Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Friday, September 02, 2016

சிவகுமார் எனும் மானுடன்


நாம் வாசிக்கும் சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதலாம். சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத முடியாமல் நாமே தடுமாறிப் போய் விடக்கூடும். இந்தப் புத்தகத்திற்கு விமர்சனப் பார்வையை எழுதி வைத்து விடலாம் என்று மீண்டும்  வாசிக்கத் தொடங்கியதும் ஏன் நாம் இந்தப் புத்தகம் குறித்து சிவகுமார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையே விமர்சனமாக இங்கே தந்து விடலாமே? என்ற எண்ணம் உருவானது. 

காரணம் கடந்த ஆறு ஆண்டுகளாக என் சுயத்தை என் பலகீனத்தை வெளிப்படையாகப் பல சமயங்களில் எழுத்தாக மாற்றி அனைவரின் பார்வைக்கும் தந்துள்ளேன். இப்போதும் அதையே செய்ய விரும்புகின்றேன். 

முதல் பதிவு எழுதியதும் நண்பர்கள் காட்டிய ஆதரவு ஆச்சரியமானது. வலைப்பதிவு என்பது ஃபேஸ்புக் வந்ததும் காலாவதியாகி விட்டது என்பது பொய் என்றே தெரிகின்றது. ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்தாற் போல உயிரோட்டம் கடைசி வரைக்கும் இருக்கக்தான் செய்யும் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

விமர்சனத்தின் வாயிலாகத் தனி மடல் வாயிலாக ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. 

+++++++++

திரு. சிவகுமார் அவர்களுக்கு வணக்கம். 

நான் இப்போது ஏற்று இருக்கும் தொழில் வாழ்க்கைப் பணியின் காரணமாகக் கடந்த சில நாட்களாக இந்தப் புத்தகத்திற்காக அதிகாலைப்பொழுதை ஒதுக்கி படித்துக் கொண்டு வருகின்றேன். மொத்தமாக ஒரு முறை மேலோட்டமாக உள்வாங்கி விட்டுக் குறிப்பிட்ட சிலர் சொல்லியுள்ள விசயங்களைப் படித்தேன். அதிலும் குறிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பார்வை எப்படியுள்ளது என்பதை அதிக கவனம் செலுத்தினேன். 

"ஒரு மனைவிக்குத்தான் முழுமையாகத் தெரியும். தன்னுடைய கணவர் எந்த அளவுக்கு நல்லவர் அல்லது பலகீனமானவர்". கணவர் சமூகத்தில் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு அவர் முழுமையாகத் தகுதியானவரா? என்பதை மனைவிமார்கள் அத்தனை பேர்களும் உணர்ந்தே வைத்திருப்பார்கள். 

சிலர் நேரிடையாக சுட்டிக் காட்டுவார்கள். பலர் "நமக்கேன் வம்பு?" "பேய்க்கு வாக்கப்பட்டாயிற்று. நாம் வாழ்ந்து தான் ஆகனும்" என்று சகிப்புத்தன்மையோடு வாழ்க்கை நடத்துவார்கள். அதனால் புத்தகத்தில் லஷ்மி அம்மா உங்களைப் பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதனைத் தான் நேற்று அதிகாலையில் வாசித்தேன். 

கடந்த 25 ஆண்டுகளாக நான் ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரையிலும் வார, மாத, தினசரி பத்திரிக்கைகள் அனைத்தையும் வாசிக்கின்றேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசித்து முடித்துள்ளேன். எழுத்தாளர் என்ற பாத்திரத்தில் உள்ளே நுழைந்து கடந்த ஆறு ஆண்டுகளாக பதினைந்து ஆண்டுகள் ஒருவர் எழுத வேண்டிய விசயங்களை வலைப்பதிவில் எழுதியுள்ளேன். 

புத்தகமாக மின் நூலாக அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளேன். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்குள் உருவான உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

காரணம் சிவகுமார் என்ற தனிமனிதனை ஊடகங்கள் வாயிலாகச் சமீபகாலமாக நண்பர் மூலமாக நெருக்கமாகக் கவனித்து வந்தவன் என்ற முறையில் இதில் பல விசயங்கள் என்னை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. 

அதிலும் குறிப்பாக லஷ்மியம்மா தன் கணவரைப் பற்றி சொல்லியவற்றை வாசிக்கும் போது என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. 

நான் எழுத்துத்துறையில் இருப்பதால் நடையோட்டம், தவறுகள், குறைந்த அழகியல் போன்ற பலவற்றைக் கவனிக்கும் எனக்கு லஷ்மியம்மா மனதோடு பேசிய விசயங்களை வார்த்தைகளாகச் சொன்னதும் அதை அமுதவன் கச்சிதமாகச் செதுக்கியதும் இந்தப் புத்தகத்தின் முத்தாய்ப்பு என்றால் அது முற்றிலும் உண்மை. 

