Showing posts with label ஈழ இனப்படுகொலை. Show all posts
Showing posts with label ஈழ இனப்படுகொலை. Show all posts

Thursday, March 21, 2013

இன்று இரவு தரப் போகும் பாடங்கள்



தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி (1965) எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஈழம் குறித்த போராட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தமிழ்நாடு முழுக்க முதன் முறையாக பரவி அதன் வெப்பம் மாநிலம் கடந்தும் சென்று கொண்டு இருக்கிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை விட களப் போராட்டத்தில் தற்போதைய இளைஞர்கள் ஈடுபட்டால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை இது வரையிலும் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாக்குகளாக மாற்றிக் கொண்டவர்களுக்கு புரிந்திருக்கும். 

அத்தனை பேர்களின் மனதிலும் கிலியடித்து போயிருக்கும். . 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம் என்ற பெயரில் நான் முந்திக்கிறேன் என்று வரிசைக்கிரமமாக வந்து கொண்டு இருக்க நீ உள்ளே வராதே என்ற துரத்தலும் நடந்தது. 

போராட்டங்கள் தொடங்கிய போதிலிருந்து தினந்தோறும் செய்தித் தாளில் அந்த செய்தி வந்துள்ளதா? என்று ஆவலுடன் கவனித்துக் கொண்டே வந்தேன். எப்போதும் இது போன்ற போராட்டங்கள் தொடங்கும் போது ஒரு கண்ணாடி போட்ட புறா ஓலையை தூக்கிக் கொண்டு டெல்லியிலிருந்து வரும். ஆனால் இந்த முறை இடது வலம் என்று வேறு இரண்டு புறாக்களையும் கூட்டிக் கொண்டு கோபாலபுரம் சென்றது.  ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும் போது கோபாலபுரம் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு வந்த புறாக்களை தவிக்க விட இப்போது தமிழ்நாட்டின் அரசியல் களம் மாணவர்களின் ஈழம் சார்ந்த போராட்டத்தால் தகித்துக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே பல போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஈழத்திற்காக நடந்துள்ளது. ஆனால் தற்போது நிலவரமே வேறு. தார் கொதிப்பது போல தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சனை கொதித்துக் கொண்டிருக்கின்றது. கையை வைத்தால் சுடுவதை விட விரலே இல்லாமல் போய் விடுமென்ற ஆபத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தே வைத்துள்ளனர். அவரவர் நிலையில் நாங்கள் ஈழ மக்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் முடிந்த வரைக்கும் அரசியல் செய்து கொண்டு(ம்) இருக்கின்றனர். 

இன்று வரையிலும் என்னை சந்திக்கும் எவரும் விடுதலைப்புலிகள் பற்றி அதிகம் எழுதியவர் நீங்க தானே? என்ற அறிமுகத்தோடு தான் பேசத் தொடங்குகின்றனர். அப்போதுருந்து உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டு வருகின்றனர் என்கின்றனர்.

ஈழம் சார்ந்த அநேக விசயங்களை எழுதியுள்ளேன். பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது என்கிற வரைக்கும் என் உழைப்பு வீணாகவில்லை.

எனது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்ட துயரத்தில் இருந்த போது இந்த ஈழம் குறித்து ஆராயத் தொடங்கினேன். இரண்டு வருடங்கள் ஈழத்தைப் பற்றி, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய தேடல்களை இருந்து கொண்டே இருந்தது. முடிவில்லா பயணம் போல போய்க் கொண்டேயிருந்து. சில சமயம் மனமே பேதலித்துப் போய்விடும் அளவுக்கு மனமாற்றம் உள்ளே உருவாகிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட முடிந்தவரைக்கும் இலங்கையின் சர்வதேச அரசியல் பின்புலம் வரைக்கும் அத்தனை விசயங்களையும் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

இப்போது வெளிவந்துள்ள என்னுடைய முதல் படைப்பான டாலர் நகரம் என்ற நூலுக்கு முன்பு இந்த ஈழம் குறித்த புத்தகத்தை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த போது இரண்டு பதிப்பகங்கள் பயந்து கொண்டு ஒதுங்கி விட்டன. என்னுடைய நோக்கம் நான் படித்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் மொத்த தொகுப்பாக, சாறு போல அத்தனையும் கலந்துகட்டி படிப்பவனுக்கு ஒரு புரிதல் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியிருந்தேன்.  குறிப்பாக எளிய நடையில் படிப்பவனை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய அத்தனை உழைப்பையும் அதில் காட்டியிருந்தேன். 

