Showing posts with label மரபணு மாற்ற விதைகள். Show all posts
Showing posts with label மரபணு மாற்ற விதைகள். Show all posts

Friday, September 13, 2013

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5

பிடி தொழில் நுட்பம் பன்னாட்டு விதை நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. இந்திய விதை நிறுவனங்கள் அவர்களிடம் காப்புரிமை கப்பம் கட்டியே அவற்றைப் பயன்படுத்துகின்றன. இதை மாற்ற இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் (ஐசிஏஆர்) வழிகாட்டுதலின் படி  தார்வாட் பல்கலையில் பி.ட் பிகனேரி என்ற பெயரில் பிடி பருத்தி உருவாக்கும் வேலையில் இறங்கியது. 

ஆனால் அது முடிவடையும் நிலையில் உள்ளே வைக்கப்பட்ட மரபணுக்களில் ஒன்று தன்னுடைய காப்புரிமைப் பெற்ற மரபணு என்று மான்சான்டோ எதிர்ப்பு தெரிவிக்க உடனே அந்த த்திட்டம் இழுத்து மூடப்பட்டது. 

செர்பாய் தலைமையில் விசாரணைக்கமிசன் அமைக்கப்பட்டு ஊழல்கள் மூடி மறைக்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயிகள் பயிர் இரகங்கள் பாதுகாப்புச்ட்டத்தின்படி மான்சான்டோ இப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது அப்படி தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு செல்லுபடியாகாது. இருப்பினும் பிடி பிகனேரி திட்டம் வெறும் கனவாக முடித்து வைக்கப்பட்டது. சில பல விஞ்ஞானிகள்  பலன் பெற்றனர்.

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 22 அன்று இந்த சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்ட போது நடந்த விவாதம்

மதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே, 

நவீன உயிரித்தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையைப் பயன்படுத்தவும், உயிரித்தொழில்நுட்ப ஆணையம் உருவாக்கி உயிரித்தொழில் நுட்பத்தை ஒருங்குபடுத்தும் வரையைறைகள் சிறப்பாக திறமையாக செயல்படுத்தப்படவும், அதன்மூலம் நவீன உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் உயிரினங்களை, பொருட்களை ஆராய்தல், எடுத்துச் செல்லல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய வேலைகள் அணைத்தையும் ஒருங்குபடுத்துவதற்காக....

பாசுதேவ் ஆச்சார்யா- மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே நான் உயிரித்தொழில்நுட்ப ஆணையத்திற்கான சட்ட வரைவு-2013 ஐ அறிமுகப்படுத்துவதை கீழ்கண்ட காரணங்களால் எதிர்க்கிறேன் என்று பேசத் தொடங்கியதும் பல குறுக்கீடுகள் எழுந்தது.

மதிப்பிற்குறிய அவையைத்தலைவர் அவர்களே உயிரித்தொழில் நுட்பத்தை வளர்க்கும் துறையே எப்படி அதைக்கட்டுப்படுத்தும் துறையாக இருக்க முடியும். அண்மையில் வேளாண்மைக்கான நிலைக்குழு தனது மரபணு மாற்றுப்பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த அறிக்கையில் சுதந்திரமான, சார்பு நிலையில்லாத (Conflict of Interest) ஒருங்குமுறை ஆணையம் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை நிறைவேற்றாமல், இப்போது பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு உதவிட அரசு இந்த வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. 

விதை நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றாக இல்லாமல் உயிரித்தொழில்நுட்ப ஒருங்காற்று ஆணையம் உயிரிப்பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் (உயிர் பன்மயம்) மனிதர்களின் ஆரோக்கியம், கால்நடைகளின் ஆரோக்கியம் ஆகியவைகளுக்கான முழுமையான ஒன்றாக இருக்கவேண்டும், 

ஆகவே இதை சுற்றுச்சூழம் ஆமைச்சகம் அல்லது மக்கள் நலன் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் வேளாண் அமைச்சகம் ஆகியவை இணைந்து...(குறுக்கீடுகள்) உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைவு பல்லுயிர் பெருக்க சட்டம் மற்றும் விவசாயிகளின் பயிர்உரகங்கள் உரிமைகாப்புச் சட்டத்திற்கு இணக்கமாக இல்லை. 

இந்தச் சட்ட வரைவு இந்தியா கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ள பல சஞர்வ தேச ஒப்பந்தங்கள், உயிரிப்பாதுகாப்பு மாநாட்டு ஒப்பந்தம், பல்லுயிர்பெருக்கம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள்,உள்ளிட்ட பலவற்றுடன் உசைவாக இல்லை. (குறுக்கீடுகள்) அமைச்சர் - திரு.பாசுதேப் ஆச்சார்யா எழுப்பிய வினாக்கள ஏற்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் இத்தகு சட்டத்தை இயற்ற தகுதியுள்ளது தான்

மற்றொரு பக்கம் மரபணு மாற்று தொழில் நுட்ப ஆதரவாளர்கள் இந்திய இயற்கை வளங்களை சட்டரீதியிலும், அறிவியல் அமைப்பு ரீதியிலும் காப்பதற்காக உருவாக்கிய அமைப்புகளை கைவசப்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள தாவர வளங்கள். அவற்றின் பயன்பாடுகளை பதிவது ,பாதுகாப்பது போன்ற வேலைகளுடன் அன்னிய நிறுவனங்கள் இந்திய தாவர வளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கல் போன்ற பணிகளை செய்ய தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR) என்ற அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. 

தேசிய தாவர மரபியல் வள பெட்டகம் என்பது இந்தியாவின் தாவர உயிரினங்களின் மரபியல் பெட்டகம் போன்றது. அவைகளின் வகைபாடு, பயன்பாடு உள்ளிட்ட அணைத்துவிவரங்களையும் தொகுத்தும் பாதுகாத்தும் வரும் அமைப்பு. சுருங்கக் கூறின் இந்திய தாவர வகையினங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பகம் எனலாம்.

இது இந்தியாவில் உள்ள எல்லா தாவர, நுண்ணுயிர் வளங்களைப் பற்றிய பதிவு, அவைகளின் விதைகள், மாதிரிகளைச் சேகரித்து பாதுகாத்து வருகிறது. அன்னிய அமைப்புகள் இவற்றைப் பயன்படுத்துவதாக இருப்பின் இதன் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும். ஆனால் இத்தகு அனுமதியின்றி தான் இந்திய கத்திரிக்காய் இரகங்கள் மரபணு மாற்றுக் கத்தரியாக உருவாக்கப்பட்டது. 

இது பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின் படி (Biodiversity act) தவறானது என்பதால் பிரச்சனைகள் கிளப்பப்பட்டது. வழக்கு நடத்தப்பட்டது. இந்திய அரசு மான்சான்டோ-மகிஹோவிற்கு ஆதரவாக தனது முடிவை தெரிவித்தது.

இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR)) இயக்குனராக முனை.கே.சி.பன்சால் நியமிக்கப்படுகிறார். இவர் நிலக்கரி வழக்கு பன்சால் அல்ல.. அவர் நிலக்கரி வளமையை கொள்ளையடிக்க அனுமதிப்பவர், இந்தியத் தாவர வளங்களை கொள்ளை கொண்டு போவதற்கான அனுமதி வழங்க நியமிக்கப்பட்டவர் என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இவரின் பின்புலம் அத்தகையகது..

இவரை இப்பொறுப்பில் நியமித்த போதே, ’’அடுத்தவர் ஆராய்ச்சியை தனது என்று கூறி காப்புரிமை பெற்று  விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் மதிப்பு மிக்க விருதான ‘ரஃபி அகமது கித்வாய் விருதை’ 2009ல் பெற்றுள்ளார்,’’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

வேற்று உயிரின் மரபணுவை கத்தரியில் புகுத்துவதில் புதிய முறையை பிறிதொரு விஞ்ஞானி உருவாக்கிட அதைத் தன் பெயரில் காப்புரிமை பெற்றவர். 

மேலும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வுக் குழுவின் விதிகளின் படி மேல் மட்ட பணிகளின் தேர்விற்கும், பதவி உயர்வுகளுக்கும் இரகசியப் பணிக்குறிப்பு சமர்பிக்கப்படுவது அவசியம். இவரது பணி இரகசியக் குறிப்பு 2004ல் இருந்தே அளிக்கப்படவில்லை. இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்வுக்குழு இரண்டு முறை உருவாக்கப்பட்டதும் நடந்துள்ளது. 

இவரின் மூத்த அதிகாரியாகவும் விஞ்ஞானியாகவும் தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்த முனை. ஆனந்தகுமார் (இவரும் மரபணு மாற்று வித்தகரே!!!) முனை.பன்சால் தனது தக்காளி, கடுகு, கோதுமை உள்ளிட்ட 8 மரபணு மாற்று ஆய்விற்காகப் பெற்ற ஆய்வு விதைகள் உள்ளிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் ஒப்படைக்கக் கேட்ட கடிதத்திற்கு  பதில் கூட அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

இத்தகையவரையே இந்திய தாவர வகைகளைக் காப்பதற்கான பெட்டகத்தின் இயக்குனராக நியமிக்கட்டுள்ளார். 

இந்த விவரங்களை எல்லாமே பத்திரிக்கைகளிலும் வந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

available online at


சில அண்மைக்கால சர்வதேச நிகழ்வுகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 10 ஆண்டுகள் தடையை பெரு நாடு மீண்டும் மே மாதத்தின் கடைசியில் உறுதி செய்தது. அதற்கு அடுத்த சில நாட்களுக்குள் பிலிப்பைன்ஸ் நாட்டு உச்சநீதி மன்றம் அந்த நாட்டு அரசு அனுமதியளித்திருந்த பி.டி கத்தரிக்குத் தடை விதித்தது. 

தாங்கள் வாங்கும் பண்டங்களில் மரபணு மாற்று விளைபொருட்கள் கலந்துள்ளதா என்பதை நுகர்வோர் அறிந்திட வேண்டும். அதற்கு பண்டங்களின் பொட்டலத்தில் அடையாளம் (லேபிள்) வேண்டும் என 90 விழுக்காடு அமெரிக்கர்கள் கேட்டும் போராடியும் வருகிறார்கள். 

ஆனால் அமெரிக்க ஐக்கிய அரசு அதை ஏற்கவில்லை, 

மான்சான்டோ அடையாளமிடல் என்ற கருத்தையே கடுமையாக எதிர்க்கிறது.. சில மாதங்களுக்கு முன் கலிபோர்னியா மாநில அரசு மக்களின் வற்புறுத்தலையடுத்து நடத்திய பொது வாக்கெடுப்பு நடத்தியது. மான்சாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள்.வழக்கின் இறுதி முயற்சி என்பது நம்பமுடியாத அளவிற்கு மில்லியன் டாலர்களில் விளம்பரங்கள் செய்து மிக மெல்லிய இடைவெளியில் அடையாளம் தேவை என்ற வாக்கெடுப்பை தோற்கடித்தன 

ஆனால் வெர்மாண்ட் மாநிலம் தன் மாநிலத்தில் இத்தகு அடையாளம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாய்னே-வும் இத்தகு விதியை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம் உலகின் பல்வேறு நாடுகளில் 10 இலட்சத்திற்கும் அதிமான மக்கள் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான உணர்வை ‘மான்சான்டோவிற்கு எதிரான ஊர்வலமாக’நடந்தனர், ஆர்பாட்டம் நடத்தினர். 

ஐரோப்பிய மக்களின் தொடர் எதிர்ப்பு, புறக்கணிப்பின் காரணமாகவும், மக்களிடம் தங்களின் வாதங்கள் பலிக்கவில்லை, நம்ப வைக்கமுடியவில்லை என்பதாலும் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வந்த ஆய்வகங்களை மான்சான்டோ உள்ளிட்ட அனைத்தநு மரபணு மாற்று விதை நிறுவனங்களும் மூடிவிட்டன. இனி ஐரோப்பாவில் இவைகள் இருப்பதில் பயன் ஏதுமில்லை என்றும் அறிவித்துவிட்டன. 

ஹங்கேரியில் பயிரிடப்பட்டிருந்த 500 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரபணு மாற்று மக்காச்சோள பயிரை அரசே எரித்து அழித்தது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில் மரபணு  மாற்றம் செய்யப்பட்ட கோதுமை கலந்திருப்பதைக் ஜப்பான் கண்டறிய அமெரிக்க கோதுமையை திருப்பி அனுப்பியது. பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தத்தமது துறைமுகங்களில் இத்தகு கலப்படத்தைக் கண்டறிய கண்காணிப்பை அதிகரித்துள்ளன. 

அமெரிக்க கோதுமை விவசாயிகள் மான்சான்டோ நிறுவனத்திற்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகின்றனர். இவையனைத்தும் மே மாத நிகழ்வுகள். ஜூன் மாத்தில் மனித மரபணுக்களை காப்புரிமை செய்வது செல்லாது எனத் தீர்ப்பு வழங்கி இன்னுமொரு குண்டைப் போட்டுவிட்டது அமெரிக்க நீதிமன்றம்.

அனைத்தும் மான்சான்டோ தலைமையிலான மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் விதை நிறுவனங்களுக்கும் அவைகளின் காப்புரிமை வெறிக்கும் எதிரான உலக உணர்வுகள். ‘விதைகளைத் தங்களின் சொத்தாக்கும்’ மான்சான்டோக்களின் கனவு கலைக்கப்பட்டு வருகிறது.. உலக உணர்வு இப்படியாக இருக்க மான்சான்டோக்கள் விதைகளின் மீதான தங்களது பிடி நழுவாதிருக்க சட்ட சந்துபொந்துகளை உருவாக்குவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியா என்ன செய்யவேண்டும்?

