Monday, January 31, 2011

நாங்க இராமநாதபுரத்துகாரயங்க

நாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த கதையை, அவர்களுக்கு இங்கிருந்த இந்திய சூழ்நிலை எப்படி உதவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இராமநாதபுரம் மாவட்டத்தை எப்படி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.


14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களை முகமதியர்கள் வென்றனர். மறுபடியும் போராடி பாண்டியர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர்களிடம் தோற்றன்ர். மதுரையை அடிப்படையாக வைத்து ஆட்சி புரிந்த நாயக்கர்கள் இராமநாதபுரம், திருநெல்வேலி சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் தங்களின் அதிகாரத்தை வலுவாக்கினர், அப்போது கன்யாகுமரி மட்டும் திருவாங்கூருடன் சேர்ந்திருந்தது. ஏற்கனவே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சிறப்பான நிர்வாகத்தில் உள்ளேயிருந்த ஒவ்வொரு பகுதியும் "நாடு" என்ற பெயரில் இருந்தது. இந்த நாடு என்ற பெயர் தான் இன்று வரையிலும் இராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த பல்வேறு இனமக்களிடம் இருந்து வருகின்றது. 

தென்மாவட்ட மக்களிடம் நாம் பேசிப்பார்த்தால் அதுவும் முக்குலத்தோர் மக்களிடம் உரையாடினால் இந்த நாடு என்ற வார்த்தை வந்துவிடும். ஒவ்வொரு நாடு என்ற பகுதிகளுக்குள் பல் கிராமங்கள் இருந்தது.  நாயக்கர்களின் வரிசையில் வந்த விஸ்வநாத நாயக்கர் (1529 முதல் 1564 வரை) சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் பொருட்டு தமது ஆட்சி எல்லைக்கு உட்பட் பகுதிகளை 72 பாளையங்களாக மாற்றினார்..  தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களிடம் அந்தந்த பகுதியின் பொறுப்பைக் கொடுத்து பாளைய்த்து தளபதியாக நியமித்தார். இவர்கள் தான் உள்ளே உள்ள கிராமவாசிகளிடம் வரி வசூல் செய்வது முதல் அந்த கிராம மக்களை பாதுகாப்பு வரைக்கும் உள்ள அத்தனை விசயங்களுக்கும் பொறுப்பாக இருந்தனர். இது போன்ற பதவிகளில் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் முதன்மையாகவும், மறவர் குலத்தில் பிறந்தவர்கள் அடுத்த நிலையிலும் இருந்தனர். காரணம் இன்று வரைக்கும் மறவர் குலத்தில் உள்ளவர்களின் வீரமும் அவர்களின் முன் கோபத்தையும் பழகியவர்கள் நன்றாக உணர்ந்தே இருப்பார்கள். 

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல தென்னிந்திய பகுதிகள் கர்நாடகத்தில இருந்த நவாப்பிடம் மாறிய போது பாளையக்காரர்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரைச்சுற்றி அகழியை வெட்டி வைத்ததோடு பல போர்ப் படைகளை உருவாக்கியும் வைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் பாளையக் காரர்களின் சுயநலமும், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக குழப்பமும் கூச்சலுமாய் பாளையக்காரர்களின் நிர்வாகம் சீர்கெடத் துவங்கியது. இது போன்ற சமயத்தில் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர் இன மக்கள் தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவல் பணியில் இருந்தனர். இந்த மறவர்களுக்கு தேவைப்படும் ஊதியத்தை நெல்லாக பணமாக கிராம மக்கள் வழங்கிவந்தனர்.  இந்த மறவர்கள் தான் அந்தந்த கிராம மக்களின் மொத்த உடைமைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். காந்தி சொன்ன கிராம சுயராஜ்யத்தியத்தை இது போன்ற சம்பவங்களின் மூலமாக நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். 

காவல் பொறுப்பில் இருந்த மறவர் குல இளைஞர்கள் பல முறை தேவையில்லாமல் திருட்டுப் பழியை ஏற்றுக் கொண்டு அதற்கான நஷ்ட ஈடுகளையும் கிராமத்து மக்களுக்கு கொடுத்த பல அதிசயங்களை வரலாற்றுக் குறிப்புகள் போகிற போக்கில் தெரிவிக்கின்றது.  மொத்தத்தில் கிராம வாழ்க்கையில் வாழ்ந்த மக்களுக்கு ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று வாழ்ந்திருந்தாலும் தங்கள் கிராமத்து வாழ்க்கை உணர்ந்து உண்மையாகவே வாழ்ந்து இருக்கின்றனர். மொத்த பிரச்சனைகளும் மேலேயிருந்த தலைகளால் தான் உருவாகி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மாவட்டம் பல மாறுதல்களை பெற்று இருக்கிறது.

தென்னிந்திய பகுதிகளில் உள்ளே வந்த நவாப் தன்னுடைய ஆட்சி பலவீனமாகத் தொடங்கிய போது தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளை மீட்டுத் தருமாறு ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்க 1751 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு அருகே உள்ள பாளைங்கோட்டையில் ஆங்கிலேயர்கள் முதன் முதலாக ஒரு நிரந்தர படைப் பிரிவை உருவாக்கி வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக உள்ளேயிருந்த ஒவ்வொரு பாளையக்காரர்களுடனும் ஆங்கிலேயர்கள் போர் செய்து தங்கள் வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தனர்.

கடைசியாக 1783 மற்றும் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு பெரும் போர்களின் இறுதிக்கட்டமாக கிழக்குத் திருநெல்வேலியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராக இருந்த கட்டமொம்ம நாயக்கரை (வீர பாண்டிய கட்டபொம்மன்) எதிர்த்து நடைபெற்றது..இதுவரைக்கும் ஆங்கிலேர்களுக்கு அடிபொடியாக இருந்த நவாப் உள்ளே உள்ள பகுதிகளில் இருந்து வரி வசூல் செய்து ஆங்கிலேயர்களிடத்தில் கொடுத்து அவர்களின் விசுவாசியாக இருந்தார். நவாப் ஆங்கிலேயர்களுடன் போட்டு வைத்திருந்த ஒப்பந்தமும் 1785 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது.  


இதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் நேரிடையான நடவடிக்கையில் இறங்கி மற்ற பகுதிகளுடன் நவாப் ஆளுமையில் இருந்த பகுதிகளையையும் தங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்தனர். ஆங்கிலேயர்கள் ஈழத்திலும் இந்த முறையில் தங்கள் ஆட்சியை உருவாக்கினர். ஒருவரை வைத்து உதவி பெற்று கடைசியாக அவரையே அழித்து முடித்துவிடவேண்டியது. காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவனும் செத்துப் போக ஆங்கிலேயர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

1801 ஆம் ஆண்டு கட்டபொம்ம நாயககரின் தோல்விக்குப் பிறகு கர்நாடகப் பகுதி முழுவதும் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது.  தங்கள் பேச்சை கேட்க தயாராக இருந்த பாளையக்காரர்களை ஆங்கிலேய அரசாங்கம் ஜமீன்தாரர்களாக நியமித்து மற்ற படைகளை கலைத்து விரட்டியடித்தது. இப்போது தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுமையாக இந்த பகுதிகளில் செயல்படத் தொடங்கியது.

1801 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தில் முதல் கலெக்டர் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகள் இரு வேறு கூறுகளாக இருந்தது. இதன் நிர்வாகம் முழுக்க ஆங்கிலேயர்களின் வசமிருந்தாலும் உள்ளே உள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் பாளையக்காரர்களும் இருந்தனர். இவர்களைத்தான் ஜமீன்தாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். 1803 ஆம் ஆண்டு மேலே சொன்ன இரண்டு பகுதிகளை இணைத்து கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் உருவானது. ஆனால் இடையில் நடந்த மாறுதலுக்கு அப்பாற்பட்டு இறுதியாக 1910 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தாலூகாக்களைச் சேர்த்து உள்ளேயிருந்த இரண்டு ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு தாலூகாக்களையும் சேர்த்து இந்த இராமநாதபுரம் என்ற மிகப் பெரிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பல முறை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும் இராமநாதபுரம் மாவட்டம் என்ற ஒரு பெயரில் உருவாக்கப்பட்ட பிறகு நெல்லை மாவட்டம் எட்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்று 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது திருவாங்கூருடன் இணைந்து இருந்த செங்கோட்டை வட்டம் நெல்லை மாவட்டத்ததுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தென் திருவாங்கூரில் உள்ள தமிழ் வட்டங்கள் நான்கையும் சேர்த்து புதிதாக கன்யாகுமரி மாவட்டம் உருவானது. 

Saturday, January 29, 2011

சதி சாதி தீ

இப்போது வலைதளமும், இணையமும் நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.. கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தற்போது இலங்கை கடற்படையினரால் சாகடிக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழக மீனவர்களின் உரிமை குறித்து குரல் எழுப்புகின்றனர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், இந்திய வெளியுறவுத்துறை அதன் கொள்கை போன்றவற்றை அந்தப்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்.  வேறொரு சமயத்தில் விலாவாரியாக பேசுவோம்.  ஆனால் மண்டபம் முதல் பாண்டிச்சேரி எல்லை வரைக்கும் இருக்கும் மீனவர்களுக்காக ஒரு கூட்டமைப்பு இருக்குமே?  அவர்கள் எனன ஆனார்கள்? இதற்காகத் தானே சீமான் குரல் எழுப்பினார்?  வேகமாக இந்திய இறையாண்மைச் சட்டம் பாய்ந்ததே?  குறைந்தபட்சம் மீனவர்கள் கூட இது குறித்து வாய்திறப்பார் யாருமில்லை. காரணம் என்ன?


சீமான் சொல்வது போல தமிழர்கள் கட்சித் தமிழனாக சாதி தமிழனாக பிரிந்து இருக்கும் வரையிலும் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.  சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள். நாமும் டவிட்டர்களில் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்,  இதே மீனவ சமூகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் அதிலும் உட்பிரிவுகள் என்று தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்க எப்படி இவர்களால் ஒன்று சேரமுடியும்.?

ஈழத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு நாலாவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கையர்கண்ணி, திருமலையிடம் ஈழ புலனாய்வு அதிகாரிகள் எப்படி கொக்கரித்தார்கள் தெரியுமா?  " உங்க சீமானால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியாவது ஜெயித்து வரமுடியுமா?" என்றார்களாம். நம்மைப் பற்றி தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.  இப்போது ஈழத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பலமடங்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். ..

நாம் இப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களைப் பற்றி பேசினாலும் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரைக்கும் உள்ள இந்த ஜாதிகளைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும்.  இதுவே தான் இன்று வரையிலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு உதவியாய் இருக்கிறது.  சக மனிதனுடன் சேர்ந்து வாழ முடியாமல் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம், குரோதம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுடன் பிளவுபட்டு நிற்க நம் முதுகின் மேல் எவர் வேண்டுமானலும் குதிரை ஏறத்தானே செய்வார்கள்.

