Monday, November 08, 2021

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எப்போதும் போல புகையிலை சார்ந்த பலவிதமான பொருட்கள் எளிய விலையில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தன. எவ்வித கெடுபிடியும் இல்லை.  விஜயபாஸ்கர் கருணாநிதி அவர்களைச் சக்கர நாற்காலியில் வருவதை வைத்து அசிங்கமான கவிதை பாடி அமைச்சர் பதவி பெற்ற போது புகையிலைப் பொருட்களின் விலை சற்று ஏறியது.   


ஜெ இறந்து எடப்பாடி அமர்ந்து மீண்டும் விஜயபாஸ்கர் வானாளவிய அதிகாரம் படைத்தவராக மாறத் தொடங்கிய போதும் கூட அதிக விலைக்கு எந்தப் புகையிலைப் பொருட்களும் விற்கவில்லை என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

ஆனால் ரெய்டு, கோர்ட்டு, கேஸ், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் என்று மாறி மாறி காட்சிகள் மாறியது. 3 ரூபாய் விற்றுக் கொண்டிருந்தவை 10 ரூபாய்க்குச் சென்று எடப்பாடி ஆட்சி இறுதிக் காலத்தில் 30 ரூபாயில் வந்து நின்றது.  

விற்பவர்கள் எப்போதும் போல விற்றுக் கொண்டே தான் இருந்தார்கள். காவல்துறையினர் கச்சிதமாக எந்தந்த கடைகளில் பெரிய அளவுக்கு விற்பனை ஆகின்றதோ அங்கே தினசரி, வாரம், மாதம் என்று கணக்கு வைத்து வசூலித்துக் கொண்டு இருந்தனர். அடி மட்ட போலிஸ் மக்கள் சின்னச் சின்ன கடைகளில் அதிக பட்சம் சிகரெட் வாங்கிக் கொண்டு இருபது ரூபாய் டிப்ஸ் வாங்கிக் கொண்டு இருந்தனர்.

ஆட்சி மாறியது. எந்த மாறுதலும் தெரியவில்லை.

ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு வந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை?  தமிழகத்தைப் புரட்டிப் போட்டார்.  

அரசியல்வாதிகளைக் குறை சொல்வதை விட இந்த விசயத்தில் காவல் துறை மனசு வைத்தால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.  மூன்று மாதங்கள் மூச்சு விட முடியாமல் கடைக்காரர்கள் தவித்தார்கள்.  

நடைப்பயிற்சியின் போது பல்வேறு தருணங்களில் பல கடைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.

இப்போது?  ஆட்சி ஆறு மாதங்களைக் கடக்கப் போகின்றது?

என்ன மாறுதல்கள் உருவாகியுள்ளது?

ஒரு பொட்டலம் ரூபாய் 70 ரூபாய்.  

ஒரு பொட்டலத்தில் இருக்கும் ஒரு ரூபாய் பெறுமானம் இல்லாத புகையிலை வஸ்துக்கு இன்று சந்தையில் 70 ரூபாய் விற்றாலும் சக்கைப்போடு போட்டுப் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.  

இது இங்குள்ள விலை.  ஒவ்வொரு ஊருக்கும் விலை ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.  காரணம் ஏழை, நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தரவர்க்கம் காவல்துறை ஆய்வாளர்களின் கணக்குகளைப் பொறுத்து மாறும் என்றே நினைகின்றேன்.

கோமாளி ஆட்சியில் கூடுதலாக ஒன்று கிடைக்கின்றது.  

கேரளாவிலிருந்து இயங்கும் பரிசுச்சீட்டு தொழில் திருப்பூரில் சக்கைப் போடு போடுகின்றது.  

எங்குத் திரும்பினாலும் காசு.

எதைத் தொட்டாலும் காசு.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பான் பராக் வாயர்கள் அங்கு அதிகம்...

அப்புறம் - கறை நீ(க்)ங்க - இரயில்வே துறை - எவ்வளவு கோடி...?