மூன்று வருடங்களுக்கு முன்பு உழைத்த அந்த உழைப்பு இன்று வரையிலும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நான் கவலைப்படவில்லை.  காரணம் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாழ்க்கையில் வசதிகளை தேடிக் கொண்டவர்கள், கற்பனைகளோடு சுவராசியம் என்ற போர்வையில் புனைவுகளை அவிழ்த்து விட்ட எழுத்தாளர்கள் என்று ஏராளமான நபர்களைப் பற்றி உணர்ந்து கொண்டதால் அமைதியாகவே இருந்து விட்டேன்.

இந்த சமயத்தில் இலங்கையின் அடிப்படை விசயங்களை எனது தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றியதால் நான் எழுதி வைத்துள்ள முதல் 26 அத்தியாங்களை அடுத்தடுத்து இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். ஆதாரமான புத்தகங்களை கடைசி அத்தியாயத்தின் கடைசியில் எழுதுகின்றேன். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்த புத்தகங்கள் ஈழம் சம்மந்தப்பட்ட புத்தகங்களே. இந்த தளத்தில் எழுதியுள்ள இலங்கை குறித்த விபரங்கள், இலங்கையின் சரித்திரம், போருக்கு முந்திய காலங்கள், போர் நடந்து முடிந்து பிறகு உருவான சர்வதேச ஒப்பந்தங்கள், ஈழத்தை வைத்து நடந்து கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் என்று ஒவ்வொன்றயும் உள்வாங்க என்னுள் இருந்த உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக கழன்று போய் இன்று வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கின்றேன்.

டாலர் நகரம் புத்தகத்தில் என்னுரையில் இதைப்பற்றித்தான் முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். காரணம் என்னுடைய ஈழத் தேடலின் விளைவாக உருவான புத்தக வடிவம் என்பது இன்றும் என் மடிக்கணினியில் அப்படியே உறங்கிக் கொண்டு இருக்கின்றது. 

ஏறக்குறைய புத்தக வடிவில் 600 பக்கங்கள் வரக்கூடிய ஈழ வரலாறு என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாகும்.  

காரணம் நான் படித்த ஏராளமான புத்தகங்கள் எல்லாமே ஒவ்வொரு விசயத்தைப் பற்றி அவரவர் பார்வையில் தனித்தனியாக எழுதி உள்ளனர்.  ஆனால் ஈழம் குறித்து ஒருவர் படிக்கத் தொடங்கினால் இலங்கை என்ற தீவு எப்படி உருவானது முதல் படிப்படியான ஒவ்வொன்றையும் படிப்பவர்களுக்கு எளிதான நடையில் எவரும் தந்ததில்லை. 

சிலர் முனைவர் கட்டுரைகள் போல எழுதியுள்ளனர். சிலர் காசாக்கும் அவசரத்தில் கற்பனையை அள்ளித் தெளித்துள்ளனர்.

டாலர் நகரம் புத்தகத்தை படித்த தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் சொல்லியுள்ள ஒரு வாசகம் மிக முக்கியமானது.  

பஞ்சு, நூலுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலைப் பற்றி சுவராசியமான நடையில் அதே சமயத்தில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்தாக தேவையற்ற எந்த விசயத்தையும் ஜோதிஜி கொண்டு வராமல் புலிப்பாய்ச்சல் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார் என்று எழுதி இருந்தார்.  

இயல்பான என் எழுத்துநடை, சம்பவங்களை கோர்க்கும் விதம் என்ற அரிச்சுவடி விசயங்களை இந்த ஈழம் சார்ந்த ஆர்வத்தின் மூலமே தொடங்கினேன்.  

அடுத்து வரும் பதிவில் இருந்து இந்த தொகுப்பில் உள்ள முதல் பகுதியை இந்த தளத்தில் கொண்டு வருகின்றேன்.  ஆதரவு அளிக்க வேண்டுகின்றேன். 

