Wednesday, April 22, 2020

முதல் நடவடிக்கை - ஐந்து நிமிடம் கை தட்டுங்கள்


அந்த 42 நாட்கள் -  7
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)



21 மார்ச் 2020

2050 அன்று கொரானா குறித்துப் பேசும் போது இந்தியர்கள்//தமிழர்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள் என்று கேள்வியும் ஆட்சியில் இருந்தவர்கள் என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள் என்ற ஆச்சரியங்களையும் நிச்சயம் தேடித் தேடிப் படிப்பார்கள் அல்லவா??

மார்ச் 21 என்ற தேதியை மறக்க மாட்டார்கள்.  இந்தியா இன்றைய தினத்தில் தான் அரசாங்கம் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியது.  அதாவது நம் பிரதமர்  மோடி அவர்கள் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இந்தத் தேதியில் வெளியிட்டார். அந்த அறிவிப்பு உலகத்தை ஆச்சரியப்படுத்தியது.  

"22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

"காலை 7 முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கின்போது, கொரானா வைரஸ் நோய்க்கு எதிராகப் போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று 5 நிமிடங்களுக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்"
ICMA ஆஸ்திரேலிய நிறுவனம் உலக நாடுகள் நோய்த் தொற்று பாதுகாப்பு விசயங்களில் எப்படி செயல்பட்டது என்பததை தரவரிசைப் பட்டியலாகக் கொடுத்துள்ளனர். 


இப்படியொரு அற்புதமான ஆலோசனையை மோடி அவர்கள் சொல்லி இந்திய மக்களை உற்சாகப்படுத்திய போது நம்மைச் சுற்றிலும் உள்ள நாடுகள் என்ன செய்து கொண்டிருந்தன.  கோவிட் 19 நோய்த் தொற்று எந்த நிலையில் இருந்தது?

கீழ்க்கண்ட விபரங்கள் மார்ச் 2020 கடைசி வாரத்தில் உலகம் முழுக்க நடந்ததை வைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது.

நம் அருகில் உள்ள நாடுகள், மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற அடிப்படையில் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  இதை வாசிக்கும் போது தான் வெள்ளம் நம்மை நோக்கி பேரலையாக வந்து கொண்டிருந்த போது நம் அதிகாரவர்க்கம் எப்படி இருந்தார்கள்? என்பது புரியும் அல்லவா?

ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,375 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரானில் ஃபார் எனப்படும் மாகாணத்தில் கொரோனாவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளப் பலரும் மது அருந்தியுள்ளனர். அங்குக் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், மது அருந்திய காரணத்தினால் 66 பேர் பலியாகி உள்ளதாக ஃபார் மாகாணத்தின் அவசரச் சேவை மைய இயக்குநர் மொஹமத் ஜாவத் தெரிவித்தார்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் அதிகம் பேர் உயிரிழந்திருப்பது இத்தாலியில்தான். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,326 பேரும் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரொனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதோடு அங்கு மொத்தம் 307 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 1,269 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் இதுவரை 450 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இத்தொற்றால் 38 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் 15 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஷாப்பிங் சென்டர்கள், சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் தொடர்ச்சியாகப் பரவ ஆரம்பித்த பின்னணியில், மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்காகச் சுகாதாரப் பிரிவினருடன் போலீஸார் மற்றும் முப்படையினர் இணைந்து சேவையாற்றினர்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சீனாவின் வூஹான் மாகாணம் உள்ளிட்ட தங்களது நாட்டுக்கான சர்வதேச விமானச் சேவைகள் அனைத்தும் சிங்கப்பூர் ரத்து செய்தது. இதன் மூலம், சீனாவிலிருந்து நேரடியாகவோ, பிற நாடுகளில் இருந்தோ யாரும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாதபடி செய்யப்பட்டது.

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்குக் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு தான் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசத் தொடங்கினர். இரண்டு மாதங்கள் தாமதமாகவே இங்குக் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜனவரி மாதமே சர்வதேச விமானப் போக்குவரத்தை ரத்து செய்திருக்க வேண்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய  சில லட்ச இந்தியர்களை, அவர்கள் வந்திறங்கிய விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தி இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் இங்கே வந்து இருக்க வாய்ப்பில்லை.



கொரானா வந்த பாதை - இந்தியா வழி கேரளா



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கடந்த இரண்டு நாளாக கைதட்டல்கள் அதிகம்...!

ஜோதிஜி said...

புரியவில்லையே தனபாலன். யாருக்கு கைத்தட்டல்கள்?

கரந்தை ஜெயக்குமார் said...

இனியாவது நல்லது நடக்கட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

பிரதமரின் கீச்சு...!