Thursday, August 29, 2013

விதைகள் உறங்குவதில்லை

கடந்த 20 ஆண்டுகளில் வணிகம் என்பதன் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக 10 ஆண்டுகளில் வணிகம் என்பதே விளம்பரங்களின் அடிப்படையில் மட்டுமே என்கிற ரீதியில் தான் உருவாகியுள்ளது.  இன்று பொருளின் தரம் பின்னுக்குப் போய் அதை விளம்பரப்படுத்தும் விதம் தான் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

காய், கனிகள் முதல் வீட்டுக்குத் தேவைப்படும் விளக்குமாறு வரைக்கும் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கூவிக்கூவி வந்தது. வாரந்தோறும் சந்தையில் வாங்கிக் கொள்ள முடிந்தது.  ஆனால் நகரமயமாக்கல் இதை அத்தனையையும் அடித்து ஒடுக்கி விட்டது. இன்று வரையிலும் நம் வீட்டுக்கருகே தெருக்கடைகள் இருந்தாலும் மக்களின் ஆதரவு என்பது பெரிய கடைகளுக்குச் சென்று வாங்குவதே தரமானது என்ற எண்ணம் மேலோங்க இந்த வர்க்க பேதம் என்பது வசதிகளின் அடிப்படையில் உருவாகிவிட்டது.

தெருவில் வரும் காய்கறிகள் முதல் பழங்கள் வரைக்கும் கொண்டு வருபவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவளிப்பதுண்டு. இரண்டு காரணங்கள். ஒன்று அன்றைக்கு தேவைப்படுவதை மட்டும் வாங்கிக் கொள்ள முடியும். மற்றொன்று அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு நம் உதவிகளும் ஒத்துழைப்பும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.

ஆனால் சமீப காலமாக வரக்கூடிய காய்கள், பழங்கள் அனைத்தும் பலவிதங்களில் மாற்றம் பெற்றுள்ளதை கவனித்தால் நன்றாக புரியும். ஆப்பிள் என்ற பெயரில் பேரிக்காய் சுவையும், பேரிக்காய் என்ற ரூபத்தில் வினோதமான சுவையும் இருப்பதால் எது உண்மையான பழங்கள் என்பதை கண்டறிவது மிகவும் சவாலாகவே உள்ளது.  ஊரில் பார்த்த நாவல்பழ சுவையென்பதும் தற்போது விற்பனையில் உள்ள மிகப் பெரிய நாவல்பழத்தின் சுவையும் சம்மந்தம் இல்லாதது.

கிராமங்களில் காலையில் வீடு தேடி வரும் கீரைகளில் சில வகைகள் இருந்தன. அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை என்று விதவிதமாக இருந்தது.  அந்த கீரையின் இலையும், சிவப்பான தண்டும் கீரையை மூக்கின் அருகே கொண்டு சென்றால் ஒரு கவுச்சி வாடை வரும்.  அதுவே நல்ல கீரையின் அடையாளமாக கருதப்பட்டது.  ஆனால் தற்போது கீரைகளின் தன்மையும் ரூபமும் முற்றிலும் மாறி சமைத்தபிறகு கீரை என்ற பெயரில் ஏதோவொன்றாக உள்ளது.

கத்திரிக்காயில் இரண்டு வகை மட்டுமே இருந்தது.  நாட்டுக்கத்திரிக்காய் மற்றும் மூட்டைக்கத்திரிக்காய் என்பார்கள்.  இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மூட்டைக்கத்திரிக்காயை நறுக்கிப்பார்த்தால் விதைகள் அதிகமாகவும் பெரிதாகவும் இருக்கும்.  சுவை வேறுபட்டதாக இருக்கும். முன்பு நாட்டுத்தக்காளியின் சுவை என்பது ஒரு பழத்தை ரசத்தில் போட்டால் போதுமானதாக இருந்தது.  இன்று வந்து கொண்டிருக்கின்ற குண்டுத் தக்காளியை எத்தனை நறுக்கிப் போட்டாலும் எந்த பலனும் இருப்பதில்லை.

இயல்பான முருங்கைகாய் தற்போது கொடி முருங்கை என்ற பெயரில் நீளமாக மாறியுள்ளது. சமீபத்தில் நான் சாப்பிட்ட இது போன்ற ஒரு வகையான முருங்கை வயிற்றுப் போக்கை உருவாக்கியது.

இங்கிலிஷ் காய்கறிகள் மட்டும் குறைவான மாறுதல்களுடன் உள்ளது. 70 சதவிகித காய் கனிகள் அனைத்தும் மாற்றம் பெற்று விட்டது? மொத்தத்தில் நம்மைச் சுற்றிலும் உள்ள தாவரங்களின் அடிப்படைத்தன்மைகள் அனைத்தும் மாறிவிட்டது.

என்ன காரணம்?

தொடக்கத்தில் விதைகள் என்பது நம்மிடம் இருந்தது.  இன்று விதைகள் என்பது யாரோ ஒருவரிடம் இருக்கின்றது.  இந்த உண்மைகளும், இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இன்று உண்மையான சுவையுள்ள ஆப்பிளின் விலை கிலோ ரூபாய் 160. அதுவும் ஏற்றுமதியாகும் தரத்தில் இருக்குமா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  டீத்தூள் முதல் பழங்கள் வரை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நாம் உண்பது அனைத்தும் மிச்சமும் சொச்சமும்.  இது குறித்து கவலைப்பட இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை.  காரணம் இங்கே மூன்று வேளை உணவுக்கே பலரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால் இது போன்ற தேவையற்ற ஆராய்ச்சியில் பொதுஜனம் இறங்குவதில்லை.

அமெரிக்காவின் எண்ணெய் அரசியலைப் போல அடுத்து அந்த நாட்டின் நிறுவனங்கள் கையில் எடுத்திருப்பது இந்த விதை அரசியலையே.

ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இது போன்ற விபரங்கள் விஸ்தாரமாக வெளிவந்த போதிலும் தமிழர்களின் கேளிக்கை மனோநிலையில் காரணமாக தமிழ் பத்திரிக்கைகளுக்கு இந்த செய்திகள் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் தானோ என்னவோ தமிழர்களுக்கு இந்த விதை அரசியலின் முழு ரூபமும் இன்னும் புரிபடவில்லை.

என்னை விட வயதில் பல மடங்கு மூத்த, பல துறைகளில் உள்ள, சமூக அக்கறை கொண்டு பல நண்பர்கள் என் எழுத்தின் மூலம் அறிமுகமாகி அவர்களின் குழும மின் அஞ்சலில் என்னையும் ஒரு நபராக வைத்துள்ளனர். தினந்தோறும் இவர்கள் மூலம் பல தகவல்கள், படங்கள், கருத்துக்கள், படித்த முக்கியமான பத்திரிக்கை செய்திகள் என் மின் அஞ்சலுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றது.  பல சமயம் குறிப்பிட்ட சிலவற்றை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து கொள்வதுண்டு.  

குறிப்பாக தற்போது ஒரிஸ்ஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் சேலத்தில் உள்ள லெஷ்மணன் அவர்கள் மூலம் நான் அறிந்த தகவல்கள் கணக்கில் அடங்கா.  இதற்கு மேலும் இவர்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளை அந்த துறை சார்ந்த நபர்களுக்கு, அதிகாரிகளுக்கு தினந்தோறும் மின் அஞ்சல் வழியே அனுப்பிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

எப்போதும் போல இந்திய அதிகாரவர்க்கத்தினருக்கு இவற்றைப் பார்க்க நேரம் இருக்காது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

அடாது மழை பெய்தாலும் விடாது தினந்தோறும் செயல்பட்டுக் கொண்டு இருப்பதால் இவர்கள் மூலம் நான் பெற்ற ஒரு தகவல் மரபணு மாற்ற விதைகள் அதற்குப் பின்னால் உள்ள அரசியல். 

