Thursday, May 31, 2012

சொம்பு இல்லாத நாட்டாமை


இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டில் குழந்தைகள் எப்படா பள்ளிக்கூடம் திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  சற்று வளர்ந்து நிற்கும் இவர்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகளை இந்த முறை சற்று ஊன்றி கவனித்த பொழுது பல விசயங்களை புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு வாரங்கள் விடுமுறை இருந்தாலே போதுமானது.  உடனடியாக பள்ளி திறந்தால் பரவாயில்லை என்கிறார்கள்.  காரணம் விடுமுறை சந்தோஷங்களை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.


குறிப்பாக இங்குள்ள புறச்சூழல் இவர்கள் விரும்பும் அளவுக்கு சிறப்பாக இல்லை. வீட்டை விட்டு இறங்கினால் வாகனங்கள் பறக்கும் தெரு.  மரங்கள் எதுவுமே இல்லாத குடியிருப்பு.  இதற்கு மேலாக மண்டையை பிளக்கும் வெயில். திருப்பூருக்குள் சுற்றிப் பார்க்க எந்த இடமும் இல்லை.  தான் தோன்றித் தனமான வாகன ஓட்டுநர்களினால் உருவாகும் போக்குவரத்து நெரிசலைப் பார்த்து நானும் எங்கேயும் அழைத்துச் செல்ல விரும்புவதும் இல்லை. மற்றவர்களைப் போல டாம்பீகத்திற்காக எங்கேயும் செல்வதும் இல்லை.

என்னுடைய பள்ளிக்கூட கோடை விடுமுறை கொண்டாட்ங்கள் இப்போது மனதில் நிழலாடுகிறது.  ஆண்டு இறுதி தேர்வின் கடைசி நாளின் போது, தேர்வு எழுதி முடித்து வீட்டுக்குள் நுழையம் போதே அந்த பைக்கட்டை தூக்கி ஏதோவொரு இடத்தில் தூக்கி எறிவதில் இருந்து தொடங்கும்.  அந்த இரண்டு மாதங்களும் இரவு நேரத்தைத் தவிர வீட்டுக்குள் இருந்ததே இல்லை.  அடிக்கும் வெயில் அத்தனையும் தலையில் தான் இருக்கும்.  அந்த அளவுக்கு ஓடி ஓடித் திரிந்த காலங்களை இன்று குழந்தைகளுக்கு வழங்க முடியவில்லை.  உறவினர் வீடு, பழகியவர் வீடு என்று எந்த இடத்திற்கு அனுப்பினாலும் வெகு விரைவில் இவர்களுக்கு அங்குள்ள சூழ்நிலை அலுத்துப் போய்விடுகின்றது.  ஓரே போருப்பா........ என்கிறார்கள்.  வீட்டுக்கு வந்து விடுகின்றோம் என்று திரும்பி வந்து விடுகின்றார்கள்.

ஆனால் என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கையில் போர் என்பது துளிகூட இல்லை.  இருப்பதை வைத்து அனுபவித்தல் என்ற நோக்கத்தில் வாழ்க்கை இருந்தது.  இன்று இவர்களுக்காகவே என்று உருவாக்கிக் கொடுத்த ஒவ்வொரு விசயங்களும் அடுத்த தேடல் என்ற நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.  வசதிகளை எதிர்பார்த்து பழகியவர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இதற்கு மேலாக மாயப்பிசாசு போல் ஆட்டிப் படைக்கும் தொலைக்காட்சி விடுமுறையின் பாதிநாட்களை ஆக்கிரமித்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆட அசைய விடாமல் கற்சிலை போல ஒரே இடத்தில் அமர வைத்து விடுகின்றது.

கண்வலி, கழத்துவலி என்று தொடங்கி கடைசியில் மொத்த உடம்பும் சோர்ந்து போய் நிற்கும் சோர்வை அவர்களின் இரவு நேர தூக்கத்தின போது பார்க்க முடிகின்றது.  மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் கூலி வேலை பார்ப்பவர் இரவு நேரத்தின் போது எந்த அளவுக்கு அசந்து தூங்குவாரோ அதைப் போலவே அடித்து போட்டது போல தினமும் தூங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்குகிறார்கள்.  பகலில் தூங்க வைக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை தானே என்பது போன்ற வீட்டில் உள்ள வக்காலத்து வார்த்தைகள் அவர்களின் தூக்க நேரத்தை தினந்தோறும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. தினசரி செய்ய வேண்டிய அன்றாட கடமைகள் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது. புரிய வைக்க முடியவில்லை.  புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவர்களும் இல்லை.

