Saturday, February 15, 2020

அ என்றால் அரசியல்

பணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்? அவரா சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சமரசமின்றி உழைக்கப் போகிறார்? நாணயத்துடனும், நன்னடத்தையுடனும் பணியாற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு அந்த அமைச்சரா அறிவுறுத்தப் போகிறார்? ஜனநாயக மாண்புகளையும், ஜாதி - மத பேதமற்ற கொள்கைகளையும் அவரா உயர்த்திப் பிடிக்கப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த அமைச்சரா புரையோடிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கும் புருஷோத்தமராக உருவெடுக்கப் போகிறார்?

"நாணயம், நேர்மை என்றெல்லாம் ஒரு சில விஷயங்கள் முன்னொரு காலத்தில் இருந்ததாமே' என்று எதிர்காலத் தலைமுறையினர் வியப்புடன் பேசிக்கொண்டிப்பார்கள்.

அதற்கான முன்னோட்டத்தைத்தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூகத்தின் அடிமட்டத்தில் கூட ஊழல் புரையோடிப் போயிருப்பதும், அதை எவரும் ஒரு பொருட்டாகக் கூடக் கருதாததுமே அதற்கு சான்று.

Wrapper Design - Ganesh. Mayiladuthurai



மற்றொரு புறம், ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, மின் - ஆளுகை (இ-கவர்னன்ஸ்) நடைமுறைகளும், தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், அந்த முயற்சிகளால் எந்தப் பலனும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்திருந்தால், அரசுத் துறைகளில் முன்பு மலிந்திருந்த முறைகேடுகளில் இம்மியளவாவது தற்போது குறைந்திருக்க வேண்டுமே. மாறாக அதிகரித்துக் கொண்டு அல்லவா செல்கிறது?

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகம் நிறைந்துள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 80-ஆவது இடத்தைத்தான் இந்தியாவால் பிடிக்க முடிந்தது. சரி, அதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆதங்கப்படுவதற்கோ என்ன இருக்கிறது? தரவரிசையில் எப்போதும் இறுதி நிலையைப் பெறும் தகுதிதான் நமக்கு வாய்த்திருக்கிறது என்பது தெரிந்ததுதானே.

ஊழலும் லஞ்சமும் நாட்டை எவ்வாறு சீரழிக்கும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்காது. இதுதான் சமூகத்தின் மிகப்பெரிய நகைமுரண்.

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது ஒரு விஷயத்தில் மட்டும் தீர்மானமாக இருந்தார். விடுதலை வேள்வியை எந்த நிலையிலும் நெறி தவறாமல் நடத்த வேண்டும் என்பதுதான் அது. சில நேரங்களில் அவரது நோக்கத்தை சிதைக்கும் சம்பவங்கள் சில அரங்கேறின. அப்போதெல்லாம் உடனடியாக அதற்கு தீர்வைக் கண்டறிந்து சத்தியம் தவறாத போராட்டத்தை மீண்டும் மீட்டெடுத்திருக்கிறார் காந்தி.

அதில் எந்த சமரசத்துக்கும் அவர் இடம் கொடுக்காமல் இருந்தார். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நேர்மையை மட்டும் ஒருபோதும் மகாத்மா விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது? மகாத்மா வகுத்த பாதையில் இருந்து முற்றிலும் வேறாக அல்லவா சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். நேர்மையான தேசமாக இந்தியா உருவாக வேண்டும். இளைய தலைமுறையினரின் மனத்தில் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகள் நிறைந்திருக்கின்றன. அவை மங்கி மறைவதற்குள் அவர்களிடையே புதிய நம்பிக்கையை மலரச் செய்ய வேண்டும். ஊழலற்ற தேசங்களின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடத்திற்குள்ளாவது வர வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களும் பெருமிதத்துடன் இந்த தேசத்தில் வாழக்கூடிய நிலை உருவாகும். அந்த நிலை உருவானால், எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதிகளுக்குள் சிறைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்களும் பணம், பதவிக்கு மயங்காத தலைவர்களாக உருவெடுப்பார்கள். அத்தகைய தலைவர்களால்தான் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும். அந்த நாள் வரும் வரை "நோயாளியை குணப்படுத்த வேண்டுமானால், முதலில் மருத்துவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தையைத்தான் திரும்பத் திரும்ப நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

வாசிக்க....

5 comments:

G.M Balasubramaniam said...

இம்மியளவாவது தற்போது குறைந்திருக்க வேண்டுமே. மாறாக அதிகரித்துக் கொண்டு அல்லவா செல்கிறது?தடுக்கில் போனால் கோலத்தில் போவார்க்சள் மகாத்மா வெறுமே பேசமட்டுதான் பின் தொடர அல்ல

கிருஷ்ண மூர்த்தி S said...

மோகன்தாஸ் காந்தியைப் பேசலாம், இப்படியும் ஒருவர் இருந்தாரா என்று வியக்கலாம், மகாத்மா என்று கொண்டா டலாம்! ஆனால் அவருடைய வழிமுறைகள் இன்றைக்கும் பொருந்துபவை பின்பற்றக் கூடியதாக இருக்கிறதென்று யாராவது சொல்ல முடியுமா?

காந்தி அகிம்சை என்றார் . நம்மூரில் இம்சைதான் என்றார்கள்
காந்தி பிரிவினையை ஆதரிக்கவில்லை ஆனால் வேறு சிலரோ பிரிந்தால் பிரியட்டுமே மகுடம் சூட்டிக் கொள்ள நாழியாகிவிட்டது என்று பறந்தார்கள்.
காந்தி உண்ணாவிரதம் இருக்கச் சொன்னார் கழகம் உண்ணும் விரதம் எதிரிலேயே ஆரம்பித்துக் கேலி செய்கிறது.

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று மத சமரசம் பேசியவர் காந்தி. சாந்தியும் சமாதானமும் யாருக்கு வேண்டுமென்று கேட்கிற கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

சிலவிஷயங்கள் காலாவதியாகிப்போனவை

சிகரம் பாரதி said...

அ என்றால் அரசியல். உண்மைதான். அதை மாற்றும் சக்தி மக்களிடமே இருக்கிறது. ஆனால் மக்கள் முன்வருவதில்லை.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் said...

மகாத்மாவை மறக்க வைக்க பல பாதைக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது...

வெங்கட் நாகராஜ் said...

அ என்றால் அரசியல்.... இங்கே அ முதல் ஃ வரை அரசியல் தான்! புத்தகம் கிண்டில் வழி வாசிக்க வேண்டும் - ஏற்கனவே தரவிறக்கம் செய்த புத்தகங்களை முடித்து விட்டு தான் மேலும் தரவிறக்கம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன். விரைவில் தரவிறக்கம் செய்து கொள்வேன்.