காரணம் இது அடிப்படையான விசயங்கள். நீங்கள் எங்கேயும் படித்து இருக்க முடியாது. படித்து இருந்தாலும் துண்டு துக்கடா போல அங்கங்கே துணுக்குச் செய்திகள் போல படித்து கடந்து வந்துருபபீர்கள்.  நிச்சயம் இந்த ஆதாரத் தகவல்களை இந்த சமயத்தில் இங்கே கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  சில சம்பவங்களை பழைய விசயங்களாக இருக்கும்.  தற்போது அதன் தாக்கம் என்பது சற்று மாறி இருக்கும். நான் எதையும் திருத்தும் மனோநிலையில் இப்போது இல்லை. மீண்டும் இதற்குள் நுழைந்தால் மறுபடியும் உணர்ச்சி வசப்பட்ட மனிதனாக மாறிவிடுவேனோ என்று அச்சமும் என்னுள் இருப்பதால் அப்படியே வெளியிடுகின்றேன். 

இன்றைய தினத்தில் இதை இங்கே தொடங்க காரணம் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இன்று இரவு ஜெனிவாவில் நடக்க உள்ள கூட்டத்திற்குப் பிறகு உங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுக்க இருக்கும் மனிதர்களிடத்தில் அவரவர் உடம்பில் இதயம் இருக்கும் இடத்தில் இரும்புக்குண்டுகளை வைத்துக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த உலகத்தில் நடமாடிக் கொண்டு இருக்கின்றார்கள்? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும்.

Sunday, May 13, 2012

நிறையவே பொதுநலம்

எழுதுவதை நிறுத்தி முழுமையாக நான்கு மாதங்கள் முடிந்து விட்டது.  இது போன்ற இடைவெளியை நான் ஒவ்வொரு முறையும் கடைபிடித்தாலும் இந்த முறை இணையம் பகக்கம் வரவே முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை வேறொரு பாதையில் பயணிக்க வைத்துள்ளது. . வாழ்வில் அடைய வேண்டிய உயர்பொறுப்புகள் நம்மை வந்த சேரும் போது அதற்காக நாம் இழக்க வேண்டியது ஏராளம் என்பதை இந்த நான்கு மாதங்கள் நிறையவே புரிய வைத்துள்ளது.

எழுதத் தொடங்கியது முதல் வாழ்க்கை ரொம்பவே சுவாசியமாகவே இருந்தது.  எந்த கவலையென்றாலும், எது குறித்தும் நினைத்த நேரத்தில் எழுத முடியும் என்ற நம்பிக்கையில் பார்க்கும், பழகும் மனிதர்கள் அத்தனை பேர்களும் சுவராசியமானவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மனதிற்குள் எப்போது ஒரு பக்கம் டகடகவென்று டைப்ரைட்டர் சப்தம் உள்ளூற ஓடிக் கொண்டேயிருக்கும்.  காணும் காட்சிகள் எழுத்தாக மாறிக் கொண்டேயிருக்கும்.  இரவு நேரத்தில் பதிவுகளாக மாறி விடும். ஆனால் இந்த முறை எழுதுவதை நிறுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை. 

தினந்தோறும் பத்து பதினைந்து அனுபவ்ங்கள் கிடைத்தால் நம்மால் யோசிக்க முடியும்.  அதுவே நிமிடத்திற்கொரு முறை புதுப்புது அனுபவங்களாக கிடைத்துக் கொண்டேயிருக்க எதைப்பற்றி எழுத முடியும்.  அடுத்தடுத்து என்று தாவி ஓடிக் கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. இந்திய ஜனநாயகம் என்ற கேலிக்கூத்தில் உள்ளூர் தொழில் வாய்ப்புகளை ஒழித்த தீருவோம் என்று மத்திய மாநில அரசாங்கம் கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள மிகுதியாக போராட வேண்டியதாக உள்ளது. மின்தடை ஒருப்க்கம்.  மூச்சு முட்டும் அரசாங்க கொள்கைகள் மறுபக்கம்.  எல்லாமே மண்ணு மோகனின் கைங்கர்யம். அவரின் பெண்கள் வெளிநாட்டில் வசதியாக இருப்பதைப் போல இங்குள்ளவர்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலையாட்களாக இருந்து விட்டால் உள் நாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய் விடும் என்ற நல்ல எண்ணமாக நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு நிறுவனம். பத்தொன்பது துறை. பல்வேறு கிளைப்பிரிவுகள். ஏராளமான பணியாளர்கள். நிறுவன ஊழியர்கள் என்று ஒவ்வொரு நொடியும் நம்முடைய ந்யூரான்களுக்கு வேலை வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இரண்டு நாட்களாக எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்று நண்பர் உமர் அழைத்து நீண்ட நேரம் எப்போதும் போல பேசிக்கொண்டிருந்தார். திடீர் என்று அழைப்பேன்.  மே 17 இயக்க செயல்பாடுகளை விசாரித்து தெரிந்து கொள்வேன்.  இன்று பேசும் போது மே 17 இயக்க ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தார் சென்ற வருட்ம் நண்பர்களின் நிதியளிப்பு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