பள்ளிக்கூட நாட்களில் அனுபவிக்க முடியாத அத்தனை சுதந்திரங்களையும் ஒவ்வொரு நாளும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.  விரும்பிய அத்தனையும் கிடைக்கிறது.  வீட்டுக்குள் அவர்கள் விரும்பாத எந்த நிகழ்வும் நடப்பதும் இல்லை. சம்மர் கோர்ஸ் என்ற எந்த கண்றாவிக்கும் நாங்கள் அனுமதிப்பது இல்லை. 

உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.  உனக்கு செஸ் ஆட ஆசையா?  அதற்கான பொருட்கள் வாங்கித் தருகின்றேன்.  பக்கத்து வீட்டில் உள்ள அண்ணன் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்து நீயே கற்றுக் கொள்.  என்னை அழைக்காதே. எனக்கு அதில் விருப்பமும் இல்லை.  நேரமும் இல்லை.  

இது போலத்தான் ஒவ்வொரு விளையாட்டையும் அவர்களாக தேடித் தேடி கற்றுக் கொள்ள தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றோம். நாம் நுழைந்தாலும் கடைசியில் அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டுமே தவிர அவர்களை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது. 

மூவருக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் கடைசியில் வீடே போர்க்களம் ஆகிவிடுகின்றது.  அடுத்தவர்களிடம் அனுப்பும் போது பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுகிறார்கள்.  தேவையான அனுசரனை வேண்டும்.  அதற்கு மேலாக  உண்மையான உழைப்பின் மூலம் மற்றவர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் பல விசயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதை குறிப்பால் உணர வைக்கின்றோம்..  

ஆனாலும்.........

நாம் வாழும் குடும்பச் சூழ்நிலையில் ஓழுக்கச் செயல்பாடுகளை முன்னிறுத்தி அவர்களை ஒரு உருவமாக மாற்ற முயற்சித்தாலும் வெளி உலகம் கொடுக்கும் தாக்கமும், இவர்கள் மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் செயல்பாட்டின் மூலம், தேவையற்ற பல விசயங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் பெறும் தாக்கம் என்பது இறுதியில் நீயும் ரௌத்திரம் பழகு என்பதாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

பணம் என்ற ஒரு வார்த்தை இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.  உடுக்கும் உடை, உண்ணும் உணவு முதல் பேச்சில் காட்ட வேண்டிய டாம்பீகம் வரைக்கும் வளரும் பிஞ்சு மனதில் இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை தான் விதைத்துக் கொண்டிருக்கிறது.  உள்ளே வெளியே என்று ஒரு ஆடு புலி ஆட்டமாகத்தான் சமகால வாழ்க்கையில் குழந்தைகள் போராடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தினந்தோறும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுடன் பழகிய தாக்கத்தில் தனக்கு தானே என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். இதுவே குழந்தைகளுக்கு தான் மட்டும் என்ற எண்ணத்தையும் மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. சுயநலம் மேலோங்குகின்றது. போட்டி பொறாமை அதிகமாகி விடுகின்றது. தான் செய்வது தான் சரிதான் என்று பேசத் தொடங்கிறார்கள். நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் குறையேதும் இல்லை என்ற போதிலும் இவர்களால் உருவாகும் ஒவ்வொரு சவால்களையும் மனைவியால் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றார்.


எத்தனை முறை ஒற்றுமை குறித்த கதைகள் சொன்னாலும் சுவராசியம் என்ற நோக்கத்தில் கேட்டுக் கொள்கிறார்களே தவிர காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரைக்கும் நடக்கும் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நான் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கின்றது.  மற்ற ஆறு நாட்களிலும் மனைவி தான் ஆலமரத்தில் சொம்பு இல்லாத நாட்டாமையாக நேரத்திற்கு தகுந்தாற் போல தீர்ப்புகளை மாற்றி மாற்றி சொல்லி சமாளித்து எப்படா பள்ளி திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார். 

