Showing posts with label முனைவர் மு. இளங்கோவன். Show all posts
Showing posts with label முனைவர் மு. இளங்கோவன். Show all posts

Tuesday, June 25, 2013

புதிய வரவுகள்

இன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களிலும் இனி ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் அரசாங்க பள்ளிக்கூடங்களை நடத்த முடியும் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில்,

இன்றைய பதிப்பகங்கள் கட்டுரை இலக்கியங்கள் என்பதை ஆதரிக்க முடியாத பட்டியலில் சேர்ந்து விட்ட போதிலும் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் மிக தைரியமாக தமிழ் மொழி குறித்த ஆவணத்தின் மொத்த தொகுப்பாக இந்த இரண்டு நூலையும் கொண்டு வந்துள்ளார்.. 

இந்த கட்டுரைகளுக்கு என் பாராட்டுரைகள்.
.
பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இளங்கோவன் அவர்களின் கட்டுரை களஞ்சியம் மற்றும் செவ்விலக்கிய சிந்தனைப் புதையல் என்ற இரண்டு நூல் வெளி வந்துள்ளது.

இன்றைய நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பது "ஓட்டத்தை நிறுத்தாதே. பின்னால் வருபவர்கள் முந்தி விடுவார்கள்".  

இதுவே தான் காலப்போக்கில் வாழ்க்கைக்காக "காசு என்பது மாறி காசுக்காகவே வாழ்க்கை" என்று நம்மை பணம் துரத்திப் பறவைகளாக மாற்றி விடுகின்றது.  ஆனால் இந்த புத்தகங்களை படிக்கும் போது நாம் எத்தனை விசயங்களை இழந்துருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

இன்று தமிழ் மொழி அறிவியலோடு போட்டி போட முடியாது.  ஆங்கிலம் மூலமே அறிவியலைக் கற்றுக் கொள்ள முடியும் என்று மனதில் வைத்திருக்கும் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் இந்த புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் இருப்பதை அழித்து விட்டு நாம் எங்கங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றது. 

இன்று நினைத்த நேரத்தில் வலைபதிவில் உறவாடும் உறவுக் கூட்டத்திற்கு இந்த தமிழ் எழுத்துரு உருவான கதைகள்,யூனிக்கோடு என்பதை எங்கே அங்கீகரிக்கின்றார்கள்,வெளியே தெரியாத அதன் நடைமுறைகள் என்ன? எப்படி உருவாக்கினார்கள்? தமிழ் யூனிகோடு உருவாக்கப்பட்டதற்கும், இந்த முயற்சிகளை உருக்குலைக்க காரணமாக இருந்தவர்கள் போன்ற பலவித தகவல்களையும் அழகாக விவரித்துள்ளார்.  

நம்முடைய முந்தைய தமிழ்பரம்பரைகளைப் பற்றி எவரும் நினைப்பதே தவறு என்பதை விட அது எதற்கு தேவையில்லாமல்? என்கிற சூழ்நிலையில் இன்றைய கல்விச்சூழல் நம்மை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. தமிழ்மொழிக்கு பாடுபட்டவன் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதை கொத்துக்கறியாக்கி குற்றுயிரும் குலையுறுமாக மாற்றி இன்னமும் பலர் தங்கள் மாரை அவர்களே தட்டிக் கொண்டுருக்கின்றார்கள்.  

ஆனால் உருப்படியான கல்விச்சூழல் என்பது எப்படி உள்ளது என்பதை தான் அமெரிக்காவில் இளங்கோவன் பார்த்த ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வாயிலாக, அங்குள்ள அறிவுப்போட்டிகளை அழகாக பதிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் தெலுங்கிசையே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சூழ்நிலையை 1967க்குப் பிறகு ஆட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் எப்படி செயல்பட்டார்கள்.  அதுவே தற்போதைய காலகட்டத்தில் எப்படி மாறிவிட்டது போன்ற நிகழ்கால உண்மைகளை நமக்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.  

தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்ற எவருமே அதன் வளர்ச்சி குறித்து, வளர வேண்டிய அவசியம் குறித்தே கருத்தில் கொள்ளாமல் கண்ட கருத்துக்களையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று மொழிக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் விரயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நிகழ் கால ஆடம்பர வாயிற் தோரணங்கள் மூலம் உதாரணம் காட்டி விளக்குகின்றார். 

இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ்மொழிக்காக கட்டும் நினைவு இல்லங்கள் ஒவ்வொன்றுமே தமிழ்மொழிக்கு கட்டப்படும் சமாதி என்பதாகத்தான் இருக்கின்றது என்பதை தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நடக்கும் அதிகார போட்டிகளை சுட்டிக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு நிதி ஆண்டும் மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் மொழி வளர்ச்சிக்கென குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றது.  ஒவ்வொரு மாநில அரசும் தனது நிர்வாகத்தில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரைக்கும் கல்வி வரி என்று மூன்று சதவிகிதம் வசூலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணமெல்லாம் ஒவ்வொரு ஆட்சியிலும் மாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. 

