Wednesday, June 19, 2019

மணி மணி வேலுமணி


முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.

3 comments:

ஸ்ரீராம். said...

தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையில் எப்போதோ தொடங்கி இருக்க வேண்டிய வேலைகளை இன்னமும் கூடத் தொடங்காமல் இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். மாபா பாண்டியராஜன் கூட ஆராயாமல் செயற்கை மழை பற்றிப்பேசியிருக்கிறார்.

ஜோதிஜி said...

தமிழகத்தின் ஒரே சாபம் என்னவென்றால் எது தேவையோ அதைப் பற்றி பேசவே மாட்டார்கள். அதைப் பேசினால் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். அரசியல் செய்ய முடியாது அல்லவா?

Rathnavel Natarajan said...

நிஜம். அருமை. நன்றி