Wednesday, May 23, 2012

பணக்கார வாரிசுகள்


 பணக்காரர்களின் உலகம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதோவது யோசித்து பார்த்ததுண்டா? உங்களைப் போலவே நானும் பத்திரிக்கைகளில் வரும் உலக பணக்காரர்களின் வரிசைகள் முதல்,  உள்ளூர் பணக்கார்களின் வரிசைகள் வரையிலும் படித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

மற்ற நாடுகளின் எப்படியோ? ஆனால் இந்தியாவில் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் மிகப் பெரிய புத்திசாலிதனமோ, கடுமையான உழைப்போ தேவையில்லை.  ஆனால் நிச்சயம் சாமர்த்தியம் என்பது அவசியம் தேவை.  குறிப்பாக தரகு வேலை பார்க்கத் தயாராக இருந்தால் எந்த துறையிலும் எளிதாக ஜெயித்து மேலே வந்து விடலாம்.

நாம் பேசப் போவது பணக்கார உலகத்தின் அரசியல்,பண செல்வாக்கைப் பற்றியல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பணம் கடத்தப்படுத்துவதும், அதை கையாளும் வாரிசுகளின் வாழ்க்கையைப் பற்றியுமே பேசப்போகின்றோம்.

சாதாரண நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கையின் போராட்டத்தை போல இவர்களின் போராட்டங்கள் எது குறித்து இருக்கும்? எப்படி இருக்கும் என்பது போன்ற பல கேள்விகளை அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. அதை இப்போது மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மனதில் இருக்கும் ஆச்சரியங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

திருப்பூரில் நான் கடந்து வந்த பாதையில் பார்த்த பல முதலாளிகளின் வாரிசுகளை தொடக்கம் முதலே பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் பல விசயங்களை உத்தேசமாகத்தான் மனதில் வைத்திருந்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கும் முதலாளிகளின் வட்டத்திற்கும் இடையே பல படிகள் இருந்தன,  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளும் முன்பே அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் எதையும் மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் கடந்து வந்துள்ளேன்.  ஆனால் தற்போதுள்ள பதவியின் காரணமாக மங்கலாக பார்த்த பல விசயங்களை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

வியப்பு ஒரு பக்கம்.  வேதனை மறு பக்கம்.

நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு வெளி உலகம் அறிமுகம் ஆனது முதல் இன்று வரை தினந்தோறும் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள். திருப்பு முனைகளை சந்தித்துக் கொண்டே தான் வருகின்றேன். இருந்த போதிலும் பல புதிர்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதார்த்த வாழ்க்கையின் ஆச்சரியங்களை வேடிக்கை பார்த்துக கொண்டிருக்கின்றேன்.  

இந்தியாவில் உள்ள சொல்லி மாளமுடியாத ஏற்றத்தாழ்வுகளும் அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும் தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும் என்னை ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கின்றது. தவறு யார் மேல்? என்பது போல பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அதற்கான முழுமையான விடைகள் கிடைத்தபாடில்லை.  ஒன்றோடு மற்றொன்று, அதோடு இன்னோன்று என்று ஒவ்வொரு மனிதர்களின் குறைகளும் நிறைகளும் கண்ணில் தெரிகின்றது. மொத்தத்தில் உழைக்க விரும்பாதவர்களின் கூட்டம் மட்டும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றது,.

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் கல்லூரி வரைக்கும் ஒரு ஆசையும், வேலைக்கு வந்த பிறகு மற்றொரு விதமாகவும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். வாழ்ந்து முடிக்கும் போகும் ஏக்கத்தை மட்டும் தங்களின் வாரிசுகளுக்கு கடத்தி விட்டு இறந்தும் போய் விடுகின்றனர். பல நடுத்தரவர்க்க இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கையை பணம் படைத்தவர்களின் வாரிகளின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் பணக்காரர்களின் குடும்ப வாழ்க்கையென்பது வேறுவிதமாகவே உள்ளது.

தொடக்கப்பள்ளி வாழ்க்கையில் பத்து பைசா ஐஸ்க்கு ஏங்கிய காலமும், பள்ளி இறுதியில் எப்படியாவது ஒரு திரைப்படத்திற்கு போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்தை கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது.  கட்டுப்பாடுகள் ஒரு பக்கம். கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டளைகளை மறுபக்கம். இத்தனையும் கடந்து வந்து தான் என்னுடைய இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தனிப்பட்ட என் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாத போதும் கூட லட்சியங்களை எட்ட முடியாதவர்களின் வாழ்க்கையை மறுபக்கம் பார்க்க வேண்டியதாக உள்ளது.