ஆனால் இன்று தமிழ்மொழியை வளர்க்கின்றோம் என்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்து முதல் அதன் மூலம் எப்படி காசு பார்க்கலாம் என்கிற கும்பல் வரைக்கும் அதன் ரூபங்களை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற 90 சதவிகித ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் அரசு பள்ளியில் பணிபுரிந்தவர்களே.  ஆங்கிலவழிக்கல்விக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமை அந்த அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டு அரசு இதனைக்கூட பெருமையாக வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்பாத நிலையில் தான் இருக்கின்றது. ஒரு வேளை மக்களின் பெரும்பான்மையான விருப்பமே மகேசனின் விருப்பமாக இருக்கக்கூடுமோ?

பூம்புகார் அகழ்வராய்ச்சி என்பது ஒரு பெரிய பூதம் போன்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆனால் இங்கு செய்யப்பட்ட எந்த ஆராய்ச்சிகளும் வெளிவருவதில்லை என்பதோடு இது சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் மேலே இருப்பவர்கள் ஊக்குவிப்பதில்லை.  

இது சார்ந்த பெரும்பாலான கொள்கைரீதியான முடிவுகள் இன்னமும் மத்திய அரசாங்கத்திடமே இருப்பதால் இது போன்ற விபரங்கள் குறித்து தெரிந்தவர்களும் குறைவு.  தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் இல்லை என்கிற ரீதியில் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சித் துறை இறுதி கட்ட மூச்சில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 

மக்களும் பிழைத்தே ஆக வேண்டிய அவசியத்தில் பிழைப்பு வாதியாக மாறிப் போய்விட்டதால் சரித்திரச் சான்றுகள் என்பது ஆதரவற்று அழிந்து கொண்டேயிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தங்கள் தாய் மொழி குறித்த சிந்தனைகளும் மாறிக் கொண்டே வருகின்றது.. 

நடுத்தரவர்க்கத்திற்கு இன்று உடனடித் தேவை ஒரு வேலை.  அந்த வேலையின் மூலம் கிடைக்கப் போகும் வருமானம்.  

அதற்கு இப்போதைய சூழ்நிலையில் ஆங்கிலம் தான் உதவுவதாக இங்கே நம்பவைக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரங்களை எவரும் நம்பத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.

வருடந்தோறும் பத்துலட்சம் பேர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து வெளியே வருபவர்களில் எத்தனை பேர்களால் போட்டியில் ஜெயித்து தங்களை தகுதியான பதவியில் நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது என்பது குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்ளவதில்லை.  விரும்பும் ஆங்கிலத்தில் படித்து வருபவனுக்கு ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேச முடிவதில்லை. கற்றுக் கொடுப்பவனுக்கும், கற்றுக் கொள்பவனுக்கு இந்த ஆங்கிலம் இன்றும் சவாலாக இருப்பதால் மணற் கொள்ளையரை, சாராய வியாபாரிகளை, கடத்தல் பேர்வழிகளை இன்று கல்வித் தந்தையாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை பேர்கள் பத்தாவது முடித்து பனிரெண்டாம் வகுப்பு சென்றார்கள். அதில் எத்தனை பேர்கள் கல்லூரி சென்றார்கள் போன்ற எந்த கணக்கு வழக்கும் இங்கே இல்லை.  இறுதியாக எத்தனை பேர்கள் சரியான வேலைக்குச் சென்றார்கள்?

கல்வி மட்டுமல்ல. நம் நாட்டில் எந்த துறை சார்ந்தும் உருப்படியான கணக்கு வழக்கு என்பதே இல்லை. ஒரு வேளை நீங்கள் கேட்டால் கொடுப்பார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்பது சந்தேகமே.

பிழைக்கவே கல்வி என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் கடைசியில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளாமல், கற்று வைத்திருந்த தமிழும் மறந்து அறைகுறையாகிப் போனவர்களால் இன்று தமிழ்நாடு அறிவாளியாக மாறிக் கொண்டேயிருக்கிறது. .  

தாய்மொழி குறித்த அக்கறையில்லாதவர்கள் ஆட்சியாளர்களாக வர, தினசரி வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் நாள்பட இந்த மொழி குறித்த எண்ணம் மாறிக் கொண்டேயிருக்க அழியப்போகும் மொழிப்பட்டியலில் இந்த தமிழும் வந்து விடுமோ என்கிற நிலையில் இளங்கோவன் எழுதியுள்ள இந்த நூல்கள் தமிழுக்கு வந்துள்ள பொக்கிஷத்தில்  ஒன்று.