மீனவ சமூகம் என்றாலும் அதிலும் பல பிரிவுகள் உண்டு. இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு. பள்ளர் என்றால் பறையரை பிடிக்காது. இவர்கள் இருவருக்கும் அருந்ததியரை பிடிக்காது. ஆனால் தொடக்கத்தில் மரமேறி அல்லது சாணார் என்று அழைக்கப்பட்டவர்களின் இன்றைய நிலைமை ஆச்சரியப்படக்கூடியதே. இன்று நாடார் என்று அழைக்கப்பட்டு பொருளாதாரரீதியாக முன்னேறி இன்று சமூகத்தில் சரிசமமாக உயர்ந்து உள்ளனர். அதுவும் ஜாதிக் கலவரத்திற்கு பெயர் போன இந்த இராமநாதபுரம் மாவட்டம் தான் இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு வழிகாட்டி. உங்கள் வயது நாற்பதுக்குள் இருந்தால் முதுகுளத்தூர் கலவரம், உஞ்சனை கலவரம் போன்றவற்றை கேட்டு இருக்கக்கூடும். குறைந்தபட்சம் அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.

இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து "சாதிவாரியாக பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு" என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு.  அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக் வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள்.

பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்த சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம்.  நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு?


தொடக்கத்தில் இந்த சாதியை தெய்வீகமானது என்பதாக பரப்பப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட அயோக்கித்தனம்.   ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  இந்தோ ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்கு கொண்டு வரப்பட்டது.  இந்த கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களை சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள்.  இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்கு பின்னால் வந்த ஒன்றாகும்.

இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?

மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது.  இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாக கொண்டு வரப்பட்டது.  குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது.  தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம்.  இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாக பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள்.  இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள்..

நாம் பள்ளிக்கூட பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றி சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம்.

ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றி பேசுவது

யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றை செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது.

சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள்

அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றை பேசுவது.

இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காக பிரிகின்றது.

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்க பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள்.  பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து  தோன்றியவர்கள் பஞ்சமர்கள்.

இந்த பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விட தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமிப் போல பல்கி பெருகிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள்.  ஆனால் இந்த பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா?

பிராமணன் என்றால் நீ எந்த பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா?

இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது.  கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள்.  அந்த பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூட தனித்தனியாக பிரிகின்றது.

இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி.  பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி.  ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி.  அந்த சாதியில் பிறந்தவன் அடுத்த சாதி மக்களை திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள்.  அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம்.

இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்கு தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம்.

" உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்."

இப்போது புரியுமே?

இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூக சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது.

இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்கு பல விதங்களிலும் உதவி செய்தது.

Friday, January 28, 2011

திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம் அதிகம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது நாடு பிடிக்க அல்ல. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டுமே உள்ளே வந்தனர்.  ஆனால் அவர்களின் எண்ணத்தை மாற்றியதும் நம்மவரே. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சாதகமான சூழ்நிலை உருவானது.ஆங்கிலேயர்கள் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.. 

1600 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரத் துறைமுகத்தில் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு அடையாளத்தோடு உள்ளே வந்தவர்கள் தான்..  1757 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு தான் பாதை மாறியது. அதன்பிறகே ஆங்கிலேயர்களுக்கு இந்த நாடு பிடிக்கும் ஆசையும் உருவானது.  கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டுருந்த போது தான் பந்தக்கால் நட்டு மனித நரபலி கொடுத்து தங்களின் புனிதப்பணிகளைத் தொடங்கினர். அதன்பிறகே ஆங்கிலேயர்கள் அகண்ட பாரத நிலப்பரப்பை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.  அது வரைக்கும் முழுக்க முழுக்க வியாபாரம் என்ற ஒரே நோக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டுருந்தனர்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டுருந்த வணிகர்களுக்கு இந்தியா குறித்து ஏராளமான கனவுகள் இருந்தது. அது உண்மையா? பொய்யா? என்பதை விட அதை நம்பித்தான் இந்தியா வந்தார்கள். இந்திய கடற்கரைகளில், மலையடிவாரங்களில் பெரிய அளவிலான நவரத்தினங்கள் இருக்கிறது..  பாமர மக்களுக்கு அது குறித்து ஒன்றும் தெரியாத காரணத்தினால் அங்கங்கே இறைந்து கிடக்கின்றது என்பது போன்ற பல கதைகள் தான் ஆங்கிலேயர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. இதற்கு மேலும் மற்றவர்களிடம் வாங்கி விற்பதை விட நேரிடையான வர்த்தக நடவடிக்கைகளிலும் இறங்கித் ஆக வேண்டும் என்று அவர்களின் எண்ணங்கள் இந்தியாவிற்கு வர காரணமாக இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளராக முதன் முதலாக இந்தியாவிற்குள் உள்ளே வந்த காப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் மன்னர் ஜஹாங்கிரை ஆக்ரா அரண்மனையில் போய் சந்தித்த போது மயங்கி விழாத குறையாக நின்றார். தான் காண்பது கனவா? என்பது போல திகைத்து நின்றார். ஜஹாங்கீர் அரண்மனையில் கண்ட காட்சிகள், ஆடம்பரங்களைப் பார்த்து தன்னை கிள்ளிப் பார்த்துருக்கக்கூடும். சுருங்கச் சொன்னால் கிரேட் பிரிட்டன் என்று சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டின் அரசியை வலிமை வாய்ந்த மன்னர் ஜஹாங்கீருடன் ஒப்பிட்டால் ஒரு சிற்றரசி என்ற நிலைக்குத் தான் கொண்டுவரமுடியும்.  

பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பண்டகசாலைகள் கட்டிக்கொள்ளவும், வியாபாரம் செய்து கொள்ளவும் மன்னர் அனுமதி வழங்க மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கிந்திய நிறுவனம் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது.  இவர்கள் ஜெயித்த கதைக்கு மற்றொரு காரணமும் உண்டு. இதற்கு முன்னால் இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த ஸ்பானிஸ், பிரான்ஸ் மற்றும் பல மேலைநாட்டு வியாபாரிகள் தாங்கள் செய்து வந்து வியாபாரத்துடன வேறு சில காரியங்களையும் செய்து வந்தனர்.   நாகரிகமில்லாத மக்களை மிரட்டுவது, மதம் மாற்றுவது, வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவது, அழைத்துச் சென்று வேறு பகுதிகளில் கொண்டு போய் விட்டு விடுவது போன்ற எந்த தில்லாலங்கடி வேலைகளை கிழக்கிந்திய நிறுவனம் செய்யவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

உழைப்பு, வியாபாரம்.... பணம்......லாபம்......... லாபம்.... என்று போய்க் கொண்டுருந்த பாதை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு குறுகிய காலத்திற்குள் 200 சதவிகித லாபத்தை தரத் தொடங்கியது.  மாதத்திற்கு இரண்டு கப்பல்களில் அனுப்பும் அளவிற்கு (மிளகு, வாசனைத்திரவியங்கள்....) வெகு விரைவாக தடம் பிடித்து முன்னேறத் தொடங்கினர்.


அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த ஏராளமான மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள், சிற்றரசர்கள் போன்ற அத்தனை பேர்களும் வெள்ளையர்கள் எந்த பகுதிக்குச் சென்றாலும் இரத்தினக்கம்பளம் வரவேற்காத குறையாக அன்போடு உபசரிக்க அதுவே இவர்களுக்கு லாபத்தையும் அட்டகாச வாழ்க்கை வசதிகளையும் தரத் தொடங்கியது. அப்போது தான் அடுத்த கட்ட நகர்வுக்கு நகரத் தொடங்கினர்.  பம்பாயில் தொடங்கியவர்கள் அடுத்தடுத்து கல்கத்தா,சென்னை,கேரளா போன்ற இந்தியாவின் சகல பகுதிகளுக்கும் தங்கள் நிர்வாகத்தை கொண்டு செலுத்த ஆரம்பித்தனர். கிழக்கிந்திய நிறுவனம் வளர வளர ஒவ்வொரு காலகட்டத்திலும் பணிபுரிய உள்ளே வரும் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது.வந்தவர்களின் அடுத்த தலைமுறைகளும் உள்ளே வர ஒரு சங்கிலி இயல்பாகவே உருவாகத் தொடங்கியது. இவர்களுக்கு போட்டியாளர்களாக இருந்த மற்ற நாட்டு வணிகர்களை விட ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் எல்லாவிதங்களிலும் மேலோங்கியிருந்தது.

கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் எப்போதும் போல தங்களின் வியாபாரத்தில் மட்டும் குறியாய் இருக்க பகவான் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார்.  

இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருந்த மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள் போன்றவர்களிடம் எப்போதும் ஏதோவொரு வகையில் சிறுசிறு சச்சரவுகள் இருப்பது வாடிக்கையாகவே இருந்தது. இவனுக்கு அவனை பிடிக்காது. அவனுக்கு இவனை பிடிக்காது.இது போன்ற சமயங்களில் தான் ஆங்கிலேயர்கள் நாட்டாமையாக உள்ளே புகத் தொடங்கினர். நன்றாக கவனித்துக் கொள்ளவும். அப்போதைய சூழ்நிலையில் கூட ஆங்கிலேயர்கள் தானாக மூக்கை நுழைக்கவில்லை.. சூழ்நிலைதான அவர்களை உள்ளே கொண்டு போய் நிறுத்தியது. காரணம் தங்களின் வணிக நிறுவனத்தின் பாதுகாப்புக்காக ஆங்கிலேயர்கள் அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் பாதுகாப்பு படையினரை வைத்திருந்தனர்.

உள்ளே இருப்பவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளில் யார் பக்கம் ஆங்கிலேயர்கள் சாய்கிறார்களோ அவ்ர்களே ஜெயிக்கும் நிலை உருவாக வேறென்ன வேண்டும்?.  வெள்ளையர்களுக்கு ராஜமரியாதை தான். ஆங்கிலேயர்கள் ஆதரவு கொடுத்த மன்னர்கள், சுல்தான்கள் அன்பளிப்பாக கொடுத்த நிலப்பகுதி சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டுவர ஆங்கிலேர்களின் ஆதிக்கத்திற்குள் வரும் நிலப்பரப்பின் அளவும் அதிகமாகிக் கொண்டுந்தது. 

இப்படித்தான் இந்திய துணைக்கண்டத்தில் பல பகுதிகள் ஆங்கிலேர்களின் கைக்கு வந்தது. இந்த பகுதிகளில் நடக்கும் பல சண்டைகளில் இவர்களே முடிவெடுத்து சம்மந்தப்பட்ட கிளர்ச்சியாளர்களை அடக்கும் வரை முன்னேறிக் கொண்டுருந்தார்கள். சம்மந்தப்பட்ட மன்னர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இவர்களுக்கு இதன் பலனாக கைமேல் கூலி. அப்போது தான் ஆங்கிலேயர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.  யோசிக்கத் துவங்கினர்.

"உள்ளேயிருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அனுசரித்துப் போகவும் தயாராய் இல்லை. நம்மை நம்பத் தயாராக இருக்கிறார்கள்"  என்பதை உணர்ந்த கிழக்கிந்திய நிறுவனம் முதன் முறையாக தங்கள் அதிகாரத்தில் உள்ள பகுதிகளுக்கு கவர்னர் போன்ற பதவியை உருவாக்கி இங்கிலாந்தில் இருந்து தகுதி வாய்ந்த வெள்ளையர்களை இறக்குமதி செய்ய இயல்பாகவே கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. அப்புறமென்ன? ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் தான்.

அதிகார சுகமென்பது உலகில் அத்தனையும் விட மேலானது.

கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவின் உள்ளே நுழைந்து 150 ஆண்டுகள் முடிவடைந்த போது 1757 ஜுன் மாதம் 27 ஆம் நாள் ராபர்ட் கிளைவ் என்ற பிரிட்டிஷ் ஜெனரல் தலைமையில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஒரு கோரத்தாண்டவத்தை நடத்திக் காட்டினான். 900 முறைப்படி பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் படைவீரர்களுடன், 2000 இந்திய சிப்பாயக்ளும் சேர்ந்து வங்காளத்தில் பிளாசி என்ற இடத்தில் தங்கள் விஸ்தரிப்புக்கு இடைவிடாது தொல்லை கொடுத்துக் கொண்டுருந்த ஒரு நவாபு படையை அடியோடு அழித்து நிர்மூலமாக்கினான்..

இந்தவொரு வெற்றியே ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியா முழுக்க கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாக வந்து கொண்டுருந்தவர்கள் இதன் தொடர்ச்சியாகத்தான் பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள்ளும் கால் வைத்து அங்கேயும் வெற்றிக் கொடியை நாட்டினார்கள். இவர்கள் ஆளுமைக்குள் இருந்த நாம் பார்கக வேண்டிய இராமநாதபுரம் என்றொரு மாவட்ட நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஆண்டு 1910.

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இன்றைய திருநெல்வேலி மாவட்டம் கூட இந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைக்குள் தான் தொடக்கத்தில் இருந்தது..

1757 முதல் தொடங்கிய இவர்களின் புனிதப்பணியை முடித்து வைக்க நம் தலைவர்களுக்கு 1947 வரைக்கும் உழைக்க வேண்டியதாகி விட்டது. 

பின்குறிப்பு..(.அல்லது ) காலம் செய்த கோலம்...


லண்டன் கிழக்கிந்திய கம்பெனியை லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா வாங்கியுள்ளார்.
ஒருகாலத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த கிழக்கிந்திய கம்பெனி, இப்போது லண்டனில் சிறிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதனை 2005-ம் ஆண்டிலேயே வாங்கியுள்ள சஞ்சீவ் மேத்தா, இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் மீண்டும் புதிதாக  வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் மும்பையைச் சேர்ந்தவன். 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனுக்கு வந்துவிட்டேன். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனைவரால் அறியப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியை வாங்கி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியர் ஒருவரே இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளர் என்பது சிறப்பான விஷயம். இந்தப் பெயரில் தொழிலை பெரிய அளவில் நடத்தவுள்ளேன் என்றார் அவர்.
கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வணிகம் மேற்கொண்ட அந்த நிறுவனம், பிற்காலத்தில் அந்தநாடுகளையே அடிமைப்படுத்தியது. தனக்கென்று தனி ராணுவம், பணம் என பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1874-ல் இந்த நிறுவனம் பிரிட்டனின் அரசுடமை ஆக்கப்பட்டது. ( நன்றி NKL 4U )

Wednesday, January 26, 2011

காந்தி காங்கிரஸ் முதல் இத்தாலி காங்கிரஸ் வரை

இன்று இந்திய குடியரசு தினம்.  இன்று நமக்கெல்லாம் 62வது ஆண்டு வாழ்த்துகளை அரசியலில் உள்ள பலவிதமான நோயுடன் போராடிக் கொண்டுருக்கும் பல தலைகள் தெரிவிப்பார்கள். "இந்தியா ஒளிர்கின்றது" என்று சொல்ல வேண்டியது அவர்களின் கடமை. நமக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு ஒளிந்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும். 

இந்த சமயத்தில் நாம் படித்த போது பள்ளிக்கூடத்தில் கொடுத்த ஒத்தக்காசு மிட்டாய் குறித்து நினைத்துக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கு இன்றைய சாக்லேட் குறித்து புரியவைத்து வேகமாக அனுப்பிவைப்போம். நம்முடைய குடும்பத்தில் அறுபது வயதை தொட்டவர்கள் அறுபதாம் கல்யாணம் செய்து தலைமுறைகளுக்கு ஆசிர்வாதம் தருவது போல இன்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு கிடைத்த விடுமுறையைப் பய்ன்படுத்திக் கொண்டு ஆசிர்வாதம் வாங்க தொலைகாட்சிகள் முன்பு அமர்ந்திருக்க முயற்சிப்போம். . 


நாம் எளிதில் எல்லாவற்றையும் மறந்து நகர்ந்து போய்விட இன்று ஏராளமான விசயங்கள் நம்மிடம் உண்டு. இன்று பார்க்கப் போகும் நடிகைகள் பேட்டியும், சில மாதங்களுக்கு முன்னே வெளியான அரதபடாவதியான படங்களை வெளிக்கு போக மறந்து கூட பார்க்கப்போகின்றோம்.  தொலைக்காட்சிகளின் போட்டிகளில் இன்று உச்சமாக இருப்பவர்கள் பத்து நொடி விளம்பரத்திற்கு 23000 ரூபாய் வாங்கும் அளவிற்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வோம் என்று இந்த நாளில் உறுதியேற்போம்..  

ஆனால் இந்த இராமநாதபுரம் மாவட்டம் தொடரில் இப்போது வந்துள்ள ஆங்கிலேயர்கள் குறித்து சற்று மேலோட்டமாக அடுத்து சில பதிவுகளில் பார்த்து தான் ஆக வேண்டும். அப்படி நகர்ந்தால் தான் நம் இந்திய "குடி"மக்களை, மது அருந்துவது அப்படி ஒன்றும் பெரிய தவறில்லை என்று மாறிப்போன சமூகத்தையும் ஓரளவுக்கேனும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தனி மனித ஓழுக்கம் குறித்து கவலைப்படாத இந்த சமூகம் எங்கிருந்து தொடங்கியது?  ஏன் தறுதலைகளை நாம் தலைவர்களாக தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்.  எப்படி ஆங்கிலேயர்கள் இந்தியர்களை தங்கள் வழிக்கு கொண்டு வந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவும்.

காரணம் சரித்திரம் என்பது ஒரு பதிவு எந்திரம்.  பாரபட்சம் இல்லாதது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போகிற போக்கில் பலவற்றை பதிவு செய்து விட்டே நகர்கிறது.  உண்மைகள் வெளியே வருவதற்கு நாளாகுமே தவிர அது எதையும் விட்டு வைக்காது.

சரித்திரம் ஒவ்வொரு தலைவருக்கும் அவர் எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் எந்த தனிப்பட்ட மரியாதையையும் அளித்து விடாது.  அவர்களால் உருவாக்கப்பட்ட சொல்லப்பட்ட வெற்றிகளை பதிந்து வைத்திருப்பதைப் போலவே அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் குறித்து அத்தனை அசிங்கமான சம்பவ நிகழ்வுகளையையும் சேர்த்தே பதிவு செய்து விடுகின்றது. பதினான்கு மொழிகளுக்கு மேல் எழுத பேச படிக்கத் தெரிந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் கடைசிகாலகட்ட நிகழ்வுகளை வாய்ப்பு இருந்தால் ஊன்றி கவனித்துப் பாருங்கள்.  

அவர் ஆட்சியில் இருந்து போது நடந்த பம்பாய் கலவரம் அவருக்கு பாடம் கற்பிக்கவில்லை என்றாலும் சரித்திரம் ஆந்திரப்பிரதேச பாடத்தில் இருந்தே அவர் குறித்த சம்பவங்களை நீக்கும் அளவிற்கு ஒரு தண்டனையை வழங்கியது.  இதுவே தான் இன்று வரைக்கும் நடந்து கொண்டுருக்கிறது.

நாம் தொடரில் வந்துள்ள ஆங்கிலேயர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இப்போது சிலவற்றை தராசில் ஏற்றிவிடலாம்.  

திருடனைப்போல சாவு வரும். திடுக்கிடுவாய் நீயும் அப்போது.
பாம்பின் வாயில் தவளை போல பரிதவிப்பாய் பரிதவிப்பாய்.

இந்த பாடலை கிறிஸ்துவர்கள் கேட்டுருககலாம். இதைப் போலத்தான் சுதந்திரம் கிடைக்க இருந்த போதும், கிடைத்த பிறகும் 62 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இந்தியர்களின் நிலைமை இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை அப்படியோ கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலே வாருங்கள்.


ஏன் கொல்லப்படுகின்றோம்? எதற்காக கொல்லப்படுகின்றோம் என்பதே தெரியாமல் பல லட்ச மக்கள் இறந்தார்கள்.  பாகிஸ்தான் என்றொரு நாட்டை பிரிப்பதற்காக நடந்து கூத்தில் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள். அதைப்பற்றி இப்போது இந்த இடத்தில் பேசத் தேவையுமில்லை.  அதற்கான களமும் இதுவும் இல்லை.   இன்று வரையிலும் இந்தியா என்பது உலகத்திற்கே வழிகாட்டும் நாடு. மகத்தான ஜனநாயக நாடு என்று எல்லாவிதங்களிலும் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு கண்முன் நடக்கும் அத்தனை கோரத்தையும் சகித்துக் கொண்டு வாழ பழகியுள்ளோம்.  

இந்தியாவில் எதுவுமே சிறிய அளவில் நடக்க வாய்ப்பே இல்லை.  இன்றைய அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையாக இருந்தாலும் தனிமனித வெறுப்பில் உருவாகும் கொலையாக இருந்தாலும் சரி நம் நாட்டைப் போலவே எல்லாமே பெரிசு. ஒவ்வொரு தலைகளுக்கும் இருக்கும் வைப்பாட்டிகளின் எண்ணிக்கையைப் போலவே. 

அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரம்மன் "சில" உறுப்புகளை தனியாக செய்வார் போல(?)

நூறு கோடிக்கு மேல் வாழும் ஜனத்தொகையில் ஒரு கோடி மனிதர்கள் ஒரே சமயத்தில் இறந்து போனாலும் நமக்கு அது பெரிய விசயமே இல்லை.  நாம் இரண்டு நாட்களில் அதை கடந்து செய்தியாக படித்து விட்டு நகர்ந்து அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவோம்.  அவலம் என்ற வார்த்தை சம காலங்களில் மறந்து போனதொன்று. அது ஈழம் என்றாலும் போபால் என்றாலும் ஒரே குறியீடு தான்.  

சுதந்திரம் வாங்கும் போது ஹாலந்து நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கு சமமாக நம் நாட்டில் குஷ்டரோகிகள் இருந்தார்கள்.  ஹாலந்தும், பெல்ஜியமும் சேர்ந்த ஜனத்தொகைக்கு சமமாக நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.  வீடு இன்றி இரண்டு கோடி மக்கள் இருந்தார்கள். அன்று முப்பது கோடி மக்கள் வாழ்ந்த ஜனத்தொகையில் பத்தில் ஒரு மடங்கு. இன்றுள்ள ஜனத்தொகையில் 40 கோடி மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு ஆளாய் பறந்து கொண்டுருக்கிறார்கள்.  நாம் வளர்ந்துள்ளோம் என்பதை எப்படி மறுக்க முடியாதோ அந்த அளவிற்கு இந்த நாட்டை வளர்ப்பதற்கு உதவியதை விட தங்களை வளர்த்துக் கொண்டு வளமான தலைவர்கள் தான் இந்தியாவில் அதிகம். இதுவும் உண்மை தானே? ஆனால் இது போன்ற அடிப்படை துணுக்குச் செய்திகளை விட மற்ற விசயங்கள் தான் ஆச்சரியமானது.

