Friday, October 30, 2009

உண்மைத் தமிழன்

தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்கு கொடுக்கும் மரியாதையை விட உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம்.  சங்ககால இலக்கியங்களில் காணப்படும் தேவையில்லாத புகழ்ச்சி பாடல்கள் முதல் இன்றைய குத்துப்பாடல்களின் மகிழ்ச்சி வரையிலும்.  இது சரியா? தவறா? என்று யோசிப்பதே இல்லை. தன்னை கவர வேண்டும்.  தன்னுடைய புலன்கள் தூண்டப்படவேண்டும்.  அது திரை என்றாலும், அரசியல் தலைவர்களின் உரையாக இருந்தாலும் சரி?

ஒவ்வொரு தலைவர்கள் இறக்கும் போது நம்மவர்களின் உணர்ச்சி தூண்டுதல் மிக அதிகமானது.

தற்கொலை,தீக்குளிப்பு, சாலை மறியல், சமூகத்தை நிர்கதியாக்கும் அத்தனை சம்பவங்களும் அன்று முதல் இன்றுவரையிலும்.  ஆனால் வெவ்வேறு பெயர்கள்.  தூண்டப்பட்டவனின் குடும்பம் துண்டாக நடுத்தெருவில் நிற்கும்.  அதனால் கிடைத்த ஆதாயத்தை பெற்ற தலைவர் அச்சமில்லாமல் ஆட்சியில் அமர்ந்து இருப்பார்.

இன்றைய இன அழிப்பு போராட்டத்தில் எத்தனை உயிர்கள் மாண்டது? எத்தனை போராட்டங்கள்?  எத்தனை அறிக்கைகள்? எத்தனை எத்தனை மேடைப்பேச்சுகள்?  என்ன முடிவு கிடைத்தது?

தொடக்கத்தில் திரையில் கோலோச்சிய வாழ்ந்த பாகவதர் குறித்து பல கதைகள் இன்னமும் உண்டு.  திருச்சிக்கு வருகிறார் என்றால் காலை முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த உணர்ச்சிக்கூட்டம் அது.  தொடர்ந்த கதாநாயகர்கள் முதல் நேற்றைய இடுப்பைக்கிள்ளிய கதாநாயகி வரையிலும் உணர்ச்சி தமிழனாகவே வாழ்ந்து வருகின்றான்.

அறிஞர் அண்ணா அவர்களே "நானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் தான் வெற்றி வாகை சூடுவார்" என்று அவர் கூறிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது.  காரணம் சங்ககாலம் முதல் நேற்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள்.  உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் அக்கரையில் வாழும் தமிழர்கள் இதிலும் இன்று வரையிலும் அந்த உணர்ச்சிகளை அக்கறையாகத் தான் பாதுகாத்து பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திரைப்பட வெளிநாட்டு உரிமை என்பது ஒரு நடிகருக்கு, தயாரிப்பாளருக்கு ஒரு காமதேனு.  இன்று வரையிலும் இன அழிப்புக்கு என கூட்டப்படும் அத்தனை கண்டன கூட்டங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நடிகரும் போய் கலந்தே ஆக வேண்டிய கட்டாயம்.  உணர்வு பூர்வமான, நல்ல உள்வாங்கலான எந்த கருத்தையும் எவரும் அங்கு சொல்லிவிட முடியாது.  அந்த தீர்ப்பு நடிகரின் நடிப்பு வாழ்க்கையையே திருத்தி எழுதிய தீர்ப்பாக அமைந்து அவரை திக்குத் தெரியாத காட்டில் நிறுத்தி விடுவது போல் ஆகிவிடும்.

அதனால் தான் நல்ல விசயங்களைத் தேடி படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தாலும் இன்று வரையிலும் பரபரப்புச் சம்பவங்கள் என்று கட்டம் கட்டிய செய்திகள் , கிசுகிசு செய்திகள் நமக்கு அத்தனை உற்சாகமாய் இருக்கிறது.

விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, நாவலர் நெடுஞ்செழியன், கர்மவீரர் காமராஜ் போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பதை நீங்கள் எந்த வகையில் பார்ப்பீர்கள்? அறிவை விட அன்று தூண்டும் உணர்ச்சிகளுக்குத்தானே நம் தமிழர்கள் மதிப்பு அளிப்பவர்கள் என்பதில் மாற்றம் ஏதும் உண்டா?

அறிவு வசப்படும் மேலைநாடுகளில் வாழும் மக்கள் இதற்கு நேர்மாறாக வாழ்கின்றனர். "வெற்றிச்சின்னம் நமதே"  என்று இரண்டு விரல் காட்டி பிரிட்டன் மக்களை தன்னுடைய ஆளுமையில் வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்.   ஜப்பான், ஜெர்மனின் தொடர் குண்டு வெடிப்புகளை மிக லாவலமாக கையாண்டு எங்களை, நாட்டை காப்பாற்றியது நீ தான்?  ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி.

ஆனால் இங்கு ஐந்து வருடங்கள் நேர்மையாக ஆட்சி செலுத்த முற்பட்டாலும் தேர்தலுக்கு பத்துநாட்கள் முன்னால் இயற்கையாக செயற்கையாக இறக்கும் தலைவர் மூலம் அனுதாபத்தின் மூலம் எப்படி மொத்த ஐந்து வருட தியாகமும் அடிபட்டு போகின்றது?

இன்றுவரையிலும் கேரளாவில் நடிகர் என்பவர் அரசியலில் நுழைய வேண்டும் என்று கனவு கூட காண்பது இல்லை.  ஆள்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அடுத்த ஆட்சி நம்முடையது இல்லை என்ற எண்ணத்தில் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.  காரணம் அறிவு உந்தப்பட்ட உள்வாங்கல் கொடுத்த பயம் அது.

உலகத்தில் உள்ள அத்தனை இனத்திலும், சமூகத்திலும் நீங்கள் தேடிப்பாருங்கள்.  நம் தமிழனத்தில் உள்ள மேதைகளை விட வேறு எவரையும் நீங்கள் கண்டு விட முடியாது.  இது அதிகப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல.  திருவள்ளுவர் ஒருவர் போதும்.  அன்றைய நிலையில் எந்த புத்தகத்தை, எந்த ஆராய்ச்சி நூலை வைத்துக்கொண்டு, குறிப்பு எடுத்துக்கொண்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலை குறி சொல்பவன் போல் அடியில் நிறுத்தியவர் போல் எவரையும் உங்களால் காட்ட முடியுமா?

விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவு, ஆட்சி, ஆளுமை, அதிகாரம், களவு, கலவு தொடங்கி அவர் தொடாத துறை உண்டா?  இன்று மேல் நாட்டு அறிஞர்கள் என்று புளாங்கிதம் அடையும் எந்த மேற்கோளும் திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு.

முப்பாலையும் உங்களுக்கு தாய்ப்பால் போல் கொடுத்த அத்தனை சுத்தமான பாலையும் நீங்களும் நானும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்குத் தானே குடித்து வளர்ந்தோம். மேற்கோளுக்காக எடுத்த அத்தனை தமிழின தலைவர்களும், உரை எழுதிய தலைவர்களும் என்ன மாறுதல்களை நமக்கு தந்து விட்டார்கள்?

எத்தனை வருடங்கள் கடந்து போய் விட்டது. இன்னமும் திருந்தாமல் இருந்த காரணத்தால் தானே இன்று ஒரு இனமே முகவரியற்று முள்கம்பிகளுக்குப் பின்னால் திண்டாடிக்கொண்டுருக்கிறது?