இன்று தமிழ் இலக்கியம் படித்தால் இன்று விற்கின்ற விலையில் ஒரு இட்லி கூட வாங்கி சாப்பிட வருமானம் கிடைக்காது என்று ஆசிரியர்களே தங்களுடைய மாணவர்களுக்கு சொல்லும் அளவுக்கு நம் மொழியை நாமே பெருமையாய் பார்க்கின்றோம்.  

ஆனால் தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தானே காத்துக் கொண்டு ஒரு சில அறிஞர்களின் துணை கொண்டு இத்தனை ஆண்டு காலம் இன்னமும் பேச்சு மொழி, எழுத்து மொழியாக இருப்பதே மகத்தான சாதனை தான் என்பதை தான் முனைவர் மு இளங்கோவன் போன்றவர்களின் தளராத முயற்சி நமக்கு உணர்த்துகின்றது. 

ஆசிரியர் தொடர்பு எண்  94420 29 053

ஆசிரியர் மின் அஞ்சல் முகவரி muelangovan@gmail.com

நூலாசிரியரின் பிற நூல்கள்

1. பாரதிதாசன் பரம்பரை
2. வாய்மொழி இலக்கியம்
3.நாட்டுப்புறவியல்
4. இணையம் கற்போம்
5. மணல்மேட்டு மழலைகள்
6. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
7. பழையன புகுதலும்...........
8. அரங்கேறும் சிலம்புகள்
9. பொன்னி ஆசிரிய உரைகள்
10. பொன்னி பாரதிதாசன் பரம்பரை
11. இலக்கியம் அன்றும் இன்றும்
12. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துறையனார் அவர்கள்.
13. மாணவராற்றுப்படை
14. அச்சக ஆற்றுப்படை
15. பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு

Friday, March 15, 2013

முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்


நீங்கள் வலைபதிவரா? இல்லை வலையில் வெறுமனே மேய்சசல் மைதானமாக வைத்திருப்பவரா? 

எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவரா? வலை பதிவுகளின் தொழில் நுடபங்கள் பார்த்து மிரண்டு போய் நிற்பவரா?

எவராயினும் நிச்சயம் தமிழ் இணையத்தை முழுமையாக தெரிந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்க முடியும். 

இந்த வருடம் மே மாதத்துடன் என்னுடைய வலையுலக பயணம் ஐந்தாவது ஆண்டை எட்டப் போகின்றது. ஆனால் தமிழ் இணையத்தின் நீளம் ஆழம் அகலம் போன்றவற்றை என்னால் முழுமையாக உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த குறையை சென்ற மாதத்தில் என் கைக்கு வந்த ஒரு புத்தகம் தீர்த்து வைத்தது.

டாலர் நூல் வெளியீட்டு விழாவை நடத்திய திரு. கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் திடீரென்று ஒரு மாலை என்னை அழைத்தார். அலுவலக பணியில் மும்முரமாக இருந்த என்னிடம் திரு. இளங்கோவன் அவர்களைத் தெரியுமா? என்று கேட்டார்.  நன்றாகவே தெரியுமே என்றேன். 

அவர் கணிப்பொறிகள் சார்ந்து தமிழிலில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவராச்சே என்றேன்.  ஆச்சரியப்பட்டு அவர் உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார். இன்று மாலை என் அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றார்.  இருந்த வேலைகளை ஒத்திவைத்து விட்டு அன்று மாலை 6 மணிக்கு கேபிகே அலுவலகத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்காக காத்திருந்தேன்.

ஏறக்குறைய சமவயது உள்ள மு. இளங்கோவன் அவர்களுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரத்தில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது தான் அவரின் இரண்டு புத்தகங்கள என் கைக்கு கிடைத்தது. 

ஒன்று இணையம் கற்போம் என்ற நூலும், அயலக தமிழறிஞர்கள் என்ற நூலையும் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டேன்.

குறிப்பாக இணையம் கற்போம் என்ற நூல் ஒவ்வொரு சம கால இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும். 

என்னுடைய இந்த ஐந்தாம் ஆண்டு தமிழ் இணையப் பயணத்தில் உருப்படியான சில விசயங்களை செய்யத் தொடங்க வேண்டும் என்று சில திட்டங்களை மனதில் வைத்திருந்தேன்.  இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகத்தை தமிழ் இணையத்தில் பலருக்கும் சென்று சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.  

மூன்றாவது கடமையாக தமிழ் இணையத்தில் மின் நூல் வடிவத்தில் இருக்கும் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும், அநேக பார்வைகளின் படாமல் இருக்கும் பல தரப்பட்ட நூல்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம்  என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இவரின் இணையம் கற்போம் என்ற நூலைப் படித்து முடித்த போது என்னுள் இருந்த உத்வேகம் இன்னமும் அதிகரித்தது. 


இந்த சமயத்தில் தான் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அறிமுகமும், அவரின் இணையம் கற்போம் என்ற அற்புதமான நூல் என் கைக்கு கிடைத்தது.  2007 ஆம் ஆண்டு மே மாதம் எனக்கு அறிமுகமான இந்த தமிழ் இணையம் குறித்து இன்று வரைக்கும் கால் பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற என்னுடைய ஆதங்கத்தை போக்கியது இந்த நூலே. 

176 பக்கங்களுடன் தரமான தாளில் அச்சில் வந்துள்ள இந்த இணையம் கற்போம் என்ற நூல் என்பது ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது தவறில்லை. அந்த அளவுக்கு தமிழ் இணையம் குறித்து, இதன் வளர்ச்சி குறித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நிலையையும் அழகான எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நம்மை வாசிக்க வைப்பதில் முனைவர் மு. இளங்கோவன் வெற்றி கண்டுள்ளார்.  நூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் ஒரு நூலை தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார். 

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நூலில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், தமிழ் இணையத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் படிப்படியான கோர்வையான சம்பவங்களுடன் புரியவைத்துள்ளார்.  தொடங்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி முதல் ஒவ்வொருவரும் தொடர ஆசைப்படும் வலைபதிவுகள் வரைக்கும் ஒவ்வொரு நிலைகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

தமிழ் விசைப்பலகை உருவாக்க உழைத்தவர்கள், தமிழ் தட்டச்சு குறித்த புரிதல்கள், குழும மின் அஞ்சல் குறித்த அறிமுகம், திரட்டிகளின் பங்கு, தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகத்தின் முழுமையான விபரங்கள் என்று தொடங்கி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் வாயிலாக வாசிப்பதற்கு எளிய நடையில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றார். இ கலப்பை உருவான கதை, தமிழ் விக்கிபீடியான, தமிழ் விக்சனரி, தமிழ் மின் அகரமுதலிகள் என்று ஒவ்வொரு கடலையையும் அமுதமாக தந்துள்ளார். 

இந்த புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் உண்டான ஒவ்வொரு அத்தியாங்களிலும் தமிழ் இணையம் வளர்ந்த கதையின் நிலையை ஏராளமான உழைப்பின் மூலம் கவனமாக பதிவு செய்துள்ளதோடு தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரி பேராசியர் பணியோடு உலகமெங்கும் இந்த தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு பயிலரங்குகள் மூலம் அறிமுகப்படுத்துவதையும் தனது கடமையாக கொண்டுள்ளார்.   தமிழ் இணையத்தில் இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே என்று நீங்கள் மனதில் வைத்திருக்கும் அத்தனை விசயங்களைப் பற்றியும் இந்த நூலின் வாயிலாக தெளிவாக புரியவைத்துள்ளார்.  சம காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ந்துள்ள நீட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ள முனைவர் மு. இளங்கோவன் அவர்களை சிறப்பாக பாராட்டலாம்.

தமிழ் இணையம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருப்பது. ஆனால் தனது இணையம் கற்போம் என்ற நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் இணையத்தை அதன் மாற்றத்தை தவறாமல் புதிய பதிப்பில் சேர்த்துக் கொண்டே வருவதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோவொரு புதிய விசயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 

தனது வலைபதிவில் நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் சிறப்பையும் குறித்து  ஒவ்வொரு சமயத்திலும் ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் திரு. முனைவர் மு. இளங்கோவன் தமிழ் உலகத்தில் முக்கியமானவர். 


வெறும் எழுத்தோடு நின்று போகாமல் களத்தில் நின்று களப்பணியாற்றும் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ் மொழி குறித்த அக்கறை, இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை, என்று தன்னளவில் தளராமல் தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றார். இவரின் உழைப்பின் மூலம் அடுத்து வரும் தமிழ் இணைய இளைஞர்களின் கைக்கு கணினித் தமிழாக கிடைக்கும் என்பதோடு இவரின் உழைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும். 

நூலின் பெயர் 

இணையம் கற்போம்.

விலை  நூறு ரூபாய்

நூல் வெளியீடு 

               வயல்வெளி பதிப்பகம்
               இடைக்கட்டு,
               உள்கோட்டை (அஞ்சல்)
               கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்)
               அரியலூர் மாவட்டம் 612 901

நூலாசிரியர் அலைபேசி எண் 94420 29 053

முனைவர் மு. இளங்கோவன் வலைபதிவு முகவரி.