உலகம் முழுவதும் இருந்த முஸ்லிம் தலைவர்கள், மன்னர்கள் ஏற்றுக் கொள்ளாத கிலாபத் இயக்கத்தை நம்முடைய மோகன் தாஸ் கரம் சந்த் ஆதரித்தார்.  இன்றைய பாகிஸ்தானின் தந்தை ஜின்னா "அதுவொரு வெட்டி வேலை" என்று புறந்தள்ளியபோதும்.   இதன் காரணமாக ஜின்னா குறுகிய காலம் அரசியலைவிட்டு ஒதுங்கியும் இருந்தார். 

ஆனால் இதன் காரணமாகவே சம்மந்தம் இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இதே காந்தி லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சுதந்திரம் என்ற வார்த்தையை உணர்வு பூர்வமாக ஊட்டியவர்.  நவகாளி, ஸ்ரீராம்பூர், கல்கத்தா போன்ற இடங்களில் உள்ள வன்முறைச் சம்பவங்களை தவிர்க்க அத்தனை முயற்சிகளையையும் தனியொரு மனிதராக இருந்து பாடுபட்டவர்.  என்னவொரு முரண்நகை?

இந்திய வரலாறு முழுக்க இது போல ஏராளமான திடுக்கிடும் சம்பவங்கள் நிறைய உண்டு.  நாமும் நம் குழந்தைகள் படித்துக் கொண்டுருக்கும் இந்திய சுதந்திரம் என்பது வேறு.  உள்ளும் புறமும் நடந்த சுதந்திர கோரங்கள் என்பது வேறு. 

இன்றைய ஊழல்களின் அளவுகளை அதன் எண்களை கூட்டிப் பார்க்க சற்று கூடுதல் நேரம் நமக்குத் தேவைப்படுகின்றது.  ஆனால் இந்தியா சுதந்திரம் பெறற இரண்டு மாதங்களில் நடந்த ஆடம்பர நிகழ்ச்சிகளைப் பார்த்த காந்திஜி, நேரு, படேல் போன்றவர்களிடம் "ஊழல்கள் மலிந்து விட்டன" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார் போன்ற செய்திகளையையும் இதே வரலாறு தான் பதிவு செய்துள்ளது.

" ஆடம்பரங்களை ஒழிக்க தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டுவது தான் ஒரே வழி"  என்று சொன்ன காந்தியின் வார்த்தையை அன்று இருந்த தலைவர்களுக்கும் வேப்பங்காய் போலவே இருந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்குத் தான் அந்த பிரச்சனையே இல்லை.  அது தான் முகம் முழுக்க பவுடர் பூசிக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வெள்ளை வேட்டி சட்டை உடுத்திக் கொண்டு காந்தியின் படத்திற்கு மாலை போட்டு போஸ் கொடுத்து விட்டு நகர்ந்து போக முடிகின்றதே?  

" பதவிக்கு வருகிற ஒவ்வொரு அமைச்சரும் முலலில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் செல்லட்டும்.  கிராம மக்களுடன் தங்கி அவர்களது வேலைகளில் பங்கேற்று அவர்கள் உண்ணும் உணவையும் அவர்கள் அருந்தும் நீரையும் அருந்தி அவர்களது வீடுகளிலேயே உறங்கி சில தினங்களாவது பழகட்டும். அப்போது தான் மக்களின் நிலை தேவை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்" என்றார். நம்ம தலைகள் காந்திஜி சொன்ன இந்த வாசகத்தை படித்தால் என்ன சொல்வார்கள்?

இப்போது இந்தியாவில் உள்ள பொதுநல வழக்குகள் அரசியல் தலைகளுக்கு தலையிடியாய் இருக்கிறது. இதுவே தான் இப்போது பொது நல வழக்காக கொண்டு வந்து தோற்றுப் போன ஒரு நிகழ்வாகும்..

" ஜனாதிபதி சாப்பிடும் தினந்தோறும் சாப்பிடும் சாப்பாடு குறித்து சொல்லவேண்டிய அவஸ்யமில்லை.  அது அவர்களின் சொந்த விவகாரம்."
ஆனால் இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டுருக்கும் நாட்டில் தேவையற்ற பதவிகளாக இருக்கும் கவர்னர், ஜனாதிபதி போன்றோர்களுக்கு செலவழிக்கும் தொகையென்பது வருகின்றது?. மக்களின் வரிப்பணம்? 

இவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கிடைக்கும் ஓய்யூவுதியம் முதல் மற்ற படிகள் வரைக்கும் இவர்கள் பாடைக்குச் செல்லும் வரை எப்போதும் போல கிடைத்துக் கொண்டுருக்கும். இப்போது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உழைத்த உழைப்பிற்கு குண்டக்க மண்டக்க சம்பளத்தை வேறு ஏற்றியுள்ளார்கள். 

இது குறித்து எந்த குடிமகனும் கேள்வி கேட்கக்கூடாது. இது போன்ற நிகழ்வுக்கென்று இருப்பது தான் இந்திய இறையாண்மைச் சட்டம்.  எதைப் பற்றி விவகாரமாக கேட்டாலும் நீ இந்தியனா? என்று ஒற்றைச் சொல்லில் நம் பெரியவர்கள் நம்மை நோக்கி அவர்களின் ஒரு விரலைக் காட்டுவார்கள்.   ஆனால் மூன்று விரல்கள் அவர்களை நோக்கி காட்டிக் கொண்டுருப்பதை மறந்து போய்விடுகிறார்கள். ஒவ்வொரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் உள்ள கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கென்பது பத்திரிகைகளுக்கு பரபரப்பு சமாச்சாரம். படிப்பவர்களுக்குச் செய்தி.  சமூகத்திற்கு?

காந்தி என்ற கிழவன் வாழ்ந்து கொண்டுருந்த போது சற்று பயந்தாவது ஆட்சியில் இருந்தவர்கள் சற்று யோசித்துக் கொண்டு தங்களை அடக்கி வாசித்திருக்கக்கூடும். அவர் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த போது அவரின் கொள்கைகளை பிடிக்காதவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.  இவர் ஒரு முஸ்லீம் ஆதரவாளர் என்பதே. ஆனால் அன்றைய இந்து மத ஆதரவாளர்களை விட "இந்தாளு எப்படா சாவார்?" என்று காத்துக் கொண்டுருந்தவர்கள் அநேகம் பேர்கள். இவர்கள் காந்தியுடன் அவரின் கொள்கைகளையும் சேர்த்து புதைத்து மகிழ்ந்திருக்கக்கூடும். மகிழ்ந்தவர்கள் உருவாக்கிய ஜனநாயக கொள்கைகளில் இருந்து மலர்ந்து வந்துள்ளது தான் இன்றைய இத்தாலி ஆளுமை.  

காந்தி தாத்தா நீங்க கவலைப்படாதீங்க.  


உங்க பெயரை சம்மந்தம் இல்லாமல் இந்தியாவில் உள்ள பல பேர்கள் வைத்துக் கொண்டு வாழும் இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள இந்த குடியரசு தினத்தில் உறுதியேற்றுக் கொள்கின்றோம்.  காரணம் உங்க பெயரை ஏதோவொரு வழியில் நாங்க உச்சரித்தே ஆக வேண்டும் அல்லவா?.

Sunday, January 23, 2011

இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை

"ஞாயிற்றுக்கிழமைன்னா கூட கொஞ்சம் நேரம் தூங்கவாங்கன்னு பேரு.  இன்றைக்கும் காலையில சீக்கிரம் எந்திரிக்கனுமா? ஏன் தான் இப்படி இருக்கீகளோ?"


இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டில் கேட்கும் சுப்ரபாதம்.  ஆனால் இன்றைய காலைப்பொழுதில் நம்ம காட்டுப்பயபுள்ள தெகா இந்த காணொளியை அனுப்பி உரையாட மற்ற வேலைகள் மறந்து ஒரு மணி நேரம் உள்ளத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் பதம் பார்க்க வைத்து விட்டது.  மகேந்திரன் எட்டப்பராசனுக்கு நன்றி..

"வைகோ ஈழம் குறித்து ஒரு ஆவணப் படம் இயக்கியுள்ளார்.  அது வருகின்ற தேர்தலுக்கு வெளியே வரும்.  ஆளுங்கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும்" போன்ற செய்திகளை நான் தினசரிகளில் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த விசயமாகும். மனதிற்குள் வியப்பாக் இருந்து. ஒருவேளை பிரபாகரனை சந்திக்க வைகோ சென்றாரே? என் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் என்று சந்தோஷப்பட்ட நிகழ்வாக இருக்குமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஓரளவுக்கு சொல்லக்கூடிய அளவில் ஒரு காரியத்தை வைகோ செய்துள்ளார். ஈழத்தின் தொடக்கம் முதல் சம காலம் வரைக்கும் உள்ள விசயங்களை இந்த ஐந்து காணொளி மூலமாக விளக்கியுள்ளார்.  ஒவ்வொன்றும் ஏறக்குறைய 14 நிமிடங்கள் ஓடுகின்றது.

இடையில் இயக்குநர் பாரதிராஜா கூட ஈழம் குறித்து ஒரு படம் எடுப்பேன் என்று சொல்லி செய்திகளில் இடம் பிடித்துவிட்டு மறந்து போனார். மணிரத்னம் எப்போதும் போல அவர் பாணியில் சொல்லி விட்டு ஈழத்தைப் பற்றி மனதில் இருந்த கொஞ்ச விசயங்களையும் மறந்தும் போகும் அளவிற்கு திரைப்பட புரிந்துணர்வை உருவாக்கி அவரும் நகர்ந்துவிட்டார்.  இடையில் ஈழம் சார்ந்து வந்த பல படங்கள் சென்சாரில் மூச்சு வாங்க ஒவ்வொருவரும் யோசிக்க இன்று தமிழ்நாட்டில் படித்த தமிழர்களின் இளைஞர்களின் எண்ணங்களில் கூட ஈழ அவலங்கள் ஒரு செய்தியாகவே உள்ளது.

சென்ற தேர்தலில் "மக்கள் தொலைக்காட்சி" ஈழத்தை ஒரு ஆயுதமாகவே எடுத்து விடாது போராடிப் பார்த்தார்கள்.  இப்போது சீமான.  

பினாயில் கூட இலவசமாக கிடைத்து விடாதா? என்று ஏக்கம் நிறைந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது போன்ற விசயங்கள் முக்கியமல்ல. இந்த காணொளியை நிச்சயம் தேர்தல் சமயத்தில் அனுமதிப்பது என்பது எதிர்பார்கக முடியாத ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பாருங்கள்.  

உண்மையிலேயே பிரபாகரனுக்கு ஒரு ஆன்டன் பாலசிங்கம் அமைந்தது போல வைகோவும் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமைதான்.  நெடுமாறன் அய்யா கூட தனது பணியை இந்தியாவிற்குள் நிறுத்திக் கொண்டார். சர்வதேச சமூகத்திடம் ஈழ மக்களுக்காக வைகோ முன்னெடுத்துச் சென்ற பல விசயங்களை இதன் மூலம் தான் என்னால் உணர முடிந்தது. 

ஆனால் தமிழ்நாட்டில் இவரைப் போன்றவர்கள் சென்று இருக்க வேண்டிய தூரம் இதுவல்ல. வருத்தமாக உள்ளது.  வாழ்ந்து கெட்டவனின் அவல வாழ்க்கையைப் போல இவரின் இன்றைய அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. .  