இந்த கோப்பு எனக்கு வந்து பல வாரங்கள் ஆன போதிலும் அதை ஒழுங்கு படுத்துவதில் உண்டான சவாலின் காரணமாகவும், அதை சரியான விதத்தில் பதிவாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த காடுகள் மற்றும் இயற்கை குறித்து ஒரு சிறிய தொடராக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  இதன் காரணமாக பல புத்தகங்களை வாசிக்க முடிந்தது.

இப்போது இந்த தொடரின் நீட்சியாக நான் பெற்ற கோப்பின் மூலம் உள்ள விபரங்களை ஐந்து பதிவுகளாக தொடர்ந்து வெளியிடுகின்றேன்.

இதை ஆவணமாக்கியவர் குறித்த விபரங்கள் 

நண்பர்களே,

இணைப்பில் பிராய் சட்ட வரைவு குறித்த தொகுப்பு உள்ளது. பிராய் குறித்த விமர்சனமாக மட்டுமில்லாது, அதன் பின்புலம், அதற்கான நெருக்குதல்கள் உள்ளிட்ட பலவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உடன்  ஆதார தரவுகளின் இணைப்புகளும் சேர்க்கப்படுள்ளது.

மான்சான்டோ இந்தியாவில் இருக்கும் வரை  பி.டி கத்தரி, பிராய் நம் தலை மேல் தொஙகும் கத்தி தான்..

செல்வம்

Ramasamy Selvam <organicerode@gmail.com>
R.Selvam,
Co-ordinator,
Tamil Nadu Organic Farmers Federation
Pudu Nilavu Food Forest,
Thalavu Malai,Arachalur,
Erode District,Tamil nadu,638 101
09443663562

இந்த தொடரில் ஏராளமான ஆவணங்கள் உள்ளது. பெரும்பாலும் ஆங்கில பத்திரிக்கையில் வந்த தகவல்களின் இணைப்புகள்.  தமிழ் பத்திரிக்கைகளில் இது குறித்த விபரங்களை நான் பார்த்தது இல்லை.

மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் சக்திகளை, இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை நான் ஏற்கனவே ஒரு தொடராக எழுதியிருப்பதை படித்து விட்டு தொடர்ந்தால் உங்களுக்கு இதற்கு பின்னால் உள்ள விபரீதங்களை புரிந்து கொள்ள முடியும்.   





இந்த தொடரின் முந்தைய பதிவுகள்


தரையில் இறங்கும் விமானங்கள்


கூடங்குளம் பிரச்சனை எப்படி இன்று விஸ்வரும் எடுத்து நம் முன்னால் நிற்கின்றதோ அதைப் போலவே இந்த மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் மூலம் விரைவில் இந்திய விவசாயம் என்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே இருக்கும் என்பதால் நிச்சயம் பலருக்கும் இந்த தொடர் பலன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த பதிவில்............

Wednesday, August 28, 2013

இன்னும் மூன்று நாட்களே உள்ளது

சென்னையில் வருகின்ற செப்டம்பர் 1(01.09.2013) அன்று நடக்கவிருக்கும் வலைபதிவர்கள் கூட்டத்திற்காக அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு, 

அனைவரும் வருக.





வருகையை உறுதிபடுத்த விரும்பும் பதிவர்கள் 
  
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

மதுமதி – kavimadhumathi@gmail.com

பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com

சிவக்குமார் – madrasminnal@gmail.com

ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com

அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com

பாலகணேஷ் – bganesh55@gmail.com

சசிகலா - sasikala2010eni@gmail.com

தொடர்புடைய பதிவுகள்


எழுத்தாளர் பாமரன் குறித்து அறிந்து கொள்ள

Monday, August 26, 2013

மலட்டுப் பூமியில் பாவத்தின் சாட்சியாய்......

சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விவாதத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி கொண்டு வர நினைக்கும் உணவு பாதுகாப்பு மசோதா குறித்து நாலைந்து பேர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ரசாயன உரங்கள் மூலம் நம் நாடு சென்று கொண்டிருக்கும் அழிவுப் பாதையை சுட்டிக்காட்ட மற்றொருவர் முதலில் இயற்கை விவசாயம் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும். காரணம் அது எந்த அளவுக்கு பலன் உள்ளது என்பதைப் பற்றியே அறியாமல் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றார். 

மேலும் இந்தியா சுதந்திரம் வாங்கிய போது இருந்த 30 கோடி ஜனத் தொகையானது இன்று 120 கோடிக்கு மேல் தாண்டி அடுத்த 20 ஆண்டுகளில் 140 கோடி மக்கள் என்ற எண்ணிக்கையை தொடும் இந்த நிலையில் இயற்கை விவசாயம் எப்படி இத்தனை பேர்களுக்கு உணவு தர முடியும்? என்றார்.

சரியோ தப்போ இன்றைய மக்கள் தொகை வளர்ச்சிக்குண்டான உணவு இருப்பு நம்மிடம் இருப்பதே மிகப் பெரிய சாதனை என்று முடித்தார்.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியா சந்தித்த பஞ்சங்களும், பட்டினியும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் சொல்லி மாளாதது. ஆனால் இன்று மிக மலிவானது அரிசியே.

அது விலையில்லா அரிசி என்கிற அளவுக்கு வந்துள்ளது.  

நாம் வாங்கும் விலையுயர்ந்த அரிசியை இந்த கணக்கில் கொண்டு வர வேண்டாம்.  அது நமது சுவை தேடலால் நாம் கொடுக்கும் விலையது.

இயற்கை விவசாயம், இயற்கையான வாழ்க்கை போன்றவற்றை எளிதாக நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் வாழ்ந்து பார்க்கும் போது தான் இதன் விளைவுகளைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்க முடியும்.  

கல்லூரி வரைக்கும் கிராமத்து வாழ்க்கை வந்தவர்களை இப்போது அதே கிராமத்தில் போய் நிரந்தரமாக வாழ முடியுமா? என்றால் அவர்களால் நிச்சயம் முடியாது தான் சொல்வார்கள்.  இரைச்சலும், தூசியும் இயல்பான ஒன்றாக பழகிவிட அமைதி கூட தற்போதைய வாழ்க்கையில் பேரமைதி போல நம்மை பயமுறுத்தும் நிலைக்கு நம் மனம் மாறியுள்ளது.  வசதிகளுக்கு பழகிய உடம்பு கிராமத்து வாழ்க்கையை வெறுக்கும்.

மனிதனின் மூன்று முக்கிய தேவைகளான உணவு என்பது ருசியின் அடிப்படையில், ஆடை  நாகரித்தின் வெளிப்பாடாகவும் மாறியுள்ளது. இருப்பிடம் அவரவர் வசதிகளை காட்டிக் கொள்வதாகவும் மாறியுள்ளது.

ஒவ்வொரு விசயத்தையும் நல்லது கெட்டது என்பதைப் போல நாம் அடையும் வளர்ச்சிக்குப் பின்னாலும் இரண்டு விசயங்கள் உள்ளது. 

இயற்கை மற்றும் செயற்கை. 

ஒரு விதையை இயல்பான நிலையில் வளரவிட்டு பெறும் ஆதாயம் என்பதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் அதையே செயற்கை வழியில் பல வழியில் உருமாற்றம் அடையச் செய்ய முடியும். விதையின் தன்மையை மாற்றுதல், செடியில் கலப்பினத்தை உருவாக்குதல், உருவான மரத்தில் மகசூல் அதிகரிக்க தேவைப்படும் செயற்கை முன்னேற்பாடுகளை உருவாக்குதல் என்று இன்றைய விஞ்ஞான அறிவின் மூலம் மனிதனால் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடிகின்றது.

இயற்கை என்பது குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டது.  எவரும் உருவாக்குவதில்லை. அது இயற்கையாக உருவாவது. பழமோ, காயோ குறிப்பிட்ட மாதம் வருடம் என்று காத்திருந்து பெற வேண்டியது என்ற சூத்திரப்படி காலம் காலமாக அதனை உடைக்காமல் வாழ்ந்த மனித சமூகம் அனுபவித்த பலன் குறைவாக இருந்தாலும் வாழ்ந்த காலம் முழுக்க அதன் பலனை அனுபவித்து வாழ்ந்தனர்.

தான் அனுபவித்து தன் தலைமுறைகளுக்கும் அளித்து மறைந்தனர்.  

ஆனால் விஞ்ஞானத்திற்கு அறநெறிகள் முக்கியமல்ல.  உடனடித்தேவை என்றொரு வார்த்தை தான் விஞ்ஞானத்தை இயக்குகின்றது. முடியாதது இங்கு எதுவுமே இல்லை என்ற விஞ்ஞான அறிவால் எல்லைகளை உடைப்பதும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இன்று வரைக்கும் இயற்கையை வெல்லும் அறிவை மனிதனால் வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இயற்கை அழிக்கப்படும் போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதுவே சமன் செயதும் கொள்கின்றது. இயற்கை என்பது உயர்ந்த மலையெனில் அதில் ஏறுபவர்களும், ஏறிக் கொண்டு இருப்பவர்களும் அவரவருக்கு புரிந்ததை, பார்த்ததை வைத்துக் கொண்டு தான் வென்று விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இன்னும் அறியாத ஆச்சரியங்கள் ஆயிரமாயிரம்.

இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்ற இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே முக்கியமானதாக இருக்கின்றது.

ஆனால் எது வளர்ச்சி? எப்படியான முன்னேற்றம் என்பது குறித்து எவரும் பேசுவதில்லை.  வளர்ச்சிக்கும் வீக்கத்திற்கும் உண்டான வித்தியாசங்களை உணர வாய்ப்பில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்றோம்.

தொழில் வளர்ச்சியால் நாம் பெற்ற பலன்களை, அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் பற்றி பேசும் போது அதன் விளைவுகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும்.

இன்று இந்திய நாணயத்தின் வீழ்ச்சிக்கு பின்னால் உண்மையான பல காரணங்கள் இருந்தாலும் அதையும் மீறி இன்று ஒரே பாடலை திரும்பத்திரும்ப பாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.  அதாவது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.  இறக்குமதியை குறிப்பாக எண்ணெய் சமாச்சாரங்களை குறைக்க வேண்டும் என்பதே. மேலும் நம்முடைய ஏற்றுமதி தான் உலக அரங்கில் இந்தியாவிற்குண்டான மரியாதையை தந்துள்ளது என்கிறார்கள்.

ஏற்றுமதி என்ற வார்த்தை இந்தியாவிற்கு எத்தனை பலனை தந்துள்ளதோ அந்த அளவுக்கு இந்தியாவை கொத்துக்கறியாகவும் மாற்றியுள்ளது.  இந்தியா என்பது மிகச் சிறந்த சந்தை என்ற நிலையை உருவாக்கியவர்களும், இந்தியாவில் உள்ள மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் இங்கே வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர்களும் உருவாக்கிய கொள்கைகளினால் அடுத்து வரும் தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் சிலவற்றைப் பேசலாம்.  

இன்று ஏற்றுமதி இறக்குமதி என்பது இயல்பான வார்த்தையாக மாறியுள்ளது. ஏற்றுமதி என்ற வார்த்தையினால் வளர்ந்த பல தொழில்கள் இருந்தபோதிலும் ஆய்த்த ஆடைகள் மற்றும் தோல் என்ற இருசமாச்சாரங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகள் மூலம் இந்தியர்கள் பலன் அடைந்ததை விட, நாட்டிற்கு கொடுத்த அந்நியச் செலவாணியை விட இந்த இரண்டு தொழில்கள் மூலம் இன்னும் பத்து தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் துன்பங்கள் அதிகம்.  

தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திண்டுக்கல், ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு போன்ற ஊர்களைச் சுற்றிலும் உள்ள நீர் ஆதாரங்களை இனி எந்த நிலையிலும் பழைய நிலைக்கு திரும்ப பெறமுடியாது. இதே போல திருப்பூரும்.

திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடைத் தொழில் மூலம் நேரிடையாக மறைமுகமாக லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதும், மத்திய அரசாங்கத்திற்கு இதுவொரு முக்கியத் லாபமீட்டும் ஊராக இருந்தாலும் இந்த தொழில் மூலம் சமூகம் அடைந்த எதிர்கால சமூகம் அடையப் போகும் துயரங்களை சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

திருப்பூரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஆய்த்த ஆடைத் தொழில் என்பது சமூகத்திற்கு இரு முனைத் தாக்குதல்களை கடந்த 25 வருடங்களாக நடத்திக் கொண்டு வருகின்றது. 

சாயப்பட்டறைகள் மூலம் நிலமும் நீரும் கெட்டுப் போகின்றது என்பது போன்ற பல சீர்கேட்டுச் சமாச்சாரங்களை போகிற போக்கில் படிக்க பழகி விட்டோம்.  ஆனால் இந்த தொழில் மூலம் நீரும் நிலமும் மாசடைந்து விட்டது என்பதைப் போல மற்றொரு பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்கின்றது.

பஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு செல்கின்றது. அது வேண்டிய துணியாக மாற நிட்டிங் என்ற பின்னலகம் வருகின்றது.  இந்த இரண்டு இடத்திலும் மின்சாரம் மட்டுமே முக்கியத் தேவையாக இருக்கின்றது.

ஆனால் இதற்குப் பிறகு இந்த துணி சாயப்பட்டறைகள், ஸ்டீம் காலண்டரிங்,, காம்பாக்ட்டிங், ட்ரையர் போன்ற பல உப தொழில்கள் முழுமையான துணியாக மாற உதவி புரிகின்றது.

இந்த அத்தனை தொழிலும் சுடுதண்ணீர் தேவை.

திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இது தவிர இது சார்ந்த உப தொழில்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்கள் தினந்தோறும் செயல்பட வேண்டுமென்றால் சுடுதண்ணீருக்காக பாய்லர் இரவு பகலாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பாய்லர் இயங்க கட்டாயம் விறகு தேவை. 

இந்த விறகை பெற தொடக்கத்தில் காங்கேயத்தில் காடு அழிப்பு வேலை தொடங்கியது.  படிப்படியாக நகர்ந்து கொண்டேயிருந்தது.  திருச்சி சென்று புதுக்கோட்டை வரை வளர்ந்தது. தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் சென்றது. அந்த வட்டம் முடிந்து தஞ்சாவூர் மாவட்டம் வரைக்கும் சென்று இன்று மேலும் மொட்டையடிக்க எந்த ஊர் இருக்கின்றது என்கிற அளவுக்கு தேடுதல் வேட்டை நடந்து கொண்டேயிருக்கின்றது.  உத்தேச கணக்காக ஒரு சாயப்பட்டறைக்கு தினந்தோறும் மிகக் குறைந்த அளவான ஒரு டன் என்கிற நிலைக்கு வைத்துக் கொண்டாலும் 700 சாயப்பட்டறைகள், இவற்றிக்கு மாதந்தோறும் தேவைப்படும் விறகின் அளவு என்பதை மனக்கணக்கில் கொண்டு வந்தால் தெரியும்.  இது தவிர உபதொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் விறகு என்கிற நிலையில் திருப்பூருக்குள் மட்டும் ஒரு நாள் வரும் விறகின் அளவு ஒரு லட்சம் டன். 

சாயப்பட்டறை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது அரசாங்க ஆதரவோடு பொது சுத்திகரிப்பு நிலையம் உருவானது.  ஏறக்குறைய 15 முதல் 20 வரையான சுத்திகரிப்பு நிலையங்கள் உருவானது. இது போன்ற இடங்களிலும் சாய நீரை சுத்திகரிப்பு செய்ய தேவைப்படும் விறகின் அளவு சொல்லிமாளாது.

திருப்பூரில் சில நிறுவனங்கள் மட்டும் ஆயில் மூலம் செயல்படும் ஹீட்டர் பயன்படுத்துகின்றது.  விறகு தேவைப்படாது.  எந்த நிறுவனமும் இது குறித்து யோசிப்பதே இல்லை. இது குறித்து சட்டங்களும் கண்டு கொள்வதில்லை.

சாயத்தண்ணீர் அணைக்கட்டில் சேர பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்த பிறகு மக்கள் எப்படி விழித்துக் கொண்டார்களோ அதே போல விறகை பயன்படுத்தும் முறைமையை அரசாங்கம் ஆப்படிக்கும் வரையிலும் இந்த அக்கிரமம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கப்போகின்றது.  

இழந்த காடுகள், இழந்த நில ஆதாரங்கள், பயன்படுத்தவே முடியாத நீர் என்று அத்தனையும் ஒன்று சேர்ந்து இன்று திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கருக்கலைப்பும், கரு உருவாகத சூழ்நிலையும், ஆண், பெண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.  கேன்சர் என்பது இயல்பான நோயாக மாறியுள்ளது. உப்பு அடர்த்தி அதிகமுள்ள நீரை குடித்து குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தலை முடியைப் போலவே மூளையும் மழுங்கிக் கொண்டே வருகின்றது. தினந்தோறும் இந்த மாவட்டத்தில் பிறக்கும் குழ்ந்தைகளில் ஊனத்தோடு பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அந்நியச் செலவாணி கொடுத்த ஏற்றுமதியின் முக்கிய பலன் இதுவே.

இந்த இரண்டு தொழில் மட்டுமல்ல.  

ஏற்றுமதி, அந்நியச் செலவாணி என்கிற போர்வையில் உள்ள பெருந் தொழிலுக்குப் பின்னால் உள்ள அத்தனையிலும்  உள்ள முக்கிய லாபங்கள் குறிப்பிட்ட சிலருக்கும், வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் மட்டுமே போய்ச சேர 90 சதவிகித மக்கள் மூன்று வேலை சாப்பாட்டுக்காக மட்டுமே வாய் மூடி மெளினியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.    

வளர்ந்த நாடுகளில் இயற்கையை வணங்குவதில்லை.கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஆனால் இங்கு சட்டங்கள் எப்போது போல இருட்டுக்குள் இருப்பதால் நாம் இருண்ட காலத்திற்கே பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆளத் தொடங்கியது முதல்  மொத்த இந்தியாவையும் இருண்ட காலத்திற்குள் வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உருவாக்கிய சாலை வசதிகள், ரயில் பாதைகள் அனைத்தும் இங்குள்ள செல்வத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல உருவாக்கினார்களே தவிர இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

அவர்கள் உருவாக்கிய ஒவ்வொரு திட்டத்திற்கும் பின்னாலும் ஓராயிரம் திருட்டுத்தனங்கள் இருந்தன. விளைந்த தானியங்களை கப்பலேற்றி விட்டு செய்ற்கையாக உருவாக்கிய பஞ்சாத்தால் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல லட்சம் இந்தியர்கள் மடிந்தனர். சுரண்டப்பட்டு இனி இங்கு எதுவும் இல்லை என்கிற நிலைக்கு வந்த பிறகு தான் இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது.  

ஏறக்குறைய திருவோடு கையில் ஏந்தும் நிலைமை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அன்று இருந்த அவசரத்தில் உருவாக்கிய பசுமைப் புரட்சியின் முழுமையான பலனை இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். மலட்டுப் பூமியில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

இந்த மலட்டுத் தன்மையை மேலும் வளர்க்கவே ஆட்சியாளர்கள் அடிவருடிகளாக மாறி வளர்ந்த நாடுகள் உருவாக்கிய மரபணு விதைகளை இங்கே கொண்டு வந்து அவர்களுக்கு கூலியாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.

கலப்பின விதைகள் மூலம் நாம் பெறும் பலன் அதிகம் தானே என்று சொல்ல நினைப்பவர்கள் ஒரு சிறிய விதையில் தாங்கள் விரும்பும் லாப நோக்கத்துக்காக ஒரு நாட்டையே மாற்ற முடியும் என்பதற்கும், ஒரு பெரிய நாடு ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையே சார்ந்து வாழ வேண்டியதாக இருக்கும் என்பதை நம்ம முடியுமா? அதைப்பற்றி தான் பேசப்போகின்றோம்.

அது மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச நிறுவனங்களின் நிலைப்பாடுகள் உங்களுக்கு தெரியும் போது பல உண்மைகள் புரியும். ..............

அது குறித்து சிலவற்றை அடுத்த பதிவில்................

இந்த தொடரின் முந்தைய பதிவுகள்....



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


Sunday, August 25, 2013

ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்


ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான, தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார். 

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை நான் தோற்றுக் கொண்டே இருந்தேன் என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் - வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் டாலர் நகரத்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் கருணா என்னும் கூலி என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை. 

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு (அத்தியாயம் நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும். நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு, உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன.

இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன். 

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்

ரஞ்சனி நாராயணன். பெங்களூர்

ஜுனியர் விகடன் விமர்சனம்
தினமலர் விமர்சனம்
தி ஹிண்டு விமர்சனம்

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

புத்தகம் பெற்ற அமேசான் காம்

திருப்பூரில் மகேஸ்வரி புத்தக நிலையம்.

நண்பர்களின் விமர்சனங்கள் படிக்க

தமிழ் இளங்கோ

கவிப்ரியன் 1

கவிப்ரியன்

சுரேஷ்குமார்   

காசி ஆறுமுகம்  

சீனு  

சுடுதண்ணி  

சம்பத்  

வெட்டிக்காடு ரவி 

சௌம்யன்

அகலிகன்

உஷாராணி

அபிஅப்பா

மெட்ராஸ்பவன் சிவகுமார்

Friday, August 23, 2013

பொன் முட்டையிடும் வாத்து

அமேசான் காடுகள் என்றால் படித்தவர்களுக்கு ஹாலிவுட் பட உபயத்தின் மூலம் கொஞ்சமாவது தெரிந்துருக்க வாய்ப்புள்ளது.  அதேபோல போர்னியோ (BORNEO) குறித்து தெரிந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.

போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. 

அமேசான் காடுகளுக்கு அடுத்து கன்னிக்காடுகளை கொண்ட பெரும் நிலப்பரப்பு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு இன்று இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாக அது பகுக்கப்பட்டுள்ளது. கன்னிக்காடுகள் என்பது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அல்லது இதுவரையிலும் இது போன்ற இடங்களில் எவரும் நுழையாத பகுதிகளாக இருப்பவை.

மாபெரும் உயிர் மண்டலத்தை தன்னகத்தே கொண்டது போர்னியோ காடுகள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாத இந்த பகுதிக்கே உரிய திணை உயிரினங்களும் இதில் அடக்கம்.  மனிதனின் கண்ணில் படாத உயிரினங்கள் இது போன்ற இடங்களில் அதிகமாக வாழ்கின்றன. அறியப்படாத ஆச்சரியங்கள் அதிகம் உள்ள பகுதி இது.

இவ்வகையில் 44 வகை பாலூட்டிகளும், 37 வகை பறவைகளும், 19 வகை மீன்கள் மற்றும் நீர்நில வாழ்வனவும் இங்குள்ளன.

இங்கு இன்னமும் கண்டுபிடிக்கப்படாத, வகை பிரிக்கப்படாத உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இவ்வளவு உயிர்ச் செறிவு கொண்ட காடு தான் இப்போது அழிவை எதிர்நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த இக்காடு 2005 ல் 50 சதவிகிதமாக குறைந்தது.  2020 ஆம் ஆண்டு இது 32 சதவிகிதமாக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாம் ஓரு அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது சில வித்தியாசமான சூழ்நிலை அங்கேயிருப்பதை உணர முடியும். உயர்ந்த மரங்கள்.  சூரியனின் கதிர்கள் கூட தரையில் வந்து சேர முடியாத அளவிற்கு மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்திருக்கும்.

நடந்து செல்லும் தரைப்பகுதியில் நிரந்தரமாக ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். சுவாசிக்கும் காற்றில் எப்போதும் ஜில்லென்று இருக்கும். மொத்தத்தில் வெப்பக்காற்றுக்கு தடா.

காரணம் என்ன?

"போன வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகம்"

நகர்ப்புறத்தில் கோடைகாலத்தில் எல்லோரும் சொல்லும் வார்த்தை

ஆனால் சூரியனின் கதிர்கள் காற்றை நேரடியாக வெப்பமூட்டுவதில்லை. அது வெறும் நிலத்தில் பட்டு அதன் மூலம் நிலம் சூடாகி அதனால்அதனையொற்றி உள்ளக் காற்றும் சூடாகி மேலேறுகிறது. அப்படி லேலேறிய காற்றால்தான் வளிமண்டலம் வெப்பமடைகிறது

ஆனால் நிலம் கட்டாந்தரையாக இல்லாமல் மரங்களால் சூழப்பட்டு இருந்தால் அதன் வெப்பநிலை ஒரு மட்டத்துக்கு மேல் உயரமுடியாது. ஏனென்றால் மரங்கள் நீராவியை வெளியிட்டு தன்மீது விழும் வெப்பத்தை குறைத்துக் கொள்கின்றது.

காடுகளில் உள்ள  மரங்களின் உயரமும் அடர்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க அதன் உட்புற குளுமையும் அதிகரிக்கிறது.  காடுகள் குளுமையாக இருப்பதன் ரகசியம் இது தான்.

மனிதர்களின் வாழ்க்கையில் கடலும் காடும் மிக மிக முக்கியமானது. நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இவை இரண்டுமே முக்கியப்பங்கு வகிக்கின்றது.

ஆனால் நாகரிக வளர்ச்சியில் முதலில் பாதிக்கப்படுவது இந்த இரண்டுமே. தற்போது காடுகள் என்றால் அதனை வெட்டு மரங்கள் அதிகம் கிடைக்கும் என்பதாகவும் கடல் என்றால் கழிவுகளை அங்கே கொண்டு போய் சேர்த்து விட்டால் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற பொதுப்புத்தியைத் நாகரிகம் நமக்கு கற்றுத் தந்துள்ளது.

காடென்பது வெறுமனே மரங்களுடன் முடிந்து விடுவதல்ல. அதுவொரு பெரிய இயற்கை சுழற்சியின் ஆதாரம். பல உயிர்கள் சேர்ந்து வாழும் கூட்டுக்கலவை. இதனை பல்லுயிர் பெருக்கம் என்கிறார்கள். காட்டை அழிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது இந்த பல்லுயிர் பெருக்கமே.

பல்லுயிர் பெருக்கம் சிதைக்கப்படும் போது  இயற்கை சுழற்சி பாதிக்கப்படுகின்றது.

இதனால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை இயற்கை பலமுறை நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டேயிருந்தாலும் பேராசை கொண்ட மனித வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு அவலமும் மறக்கக்கூடியதாகவே இருப்பதால் காடுகளும் கடல்களும் இன்று கதறிக் கொண்டு இருக்கின்றது. 

உலகில் உள்ள மழைக்காடுகளை வெப்ப மண்டல காடுகள், மித வெப்ப மணடல காடுகள் என்று இரண்டாக பிரித்துள்ளனர்.  ஒரு காலத்தில் புவியின் மொத்த பரப்பில் 14 சதவிகிதம் மழைக்காடுகள் இருந்தன. தற்போது இது சுருங்கி 6 சதவிகிதம் என்கிற அளவிலே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதுவே துல்லிய விபரமாக இருக்காது.  நாளுக்கு நாள் உலகில் உள்ள காடுகளை வளர்ச்சியின் காரணமாக மனித சமூகம் தினந்தோறும் சூறையாடிக் கொண்டிருப்பதால் இறுதியான கணக்கு என்பது எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது.

காடுகளை அழிக்கும் போது மரங்கள் மட்டும் மரணிப்பதில்லை.

சூரிய ஒளி புகாத மழைக்காட்டுக்குள் இலை தழைகள் கீழே விழுந்து அதன் மேல் பறவைகள் விலங்குகளின் கழிவுகள் கலக்கின்றது.

இவை நுண்ணியிர்களால் உருமாற்றம் அடைந்து மக்கி மேல்மண் படிவு உண்டாகின்றது. இந்த மேல் மண் படிவு வளமான சத்துக்கள் நிறைந்தது. அப்படி அரை அங்குல மண்ணை உருவாக்குவதற்கு ஒரு மழைக்காடு ஆயிரம் ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறது. போர்னியோ காட்டுக்குள் இது போன்ற மண் படிவு சுமார் ஒரு  அடி உயரத்துக்கும் கூட இருக்கும்.

இது போன்ற இடங்களைத்தான் வளர்ந்த நாடுகள் குறிவைத்து மரங்களை அழித்து இந்த இடங்களில் வணிக பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

இந்த இடங்களில் மழை நேரிடையாக தாக்கத் தாக்க அக்காடுகளின் மரக்கவிகை (ஒரு வளர்ந்த உயர்ந்த மரத்தின் மேல்பகுதி) தடுப்பால் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த வளமான மேல்மண்படிவு மண்ணரிப்பு மூலம் அகற்றப்படுகிற்து. நாளடைவில் நிலம் தன இயல்பான வளத்தை இழக்கின்றது. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் வளராத நாடுகளை நோக்கி வளர்ச்சியடைந்த நாடுகள் எப்போதும் ஒரு குற்றச்சாட்டு வைப்பதுண்டு.  அதாவது இந்த நாடுகள் சுற்றுசூழலை பாதுகாப்பது இல்லை என்று.  ஆனால் இன்று உலகில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா?  வேறு யார்? எல்லாம் நம்ம பெரியண்ணன் அமெரிக்கா தான்.

ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வருமானத்தை காட்டிலும் ஒரு காட்டில் உள்ள உபரிப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பல மடங்கு அதிகம்.  நம்முடைய ஆசைகள் என்பது உடனடியாக வேண்டும் என்ற பறந்து பட்ட சிந்தனையில் இருப்பதால் மரங்கள் அறுபடுகின்றது. 100 ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் அறுபட்டு கீழே விழும் போது அந்த காடு முழுக்க கேட்கும் ஓசை என்பது எதிர்கால சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடும் மரணயோசையின் துவக்கம்.

இயற்கை வளங்களை அழிக்காமல் நம்மால் வாழ முடியுமா?

அடுத்த பதிவில்........

தரையில் இறங்கும் விமானங்கள்

காடு என்பதை எதைச் சொல்வீர்?

Wednesday, August 21, 2013

காடு என்பதை எதைச் சொல்வீர்?

குழந்தைகளின் பாடப்புத்தகம் முதல் பேருந்துகளின் பின்புறம் வரைக்கும் தவறாமல் இடம் பெறும் வாசகம்

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்"  

பெரும்பாலும் மரங்கள் இருந்தால் தான் மழை பெய்யும் என்பதோடு நம்முடைய சிந்தனை நிறுத்தப்பட்டுள்ளது.  இது தவிர காட்டுப்பகுதி என்றால் சுற்றிப் பார்க்கலாம் அல்லது சுகாதாரமான காற்று என்பதோடு கொஞ்சம் சிலர் யோசிக்கக்கூடும்.  

ஆனால் காடுகளைப் பற்றியோ அதன் உண்மையான சித்திரத்தைப் பற்றியோ படித்தவர்களுக்குக் கூட முழுமையாக புரியுமா? என்பது ஆச்சரியம்.  

காரணம் படித்தவர்கள் எப்போதும் போல வளர்ச்சி குறித்து சிந்திக்க, படிக்காதவர்கள் அத்தனை பேர்களும் கிராமத்தில் குந்திக் கொண்டு பேச இந்த மரங்கள் பயன்படுகின்றது என்கிற ரீதியில் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்திவிட முடிகின்றது.

நான் வாழும் பெருநகரங்களில் நாள்தோறும் உருவாகும் வளர்ச்சி, காங்கீரிட் காடுகள், நகர மயத்திற்கு பலியாகும் மரங்கள் என்பதை பார்த்துக் கொண்டே வந்தாலும் நான் வாழ்ந்த ஊருக்கு சென்று திரும்பும் போது அங்கே பார்க்கும் காட்சிகள் தான் அதிக ஆதங்கத்தை உருவாக்குகின்றது.  

கிராமங்கள் தனது அடையாளத்தை இழந்து விட மனிதர்களும் கிராமத்தை விட்டு வெளியே வந்து விட ஆளில்லா பெரிய வீடுகளும், பேச்சுத் துணைக்கு ஆளில்லா முதியவர்களும் வாழ்வதற்கான இடமாக இன்றைய கிராமங்கள் இருக்கின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.  

காரணம் சீக்கிரம் வளர வேண்டும். மனதில் நினைப்பதை உடனே அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏராளமான ரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதால் இங்கே வளர்ச்சி என்ற சொல்லைத் தவிர வேறொன்றையும் எவரும் நினைத்துப் பார்க்கத் தயாராக இல்லை என்பது தான் எதார்த்தம்.

எல்லாவற்றையும் பெற்று விடுவோம். ஆனால் இழந்த இயற்கையை மீண்டும் பெற்று விடமுடியுமா? என்ற கேள்வி மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்க அது குறித்த விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு நான் வைத்துள்ள புத்தகங்களில் தேடிப் பார்த்தேன். 

திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய மழைக்காடுகளின் மரணம் (பூவுலகின் நண்பர்கள் வெளியீடு) என்ற புத்தகம் என் பார்வையில் பட்டது.  ஆசிரியர் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, மொத்தமாக நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை தடுக்க முடியாதவராக அதை விட்டு வெளியே வந்து தற்போது தான் கண்ட ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்துவதில் முழு நேரத் தொழிலாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார். 

தற்போது நன்னிலத்தில் வசிப்பதோடு முழு நேரமாக இந்த இயற்கை சார்ந்த விசயங்களுக்காக மாநாடு, கருத்தரங்கம், எழுத்துப்பணி என்று தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

பெரும்பாலும் இயற்கையை நேசிப்பவர்கள் இயற்கையாகவே அவர்களின் வாழ்க்கையும் மாறிவிடும் என்பதற்கு அவரோடு உரையாடிய போது புரிந்து கொள்ள முடிந்தது. அவர் எழுதியுள்ள சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் இயற்கைக்கு எதிரான சவால்கள் இங்கே ஏராளமாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  விஞ்ஞானத்தின் வளர்ச்சி இங்கே ஏராளமான வசதிகளை வாய்ப்புகளை தந்து கொண்டேயிருந்தாலும் இந்த நிமிடம் வரைக்கும் இயற்கையை முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  அதை வெல்லவும் முடியவில்லை.

வளர்ச்சி வளர்ச்சி என்கிறோமே, இந்த செய்தியை கேளுங்கள்.

அமேசான் காட்டுக்குள் சில ஆயிரம் சதுரை மைல் காடுகளை ஓரிடத்தில் அழித்தார்கள்.  எதற்கு அய்யா அழிக்கிறீர்கள் என்றுக் கேட்டால், தொழிற்சாலை அமைக்கின்றோம் என்றார்கள்.  அது தான் வளர்ச்சி ஆயிற்றே எதுவும் கேட்கக்கூடாது என்று பேசாமல் இருந்தால் அதைச் சுற்றிலும் இருந்த மழைக்காடுகளில் இருந்து நாளொன்றுக்கு ஈராயிரம் டன் எடையுள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள். 

பதறிப் போய் இது எதற்கு? என்று கேட்டால் மரக்கரி தயாரிக்கிறோம் என்றார்கள்.  மரக்கரி எதற்கு என்றால் அதை எரித்து நாளொன்றுக்கு 55 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றோம் என்றார்கள்.  

மின்சாரம் எதற்கு? அந்த தொழிற்சாலையை இயக்குவதற்காம்.  அப்படியானல் அந்த தொழிற்சாலையை தொடர்ந்து இயக்குவதற்கு எவ்வளவு காடுகள் தொடர்ந்து அழிக்கப்படவேண்டும்.  அது என்ன தொழிற்சாலை? எஃகு தொழிற்சாலை.  அந்த எஃகு என்ன ஆகிறது? ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதை வைத்து அங்கு கார்கள் தயாரிக்கின்றார்கள்.  

அந்த கார்களை அங்கிருந்த இறக்குமதி செய்து கொண்டு நாம் சொகுசாக வாழ்கிறோம்.

நம் ஆடம்பர சொகுசுக்கு கொடுக்கும் விலையோ நாம் உயிர் வாழ அடிப்படைக் காரணமாக  இருக்கும் உயிர்வளி.

உயிர்வளி என்றால் என்ன?

காற்றில் 21 சதவிகிதம் தான் நாம் சுவாசிக்கும்  உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருக்கிறது.  இந்த அளவும் கூட மரங்களும், இதர தாவரங்களும் நமக்கு கொடுக்கும் பிச்சையினால்தான் கிடைக்கின்றது. அவை தான் கரியமில வாயுவை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இந்த உயிர்வளியை சக்கையைப் போல நமக்காக தொடர்நது துப்பிக் கொண்டே இருக்கின்றது. 

நம்முடைய உடலில் இருக்கும் நுரையீரலைப் போல இந்த உலகத்திற்கும் ஒரு நுரையீரல் இருக்கிறது.

உலகின் நுரையீரல் எனப்படுவது அமேசான் மழைக்காடுகளே. 

இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கு தேவையான மொத்த உயிர்வளியில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தி ஆகிறது. உலகில் உள்ள மற்ற காடுகள், கடல் தாவரங்கள் ஆகியவை இணைந்து மீதமுள்ளவற்றை உற்பத்தி செய்து நாம் சுவாசிக்கத் தருகின்றது.  இப்படிப்பட்ட காடுகள் தான் இன்று அழிவுக்கு உள்ளாகி வருகின்றது.

காகிதம் தயாரிக்க என்பது போல ஒவ்வொன்றுக்கும் இன்று காட்டை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

பிரிட்டன் நாட்டில் செயல்படும் பார்க்லேஸ் வங்கி போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் லத்தின் அமெரிக்கா நாடுகளிடம் "காட்டை எங்களிடம் தாருங்கள். நாங்கள் மனிதர்களுக்கு தேவையான உணவை தயாரித்து தருகிறோம்" என்றார்கள்.

லத்தின் அமெரிக்க நாடுகளும் தங்கள் பங்குக்கு வரிவிலக்கு, மானியம் போன்ற சலுகைகளை வாரி வழங்கின.  முதலில் காடுகளை அழித்து அவற்றை மேய்ச்சல் நிலங்களாக மாற்றினார்கள்.  அதில் இறைச்சிக்காக கால்நடைகளை வளர்த்தார்கள்.  மக்களுக்கான இறைச்சியை மலிவாக ஏற்றுமதி செய்தனர்.  

எந்த ஊர் மக்களுக்கு?

அதுதான் செய்தியே.  வளர்ந்த நாடுகளின் மக்களுக்குத்தான். 

லத்தின் அமெரிக்க அரசுகளுக்கு கிடைத்ததோ சொற்ப லாபம் மட்டும் தான். அந்நாட்டு மக்களின் வரிப்பணத்தை அரசு சலுகைகள் என்ற பெயரில் சுருட்டிக் கொண்டு அந்த அந்நிய நிறுவனங்கள்தான் உண்மையில் கொழுத்த லாபத்தை அறுவடை செய்துக் கொண்டன.

நிலங்கள் சத்து இழக்க நிறுவனங்கள் மூட்டை கட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்கு சென்று விட்டன. இப்படி வளம் உறிஞ்சப்பட்டு ஒரு காலக்கட்டத்தில் தரிசாகக் கைவிடப்பட்ட இப்படிப்பட்ட நிலங்களின் பரப்பு பிரேசிலில் மட்டும் சமார் 63 000 சதுர மைல்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சுவராசியம் உண்டு.

ஜெர்மானியர்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும்.  ஆனால் ஐரோப்பாவில் வாழைப்பழங்கள் விளைவது இல்லை.  பணக்கார ஜெர்மானியர்களின் உணவில் அவசியம் வாழைப்பழம் இருந்தே ஆக வேண்டும்.  அதுவும் நல்ல நீளமான கொழுத்த இயற்கை சுவையுள்ள வாழைப்பழங்கள் தான் வேண்டும்.  

அது எப்படி கிடைக்கும்.  

ஒரு மழைக்காட்டை அழித்தவுடன் அந்நிலத்தில் முதன் முதலாக பயிர் செய்யப்படும் வாழையிலிருந்தே அத்தகைய பழங்கள் கிடைக்குமாம்.  ஒரு நிலையில் வாழைப்பழங்கள் கிடைக்காமல் போகவே அதைப் பயிரிடுவதற்காகவே அமேசானின் காடுகளை அழிக்கத் தொடங்கினார்கள்.  காடுகள் அழிந்தாலும் பரவாயில்லை.  

நமக்கு தேவை வாழைப்பழம் தான் என்ற உரந்த எண்ணத்தின் வரலாற்று பதிவு இது.

அமேசான் காடுகள் என்ற வார்த்தையில் இந்தியாவை வைத்தும் நாம் பார்த்துக் கொள்ள முடியும். கூடவே வடகிழக்கு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றோம் என்று சொல்லும் மத்திய அரசாங்கத்தையும் நாம் நினைத்துக் கொள்ளலாம். மனதில் வந்து போகும் போராட்டங்களையும் உயிர்ப்பலிகளையும் மனதில் கொஞ்சம் நிறுத்திப் பார்க்கலாம்.  தப்பில்லை.


Monday, August 19, 2013

விகடன் விமர்சனம்




கடந்த 24.07.2013 அன்று ஜுனியர் விகடனில் ஜு.வி. நூலகம் பகுதியில் வெளிவந்த டாலர் நகரம் புத்தகம் குறித்த விமர்சனம் இது.

வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம் இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. `"திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்" என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள்.  

ஆனால் இன்று அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன் தன்னுடைய அனுபவங்களின் மூலமாக திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார்.

"வேலையிருந்தா போட்டுக் கொடுங்கண்ணே...." எனக் கேட்டபடி சட்டென என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.  செய்து கொண்டிருந்த வேலை மீதான கவனம் சிதறியது. அனுமதி பெறாமல் கண்ணாடிக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல் உடைப்பது போல திறந்து உள்ளே வந்து நின்ற அவனுக்கு வயது அதிகபட்சம் 14 இருக்கலாம். செம்பட்டைத் தலையுடனும் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்தி நிறுத்தியிருந்த அழுக்கான சட்டையுடனும் நின்றான்". என்று இவர் வர்ணிக்கும் காட்சி  திருப்பூரில் நித்தமும் நடப்பது.  

இத்தகைய சின்னஞ்சிறுவர்கள்  எப்படியெல்லாம உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

"திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்" என்கிறார்.  

வறுமை அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது.

பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார்.  இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு இந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்து விடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை மனதை ரணம் ஆக்குகிறது.

மின்வெட்டு, சாய்ப்பட்டறைகள், மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீப காலமாக பெரும் சரிவை அடைந்தது.  திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர்.  வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர்.  

வெள்ளி சனி ஆகிய இரடு நாட்களும் சம்பளநாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும்.இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. 

புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர் 

தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த புத்தகம் இருக்கிறது.





Sunday, August 18, 2013

தரையில் இறங்கும் விமானங்கள்

வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்த காரணத்தால்  இன்னமும் மழையை விட வெயில் ரொம்பவே பிடிக்கும்.  உடம்பில் கசகசக்கும் வியர்வை வழிந்தோடினாலும்  வீட்டுக்குள் நுழைந்தால் ஆடைகளை கழட்டி விட்டால் போதும்.  குளிர் அப்படியல்ல. எலும்பு வரைக்கும் ஊடுருவும். வெயில் தான் என்னை வளர்த்தது. இன்று வெயில் இருந்தால் தான் வாழ முடியும் என்ற தொழிலிலும் இருக்கின்றேன். 

வானம் பார்த்த பூமி, வறப்பட்டிக்காடு, பொட்டல் காடுகள், கருவேலமரங்கள் சூழ்ந்த பூமி என்று வாழ்ந்த பூமியை விட வாக்கப்பட்ட இடத்திற்கு மாறிய போது மனமும் உடலும் மாறத் தொடங்கியது.  மனம் சுகத்தை எதிர்பார்க்க வசதிகள் வந்து சேரும் போது இங்கே எல்லாமே மாறத் தொடங்கி விடுகின்றது.  

கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த போது எழுத்தாளர் இந்துமதி எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்" என்ற புத்தகத்தை  யாருமே இல்லாத நூலகத்தில் வைத்து ஒரு மதிய வேளையில் தான் முதன் முதலாக அந்த புத்தகத்தை படித்தேன்.  

பலதடவை படித்துள்ளேன். கல்லூரி முடித்து வெளியே வந்து இலக்கின்றி சுற்றிக் கொண்டிருந்த போதும் படித்துள்ளேன்.   

மதிய நேர வெய்யிலை அதன் சுகத்தை  இந்துமதி விவரித்து இருப்பார். இன்று வரையிலும் இந்த புத்தகம் கொடுத்த தாக்கம் போல வேறு எந்த புத்தகமும் எனக்கு தந்ததில்லை. இதன் தலைப்பு கூட இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சொல்வதாகத்தான் உள்ளது.

இப்போது வெய்யில் மட்டுமல்ல மழையும் கூட உடம்புக்கு சவாலாகத்தான் இருக்கின்றது. நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து வாழ்ந்த காலங்கள் மாறி நமக்கு ஏதாவது வந்துட்டா? என்று யோசிக்க வைக்கின்றது. பயம் தான் வாழ்க்கையின் ஆதாரமாக மாறிப் போக அத்தனையும் படபடப்பாக மாறிவிடுகின்றது. 

உயர்வான நிலையில் உள்ள எவரை வேண்டுமானாலும் சந்தித்துப் பாருங்கள்? 

ஒரு படபடப்பு அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சேர்த்து வைத்ததை காப்பாற்ற வேண்டிய துடிப்பும், பணிபுரியும் வேலையில் தினசரி சந்திக்கும் அவஸ்த்தை என நிலையில்லாமல் தான் இருப்பர். 

யாருக்குத்தான் இங்கே பதட்டமில்லாமல் வாழ முடிகின்றது? 

ஒவ்வொரு சமயத்திலும் விஞ்ஞானம் தந்த முன்னேற்றத்தை வளர்ச்சி என்கிறோம்.  இந்த விஞ்ஞானப் பறவையில் பறந்து முன்னேறியவர்களை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கின்றோம். நாம் தான் இத்தனை வருடங்கள் பின்தங்கி விட்டோம் என்று அங்கலாப்புடன் அலுத்துக் கொள்கின்றோம். கூடவே நம்மாளுங்க திங்க மட்டுமே லாயக்கு என்று நெட்டி முறிக்கின்றோம்.

ஆனால் இந்த வளர்ச்சிக்காக நாம் என்ன விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்?

1990 க்குப் பிறகு இந்தியாவை உலக நாடுகளிடம் அறிமுகம் செய்து வைத்து காட் ஒப்பந்தம் என்ற கடவுளை அறிமுகம் செய்து வைத்தனர்.  வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது.  அப்போது தான் வினைகளும் நமது வாழ்க்கையின் ஒரு அங்கத்தினராக மாறத் தொடங்கியது.  ஆனால் அப்போது அது குறித்து எவரும் அதிகமாகஅலட்டிக் கொள்ளவில்லை. 

காரணம் எளிமையானது.

எல்லோரும் எப்போதும் சொல்லும் அதே தத்துவம் தான்.

ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்.

ஒன்று இரண்டையா இழந்துள்ளோம்?  

நம்மைச் சுற்றிலும் உள்ள காற்றைத் தவிர அத்தனையும் இன்று காசு கொடுத்தே பெற முடியும் என்கிற சூழ்நிலையில் இந்த வளர்ச்சி நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

நம் வாழ்க்கை நம் ஆரோக்கியம் என்று பேசத் தொடங்கி தற்போது நம்முடைய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் ஆடம்பரத் தேவையாக மாறி ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு மாதமாகத்தான் வீட்டில் தண்ணீருக்கென தனியாக ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. மாதச் செலவில் இந்த தொகை சிறிய அளவாக இருந்தாலும் மனதில் உருவாகும் குற்ற உணர்ச்சிக்கு அளவேயில்லை.  

சுடுதண்ணீர்  என்றாலும் சுத்திகரித்து குடிங்க என்று கூவிக்கூவி அழைத்து நம்மை வடிகட்டின முட்டாளாக நுகர்வு கலாச்சாரம் மாற்றியுள்ளது.

நாள்தோறும் அலறிக் கொண்டிருக்கும் ஊடகங்கள்  தரும் பயமே இந்த சந்தையின் லாபத்தை நாளுக்கு நாள் அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.  

இரண்டு நாளைக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த வீட்டுக்குள் இருந்த குழாயில் காற்று மட்டுமே வரத் தொடங்கியது.

வாரத்தில் இரண்டு நாளைக்கு வந்து கொண்டிருந்த பொதுக் குழாயிலும் தண்ணீர் நின்று போக அப்போது கூட மக்கள் யோசிக்கத் தயாராகாமல் தண்ணீர் லாரியை வரவழைக்கத் தொடங்கினர். சுகமாக மொண்டு குளித்து வாழப் பழகியவர்களுக்கு கையிலிருந்த காசு கரைய மெதுவாகவே ஞானம் வரத் தொடங்கியது.

திருப்பூரில் 1992 ல் ஒரு குடம் 50 பைசாவில் தொடங்கி சில இடங்களில் ஒரு ரூபாய்அளவுக்குக்கூட விற்றது.

இருபது வருடங்களுக்குப் பிறகு அதே நிலமை திரும்பியுள்ளது. அப்போது இல்லாத வளர்ச்சி அத்தனையும் இப்போது வந்துள்ளது? ஆனால் அப்போது இருந்து பிரச்சனைகளை விட இப்போது அதிகமாகியுள்ளது? எப்படி?

வார்டு கவுன்சிலர் யாரென்றே தெரியாத அத்தனை பேர்களும் அலுவலகத்திற்கு தினமும் படையெடுக்க அதற்கென்ன ஆகட்டும் பார்க்கலாம்?என்றாராம். கூடவே கேன் வாட்டர் வர்றதில்லையா? என்று கேட்ட போது தான் தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு பொருள் என்பதே பலருக்கும் புரியத் தொடங்கியுள்ளது. குழாயில் வராத தண்ணீர் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கின்றது.

ஊரில் வீட்டுக்குப் பின்னால் இருந்த கிணற்றில் எனக்கு நினைவு தெரிந்த வரையிலும் பத்து இழுவையில் தண்ணீர் வந்து விடும்.  அருகே இருந்த நடராஜபுரம் ஊரணியில் பால் போலவே தெளிந்த நீரை குடிக்க பயன்படுத்திய குடும்பங்கள் அதிகமாகவே இருந்தார்கள்.ஊரைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு குளத்திலும் முடிந்தவரைக்கும் நிரம்பியே பார்த்திருக்கின்றேன்.  ஆடு, மாடுகளுடன் அவசரமாக கழுவிக் கொண்டு நகர்ந்தவர்களையும் பார்த்து இருக்கின்றேன்.  

வயலுக்கு அருகே இருந்த கண்மாயில் பார்த்த தண்ணீரும், ஊருக்கு வெளியே இருந்த கண்மாயில் கடல் போல நின்ற தண்ணீர் எதையும் இப்போது காணவில்லை.  குளமெல்லாம் வீடாக மாறிப் போய்விட்டது. கண்மாய் ஓரத்தில்  கட்டிடங்கள் முளைத்துள்ளது.

தண்ணீரில் மூழ்கி குளித்த உடம்புக்கு இன்று முனகிக் கொண்டே துடைத்து வர  கடந்து போன இருபது வருடங்கள் தந்த வளர்ச்சியில் நாம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம்.

ஒன்றை இழந்தால் பரவாயில்லை.  மொத்தமாக அத்தனையும் இழந்து கொண்டேயிருக்கின்றோம். எங்கிருந்தோ வந்தவர்களுக்காக இத்தனையும் இழந்து விட்டு இன்னமும் கூட அதைப் பற்றி யோசிக்கத் தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது தான் இந்த வளர்ச்சி தந்த அறிவு.  நாட்டுக்கு அந்நிய முதலீடு தேவை என்கிறபாதையில் சென்ற பொருளாதார புலிகள் இன்று இயல்பாக கிடைத்த புளி கூட கசக்கும் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது.

எப்பேற்பட்ட வளர்ச்சி தெரியுமா?

மிதிவண்டி வாகனமாக மாறியது. எரிபொருளின் தேவை அதிகமானது. மொத்த நாடும் எரிபொருளை நம்பியே ஓடத் தொடங்க விலைவாசிகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது.

வானொலி தொலைக்காட்சியாக மாறியது. உலகம் சுருங்கிப் போனது. ஆனால் அருகே இருப்பவர்கள் அந்நியமாகிப் போனார்கள்.

தொலைபேசி அலைபேசியாக மாறியது. உறவுகளின் நெருக்கம் விலகிப் போய்விட பேச நேரமில்லாது ஓடிக் களைத்த ஓட்டப்பந்தய வீரர்கள் போல வாழ்க்கையும் மாறிப்போனது.

ஆட்டுக்கல்லுடன் அம்மிக்குழவியும் காணாமல் போனது.  நினைத்துப் பார்க்க மட்டுமே என்று இருந்த அத்தனை பொருட்களும் நுகர்வு கலாச்சாரத்தில் வந்து நிற்க ஒவ்வொரு பொருட்களுமே நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தானே? என்ற எண்ணமும் இயல்பாக மாறிப் போனது. 

இன்று மின்சாரம் இல்லையேல்  வாழ முடியாத நிலைக்கு வந்து விட்டோம்.

கடந்த 50 ஆண்டுகளில் தானிய உற்பத்தி பெருகி இன்று பசி, பட்டினி, பஞ்சம் இல்லை  என்று வளர்ந்துள்ளோம். உருவான தொழில் வளர்ச்சியில் வேலை வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இல்லை என்று மாறியுள்ளது. 

ஆனால் நிலங்கள் மலடாகி காற்றில் கரும்புகையும் கலந்து இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது.

எல்லாமே சரி தான்?  

வாழ்வதற்கான தேவைகளும், நமது வசதிகளுக்காக  நாம் பெற்ற வளர்ச்சிகளும் நமக்கு நாகரிக உலகத்தை அறிமுகம் செய்து வைத்தது. 

காடு அழிந்து வீடாக தொழிற்சாலைகளாக மாறியது. இயற்கையின் சுழற்சி மாறத் தொடங்கியது. இன்று ஆக்கலும் அழித்தலும் கைவரப் பெற்ற மனிதனால் இயற்கையை உருவாக்க முடிவதில்லை. அதன் சூட்சமத்தை இன்றும் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. 

இயற்கையோடு கலந்த நம் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் பேசுவாம்.

முதலில் காட்டைப் பற்றி பேசுவோம்.

அடுத்த பதிவில்...........................