Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Tuesday, September 08, 2020

ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை (Book -1921-2020 Tamil Nad...


அப்பா, தாத்தா வாழ்ந்த காலங்கள், அவர்களின் சொந்தங்களுடன் எடுத்த புகைப்படங்களைக் கல்லூரி படிக்கும் போது பார்த்துள்ளேன். வித்தியாசமான எண்ணங்களை உருவாக்கியது. ஆனால் அந்தத் தலைமுறை நினைவுகளைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. அம்மாவிடம் பழைய புகைப்படங்களைக் கொண்டு போய் காட்டினாலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பிறந்தவர்கள் பிறந்த அந்த நொடி முதல் படிப்படியான வளர்ச்சி வரைக்கும் காட்சி வடிவில் ஆவணப்படுத்தும் அளவிற்கு நவீனத் தொழில் நுட்பம் நமக்கு வசதிகளைத் தந்துள்ளது.

நண்பர் நீங்களே வீடியோ பேசி எனக்கு அனுப்பி வையுங்கள் என்றார்.  இதனை மகள் தான் எடுத்தார்.  எடுக்கும் சமயத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகள்?  பால்காரர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் மாடிக்கு வருவது வரைக்கும் அடுத்தடுத்து பல சிரிப்பான சமாச்சாரங்கள் நடந்தது.  கடைசியாக முழுமையாகப் பேசி முடித்த போது மற்றொரு மகள் பின்னால் வந்து ஓ... வென்று கத்த அதுவும் அவுட்.  இப்படியே நாலைந்து முறை முயன்று கடைசியில் இதனை எடுத்து முடித்தோம்.

ஆனால் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை.  இணையம் ஒத்துழைக்க மறுக்க கடைசியில் எடுத்ததை ஏன் வீணாக்க வேண்டும் என்று இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்.

சமீபத்தில் வெளியான தமிழக அரசியல் வரலாறு புத்தகமான ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரைக்கும் என்ற மின்னூலுக்கு அறிமுக உரையாக, அறிமுகப்படுத்தும் விதமாக இதனைப் பேசியுள்ளேன்.

அடுத்த பத்தாண்டுகளில் நம் முக மாற்றத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.






Monday, June 30, 2014

அமுதவன் (இரண்டு) புத்தகங்கள் - அறிமுகம்

சில பதிவுகளுக்கு முன் எழுத்தாளர் அமுதவன் எழுதிய இரண்டு புத்தகங்கள் என் வாசிப்பில் உள்ளதாக அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் வேலைப்பளூ அதிகமென்றாலும் நிச்சயம் இது போன்ற புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு. 

சர்க்கரை நோய்..... பயம் வேண்டாம்! ( விலை ரூபாய் 55.00) 


நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி. (விலை ரூபாய் 100) 


அமுதவன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னால் அமுதவன் எழுதிய பதிவின் மூலம் ரெய்கி என்ற சொல் எனக்கு அறிமுகம் ஆனது. பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக்கூட விடாமல் படிக்கும் எனக்கு மருத்துவ உலகத்தைப் பற்றி, அதன் பல்வேறு கூறுகளைப் பற்றி, மாற்று மருத்துவங்கள் குறித்து எழுத்தாளர் அமுதவன் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகே எனக்குத் தெரிய வந்தது. 

அவர் பதிவில் எழுதப்பட்ட ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க வியப்பாகவே இருந்தது. 

ரெய்கி என்ற புத்தகத்தைப் படித்தவுடன் ஆசான் தான் என் நினைவுக்கு வந்தார். அவருடன் சேர்ந்து சில நாட்கள் சுற்றிய போது அவர் உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் அவர் மூலம் கேட்டறிந்த எனக்கு இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலதரப்பட்ட அனுபவங்கள், விளக்கங்கள் என் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

நாம் மாற்று மருத்துவங்களைக் குறித்து யோசித்தாலும், பேசினாலும் நம்மோடு இருப்பவர்களே நம்மைக் கிறுக்கன் என்று சொல்லிவிடக்கூடிய ஆபத்துள்ளது. 

அந்த அளவுக்கு மக்கள் நாகரிக மோகத்தில் இருக்கின்றார்கள். தற்போதைய சூழலில் ஒரு தலைவலிக்கு 5000 ரூபாய் செலவளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். சாதாரணத் தலைவலி முதல் தொடர்ச்சியாக நம்மைத் தாக்கும் ஒற்றைத்தலை வலி வரைக்கும் எளிய பயிற்சிகள் மூலம் எந்த அளவுக்கு நாம் நிரந்தர ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளார். 

ரெய்கி என்ற புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்துப் பாருங்கள். 