தமிழில் நெகிழ்ந்தேன் என்றொரு வார்த்தையுண்டு. லஷ்மியம்மா சொல்லியவற்றை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அதிகாலை வேலையில் என் மனைவி உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என் நடவடிக்கைகளைப் பார்த்து என்ன ஆக்டிங் கொடுக்குறீங்க? என்றார். காரணம் அந்த அளவுக்கு நான் ஆணாதிக்கம் நிறைந்தவன் என்பதும் எதையும் கடுகளவு கூட விட்டுக் கொடுக்காதவன் என்ற குற்றவுணர்ச்சியும் என்னை வாட்டி வதைத்தது. வரிகளை திரும்பத் திரும்ப வாசிக்கும் நான் உள்ளே அந்த வார்த்தைகளுக்குள் இருப்பதாகவே எனக்குத் தெரிந்தது. இனி எப்படி வாழ வேண்டும்? என்ற வைராக்கியத்தை எனக்குள் உருவாக்கியது. 

ஒவ்வொரு கால கட்டத்திலும் நான் எப்படி ஆக வேண்டும் என்பதனை இந்தச் சமூகத்தில் உயிருடன் மற்றும் இறந்து போனவர்களை மானசீகமாக வைத்து என்னைச் செதுக்கி வந்துள்ளேன். அதில் அவர்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பார்கள், அல்லது நான் வாழும் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாகக்கூட இருந்து இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களைப் பற்றி நாம் வைத்துள்ள பிம்பங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாறி விடும். காரணம் அவர்களின் வாழ்க்கை என்பது "சொல்லுக்கும் செயலுக்கும்" உள்ள பெரிய வித்தியாசத்தை எளிதில் கண்டு கொள்ள முடியும். அந்தப் பிம்பம் மறைந்து விடும். 

இதே போல என் வாழ்க்கையில் பலரும் வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் கடந்த 25 வருடங்களாக சிவகுமார் என்றொரு தனிமனிதனை நடிகராக, ஓவியராக நான் என்றுமே பார்த்தது இல்லை. என் வாழ்க்கைக்குத் தேவையான நான் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு குடும்பத் தலைவராகவே பார்த்து வருகின்றேன். எத்தனைப் பெரிய புகழ் வாய்ந்த மனிதராக இருந்தாலும் அவர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தால் என் பார்வையில் முழுமையான தோல்வி பெற்ற மனிதராகத்தான் பார்க்கின்றேன். அதன் காரணமாகவே என் குடும்ப வாழ்க்கையில் முடிந்த வரைக்கும் என் ஈகோவை அவ்வவ்போது குறைந்து என் குறைகளை தெரியப்படுத்தி மனைவியைச் சமாதானப்படுத்தி விடுகின்றேன். குழந்தைகளிடம் இன்னமும் நெருங்கிப் பழகுகின்றேன். 

இவை அனைத்தும் சிவகுமார் என்ற மனிதரிடம் நான் கற்றுக் கொண்டே விசயங்கள். 

குறிப்பாக சூர்யாவும் கார்த்திக்கும் சொல்லியுள்ள பலவிசயங்களை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் சிவகுமார் என்ற மனிதரை உள்வாங்கி விதம் தான் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள "மெச்சூரிட்டி" என்ற வார்த்தையை சிவகுமார் என்ற மனிதர் தனது தலைமுறைக்குக் கடத்தியுள்ளார். அவர் சேர்த்துள்ள புகழ், அதிகாரம், அந்தஸ்து, சொத்து, பிரபல்யம் என்ற மாயை போன்ற அத்தனையையும் விட இது தான் சிவகுமார் என்ற மனிதரை இன்னும் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசு பொருளாக வைக்கப் போகின்றது என்பதனை இந்தப் புத்தகத்தின் வாயிலாக உணர்ந்துள்ளேன். 

என் பலம் பலவீனம் எனக்கு நன்றாகவே தெரிகின்றது. இந்தப் புத்தகம் எனக்கு மட்டுமல்ல, என் மூன்று குழந்தைகளுக்கும் என் மனைவிக்கும் கீதை. 

என் பலவீனத்தை சிவகுமார் என்ற மனிதரின் வாழ்க்கை மூலமாக மறைமுகமாக எனக்குச் சுட்டிக்காட்டிய அத்தனை நல் இதயங்களையும் வாழ்த்துகிறேன். காலம் முழுக்க போற்றக்கூடிய பணியை அமுதவன் செய்துள்ளார். அவருக்கும் காலம் முழுக்க சொல்ல வேண்டிய என் குடும்பத்தினரின் அன்பை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

மாறாத பிரியங்களுடன் 

ஜோதிஜி திருப்பூர் 
தேவியர் இல்லம். 

Friday, February 14, 2014

என்றென்றும் சுஜாதா

நான் ஆறாவது படிக்கும் போது பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புத் தொடங்கியது. கல்லூரிக்குச் சென்ற போது அறிமுகமாகியிருந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களைத் தாண்டி இறுதியில் பாலகுமாரன் மற்றும் சுஜாதா மட்டுமே என்னுடைய விருப்பமான எழுத்தாளராக இருந்தார்கள். 

வெளியுலகம் குறித்து எதுவுமே தெரியாத நிலையில், வாழ்க்கை குறித்த புரிதல்கள், தேடல்கள் என்று இருவருமே வெவ்வேறு பார்வையில் மாறி மாறி எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்து முதல் வருடம் முழுக்கப் பாலகுமாரன் தான் என்னை ஆக்ரமித்திருந்தார். அவர் சொல்லுவதே வேதம் என்கிற நிலையில் தான் இருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கை சவுக்கடி போலத் தாக்கத் தொடங்க கற்பனைகளைத் தாண்டிய நிஜங்களைக் கண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டு தினசரி வாழ்க்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினேன். 

அதன் பிறகே எழுத்தாளர்களின் எழுத்துக்களைத்தாண்டி ஒவ்வொரு எழுத்தாளர்களின் நிஜமுகத்தைப் பலதரப்பட்ட பத்திரிக்கைகள் மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

தொடர்ந்து வந்த 15 ஆண்டுகளில் புத்தகங்களை விடத் தினசரி பத்திரிக்கைகள், பலதரப்பட்ட கட்டுரைகள் என மாறி மாறி குழப்பத்துடன் பலரின் அடையாளங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல், திரைப்படம், எழுத்தாளர்கள் என்று சகலரும் சொல்லும் கருத்துக்களுக்கும், அவர்களின் நிஜ வாழ்க்கைக்கும் உண்டான வேறுபாடுகளையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர்களை மிஞ்சியவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் எழுத்தாளர் சுஜாதா மேல் நான் கொண்டிருந்த மரியாதை, அபிமானம் மாறவில்லை. பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் வாங்கிச் சேகரித்த சுஜாதாவின் பல புத்தகங்கள் இன்னமும் என்னிடம் உண்டு. மற்ற எழுத்தாளர்கள் போல் இல்லாமல் கதையோ, கட்டுரையோ, புனைவோ, அறிவியல் சிந்தனைகளான ஏன் எதற்கு எப்படி? போன்ற எந்தப் புத்தகமாக இருந்தாலும் அவர் நேற்று எழுதியது போலவே உள்ளது. 

காலமாற்ற இடைவெளி எதுவும் தெரியாத அளவுக்கு எந்தக் காலத்திலும் வாசிப்பவனுக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக்கூடிய எழுத்தாற்றல் மிக்க சுஜாதாவை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது. 

சில வாரங்களுக்கு முன் விகடன் வெளியீடாக வந்துள்ள எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ள என்றென்றும் சுஜாதா என்ற புத்தகத்தை வாசித்த போது நான் மனதில் வைத்திருந்த சுஜாதா என்ற பிம்பம் எனக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்த மரியாதைக்குரிய ஆசானாகவே தெரிந்தார். 

நான் புரிந்து வைத்துள்ள சுஜாதாவை விட அமுதவன் அவருடன் ஏறக்குறைய 38 ஆண்டுகள் பழகி அந்த அனுபவத்தை எழுத்தாக்கி கொடுத்துள்ளதை படித்து முடித்த போது உருவான தாக்கம் அடுத்த இரண்டு நாட்கள் என்னுடனே இருந்தது. கூடவே சுஜாதா மேல் நான் வைத்திருந்த மரியாதையில் ஒரு துளி கூடச் சேதாரமின்றி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

அமுதவனின் வலைபதிவு எனக்குத் தனிப்பட்ட முறையில் எப்படி எழுத வேண்டும்? என்பதை கற்றுக் கொடுக்கும் வலைபதிவாகும். காரணம் எளிமையும், முக்கியமாக எழுத்துப்பிழையுமின்றிச் சொல்ல வந்த விசயத்தை வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கூட ஒரு முறை வாசித்தவுடன் உள்வாங்கிக் கொள்ள வைக்கும் நேர்த்தியுமாய் எழுதும் அவரின் எழுத்து நடை என்பது என்னைப் போல பலருக்கும் உதவக்கூடியது.  

இந்தப் பாணியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை இரவு ஒன்பது மணிக்கு வாங்கி வந்து நள்ளிரவு வரைக்கும் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே மூச்சில் வாசிக்க வைத்த அமுதவனின் எழுத்தாற்றலுக்கு மிக்க நன்றி. அத்துடன் நல்ல குணம் படைத்த மனிதர்கள் இயற்கையோடு கலந்த நிகழ்வை மரணம் என்று சொன்னாலும் அவர் காலம் கடந்து நிற்பார் என்பதற்கு அத்தாட்சியாக அமுதவனின் எழுத்து சுஜாதாவுக்கு உண்மையான மானசீகமான நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்தி உள்ளது. 

முதன் முதலாக அமுதவன் சுஜாதாவை சந்திக்க அவர் பெங்களூருக்கு வந்த சில நாட்களில் அவர் முன்னால் போய் நின்ற போது உருவான அறிமுகத்தில் இருந்து இந்தப் புத்தகம் தொடங்குகின்றது. 

சுஜாதா வார்த்தைகளில் "என்னய்யா நான் பெங்களூருக்கு வந்து இன்னும் உட்காரக்கூட ஆரம்பிக்கலை. அதற்குள் வீட்டை கண்டுபிடித்து வந்து நிற்குறீங்க?" என்று (1970) தொடங்குகின்றது. அமுதவன் ஒரு வாசகனாகச் சுஜாதாவை சந்திக்கச் சென்றாலும் அப்போது இவரும் ஒரு எழுத்தாளர் தான். 

இவருடைய படைப்புகளும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரின் நட்பு என்பது வாசகன், எழுத்தாளர் என்பதைத் தாண்டி பலதரப்பட்ட நிகழ்வுகளில் பயணிக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பலதரப்பட்ட சம்பவங்கள். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் சுஜாதாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவரின் வெள்ளை மனதை அழகாக வெளிப்படுத்துகின்றது. 

