இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு ரசிகர் அதிகம். அதிகம் என்பதனை விட மொத்தத் தமிழகமும் அப்படித்தான் உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். விருப்பங்கள் மாறலாம். ஆனால் ஒவ்வொருவரின் ஆசைகளை, கனவுகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே திரைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. கட்சி, ஆட்சி, கொள்கை என்று சகல இடத்திலும் மூன்று திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சின்னத்திரை (தொலைக்காட்சி), வண்ணத்திரை (திரைப்படம்) தொடுதிரை (அலைபேசி). இந்தத் திரைகள் இப்போது நெடுங்கால நட்பில் விரிசலை உருவாக்குவதோடு நிரந்தர எதிரிகளாகவும் மாற்றி விடுகின்றது.
திரைப்படம் என்ற தமிழ் வார்த்தை என்பது கெட்ட வார்த்தையாக மறந்து போன சொல்லாக மாறிவிட்டது. சினிமா என்பது தான் இப்போதைக்குத் தமிழ்ச் சொல். இதுவே தமிழர்களிடம் இயல்பான சொல்லாக மாறிவிட்டது.