ஈழத்தைப் பற்றி முழுமையாக புரிய வேண்டுமென்றால் நிச்சயம் 100 மணி நேரம் ஓடக்கூடியதாய் இருந்தாலும் அது பாதி அளவுக்குக்கூட இருக்காது.  காரணம் ஒவ்வொரு விசயத்திற்குப் பின்னாலும் உள்ள ஓராயிரம் அரசியல் மர்மங்கள் நிறைந்த விசயங்களை ஒரு குறுந்தகடுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதா என்ன?

ஈழ வரலாறு குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், தலையணை அளவு உள்ள புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த காணொளி உதவியாய் இருக்கும். மூன்றாவது காணொளியில் சமகாலத்தில் நடந்த போர் அவலங்களை காணும் போது நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில் தானா? என்றொரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இதில் வைகோ ஒரு இடத்தில் சொல்லும் வாசகம் குறிப்பிட்டத்தக்கது. 

" நான் முறையாக வரலாறு படித்தவன்.  உலகில் எவராலும் மறுக்க முடியாத மாவீரன் பிரபாகரன். எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், ஆதரவும் இல்லாமல் சர்வதேச இக்கட்டுக்களைத்தாண்டியும் தன் போராட்டத்தை முறைப்படி கொண்டு வந்து பல போர்த்தந்திரங்களை உருவாக்கி சர்வதேச சமூகத்திற்கு ஆச்சரியமளித்தவர்"

" இந்தியா பாகிஸ்தான் பகைநாடு. இருவரின் பங்களிப்பும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இருந்தது. இஸ்ரேல் ஈரான் நட்பு நாடல்ல. ஆனால் ஒருவர் விமானங்கள் கொடுக்க மற்றொருவர் குண்டுகள் அழிக்க அழிந்தது தமிழ் சமூகம். ரஷ்யா சீனா எதிரெதிர் முனைகள்.  ஆனால் இந்த துருவங்கள் மறக்க முடியாத அவலத்தை செய்து முடிக்க ஒன்று சேர்ந்தார்கள்.." 

ஆனால் இந்த போர்க்குற்றவாளி ராஜபக்ஷேயை இன்று வெற்றித்திருமகன் என்ற உதாரண வரிசையில் இந்திய அரசாங்கம் உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  அப்ப தமிழ்நாட்டு அரசாங்கம்?  

இயல்பாகவே அதிக உணர்ச்சியில் குரல் உயரும் வைகோவுக்கு இந்த காணொளியில் பல இடங்களில் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுக்கின்றது.

இராமேஸ்வரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தொலைவில் இருக்கும் ஈழம் இன்று வரைக்கும் என்ன சாபத்தை பெற்று இருக்குதோ? கடற்கரையில் இருக்கும் "சாமி"க்கும் அருள் கொடுக்க நேரமில்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கும் "ஆமாம்சாமி"களுக்கும் இன்று வரைக்கும் மனமும் மாறுவதாகத் தெரியவில்லை..

இதில் வைகோ சொல்லாத விசயங்கள் பல உண்டு. மறைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்.

















Saturday, January 22, 2011

வந்துட்டான் சீமத்துரை.

ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்காக ஏதோவொரு துறையைச் சார்ந்து தனது இருப்பியலை தக்க வைத்துக் கொளகின்றான். உயிர் வாழ உணவு.  நாகரிக வளர்ச்சி வந்த பிறகு மானத்தை மறைக்க உடை.   ஆனால் இதைப் போல மற்றொன்றுக்கும் முக்கியத்துவம் உண்டு.  அது தான் உறக்கம். இந்த உறக்கம் உண்டு கொழுத்த போதும் வரும். ஒரு வேளைகூட உண்ணாமல் இருந்தாலும் பசி மயக்கத்திலும் வரும். ஆனால் இந்த உறக்கம் ஒரு ஜாதிக்கு மட்டும் வருமா? என்பது கேள்விக்குறியே.

மிகப் பெரிய தொழில் அதிபரும் சரி, பரம ஏழையும் சரி அவரவர் நிலையில் ஏதோவொரு சமயத்தில் தங்களை மறந்து தூங்க வாய்ப்புண்டு.  ஆனால் அரசியல், ஆட்சி, அதிகாரம் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ள வாழ்ந்து கொண்டுருப்பவர்களை ஒரு கணப்பொழுது யோசித்துப் பாருங்கள். தூங்கும் நேரத்தில் கூட தங்களுடைய எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? என்பதையே தான் யோசித்துக் கொண்டுருக்கக்கூடும். 


அது மகனா? மருமகனா? பேரனா? அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சரா? தனக்குப் பிறகு யார்? இறக்கும் வரையிலும் இந்த பதவியை தக்க வைத்துக் கொளவ்து எப்படி? என்று சுற்றியிருக்கும் அத்தனை பேர்களுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எதிரியாகத் தான் தெரிவார்கள். அது அந்தக் காலத்து மன்னராக இருந்தாலும் சரி அல்லது இன்றைய அரசியல் வியாதியாக இருந்தாலும் சரி.   கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரலாற்றுக் குறிப்புகள் இப்படித்தான் சொல்கின்றது.

இராமநாதபுரம் என்றொரு மாவட்டம் முறைப்படி ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் போது சூடுபிடிக்கத் தொடங்கினாலும் இதற்கு முன்னால் இந்த மாவட்டத்தை கட்டியாண்டவர்களின் கதைகள் அத்தனையும் படிக்கும் போதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்று இவர்களும் இல்லை.  இவர்கள் வளர்த்த "பேர் சொல்லும் பிள்ளைகளும்"  இல்லை. " நான் தான் இந்த ராஜ்யத்தை ஆளப் பிறந்தவன் " என்று சொன்ன அத்தனை பேர்களை புதைத்த இடத்தை இன்று எத்தனை பேர்கள் ப்ளாட் போட்டு விற்று இருப்பார்களோ?

" வடக்கில் இருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மதுரையை சூறையாடினார்கள், விலைமதிப்பில்லாத செல்வத்தைக் கொண்டு சென்றார்கள். இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்து தள்ளினார்கள் " என்று வரலாற்றில் போகிற போக்கில் இந்த இஸ்ஸாமிய படையெடுப்பாளர்களைப் பற்றி ஏதோவொரு சமயத்தில் படித்து இருப்போம்.  ஆனால் இஸ்லாம் என்ற ஒரே மதத்தை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளும் இருந்த இந்த அதிகார வெறியும் பதவி மோகமும் எந்த அளவிற்கு இருந்தது என்பதை வரலாற்றுக் குறிப்புகளை இந்த சமயத்தில் லேசாகத்தான் நாம் பார்க்க முடியும். காரணம் இது இந்திய வரலாறு அல்ல.  ஒரு மாவட்டத்தின் தல புராணம். அவர்கள் இப்போது தப்பி பிழைத்துப் போகட்டும்.

பாண்டிய மன்னர்களின் குடும்ப உள் நாட்டு குழப்பங்கள் என்று தொடங்கி சுற்றிலும் உருவான ஏராளமான எதிரிகள் புடைசூழ வாழ்ந்து கொஞ்சம் கொஞசமாக தங்கள் ஆதிக்கத்தை இழந்து கொண்டுருந்த போது உள்ளே வந்தவர் தான் பாமினி. இவரும் திடீர் என்று முளைத்து வரவில்லை.  அளவற்ற கருணை உள்ள அல்லாவை வணங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்து வளர்ந்தவர் தான். 

" டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்கான பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர் ஆவார். .தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள் ".

இப்படித்தான் இவரின் தலவரலாறு தொடங்குகிறது. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டது.

காலம் எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது. 

அரியணைக்கு ஆசைப்பட்டவர்களும், அடுத்தவனை அழித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களும், வாளால் இரத்த அபிஷேகம் செய்து வந்த படையெடுப்பாள்ர்களையும் பார்த்து வந்த இந்த பூமியில் இறுதியில் வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  

மதன் சொன்ன "வந்தார்கள் வென்றார்கள்" என்பது போல ஒவ்வொரு படையெடுப்பாளர்களும் தாங்கள் நினைத்து வந்தது போலவே வென்றார்கள்.  ஆனால் நீடித்து இருந்தார்களா? என்பதை உண்மையான சரித்திரக் குறிப்புகளை படிக்கும் போது இதற்கு தானா ஆசைப்பட்டாய்? என்ற கேள்வியும் வருகின்றது. ஆனால் உண்மையான நம்முடைய கதாநாயகன் வெள்ளைக்காரதுரைகளைப்பற்றி படிக்கும் போது ஆச்சரியம், சாகசம், பிரமிப்பு, சாதுர்யம், விவேகம், பொறுமை, பிரித்தாளும் சூழ்ச்சி போன்ற அரசியல் பாடத்திற்கு தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் வண்டி வண்டியாக கொட்டிக் கிடக்கிறது.  இந்த பக்கி பய புள்ளைங்க வந்த பிறகு தான நாம் பார்க்கப் போகும் இந்த இராமநாதபுர வரலாற்றின் இடைவேளை தொடங்கி முக்கிய படத்திற்கான கதைக்குள் நுழைகின்றது. 

இந்த சமயத்தில் இந்த வெள்ளைக்கார பயலுகளைப் பற்றி சிறு குறிப்பு பார்த்துவிடலாம். 


காரணம் இன்று வரையிலும் " வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.  காந்தி தாத்தா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் " என்ற கேள்வி பதிலுக்கு பொட்ட மனப்பாடமா உருவேத்திக்கிட்டுப் போய் வாந்தி எடுத்து வாத்தியார்க்கிட்ட அடிவாங்காம தப்பிச்சு வந்துருப்போம்?  

ஏன் இவர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்?

14 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மிளகு லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சு வியாபாரிகளிடம் வாங்கி விற்றுக் கொண்டுருந்தனர்.  ஒரு நாள் டச்சு வியாபாரிகள் திடீரென்று மிளகின் விலையை ஒரே சமயத்தில் ஐந்து ஷில்லிங் (அப்போதைய மதிப்பில் மூன்றே முக்கால் ரூபாய்) விலையை ஏற்றி " இஷ்டம்னா வாங்கு... இல்லைன்னா நடையைக் கட்டு " என்று விரட்ட வெள்ளைக்கு கோபம் பொததுக் கொண்டு வர " இனிமே உங்க சங்கநாத்தமே வேண்டாம் " என்று முடிவு செய்து 24 லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து 1549 செப் 24 அன்று 75000 பவுண்டு மூலதனத்துடன் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். 

இதே ஆண்டு டிசம்பர் 31ந் தேதி பிரிட்டிஷ் முதலாம் எலிசபெத் இந்த நிறுவனம் நன்னம்பிக்கை முனைக்கு அப்பால் கீழ்திசை நாடுகளுடன் வியாபாரம் செய்யலாம் என்று அனுமதி வழங்க இவர்களின் நல்ல நேரம் கடலைத் தாண்ட வைத்தது.

1600 ஆகஸ்ட் 24 ஹெக்டர் எனும் பெயர் கொண்ட 500 டன் எடையுள்ள பிரிட்டிஷ் கப்பலில் வில்லியம் ஹாக்கின்ஸ என்கிற மாலுமி பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் கரை இறங்கினார்.  அப்போது இந்தியாவில் ஆட்சி புரிந்து கொண்டுருந்தவர் மொகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர். வெள்ளைத் தோலைப் பார்த்ததும் மன்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வழிகாட்டியாய் மாற பயபுள்ளைங்களுக்கு சுக்ர திசைகளும் இந்தியாவிற்கு சனி திசையும் அப்போது தான் தொடங்கியிருக்க வேண்டும்.