மே 17 இயக்கம் திருமுருகனை, உமருடன் சென்னையில் ஒரு அவசர சூழ்நிலையில் நண்பர் ராஜராஜனுடன் சந்தித்தேன். சென்னை உயர்நீதிமன்றம் மரச்சோலைகளுக்கிடையே பொறுமையாக அமர்ந்து நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன்.  அதற்கு சில நாட்கள் முன்பாக திருமுருகன் என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஈழ இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள சர்வதேச நாடுகளின் சுயநல வியாபார ஒப்பந்தங்களின் தொடரை படித்து சிலாகித்து பேசினார். என்னை அழைத்துச் சென்ற ராஜராஜன் என் குணாதிசியம் தெரிந்து ஜீ திருமுருகனிடம் பொறுமையாக பேசுங்க என்று சொல்லியிருந்தார். காரணம் திருமுருகனை சந்திக்கும் முன்பே உமருடன் ஈழம் தொடர்பாக, மே 17 இயக்கம் சார்பான எனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விடலாம் என்று மனதில் வைத்திருந்தேன்.  ஆனால் உரையாடல் பொறுமையாக நகர்ந்தது.

நான் திருமுருகனிடம் பேசிக் கொண்டிருந்த போது உமர் நீதிமன்றங்களின் வெளியே தெரிந்த அத்தனை வக்கில்களிடம் கொண்டு வந்திருந்த அத்தனை நோட்டீஸ்களையும் (நடந்து முடிந்த மெரினா கடற்கரையில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகாக) சேர்ப்பததில் குறியாக இருந்தார். நானும் அன்று மாலை சென்னையில் மெரினாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  அன்று அவசரத்தில் திருமுருகனிடம் பேச முடியாத பல விசயங்களை இன்று அலைபேசியில் உமருடன் பேசும் கேள்வியாகக் கேட்டேன்.  என்னுடைய ஒரே கேள்வி,

இது போன்ற நிகழ்ச்சிகளினால் ஈழ மக்களுக்கு என்ன லாபம்? வாழ்வு இழந்து நிற்கும் அவர்களுக்கு இது எவ்வகையில் உதவும்?  

காரணம் கடந்த மூன்று வருடங்களில் ஈழம் சார்ந்த நான் படித்த புத்தகங்கள் எண்ணில் அடங்காதது. நாலைந்து நாட்களுக்கு முன்பாக நிறுவனத்தில்  மாதம் ஒரு முறை இலங்கைக்கு சென்று வரும் மனிதவள துறை சார்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  மதுரையைச் சேர்ந்த அவர் அங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணிபுரிந்து கொண்டுருக்கிறார். என்னை விட பிரபாகரன் மேல் பற்றுள்ளவர். ஆனால் வெறித்தனம் இல்லாமல் உண்மையை ஆராயும் அக்கறை கொண்டவர்.இலங்கையில் உள்ள அத்தனை நிறுவனங்களுக்கு சென்று வருவதோடு அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் என்று அத்தனை பேர்களிடம் பேசி உண்மை நிலவரங்களை ஆராய்ந்து கொண்டிருப்பவர். என்னதான் பேசினாலும் மிகப் பெரிய இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த சிங்களரும் நடந்து கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசத் தயாராக இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகின்றது.  ஆனால் அத்தனையும் தனது குடும்ப சர்வாதிகாரத்தின் மூலம் ராஜபக்ஷே இன்று வரையிலும் சாதித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்று வரை ஈழம் குறித்து என்ன யோசித்தாலும் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.  துப்பறியும் தொடர் போலத்தான் முடிவே இல்லாமல் போய் இன்று கலைஞர் டெசோ என்று ஒரு புதிய புராணத்தை தொடங்கியுள்ளார்.  பாவம் ஈழ மக்கள்.  அவர்களை ஊறுகாய் போய இங்குள்ள ஒவ்வொரு அரசியல் வியாபாரிகளும் நக்கி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களையும், ஈழத்திற்குள்ளே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் எந்த விடிவு காலமும் வந்தபாடில்லை.  

வெறும் காட்சிகளாக, செய்திகளாக மாறி அனுதாபமாக மாறி இன்று அடப் போங்கப்பா...... என்று சாராசரி தமிழர்களுக்கு ஒரு சுவாரசியம் இல்லாத துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.  

ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கின்றேன்.  நாம் எடுத்த முடிவு எத்தனை தவறானது என்பதை மன்மோகனும் சோனியாவும் ஏதொவாரு சமயத்தில் உணர்வார்கள்.

அவர்களுக்கும் ராஜபக்ஷேவுக்கும் அடிப்பொடியாகவும் இருந்து தரகு வேலை பார்த்தவர்களும், இன்று வரைக்கும் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் காலம் நல்ல பாடத்தை கற்பிக்கும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

திருமுருகன் என்னுடன் பேசும் போதும் சரி, இன்று உமர் என்னுடன் உரையாடிய போதும் சரி, மே 17 இயக்க செயல்பாடுகள் குறித்து பொறுமையாக பல விசயங்களை புரியவைத்தார்.  இதையே அவர்களின் மே 17 இயக்க வலைதளத்திலும்  எழுதியுள்ளார்கள்.

கடந்து போன நான்கு மாதங்களில் உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிய நேரமில்லாமல் என்னுடைய பணிச்சுமையில் பலவற்றை மறந்துள்ளேன்.  மொத்தத்தில் பார்த்தால் எல்லாமே என் சுயநலம் சார்ந்த வாழ்க்கைக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் சுயநலமில்லாமல் மே 17 இயக்க நண்பர்கள் தங்களால் முடிந்த கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மே 17 இயக்க நண்பர்கள் நடந்து முடிந்த ஈழப் படுகொலையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களால் ஆன பல முன்னெடுப்புகளை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளின் மூலம் கவன ஈர்ப்பு மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழ இனப் படுகொலையை ஏதோவொரு விதத்தில் உலக நாடுகளுக்கு தூதரக செய்திகள் வாயிலாகவும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இனப்படுகொலையென்பது எந்த சூழ்நிலையிலும் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

இவர்களை, இவர்களின் நோக்கத்தினை, இந்த இயக்கத்தினை நாம் தாராளமாக விமர்சிக்கலாம், பாராட்டலாம்,  முடிந்தால் நிதியளிக்கலாம்.  காரணம் ஈழம் சார்ந்தவர்களிடம்,  புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்களிடமும்  எந்த நிதியை வாங்கக்கூடாது என்பதை தொடக்கம் முதல் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார்கள்.  மொத்தத்தில் சென்ற முறை மெரினாவில் கூடிய போது அதற்கான மொத்த செலவு தொகையை என் கையில் உமர் கொடுத்து வைத்து செலவளிக்கச் சொன்னார்.

உமரை முதன் முதலாக அப்போது தான் சந்தித்தேன். அவர் கொடுத்த பொறுப்பு கொஞ்சமல்ல நிறையவே அச்சப்பட வைத்தது.  காரணம் அங்கங்கே உளவுத்துறை அதிகாரிகளும் இயக்க நண்பர்களின் செயல்பாடுகளை மோப்பம் பிடித்தப்படியே இருந்தனர். ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.

அப்போது தான் தெரிந்தது கைக்காசை செலவு செய்து, கடன் வாங்கி, மொத்தமாக கடன் சுமைகளில் தான் இந்த இயக்க முன்னெடுப்புகளை நடத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் ஆதரவை அளிக்கவும்.  இணையத்தில் உங்கள் வாயிலாகவும் இந்த நிகழ்ச்சி குறித்து எழுதலாம்.  ஆதரவு என்பது கலந்து கொள்வதைப் போல அதற்குண்டான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் வழங்கலாம்.

இனி தொடர்ந்து நிறைய பேசுவோம்.

மே 17 இயக்கத்தின் வலைதளம்


தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்