Showing posts with label ஆசான். Show all posts
Showing posts with label ஆசான். Show all posts

Sunday, March 30, 2014

அன்புள்ள ஆசானுக்கு

அன்புள்ள ஜோதிஜி,   
                                  
வணக்கம்.

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக் கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது - நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார். 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் - காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம். 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை. 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம். 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும். 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும். 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள். 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம். 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக. 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். 

அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்


தொடர்புடைய பதிவுகள்








Thursday, March 20, 2014

பயணமும் படங்களும் - செந்தில்நாதன் அரசாங்கம்

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை பலர் "பக்திமான்" என்கிறார்கள். சிலர் "சக்திமான்" என்கிறார்கள். 

ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு வன்மும், வக்ரமும், பழிவாங்கும் உணர்ச்சிகளும் மட்டுமே மேலோங்கி இருந்தால் ஒரு தொகுதி எப்படி இருக்கும் என்பதனைக் காண நீங்கள் அவசியம் திருச்செந்தூர் சென்று பார்க்க வேண்டும். காரணம் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி திமுக வசம் உள்ளது. முன்பு அதிமுகவில் இருந்து தற்பொழுது திமுகவில் இருக்கும் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஏறக்குறைய அங்கே இருந்த 20 மணி நேரத்தில் பல பேர்களிடம் கேட்ட போது சொல்லி வைத்தாற் போல இதே குற்றச்சாட்டைத் தான் சொன்னார்கள். 

திருச்செந்தூர் என்ற ஊருக்குள் நுழையும் போது தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சுகம் முடிந்து போய் விடுகின்றது. கட்டை வண்டிப் பயணம் தொடங்குகின்றது. படு கேவலமான சாலை வசதியும், கண்டு கொள்ளவே படாத அடிப்படை வசதிகளுமாய் அசிங்கமாக உள்ளது. இந்துக்களால் நம்பப்படுகின்ற புண்ணியத் தலத்திற்கு உள்ளே நுழையும் போதே நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு பரிசாக கிடைக்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அதுவே சில மணி நேரம் நீடிக்கச் சாலை மொத்தமும் வயல்வெளி போலவே மாறிவிட்டது. சேறும் சகதியுமாய்க் கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஒரு இடத்தில் மட்டுமல்ல. திருச்செந்தூர் பகுதி முழுக்க அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தெரிகின்றது. 

ஆசான் திரு. கிருஷ்ணன் திருச்செந்தூரில் பிறந்தவர். அவர் தற்பொழுது சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவர் எண்ணமும் செயலும் முழுமையாகத் திருச்செந்தூர் என்ற ஊருக்குள் தான் இருக்கின்றது. அவருடன் உரையாடும் போது அதை உணர்ந்து கொண்டேன். அவரின் பூர்வீக வீடு 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எந்த மாறுதல்களை உள்வாங்காமல் அப்படியே தனது ஒரே அக்காவிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் வாரிசுகள் தான் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஓதுவார் குடும்பப் பரம்பபரை என்பதால் தங்களின் பூர்வீகத் தொழிலான இறைவனுக்குப் பூக்கட்டி கொடுத்தல், மற்றும் பூக்கடைக்குத் தேவையான மாலை கட்டி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போதுள்ள சாலையில் இருந்து முழங்கால் அளவுக்குக் கீழே செல்லும் அளவுக்கு வீட்டு வாசப்படி அமைந்துள்ளது. ஒரு மழை அடித்தால் வீடு முழுக்கத் தண்ணீரால் நிரம்பி விடும். உள்ளே நுழைந்த போது எனது ஐந்து வயதில் நான் ஊரில் பல இடங்களில் பார்த்த வாழ்க்கை நினைவுகள் வந்து போனது. 

முதல் நாள் மாலை ஆறு மணி அளவில் திருச்செந்தூருக்குள் உள்ளே நுழைந்தோம். மறுநாள் வெளியே கிளம்பி வரும் வரையிலும் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த பல இடங்களை நிதானமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அதிகாலை சூரியப் பொழுதின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காகக் கடற்கரையில் நடந்த போது மிக மிகக் கவனமாகக் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் தான் மணல்வெளியெங்கும் மலத்தால் நிரம்பியுள்ளது. காரணம் கேட்ட போது துப்புரவுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையாம். தலையில் அடித்துக் கொண்டேன்.  ஒரு வேளை ஜெ. வின் ஆஸ்தான ஜோசியர் பணிக்கர் (சோ) சிம்மிடம் ஏதாவது பரிகாரம் செய்யச் சொன்னால் இந்த சூழ்நிலை மாறக்கூடும். 

