Showing posts with label மாவீரன் கிட்டு. Show all posts
Showing posts with label மாவீரன் கிட்டு. Show all posts

Thursday, October 06, 2016

விரும்பியபடி செயல்படு - மாவீரன் கிட்டு


திரைப்படத்துறையில் சார் என்ற வார்த்தை மிக முக்கியமானது. ரஜினி சார், கமல் சார், விஜய் சார் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சார் என்ற வார்த்தை தான் நம் காதில் விழும். அவரவர் இருப்பு மற்றும் மார்கெட் நிலவரம் பொறுத்து இந்த மரியாதை கூடும் குறையும். ஒரு தயாரிப்பாளரின் பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல தரப்பட்ட நிகழ்வுகளைப் பொறுமையாக ரசித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். 

சமயம் வரும் போது "டாலர் நகரம்" போல இந்த திரைப்படத்துறையில் இது வரையிலும் வெளியே தெரியாத பல விசயங்களைப் பற்றி எழுதுவேன். 

க்டோபர் 1 2016 மாலை வேளையில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நான் பணியாற்றும் நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஏசியன் சினி கம்பைன்ஸ்" (Asian Cine Combines) முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) வெளியிட்டு விழா நடைபெற்றது. இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் படத்தில் பங்கெடுத்த அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஆயத்த ஆடை நிறுவன தயாரிப்பான காலர் சட்டையை 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் (SPONSOR) அணிந்து கலந்து கொண்டனர். 

வாசிக்க, எழுத நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் எழுத்துப் பணி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் சமீப காலமாகக் குழந்தைகளுடன், மனைவியுடன் செல்ல சண்டை போட ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி வைத்து விடுகின்றேன். விழாவில் கலந்து கொண்ட (மாவீரன் கிட்டு படத்தின் கதாநாயகி) நடிகை ஸ்ரீதிவ்யா அணிந்த வந்த "முழு கருப்பு கவுன்" குறித்து மனைவியுடன் விஸ்தாரமாகப் பேச குழந்தைகள் நக்கல் நையாண்டியுடன் என்னுடன் சேர்ந்து மனைவியை ஓரண்டை இழுக்கக் கடைசியில் நான் வெள்ளைக் கொடியை பறக்க விட வேண்டியதாகி விட்டது. 

கேரளாவின் எந்தப் பகுதிக்குள்ளும் மகிழ்வுந்து பயணத்தின் போது ரசிக்கக் காடு சார்ந்த இடங்கள் நிறைய உண்டு. ஆனால் திருப்பூர் முதல் சென்னை வரை ஆறு மணி நேரப் பயணத்தில் பகல் நேரமாக இருந்தாலும் இரவு நேரமாக இருந்தாலும் ரசிக்க ஒன்றுமே இல்லை என்பது நிதர்சனம். பொட்டல் காடுகளும், ஒழுங்கற்ற நகர்ப்பகுதிகளும், பல இடங்களில் கும்மிருட்டும், அத்துவானக்காடும் என ரசிக்க முடியாத ஊராக தமிழ்நாடு மாறிக் கொண்ட வருகின்றது. சுங்கவரி என்பது ஒவ்வொரு மனிதரையும் ரத்தம் சுண்ட வைக்கும் கொள்ளைக்கூட்ட சாம்ராஜ்யமாக உள்ளது. இது குறித்து விரிவாக எழுத வேண்டும். 

டீசர் வெளியிட்டு நிகழ்வுக்குப் பலருக்கும் அழைப்பு விடுத்து இருந்தேன். விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த காரணத்தால் முழுமையாகப் பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் வாக்குறுதியைக் காப்பாற்றிய கார்டூனிஸ்ட் பாலா, உண்மைத்தமிழன் சரவணன், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அகலிகன், ராஜா என சிலரை அவசர நேரத்தில் சந்தித்துப் பேச வாய்ப்பு அமைந்தது. 

ருகின்ற ஆயுத பூஜை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒரு பிரிவான புதுயுகம் நிகழ்ச்சியில் மாவீரன் கிட்டு குறித்துக் கலந்துரையாடல் படப்பிடிப்பு நடந்தது. இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரோடு எங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் தயாரிப்பாளர் ஐஸ்வேர் சந்திரசாமி அவர்களும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது.


ங்கள் நிறுவன படமாக இருந்தாலும் ஏற்கனவே பாடல் பதிவின் போது கேட்ட பாடலின் அடிப்படையில் நிச்சயம் இந்தப் படத்தின் பாடல் தமிழர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும் என்று என் பார்வையை எழுதியிருந்தேன். அதே போல டீசர் வெளியிட்டு விழாவின் போது அந்த எண்ணம் இன்னமும் வலுவானதாக மாறியது. எப்பேற்பட்ட பிரபலமாக இருந்தாலும் ஒரு சிலருடன் தான் நம்மால் உண்மையான உணர்வுடன் பேச முடியும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடன் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரை புரிந்து கொண்டது இப்படித்தான்.

எண்ணமும் செயலும் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்கும்படி தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கின்றார். மேடையில் ஏறி பேசிய போதும் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.  இந்த விழா குறித்து காணொலித் தொகுப்பை விரைவில் வெளியிடுகின்றேன்.

மாவீரன் கிட்டு டீசர் குறித்து விழாவின் சிறப்பு அழைப்பாளர் மெட்ராஸ் மற்றும் கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் பின்வருமாறு கூறினார். 


"  
நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" என்றார். 

நீங்களும் இந்த முன்னோட்டக் காட்சியை பார்க்கும் போது புரியவரும்.