Thursday, March 18, 2021

நான் ஏன் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கின்றேன்?

தினமும் நான்கு பேர்களாவது இந்தக் கேள்வியை ஏதோவொரு வழியில் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்? ஏன் Face Book பூட்டி வைத்துள்ளீர்கள்? ஏன் பகிர்தலுக்கான வாய்ப்புகளை வழங்காமல் இருக்கின்றீர்கள்?



புத்தக வாசிப்பு என்பது உங்கள் நியூரான்களோடு தொடர்புடையது. இணைய வாசிப்பு என்பது உங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையது. வாசித்தவுடன் கொந்தளிக்க வைக்கும். யோசிக்க வைக்காது. கோபப்பட வைக்கும். தீர்க்கமாக ஆராயத் தோன்றாது. எழுதியவரை எப்படி அசிங்கப்படுத்தலாம் என்ற எண்ணத்தை உருவாக்க வைக்கும்? அந்த சமயத்தில் இவர் எழுதியது தவறு என்று நாம் நிரூபிக்க வேண்டும் என்று ஆராயத் தோன்றாது. காரணம் நம் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதையே சரியென்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். 

இவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் திட்டமிட்டு உருவாக்கிய புனைவுகளை, பொய்க்கதைகளை, கொள்கைகளை, சித்தாந்தங்களை நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

எல்லோரும் நம்புவதை நாமும் நம்புவது எளிது. அது கூட்டத்தில் ஒருவராக ஒன்று சேர்ந்து அவர்களுடன் பயணிக்க உதவும். ஆனால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கும். குறிப்பிட்ட மனிதர்களின் வாழ்க்கை வசதிகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கும்.

ஏன் இப்படி? என்று யோசிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து இதே போல மாய்மாலங்களை உருவாக்கி உருவாக்கி உங்களை உருக்குலைத்து உங்கள் தலைமுறைகளைக் கையேந்த வைக்கும் சிந்தனைகள் சரியென்று நம்புவதற்கு உங்களுக்கென்று ஆயிரம் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். எனக்கு அது தேவையில்லை?

போராட்டங்கள் என்பது புதிதல்ல. ஆனால் புத்திசாலிகளுடன், திறமைசாலிகளுடன் போராடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.

பன்றிகளுக்குப் பஞ்ச தந்திரக்கதைகளைச் சொன்னாலும் புரியாது. பக்கத்தில் அமர வைத்து மரியாதை கொடுத்தாலும் ஏற்காது. அதன் வாழ்விடம், அதன் உணவு, அதன் நோக்கம் எல்லாமே வேறு. நாம் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ? அதனைப் போன்ற மிருகங்கள் நம்மிடம் அண்ட விடாமல் இருப்பது தான் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதத்தைத் தரும்.

இவர்கள் வந்தால் தான் மட்டுமே இங்கே நல்லது நடக்கும் என்ற உங்கள் நம்பிக்கைக்கு என் வாழ்த்துகள். ஆனால் இந்தியா என்பது வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தொடங்கி கன்யாகுமரி வரைக்கும் அமைதி நிலவினால் மட்டுமே காரைக்குடியில் வாழ்பவர்களின் பொருளாதார வாழ்க்கையும் மேம்படும் என்பது மாறிய உலகளாவிய பொருளாதாரச் சமூக மாற்றங்கள் நமக்கு உணர்த்துவதை நீங்கள் உணராமல் போனால் அது என் தவறல்ல.

காமராஜரும், பக்தவச்சலமும் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பார்த்தனர். அது இறுதியில் அவர்களுக்குத் தோல்வியைத்தான் தந்தது. அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணா தொடங்கிய தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவைப் பார்க்கிறேன் என்ற புதிய தத்துவம் மலர்ச்சியை உருவாக்கியது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்குத் தனி நபர்களின் முக பிம்பங்கள் தான் தமிழக அரசியல் என்ற அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தையும் இங்கே கொண்டு வந்து சேர்த்தது என்பதனை உணர்ந்து கொண்டால் உண்மையான  தமிழக அரசியல் புரியும்.

எங்களைத் தவிர வேறெந்த புதிய மாற்றமும் இங்கு வந்து விடக்கூடாது என்பதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சி புரியும். 

போட்டி போடவே ஆட்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு சொல்லப்படும் அனைத்து விசயங்களையும் நீங்கள் நான் எழுதிய தமிழக அரசியல் வரலாறு படித்தால் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. நான் என்னளவில் அறிந்து தெளிந்தவன். புரிந்ததை தொடர்ந்து பதிவு செய்யவே விரும்புகிறேன். செய்வேன்.

தொழில் வளத்தை உருவாக்கினோம் என்பவர்களின் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள பாதிக்குப் பாதி - மீதி உனக்கு என்ற உயரிய தத்துவத்தை உணர்ந்தவர்களும், என் முகத்தைக் குப்பைத் தொட்டி வரைக்கும் அச்சடித்து அதைப் பற்றி மட்டும் நீ யோசிக்கக் கற்றுக் கொள் என்பது போன்ற புதிய அசிங்க கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் தந்த பாதை தான் சரி தான் என்பவர்களுடன் உரையாட எனக்கு நேரமில்லை.

மதவாதம் தவறு என்பவர்கள் ஏன் சாதீய வாதத்தை விடாமல் வைத்து இன்னமும் அரசியல் செய்கின்றார்கள் என்ற கேள்வியை எப்போதும் நான் கேட்க மாட்டேன்.  பாஜக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் நடந்த மதவாத கலவரங்களையும், மதசார்பின்மையை போதித்த காங்கிரஸ் ஆண்ட போது நடந்த மதகலவரத்தையும் பட்டியலிட்டு பக்கவாட்டில் வைத்து தூக்கம் வராத போது படித்துப் பாருங்கள். 

