சென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம்.
பிறை இன்று தெரியுமா? தெரியாதா? என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காலை முதல் திட்டமிட்டு என்னை மாலை வரவழைத்து அழைத்துச் சென்றார்கள்.
மாலை 6.15 க்குப் படம் தொடங்கும். நான் மட்டும் 6.10 க்குத்தான் திரையரங்கத்தின் உள்ளே சென்றேன். அப்போது மொத்தமே 30 பேர்கள் தான் இருந்தார்கள். இடைவேளை விடும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் 50 பேர்களைத் தாண்டவில்லை.
காலா படம் வெளியான தினத்தில் சென்னையில் இருந்தேன். மாலைக்குள் சென்ற வேலை அனைத்தும் முடிந்து விட நண்பர் கையில் மூன்று இலவச சீட்டுக்கள் இருந்தன. அழைத்தார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் அம்மையாரின் அதிகபட்ச ஆசையான ரஜினியின் படத்தை ஒவ்வொரு முறையும் திரையரங்கில் சென்று பார்ப்பது என்ற கொள்கையின் காரணமாக என்பதனை நண்பரிடம் சொன்ன போது சிரித்தார்.
இயக்குநர் ரஞ்சித் உடன் நேரிடையாக சந்தித்து பேசியுள்ளேன். திரை உலகில் நான் சந்தித்த மற்றவர்களை ஒப்பிடும் போது ரஞ்சித் எதார்த்தவாதியாக எனக்குத் தெரிந்தார். நான் இந்தத் தளத்தில் இப்படித்தான் இயங்கப் போகின்றேன் என்பதில் தெளிவாகவே இருந்தார். தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தே இருந்தார்.
நெருங்கிய தம்பி ஒருவன் அவர் குழுவில் அவருடன் நெருக்கமான வட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். சென்னையில் இருந்த போது அவனுடன் பேசினேன். ஐம்பது சதவிகிதம் மக்கள் கூட (அவருக்கென்று உள்ள ரசிகர் கூட்டம் குறிப்பாகக் குழந்தைகள், விடலைகள்) திரையரங்கம் வரவில்லை. வருகின்ற மாதிரி சூழலும் சாதகமாகத் தெரியவில்லை என்றான். தமிழர்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்து விட்டது என்றான்.
ரஜினியின் தோல்வியை விட ரஞ்சித்தின் தோல்வியைக் கொண்டாடத்தான் இங்கே அதிகம் பேர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இப்போது வெளிப்படையாக மொத்த கோடம்பாக்கமும் ரஞ்சித் வைத்துப் படம் எடுக்கக்கூடாது என்பதனை பலர் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கி உள்ளனர்.
பிராமணியம் குறித்து எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. இதன் இரண்டுக்கும் உள்ள நுண் அரசியலைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே ரஞ்சித் போன்றவர்கள் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.
படம் என்கிற வகையில் பார்த்தால் ரஞ்சித் வென்றுள்ளார். ரஜினியும் வென்றுள்ளார். ரஜினியின் படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்துள்ளார் என்கிற வகையில் மிகவும் சிறப்பாகவே உள்ளது.
கரணம் தப்பினால் இது பிரச்சாரப் படமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனையும் தாண்டி வர்த்தரீதியான நிலையில் சரியாகவே தொகுக்கப்பட்டுள்ளது. வசனத்தை ரஞ்சித்துடள் மூன்று பேர்கள் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்கள் கத்திமுனை போலக் குத்திக் கிழிக்கின்றது. இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் என்று அதிகமான பேர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ரஞ்சித்.
ரஜினி போலவே நடித்த ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முக்கியமாக வில்லனாக வந்த நானா பட்கேர் நடிப்பைப் பார்க்கும் வியப்பாக இருநத்து. வேறு எவரையும் இந்த இடத்தில் இவருக்குப் பதிலாக வைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.
ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் ரஞ்சித் க்கு நடிகர்களிடம் கதை சொல்லத் தெரியாது. அவர் தனது திரைக்கதை வடிவத்தை அவர்களிடம் வாசிக்கச் சொல்லி அதன் மூலம் தான் புரியவைப்பாராம். ஆனால் ஒரு இயக்குநராகக் காட்சியமைப்பில் அவர் எந்த அளவுக்கு இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதனைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை.
படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் அதன் தயாரிப்பு சார்ந்த செலவுகளைத் தான் அதிகம் கவனித்துக் கொண்டு வந்தேன். செய்திகளில் வாசித்ததன் மூலம் முதல் இருபது நாட்கள் மட்டும் தாராவியில் எடுத்துள்ளார்கள். மற்ற நாட்கள் அனைத்து இங்கே அரங்கம் அமைத்து தான் எடுத்துள்ளார்கள். காரணம் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் நூறு தலைகளாவது தெரிகின்றது. இது தவிரக் காலா வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம்.
படத்தின் செலவு என்பது (ரஜினிகாந்தின் சம்பளம் அறுபது கோடி என்கிறார்கள். இதன் அடிப்படையில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்க வேண்டும் என்று கணக்கீடு செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் விற்ற 51 கோடியே போணியாகவில்லை) நடித்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தான் பெரிய தொகையாக உள்ளது. உருவாக்கப்பட்ட தாராவி அரங்கம் என்பது அதுவொரு பெரிய செலவு.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே பெரிய ஜனத்திரளை வைத்துத் தான் நினைக்கும் அளவிற்குத் தான் நினைத்தபடி எளிதாக விரைவாக வேலை வாங்கக்கூடியவர் என்று பெயர் எடுத்துள்ளார். அவரைப் போலவே இவரும் வென்றுள்ளார்.
கடந்த சில படங்களில் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் மூலம் வரும் வருவாயை நேரிடையாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டார்கள். காலா மூலம் 50 கோடி ரூபாய் எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு விற்பனை உரிமையும் பெரிய அளவுக்குப் போணியாகவில்லை. ஈழத் தமிழர்கள் முழுமையாகவே புறக்கணித்து உள்ளதாகத் தெரிகின்றது.
பாலு மகேந்திரா அறிமுகம் செய்யும் கதாநாயகிகள் மேல் எப்போதும் எனக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. ஷோபா, அர்ச்சனா, மௌனிகா தொடங்கி இதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வரைக்கும். ஒப்பனை தேவைப்படாத அழகி. கடந்த ஏழு வருடங்களாக நடிப்புப் பக்கம் வராமல் குடும்ப வாழ்க்கையில் இருந்த ஈஸ்வரி ராவ் அற்புதமாக ஜொலிக்கின்றார்.
ரஜினி போன்றவர்களை வேலை வாங்குவதே கடினம். சில எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் ரஞ்சித் தான் விரும்பிய அளவுக்கு ரஜினியை பல எல்லைகளை உடைத்து அவரின் பழைய நடிப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார்.
ரஜினியின் தனிப்பட்ட பலவீனங்களைக் கடந்து தமிழகம் அவருக்குக் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்தை, கட்சி, மதம், சாதி கடந்து அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அவராகவே கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். காலச்சூழல் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சு கொட்டிக் கவிழ்த்து விட்டது. கடந்த 30 வருட உழைப்பை சில உளறல்கள், பேச்சுகள் ஒரு பெரிய வணிக லாபத்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது.
ஆன்மீகத்தை மற்றவர்களை விட இவர் தான் அதிகம் பேசுகின்றார். ஆனால் இவரின் உடல் மொழி பொதுவிடங்களில் அதற்கான தகுதியை, ஆன்மீகம் மூலம் பெறும் அமைதியான சுபாவத்தை இவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்திக் காட்டியது. படத்தில் பேசும் ஏழைப்பங்காளன் வசனத்திற்கும் நிஜவாழ்க்கையில் அப்பட்டமாக எதிராக இருப்பதையும் அவர் அறியாமல் வெளிப்படுத்திய சூழலில் கோமாளி போலவே ஆக்கப்பட்டுள்ளார்.
ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்க டார்ஜிலிங் சென்று விட்டார். ரஞ்சித் தனது அடுத்த ஹிந்திப்பட வேலையில் இறங்கி விட்டார். நம் மக்கள் இன்னமும் காலா வின் குறியீடுகள் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.