ஏறக்குறைய சுஜாதா இறந்த 28.2.2008 வரைக்கும். இது போன்ற நட்பு, பரஸ்பரம் அக்கறை என்பது அமுதவன் போல எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இதுவும் ஒரு கொடுப்பினை. அல்லது அமுதவனின் அடிப்படை குணாதிசியங்கள். 

பிரபல்யங்களோடு பழகுவது என்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். சிறிது விலகினாலும் பிரச்சனை தான். ஆனால் இன்று வரையிலும் அமுதவன் அந்தக் கலையில் மிக்கத் தேர்ச்சியுடையவராக இருக்கின்றார். முக்கியக் காரணம் இவர் நெருக்கமாகப் பழகிய அத்தனை பேர்களும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நெருக்கமான நட்பு என்பது இரண்டு பக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே உருவாகும் விளைவு.

வலைபதிவுகளில் 'பிரபல' என்ற வார்த்தையும் 'தோழர்' என்ற வார்த்தையும் ரூபாய்க்கு இத்தனை என்கிற ரீதியில் சர்வசாதாரணமாகப் புழங்கும் வார்த்தை. ஆனால் இந்தப் புத்தகத்தில் அமுதவனின் நட்பு என்பது வெறுமனே சுஜாதாவுடன் மட்டுமல்ல. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல்யங்கள் அத்தனை பேர்களுடனும் இப்படித்தான் இருந்ததுள்ளது. 

எந்த அத்தியாயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், சந்தித்த நிகழ்வுகளை மட்டும் விவரித்து விட்டுச் சர்வசாதாரணமாகக் கடந்து சென்று கொண்டேயிருக்கின்றார். படிக்கின்றவர்களுக்கு மூச்சு முட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைத் தீயை மூட்டும். 

இன்று ஒரு பிரபல்யத்துடன் சந்திப்பு நடந்து விட்டால் அவருடன் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டுக் கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் இளையர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் போலத் திகழ்ந்த சுஜாதாவின் குழந்தைத்தனத்தையும், சுஜாதா போலப் பல ஸ்டார்களுடன் பழகிய அமுதவனின் "இதுவும் கடந்து போகும்" என்ற இயல்பான மனோ நிலையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஒவ்வொரு பக்கத்திலும் இவர் சொல்லிக் கொண்டு வரும் பிரபல்யங்களைப் பற்றியும். இவர் நாகரிகம் கருதி நைஸாக நழுவி கொண்டே சென்ற வார்த்தைகளின் ஊடாகப் பலவற்றையும் என்னால் நன்றாக யூகித்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் நாகரித்தை மையில் தோய்த்து எழுதியுள்ளார். பலவற்றை வாசிப்பவனை யூகிக்க வைத்து விடுகின்றார். 

இளையராசா, பாரதிராஜா என்று திரைப்படப் பிரபல்யங்கள் தொடங்கிச் சாவி முதல் சிவக்குமார் வரைக்கும் ஒவ்வொரு பெரிய ஆளுமைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் வந்து போனாலும் தான் சொல்ல வந்த சுஜாதா குறித்த தகவல்களுக்குப் பஞ்சமில்லை. 

இதில் குறிப்பிட்டுள்ள சுஜாதா வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட கால் வாசி தகவல்களை அவ்வப்போது நான் பத்திரிக்கையில் படித்து வந்திருந்த போதிலும், நான் கேள்விப்பட்டிராத அவரின் அப்பாவி முகத்தை, நேர்மையான மனிதரின் ஏமாளித்தனத்தைச் சரியான வார்த்தைகளில் சமயம் பார்த்துச் சொல்லியிருக்கின்றார். 

எனக்குத் தெரிந்தவரையிலும் எழுத்தாளர் சுஜாதா கடவுள் குறித்த கொள்கையில் தொடக்கத்தில் மிகப் பெரிய ஆர்வமே அக்கறையின்று தான் இருந்தார். அதைப்போலவே சாதி குறித்த எண்ணமும் அவருக்கு பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் தன்னுடைய கடைசிக் காலத்தில் இரண்டும் குறித்து விரும்பியோ அல்லது நிர்ப்பந்தம் அடிப்படையில் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டிருந்தார். சுஜாதா தன் வாழ்நாளின் கடைசிச் சில வருடங்கள் தன் உடலோடு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியவர். 

நேர்மை என்பதைத் தன் உயிர்மூச்சாகக் கருதியவர் சுஜாதா என்பதனை தன் மகனுக்குத் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் கிடைக்கவிருந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டு மற்றொரு பையனுக்குக் கொடுத்த அவரின் தைரியத்தையும், அவர் மனைவி புலம்பிய புலம்பலையும் வாசித்த போது மற்றொரு 'கர்மவீரர்' போலத்தான் சுஜாதா தெரிகின்றார். 

கர்வம், அகம்பாவம் என்ற வார்த்தைகள் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களிடம் அதிகம் பார்க்கலாம். தன்னைச் சந்திக்க வருபவனைத் துச்சமாக மதிப்பது என்று தொடங்கி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை? என்று வாழ்த்துவது வரைக்கும். ஆனால் சுஜாதா தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தைத் தன் உழைப்பின் மூலமே அடைந்துள்ளார். 