மோகம் தரும் கலாச்சாரம்.  ஆடை என்பதை மானத்திற்காக உடுத்திய தமிழ் இனம் இன்று மற்றவர்களை கவனிக்கச் செய்ய வேண்டும் , கவர வேண்டும் என்று "காட்டும் பொருளாக"  மாற்றியுள்ளது.  படையெடுத்து வந்தவர்கள் உருவாக்கிய தாக்கங்கள்.  மதம் என்பது மனிதத்தை விட பெரிது என்று அத்தனை பேர்களை பிரித்தாளும் சக்தியாக மாற்றி உள்ளது.  கடவுள் இல்லை என்பவன் கூட எதையும் உடைத்தாக சரித்திரம் சொல்லவில்லை.  உருவான கலப்பின மக்கள் அத்தனை பேர்களும் மூலம் எது என்பதே தெரியாமல் இடையில் உருவாக்கி சென்றவர்களை தொடர்ந்து உள்ளே தொலைந்தும் போனார்கள். உள்வாங்கவும் அறிவும் வளரவில்லை.  

வளர்த்துக்கொண்டவர்களை வாய்ச்சவடால் மூலம் நிர்மூலமும் ஆக்கிவிட்டார்கள்.

குற்ற உணர்ச்சி என்பது தொடக்கத்தில் குறுகுறுப்பாய் இருந்தது.  இன்று "நீ பிழைக்கத் தெரியாதவன்" என்ற மாயையில் கொண்டு நிறுத்தி இருக்கிறது.  நல்ல சிந்தனை என்று நீங்கள் சொல்ல வந்தால் "நாயை விட கேவலமாக பார்க்கப்படும்" ஒரு சமூக கட்டமைப்பு நம்மை சுற்றி எழுப்பப்பட்டு விட்டது.

இதில் சிக்கிக்கொண்டவர்களை வைத்து சித்து விளையாட்டு காட்டிய கூட்டம் தான் இனத்தின் காவலன், இனமான காவலர், புடம் போட வைத்தவர்கள் என்று பட்டங்கள் சூட்டிக்கொண்டு பதவி சுகத்தில் வெந்ததை தின்று விதி வந்து சாகாமல் அழிந்து கொண்டுருக்கும் இனத்தில் அவலக்குரலை ரசித்துக்கொண்டுருக்கிறார்கள்?

"எதையும் காரண காரியத்தை வைத்து சிந்திக்க பழகு" என்று சொல்லிச் சென்ற தந்தை பெரியாருக்கு வேறு என்ன பட்டம் பொருத்தமாக இருந்து விட முடியும்.  நம்பிக்கைகள் என்பது போய் அதுவே மூட தனத்தின் நம்பிக்கையாய் உருமாற்றம் அடைந்த போது அவரின் எரிச்சல் நமக்கு துப்பும் எச்சல் போல் தெரிந்து. ஆமாம் இன்று மூடத்தனம் குறைந்து இருக்கிறதே தவிர முழுமையாக கரைந்து மறைந்து போய்விடவில்லை.

அறிவு உந்தப்பட்ட மக்கள் என்பவர்கள் தான், மனித சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கி "வணிக நிர்பந்தங்களுக்கான பின்வாங்கல் ஒப்பந்தம்"  தான் இன்று ஐயாமாரு பச்சேயின் பச்சைக்காரியங்களை பலநாடுகளையும் யோசிக்கும் நிலைக்கும் கொண்டு வந்த தொடக்கப்புள்ளியாக மாற்றியுள்ளது.

நம் இனத்தின் முக்கிய புள்ளிகள் எப்போதும் போல முக்கும் புள்ளியாக இருந்து கொண்டு முழுமையும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதை அக்கறையாக பாதுகாத்து அக்கரையில் இருப்பவர்களுக்கு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள்.

மடமை, அறியாமை, அறிவற்ற சிந்தனைகள் எல்லாமே மொத்தமாக வளர்ந்து வளர்ந்து மொத்த சமூகத்தில் தமிழன் என்பவன் உணர்ச்சி தமிழனாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றானே தவிர உண்மைத்தமிழனாக வாழவில்லை.


வாழ முடியாத தூரத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்று விட்டான்.  அதனால் தூரத்தில் இருப்பவர்கள் அத்தனை மக்களுமே "ஐயாமாருகளே நீங்கள் அமைதியாக இருந்தாலே நாங்கள் எங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்வோம்.  உங்கள் அக்கப்போர் அறிக்கைகளை வைத்து எங்கள் அவல வாழ்கையை உங்கள் ஆதாரமான அரசியல் வியாபார வாழ்க்கையாக பார்க்காதீர்கள்" என்கிறார்கள்.