ஆனால் திருப்பூருக்குள்ளும் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பல நிறுவன முதலாளிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி வாழ்க்கையென்பது வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கைக்கு சரி சமமாகவே இருக்கிறது.  கலாச்சார சிதைவு என்று ஒரு சொல்லில் இதை கொண்டு வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும் ஒரு நிறுவன சாம்ராஜ்ய  சரிவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்பது தான் உண்மை.  பள்ளிக்கூட படிப்பறிவு உள்ள ஒருவர் தன் கடுமையான உழைப்பால் 30 வருடங்களாக பாடுபட்டு சேர்த்து உருவாக்கிய ஒரு ஏற்றுமதி நிறுவன சாம்ராஜ்யத்தை வாரிசுகள் பொறுப்புக்கு வந்த நாலைந்து வருடங்களில் தலைகீழாக மாற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நிறுவனத்தின் நட்ட கணக்கினால் வாரிசுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால் இந்த நிர்வாகத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றது.

பணக்கார வாரிசுகளின் பள்ளி வாழ்க்கையென்பது வேறு விதமாக உள்ளது. இந்த பள்ளியில் தான் சேர வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொருவிதமான தராதரம். அந்த பள்ளியின் தரம் குறித்த கவலையை விட சமூக கௌரவம் அல்லது ஸ்டேடஸ் சிம்பல் என்பதாகத்தான் இவர்களின் வாழ்க்கை தொடங்குகின்றது. நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பும், சேர்த்த பிறகும் மனதில் கொண்டிருக்கும் கவலைகளை பட்டியலிட முடியாது. கல்வி குறித்த அக்கறை, எதிர்காலம் குறித்த கவலை, பிள்ளைகள் பெறவேண்டிய மதிப்பெண்களின் அவசியம் போன்ற எதுவும் பணக்கார வாரிசுகளுக்கு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்...

மொத்தத்தில் இவர்களுக்கு எது குறித்தும் கவலையில்லை. வாகனம், வண்டி, பாக்கெட் மணி, முதன்மையாகவும், கல்வியென்பது இரண்டாம் பட்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் பிஞ்சில் பழுத்த பழமாக வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டிய சந்தோஷங்களை உடனடியாக அனுபவிக்கும் வேகமும் என்னை ரொம்பவே யோசிக்க வைக்கின்றது.  ஒரு பள்ளியில் ஆறாவது படிக்கும் பையன் கெட் டு கெதர் பார்ட்டீ என்ற பெயரில் ஷாம்பெய்ன் மற்றும் பீர் போத்தல்களை பயணிக்கும் வாகனத்தில் கொண்டு போய் மொத்தமாக இறக்கி கொண்டாடிய கொண்டாட்டங்களை பார்த்த போது கனவா நிஜமா என்பது போலவே இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய பணத்தில் மட்டும் குறியாக இருப்பதால் மௌன சாட்சியாகவே அங்கீகாரம் கொடுத்து இவர்களை கெடுத்துக் கொண்டுருக்கிறது.

இவர்கள் தட்டுத்தடுமாறி பள்ளி இறுதியை தாண்டி விட்டால் போதும். நிச்சயம் ஏதோவொரு ஒரு வெளிநாட்டில் பணம் கட்டி அல்லது பணம் கொடுத்து ஒரு டிகிரியை வாங்க வைத்து விட்டால் வாரிசுகளின் கல்வி வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுகின்றது. நிச்சயம் ஆங்கிலம் பேசமுடியம். இந்த ஒரு தகுதியே போதும் என்ற நிலையில் இருப்பதால் சமூக, தொழில் அங்கீகாரத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடிகின்றது.