இந்தியாவிற்கு இ.உ.தொ.ஆணையத்திற்கு மாற்றாக உயிரிப்பாதுகாப்பிற்கான சட்டம் தான் உடனடித் தேவை.

எந்த மரபணு மாற்று உயிரினங்கள் எந்த வகையினதாயினும்அதை ஒருங்குபடுத்தும் அமைப்பின் முதன்மைப்பணி நவீன உயிரித் தொழில் நுட்பம் தரக்கூடிய ஆபத்துக்களிடமிருந்துமக்களையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும்.உலகலெங்கிலும் பெரும்பான்மையான மக்களும், நிறைய அரசுகளும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை நிராகரித்துவரும் வேளையில் அதைத் தொங்கிக் கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

எந்த வகைச் சட்டமாயினும் இதன்அடிப்படையில் கீழ்கண்டவைகள் அடங்கியதாக இருக்கவேண்டும்.

முன்பாதுகாப்பு கொள்கையே (Precautionary Principle) மைய நிலையாக இருக்கவேண்டும்.

மாற்று வழிகளில் பயிர் பிரச்சனையை சரிசெய்யவழியில்லை என்கிற சூழ்நிலையில் தான் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை எடுக்கவேண்டும்.

மரபணுக்கள் வெளியேறா வண்ணம் பாதுகாக்ப்பட்ட வகையில் நடக்கும் சோதனைகள் மற்றும் வெளிச்சூழலில் வளர்த்தல் ஆகிய சோதனைகள் வரிசைக்கிரமமாக நடத்துதல் மற்றும் இவ்விரண்டிற்குமான அவையவைகளுக்கான தனித்தனி ஒருங்கமைப்பு, கண்காணிப்பு முறைகள் தேவை.

முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் சார்பு நிலையற்றவர்களாக சுதந்திரமானவர்களாக இருக்கவேண்டும்.

பொதுமக்களிடம் எதையும் மறைக்காத வெளிப்படையாக செயல்பாடு தேவை, 

சுதந்திரமான அலசி ஆராய்தல் தேவை

பொதுமக்கள் பங்கேற்பு கொண்ட ஜனநாயகமான செயல்பாடுகள் தேவை.

ஆபத்து மதிப்பிடல்-  

(அ) முழுமையான, சரியாக அறிவியல்ரீதியில் சரியாக வடிவமைக்கப்பட்ட சோதனைகளை பரிந்துரைத்து அவைகளை மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்குபவர்களைக் கடைபிடிக்கச் செய்யவேண்டும் மேலும் அந்த நிறுவனங்கள் அளிக்கும் ஆய்வறிக்கைகளை தனித்த சுதந்திரமான ஆய்வாளர்கள் கொண்டு பரிசீலிக்கப்படவேண்டும்

 (ஆ)எல்லா ஆய்வுகளையும் செய்யக்கூடிய, தேவையான எல்லா கட்டமைப்பு வசதிகளும் கொண்ட ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் சுதந்திரமாக அந்த ஆய்வறிக்கைகளை அலசி ஆராயவேண்டும்

தொடர் கண்காணிப்பு, மதிப்பீடுகள் தொடர்ந்து செய்தல் மற்றும் ஆபத்துகள் அறியப்பட்டால் அனுமதியை திரும்பப் பெறல் ஆகியன ஆபத்துக்கள மேலாண்மை செயலெபாட்டில் தேவை.

தவறு நேர்ந்தால் பொறுப்பேற்கும் வழிமுறையும் அந்தத்தவறுகளுக்கான தண்டனைகள், நட்டஈடு, தவறுகளை சரிசெய்தல்உள்ளிட்ட வழிமுறைகள் வேண்டும். மேலும் அவற்றிற்கு அந்தப் பயிர்களை உருவாக்கியவர்களை மட்டுமின்றி தவறிழைக்கும் ஆணையத்தவர்களையும் இந்த பொறுப்பேற்றலில் சேர்க்க வேண்டும்.

வாங்குவோர் விவரங்கள் அறிந்து வாங்கிப் பயன்படுத்தும் வகையில் இறக்குமதி உள்ளிட்ட எல்லா மரபணு மாற்றுப் பயிர் விளைபொருட்கலும்’’மரபணு மாற்று விளைபொருட்கள் கொண்டது’’ என்ற லேபிள் இருக்கவேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் முறையிடும் வகையில் எளிமையான முறையீட்டு முறைகளும், பொது நலன் கருதி எவர் வேண்டுமானாலும் முறையீடு செய்யும் வகையிலும் கால வரை நிர்ணயம் இல்லாத வகையிலும் முறையீடு செய்யும் முறை இருக்க வேண்டும்.

இந்திய கூட்டாட்சி அமைப்பு முறையில் உள்ளது. அரசியல் சாசனம் விவசாயத்தை மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் வைத்துள்ளது. ஆகவே மாநிலங்கள் தம் பங்கிற்கு தனக்கான கட்டுப்பாட்டு முறைகளையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்வதற்குரிய சரத்துகள் உள்ளதாக இருக்க வேண்டும். 

மேலும் அரசியல் சாசனம் அளித்துள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் கிராம சபைகளுக்கு உரிய தனது இயற்கை வளம் மற்றும் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் உள்ள அதிகாரத்தை பறிக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.

Precatuionary Principle – முன்னெச்சரிக்கை கொள்கை – 

இது பல்லுயிர் பெருக்கம் மாநாட்டில் (Convention on Biodiversity-CBD) எடுக்கப்பட்ட கொள்கை. இந்திய அரசால் ஏற்கப்பட்ட கொள்கையாகும். இதன்படி எந்த வகையான தொழில் நுட்பமாயினும் அல்லது அதன் நடவடிக்கைகளாயினும் பாதிப்புகள் ஏற்படுத்தலாம் என்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அது முழுமையாக பாதுகாப்பானது என்று உத்திரவாதம் அளிக்க இயலாத போது, முன்னெச்சரிக்கை அடிப்படையில் அதை கைக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லது தடை செய்யலாம்.

Risk assessment 

மரபணு மாற்றுப் பயிர்கள் மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு, பிற உயிரினங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பயிராக, விதையாக, கால்நடைத்தீவனமாக, உணவாக இன்னும் வேறு எந்த வடிவத்திதலாயினும் பாதிப்பு அளிக்குமா என்பது குறித்த ஆய்வுகள், நீண்டகாலத்தில் ஏற்படும் பாதிப்புகள், தொடர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் (Long term cumulative effect) உள்ளிட்டவைகளை மதிப்பீடுகள் ஆகியனவே ஆபத்து மதிப்பீடு எனப்படுகிறது.

Biosafety

மனிதர்கள் , பிற உயிரினங்கள் மற்றும் இயற்கைச் சூழலின் பாதுகாப்பை இது குறிக்கிறது. மாற்றி வைக்கப்பட்ட மரபணுக்கள் பிற தாவர, பயிர் வகைகளுடன் கலந்து மரபணுக் கலப்படமாதல், மரபணு மாற்றுப் யிர்களின் விளை பொருட்கள், பண்டங்கள் உணவு மூலம் பாதிப்பை உருவாக்கமல் இருப்பது உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.