கடற்கரையில் ஒரு மேடை போல அமைப்பு இருக்க ஒளிப்பதிவாளரிடம் நான் விரும்புவதைச் சொல்லிவிட்டு, ஆசானிடம் உங்கள் விருப்பம் போல ஆசனங்களை வரிசையாகச் செய்து கொண்டு வாருங்கள் என்று ஓரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அதற்குள் பரவலாகக் கூட்டமும் சேர்ந்து விட்டது. அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்து விட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மட்டும் இங்கே.

























தொடர்புடைய பதிவுகள்

ஆசான் பயணக்குறிப்புகள்

பயணமும் படங்களும் - பசியும் ருசியும்


Saturday, March 08, 2014

ஆசான்

நாங்களிருவரும் அவரை ஆசான் என்று தான் அழைப்போம். நாங்கள் என்றால் நானும் இராஜராஜனும். 

தமிழர் தேசம் என்ற மின் நூலே இவருக்குத் தான் முறைப்படி சமர்பிக்கப்பட வேண்டும். நான் வலைபதிவில் எழுத வந்த முதல் ஆண்டில் தமிழர்களை, தமிழ் மன்னர்களை, அவர்களது காலடித்தடங்களை, சங்ககாலத்தைப் பற்றி எழுதத் தொடங்கிய போது அறிமுகமாகி கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய அத்தனை துயரங்களில் பங்கெடுத்து என்னை மீட்டெடுத்தவர். தமிழ் மன்னர்களில் சோழப் பேரரசில் வாழ்ந்த இராஜேந்திர சோழன் குறித்து இது வரையிலும் அறியப்படாத் தகவல்களை சேகரித்து எழுத வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை விரட்டிக் கொண்டிருப்பவர்.

இன்று வரையிலும் இரு வேறு துருவங்களாக எண்ணங்கள். கருத்து ரீதியான செயல்பாட்டில் இருந்தாலும் இரும்பு காந்தம் போல ஏதோவொன்று இருவரையும் இணைத்து வைத்துத் தண்டவாளம் போல எங்கள் இருவரின் நட்பும் இயல்பான புரிதலுக்கு அப்பாற்பட்டுப் பலமாக உள்ளது. 

இராஜராஜனுக்கு அறிமுகமான ஆசானை முதன் முதலாக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் வீட்டில் நான் சந்தித்த போது ஆசான் ஈடுபட்டுள்ள யோகாசனம் துறையில் எனக்குப் பெரிதான ஆர்வம் இல்லாத காரணத்தால் அவருடன் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன். அப்போது இராஜராஜன். ஆசான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த யோகாசனம் குறித்த விபரங்களைப் புத்தகமாக மாற்றுவதில் உதவி புரிந்து கொண்டிருந்தார். 

"உங்கள் ஆரோக்கிய வாழ்வு" என்ற பெயரில் பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இந்தப் புத்தகம் ஒன்றாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  மிகச் சிறந்த இயற்கை உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி அது குறித்த வழிகாட்டுதலை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போல இவரும் தமிழ்நாட்டில் முக்கியமான நபராக கருதப்பட வேண்டியவர். 

இயற்கை உணவுகள் மற்றும் யோகக்கலையில் குறிப்பிட்டத்தக்க ஆளுமை கொண்டவர்.

நான் ஒவ்வொரு முறையும் அலுவலக மற்றும் சொந்த வேலையாகச் சென்னை செல்லும் போதும் ஆசான் வீட்டில் நானும் இராஜராஜனும் தங்குவோம். கீழே வீடும் மேலே யோகா கற்றுக் கொடுக்க ஒரு அற்புதமான வடிமைப்பில் ஒரு நீண்ட ஹால் போன்ற வடிமைப்பில் நான்கு புறமும் ஆள் உயர கண்ணாடி அற்புதமான ரசிக்கக்கூடியதாக இருக்கும். நடுநாயகமாக உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டே நானும் இராஜராஜன் கருத்து ரீதியான விவாதங்களில் புயலை உருவாக்கிக் கொண்டிருப்போம். 

ஆசான் என்பவரின் முழுப் பெயர் திரு. கிருஷ்ணன். திருச்செந்தூரில் பிறந்து சென்னையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருப்பவர். 