நம்மூர் சாதாரண பி.காம் பட்டப்படிப்புக்கு அமெரிக்காவில் தனது மகனை படித்து வைக்க ஒரு முதலாளி செலவளித்த தொகை ஒரு கோடி ரூபாய்.  பையன் இப்போது நிர்வாகத்திற்கு வந்து விட்டார். திருபபூருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் 12 வருடமும் குடும்ப வாடையே இல்லாமல் படித்து, குடும்பத்தினர் விரும்பியபடி வெளிநாட்டிலும் படித்து முடித்து நிர்வாக பொறுப்புக்கு உள்ளே வந்த முதல் வருடம் நிறுவனம் இழந்த தொகை சுமார் ஆறு கோடி. குடும்ப பாசமும் இல்லை. அப்பா உழைத்த உழைப்பின் அக்கறையும் தெரியாமல் அடுத்தது எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் எடுத்த முடிவுகளால் நிர்வாகம் தள்ளாடிக் கொண்டு மூடுவிழாவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிர்வாகத்திற்கு பாதிப்பு என்பதை விட நிர்வாகத்தை நம்பிய பல துணை நிறுவனங்கள் தெருக்கோடிக்கு வந்து பல பேர்கள் கடனுக்கு பயந்து காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் வாரிகளின் எண்ணங்கள் உயர்வாக இருக்கலாம். உழைப்பும், நேர்மையும் கூட அதிகமாக இருக்கலாம்.  ஆனாலும் இவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற நிர்வாக வாசனை தெரியாத கூமுட்டைகளிடம் தங்களை அடகு வைத்துக் கொண்டு வாழ வேண்டியதாக உள்ளது. இதிலும் சிலர் மட்டும் உடைக்கப்பட வேண்டிய வளையங்களை உடைத்துக் கொண்டு உன்னதமான இடத்தை நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sunday, May 13, 2012

நிறையவே பொதுநலம்

எழுதுவதை நிறுத்தி முழுமையாக நான்கு மாதங்கள் முடிந்து விட்டது.  இது போன்ற இடைவெளியை நான் ஒவ்வொரு முறையும் கடைபிடித்தாலும் இந்த முறை இணையம் பகக்கம் வரவே முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை வேறொரு பாதையில் பயணிக்க வைத்துள்ளது. . வாழ்வில் அடைய வேண்டிய உயர்பொறுப்புகள் நம்மை வந்த சேரும் போது அதற்காக நாம் இழக்க வேண்டியது ஏராளம் என்பதை இந்த நான்கு மாதங்கள் நிறையவே புரிய வைத்துள்ளது.

எழுதத் தொடங்கியது முதல் வாழ்க்கை ரொம்பவே சுவாசியமாகவே இருந்தது.  எந்த கவலையென்றாலும், எது குறித்தும் நினைத்த நேரத்தில் எழுத முடியும் என்ற நம்பிக்கையில் பார்க்கும், பழகும் மனிதர்கள் அத்தனை பேர்களும் சுவராசியமானவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மனதிற்குள் எப்போது ஒரு பக்கம் டகடகவென்று டைப்ரைட்டர் சப்தம் உள்ளூற ஓடிக் கொண்டேயிருக்கும்.  காணும் காட்சிகள் எழுத்தாக மாறிக் கொண்டேயிருக்கும்.  இரவு நேரத்தில் பதிவுகளாக மாறி விடும். ஆனால் இந்த முறை எழுதுவதை நிறுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை. 

தினந்தோறும் பத்து பதினைந்து அனுபவ்ங்கள் கிடைத்தால் நம்மால் யோசிக்க முடியும்.  அதுவே நிமிடத்திற்கொரு முறை புதுப்புது அனுபவங்களாக கிடைத்துக் கொண்டேயிருக்க எதைப்பற்றி எழுத முடியும்.  அடுத்தடுத்து என்று தாவி ஓடிக் கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. இந்திய ஜனநாயகம் என்ற கேலிக்கூத்தில் உள்ளூர் தொழில் வாய்ப்புகளை ஒழித்த தீருவோம் என்று மத்திய மாநில அரசாங்கம் கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள மிகுதியாக போராட வேண்டியதாக உள்ளது. மின்தடை ஒருப்க்கம்.  மூச்சு முட்டும் அரசாங்க கொள்கைகள் மறுபக்கம்.  எல்லாமே மண்ணு மோகனின் கைங்கர்யம். அவரின் பெண்கள் வெளிநாட்டில் வசதியாக இருப்பதைப் போல இங்குள்ளவர்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலையாட்களாக இருந்து விட்டால் உள் நாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய் விடும் என்ற நல்ல எண்ணமாக நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு நிறுவனம். பத்தொன்பது துறை. பல்வேறு கிளைப்பிரிவுகள். ஏராளமான பணியாளர்கள். நிறுவன ஊழியர்கள் என்று ஒவ்வொரு நொடியும் நம்முடைய ந்யூரான்களுக்கு வேலை வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இரண்டு நாட்களாக எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்று நண்பர் உமர் அழைத்து நீண்ட நேரம் எப்போதும் போல பேசிக்கொண்டிருந்தார். திடீர் என்று அழைப்பேன்.  மே 17 இயக்க செயல்பாடுகளை விசாரித்து தெரிந்து கொள்வேன்.  இன்று பேசும் போது மே 17 இயக்க ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தார் சென்ற வருட்ம் நண்பர்களின் நிதியளிப்பு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