(முற்றும்)
.

Monday, September 02, 2013

மரபணு விதைகள் - பயங்கரத்தின் கதை

விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை முடிவில்லாதது போல பிடி கத்திரியை திணிக்கும் முயற்சியில் மீண்டும், வேதாளம் முருங்கை மரம் ஏறியுள்ளது எவரும் எதிர்த்திடாத வகையில், இந்திய அரசமைப்பிற்கு. விரோதமாக,  ஆனால் சட்டபூர்வமான முறையில். இதற்கான தொடக்கம் கடந்த நாடாளுமன்றத் தொடரில் நிகழ்ந்தது. அந்த விவரங்கள் அறிவதற்கு முன்னோட்டமாக அமெரிக்க நிகழ்வு அறிவது நல்லது.

கடந்த மார்ச் இறுதியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிதிநிலை அறிக்கை ஒன்றை நிறைவேற்றிட வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது அந்த நிதி நிலையறிக்கையில் எவரின் கவனத்தையும் கவராத வகையில் விவசாய நிதி அறிக்கையில் ஒரு விதியை நுழையச் செய்தார் செனட்டர் ப்ளன்ட் (Blunt)  

அந்த விதி இது யாரைக் காப்பாற்ற என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருந்த காரணத்தால் இதை அவர்கள், ‘மான்சான்டோவைப் பாதுகாக்கும் சட்டம்’ என்றே அழைத்தனர்.

அமெரிக்காவில் மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் உயிரினங்களை ஒட்டி பல வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. 

மரபணு மாற்று அல்பாபா அமெரிக்க நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. பி.ஏ.எஸ்.எஃப் (BASF) கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மரபணு மாற்று நெல் வயல்வெளி பரிசோதனையின் போது மாற்றி வைக்கப்பட்ட மரபணு வெளிச் சூழலில் கலந்தது. 

இந்த மரபணுக் கலப்படமானது சோதனை நடந்து 6 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் விளைவித்த நெல்லை மரபணுக் கலப்படமாக்கியது. இது ஜப்பான், அமெரிக்காவிலிருந்து நெல்லை இறக்குமதி செய்த போது தான் தெரியவந்தது. மரபணுக் கலப்படமான நெல்லைத் திருப்பி அனுப்பியது ஜப்பான். நட்டப்பட்ட விவசாயிகள் நட்ட ஈடு கேட்டு பி.ஏ.எஸ்.எஃப் (BASF) நிறுவனம் மீது வழக்கு தொடர அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்கு வெளியே பல இலட்சம் டாலர்கள் நட்ட ஈடு கொடுத்து முடித்தது. 

தற்போது இதைப் போலவே மான்சான்டோவின் மரபணு மாற்று கோதுமை அமெரிக்க விவசாயிகளின் கோதுமையைக் கலப்படமாக்கியது அண்மையில் கண்டறியப்பட்டது. விவசாயிகள் நீதிமன்றங்கள் செல்கின்றனர். மரபணு மாற்று அல்பாஃபா பல சுற்றுச்சூழல் சோதனைகளை முறையாக முடிக்கவில்லை. அப்படியிருக்க அதற்கு அமெரிக்க விவசாயத்துறை அனுமதி வழங்கியது சரியல்ல என்று விவசாயிகள் வழக்கு தொடுக்க நீதிமன்றம் தடை பிறப்பித்தது. 

இது மரபணு மாற்று சால்மன் மீன், மரபணு மாற்று கொசு என பல மரபணு மாற்றுப் பயிர்கள், உயிரினங்கள் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகள் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளன. 

பலவற்றை வெளிவிட முடியாத சூழல் அங்கு உள்ளது.

இந்தப் பின்புலத்தில் தான் அவசர நிதி நிலை அறிக்கையில் இரகசியமாக இடைசெருகல் (Rider) மூலம் ‘‘மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த எந்த வழக்கையும் அமெரிக்க பெடரல் நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது,’ என்கிற விதி புகுத்தப்பட்டது. 

அதாவது நீதிமன்றங்களை பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதிப்புகளையோ, அல்லது சமூக ஆர்வலர்கள் விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியோ அணுகி நிவாரணம் பெறமுடியாது. எந்த பயிரையும் தடை செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட விதி இருப்பது தெரிய வந்த்தும் இந்த இடைவிதியை ஏற்க வேண்டாம் எனக் கேட்டு, இவ்விதியை இதை மான்சான்டோ பாதுகாப்பு விதி’’ எனக்கூறி 2 இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் அதிபர் ஒபாமாவிற்கு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த விதி செல்லுபடியாகும் என்றாலும் மான்சான்டோவின் வழிமுறைகள் எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவில் நடக்கும் ஒன்று இந்தியாவில் நடக்காமல் மன்மோகனின் இந்தியாவிற்கு இழுக்கல்லவா?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அமெரிக்காவில் நடந்தது போன்ற வேலை நடந்துள்ளது. பல பிரச்சனைகளைக் காட்டி நாடாளுமன்றத் தொடரை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகத் தெரிவித்தனர். இருப்பினும் இரண்டாண்டுகளாக தாக்கல் செய்ய முடியாதிருந்த மரபணு மாற்றுத் தொழில் நுட்ப ஒருங்காற்று ஆணையம் (Biotechnology Regulatory Authority of India) அமைப்பதற்கான சட்ட முன் வரைவைத் தாக்கல் செய்தது மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம். 

இந்த ஆணையம் மரபணு மாற்றும் செய்யப்பட்ட பயிர்கள், உயிரினங்களின், உருவாக்கம், பரிசோதணை, விற்பணை, பயிரிடல், அவைகள் மூலம் பெற்ற பொருட்கள், அவைகளை எடுத்துச் செல்லுதல், இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பலவற்றை ஒருங்குபடுத்தவே அந்த ஆணையம்.

2009லேயே சட்ட வரைவிற்கான வேலைகள் தொடங்கின. 2010 மார்ச்சில் இதன் சரத்துகள் கசிய விடப்பட்டது, அதில் 63வது பிரிவில், மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்ப்பவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றது. 

கடும் விமர்சனங்களையடுத்து இந்த விதி நீக்கப்பட்டது. 

மக்களின் மனநிலையை ஆழம் பார்க்கவே இந்த விதி நுழைக்கப்பட்டு கசிய விடப்பட்டது எனப் பேசப்பட்டது. இருப்பினும் சட்ட வரைவு தாக்கல் செய்யப்படவில்லை. 

தற்போது தாக்கல் செய்யப்பட்ட வரைவில் இந்தப் பிரிவு இல்லை.

நிதி ஆதாரங்கள் ஒதுக்கி மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை வளர்த்தெடுக்கும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் தானே வளர்க்கும் துறையைக் கட்டுப்படுத்துவற்கான விதியை உருவாக்குவது சரியல்ல என்று எதிர்க்கப்பட்டது.

அந்த மறுப்புகளும் எதிர்ப்புகளும் மறுதலிக்கப்பட்டு இந்திய மக்களின் பல உரிமைகளைப் பறிப்பதாகவும், இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளுக்கு விரோதமான விதிகளுடன் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 22 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்றம் நடக்காது என்பதை நன்கு உணர்நதாலேயே இவ்விதம் செய்யப்பட்டது. 

விவாதங்கள் இன்றி நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இருப்பினும் சட்டவரைவை அறிமுகப்படுத்திய போதே நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழுவின் தலைவரான பாசுதேப் பட்டாச்சார்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். (தனிச்செய்தியாக அந்த விவாதம்.)

சட்ட வரைவில் உள்ளவைகள், அதன் தாக்கங்கள் பற்றி அறியுமுன் நாளது வரை மரபணு மாற்றுப் பயிர்கள் தளத்தில் இந்தியாவில் நடந்தவைகள் பற்றி அறிவது அவசியம்.

நாளது வரை மரபணு மாற்று தொழில் நுட்பத்தால் உருவான உயிரினங்கள், விதைகள், பயிர்கள், பொருட்கள் அணைத்தும் 1989 சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் வருகிறது. 

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழு (Genetic Engineering Approval Committee) இந்த வேலைகளைக் கவனித்து வருகிறது. (தற்போது இதன் பெயர் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு - Genetic Engineering Appraisal Committee-GEAC). அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறையின் கீழ் மரபணு மாற்றங்களுக்கான மறு ஆய்வுக் குழு (Review Committee on Genetic Modification – RCGM ) இயங்கினாலும் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக்குழு தான் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் பெற்ற அமைப்பு.

ஆனால்  அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள குழு பல சந்தர்ப்பங்களில் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழுவிற்குத் தெரிவிக்காமலேயே, அதன் அனுமதி பெறாமலேயே சோதனைகள் செய்ய நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறது.. 

அனுமதி பெறாமலேயே பி.ட்டி பருத்திக்கான  கள பரிசோதனைக்களை கட்டுப்படுத்தப்பட்ட சோதனை’ என்று குறுக்கு வழி கூறி இக் குழு வயல்வெளி கள சோதனைகளுக்கு அனுமதியளித்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. 2000ம் ஆண்டில், வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வந்த காலத்தில், குஜராத்தில்  பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பி.ட்டி பருத்தி,இந்திய அரசு அனுமதி அளிக்காத நிலையிலேயே, விளைக்கப்பட்டுப்பது கண்டறியப்பட்டது. 

உச்சநீதி மன்றம் அனுமதியில்லாத இவ்வகை பருத்தி அவையனைத்தையும் எரித்து அழிக்கும் படி உத்திரவுமிட்டது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அனுமதியில்லாத பிடி பருத்தி விளைவிக்கப்பட்டிருந்தது என்றால் பிடி பருத்தி பல ஆண்டுகளாகவே விற்கப்பட்டு விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காப்புரிமைச் சட்ட மீறலை காட்டி பல்லாயிரக்கணக்கான அமெரிக்க, கனடா நாட்டு விவசாயிகள் மீது வழக்கு தொடுக்கின்றன மான்சான்டோ உள்ளிட்ட விதை நிறுவனங்கள், 

பிடி பிகானிரி என்ற பெயரில் தார்வாட் பல்கலை தயாரித்த பிடி விதையில் மான்சான்டோவின் மரபணுக்களில் ஒன்று இருப்பதாகக் கூறி காப்புரிமையைக் காட்டி எதிர்த்தது மான்சான்டோ. 

ஆனால் பி.ட்டி மரபணு மாற்றத்தைச் செய்வதற்கான நவீன ஆய்வக வசதியில்லா நவ்பாரத்  என்ற இந்திய விதை நிறுவனமான பிடி பருத்தி விதைகளை விற்பனை செய்கிறது. காப்புரிமை பெற்றுள்ள எந்த விதை நிறுவனங்களும் நவபாரத் பற்றி எக்கேள்வியும் எழுப்பவில்லை. வழக்கு தொடரவில்லை, இந்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. 

இப்படி பிடி பருத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்டு உள்ளதைக் காட்டியே 2002ல் பிடி பருத்திக்கு அனுமதி பெறப்பட்டது. முதலில் பரப்பி விடு அதைக் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற விதை நிறுவனங்களின் வழக்கம் இங்கும் நடந்தேறியது. 

இப்போதும் பிடி நெல் மற்றும் ரவுண்டப் களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பருத்தி ஆகியன இந்தியாவின் சில பகுதிகளில் விளைவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

2002ல் இந்திய அரசு அனுமதி வழங்கியது. 

பிடி பருத்தி அனுமதித்த போது இந்தியாவில் ஏறத்தாழ 70 சத பருத்தி பாரம்பரிய மற்றும் மேம்படுத்திய இரகப் (Varieties) பருத்தியாகவே இருந்தது. இன்று இதன் பரப்பு 98%க்கு உள்ளது. அனைத்தும் கலப்பினம் மற்றும் ஒட்டு இரகம் எனப்படும் ஹைபிரீடுகள். விற்கப்படும் அணைத்து பருத்தி விதைகளும் விதை நிறுவனங்களின் பிடி விதைகள் மட்டுமே என்ற நிலை வந்து விட்டது. 

ஏறத்தாழ எல்லா இந்திய பருத்தி விதை நிறுவனங்களும் மான்சான்டோவுடன் கை கோர்த்து பிடி ரக ஹைபிரீடு விதைகளை தயாரித்த வழங்கின. 

மத்திய விவசாய அமைச்சரின் உறவினரான, மகாராஷ்டிர அரசில் அமைச்சராக இருக்கும் அஜித் பவார் தனது பெயரிலேயே அஜித் பிடி என்று விற்கப்பட்டதும் இங்கு நடந்தது.  பாரம்பரிய விதைகளும், மேம்படுத்தப்பட்ட இரகங்களும் சந்தையில் இருந்து அகற்றப்பட்டது 

சத்தமின்றி. விவசாயிகளுக்கு பிடி பருத்தி தவிர வேறு வகை விதைகள் இல்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுவிட்டது. வேறுவிதமாகக் கூறுவதானால் இந்தியப் பருத்தி விவசாயம் இன்று மான்சான்டோவின் கையில் உள்ளது.

அதேநேரத்தில் பிடி பிகனேரி என்ற பெயரில் இந்திய பிடி விதை உருவாக்கிட தார்வாட் பல்கலை முயன்றது. ஆனால் அதற்குள் ஏகப்பட்ட ஊழல். மற்றும் ஏமாற்று வேலைகள், 

மேலும் காப்புரிமையைக் காட்டி  மான்சான்டோ மிரட்டியது. இந்தக் காரணங்களால் பிடி பிகனேரி முடக்கப்பட்டது.

