Wednesday, August 12, 2020

சென்னை-அந்தமான் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்


இந்தியாவை பொறுத்தவரையிலும், மத்திய அரசு, மாநில அரசு, மிருக பல மெஜாரிட்டி, கூட்டணி கட்சிகள் தாங்கும் ஆட்சி என்று எந்த வகையில் இருந்தாலும் ஒரு அரசு நினைத்தால் மணிப் பொழுதில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்? அவர்களுக்கு காரணம், விளைவுகள் எதுவும் தேவையில்லை. அதிலும் தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்ற புள்ளிகளில் கொண்டு போய் கோர்த்து விட்டால் போதுமானது. எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் திட்டத்தில் கொண்டு போய் கொட்டுவார்கள். ஒரே நாளில் அனுமதி கொடுத்து விடுவார்கள். திட்டமிட்ட காலத்திற்குள்ளும் அதனை முடித்தும் காட்டுவார்கள். கடல், மழை, காற்று, எரிமலை எதுவும் இடையூராக இருக்காது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

மற்ற மாநிலங்களில் எப்படியே தமிழகத்தில் பிஎஸ்என்எல் என்ற ஆலமரம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பும், 75 000 கோடி ஒதுக்கிய பின்பும், 70 000 க்கும் மேற்பட்டவர்களை வலிய விஆர்எஸ் வாங்கச் சொல்லி வெளியே அனுப்பிய பின்பும் இன்னும் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளி போலவே வைத்துள்ளார்கள். காரணம் கேட்டால் நான்கு பக்கத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து பதில் வந்து கொண்டேயிருக்கும். எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எடுக்கும் எண்ணமும் கண்ணுக்கெட்டிய வரை இருப்பதாகவும் தெரியவில்லை. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் புரியவில்லை. ஆனால் இன்று பாரதப் பிரதமர் மோடி முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றார்கள். காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்கின்றார்.

இந்தியாவில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மூலம் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்கான வசதி வழங்கப்பட உள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளான ஸ்வராஜ் தீப், லிட்டில் அந்தமான், கர் நிகோபர், காமோத்ரா, கிரேட் நிகோபர், லாங் ஐலண்ட், ரங்கத் ஆகியவற்றுக்கு இந்த நீர்மூழ்கி கண்ணாடி இழை மூலமான இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு இந்த இணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் கடந்த 2018 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆகஸ்ட் 10-ல் இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த இணைப்பு மூலம் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே அதிவேக மற்றும் நம்பகமான தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை சாத்தியமாகும். சுமார் 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடி முதலீட்டில் இந்த இணைப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்துகிறது.

இந்த நீர்மூழ்கி கண்ணாடி இழை மூலம் சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு விநாடிக்கு 2X200 ஜிகா பைட் வேகத்திலும் போர்ட் பிளேரில் இருந்து பிற தீவுகளுக்கு விநாடிக்கு 2X100 ஜிகா பைட் வேகத்திலும் சேவை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த தீவுகளுக்கு 4ஜி அலைவரிசையில் அதிவேக சேவை கிடைக்க உள்ளது. இந்த இணைப்பு மூலம் அரசு நிர்வாகம், கல்வி மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவையும் மேம்படும். சுற்றுலா சேவையும் அதிகரிக்கும். அதன்மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழகத்தில் பிஎஸ்என்எல் ஐசியு.விலேயே. வேதனை.

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணே... உலகில் ஒருவர் முதல் பணக்காரர் பட்டியலில் வர, ஃபைபர் ஆப்டிக் இணைப்பு எப்போதோ போடப்பட்டு விட்டதாக செய்தி...!

எம்.ஞானசேகரன் said...

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே கூட எப்போதோ போட்டு முடித்துவிட்டதாக்க் கேள்வி. BSNL ற்கு மூடு விழா என்பது மிச்சமிருக்கிற மோடி ஆட்சியில் முடிந்து விடும்.

ஜோதிஜி said...

தமிழக தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் இராணுவ கேரிடர் தொடர்பானது. பக்கத்து நாடுகள் தொலை தொடர்பு தொடர்பான அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு வலிமையாக்குவது தொடர்பானது. நானும் மோடிக்கிட்ட ட்விட்டரில் திருப்பூருக்கு பைபர் ஆப்டிக் கேபிள் முழுமையாகக் கொடுங்க என்று குத்திக்கிட்டே இருக்கேன். எங்கே திரும்பி கூட பார்க்க மாட்டுறாரு. நீங்க தான் ஒரு ஐடியா சொல்லனும்.

ஜோதிஜி said...

பாதி தேச பாதுகாப்பு. பாதி (தனியார்) தேச பொருளாதார வளர்ச்சி.

ஜோதிஜி said...

சென்னை தான் ரொம்ப மோசம்.

Rathnavel Natarajan said...

எல்லாம் அரசு செலவில் போட்டு விட்டு தனியாருக்கு விற்று விடலாம் தானே. மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அந்தமானில் இணைய சேவை இதற்குப் பின்னர் சரியாகும் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அங்கே உள்ள மக்கள். பார்க்கலாம்!