குழந்தைகள் பாலூக்கு அழுதால் என்ன?  குலக்கொழுந்துகள் கற்பழிக்கப்பட்டால் என்ன?  தந்திரத்தில் எந்திரமாய் வாழ்பவர்களுக்கு ஏராளமான கணக்குகள் இருக்கும்.  அது நமக்கு புரியாது.

இவர்களின் வழித்தோன்றல்களுக்கு ஒரு நாள் புரியவைக்கும்?

சாபக்கணக்கு என்பது சரித்திரத்தை அவர்களின் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போடும் கணக்கு.

9 comments:

பிரபாகர் said...

//ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி.//

இதை இன்றைய ஆள்வோர்கள் உணரவேண்டும். காசுக்கு ஒட்டு போட்டு எல்லாம் இன்னமும் இழந்துகொண்டுதான் இருக்கிறார்களே?

//இன்று மேல் நாட்டு அறிஞர்கள் என்று புளாங்கிதம் அடையும் எந்த மேற்கோளும் திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு. //

இன்றைய அரசியல் கயவர்களும் இதை மேற்கோள் காட்டித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

//இன்று மூடத்தனம் குறைந்து இருக்கிறதே தவிர முழுமையாக கரைந்து மறைந்து போய்விடவில்லை//

அதிகமாகவே இருக்கிறது என் கருத்து. பழையது குறைந்து புதியன நிறைய....

தொடருங்கள் அய்யா...

பிரபாகர்.

Anonymous said...

சிந்திக்க வைத்த பதிவு. ஆயினும் ஒற்றுமை என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் தமிழன் இவைகளைப் பார்த்த திருந்தப் போகின்றான். அன்று தொழிலுக்காக வெள்ளையனின் கால் நக்கி பதவி பணம் தொழில் பெற்றார்கள். இன்றும் எதிரியிடம் இனத்தைக் காட்டிக் கொடுத்து மடிப்பிச்சை வாங்கி வாழ்கின்றார்கள். ஒரு தமிழனின் எழுச்சி பலதமிழருக்கு வயிற்று வலியாக மாறிவிட்டது. திருந்தினால் வாழ்வு அல்லது அடிமையாய் மரணிக்க வேண்டியதே.

ஜனா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஜோதிஜி, உண்மைத் தமிழனைப் பற்றிப் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்!! நீங்கள் கூறுவதை வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

நாம் என்றைக்கு உணர்ச்சித்தமிழன் என்ற நிலையில் இருந்து விடுபடுகிறோமோ அன்று தான் நமக்கு விடிவு காலம் பிறக்கும். தொடருங்கள்..

வனம் said...

வணக்கம் ஜொதிஜி

நம்ம ஆளுங்க எல்லாம் மறதி என்ற வரம் நிறைய பெற்றவர்கள்.

இங்க தமிழ் நாட்டில் என் நண்பர் ஒருவர் கூறுவார் (கொஞ்சம் மொசமாதான் இருக்கும் ) அங்க எத்தன ஆயிரம் பேர் செத்தா எனக்கென்ன, யாற வல்லுரவு கொண்டா எனக்கென்ன, எனக்கு அடுத்தவன் பொண்டாட்டி மாட்டுனா சந்தோஷம்தான்

இதுதான் இங்கு நிலை.

நாமதான் ஏதாவது செய்யனும், பேசுரதைவிட செய்யனும் செய்வோம்

இராஜராஜன்

இராகவன் நைஜிரியா said...

படிக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கு. என்ன செய்வது உண்மை எப்போதும் அப்படித்தான் அறையும். நீங்கள் சொல்வது 100 க்கு 100 சரி...

தெளிவடையும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு. குழம்பியது என்றாவது ஒரு நாள் தெளியத்தானே வேண்டும்.