உங்களுக்கே உங்களுக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். உடம்புக்குள் இருக்கும் சக்தியை எவ்வாறு பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைக்க முடியும்? என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய நம்பிக்கை தான் நமக்கு முதல் ஆதாரம். மற்ற மருத்துவ முறைகள் எல்லாமே அதற்குப் பிறகு தான் என்பதனை நீங்கள் தீர்மானமாக நம்பத் தொடங்குவீர்கள். 

ஆனால் நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் சர்க்கரை நோய். பயம் வேண்டாம்


எங்கள் குடும்பத்தில் அப்பாவுக்குச் சர்க்கரை நோய் இருந்தது. ஊரில் வசிக்கும் அம்மாவுக்கும் உள்ளது. இரண்டு சகோதரர்களுக்கு இருக்கின்றது. பரம்பரை நோய் என்று சொல்லப்படுகின்ற இந்த நோய் ( நோய் என்று கூடச் சொல்லக்கூடாது. பற்றாக்குறை என்று தான் சொல்ல வேண்டும்) எனக்கில்லை. 

காரணம் நான் உணவு முதல் மற்ற பழக்கவழக்கங்கள் வரைக்கும் தீர்மானமாக உருவாக்கிக் கொண்டு பாதைகள் தான் என்னை இன்று வரையிலும் பெருந்தீனி திங்கிற வட்டத்திற்குச் செயலாளராக மாற்றியுள்ளது. தினந்தோறும் வீட்டில் மனைவியின் கேள்விக்கணைகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கெஞ்ச வைத்துக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் தீனியில் ஆர்வமிருப்பவர்கள் அதைச் செறித்துச் சத்தாக மாற்றும் கடின வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலும் உணவே மருந்து. ஆனால் உங்கள் உடம்புக்கு ஏற்ற உணவு முறைகள் தான் மருந்தாக இருக்க முடியும். இல்லாவிட்டால் அதுவே விஷமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 

அமுதவன் பல இடங்களில் தடவி கொடுக்கின்றார். சில இடங்களில் அறிவுரையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி மிரட்டாமல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார். உங்கள் பழக்கவழக்கங்கள் தான் உங்கள் ஆரோக்கியத்தின் முதல்படி என்கிறார். பழக்கவழக்கங்கள் மாறும் போது இப்படித்தான் உங்கள் உடம்பில் ரசாயன மாற்றங்கள் உருவாகும் என்பதனை ஒரு மருத்துவர் போல எளிய முறையில் சொல்லிச் செல்கின்றார். 

இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அற்புதமான அம்சம் என்னவென்றால் அவரது அனுபவங்கள் சார்ந்த பல விசயங்களை அங்கங்கே சொல்லிச் செல்கின்றார். மக்களின் மனோபாவம், மாற்று மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, பணத்திற்கு ஆசைப்படாமல் இருந்தாலும் மக்கள் காட்டும் அலட்சிய மனப்பான்மை, குணமாகிச் சென்றாலும் அதை அடுத்தவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க மனமில்லாமல் வாழும் ஆட்டு மந்தைக்கூட்டம் என்று ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு சுய அனுபவங்களை கொடுத்துள்ளார். 

தற்போது எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் வாங்கும் கட்டணம் 100 ரூபாய் என்கிற நிலையில் தான் உள்ளது. அவரே நடத்திக் கொண்டிருக்கும் மருந்தகங்களில் தான் மருந்து மாத்திரை வாங்க முடியும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் 500 ரூபாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். 

ஆனால் அமுதவன் தான் சொல்ல நினைதத அத்தனை விளக்கங்களையும் 55 ரூபாயில் சொல்லிவிடுகின்றார். சித்த மருத்துவம் குறித்து நான் எழுதிய பழைய பதிவை படித்து விட்டு ஒரு மருத்து நண்பர் அழைத்து நீண்ட நேரம் பேசினார். மற்றொரு நண்பரும் அழைத்துத் தவறு செய்யாதீர்கள் என்று அன்போடு எச்சரித்தார். 

காரணம் இன்றைய சூழ்நிலையில் சித்த மருத்துவம் என்றாலே ஆண்களுக்கு ஆண்குறி சம்மந்தபட்டதற்கு மட்டுமே என்று சந்து டாக்டர்கள் சிந்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பயமுறுத்தல்கள் தான் அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பல ஆண்களுக்குப் பணத்தையும் இழந்து தூக்கம் போன இரவாக முடிந்து போய்விடுகின்றது. 

ஆனால் அமுதவன் தெளிவாக ஆணித்தரமாகச் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். 

எதற்காகவும் பயப்படாதீர்கள். மலக்குடலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். தினந்தோறும் எளிய உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றுக்கும் ஆங்கில மருத்துவம் மட்டும் தான் அருமருந்து என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாற்று மருத்துவத்தில் ஒரு முறையாவது முயற்சி செய்து பாருங்கள். சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் எந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். 

இவ்வாறு சொல்லும் போது ஆங்கில மருத்துவப் பிரியர்கள் ரவுண்டு கட்டி அடிக்க வரக்கூடும். போலியோ, தட்டம்மை, மலேரியா போன்ற கொள்ளை நோய்களை உதாரணம் காட்டி உதைக்க வருவார்கள். கவனமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நோய்களுக்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல். புகைக்குள் வாழ்ந்து கொண்டு, புழுதியில் புரண்டு கொண்டு வாழ்பவர்களை அரவணைத்து ஆறுதல்படுத்தி நம்மை நம்ப வைத்துக் கொண்டிருப்பது பல வண்ண நிற மாத்திரைகளே. 

பல நோய்களுக்கு இன்று வரையிலும் உறுதியான தீர்வு கிடைக்காத போதும் கூட அது தான் பலருக்கும் அருமருந்தாக உள்ளது. இன்று ஆங்கில மருத்துவம் என்பது மனித வாழ்க்கையில் சாதிக்க முடியாத சாதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்ற போதிலும் ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. சில நோய்களுக்குத் தீர்மானமான முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணம் இந்த வர்த்தகப் போட்டியே என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்? 

இந்த நூல் நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரேய்கி, பிராணிக் ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளைக் குறைத்து பக்க விளைவுகள் இன்றிச் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றும் நம்பிக்கை ஊட்டுகின்றது. 

உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால் மகிழ்ச்சி. வந்து விடுமோ? என்ற பயத்தில் இருப்பவரா? உங்களுடன் பழகுபவர்கள் கதை, திரைக்கதை, வசனத்தை எடுத்து விடுகின்றார்களா? 

ஒரு முறை இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க அழைக்கின்றேன். காரணம் உங்கள் உடலைப்பற்றி, உடல் இயக்க செயல்பாடுகளைப் பற்றி, ஒரு மருத்துவர் சொல்ல வேண்டிய விசயங்கள் என அனைத்தையும் வாஞ்சையோடு பயமுறுத்தல் இல்லாமல் உங்களுக்குப் புரிய வைக்கும். 

புரிந்தவர்களும், புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களும் புண்ணியவான்களே. 

தொடர்புடைய பதிவுகள்

Friday, March 15, 2013

முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்


நீங்கள் வலைபதிவரா? இல்லை வலையில் வெறுமனே மேய்சசல் மைதானமாக வைத்திருப்பவரா? 

எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவரா? வலை பதிவுகளின் தொழில் நுடபங்கள் பார்த்து மிரண்டு போய் நிற்பவரா?

எவராயினும் நிச்சயம் தமிழ் இணையத்தை முழுமையாக தெரிந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்க முடியும். 

இந்த வருடம் மே மாதத்துடன் என்னுடைய வலையுலக பயணம் ஐந்தாவது ஆண்டை எட்டப் போகின்றது. ஆனால் தமிழ் இணையத்தின் நீளம் ஆழம் அகலம் போன்றவற்றை என்னால் முழுமையாக உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த குறையை சென்ற மாதத்தில் என் கைக்கு வந்த ஒரு புத்தகம் தீர்த்து வைத்தது.

டாலர் நூல் வெளியீட்டு விழாவை நடத்திய திரு. கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் திடீரென்று ஒரு மாலை என்னை அழைத்தார். அலுவலக பணியில் மும்முரமாக இருந்த என்னிடம் திரு. இளங்கோவன் அவர்களைத் தெரியுமா? என்று கேட்டார்.  நன்றாகவே தெரியுமே என்றேன். 

அவர் கணிப்பொறிகள் சார்ந்து தமிழிலில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவராச்சே என்றேன்.  ஆச்சரியப்பட்டு அவர் உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார். இன்று மாலை என் அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றார்.  இருந்த வேலைகளை ஒத்திவைத்து விட்டு அன்று மாலை 6 மணிக்கு கேபிகே அலுவலகத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்காக காத்திருந்தேன்.

ஏறக்குறைய சமவயது உள்ள மு. இளங்கோவன் அவர்களுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரத்தில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது தான் அவரின் இரண்டு புத்தகங்கள என் கைக்கு கிடைத்தது. 

ஒன்று இணையம் கற்போம் என்ற நூலும், அயலக தமிழறிஞர்கள் என்ற நூலையும் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டேன்.

குறிப்பாக இணையம் கற்போம் என்ற நூல் ஒவ்வொரு சம கால இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும். 

என்னுடைய இந்த ஐந்தாம் ஆண்டு தமிழ் இணையப் பயணத்தில் உருப்படியான சில விசயங்களை செய்யத் தொடங்க வேண்டும் என்று சில திட்டங்களை மனதில் வைத்திருந்தேன்.  இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகத்தை தமிழ் இணையத்தில் பலருக்கும் சென்று சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.  

