போது மிகவும் கவனம் தேவைப்படுகின்றது . தாங்கள் அதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் .சில கருத்து மாற்றங்கள் வரத்தான் செய்யும் அதுவும் நன்மையாகவே அமையலாம்
தொடருங்கள் உங்கள் சேவையை
அன்புடன்

தமிழரின் தாய்மதம் said...

இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

தமிழரின் தாய்மதம் said...

இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சிந்தா said...

தென்மாவட்டங்களில் இன்றும் தேவர் இனத்தவரை இசுலாமகயர்கள் மாமா என்றே அழைக்கின்றனர். இன்னும் பல ஊர்களில் அந்த காலங்களில் கடல் பயணம் செல்லும் போது இசுலாமியர் தங்கள் வீட்டு பெண்களை தேவர்களின் பாதுகாப்பில் விட்டு செல்லும் அளவிற்கு இந்த மாமா உறவு முறை நெருக்கமானதாகவும் உண்மையானதாக வும் கூட இருந்துள்ளது.
இந்த இரு சமூகமும் தங்கள் குடும்ப பெண்களை பாதுகாப்பதில் மிக கண்ணியமாக இருந்துள்ளனர்.
பாதுகாப்பு பயிற்சிகளை இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் கற்று கொடுத்தும் வந்துள்ளனர்.
தேவர்கள் சிலம்பாட்டம் தை இசுலாமியர்களின் மும் இசுலாமியர்கள் தேவரிடமும் கற்பது கூட இந்த உறவு முறையில் ஏற்பட்ட நெருக்கத்தால் தா ன்