தனது வாழ்க்கையை யோகா என்ற கலைக்காக அர்ப்பணித்தவர். இன்று அவரின் வயது 70. திருமணம் செய்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல், திரைப்பட, சமூகப் பிரபல்யங்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யோகக்கலையைக் கற்றுக் கொடுத்தவர். கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். 

அப்படியென்றால் வசதியாக வாழ்பவர் என்ற கற்பனைக்கு வந்து வீடாதீர்கள். 

பணத்திற்கு ஆசைப்படாமல், எவருடனும் எதற்காகவும் அண்டிப்பிழைக்கும் எண்ணம் இல்லாமல் ஆச்சரியப்படத் தக்க வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் நோக்கம், தன் செயல்பாடு, தன் சுதந்திரம் என்பதில் மட்டுமே இன்று வரையிலும் குறியாக இருந்து தான் கற்று வைத்துள்ள கலையை முடிந்த வரைக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

தன்னை சந்தைப்படுத்திக் கொள்ள (மார்க்கெட்டிங்) விரும்பாமல் தான் உண்டு தன் கடமை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு சென்றவர்கள், உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் மணிக்கு இத்தனை ரூபாய் என்று சம்பாரித்துக் கொண்டிருந்த போதிலும் இவருக்கு இன்று வரையிலும் பணம் சார்ந்த விசயங்களில் அதிக அளவு அக்கறையோ ஆர்வமோ இல்லாமல் இருப்பது கண்டு பலமுறை நானும் இராஜராஜன் வியந்து போய் இருக்கின்றோம். 

மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பச்சைக்காய்கறிகள், பழங்களை மட்டுமே தன் உணவாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர். 

தொலைக்காட்சிகளின் வாயிலாக இன்று தமிழ்நாட்டில் பிரபல்யமாக அறியப்படும் பல காசு பார்க்கும் மனிதர்கள் அறியாத நூற்றுக்கணக்கான யோகக் கலையைக் கற்று வைத்திருப்பவர். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இப்படிப்பட்ட ஆசனங்கள் உண்டா? என்று யோசிக்கக் கூடிய வகையில் பன்முகத் திறமை கொண்டவர் தான் ஆசான். 

ஆனால் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. எவரையும் தரக்குறைவாக மற்றவர்களுடன் சொல்வதும் இல்லை. 

இதைப்பற்றிக் கேட்கும் போதெல்லாம் தயாராக ஒரு பதிலை வைத்திருப்பார். 

"அவரவர் வினைவழி. அவர்வர் வழி" என்பார். 

இராஜராஜனுக்கு இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது. சென்னையில் இருந்த போது அந்த முயற்சி கைகூடவில்லை. இதன் காரணமாக இந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இதுவொரு சவலான வேலையாகும். காரணம் ஆசான் ஒரு வகையில் குழந்தை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தற்கால நடைமுறைக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்துவது அத்தனை சுலபமல்ல. இதைப் பலமுறை சொல்லியே இராஜராஜன் இந்தப் பணியை என்னிடம் கொடுத்திருந்தார். 

நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டதும், முதலில் ஆசானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் முறை சென்னைக்குச் சென்ற போது அவர் வைத்திருந்த பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து படித்தேன். இரண்டாவது முறை இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கி அவர் வாழ்ந்த இடங்களை, பழகிய மனிதர்களைப் பற்றி நேரிடையாகச் சென்று தெரிந்து கொண்டு வந்து விடுவோம் என்று ஒரு நீண்ட பயணத்தை நண்பர்களுடன் தொடங்கினேன். 

காரணம் இராஜராஜன் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் அவர் மூலம் அறிமுகமான திரைத்துறையில் உள்ள நண்பர் மதன் ஒருங்கிணைப்போடு ஒரு குறுகிய காலப் பயணத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தேன். அப்போது பயணங்களில் எடுத்த படத்தை, வாகனத்தில் சென்ற போது அவருடன் உரையாடிதை வைத்து நான்கு காணொளித் தொகுப்பை உருவாக்கி உள்ளோம். 
இடங்களைத் தேர்வு செய்தல் (லோகேசன் பார்த்தல்) என்று சொல்வார்கள். பயணத்தின் போது எடுத்த படங்களை, அவர் குரலை, அவர் கற்று வைத்துள்ள பலதரப்பட்ட யோகா வழிமுறைகளை முதலில் ஆவணப்படுத்தி வைத்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதத்தில் இதை ஒரு குழுவினரோடு சேர்த்து உருவாக்கினோம். 

மீதி அடுத்தப் பதிவில்......