மூன்றாவது கடமையாக தமிழ் இணையத்தில் மின் நூல் வடிவத்தில் இருக்கும் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும், அநேக பார்வைகளின் படாமல் இருக்கும் பல தரப்பட்ட நூல்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம்  என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இவரின் இணையம் கற்போம் என்ற நூலைப் படித்து முடித்த போது என்னுள் இருந்த உத்வேகம் இன்னமும் அதிகரித்தது. 


இந்த சமயத்தில் தான் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அறிமுகமும், அவரின் இணையம் கற்போம் என்ற அற்புதமான நூல் என் கைக்கு கிடைத்தது.  2007 ஆம் ஆண்டு மே மாதம் எனக்கு அறிமுகமான இந்த தமிழ் இணையம் குறித்து இன்று வரைக்கும் கால் பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற என்னுடைய ஆதங்கத்தை போக்கியது இந்த நூலே. 

176 பக்கங்களுடன் தரமான தாளில் அச்சில் வந்துள்ள இந்த இணையம் கற்போம் என்ற நூல் என்பது ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது தவறில்லை. அந்த அளவுக்கு தமிழ் இணையம் குறித்து, இதன் வளர்ச்சி குறித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நிலையையும் அழகான எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நம்மை வாசிக்க வைப்பதில் முனைவர் மு. இளங்கோவன் வெற்றி கண்டுள்ளார்.  நூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் ஒரு நூலை தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார். 

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நூலில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், தமிழ் இணையத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் படிப்படியான கோர்வையான சம்பவங்களுடன் புரியவைத்துள்ளார்.  தொடங்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி முதல் ஒவ்வொருவரும் தொடர ஆசைப்படும் வலைபதிவுகள் வரைக்கும் ஒவ்வொரு நிலைகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

தமிழ் விசைப்பலகை உருவாக்க உழைத்தவர்கள், தமிழ் தட்டச்சு குறித்த புரிதல்கள், குழும மின் அஞ்சல் குறித்த அறிமுகம், திரட்டிகளின் பங்கு, தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகத்தின் முழுமையான விபரங்கள் என்று தொடங்கி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் வாயிலாக வாசிப்பதற்கு எளிய நடையில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றார். இ கலப்பை உருவான கதை, தமிழ் விக்கிபீடியான, தமிழ் விக்சனரி, தமிழ் மின் அகரமுதலிகள் என்று ஒவ்வொரு கடலையையும் அமுதமாக தந்துள்ளார். 

இந்த புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் உண்டான ஒவ்வொரு அத்தியாங்களிலும் தமிழ் இணையம் வளர்ந்த கதையின் நிலையை ஏராளமான உழைப்பின் மூலம் கவனமாக பதிவு செய்துள்ளதோடு தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரி பேராசியர் பணியோடு உலகமெங்கும் இந்த தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு பயிலரங்குகள் மூலம் அறிமுகப்படுத்துவதையும் தனது கடமையாக கொண்டுள்ளார்.   தமிழ் இணையத்தில் இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே என்று நீங்கள் மனதில் வைத்திருக்கும் அத்தனை விசயங்களைப் பற்றியும் இந்த நூலின் வாயிலாக தெளிவாக புரியவைத்துள்ளார்.  சம காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ந்துள்ள நீட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ள முனைவர் மு. இளங்கோவன் அவர்களை சிறப்பாக பாராட்டலாம்.

தமிழ் இணையம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருப்பது. ஆனால் தனது இணையம் கற்போம் என்ற நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் இணையத்தை அதன் மாற்றத்தை தவறாமல் புதிய பதிப்பில் சேர்த்துக் கொண்டே வருவதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோவொரு புதிய விசயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 

தனது வலைபதிவில் நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் சிறப்பையும் குறித்து  ஒவ்வொரு சமயத்திலும் ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் திரு. முனைவர் மு. இளங்கோவன் தமிழ் உலகத்தில் முக்கியமானவர். 


வெறும் எழுத்தோடு நின்று போகாமல் களத்தில் நின்று களப்பணியாற்றும் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ் மொழி குறித்த அக்கறை, இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை, என்று தன்னளவில் தளராமல் தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றார். இவரின் உழைப்பின் மூலம் அடுத்து வரும் தமிழ் இணைய இளைஞர்களின் கைக்கு கணினித் தமிழாக கிடைக்கும் என்பதோடு இவரின் உழைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும். 

நூலின் பெயர் 

இணையம் கற்போம்.

விலை  நூறு ரூபாய்

நூல் வெளியீடு 

               வயல்வெளி பதிப்பகம்
               இடைக்கட்டு,
               உள்கோட்டை (அஞ்சல்)
               கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்)
               அரியலூர் மாவட்டம் 612 901

நூலாசிரியர் அலைபேசி எண் 94420 29 053

முனைவர் மு. இளங்கோவன் வலைபதிவு முகவரி.