ஏணிப்படிகள் தேவையில்லாது தன்னையே பிறருக்கு ஏணிப்படியாகவே மாற்றிக் கொண்டவர். இதுவே மற்றவர்கள் பார்வையில் ஏமாளியாகத் தெரிந்தது ஆச்சரியமல்ல. தன்னைக்குறித்து எந்தக் கர்வமின்றி, தான் கற்றதை, தெரிந்து வைத்துள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக இருக்கட்டும், தொடக்க நிலையில் எழுதுபவர்கள் எப்படித் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும் இனி சுஜாதா போல ஒருவரை தமிழ் எழுத்துலகம் காண்பது அரிது. 

இவரால் அடையாளம் காணப்பட்டவர்களும், வளர்ந்தவர்களும், உயர்ந்தவர்களும் இன்று வரையிலும் பண ரீதியான உறவில் மட்டுமே சுஜாதாவை பார்த்துத் தங்களை வளர்த்துக் கொண்டே போதிலும் பரவாயில்லைப்பா...... என்று கடந்து போக எத்தனை பேர்களால் முடியும்? 

ஆனால் அவரை வைத்து வளர்ந்தவர்கள் எவரும் செய்யாத சாதனையை அமுதவன் மட்டுமே தன்னை நேசித்த ஒரு நல்ல ஆத்மாவின் உண்மையான பண்புகளை, குணாதிசியங்களை, வெளியே தெரியாத பல சம்பவங்களை அவர் வாழ்ககை நிகழ்வுகளை வைத்து அடையாளப்படுத்தி எழுதியுள்ளார்.  

சுஜாதாவின் நெருக்கடியான பயண வேகத்தில் அமுதவன் திருமணத்தில் (1982) வந்து கலந்து கொண்ட விதத்தின் மூலம் இருவருக்கும் உண்டான ஆழ்ந்த நட்பைச் சொல்லுகின்றது. அமுதவனின் மனைவியிடம் "நீங்க அமுதவன் எழுத்தை வாசித்துள்ளீர்களா?" என்று சுஜாதா கேட்ட போது அவர் மையமாகப் புன்னகைத்த போது "அப்பாடா எதிரெதிர் துருவம். நிச்சயம் நல்ல ஜோடி. வாழ்த்துகள்" என்று வெளிப்படையாக மணமேடையில் அவர்களை வாழ்த்தியதில் தொங்கிய சுஜாதாவின் ஒவ்வொரு நிகழ்வும் அமுதவனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. 

அதே போலக் கடைசி வரைக்கும் சுஜாதா அமுதவன் மேல் கொண்டுள்ள மரியாதை என்பது "கணையாழியில் என்னுடன் பழகிய அததனை பேர்களைப் பற்றியும் எழுதி விட்டேன். அமுதவன் பற்றி மட்டும் இன்னும் எழுதவில்லை. அடுத்த வாரம் எழுதி விடுவேன் என்று அவரிடம் சொல்லிடுங்கோ" என்று தன்னைச் சந்திக்க வந்த நண்பரிடம் சொன்ன போது சுஜாதாவின் உடல் நிலைமை என்பது மிகச் சிக்கலான காலகட்டத்தில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவர் நட்பை எந்த அளவுக்கு மதித்துள்ளார் என்பதையும் மனித உறவுகளுக்கு எப்பேற்பட்ட மரியாதை கொடுத்துள்ளார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

இன்றைய பிரபல பாடகர் ஹரிகரன் திரைப்படத்திற்கு வர முக்கியக் காரணங்களில் ஒன்று அமுதவன், கமலஹாசன் சுஜாதாவை சந்திக்கப் பயன்படுத்திக் கொண்டவர் அமுதவன் என்பது போன்ற பல எண்ணற்ற ஆச்சரியமான தகவல்களைப் படிக்கும் போது நான் என்ற அகங்காரம் எந்த இடத்திலும் இல்லாமல் நழுவி கொண்டே செல்லும் வார்த்தைகளில் பலவற்றை நாசூக்காகக் குறிப்பிட்டுக் கொண்டே செல்கின்றார். 

வலைபதிவுகள், முகநூல் மூலம் அங்கீகாரம் தேடும் இளையர் கூட்டமும், ஓட்டு, லைக் காய்ச்சலில் அலையும் நண்பர்களுக்கும் இதில் ஒரு செய்தி உண்டு. 

குமுதம் சிறப்பாசிரியராக நடிகர் சிவகுமார் இருந்த போது சுஜாதவை ஒரு பேட்டி எடுத்தார். அந்த வரிகள் ஒன்றே போதும். நாம் சுஜாதாவை புரிந்து கொள்ள. 

"கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?" என்று கேட்ட போது சுஜாதா சொன்ன பதில் 

"இன்று கூட அந்த ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம். அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்"

தமிழ் எழுத்துலகில் காலத்தை வென்றவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. வாசிப்பவனை வெளியே துரத்தாமல் வாஞ்சையோடு அனைத்துக் கொண்டு தொடர்ந்து வாசிக்க வைப்பனே. 

அந்த வகையில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் சுஜாதா எழுத்துலகில் மார்கெட் இழக்காத கதாநாயகன் போலத்தான் இருப்பார். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது இரண்டு விசயங்கள் மனதில் தோன்றியது. 