அன்றைக்கு தொடங்கிய ஆட்டம் தான் இறுதி வரைக்கும் " உன்க்கும் பெப்பே. உங்கப்பனும் பெப்பேன்னு " கதை திரைக்கதை வசனம் எழுதத் தொடங்க படிப்படியாக தங்களை வலுப்படுத்திக் கொண்டு வந்த வெள்ளையர்கள் 1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தான் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆட்டம் பாட்டம் என்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியது. 


வெள்ளையர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் போல.  அப்போது தமிழ் நாட்டுக்குள் ஆட்சியில் இருந்த சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி ( தமிழர்களுக்கு அன்று முதல் இன்று வரைக்கும் புதிதா என்ன?) அவர்களைப் பிரித்தாண்டு அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 

ஆங்கிலேயர் அதிகாரத்தை தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன். வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்

Monday, January 17, 2011

முஸ்லீம்கள் - நதிமூலம்

இராமநாதபுர மாவட்டத்தை பேசும் போது நாம் மற்றொரு விசயத்தையும் இப்போது பேசியாக வேண்டும்.  அது தான் இந்த மாவட்டத்தில் வாழ்ந்த இஸலாமியர்கள். 

பல்லவர்கள் தொடங்கி கடைசியாக பாண்டியர்கள் வரைக்கும் கால்பந்து போல இந்த மாவட்டம் பலரின் கால் கை பட்டு உருண்டு வந்தாலும் கிபி 1331 ஆம் ஆண்டு மதுரையைத் தலைநகரகாக் கொண்டு முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவர்களின் ஆட்சி கிபி 1371க்குப் பிறகு சரிந்த பிறகு தான் நாயக்க மன்னர்களின் ஆட்சி உருவானது. இதுவே 1393 ஆம் ஆண்டு முற்றிலும் துடைத்தது போல் ஆனது. 

ஆனால் இஸ்லாமியர்கள் என்பவர்கள் எப்படி உருவானார்கள்? 

இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.  சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்த யவனர்களின் பெயரே பின்னாளில் சோனகர் என்று அதனூடே முஸ்லீம் என்றும் உருவானது. ஏற்கனவே நம் பதிவில் கும்மியார் சொல்லியுள்ள மரைக்காயர் என்பது மரக்கலத்தில் வாணிப தொடர்புக்காக உள்ளே வந்தவர்கள் என்பதில் தொடங்கி துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் மூலம் துலுக்கர் என்ற பெயரும் உருவானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான்.  அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும்.  தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்திப்பட்டு அன்றாட வாழ்வில் அப்போது சாதாரண குடிமகன் அனுபவித்த அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மன்னர் ஆண்டாலும் சரி, அவர்களின் சார்பாளர்கள் இருந்தாலும் சரி அடித்தட்டு மக்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம் இந்த இன்ப்பாகுபாடே முக்கிய பாத்திரம் வகித்தது.  

இதற்கு மேல் குலத்தொழில் என்ற போர்வையில் ஒவ்வொருவரையும் ஒரு அளவிற்கு மேல் மேலே வரமுடியாத அளவிற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் அடக்கி ஓடுக்கி வைத்திருந்தனர்.  

எழுந்தால், நடந்தால், நின்றால், பேசினால் குற்றம் என்கிற நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இரண்டு காரியங்கள் செய்யத் தொடங்கினர்.  ஒன்று புலம் பெயர்தல்.  மற்றொன்று தங்களின் மதத்தை மாற்றிக் கொள்ளுதல்.  ஆங்கிலேர்கள் மூலம் உள்ளே வந்த கிறிஸ்துவம் மிக அமைதியாக தங்களின் ஆக்டோபஸ் கரங்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிக் கொண்டுருந்து.  அதைப் போலவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நோக்க அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாக தேர்ந்தெடுக்கத் தொடங்கினர்.

இந்து மதம் என்றால் சாவது வரைக்கும் சுடுகாட்டில் புதைப்பது வரைக்கும் பரவியிருந்த கொடூரத்தை தாங்க முடியாத மக்கள் தங்களுக்கான நல்வாழ்க்கையை இந்த இஸலாமிய மார்க்கத்தை தழுவியதன் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டனர். ஆறாவது நூற்றாண்டில் உள்ளே வந்த அரேபியர்கள் உருவாக்கிய பாதையில் இருந்து இது தொடர்கின்றது.  ஆனால் இடையில் வந்த அந்நிய படையெடுப்புகளால் இது போன்ற கட்டாய கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவே இருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.  இன்றைய முஸ்லீம் மக்களின் பத்து தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்துவாக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 

முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை 

இவ்வாறு சொல்லியிருப்பது இந்து மதத்தை கடல் தாண்டி கொண்டு சென்று முழங்கிய சுவாமி விவேகானந்தர். காரணம் அந்த அளவிற்கு பழைய சமூக வாழ்க்கையில் மனிதர்களை இந்த ஜாதி என்ற மூலக்கூறு சல்லடைக் கண்கள் போல் உற்றுநோக்கிக் கொண்டுருந்தது.  தமிழர்கள் இஸலாம் மதத்தை தழுவ ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே நடைபெறத் தொடங்கியது.


ஊரில் நான் இருந்தவரையிலும் அப்பா இறைச்சிக் கடைக்குள் நுழையும் போதே மாமா என்று தான் முஸ்லீம்கள் அழைப்பார்கள். எனக்கு அப்போது இந்த பாகுபாடுகள் குறித்து அதிகம் தெரியாத போதும் இப்போது குறிப்புகள் வழியாக படித்து உணரும் இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  நான் பார்த்த ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது.

" இதனால்தான் இன்று வரை மற்ற சமயத்தினர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. தமிழர்களான முஸ்லிம்களை தமிழர்களான தலித்துகள் தாத்தா என்றும், யாதவர்களும் தேவர்களும் மாமா என்றும், பரவர்கள் சாச்சா என்றும் இதுபோன்று பல்வேறு முஸ்லிமல்லாத சமூகத்தினர் உறவு வைத்து அழைக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.  தீண்டாமை ஒழிப்பில் தொடர்ச்சியாக பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் இஸ்லாம் தன் பங்களிப்பைச் செலுத்தி வந்துள்ளது. இருப்பினும் கடந்த நூற்றாண்டில் அதன் பங்களிப்பு வீரிய மிகுந்ததாக இருந்துள்ளது."

இந்து மதத்தின் கொள்கை என்று சொல்லப்படுவது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்".  ஆனால் அதுவே இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி" என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் அடித்தட்டு மக்களுக்கு தாங்கள் மாறுவதற்கு ஏற்ற மார்க்கம் இது தான் என்று தேர்ந்தெடுத்ததில் பெரிதான ஆச்சரியமில்லை.

ஆனால் சமகாலத்தில் இஸ்லாமியர்களின் நலனுக்கான என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டுருக்கும் அரசியல் கட்சிகளை அவர்களின் கொள்கைகளை இப்போது இதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதிவில் உள்ளே வரும் போது, காங்கிரஸ் கட்சியை எதிர்க்க கூட்டுச் சேர்ந்த எட்டு கட்சிகளைப் பற்றி பேசும் இவர்களின் தரம் தராதரம் பற்றி பேசுவோம்.

மலேசியாவில் மகாதீர் ஆட்சி புரிந்து கொண்டுருந்த போது தமிழ்நாட்டு முஸ்லீம்களை குறிவைத்து சில சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தார்.  இத்தனைக்கும் மகாதீர் முன்னோர்கள் கூட கேரளாவில் இருந்து போனவர்கள் தான்.  அவரும் அரசியல்வாதி தானே?  ஆனால் மலேசிய தமிழ் முஸ்லீம்கள் அன்று முதல் இன்று வரையிலும் தாய் வீடாக தமிழ்நாட்டைத் தான் கருதுகிறார்கள்.  இன்று கூட அதில் பெரிதான மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. 

நான் திருப்பூரில் பார்த்தவரையிலும் அரபு உருது பேசக்கூடிய முஸ்லீம்கள் எந்த இடத்திலும், குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தங்கள் தாய் மொழியில் தான் பேசுகின்றனர்.  ஆங்கிலம் படித்த மோதாவிகள் கூட தங்கள் மொழியில் திடீர் என்று தாவி என்னை பலமுறை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  அதே போல நான் பார்த்த, பழகிய மலேசிய சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்கள் முடிந்தவரைக்கும் அவர்களின் தமிழ் மொழிப்பற்றை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்.  வருகின்றவர்களிடம் மலாய் ல் பேசுவார்கள்.  உள்ளே இருப்பவர்களிடம் தமிழிலில் தான் தொடர்வார்கள். இது போல பல விசயங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.  இது குறித்து வரலாற்று தகவலில் உள்ள சிறு குறிப்பையும் இதில் படித்துவிடலாம்.

"தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர். தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது." 

" இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும்." 

" இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி,உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன."

Saturday, January 15, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 வெளியேறும் நேரமிது.

சென்ற ஆண்டு (2009) தமிழ்மணம் அறிவித்த விருதுகளுக்காக என்னை நண்பர் அழைத்து எனக்கு இதை புரியவைத்தார். எப்போதும் போல அவர் சொன்னபடியே சேர்த்துவிட்டு மறந்து போய்விட்டேன். ஆனால் தேர்வு நிலைக்கு வரவில்லை. அப்போது உள்ளடி வேலைகளும் இருந்தது என்பதை அதன் பிறகு பலரும் புரியவைத்தார்கள்.  ஆனால் இந்த முறை தமிழ்மணம் பெரும்பாலும் அது போன்ற உள்ளடி வேலைகளை அடக்கி ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் உண்மைத்தமிழன் போட்ட கூப்பாட்டில் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் கதவைத் தட்டி உள்ளே வரலாமா? என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்துள்ளது.

இந்த முறை இதில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் யோசித்த போது என் மனதில் வந்து போனவர்கள் ஐந்து பேர்கள்.  வலைபதிவில் வெவ்வேறு பரிணாமத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டுருப்பவர்கள்.  

எனக்கு இடுகையில் உள்ள தொழில் நுட்ப அறிவு குறித்து எப்போதும் ஆர்வம் இருப்பதில்லை. இன்றைய தினத்தில் ஓரளவிற்கு இதன் தொழில் நுட்பத்தை உருண்டு புரண்டு கற்றுக் கொண்டாலும் பலரின் தளங்களைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓய்வு நேரங்களில் எழுதுவதைத் தவிர வேறெதிலும் நான் கவனம் செலுத்துவதில்லை. 

காரணம் "நம்மால் எது முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்"  என்பதை நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையைப் போலவே இந்த வலையுலகத்திலும் கொள்கையாகவே வைத்துள்ளேன். இங்கு மற்றொரு பிரச்சனையும் உண்டு.

அதிவேக இணைப்பை சமீபத்தில் பிஎஸ்என்எல் ல் கேட்டு வாங்கிய போதும் கூட வீட்டில் உள்ள இணையத்தொடர்புக்கு அடிக்கடி சளி காய்ச்சல் இருமல் தொந்தரவு இயல்பாக வந்து விடுகின்றது. ஏர்டெல் போன்ற கொள்ளை கொலைகார கூட்டத்திடம் போய் மாட்டிக் கொள்வதை விட அரசாங்கம் எவ்வளவோ பரவாயில்லை. இதன் காரணமாகவே எனக்கு வலையுலக நகர்வலம் குறைவாகவே இருக்கிறது.

