Thursday, July 05, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 7

நேற்று மகளிடம் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் வாயில் வந்த வார்த்தை இது. 

"தந்தை பெரியார் அப்படியெல்லாம் பொண்ணுங்க இருக்கனும்ன்னு சொல்லவில்லையே?" என்று சொல்லி பழிப்பு காட்டி விட்டி பள்ளிக்குச் சென்றார். 

அம்மையார் பின்னால் இருந்து கொண்டு போதுமா? "இது தானே நீங்க எதிர்பார்த்து ட்ரைனிங் கொடுத்த லட்சணம்" என்று வாழ்த்துரை வழங்கினார். 

அவரிடம் நான் என்ன கேட்டேன்? அவர் ஏன் இப்படிப் பதில் சொன்னார் என்பது கடைசியில்? 

இவர்களைப் பள்ளிப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல விதங்களில் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்துத் தோல்வி தான். சுருண்டுவிட வில்லை. நான் வாசித்த புத்தகங்கள் மிஞ்சியிருப்பது நூறு 
எண்ணிக்கையிருக்கக்கூடும். 

ஆனால் சீந்த ஆளில்லாமல் இருக்கப் பெற்ற புள்ள பாசத்தோடு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதுண்டு. இவர்களிடம் இதப் பாருடா? என்று ஆசை வார்த்தைகள் காட்டுவதுண்டு. ஒருவர் மட்டும் லேசாகப் புரட்டிப் பார்க்கத் துவங்கினார். 

அப்படியே தூக்கி ஓரமாக வைத்து விட்டார். நான் சோர்ந்து போகவில்லை. அப்போது புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவர்கள் விரும்பிய புத்தகங்களுடன் குறிப்பிட்ட சில புத்தகங்கள் (குழந்தைகளுக்கென்று எழுதப்பட்ட புத்தகங்கள். உள்ளடக்கம் சரியாக ஆனால் எளிமையாகச் சுருக்கமாக இருக்கும்) மகாபாரதம், இராமாயணம், காந்தி, நேரு, காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், விடுதலைப் போராட்ட வீரர்களின் தொகுப்பு போன்ற புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன். 

அதுவும் கண்டும் காணாமல் இருந்தது. இவர்களைப் படிக்க வைக்கச் சாப்பாட்டு மேஜையில் இவர்கள் கண் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருந்தேன். வாரப்பத்திரிக்கைகள், தினசரி செய்தித்தாள்களை வாசிக்கத் துவங்கியவர் படிப்படியாக இதில் இறங்கினார். 

ஆச்சரியம் என்னவென்றால் அடுத்தச் சில வாரங்களில் இராமயாணம், மகாபாரதம் போன்றவற்றை முடித்து விட்டேன் என்ற போது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. காந்தி, நேரு, காமராஜர் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து அடுத்துப் படித்துப் பார் என்றேன். 

காமராஜர் குறித்துப் பள்ளிப் பாடங்கள் முதல் பல இடங்களில் படித்த காரணத்தினால் அவரைப் பற்றிய புரிதல் இவர்களுக்கு நன்றாகவே உள்ளது.

தந்தை பெரியார் குறித்து எடுத்துப் படிக்கத் துவங்கினார். இதற்கிடையே பா. ராகவன் எழுதிய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். சில வாரங்களில் அதனையும் முடித்து விட்டார். 

அடுத்தடுத்து நான் சுட்டிக் காட்டிய பல புத்தகங்கள் படித்தாலும் பெரியாரை அவர் கைவிடவில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. கடந்த 70 இந்திய, தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் சுருக்கத்தைக் கால் பங்காவது 12 வகுப்பு முடிப்பதற்குள் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். 

இவர்களின் அடித்தளமும், அடிப்படை எண்ணங்களும் எதிர்கால நோக்கங்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவர் நல்லவர்? இவர் கெட்டவர்? இது தேவை? இது தேவையில்லை? என்று எதையும் நான் சொல்லவில்லை. 

வாசித்து முடித்த பின்பு உனக்கு இப்போதைய சூழ்நிலையில், எதிர்கால உன் கொள்கைக்கு எது சரியாக இருக்கும் என்று நம்புகின்றாயோ? அதனை நீயே எடுத்துக் கொள் என்று வாய்ப்புகளைக் கொடுத்து இருந்தேன். 

ஆனால் இன்னமும் அண்ணல் அம்பேத்கார் குறித்து முழுமையான புரிதலை உருவாக்க முடியவில்லை. பாடங்களில் அவர் குறித்து முழுமையான விபரங்கள் இல்லை. பெரியார் அளவிற்கு இன்னமும் அவர் இங்கே பரவலாக்கப்படவில்லை. அவரின் பிம்பத்திற்குக் கொடுத்த மரியாதை அவர் கருத்துக்களுக்கு அதைக் கடத்துவதற்கு யாருக்கும் அக்கறையில்லை என்பது தான் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம். 

புத்தகக்கடையில் நான் பார்த்த அம்பேத்கார் புத்தகங்கள் பெரிய சிலாகிப்பதாக இல்லை. 

முதல் வரியில் நான் மகளிடம் கேட்டது. 

"அப்பா ரொம்ப ஆசைப்படுறேன். நீங்க தாவணி கட்டவேண்டும். இந்த முறை தீபாவளிக்கு மூன்று பேரும் பாவாடை தாவணி கட்டவேண்டும் சரியா? என்று தான் கேட்டேன். பொம்பள புள்ளைங்க பேண்ட் சட்டை போட சொல்லியிருக்காரு பெரியார்" என்றார். 

மருத்துவர் ஷாலினி பேச்சைக் கேட்ட போது எனக்கு என் மகள் ஞாபகம் தான் வந்தது.

5 comments:

G.M Balasubramaniam said...

நாம் நினைக்கிறவாறுப் புரிதல் இருக்க வேண்டும் என்றில்லையே

Avargal Unmaigal said...

பொண்ணுங்க தாவாணி கட்டுறது இருக்கட்டும் ஆனால் நீங்கள் வேட்டி கட்டி நான் பார்த்ததே(போட்டோ) இல்லையே

ஆதி said...

புரிந்தால் அன்பு பெரிது,புரியும் ...

ஜோதிஜி said...

வயது அதிகமாகும் போது ஆண்களின் தேசிய உடை டவுசர் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஜோதிஜி said...

நூறு சதவிகித உண்மையும் கூட ஆதி.