மே 17 இயக்கம் திருமுருகனை, உமருடன் சென்னையில் ஒரு அவசர சூழ்நிலையில் நண்பர் ராஜராஜனுடன் சந்தித்தேன். சென்னை உயர்நீதிமன்றம் மரச்சோலைகளுக்கிடையே பொறுமையாக அமர்ந்து நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன்.  அதற்கு சில நாட்கள் முன்பாக திருமுருகன் என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஈழ இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள சர்வதேச நாடுகளின் சுயநல வியாபார ஒப்பந்தங்களின் தொடரை படித்து சிலாகித்து பேசினார். என்னை அழைத்துச் சென்ற ராஜராஜன் என் குணாதிசியம் தெரிந்து ஜீ திருமுருகனிடம் பொறுமையாக பேசுங்க என்று சொல்லியிருந்தார். காரணம் திருமுருகனை சந்திக்கும் முன்பே உமருடன் ஈழம் தொடர்பாக, மே 17 இயக்கம் சார்பான எனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விடலாம் என்று மனதில் வைத்திருந்தேன்.  ஆனால் உரையாடல் பொறுமையாக நகர்ந்தது.

நான் திருமுருகனிடம் பேசிக் கொண்டிருந்த போது உமர் நீதிமன்றங்களின் வெளியே தெரிந்த அத்தனை வக்கில்களிடம் கொண்டு வந்திருந்த அத்தனை நோட்டீஸ்களையும் (நடந்து முடிந்த மெரினா கடற்கரையில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகாக) சேர்ப்பததில் குறியாக இருந்தார். நானும் அன்று மாலை சென்னையில் மெரினாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  அன்று அவசரத்தில் திருமுருகனிடம் பேச முடியாத பல விசயங்களை இன்று அலைபேசியில் உமருடன் பேசும் கேள்வியாகக் கேட்டேன்.  என்னுடைய ஒரே கேள்வி,

இது போன்ற நிகழ்ச்சிகளினால் ஈழ மக்களுக்கு என்ன லாபம்? வாழ்வு இழந்து நிற்கும் அவர்களுக்கு இது எவ்வகையில் உதவும்?  

காரணம் கடந்த மூன்று வருடங்களில் ஈழம் சார்ந்த நான் படித்த புத்தகங்கள் எண்ணில் அடங்காதது. நாலைந்து நாட்களுக்கு முன்பாக நிறுவனத்தில்  மாதம் ஒரு முறை இலங்கைக்கு சென்று வரும் மனிதவள துறை சார்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  மதுரையைச் சேர்ந்த அவர் அங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணிபுரிந்து கொண்டுருக்கிறார். என்னை விட பிரபாகரன் மேல் பற்றுள்ளவர். ஆனால் வெறித்தனம் இல்லாமல் உண்மையை ஆராயும் அக்கறை கொண்டவர்.இலங்கையில் உள்ள அத்தனை நிறுவனங்களுக்கு சென்று வருவதோடு அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் என்று அத்தனை பேர்களிடம் பேசி உண்மை நிலவரங்களை ஆராய்ந்து கொண்டிருப்பவர். என்னதான் பேசினாலும் மிகப் பெரிய இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த சிங்களரும் நடந்து கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசத் தயாராக இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகின்றது.  ஆனால் அத்தனையும் தனது குடும்ப சர்வாதிகாரத்தின் மூலம் ராஜபக்ஷே இன்று வரையிலும் சாதித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்று வரை ஈழம் குறித்து என்ன யோசித்தாலும் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.  துப்பறியும் தொடர் போலத்தான் முடிவே இல்லாமல் போய் இன்று கலைஞர் டெசோ என்று ஒரு புதிய புராணத்தை தொடங்கியுள்ளார்.  பாவம் ஈழ மக்கள்.  அவர்களை ஊறுகாய் போய இங்குள்ள ஒவ்வொரு அரசியல் வியாபாரிகளும் நக்கி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களையும், ஈழத்திற்குள்ளே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் எந்த விடிவு காலமும் வந்தபாடில்லை.  