இந்த போட்டிக்கு எப்படி கலந்து கொள்ள வேண்டும்?  என்பதை நான் தேர்ந்தெடுத்த ஐந்து பேர்களிடமும் கேட்ட போது மூன்று பேர்கள் தங்கள் அறிவுரையைச் சொன்னார்கள்.  ஒருவர் வீடுவரை வந்து ஒரு விருதைக் கொடுத்து விட்டு வேறெதும் என்னிடம் கேட்காதே!!!!! என்பது போல் நகர்ந்து போய்விட்டார். ஒருவர் இப்போது பின்னூட்டம் கூட அதிகம் போடுவதில்லை. காரணம் அவரின் வேலைப்பளூவை நான் புரிந்தே வைத்திருக்கின்றேன். ஆனாலும் அவரும் சில புரிந்துணர்வுகளை தெரியப்படுத்தினார். 

கூட்டிக் கழித்துப் பார்த்தபோது கடைசியாக ஒருவர் கொடுத்த அறிவுரையை கரம் சிரம் புறம் பார்க்காமல் அவர் சொன்னபடியே மூன்று தலைப்புகளையும் சேர்த்துவிட்டு ஒதுங்கி விட்டேன்.  காரணம் அவரின் ஆளுமையை நான் அறிந்ததே. இப்போது வெற்றியும் கிடைத்துள்ளது.



இரண்டு தலைப்புகளுக்கும் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இதில் ஒரு ஆச்சரியம்?  

எங்க ஊரு காரவுக சுடுதண்ணி. ஒன்னுமன்னா பழகிறவுக நம்ம செந்திலாண்டவர். (அவருக்கு இந்த வார்த்தை பிடிக்காது?)  இரண்டு பேருக்கிட்டத் தான் தோத்துருக்கேன். சுடுதண்ணி திடீர்ன்னு வருவாக. ஒரு சுனாமிய உருவாக்கிட்டு போயிடுவாக.  ஆனா நம்ம செந்திலாண்டவரை நான் சக போட்டியாளராக மனதில் வைத்துக் கொண்டு வேறொரு சமயத்தில் அவரை முந்த வேண்டும் என்று சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கின்றேன்.  அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் போல தெரியுது. தமிழ் வலையுலகத்தில் சிறப்பான வீச்சை உருவாக்கிய செந்திலின் "எங்கே செல்லும் பாதை"  தளம் குறித்து எப்போதும் எனக்கொரு கர்வமான பொறாமை மற்றும் பெருமையுண்டு.

உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றவர்களுக்கும், வாழ்த்துரைத்தவர்களுக்கும், இந்த தலைப்பை வழிமொழிந்தவர்களுக்கும், மின் அஞ்சல் வாயிலாக என்னுடன் முன்பின் அறிமுகம் இல்லாத போதும் ஒவ்வொரு சமயத்திலும் இது குறித்து தெரிவித்த நல் இதயங்களுக்கும் தேவியர் இல்லத்தின் நன்றி. 

நான் கவனித்த வரையிலும் விதி ராஜீவ் மதி பிரபாகரன் என்ற தலைப்பு தினந்தோறும் எவரோ சிலர் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். சற்று நம்பிக்கை இருந்தது.  இந்த சமயத்தில் இந்த விசயங்களை எழுத உதவிய முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  அவர் எழுதிய புத்தக அறிவை வைத்துக் கொண்டு வெகு ஜன ஊடகத்தில் வந்த தகவல்களை திரட்டி மொத்தமாக எழுதிப் பார்த்த (தொடர்) தலைப்பு இது. 

திருப்பூர் குறித்து நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் இன்று உண்மையாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இன்னமும் எவரும் இதன் விபரீதத்தை உணராமல் ஆட்சியாளர்களின் அயோக்கியதனத்தை எவரும் எதிர்க்கத் தயாராக இல்லை என்பது தான் இன்றைய எதார்த்த உண்மை.

இதுவொரு வெற்றி என்று கருத முடியவில்லை. ஒரு அங்கீகாரம் அல்லது என்னை சரியான முறையில் மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளேன் என்பதாக எடுத்துக் கொள்கின்றேன். 

எழுதுபவனுக்கு தன் எழுத்துக்களை கொண்டு சேர்ப்பதும் முக்கியம். அதற்காக எந்த லாபி வட்டத்தையும் நான் உருவாக்கவில்லை.  உருவாக்கவிரும்புவதும் இல்லை. உணர்ச்சி, உணர்வு இந்த இரண்டு வார்த்தைகளிலும் உணர்ச்சிக்குத் தான் இந்த வலையுலகத்தில் அதிக முக்கியத்துவம் விரைவில் கிடைக்கின்றது. 

நீடிக்குமா? என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். 

இந்த முறை போட்டியில் கலந்து கொண்ட பலரின் தலைப்புகளையும் பார்க்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக எழுதியவர்களை சுட்டி கொடுத்து சுட்டித்தனமாக பாராட்டமுடியும். ஆனால் என்னைத் தெரிந்தவர்கள், என் எழுத்தைப் படிப்பவர்கள், என் நலம் விரும்பிகள் என்ற இந்த மூன்று வட்டத்திற்குள் ஏதோவொரு வட்டத்தில் பலருக்கும் நான் பிடித்தமானவனாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.  இது போக இந்த தலைப்புகள் இறுதிப்பார்வைக்கு சென்ற போது இந்த தலைப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பை உணர்ந்து இருக்கக்கூடும். 

என் நெருங்கிய நண்பர் நிகழ்காலத்தில் சிவா கொடுத்துள்ள சுட்டியைப் படித்துப் பாருங்கள்.  இத்தனை பேர்களையும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அணைவரும் படித்திருக்க முடியுமா?

மற்றொரு ஆச்சரியம்?? 

நானும் இந்த முறை தமிழ்மணம் நடுவர் குழுவில் ஒருவனாக தேர்வாகியிருந்தேன்.  ஆனால் தமிழ்மணம் நிர்வாக குழுவினர் என்னை தேர்ந்தெடுக்க காரணம் எதுவாக இருந்தாலும் தொடக்கத்தில் என் தளத்தின் சுட்டியை இந்த தமிழ்மணத்தில் இணைக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவானது. நான் ஏற்கனவே எழுதிக் கொண்டுருந்த வேர்ட்ப்ரஸ் சுட்டி என்னிடம் வந்து சேர்ந்த போது நிச்சயம் நாம் கலந்து கொள்ள முடியாது என்றே முடிவு செய்து விட்டேன். ஆனால் தமிழ்மண நிர்வாக குழுவின் சட்டதிட்டங்கள் உடைப்பது சாதாரணமானதல்ல என்பதை நான்கு நாட்கள் நான் தொடர்ந்து கொடுத்த மின் அஞ்சல் புரிய வைத்தது. 

காரணம் தமிழ்மணத்தின் தானியங்கி திரட்டி அதன் போக்கில் மட்டுமே செயல்படும்.    உள்ளே புகுந்து உழப்ப முடியாது போல.    அதன் பிறகே இந்த இடுகைக்கான சுட்டி வரவேண்டிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாட்கள் மனம் பெற்ற உளைச்சலின் மூலம் புதிய நோக்கம் உருவானது.  

ஒருவேளை இந்த முறை ஏதோவொரு தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்த முறை தமிழ்மணம் விருதுகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பதை முடிவாக வைத்திருந்தேன்.. எத்தனையோ புதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள நாம் தமிழ்மணம் விருதுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று யோசித்ததை இப்போது இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றேன். 

வினவு மற்றும் கோவிகண்ணன் இந்த வருடம் உருவாக்கிய பாதையிது.   அடுத்த ஆண்டு தமிழ்மணம் 2011 போட்டிகளில் கலந்து கொள்ளப் போகும் புதிய இணைய எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இந்த முறை வெற்றி பெற்ற சக தோழமைகளுக்கு என் வாழ்த்துகள்.

முகிலன் கூகுள் பஸ்ஸில் தமிழ்மணம் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களின் தேர்வான இடுகையைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். இந்த சமயத்தில் இது குறித்து சில வார்த்தைகள்.

இரண்டு பிரிவுக்கான தலைப்பு எனக்கு வநது சேர்ந்தது.  அதில் உள்ள இடுகைகளை என் பார்வையில் விமர்சித்து சாதக பாதகத்தை பட்டியலிட்டு அதற்கு தனியாக மதிப்பெண்கள் கொடுத்து அனுப்பி இருந்தேன்.  ஆனால் நான் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஒன்று மட்டும் வந்துள்ளது.  ஆக மொத்தம் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இந்த குழுவில் இருந்த மற்ற எவருக்கோ போய் இருக்கக்கூடும்.  இன்னும் சிலருக்குக்கூட போயிருக்கலாம்.  அவர்களின்  மதிப்பெண்கள் என்னுடைய மதிப்பெண்கள் இரண்டும் சேர்ந்து பொது மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும். 

இதற்கு மேலே தமிழ்மணம் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும் தராசுப் பார்வை.  ஆக மொத்தம் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம் போன்ற இந்த முறை தமிழ்மணம் நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

மற்றொரு ஆச்சரியம் ஆன்லைனில் வந்த அந்த பயபுள்ள கூட மூச்சு கூட விடாமல் அப்படியோ......... அப்படியா........ என்னங்க சொல்றீங்க......... என்று நழுவிப்போன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சமயத்தில் புத்தக கண்காட்சியில் சூப்பர் ஸ்டார் போல பட்டையைக் கிளப்பிய என்னை பட்டை தீட்டிக் கொண்டுருக்கும் துளசி கோபால் கூட முச்சு விடவில்லை.. 


என்னடா இவங்கள எல்லாம் தமிழ்மணம் நடுவர் குழுவில் தேர்ந்தெடுக்காமல் நம்மள கொண்டு போய் வடிவேல் வலியக்க ஜீப்ல ஏறிப்போன மாதிரி ஏத்தியிருக்காங்களேன்னு யோசிச்சேன்.  

ஆனால் இந்த நடுவர் குழு பட்டியலைப் பார்த்த போது தான் புரிந்து கொண்டேன். ஆக மொத்தம் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமிழ்மணம் எந்த மாதிரியான திண்டுக்கல் பூட்டை  போட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். .

தேவியர் இல்லத்துக்கு இரண்டு தளங்கள்.  வீட்டில் இரட்டை குழந்தைகள் கிடைத்ததும் இரண்டு பரிசுகள்.  ஏன் செந்திலு ஒன்னு பெரிசா ரெண்டு பெருசா?

போதும் மக்களே. 

உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் தமிழ்மணத்திற்கும் என் நன்றி. 

இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் எதற்கும் அவசரப்பட வேண்டிய அவஸ்யமில்லாத விடுமுறை கிடைத்துள்ளது.  கடந்து போன பல நாட்கள் தூங்கும் போது சொல்லமுடியாத மந்திரக்கதைகளை இனிமேல் இந்த விடுமுறை நாளில் சொல்லவேண்டும் என்ற உத்தரவு மகாராணிகளிடம் இருந்து வந்துள்ளது. 

அப்புறம் மறக்காம நம்ம இராமநாதபுரம் பக்கம் வந்து பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா என்று வந்து பாடிட்டு போங்க.

