Saturday, January 16, 2021

ஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை

இன்று தமிழகத்தில் பெரிய கோஷமாக முழக்கத்தில் இருப்பது கல்வியறிவு பெற்ற மாநிலம். மற்ற மாநிலங்களை விடப் பல மடங்கு அதிகம் படித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை ஏமாற்ற முடியாது. 

ஆனால் எதார்த்தம் என்ன? 

முதல்படி கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. 

இரண்டாவது படி வறுமை தடையாக இருந்தது 

மூன்றாவது படி அனைவருக்கும் கல்வி. குறிப்பிட்ட தூரத்திற்குள் கல்விக்கூடம். 

நான்காவது படி சாப்பாடு உண்டு. வந்து படி. 

ஐந்தாவது படி சத்துணவு தருகின்றோம். வந்து படி. 

ஆறாவது படி இட ஒதுக்கீடு உண்டு. முன்னேற முடியும். வந்து படி. 

ஏழாவது படி 24 பொருட்கள் இலவசம். வந்து படி. 

ஏழு படிகளைத் தமிழ்நாடு கடந்து வந்து இப்போது எட்டாவது படியில் வந்து நிற்கின்றது. 

உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? இங்கே வா. 

என்னிடம் அதிகம் பணம் உள்ளது? அங்கே போ. 

என்னிடம் பணம் இல்லை. நீ போய் வரிசையில் நில். 

இது தான் தமிழகக் கல்வி வரலாறு. 

ஆனால் கல்வி மூலம் கற்ற, கற்றுக் கொண்ட கல்வியின் வெளிப்பாடு எப்படி உள்ளது. சமூக வலைதளங்களில் ப்ராங் ஷோ என்று யூ டியூப் ல் உள்ளது. அதில் காசு கொடுத்துப் பேச வைத்தவர்கள், இயல்பாகப் பேசியவர்கள் என்று இருபது வயதுக்குக் கீழே அல்லது அருகே உள்ளவர்கள் பேசும் பேச்சைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

இதன் விளைவுகள் எப்படி மாறியுள்ளது? 

இருபது வயதுக்குள் இருப்பவர்களிடம் 80 சதவிகிதத்தினருக்கு இந்தியா தமிழக வரலாறு எதுவும் தெரியாது. ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் எவரைப் பற்றியும் புரியாது. தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. எல்லோருக்கும் சமூக வலைதள கணக்கு உண்டு. ஆனால் அவர்கள் கணக்கு செய்து வேறு விசயங்களில் மட்டுமே. 

இது வயதானவர்களின் புலம்பல் என்று தோன்றும். அவர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றார்கள் என்று ஆறுதல் சொல்ல முன் வரலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் பயன்படுத்தும் 80 சதவிகிதப் பொருட்கள் நம்முடையது அல்ல. மற்ற நாடுகள் கண்டுபிடித்து நாம் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருக்கின்றோம். 

முப்பது ஆண்டுகள் இந்தியா முழுக்க இருந்த உயர்தரமான கல்விக்கூடங்கள் அனைத்தும் படித்தவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்பது தான் நம் மகத்தான சாதனை. 

வீட்டுக்கொரு இஞ்சினியர். வீட்டுக்கொரு பட்டதாரி. வீடு முழுக்க கல்வி கற்றவர் என்ற இலக்கை அடைந்துள்ளோம். என்ன சாதகம்? என்ன பாதகம்? 
கேட்டுப் பாருங்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படி படி படி...

காலையில் படி, கடும்பகல் படி, மாலையில் படி, நல்ல நல்ல நூலைப் படி, சங்கத்தமிழ் நூலைப்படி, கற்பவை கற்கும் படி, வள்ளுவர் சொன்னபடி, கற்கத்தான் வேண்டுமப்படி, கல்லாதவர் வாழ்வதெப்படி...?

படி படி படி...

அறம்படி, பொருள்படி, இன்பம்படி, அகப்பொருள் படி, புறப்பொருள் படி, புகப் புகத்தால் அறிவு புலப்படும் என்ற சான்றோர் சொற்படி...!

படி படி படி...

பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகமே மாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி...?

படி படி படி...

சாதி என்றும் தாழ்ந்தபடி, நமக்கெல்லாம் தள்ளுபடி, சேதி அப்படி தெரிந்துபடி, தீமை வந்திடுமே மறுபடி...!?

படி படி படி...

தொடங்கையில் வருந்தும்படி, இருப்பினும் தொடர்ந்துபடி, அடங்கா இன்பம் மறுபடி, ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி...!

படி படி படி...

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணே :

உங்க +
இவறல் +
பொய்யன் +

படி படி படி...