Tuesday, August 25, 2020

வலதுசாரி தீவிரவாதம்? தி இந்து ராம் அவர்களுக்கு 3 கேள்விகள்! - மாரிதாஸ் |...

ஐரோப்பாவிலிருந்து பேசும் தமிழ் நண்பர் இவரின் அதி தீவிர ரசிகர் & பக்தர். பேசத் தொடங்கும் போது இவர் அப்போது போட்ட வீடியோ விமர்சனத்தைப் பற்றிச் சொல்லி விட்டு அதன் பிறகே மற்றதைப் பேசத் தொடங்குவார். அவர் தவறாமல் ஒன்றைச் சொல்வார். பாரம்பரிய கை வந்த கலையான 'பெண்கள் குற்றச்சாட்டு' 'பண மோசடி', 'மிரட்டிப் பார்த்தல்' "அவதூறுகள் மூலம் மடைமாற்றுதல்" என்று இன்னமும் கையில் எடுக்காமல் இருக்கின்றார்களே? உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்று என்னிடம் கேட்டதுண்டு.

கடைசியில் இவரின் சாதி வரைக்கும் நைஸாக உள்ளே கொண்டு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எறியப்பட்ட பந்து அனைத்தும் சிக்ஸராக மாற இனி என்ன செய்வது? என்று யோசித்து இப்போது அமைதியாகவே இருக்கின்றார்கள். அடுத்த நாலைந்து மாதங்களில் இறுதிக் காட்சிகள் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் நிச்சயம்.


திமுக நண்பர்கள் இவரை பிம்ப் என்கிற ரீதியில் எழுதுவதைப் பார்த்து வியந்து அவர்களின் நாகரிகத்தைப் பார்த்து ஆச்சரியப்படவே தோன்றுகின்றது. "எங்கு அடித்தால் எங்கு வலிக்கும்?" என்பதனை கற்றுத் தெளிந்து வாழ்ந்தவர் இப்போது மெரினாவில் உறங்கிக் கொண்டிருக்கிறார். 

வாரிசுகளுக்கு அந்தத் திறமையெல்லாம் வர வாய்ப்பே இல்லாத காரணத்தால் இவர் "சொல் தேவையில்லை செயல் போதும்" என்று இறங்கி அடித்துக் கொண்டிருப்பது நிகழ்கால அதிசயம். ஜெகத்ரட்சகன் பாஜகவுடன் பேச்சு வார்த்தையில் இருப்பதெல்லாம் இவர் போட்ட விதைகளில் ஒன்று. மறுக்கலாம். மறைக்கலாம். வெறுக்கலாம். ஆனால் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று செய்து கொண்டு இருந்ததை இன்று டெல்லி அறுவடை செய்யத் தயாராக இருக்கின்றது. தேர்தல் நெருங்க நெருங்க எந்தச் சித்தாந்தம் பெரிது என்று நீ சொல்கின்றாயோ? எதை நீ நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றாயோ? அதை உடைக்க முடிகின்றதோ? இல்லையோ? ஆனால் உன் பலத்தைக் குறைக்க முயல்வேன்? வெல்வதை விட வெல்லத் தயாராக இருப்பவர்களின் மன உறுதியைக் குலைப்பது விளையாட்டில் முக்கியமானது. இதுவும் அரசியல் விளையாட்டில் முக்கியமானது. இது போன்ற சமயங்களில் டெல்லிக்கு இவர் பயன்படுவார் என்றே நினைக்கிறேன்.

காரணம் இங்கே இருக்கும் "செட் பிராபர்ட்டி" ஆட்களை வைத்து எதையும் செய்ய முடியாது? செய்யவும் விரும்பவில்லை என்பதனை ஜன்டா நிச்சயம் உணர்ந்தே இருப்பார். ஆனால் 50 வருடக் கட்சியை ஒரு தொழில் நுட்பம் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? என்பதற்கு இவர் வாழும் உதாரணம்.

திருப்பூரில் ஒரு உற்பத்தி மேலாளர் மாதம் 30 நாளும் ராப்பகலாக உழைத்துப் பெறக்கூடிய சம்பளத்தை இவரின் ஒரு வீடியோ பெற்ற கணக்கைச் சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு வீடியோவும் அதே தொகையைத்தான் பெற்று இருந்தது. "ஆதவன் மறைவதில்லை" என்ற பாடல் வரி மனதில் ஓடியது. அப்போது தான் இவரின் பலமும் இவரை நம்புபவர்களின் எண்ணிக்கையும் புரிந்து கொள்ள முடிந்தது. தனிப்பட்ட முறையில் இவரின் உடல் மொழி எனக்குப் பிடிக்காது. 30 வருடங்களுக்கு மேலாக அனைத்துப் பத்திரிக்கைகள் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இவர் சொல்வது அனைத்தும் புதிய தகவல்கள் அல்ல.😁