சுஜாதா போல வேறொருவர் வாழ்ந்து விட முடியுமா என்று? அதைப் போல அமுதவன் போலத் தான் பழகிய பிரபல்யங்களை வைத்து தனக்கென்று எதையும் ஆதாய நோக்கில் எதையும் அடையவிரும்பாமல் தன்னடக்கத்தோடு இயல்பாக வாழ முடியுமா? என்று யோசிக்க வைத்து விட்டார். தான் கற்றதையும் பெற்றதையும் சொல்லியுள்ள அமுதவன் இதே போல மற்றொரு பாகம் எழுத முடியும். 

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இவர் எதையெல்லாம் தவிர்த்து நகர்ந்துள்ளார் (அல்லது) வெளியிட்டுள்ள நிறுவனம் எதையெல்லாம் தவிர்த்துள்ளது என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். 

அமுதவன் இதில் நாகரிகம் கருதி சொல்லாத விசயங்கள் ஏராளமாக உண்டு. இன்று வரையிலும் இவரின் மென்மையான எழுத்து நடைக்கே இணையத்தில் ஏராளமான எதிரிகள் உண்டென்பதே ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக இளையராஜா குறித்து இவர் வைக்கும் விமர்சனங்கள் என்பது பலருக்கும் தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக இருக்கின்றது. இன்று வரையிலும் இவர் தளத்தில் இளையராஜாவை விமர்சிக்க நீ யார்? என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் குஞ்சாமாமா மணி ரசிகப்பட்டாளங்கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆனாலும் தலைவர் அசருவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாகரிக பாணியில் ராஜபாட்டை நடை போட்டுக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றார். 

நமக்குள் அகங்காரமும் ஆணவமும் தலைதூக்கும் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்தால் உங்களின் சப்தநாடியும் அடங்கிப் பிரபல்யம் என்பது 'கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு' என்பதை நம்மால் உணர முடியும். 

இதைதான் சுஜாதா என்ற ஆளுமையின் மூலம் அமுதவன் என்றொரு தன்னடக்க மனிதர் ஒவ்வொரு வரியிலும் உணர்த்தியுள்ளார்.


தொடர்புடைய பதிவுகள்

வல்லமை விமர்சனம்- டாலர் நகரம்

வாசிக்க பகிர

(இலவச) மின் நூல் தரவிறக்கம் செய்ய

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்

( ஈழம் பற்றி அடிப்படை வரலாறு, அரசியல் வரலாற்றை தெரிந்து கொள்ள)

வெள்ளை அடிமைகள் 

( தமிழர்கள் வலியோடு புலம் பெயர்ந்த கதையைச் சொல்லும்)

Tuesday, February 11, 2014

வல்லமை விமர்சனம்

மதிப்பு​ரை – ரஞ்சனி நாராயணன்

(மூன்றாவது பரிசு வாங்கிய விமர்சனம். அது குறித்து அடுத்த பதிவில்)

டாலர் நகரம்

எழுதியவர்: ஜோதிஜி

பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

விலை: ரூ. 190

பக்கங்கள் : 247

வெளியான ஆண்டு: 2013

Dollar Nagaram

ஆசிரியர் குறிப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள் சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

புத்தகம்: டாலர் நகரம்

டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். 

ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?



மின் நூல்


Monday, August 19, 2013

விகடன் விமர்சனம்




கடந்த 24.07.2013 அன்று ஜுனியர் விகடனில் ஜு.வி. நூலகம் பகுதியில் வெளிவந்த டாலர் நகரம் புத்தகம் குறித்த விமர்சனம் இது.

வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம் இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. `"திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்" என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள்.  

ஆனால் இன்று அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன் தன்னுடைய அனுபவங்களின் மூலமாக திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார்.

"வேலையிருந்தா போட்டுக் கொடுங்கண்ணே...." எனக் கேட்டபடி சட்டென என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.  செய்து கொண்டிருந்த வேலை மீதான கவனம் சிதறியது. அனுமதி பெறாமல் கண்ணாடிக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல் உடைப்பது போல திறந்து உள்ளே வந்து நின்ற அவனுக்கு வயது அதிகபட்சம் 14 இருக்கலாம். செம்பட்டைத் தலையுடனும் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்தி நிறுத்தியிருந்த அழுக்கான சட்டையுடனும் நின்றான்". என்று இவர் வர்ணிக்கும் காட்சி  திருப்பூரில் நித்தமும் நடப்பது.  

இத்தகைய சின்னஞ்சிறுவர்கள்  எப்படியெல்லாம உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

"திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்" என்கிறார்.  

வறுமை அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது.

பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார்.  இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு இந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்து விடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை மனதை ரணம் ஆக்குகிறது.

மின்வெட்டு, சாய்ப்பட்டறைகள், மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீப காலமாக பெரும் சரிவை அடைந்தது.  திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர்.  வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர்.  

வெள்ளி சனி ஆகிய இரடு நாட்களும் சம்பளநாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும்.இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. 

புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர் 

தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த புத்தகம் இருக்கிறது.





Tuesday, June 25, 2013

புதிய வரவுகள்

இன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களிலும் இனி ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் அரசாங்க பள்ளிக்கூடங்களை நடத்த முடியும் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில்,

இன்றைய பதிப்பகங்கள் கட்டுரை இலக்கியங்கள் என்பதை ஆதரிக்க முடியாத பட்டியலில் சேர்ந்து விட்ட போதிலும் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் மிக தைரியமாக தமிழ் மொழி குறித்த ஆவணத்தின் மொத்த தொகுப்பாக இந்த இரண்டு நூலையும் கொண்டு வந்துள்ளார்.. 