Thursday, January 13, 2011

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை

தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் மூன்று மன்னர்களுக்கு பிரதான இடமுண்டு. மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டியர்கள் என்றும் இதைத்தான்  சங்ககாலம் என்கிறார்கள். தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் இரு காலங்களைப் பொற்காலம் என்று கூறப்படுகின்றது. ஒன்று சங்ககாலம் (கிபி 200 வரை) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரை) இந்த காலத்தில் தான் தமிழன் எவருக்கும் அடிமைப்படாமல் சுய ஆட்சி அதிகாரம் பெற்றுருந்தான். 

                                பாண்டிய மன்னர்களின் கதை சொல்லும் படமிது
பாடப்புத்தகங்களிலும், இவர்களை வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் சிறப்பான துதிகளுக்கும் எவ்வித குறைவும் இருக்காது. சரிதானே?  இவர்கள் வாழ்ந்த மாடமாளிகைகள், அலங்கரிக்கப்பட்ட விதம், இவர்களின் ஆட்சி பரிபாலணங்கள் போன்ற அத்தனையும் ஏறக்குறைய ஒரு சார்ப்புத் தனமானவையே. அப்போது வாழ்ந்த மக்களின் அடிப்படை வாழ்வியல் சோகங்களையை எந்த வரலாற்று ஆசிரியர்களும் அதிகம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 

காரணம் தொடக்க கால தமிழர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்த வரலாற்றுப் பக்கங்களை எழுதியவர் எவரும் மேலைநாட்டினர் போல வரலாற்று ஆசிரியர்கள் அல்ல. இந்த சமயத்தில் அது போன்ற அவலங்களை லேசாக பார்த்து விடலாம். 

புறநானூறு பாடல் 150,160

ஒரு புலவனின் மனைவி.  குழந்தைக்கு பால் கொடுக்கும் மார்பகங்கள் சதைப்பற்றில்லாமல் தொங்கி உலர்ந்து காணப்படுகிறது.. பானையில் சோறில்லை. அழும் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கின்றாள், 

இது போன்ற பல பாடல்கள் அந்த காலத்தில் வாழ்ந்த அடிப்படை மக்களின் அவல நிலையை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. 

மன்னர்கள் படையெடுத்தார்கள், வெற்றி கொண்டார்கள். மானம் பெரிதென வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்தார்களா? 

பழங்கால சங்கப்பாடல்களில் அரிதாக ஔவையார் பாடிய ஒரு பாடல் உண்டு. 
மூவேந்தர்கள் ஒற்றுமையாக ஒரு விழாவில் கலந்து கொண்டதை (புறநானூறு 367) வாயார வாழ்த்தி பாடுகிறார்.

காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், சோழன் திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒன்றாக சேர்ந்து வந்த போது இவ்வாறு பாடுகிறார்.

"இதுபோல உங்கள் ஒற்றுமை நீடித்து இருந்தால் உலகமே உங்கள் கைப்படும் " என்கிறார். (புறம் 56) 

தமிழக மன்னர்கள் போர்க்களத்திற்கு வெளியே புரிந்துணர்வோடு ஒன்று சேர்ந்து இருந்தது மிகக்குறைவே. இதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சி கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் முடிந்து போய் அடுத்து 300 ஆண்டுகள் களப்பிரர் ஆள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சோழப் பேரரசுக்குள் உருவான குடும்பச் சண்டைகளும், மூவரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாக அடுத்தவர்கள் உள்ளே வர காரணமாக இருந்தவர்களும் நம் அற்புத தமிழ் மன்னர்களே?  

இதைப் போலவே சங்ககால புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ள தற்புகழ்ச்சி, உயர்வுநவிழ்ச்சி அணிகள் போன்றவற்றை படிக்கும் போது கேட்பவர்களுக்கே கூசுமளவிற்கு இருக்கும். இன்றைய அரசியல் வரைக்கும் இப்படித்தானே இருக்கிறது.  ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடுவோம். இதில் பின்னால் வரப்போகும் ஆங்கிலேர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் வாழ்ந்த பெருங்கவிஞர் இராமச்சந்திரக் கவிராயர் எழுதியுள்ள கவிதையை படித்த போது இந்த பழம்பெரும் புலவர்கள் சங்ககாலத்தில் மன்னர்களை உயர்த்தி எப்படி பாடல்கள் பாடியிருப்பார்கள் என்பதை உத்தேசமாக நினைத்துப் பார்கக முடிகின்றது.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.

நாம் இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கக்கூடிய இராஜராஜசோழன் ஆட்சியை விட இந்த பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தை புராதன சிறப்பு மிக்கது என்கிறார்கள்.  அதிலும் கடைச்சங்க பாண்டியர்கள், இடைச்சங்க பாண்டியர்கள், இது போக பிற்கால பாண்டியர்கள் என்று வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்.  நாம் மொத்தமாக உள்ளே புகுந்து வெளியே வர வேண்டுமென்றால் நாமே நமக்கு சங்கூதிக் கொள்வது போல் ஆகிவிடும்.

மானவர்மன்.

இந்த பாண்டிய மன்னன் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத்தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு தங்களின் எழுச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பக்கங்களை எழுதத் தொடங்கினர். பாண்டிய மன்னர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக பல்லவர்களுடனும் மோதி தங்களின் ஆளுமையை பெருக்கிக் கொள்ளத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னனை வெற்றி கொண்ட பிறகே பாண்டிய மன்னர்களின் பொற்காலம் தொடங்கியது. 

ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் உள்ளேயிருந்த பல குறுநிலமன்னர்களின் செட்டைகளை அடக்கி ஒடுக்கி தாங்களை வலிமையாக்கிக் கொண்டனர். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தான் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 முதல் 862) பல்லவ பேரரசுடன் மோதிய போது மற்றொரு ஆச்சரியமும் உருவானது.  அருகேயிருந்த ஈழத்தில் தமிழ்நாட்டு அரசியல் வேர்விடத் தொடங்கியது. எல்லாவகையிலும் எழுச்சி பெற்ற பாண்டியப் பேரரசு முதல் முறையாக ஈழத்தில் படையெடுத்துச் செல்ல அங்கேயிருந்த ஸேன மன்னன் (833 முதல் 853) துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்க அநுராதபுரத்தில் கிடைத்த செல்வமும் வெற்றியுமாக தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான்.  இதுவே தான் இராஜராஜ சோழன் காலம் வரைக்கும் நடந்தேறி வந்துள்ளது.  செல்லும் இடங்களில் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டியது.  முடிந்தால் சார்பாளர்களை நியமிக்க வேண்டியது.  முடிந்தது கதை. 

மன்னர்களைப் பொறுத்தவரையிலும் இதுவொரு மற்றொரு மணிமகுடம்.  

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெற்ற காரணங்களில் ஒன்று உண்டு.  ?ஈழத்துக்கு போர் எடுத்து சென்று வென்றது.  பாண்டிய மன்னர்களின் போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் தப்பிச் சென்ற மன்னனை கண்டு காணாமல்  தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தது. தங்களிடம் தோற்றவன் நெஞ்சம் முழுக்க வஞ்சகத்துடன் இருப்பானே என்பதை மறந்து போக இதுவே இவர்களின் குடும்பத்தில் குளறுபடி உருவாவது வரைக்கும் வந்து நின்றது.. 

முறைப்படியான போரில் வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ஈழத்திலிருந்த மன்னன் இரண்டு காரியங்கள் செய்தான்.  ஒன்று பல்லவ அரசுடன் இணைந்து பாண்டியப் பேரரசை எதிர்த்தது.  இது முறைப்படியான போர்.  முதுகுக்குப் பின்னால் இருந்து செய்த மற்றொரு காரியமும் ஒன்று உண்டு. இந்த தந்திரக்கார கூட்டணிப் படையினர் பாண்டிய மன்னனின் மகனாகிய வரகுணபாண்டியனை சுதியேத்தி அப்பாவுடன் மோத வைத்தது. அப்பாவுடன் மோதி தோற்ற மகன் ஈழத்துக்கு சென்றான்.  இது போதாதா?   அடுத்த திட்டம் உருவானது.

ஈழத்து ஸேன மன்னன் படைகள் (853 முதல் 857) பாண்டிய நாட்டின் தென் பகுதியான மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் வந்த பல்லவர் படைகள் சுற்றி வளைக்க முடிவுக்கு வந்தது. போரில் வீரம் ஜெயிக்குமா? விவேகம் ஜெயிக்குமா?  ஜெயித்தது விவேகமே?

சிங்கள மன்னன் படை மகன் ஸ்ரீ வரகுண பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக (862) முடிசூட்டி அழகு பார்த்தது.  அப்பா புதைத்த மண் காய்வதற்குள் மகன் அரசாட்சியில் அமர்ந்த காட்சியை காணும் போது 21 ஆம் நூற்றாண்டு வரைக்கும் சமகால அரசியலும் இப்படித்தானே இருக்கிறது.

திருப்புறம்பியத்துப் போர்.

பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போர். இந்த போரின் மூலம் தான் பல்லவர்களின் ஆட்சியும், பாண்டியர்களும் வலுவிழக்கக் காரணமாக இருந்தது. கொல்லைப்புற வாசல் வழியாக வந்த பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடிக்கப்பட்டான்.  போரில் பல்லவ மன்னன் அபராஜிதன் வெற்றிபெற்றுருந்தாலும் இந்த போர் தான் சோழர்கள் தங்களது பாதையை உருவாக்கிக் கொள்ள காரணமாகயிருந்தது.  இந்த போரில் பல்லவர்களுக்கு உதவிய முதலாம் ஆதித்த சோழன் சும்மாயிருப்பாரா? ஆதித்த சோழன் பல்லவர்களுக்கு தண்ணீர்காட்டி அவர்களை தோற்கடித்து தொண்டை மண்டலத்தை சோழ மண்டலமாக மாற்றினான்.  இவனுக்குப் பிறகு வந்த (907) முதலாம் பராந்தகச் சோழன் நான்கு புறமும் உள்ள எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவன்.  தெற்கில் பாண்டியர், சேரர், வடக்கில் ராஷ்டிகூடர்.  இத்துடன் மற்றொரு புண்ணியவான் ஈழத்தில் உள்ள சிங்கள மன்னன்.  ஆனால் ஆச்சரியம் இத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொண்டுருந்ததை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆனால் இன்று பெருமையாய் நாம் பேசிக் கொண்டுருக்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருமொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர்.  ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்ப குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள்  ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தை தொடங்கினர்.  இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான். 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் என்றும் பழைய மன்னர்களைப் பற்றியும் நாம் பாடப்புத்தகத்தில் படித்து வந்துருப்போம். பாண்டிய மன்னர்களை பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டுப் போகலாம்,

ஆனால் இந்த பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு உள்ளே போகப் போக புதைபொருள் ஆராய்ச்சியாளர்களே சோர்ந்து போகும் அளவிற்கு வண்டி வண்டியாக விசயங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. சோழர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாண்டிய மன்னர்கள் (கிபி 1200 முதல் 1300 வரை) வீழ்ச்சியடைய முக்கிய காரணம் குடும்பச் சண்டைகளே முக்கியமாக உள்ளது.  இதுவே தமிழகத்தில் அந்நிய படையெடுப்பாளர்களை பாக்கு வெத்திலை வைத்து வரவேற்காத குறையாக உள்ளே அழைத்து வந்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது.  அப்புறமெங்க இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்?

பதினைந்தாம் நூற்றாண்டின் போது இந்த பாண்டிய மன்னர்கள் நம்முடைய இராமநாதபுரம் மாவட்டம் என்றொரு பகுதியை எப்படி ஆண்டுருப்பார்கள்?