வெறும் காட்சிகளாக, செய்திகளாக மாறி அனுதாபமாக மாறி இன்று அடப் போங்கப்பா...... என்று சாராசரி தமிழர்களுக்கு ஒரு சுவாரசியம் இல்லாத துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.  

ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கின்றேன்.  நாம் எடுத்த முடிவு எத்தனை தவறானது என்பதை மன்மோகனும் சோனியாவும் ஏதொவாரு சமயத்தில் உணர்வார்கள்.

அவர்களுக்கும் ராஜபக்ஷேவுக்கும் அடிப்பொடியாகவும் இருந்து தரகு வேலை பார்த்தவர்களும், இன்று வரைக்கும் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் காலம் நல்ல பாடத்தை கற்பிக்கும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

திருமுருகன் என்னுடன் பேசும் போதும் சரி, இன்று உமர் என்னுடன் உரையாடிய போதும் சரி, மே 17 இயக்க செயல்பாடுகள் குறித்து பொறுமையாக பல விசயங்களை புரியவைத்தார்.  இதையே அவர்களின் மே 17 இயக்க வலைதளத்திலும்  எழுதியுள்ளார்கள்.

கடந்து போன நான்கு மாதங்களில் உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிய நேரமில்லாமல் என்னுடைய பணிச்சுமையில் பலவற்றை மறந்துள்ளேன்.  மொத்தத்தில் பார்த்தால் எல்லாமே என் சுயநலம் சார்ந்த வாழ்க்கைக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் சுயநலமில்லாமல் மே 17 இயக்க நண்பர்கள் தங்களால் முடிந்த கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மே 17 இயக்க நண்பர்கள் நடந்து முடிந்த ஈழப் படுகொலையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களால் ஆன பல முன்னெடுப்புகளை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளின் மூலம் கவன ஈர்ப்பு மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழ இனப் படுகொலையை ஏதோவொரு விதத்தில் உலக நாடுகளுக்கு தூதரக செய்திகள் வாயிலாகவும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இனப்படுகொலையென்பது எந்த சூழ்நிலையிலும் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

இவர்களை, இவர்களின் நோக்கத்தினை, இந்த இயக்கத்தினை நாம் தாராளமாக விமர்சிக்கலாம், பாராட்டலாம்,  முடிந்தால் நிதியளிக்கலாம்.  காரணம் ஈழம் சார்ந்தவர்களிடம்,  புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்களிடமும்  எந்த நிதியை வாங்கக்கூடாது என்பதை தொடக்கம் முதல் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார்கள்.  மொத்தத்தில் சென்ற முறை மெரினாவில் கூடிய போது அதற்கான மொத்த செலவு தொகையை என் கையில் உமர் கொடுத்து வைத்து செலவளிக்கச் சொன்னார்.

உமரை முதன் முதலாக அப்போது தான் சந்தித்தேன். அவர் கொடுத்த பொறுப்பு கொஞ்சமல்ல நிறையவே அச்சப்பட வைத்தது.  காரணம் அங்கங்கே உளவுத்துறை அதிகாரிகளும் இயக்க நண்பர்களின் செயல்பாடுகளை மோப்பம் பிடித்தப்படியே இருந்தனர். ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.

அப்போது தான் தெரிந்தது கைக்காசை செலவு செய்து, கடன் வாங்கி, மொத்தமாக கடன் சுமைகளில் தான் இந்த இயக்க முன்னெடுப்புகளை நடத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் ஆதரவை அளிக்கவும்.  இணையத்தில் உங்கள் வாயிலாகவும் இந்த நிகழ்ச்சி குறித்து எழுதலாம்.  ஆதரவு என்பது கலந்து கொள்வதைப் போல அதற்குண்டான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் வழங்கலாம்.

இனி தொடர்ந்து நிறைய பேசுவோம்.

மே 17 இயக்கத்தின் வலைதளம்


தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்