ஏன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் "எழுபது வருட இந்தியாவில் பாகிஸ்தானை பயமுறுத்தக்கூடிய இப்படியொரு அரசு அமைந்ததே இல்லை" என்று அலறும் சூழல் ஏன் உருவானது என்பதனை யோசித்துப் பாருங்கள். 

ஏன் முஸ்லீம்களை பயமுறுத்தும் பாஜக அரசு இஸ்லாமிய நாடுகள் கொண்டாடும் அளவிற்கு, மரியாதை வழங்கும் நிலைக்கு உள்ளார்கள் என்பதனை யோசித்துப் பார்க்கலாம். 

எதிரி, ஆதரிக்க மறுப்பவர், தொந்தரவு செய்ய நினைப்பவர் என்று நாடு வித்தியாசம் பார்க்காமல் குறைந்த விலையில், விலையில்லாமல் கொரோனா தடுப்பூசி மருந்தை உலகம் எங்கும் ஏன் இந்தியா அனுப்பிக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் யோசித்துப் பார்க்கலாம்.

மதிப்பு மிகுந்தவர்கள், என் வாழ்க்கையில் என்று நினைவில் இருக்கக்கூடியவர்கள், என் எழுத்தை விரும்பி வாசிக்கக்கூடியவர்கள் அனைவருக்கும் வைக்கும் ஒரே கோரிக்கை.

உரையாடுங்கள். விமர்சியுங்கள். தர்க்கம் செய்யுங்கள். விவாதமாக மாற்றுங்கள். கற்றுக் கொடுங்கள். தயாராக இருக்கின்றேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு.

என் இலக்கு என் விருப்பம், என் ஆசைகள், என் கனவுகள் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

ஆனால் "நான் அரசியல் எழுதி நண்பர்களை எதிரிகளாகச் சம்பாதித்துக் கொள்ள மாட்டேன்" என்று தத்துவம் என்னிடம் இல்லை. 

நிலையான கோடீஸ்வர சூட்சும ரகசியத்தின் உண்மைக்கதை

காரணம் எதிரியாக மாற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களின் எண்ணம் எந்த நிலையிலும் மாறாத போது என் எண்ணத்தை நான் ஏன் மாற்ற வேண்டும். 

குப்பைகள் தான் உண்மை என்று நம்ப வைக்க ஒரு பெருங்கூட்டமே நாள் தோறும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நான் என்னளவில் அந்தக் குப்பையைச் சுத்தம் செய்யவே விரும்புகிறேன். விரும்புவேன்.

உங்களுக்கு அந்த வாசனை பிடித்தமாக இருக்கலாம். எனக்கு அலர்ஜியைத் தரக்கூடியது. என்னிடம் மருந்து உண்டு. திறமை உண்டு. நேரமுண்டு. நான் செயல்பட விரும்புகிறேன். செயல்படுவதை ஆதரிப்பவர்கள் என் பக்கமும் உண்டு என்பதனை நிரூபிக்கவும் முடியும்.

எதையும் ஆதாரமின்றி அள்ளிக் கொட்டுவதில்லை. அவசரப்பட்டு எழுதுவதில்லை. இவனை ஒதுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் நீ தான் என்னிடமிருந்து ஒதுங்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதனை உணர்த்துவதற்காகவே தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.

என் வானம். 

நான் விரும்பும் பயணம். 

என் சிறகுகள் அனுமதிக்கும் வரைக்கும் உயர உயரப் பறப்பேன்.

ரசிக்கலாம். வெறுக்கலாம். ஒதுங்கலாம். விலகலாம்.

ஆனாலும் எந்நாளும் என்னுள் இருக்கும் அன்பு மாறாது. இயல்பான, எதார்த்தமான, நன்றி உணர்ச்சி உடைய, அக்கறையுடன் வாழும் மனிதத் தன்மையில் இருந்து மீற மாட்டேன்.


6 comments:

Agni rama said...

difficult to converse with a closed mind person

Agni rama said...

you need to expand your horizon to understand your modi games

ஜோதிஜி said...

அரசியல் என்பதே விபரீதமான விளையாட்டு தானே? என் முகம் என் சிந்தனை என் பின்புலம் என்று எல்லாவற்றையும் திறந்து வைத்து உரையாடும் பழக்கம் உள்ளவனிடம் வந்து முகம் மறைத்து முகவரி மறைத்து மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவிக்காமல் உரையாடும் நீங்கள் மூடிய மனம் உள்ளவரா? நானா?

மாறன் said...

இதை நான் எதிர்பார்த்தே காத்திருந்தேன்

ஸ்ரீராம். said...

தெளிவாக, நிதானமாக, ஆணித்தரமாக உங்கள் நிலையை விளக்கி இருக்கிறீர்கள்.  எதிர்ப்பவர்களைப் பற்றிச் சொல்லும் பல வரிகளில் எனக்கு உடன்பாடு.

subramanian said...

மிக தெளிவான சிந்தனை. மோடியை எதிர்ப்பதால் அவர் மேலும் மேலும்
வளர்கிறார், அசாம் , மேற்கு வங்கம் , நம்முடைய புதுச்சேரி மாநிலங்களில்
ஆட்சி அமைக்க போகிறார்கள், கேரளா எப்போதுமே udf ,ldf தாண்டி
சிந்திப்பதில்லை. தமிழகம் என்ன செய்யப்போகிறது என்பது அவர்கள்
எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது .