Sunday, March 21, 2021

தமிழக அரசியல் "சுயநல அரசியல்" என்பதாக எப்போது மாறியது?

தமிழக அரசியல் "சுயநல அரசியல்" என்பதாக எப்போது மாறியது? யாரால் மாற்றப்பட்டது?

தமிழகத்தில் 1970-ஆம் ஆண்டுகளில் அரசியலிலும், கட்சி அமைப்பிலும் முதன்மை சக்தியாகத் திமுக திகழ்ந்தது. தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் திமுக 184 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்தது. திமுகவிற்கு அதிக செல்வாக்கு பலத்தை ஏற்படுத்தியது. ஆட்சி அதிகார பலம் மட்டுமல்ல, வலுவான அமைப்புப் பலத்தையும் திமுக  கொண்டிருந்தது. 




18000 கிளைக் கழகங்கள், 135 வட்டங்கள், 14 மாவட்ட அமைப்புகள் என மேலிருந்து கீழ் வரை இயங்குகிற அமைப்பாக திமுக செயல்பட்டது.

திமுகவின் அன்றைய அமைப்பு ரீதியான கட்டமைப்பு, அக்கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் தனி நபர்களின் ஆதிக்கம் ஒவ்வொரு இடத்திலும் உருவாகத் தொடங்கியது.

ஆனால் அண்ணா உருவாக்கியிருந்த ஜனநாயக அமைப்பைக் கருணாநிதி தன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற அமைப்பாக மாற்றி வெற்றியடைந்தார். 

மேலிருந்து கீழ் வரைக்கும் தனி நபர் ஆதிக்கமே இருந்தது. எவரும் கேள்வி கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் படைத்தவராகக் கருணாநிதி உருவெடுத்தார்.

கட்சிக்குள் அனைத்து அதிகாரமுடைய படைத் தலைவராகக் கருணாநிதி இருந்ததால் அவருக்கு விசுவாசமாகச் செயல்படக்கூடிய தலைவர்கள் பட்டாளம் ஓர் அணியாகக் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் செயல்பட்டது. 

மதுரை முத்து, மன்னை நாராயணசாமி, தென்னரசு, அன்பில் தர்மலிங்கம் போன்ற தலைவர்கள் மதுரை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களில் கருணாநிதியின் பேச்சை நம்பி செயல்பட்டனர். அண்ணா உருவாக்கிய கொள்கை மாறத் தொடங்கியது. 

இது படிப்படியாகக் கருணாநிதிக்கு விசுவாசமாகச் செயல்படக்கூடியவர்கள் மட்டுமே இருக்கும் அளவிற்கு உண்டான அணி கிளைக்கழகம் வரை உருவாக்கப்பட்டது. 

கட்சியிலும், ஆட்சியிலும் இருந்த இந்த அதிகாரக் குவியல், அரசாங்கச் செயல்பாடுகளிலும் கட்சிச் செயல்பாடுகளிலும் எந்த முடிவையும் எடுக்கிற துணிவினை கருணாநிதிக்கும், அவருடைய அணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

சிஎன். அண்ணாதுரையின் கவர்ச்சி பேச்சு எந்த அளவுக்கு முதல் தலைமுறையை ஈர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகக் காரணமாக இருந்ததோ அதை விட மற்றொரு விசயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உதயசூரியன் என்ற சின்னத்தை, திமுக என்ற கட்சியைத் தமிழக கிராமங்கள், பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர்.  தன் படங்களில் பாடல்களில், காட்சிகளில் தெளிவாக எளிய (அந்தக்கால) தமிழ்ப்பிள்ளைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்கள் விரும்பிய பாணியில் பிரச்சாரத் தொனி இன்றி தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருந்தார். அண்ணா இதனைப் பலமுறை பல இடங்களில் பொதுவிடங்களில் குறிப்பிடத் தயங்கியதே இல்லை. காரணம் அண்ணா ஜனநாயகம் இருந்தால் தான் கட்சி மேலிருந்து கீழே வரைக்கும் செழித்துத் தழைத்தோங்கும் என்று நம்பினார்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எம்.ஜி.ஆரை நீக்கும் முடிவைக் கட்சியின் செயற்குழு எடுத்தது. அதன் பிறகு கூடிய கட்சியின் பொதுக்குழு அந்த முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. 

ஆனால் இங்கு குறிப்பிட வேண்டிய விசயம் என்னவெனில் எம்ஜிஆர் நீக்கப்படுகின்றார் என்ற செய்தி பத்திரிக்கை அலுவலகங்களில் அச்சு கோர்த்து தயாராக இருந்தது.

இந்த பொதுக்குவில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாளர்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு அன்று எழுந்தது. ஆனால், பின்னாட்களில் எம்.ஜி.ஆரோடு கைகோர்த்த பலரும் அந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரை நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். 

மொத்தம் 310 உறுப்பினர்களில் 277 பேர் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். கட்சியும் ஆட்சியும் கருணாநிதியிடம் இருக்கும் நிலையில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ? அங்குதான் இருக்கவேண்டும் என்ற சுயநல எண்ணத்தை உருவாக்கியதன் பலன் இங்கிருந்தே தொடங்கியது.

அரசியல் என்பது தனி மனிதர்களின் ஆதிக்கம். கொள்கை இரண்டாம் பட்சம் என்பதாகத் தமிழக அரசியல் மாறத் தொடங்கியதன் தொடக்கப் புள்ளி இதுவே.

வணிக சிந்தனை - பயமா? பாவமா?

கொள்ளையடிப்பதற்காகவே அரசியல் என்ற புதிய அத்தியாயம் இங்கிருந்து தான் உருவானது.

அடிக்கப்பட்ட கொள்ளை குறித்து எம்ஜிஆர் கேள்வி கேட்கக் கேலி செய்யப்பட்ட எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் திமுக என்ற கட்சியே கலகலத்துப் போனது.

இன்று வரையிலும்........