***


தான் நம்பும் கொள்கையை எந்த அளவுக்கு துல்லியமாக கடைப் பிடிக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை யாராவது என்னிடம் கேட்டால் நான் அவர்களுக்கு உடனே பரிந்துரைப்பது இந்து என். ராம் அவர்களைத்தான். தமிழக பத்திரிக்கையுலகில் மிகச் சிறந்த திறமையாளர். பண்பாளர். எளிமையானவர். மக்கள் நலனே என் பத்திரிக்கையின் நலன் என்று எப்போதும் நம்புபவர். சில தினங்களுக்கு முன்பு மாரிதாஸ் ராம் குறித்து ஒரு வீடியோ போட்டிருந்தார். அவர் பழைய விசயங்களை மறந்து விட்டார்.

***

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மிக மிகச் சிறப்பாக தன் பணியை ஆற்றிய இந்து நாளேடு, சித்தார்த் வரதராஜன் நீக்கப்பட்ட பிறகு, மிகவும் அடக்கி வாசித்தது. ஊடக சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசும் என்.ராம், சித்தார்த் வரதராஜன் என்ற அற்புதமான ஆசிரியரிடம் இந்து நாளேடு இருக்கக் கூடாது என்று இந்து நாளேட்டை தன் குடும்பச் சொத்தாகவே பாவித்து வரதராஜனை வெளியேற்றினார். சித்தார்த் வரதராஜன் இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும், இந்து நாளேட்டை நடத்தினார். அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, துளியும் அச்சமின்றி செவிலியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை எழுதினார். 

இதன் காரணமாக, அப்போல்லோ மருத்துவமனை சார்பாக இந்துவுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த அத்தனை விளம்பரங்களும் ஒரே நாளில் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அது குறித்து எந்த அச்சமும் இன்றி, நியாயத்தை எழுதினார் சித்தார்த் வரதராஜன். மாலினி பார்த்தசாரதி ஆசிரியராக வந்து விடப்போகிறாரே என்ற ஒரே அச்சத்தினால், சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக நியமித்த என்.ராம், குடும்பத்தில் சிக்கல் தீர்ந்தவுடன், தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை ஆசிரியராக நியமித்தார்.😁





2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணே... முழு சந்திரமுகியாகவே மாற்றிடிங்க போல...

நேற்றைய பதிவில் // ஆனால், ஒருவருக்கு Press Meet என்றாலே... //

மறுமொழியாக, உங்க மத மண்டையன் ஞாபகம் வரமால், அவரின் அண்ணன் மட மண்டையன் ட்ரம்ப் ஞாபகம் வருதுன்னா... உறுதி அண்ணே உறுதி... (?)

சரி விடுங்க... விநாயகர் சதுர்த்திக்கு உங்க தல கொடுத்த 5 கிலோ கொண்டைக்கடலை வந்துடிச்சா அண்ணே...

ஜோதிஜி said...

வரலாற்றில் நல்லது கெட்டது எதுவுமில்லை. உண்மை உண்மை அல்ல என்பது தான் முக்கியம். எல்லாவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். நீங்கள் சொல்வது புரிந்தது. மோடி ஏற்கனவே பாஜக வினருக்கு தொடக்கத்தில் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? 60 வருடமாக விசுவாசமாக இருந்த நபர்களை ஒரே நாளில் உங்களால் மாற்ற முடியாது. அதற்காக முயல வேண்டாம் என்றார். நீங்கள் பொதுவெளியில் அதிகமாக பேசாதீர்கள். அருகே இருப்பவர்களை கவனித்துப் பாருங்கள் என்றார். இப்போது தான் கபில்சிபில் பிரச்சனை வெளியே வந்துள்ளது. இன்னமும் வரும். காத்துருக்கவும். பத்திரிக்கையாளர்களை மோடி நேரிடையாக சந்தித்தாலும் நிச்சயம் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். காரணம் மோடி வெளிநாடு சென்றால் இந்தக் கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அது ஏற்கனவே அப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது. குறைந்தது 70 பேர்கள் வரைக்கும் செல்லும் பழக்கம் இருந்தது. அது கட். பிறகு டெல்லி முழுக்க இருந்த அரசு தங்கும் விடுதிகளில் இவர்கள் தான் இருந்தார்கள். அதுவும் கட். முக்கால்வாசி சலுகைகள் கட். அப்புறம் எப்படி ஆதரிப்பார்கள்.