பிடி பருத்தியை அடுத்து மான்சான்டோ உள்ளிட்ட பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய விதை நிறுவனங்களுடனும், இந்திய விவசாயப் பல்கலைக்கழங்களுடனும், ஆய்வகங்களுடனும் ஒப்பந்தங்கள் செய்து ஏறத்தாழ 75 பயிர்களை மரபணு மாற்றுப் பயிர்களாக மாற்றும் வேலையில் இறங்கின. இதில் நெல், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவை உணவுப் பயிர்கள்.

மற்றொரு பக்கம் இந்திய அரசு எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய விவசாயிகள் கமிசன் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையில்‘வாய்ப்புக் கிடைத்தால் 45 விழுக்காடு விவசாயிகள் விவசாயத்தை விட்ட வெளியேறத் தயாராக உள்ளார்கள்,’ என்று கூறப்பட்டது 

அதே அறிக்கையில் மரபணு மாற்றுப் பயிர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. அதில் தேவைப்படும் குறிக்கோளை அடைய வேறு வழியேதும் இல்லாத நிலையில் தான் மரபணு மாற்று உயிரினங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது.

ஏற்கெனவே இந்திய அரசு உயிரித் தொழில் நுட்பம் குறித்து ஆலோசனை வழங்க சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட உயிரித் தொழில் நுட்ப குழு (Task force on  Biotechnology) தனது அறிக்கையி( அத்தியாயம் 2ல் விதி 1.6ல், ‘உயிர் உரங்கள், உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரினங்கள் கொண்டு மாசுபாட்டை சரி செய்தல் போன்ற மரபணு மாற்றுத் தொழில் நுட்பங்கள் இல்லாத உயிரித் தொழில் நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’, என்று குறிப்பிட்டது. 

2004ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் தான்,’’உயிரித் தொழில் நுட்ப ஒருங்காற்று ஆணையம் ( Biotechnology Regulatory authority),’’ ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

உயிரித் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்தையும் ஒருங்கமைக்க ஆணையம் தேவை என்ற கருத்து முதன்முதலாக விதைக்கப்பட்டது, ஆனால் உடனே உயிர் பெறவில்லை. 

மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கும் அங்கீகாரக் குழுவில் மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்குபவர்களே பெரும்பான்மையாக இருந்து அதிகம் கோலோச்சிய காலம் அது. விழிப்புணர்வும் எதிர்ப்பும் குறைவாக இருந்த காலம்,இந்தியாவை மரபணு மாற்றுப் பயிர்களின் தலைமையிடமாக, தலைநகராக மாற்றும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தனர். 

இவர்கள் மரபணு மாற்று விதை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சார்பாகவே இருக்கின்றனர். நடுநிலையுடன் இல்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் ஆதரங்களுடன் எழுப்பப்பட்டன.

 இந்தக் காலக்கட்டதில் 50க்கும் மேற்பட்ட உணவுப்பயிர்கள் உள்ளிட்ட 70க்கும் மேலான பயிர்களில் செய்யப்பட்ட மரபணு மாற்றங்கள் பல்வேறு கட்டங்களை அடைந்திருந்து. சில இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தன. 

பிடி நெல் வயல்வெளி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. 

பஞ்சாபிலும், கோவை ஆலந்துறையிலும் பிடி நெல் விவசாயிகளால் அழித்தொழிக்கப்பட்டது. இந்திய கத்திரி இரகங்களில் சிலவற்றை இந்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் மூலம் பிடி கத்திரியாக மரபணு மாற்றம் செய்து வயல்வெளி பரிசோதனைகளையும் நடத்தி முடிந்திருந்தது மகிஹோ-மான்சான்டோ. 

இப்படி இந்தியப் பாரம்பரிய விதைகளை விதைகளை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் முன் அவ்வட்டார விவசாயிகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது தேசிய பல்லுயிர் பெருக்க ஆண்யத்தின் விதிகளில் ஒன்று. நம் பல்கலைக்கழகங்கள் தாங்களே விதைகளின் உரிமையாளர் என்பது போல் தனியார் நிறுவனங்களுக்கு தந்தன. இவ்வாறு இந்திய பல்கலைக்கழகங்கள் கொடுத்தது சட்டரீதியில் தவறானது.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் ஒருபடிமேலே போய்  ----- இரக கத்தரி விதைகளை மான்சான்டோ மகிஹோவிற்கு அனுப்பிய பின்னரே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இது வேளாண் பல்கலைக்கழகமல்ல மான்சான்டோ பல்கலைக்கழகம் என்ற போராட்டமும் நடந்தது. 

தமிழக வேளாண் பல்கலை மட்டுமல்ல 

தார்வாட் பல்கலை உள்ளிட்ட பிற பல்கலைகளின் இப்படித் தான் செயல்பட்டன. 

இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்திரி இரகங்கள் தான் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் அனுமதிக்காகக் காத்திருந்தது. 

அங்கீகாரக் குழுவும் இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. இந்தியக் கத்தரி இரகங்கள் மரபணு இப்படி மாற்றப்பட்டது குறித்து கர்நாடக மாநில பல்லுயிர் பெருக்க ஆண்யத்திடம் முறையீடு செய்யப்பட்டது. 

எதிர்காலத்தில் மக்கள் அமைப்புகள், விவசாயிகள், இது போன்ற பிரச்சனைகள் எழுப்பாதிருக்கவும், இவ்வாறு மாற்றிட அனுமதி கேட்கும் போது அனுமதியை எளிதில் வழங்கிவும் இந்திய அரசு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கிய வேலையைச் செய்த விஞ்ஞானி முனைவர். கே.சி பன்சாலை இந்திய தாவர வளங்களைக் காப்பதற்கான அமைப்பின் (National Bureau of Plant Genetic Resources - NBPGR) தலைவராக்கியது. 

அவர் “சிறப்புத் தகுதிகள்’ பற்றிய விவரங்கள் தனியாக பெட்டி செய்தியில்.

பிடி கத்திரி பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக செய்து மகிஹோ-மான்சான்டோ சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போதுது. மகிஹோ-மான்சான்டோவின் ‘வணிக இரகசியம்’, அதன் வணிக நலனைப் பாதிக்கும் எனக் கூறி தர மறுத்தது. கடும் சட்டப் போராட்டதிற்குப் பின் கிரீன் பீஸ் அமைப்பு பெற்றது. 

‘கேட்காமலேயே தந்திருக்க வேண்டிய தகவல்களை கேட்டபின்னுபும் தரமறுப்பது சரியல்ல’ என்று கண்டிக்கப்பட்டதும் நடந்தது. 

கடும் போராட்டத்திற்குப் பின் பெறப்பட்ட மகிஹோ-மான்சான்டோ சமர்பித்த பிடி கத்திரி அறிக்கையை பரிசீலனை செய்த தனியார் நிறுவனங்களைச் சாராத சுந்திரமான நிலையில் ஆய்வுகள் செய்யும் (Independent Scientists) பன்னாட்டு விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்தனர்.