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
சிந்தனையை தூண்டிய ஒரு இடுகை,
தமிழன் நிலையை நினைக்க கஷ்டமாக உள்ளது.
இலவசங்களுக்காகவும் பணக்கவருக்காகவும் பல்லிலித்து தன் ஒட்டை செல்லாக்காசுகளுக்கு விற்கும் மனோபாவம் நீங்குமா?உண்மையான கல்வி ஞானம் கிடைக்குமா?
அல்லது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு காந்திஜியுடன் சேர்த்து ஊழல் அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்க வேண்டியிருக்குமா?
எவ்வளவு கேவலமாக வாழும் ஹிட்லருடன் பொன்னாடை போர்த்தி கட்டித்த் தழுவி போட்டொ எடுத்து வந்துள்ளனர்?
வேதனை வெட்கம் அவமானம்
படங்கள் மனதை வாட்டியது
ஓட்டுக்கள் போட்டாச்சு.

ஜோதிஜி said...

பகிர்ந்து கொண்ட உங்கள் அத்தனை பேர்களுக்கும் வாக்கு மூலம் முன்னெடுத்துச் சென்ற முகம் தெரியாத அத்தனை பேர்களுக்கும் என்னுடைய நன்றி.

"இந்தியாவின் பெரிய ராணுவ பலத்தால் கூட அவரை பிடிக்க முடியவில்லை. அவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட இடத்தில் நாங்கள் எப்படி போய் பிடித்து உங்களிடம் ஓப்படைக்க முடியும்?"

ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலைக்குப்பிறகு இந்தியா இண்டர்போல் மூலம் இரண்டு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து கொடுத்த போது அப்போது ஆண்டு கொண்டுருந்த சந்திரிகா சொன்ன வார்த்தைகள் இது.

அந்த விவேகமற்ற செயலை பின்னால் பார்ப்போம். குறைவான ஆனால் நிறைவான வீரத்துடன், அத்தனை ஆளுமையையும் பார்த்த போது தான் இந்த வீரமும் விவேகம் இல்லாத முன்னேற்பாடுகளும் எங்கிருந்து தொடங்கியது இந்த தமிழனுக்கு? என்று ஆராய்ந்த போது தான் இந்த மூலம் (?) தமிழினின் வாழ்வியல் மூலம் இந்த இலங்கை பிரச்சனையை பார்த்தால் என்ன என்று தோன்றியது.

வரும் பின் ஊட்டத்தில் ஊட்டமான கருத்துக்களும், ஆதங்கமும், ஆத்திரமும் ஒரு சேர நீங்கள் தந்து இன்று உணர்வின் ஊற்றுக்கண் எது? என்று துருவியதை பகிர்ந்து கொண்டவர்களுக்கு மீண்டும் நன்றி.

இலங்கையில் அழிந்து கொண்டுருக்கும் ஒரு இனத்தின் எஞ்சிய சுவடுகளை தினந்தோறும் படிக்கும்,பார்க்கும் போது முதல் பத்து காரணங்களில் பிரபாகரனுக்கு எத்தனை வேண்டுமானாலும் நீங்கள் அடிக்கிக்கொள்ளலாம். ஆனால் அத்தனைக்கும் பின்னால் உள்ள காரணங்களைப் பார்க்கும் போது உலகில் உள்ள ஆதிக்க சக்திகளின் திருவிளையாடல்கள் இந்த இலங்கையின் அழிவில் இருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆதிக்க சக்திகளை குற்றம் சாட்டுவதற்கு முன் நாம், தமிழன் என்பவன் தகுதியாகத்தான் இருக்கின்றானா? என்பதை சுயபரிசோதனை முயற்சி தான் இது. இலங்கையில் தமிழினம் அழிவின் இறுதியில் இருக்கிறது.

கண்களுக்கு தெரிகிறது.

ஆனால் இந்தியாவில் கண்களுக்கு தெரிவது இல்லை.
பிரிவினைவாதம் அல்ல இது.

சிதைந்துகொண்டுருக்கும் கட்டுமானத்தை நாம் குறைந்தபட்சம் உணர்ந்து கொள்ளவாவது தயாராய் இருக்கிறோமா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிவு

கிரி said...

//சங்ககாலம் முதல் நேற்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள்//

மறுக்க முடியாத உண்மை