இந்த கட்டுரைகளுக்கு என் பாராட்டுரைகள்.
.
பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இளங்கோவன் அவர்களின் கட்டுரை களஞ்சியம் மற்றும் செவ்விலக்கிய சிந்தனைப் புதையல் என்ற இரண்டு நூல் வெளி வந்துள்ளது.

இன்றைய நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பது "ஓட்டத்தை நிறுத்தாதே. பின்னால் வருபவர்கள் முந்தி விடுவார்கள்".  

இதுவே தான் காலப்போக்கில் வாழ்க்கைக்காக "காசு என்பது மாறி காசுக்காகவே வாழ்க்கை" என்று நம்மை பணம் துரத்திப் பறவைகளாக மாற்றி விடுகின்றது.  ஆனால் இந்த புத்தகங்களை படிக்கும் போது நாம் எத்தனை விசயங்களை இழந்துருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

இன்று தமிழ் மொழி அறிவியலோடு போட்டி போட முடியாது.  ஆங்கிலம் மூலமே அறிவியலைக் கற்றுக் கொள்ள முடியும் என்று மனதில் வைத்திருக்கும் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் இந்த புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் இருப்பதை அழித்து விட்டு நாம் எங்கங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றது. 

இன்று நினைத்த நேரத்தில் வலைபதிவில் உறவாடும் உறவுக் கூட்டத்திற்கு இந்த தமிழ் எழுத்துரு உருவான கதைகள்,யூனிக்கோடு என்பதை எங்கே அங்கீகரிக்கின்றார்கள்,வெளியே தெரியாத அதன் நடைமுறைகள் என்ன? எப்படி உருவாக்கினார்கள்? தமிழ் யூனிகோடு உருவாக்கப்பட்டதற்கும், இந்த முயற்சிகளை உருக்குலைக்க காரணமாக இருந்தவர்கள் போன்ற பலவித தகவல்களையும் அழகாக விவரித்துள்ளார்.  

நம்முடைய முந்தைய தமிழ்பரம்பரைகளைப் பற்றி எவரும் நினைப்பதே தவறு என்பதை விட அது எதற்கு தேவையில்லாமல்? என்கிற சூழ்நிலையில் இன்றைய கல்விச்சூழல் நம்மை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. தமிழ்மொழிக்கு பாடுபட்டவன் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதை கொத்துக்கறியாக்கி குற்றுயிரும் குலையுறுமாக மாற்றி இன்னமும் பலர் தங்கள் மாரை அவர்களே தட்டிக் கொண்டுருக்கின்றார்கள்.  

ஆனால் உருப்படியான கல்விச்சூழல் என்பது எப்படி உள்ளது என்பதை தான் அமெரிக்காவில் இளங்கோவன் பார்த்த ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வாயிலாக, அங்குள்ள அறிவுப்போட்டிகளை அழகாக பதிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் தெலுங்கிசையே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சூழ்நிலையை 1967க்குப் பிறகு ஆட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் எப்படி செயல்பட்டார்கள்.  அதுவே தற்போதைய காலகட்டத்தில் எப்படி மாறிவிட்டது போன்ற நிகழ்கால உண்மைகளை நமக்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.  

தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்ற எவருமே அதன் வளர்ச்சி குறித்து, வளர வேண்டிய அவசியம் குறித்தே கருத்தில் கொள்ளாமல் கண்ட கருத்துக்களையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று மொழிக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் விரயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நிகழ் கால ஆடம்பர வாயிற் தோரணங்கள் மூலம் உதாரணம் காட்டி விளக்குகின்றார். 

இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ்மொழிக்காக கட்டும் நினைவு இல்லங்கள் ஒவ்வொன்றுமே தமிழ்மொழிக்கு கட்டப்படும் சமாதி என்பதாகத்தான் இருக்கின்றது என்பதை தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நடக்கும் அதிகார போட்டிகளை சுட்டிக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு நிதி ஆண்டும் மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் மொழி வளர்ச்சிக்கென குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றது.  ஒவ்வொரு மாநில அரசும் தனது நிர்வாகத்தில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரைக்கும் கல்வி வரி என்று மூன்று சதவிகிதம் வசூலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணமெல்லாம் ஒவ்வொரு ஆட்சியிலும் மாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. 

ஆனால் இன்று தமிழ்மொழியை வளர்க்கின்றோம் என்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்து முதல் அதன் மூலம் எப்படி காசு பார்க்கலாம் என்கிற கும்பல் வரைக்கும் அதன் ரூபங்களை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற 90 சதவிகித ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் அரசு பள்ளியில் பணிபுரிந்தவர்களே.  ஆங்கிலவழிக்கல்விக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமை அந்த அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டு அரசு இதனைக்கூட பெருமையாக வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்பாத நிலையில் தான் இருக்கின்றது. ஒரு வேளை மக்களின் பெரும்பான்மையான விருப்பமே மகேசனின் விருப்பமாக இருக்கக்கூடுமோ?

பூம்புகார் அகழ்வராய்ச்சி என்பது ஒரு பெரிய பூதம் போன்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆனால் இங்கு செய்யப்பட்ட எந்த ஆராய்ச்சிகளும் வெளிவருவதில்லை என்பதோடு இது சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் மேலே இருப்பவர்கள் ஊக்குவிப்பதில்லை.  