 ‘கட்டாயம் செய்திருக்க வேண்டிய பல ஆய்வுகள் செய்யப்படவில்லை,’ என்றும், ‘சாதகமான முடிவுகளை தரும் வகையில் ஆய்வுகள் பல வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும், ‘பாதிப்புகள் தெரியாத வகையில் முடிவுகள் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும் கூறினர். மேலும், ’’செய்யப்பட்ட பல ஆய்வுகள் கத்துக்குட்டிகள் செய்த ஆய்வுகள் போல உள்ளது,’ என்றும் பல வாரியான விமர்சனங்களை வெளியிட்டனர்.

இது போன்ற விவரங்கள் வெளியாக வெளியாக மக்கள் பிடி கத்திரிக்கு அனுமதி அளிக்கக் கூடாதென எதிர்த்தனர். பட்டிதொட்டிகளிலும், விளக்கக் கூட்டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் மரபணு  மாற்று அங்கீகாரக்குழு இந்த விமர்சனங்களையெல்லாம் உதாசினப்படுத்தி பி.ட்டி கத்தரியை விளைவிக்க, உணவாகப்பயன்படுத்த அனுமதியத்தது. 

மக்கள் தீவிரப் போராட்டத்திற்குத் தயாராயினர் மக்கள் அமைப்புகளும் திரண்டெழுந்தன. சுற்றுச்சூழல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இச்சந்தர்ப்பத்தில் தலையிட்டு பொது கருத்துக் கேட்பு நடத்தி எல்லா தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார். 

இந்தியாவின் எல்லா மாநிலத்தவர்களும் பங்கேற்கும் வகையில் 6 இடங்களில் கருத்துக் கேட்புகள் நடந்தன. விதை நிறுவனங்கள் ஆட்களைத் திரட்டி வந்து பங்கேற்கச் செய்தாலும் ஒவ்வொரு கருத்து கேட்பிலும் ஒட்டு மொத்த சமூகத்தின் கடும் எதிர்ப்புணர்வு வெளிப்பட்டது. மின்னஞ்சல்கள் கடிதங்கள் மூலமும் கருத்துக்கள் குவிந்தன.

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பிடி கத்திரியை எதிர்த்தன.

மக்களின் உணர்வை அவர்களும் பிரதிபலித்தனர். பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பு தமிழகத்தின் அன்றைய முதல்வர் கலைஞரைச் சந்தித்து பிடி கத்திரியின் ஆபத்துக்கள் பற்றி எடுத்துக் கூறி எடுத்துக் கூறியது. 

ஆபத்துகள், சிக்கல்கள், ஆய்வுகள் முழுமையின்மை என பலவும் விளக்கப்பட்டதையடுத்து பி.ட்டிக் கத்திரிக்கு தமிழகத்தில் அனுமதியில்லை என அறிவித்தார். தமிழகம் உள்ளிட்டு 13 மாநிலங்கள் பிடி கத்திரியை தடை செய்தன.

இந்திய மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின் 2010 பிப்ரவரி 10ம் தேதி உலகின் முதல் உணவுப் பயிரான பிடி கத்திரி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்தியச்சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் என்ன முடிவெடுப்பார் என்று உலகே ஆர்வமாகப்  பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்..................

Thursday, August 29, 2013

விதைகள் உறங்குவதில்லை

கடந்த 20 ஆண்டுகளில் வணிகம் என்பதன் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக 10 ஆண்டுகளில் வணிகம் என்பதே விளம்பரங்களின் அடிப்படையில் மட்டுமே என்கிற ரீதியில் தான் உருவாகியுள்ளது.  இன்று பொருளின் தரம் பின்னுக்குப் போய் அதை விளம்பரப்படுத்தும் விதம் தான் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

காய், கனிகள் முதல் வீட்டுக்குத் தேவைப்படும் விளக்குமாறு வரைக்கும் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கூவிக்கூவி வந்தது. வாரந்தோறும் சந்தையில் வாங்கிக் கொள்ள முடிந்தது.  ஆனால் நகரமயமாக்கல் இதை அத்தனையையும் அடித்து ஒடுக்கி விட்டது. இன்று வரையிலும் நம் வீட்டுக்கருகே தெருக்கடைகள் இருந்தாலும் மக்களின் ஆதரவு என்பது பெரிய கடைகளுக்குச் சென்று வாங்குவதே தரமானது என்ற எண்ணம் மேலோங்க இந்த வர்க்க பேதம் என்பது வசதிகளின் அடிப்படையில் உருவாகிவிட்டது.

தெருவில் வரும் காய்கறிகள் முதல் பழங்கள் வரைக்கும் கொண்டு வருபவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவளிப்பதுண்டு. இரண்டு காரணங்கள். ஒன்று அன்றைக்கு தேவைப்படுவதை மட்டும் வாங்கிக் கொள்ள முடியும். மற்றொன்று அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு நம் உதவிகளும் ஒத்துழைப்பும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.

ஆனால் சமீப காலமாக வரக்கூடிய காய்கள், பழங்கள் அனைத்தும் பலவிதங்களில் மாற்றம் பெற்றுள்ளதை கவனித்தால் நன்றாக புரியும். ஆப்பிள் என்ற பெயரில் பேரிக்காய் சுவையும், பேரிக்காய் என்ற ரூபத்தில் வினோதமான சுவையும் இருப்பதால் எது உண்மையான பழங்கள் என்பதை கண்டறிவது மிகவும் சவாலாகவே உள்ளது.  ஊரில் பார்த்த நாவல்பழ சுவையென்பதும் தற்போது விற்பனையில் உள்ள மிகப் பெரிய நாவல்பழத்தின் சுவையும் சம்மந்தம் இல்லாதது.

கிராமங்களில் காலையில் வீடு தேடி வரும் கீரைகளில் சில வகைகள் இருந்தன. அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை என்று விதவிதமாக இருந்தது.  அந்த கீரையின் இலையும், சிவப்பான தண்டும் கீரையை மூக்கின் அருகே கொண்டு சென்றால் ஒரு கவுச்சி வாடை வரும்.  அதுவே நல்ல கீரையின் அடையாளமாக கருதப்பட்டது.  ஆனால் தற்போது கீரைகளின் தன்மையும் ரூபமும் முற்றிலும் மாறி சமைத்தபிறகு கீரை என்ற பெயரில் ஏதோவொன்றாக உள்ளது.

கத்திரிக்காயில் இரண்டு வகை மட்டுமே இருந்தது.  நாட்டுக்கத்திரிக்காய் மற்றும் மூட்டைக்கத்திரிக்காய் என்பார்கள்.  இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மூட்டைக்கத்திரிக்காயை நறுக்கிப்பார்த்தால் விதைகள் அதிகமாகவும் பெரிதாகவும் இருக்கும்.  சுவை வேறுபட்டதாக இருக்கும். முன்பு நாட்டுத்தக்காளியின் சுவை என்பது ஒரு பழத்தை ரசத்தில் போட்டால் போதுமானதாக இருந்தது.  இன்று வந்து கொண்டிருக்கின்ற குண்டுத் தக்காளியை எத்தனை நறுக்கிப் போட்டாலும் எந்த பலனும் இருப்பதில்லை.

இயல்பான முருங்கைகாய் தற்போது கொடி முருங்கை என்ற பெயரில் நீளமாக மாறியுள்ளது. சமீபத்தில் நான் சாப்பிட்ட இது போன்ற ஒரு வகையான முருங்கை வயிற்றுப் போக்கை உருவாக்கியது.

இங்கிலிஷ் காய்கறிகள் மட்டும் குறைவான மாறுதல்களுடன் உள்ளது. 70 சதவிகித காய் கனிகள் அனைத்தும் மாற்றம் பெற்று விட்டது? மொத்தத்தில் நம்மைச் சுற்றிலும் உள்ள தாவரங்களின் அடிப்படைத்தன்மைகள் அனைத்தும் மாறிவிட்டது.

என்ன காரணம்?

தொடக்கத்தில் விதைகள் என்பது நம்மிடம் இருந்தது.  இன்று விதைகள் என்பது யாரோ ஒருவரிடம் இருக்கின்றது.  இந்த உண்மைகளும், இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இன்று உண்மையான சுவையுள்ள ஆப்பிளின் விலை கிலோ ரூபாய் 160. அதுவும் ஏற்றுமதியாகும் தரத்தில் இருக்குமா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  டீத்தூள் முதல் பழங்கள் வரை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நாம் உண்பது அனைத்தும் மிச்சமும் சொச்சமும்.  இது குறித்து கவலைப்பட இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை.  காரணம் இங்கே மூன்று வேளை உணவுக்கே பலரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால் இது போன்ற தேவையற்ற ஆராய்ச்சியில் பொதுஜனம் இறங்குவதில்லை.

அமெரிக்காவின் எண்ணெய் அரசியலைப் போல அடுத்து அந்த நாட்டின் நிறுவனங்கள் கையில் எடுத்திருப்பது இந்த விதை அரசியலையே.

ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இது போன்ற விபரங்கள் விஸ்தாரமாக வெளிவந்த போதிலும் தமிழர்களின் கேளிக்கை மனோநிலையில் காரணமாக தமிழ் பத்திரிக்கைகளுக்கு இந்த செய்திகள் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் தானோ என்னவோ தமிழர்களுக்கு இந்த விதை அரசியலின் முழு ரூபமும் இன்னும் புரிபடவில்லை.

என்னை விட வயதில் பல மடங்கு மூத்த, பல துறைகளில் உள்ள, சமூக அக்கறை கொண்டு பல நண்பர்கள் என் எழுத்தின் மூலம் அறிமுகமாகி அவர்களின் குழும மின் அஞ்சலில் என்னையும் ஒரு நபராக வைத்துள்ளனர். தினந்தோறும் இவர்கள் மூலம் பல தகவல்கள், படங்கள், கருத்துக்கள், படித்த முக்கியமான பத்திரிக்கை செய்திகள் என் மின் அஞ்சலுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றது.  பல சமயம் குறிப்பிட்ட சிலவற்றை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து கொள்வதுண்டு.  

குறிப்பாக தற்போது ஒரிஸ்ஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் சேலத்தில் உள்ள லெஷ்மணன் அவர்கள் மூலம் நான் அறிந்த தகவல்கள் கணக்கில் அடங்கா.  இதற்கு மேலும் இவர்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளை அந்த துறை சார்ந்த நபர்களுக்கு, அதிகாரிகளுக்கு தினந்தோறும் மின் அஞ்சல் வழியே அனுப்பிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

எப்போதும் போல இந்திய அதிகாரவர்க்கத்தினருக்கு இவற்றைப் பார்க்க நேரம் இருக்காது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

அடாது மழை பெய்தாலும் விடாது தினந்தோறும் செயல்பட்டுக் கொண்டு இருப்பதால் இவர்கள் மூலம் நான் பெற்ற ஒரு தகவல் மரபணு மாற்ற விதைகள் அதற்குப் பின்னால் உள்ள அரசியல். 

இந்த கோப்பு எனக்கு வந்து பல வாரங்கள் ஆன போதிலும் அதை ஒழுங்கு படுத்துவதில் உண்டான சவாலின் காரணமாகவும், அதை சரியான விதத்தில் பதிவாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த காடுகள் மற்றும் இயற்கை குறித்து ஒரு சிறிய தொடராக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  இதன் காரணமாக பல புத்தகங்களை வாசிக்க முடிந்தது.

இப்போது இந்த தொடரின் நீட்சியாக நான் பெற்ற கோப்பின் மூலம் உள்ள விபரங்களை ஐந்து பதிவுகளாக தொடர்ந்து வெளியிடுகின்றேன்.

இதை ஆவணமாக்கியவர் குறித்த விபரங்கள் 

நண்பர்களே,

இணைப்பில் பிராய் சட்ட வரைவு குறித்த தொகுப்பு உள்ளது. பிராய் குறித்த விமர்சனமாக மட்டுமில்லாது, அதன் பின்புலம், அதற்கான நெருக்குதல்கள் உள்ளிட்ட பலவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உடன்  ஆதார தரவுகளின் இணைப்புகளும் சேர்க்கப்படுள்ளது.

மான்சான்டோ இந்தியாவில் இருக்கும் வரை  பி.டி கத்தரி, பிராய் நம் தலை மேல் தொஙகும் கத்தி தான்..

செல்வம்

Ramasamy Selvam <organicerode@gmail.com>
R.Selvam,
Co-ordinator,
Tamil Nadu Organic Farmers Federation
Pudu Nilavu Food Forest,
Thalavu Malai,Arachalur,
Erode District,Tamil nadu,638 101
09443663562

இந்த தொடரில் ஏராளமான ஆவணங்கள் உள்ளது. பெரும்பாலும் ஆங்கில பத்திரிக்கையில் வந்த தகவல்களின் இணைப்புகள்.  தமிழ் பத்திரிக்கைகளில் இது குறித்த விபரங்களை நான் பார்த்தது இல்லை.

மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் சக்திகளை, இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை நான் ஏற்கனவே ஒரு தொடராக எழுதியிருப்பதை படித்து விட்டு தொடர்ந்தால் உங்களுக்கு இதற்கு பின்னால் உள்ள விபரீதங்களை புரிந்து கொள்ள முடியும்.   





இந்த தொடரின் முந்தைய பதிவுகள்


தரையில் இறங்கும் விமானங்கள்


கூடங்குளம் பிரச்சனை எப்படி இன்று விஸ்வரும் எடுத்து நம் முன்னால் நிற்கின்றதோ அதைப் போலவே இந்த மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் மூலம் விரைவில் இந்திய விவசாயம் என்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே இருக்கும் என்பதால் நிச்சயம் பலருக்கும் இந்த தொடர் பலன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த பதிவில்............