இது சார்ந்த பெரும்பாலான கொள்கைரீதியான முடிவுகள் இன்னமும் மத்திய அரசாங்கத்திடமே இருப்பதால் இது போன்ற விபரங்கள் குறித்து தெரிந்தவர்களும் குறைவு.  தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் இல்லை என்கிற ரீதியில் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சித் துறை இறுதி கட்ட மூச்சில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 

மக்களும் பிழைத்தே ஆக வேண்டிய அவசியத்தில் பிழைப்பு வாதியாக மாறிப் போய்விட்டதால் சரித்திரச் சான்றுகள் என்பது ஆதரவற்று அழிந்து கொண்டேயிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தங்கள் தாய் மொழி குறித்த சிந்தனைகளும் மாறிக் கொண்டே வருகின்றது.. 

நடுத்தரவர்க்கத்திற்கு இன்று உடனடித் தேவை ஒரு வேலை.  அந்த வேலையின் மூலம் கிடைக்கப் போகும் வருமானம்.  

அதற்கு இப்போதைய சூழ்நிலையில் ஆங்கிலம் தான் உதவுவதாக இங்கே நம்பவைக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரங்களை எவரும் நம்பத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.

வருடந்தோறும் பத்துலட்சம் பேர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து வெளியே வருபவர்களில் எத்தனை பேர்களால் போட்டியில் ஜெயித்து தங்களை தகுதியான பதவியில் நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது என்பது குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்ளவதில்லை.  விரும்பும் ஆங்கிலத்தில் படித்து வருபவனுக்கு ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேச முடிவதில்லை. கற்றுக் கொடுப்பவனுக்கும், கற்றுக் கொள்பவனுக்கு இந்த ஆங்கிலம் இன்றும் சவாலாக இருப்பதால் மணற் கொள்ளையரை, சாராய வியாபாரிகளை, கடத்தல் பேர்வழிகளை இன்று கல்வித் தந்தையாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை பேர்கள் பத்தாவது முடித்து பனிரெண்டாம் வகுப்பு சென்றார்கள். அதில் எத்தனை பேர்கள் கல்லூரி சென்றார்கள் போன்ற எந்த கணக்கு வழக்கும் இங்கே இல்லை.  இறுதியாக எத்தனை பேர்கள் சரியான வேலைக்குச் சென்றார்கள்?

கல்வி மட்டுமல்ல. நம் நாட்டில் எந்த துறை சார்ந்தும் உருப்படியான கணக்கு வழக்கு என்பதே இல்லை. ஒரு வேளை நீங்கள் கேட்டால் கொடுப்பார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்பது சந்தேகமே.

பிழைக்கவே கல்வி என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் கடைசியில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளாமல், கற்று வைத்திருந்த தமிழும் மறந்து அறைகுறையாகிப் போனவர்களால் இன்று தமிழ்நாடு அறிவாளியாக மாறிக் கொண்டேயிருக்கிறது. .  

தாய்மொழி குறித்த அக்கறையில்லாதவர்கள் ஆட்சியாளர்களாக வர, தினசரி வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் நாள்பட இந்த மொழி குறித்த எண்ணம் மாறிக் கொண்டேயிருக்க அழியப்போகும் மொழிப்பட்டியலில் இந்த தமிழும் வந்து விடுமோ என்கிற நிலையில் இளங்கோவன் எழுதியுள்ள இந்த நூல்கள் தமிழுக்கு வந்துள்ள பொக்கிஷத்தில்  ஒன்று.

இன்று தமிழ் இலக்கியம் படித்தால் இன்று விற்கின்ற விலையில் ஒரு இட்லி கூட வாங்கி சாப்பிட வருமானம் கிடைக்காது என்று ஆசிரியர்களே தங்களுடைய மாணவர்களுக்கு சொல்லும் அளவுக்கு நம் மொழியை நாமே பெருமையாய் பார்க்கின்றோம்.  

ஆனால் தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தானே காத்துக் கொண்டு ஒரு சில அறிஞர்களின் துணை கொண்டு இத்தனை ஆண்டு காலம் இன்னமும் பேச்சு மொழி, எழுத்து மொழியாக இருப்பதே மகத்தான சாதனை தான் என்பதை தான் முனைவர் மு இளங்கோவன் போன்றவர்களின் தளராத முயற்சி நமக்கு உணர்த்துகின்றது. 

ஆசிரியர் தொடர்பு எண்  94420 29 053

ஆசிரியர் மின் அஞ்சல் முகவரி muelangovan@gmail.com

நூலாசிரியரின் பிற நூல்கள்

1. பாரதிதாசன் பரம்பரை
2. வாய்மொழி இலக்கியம்
3.நாட்டுப்புறவியல்
4. இணையம் கற்போம்
5. மணல்மேட்டு மழலைகள்
6. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
7. பழையன புகுதலும்...........
8. அரங்கேறும் சிலம்புகள்
9. பொன்னி ஆசிரிய உரைகள்
10. பொன்னி பாரதிதாசன் பரம்பரை
11. இலக்கியம் அன்றும் இன்றும்
12. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துறையனார் அவர்கள்.
13. மாணவராற்றுப்படை
14. அச்சக ஆற்றுப்படை
15. பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு